Showing posts with label உதயகுமார். Show all posts
Showing posts with label உதயகுமார். Show all posts

கூடங்குளம்-அரசுகளின் அலட்சியத்திற்கு நாம் பலியாக வேண்டுமா..?

26-03-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்களுக்காக ஆட்சியா அல்லது ஆட்சியினருக்காக மக்களா என்ற கேள்விக்கு தற்போது நம் கண் முன்னே ஒரு காட்சி நடந்து கொண்டிருக்கிறது..!

சட்டமன்றத்தில் 'மாண்புமிகு அம்மா புரட்சித் தலைவி' என்று 500 முறை ஒப்பாரி வைத்தபடியே மாநிலத்தின் பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் கொடுமை நடக்கும் அதே நேரம்.. 500 கி.மீ. தள்ளி.. தங்களது வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ள பல மக்கள் கொடும் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டினியை சட்டமன்றத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் உணரவில்லை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். எப்படியும் அந்த மக்களே தங்களுக்குத் தாங்களே ஒரு முடிவைத் தேடிக் கொள்ளட்டும் என்ற முடிவுக்கே அவர்கள் வந்துவிட்டார்கள்.

கிட்டத்தட்ட 200 நாட்களுக்கும் மேலாக அறப் போராட்டம் தொடர்கிறது.. ஒரு சைக்கிளின் கண்ணாடிகூட சிதறிவிடாமல் கவனத்துடன் தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் அந்த மக்கள்..! 


தங்களது கிராமங்களுக்கு அருகில் இருக்கும் அணு உலையால் எதிர்காலத்தில் தங்களது வாரிசுகளுக்கோ தங்களுக்கோ எந்தவிதத்திலும் ஆபத்து நேரக் கூடாது என்ற உறுதிமொழியை அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசுகளிடம் கேட்கிறார்கள்..!

அவர்களுடைய சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு ஐயம் திரிபுற பதிலளித்து அவர்களது கவலையைப் போக்க வேண்டியது அரசுகளின் கடமை.. உலகம் முழுவதுமே அணு உலைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளும் மூடி வரும் நேரத்தில், நமது நாட்டில் மட்டும்தான் ஆரத்தி எடுத்து வரவேற்று குடி வைத்திருக்கிறார்கள். இதோ இப்போது கடைசியாக ஜப்பானில் கடைசி அணு உலைகளையும் மூடப் போகிறார்கள்..! அவர்களுடைய அணு உலைகளில் லேசாக கசிந்த வாயுவினால் எழுந்த பூகம்பத்தையே அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்களா..? தொழில் நுட்பமா..? என்ற கேள்விக்கு அவர்கள் மக்கள்தான் என்பதைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் அப்படியே நேருக்கு மாறாக இருக்கிறது. ஏற்கெனவே கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அணு உலையால் பாதிக்கப்பட்ட சுற்றுப்புற மக்களின் பரிதாப நிலைகள் பல குறும்படங்களாகவும், ஆவணப் படங்களாகவும் வெளிப்பட்டு அணுக் கதிர்வீச்சின் தீமையைச் சொல்லியிருக்கிறது. ஆனால் அவைகள் அத்தனையும் படிப்பறிவே இல்லாத, வெளியுலகம் அறியாத கிராமப்புற மக்களைத் தாக்கியிருப்பதால், இது சொந்த நாட்டு மக்களாலேயே அந்நியத்தனமாகப் பார்க்கப்படுகிறது..!

15000 கோடிகளைக் கொட்டியிருப்பதால் இதனை நடத்தியே தீருவோம் என்பதெல்லாம் சொத்தை வாதம்..! முதலிலேயே இந்த மக்களின் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆதரவு கொடுத்து தடுத்திருந்தால் நிலைமை இந்த அளவுக்கு போயிருக்காது.. அப்போது ஒருங்கிணைப்பு செய்யவும் ஆட்கள் இல்லை.. அணு உலை பாதுகாப்பின்மை பற்றி அந்தப் பகுதி மக்களிடம் எடுத்துச் சொல்லவும் பொறுப்பானவர்கள் இல்லை..! 

இந்திய ஏகாதிபத்தியத்தில் டெல்லி சுல்தான்களாக அமர்ந்திருக்கும் மோடி மஸ்தான்கள் என்ன சொல்கிறார்களோ.. அதனை அப்படியே காலால் செய்து முடிக்கும் வெட்கம்கெட்ட மாநிலத்து அரசியல் நாய்கள், தங்களது அரசியல் பதவிக்காக, கட்சிப் பதவிக்காக, சொத்து, சுகத்திற்காக தன் சொந்த இனத்து மக்களையே புறக்கணிப்பது மகா கேவலம்..! 

இப்போது எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என இரண்டையுமே இணைத்துப் பிடித்து ஒரு வரிசையில் நிறுத்தியிருக்கிறது மத்திய கபோதி அரசு.. அவர்களுக்குத் தேவை வாங்கின கமிஷனுக்கு ஏற்றாற்போல் வேலை நடக்க வேண்டும்.. மாநில அரசுக்குத் தேவை.. தான் எதிர்காலத்தில் இருக்கப் போகும் அதியுயர் செல்லில் கொஞ்சம் காற்று வெளிப்பட வேண்டும்.. எதிர்க்கட்சிக்கு தங்களது பேரன்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்க வேண்டும்.. இந்த இரண்டு வெட்கங்கெட்ட அரசியல்வியாதிகள்தான் தமிழ் மண்ணின் மிகப் பெரிய சாபக்கேடு என்பதை நம் மக்கள் என்றைக்குத்தான் உணரப் போகிறார்கள்..?

சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் வாக்குப் பதிவுக்காகக் காத்திருந்து, அதன் பின்பு தனது முடிவைச் சொன்ன ஆத்தாவின் செயல் சத்தியமாக வேசித்தனம்தான்..! தனது பேரன்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, கட்சிக்கு இருக்கும் பெயரும் போய்விடக் கூடாது என்பதற்காக அணு உலையைத் திறக்க வேண்டும் என்று அறிக்கைவிட்ட உலக மகா யோக்கியர் மஞ்சத் துண்டு செய்ததும் பச்சை வேசித்தனம்தான்..! 

ஆனாலும் மக்களுக்கு புரிய வேண்டுமே..? தூத்துக்குடியில் இருந்து சங்கரன்கோவில் ஏதோ 1000 கிலோ மீட்டர் தள்ளியிருப்பது போல் நினைத்து வாங்கின காசுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்த இந்த மக்களையும் நினைத்தால் கோபம் வரத்தான் செய்கிறது..! தன் வீட்டு வாசலுக்கு தானே புயல் வந்தால்தான் தான் கதறி அழுவேன்.. பக்கத்து தெருவில் எவன், எப்படி செத்தாலும் எனக்கு கவலையில்லை என்பதும் நமது பண்பாடாகிவிட்டது..! சுயநலம் சார்ந்தே நாம், நமது குடும்பம், நம் பிள்ளைகள்.. நமக்காக என்று இதற்காகவே குடும்பத்தை வளர்த்தெடுக்கும் நமது வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்..? 

மாவட்ட மக்கள் அங்கே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அதுவும் இன்றோடு சேர்த்து 8 நாட்கள் ஆயிற்று.. அந்த ஊரையே போலீஸ் படையை வைத்து முற்றுகையிட்டு சொந்த நாட்டு மக்களையே பட்டினி போட்டிருக்கிறோம் என்ற ஒரு சிறிய குற்றவுணர்ச்சியைக்கூட வெளிக்காட்டிக் கொள்ளாத இந்த அரசையும், அதற்குத் தலைமை தாங்குபவரையும் கண்டிக்கவோ, திட்டவோ வார்த்தைகளே கிட்டவில்லை..!


உதயகுமார் என்னும் தோழர், தனது குடும்பத்தையெல்லாம் மறந்துவிட்டு பொது நலத்துடன் அரை ஆண்டாக இடிந்தகரை மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து நடத்திவரும் இந்தப் போராட்டத்தை ஊடகங்களும், சக்தி பெற்ற ஸ்தாபனங்களும் முடிந்த அளவுக்கு திசை திருப்பி வந்தன.. இப்போதும் அதையேதான் செய்து வருகின்றன..! 

நிபுணர் குழு முன்பாக அமைதிக் குழு வைத்த கேள்விகளுக்கும், எழுப்பிய கோரிக்கைகளுக்கும் பதில் இல்லை..! அவர்கள் சொல்வது மின் தட்டுப்பாடு.. ஆகவே இது அவசியம் தேவை..! தேவைதான்.. வீட்டில் கரப்பான் பூச்சி அதிகம் இருந்தால், பூச்சி மருந்து அடிக்கத்தான் வேண்டும். ஆனால் எப்போது அடிப்பார்கள் தெரியுமா..? வீட்டில் யாரும் இல்லாத பொழுது.. அதுவும் குழந்தைகள் அந்த மருந்தை கொஞ்சம்கூட ஸ்மெல் செய்துவிட முடியாத நேரத்தில்.. அவர்கள் பள்ளிக்குச் சென்ற காலை நேரத்தில்.. வீட்டை பூட்டி விட்டுச் செல்லும் நேரத்தில்தான் மருந்தடிப்பது வழக்கம்.. 

டைனிங் டேபிளில் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருக்க.. வீட்டில் மருந்தடிக்கும் பைத்தியங்களை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா..? இங்கேதான்.. தமிழ்நாட்டில் இப்போது இதுதானே நடக்கிறது..? அது அதற்கு இடம், பொருள், ஏவல், வேலை, நேரம் பார்த்துச் செய்யப்பட வேண்டிய விஷயத்தை அவர்களுக்கு தோதான இடம் கிடைத்தவுடன் செய்திருக்கிறேன் என்கிறார்களே.. இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..?

பக்கத்தில் கடல் இருக்க வேண்டுமா..? ஏன் கொச்சிக்கு போகலாமே..? மும்பையில்கூட இன்னொரு அணு உலையை அமைக்கலாமே..? ஆந்திராவின் நெல்லூர் பக்கத்தில் போய் வைக்கலாமே..?  வங்காளத்தின் கடற்கரைப் பகுதிக்கு போகலாமே.. ஆனால் எதற்கு தமிழகம்..? இங்கேதான் டெல்லி போடும் பிச்சைக் காசை பொறுக்கித் தின்னும் கேவலங்கெட்ட அரசியல் நாய்கள் நிறையவே இருக்கின்றன.. கையது, வாயது பொத்தி.. தனக்கும், தன் குடும்பத்திற்கும் தேவையானதை மட்டும் பெற்றுக் கொண்டு, இவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்து கொண்டு மக்களைத்தான் சுடுகாட்டில் வசிக்கச் சொல்கிறார்கள்..! உலகில் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் இருந்திருக்காது..! 

8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் உதயகுமார் மற்றும் அவரது தோழர்களின் நிலைமை இப்போது கவலையாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.. அவர்களது உயிருக்கு இனி யார் பொறுப்பு..? எந்த அமைச்சராவது இதனைக் கண்டு கொண்டாரா..? அவர்களுக்கோ யார் மாண்புமிகு புரட்சித் தலைவி என்ற வார்த்தையை அதிகம் தடவை சொல்வது என்பதிலேயே கவனம் இருக்கிறது..! இந்தக் கேடு கெட்டவர்கள் முதலில் தங்களது குடும்பத்தினரை அந்த அணு உலையின் பக்கத்தில் கொண்டு போய் வைத்துக் காட்டட்டுமே..? மக்களே.. எமது குடும்பத்தினரும் இங்கேதான் குடியிருக்கப் போகிறார்கள். பயப்பட வேண்டாம் என்று.. முடியுமா அவர்களால்..?

ஒரு அமைச்சர் ஊதுகுழல் ஊதுகிறார். விமானத்திலேயே வந்து மோதினால்கூட அணு உலை உடையாது என்று.. “ஐயா அமைச்சரே.. நீரும் உம் பிரதம அமைச்சரும் அவர்தம் குடும்பத்தினரும் ஒரே விமானத்தில் வந்து மோதிக் காட்டுங்களேன்.. அதன் பின்பு இந்த போராட்டத்தை நாங்கள் கை விடுகிறோம்..” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தாகிவிட்டது.. சூடு, சொரணை என்றால் என்னவென்றே தெரியாத இந்த அரசியல் ஓநாய்களிடம் வேறு எந்த மொழியில் சொன்னால்தான் புரியும் என்றே தெரியவில்லை..!

20 ஆண்டுகளுக்கு முன்னால் தீபாவளிக்கு வாங்கிய வெடிகள் ஒரு மாதம் வரையிலும் வீட்டில் வைத்திருந்து வெடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. காலம் மாறி, சூழலும் மாறி, தட்பவெப்ப நிலையும் மாறி, சுற்றுப் புறச் சூழல் மாசுபடுகிறதே என்பதற்காக வெடி வெடிப்பதற்கும் ஒரு நேரத்தை ஒதுக்கி இந்த நேரத்தில் வெடித்துக் கொள்ளுங்கள் என்று அரசு சொன்னதற்கு யாராவது மறுப்புத் தெரிவித்தார்களா..? போராட்டம் நடத்தினார்களா..? இல்லையே..? வெடிகள் வாங்குவதையே கொஞ்சம், கொஞ்சமாக நிறுத்தி வருகிறார்கள் மக்கள். அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.. 2 நிமிட கொண்டாட்டத்திற்கு எதற்காக அழுக வேண்டும் என்று..! மக்கள் காலத்திற்கேற்றாற்போல் இது போன்று மாறவும் தயங்கவில்லை..!

ஆனால் இதே மக்கள்தான் நமது அரசுகளின் சர்வ அலட்சியத்தையும் மனதில் வைத்து அந்த அணு உலை தங்களுக்குத் தேவையில்லை என்கிறார்கள்.. இதனை ஏற்றுக் கொள்வதுதான் அரசுகளின் கடமை.. பொறுப்பு..! உலக அரசியல் அரங்கில் நடைபெறும் பனிப்போரில் தங்களது குடும்பத்தினரை பணயம் வைக்கவா தமிழகத்து மக்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள்..? அவர்கள்தான் சாக வேண்டுமா என்ன..? அரசியல்வியாதிகளின் பிள்ளைகளையும், அணு உலை வேண்டும் என்பவர்களின் பிள்ளைகளையும் அங்கே வேலைக்கு சேரச் சொல்லுங்களேன்.. பார்க்கலாம்..!?

அரசுகள் எந்த வழிகளில் நம்மை மடக்கப் பார்க்கிறார்களோ.. அதே வழியில் நாமும் அவர்களுடன் மோதுவோம்..! நாம் குனிந்தே இருந்தால் குட்டத்தான் செய்வார்கள்.. நிமிர்ந்தே நிற்போம்.. எப்போது குனிவோம் என்று அவர்கள் காத்திருக்கட்டும்..! ஆனால் நமது பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கும். அந்த எல்லையை அரசுகள் தொடும்வரையிலும் இந்த அறப் போராட்டம் நீடிக்க வாழ்த்துகிறேன்..! ஏதோ ஒரு முடிவுக்கு வராமல் இப்பிரச்சினைக்கு தீர்வு என்பது சாத்தியமில்லை..! அந்த முடிவு நாம் எடுத்ததாகவே இருக்க வேண்டும்..!

அதற்காகவே இந்த நேரத்தில் அண்ணன் உதயகுமாரிடம் நாம் வேண்டிக் கொள்கிறேன்.... இந்தச் சோற்றால் அடித்த பிண்டமாக சூடு, சொரணையில்லாத வெட்கங்கெட்ட அரசியல் ஜென்மங்களை நம்பி நமது உயிரைப் பணயமாக்குவது வீண் விரயம்.. அதுவும் உதயகுமார் போன்ற போராளிகள் நீண்ட பயணம் செய்ய வேண்டியுள்ளது. மக்கள் நலப் பணிகளில் அவர் ஆற்ற வேண்டிய செயல்கள் நிறையவே உண்டு. ஆகவே, அவரும் அவரது குழுவினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, அதற்கு ஈடாக அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை வேறு வழிகளில் தொடர வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!