Showing posts with label கரு.பழனியப்பன். Show all posts
Showing posts with label கரு.பழனியப்பன். Show all posts

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

01-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தானே கதை எழுதி, தானே திரைக்கதை எழுதி, தானே வசனம் எழுதும் படங்களை மட்டுமே தான் இயக்குவேன் என்பதை மட்டும் செய்யாமல் இது போன்ற சிறந்த அயல்மொழி கதைகளை நம் மொழிக்கு படமாக்குவது இயக்குநர்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்.. அந்த வகையில் இந்த 'ஜன்னல் ஓரம்' என்ற நல்லதொரு படம் கிடைத்ததால் நம் தமிழ்ச் சினிமாவுக்கும் தற்போது பெருமைதான்..!  பாராட்டுக்கள் இயக்குநர் கரு.பழனியப்பனுக்கு..!


2012-ல் மலையாளத்தில் வெளிவந்து டாப் டென் படங்களில் முதலிடத்தைப் பிடித்த 'ஆர்டினரி' படத்தின் தமிழ்ப் பதிப்புதான் இந்த 'ஜன்னல் ஓரம்'..!  ஒரிஜினலில் குஞ்சக்கோ போபன் நடித்த கேரக்டரில் விமல்.. பிஜூ மேன்ன் கேரக்டரில் பார்த்திபன்.. ஆனி அகஸ்டின் கேரக்டரில் பூர்ணா.. ஷ்ரத்தா சிவதாஸ் கேரக்டரில்  மணிஷா யாதவ்..! 

இந்தப் படத்தில் நடித்திருக்கும் விமல், பார்த்திபன், விதார்த் மூவரையும் பாராட்டியே தீரவேண்டும்..! ஏனெனில் மூவருமே தனித்தனி ஹீரோக்களாக தற்போது நடித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் இது போன்று ஒன்றிணைந்து நடிக்க வருவதென்பது தமிழ்ச் சினிமாவின் ஆரோக்கியமான போக்கிற்கு வழி செய்வது போலாகும்..!  

பழனி டூ பண்ணைக்காடு பேருந்து. இதுதான் படத்தின் களம்..! இந்த மார்க்கத்தில் பயணிக்கும் அரசுப் பேருந்தின் டிரைவர் பார்த்திபன். நடத்துனர் விமல். இரவில் பண்ணைக்காடு வந்து சேரும் பேருந்து, மறுநாள் காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பழனிக்கு வந்து சேரும்.. இரவில் டிரைவரும், நடத்துனரும் அங்கேயே தங்கியிருந்து மறுநாள் காலை பேருந்தை இயக்கி வருவார்கள்.. இதற்காக அங்கேயே ஒரு வீட்டை கெஸ்ட் ஹவுஸாக ஆக்கியிருக்கிறார்கள்..!

ஒரே பேருந்து.. ஒரே ஓட்டுநர், நடத்துனர்.. தினமும் வேலைக்குச் சென்று திரும்பும் அவ்வூர் மக்கள்.. என்று அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தை முதல் ஷாட்டிலேயே அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர்..! தேவையற்ற பில்டப்புகள் ஏதுமில்லாமல் சாதாரணமாகவே துவங்குகிறது படம்..!

டிரைவர் பார்த்திபன் சரக்கடித்துவிட்டுதான் பேருந்தை ஓட்டுவார்.. கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி.. வண்டியை விட்டு இறங்கியவுடன் கட்டிங் சாப்பிட்டே தீருவார்.. டீக்கடைக்காரரின் பெண்ணை டைம்பாஸுக்காக லவ்விக் கொண்டிருக்கிறார்.. தனது சர்வீஸில் முதல் டூட்டியாக இந்த ரூட்டில் பார்த்திபனுடன் சேரும் விமலுக்கு ஏர்செல்லின் விற்பனை பிரதிநிதி மணிஷா யாதவின் மீது காதல்.. ஊர்ப் பெரியவர் ராஜேஷின் வீட்டில் தங்கியிருக்கும் பூர்ணாவுக்கும், ராஜேஷின் மகனுக்கும் காதல்.. திருமணம் நடக்கப் போகிறது..! விதார்த் ராஜேஷின் வீட்டில்தான் வசிக்கிறார்.. ஊரில் அனைவரின் வேலைகளையும் தட்டாமல் செய்யும் ஒரு ஆள்.. காலையில் மலைவிட்டு இறங்கும்போது நெற்றியில் திருநீறு பட்டையோடு பக்திப் பழமாக திகழும், கிருஷ்ணமூர்த்தி, கடைசியாக மலையேறும்போது நிஜமாகவே ‘மலை’யேறியே வருகிறார்.. இவருடைய தண்ணி அலம்பல் சுவாரசியமானது..!

ஒரு நாள் தண்ணியடித்து மட்டையான நிலையில் இருக்கும் பார்த்திபனுக்கு, பதிலாக பஸ்ஸை ஓட்டும் விமல், கல்யாணத்திற்காக ஊர் திரும்பும் ராஜேஷின் மகன் மீது மோதி விடுகிறார்.. அந்த நேரத்தில் எதிரில் வரும் வேன் டிரைவரிடம் ராஜேஷ் மகனை ஒப்படைத்துவிட்டு பார்த்திபனும், விமலும் தப்பிக்கிறார்கள். ராஜேஷ் மகனின் பை மட்டும் இவர்கள் வசம் வருகிறது..! திருமணத்திற்கு வந்துவிடுவான் என்று பெற்றவர்கள் காத்திருக்க.. பக்கத்தில் இருக்கும் மலையில் பிணம் கிடந்ததாக போலீஸ் வந்து சொல்கிறது..! ஏதோ ஒருவகையில் மரணம் என்று அனைவருமே சொல்லிக் கொண்டிருக்க.. விமல் குற்றவுணர்ச்சியில் தத்தளிக்க.. தன்னுடைய தங்கையின் திருமணம் விரைவில் நடக்கவிருப்பதால் போலீஸ் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள மறுத்து பார்த்திபன் தயங்கி நிற்க..! ஒரு நாள் மணிஷா யாதவால், ராஜேஷ் மகனின் பையில் இருக்கும் காதல் கடிதங்கள் அந்த ஊருக்கே அம்பலமாகிறது..! 

சர்ச்சைகள் விமல், பார்த்திபனை சுற்றிச் சுற்றி வர.. விமல் ஜெயிலுக்குப் போவதுவரையிலும் நடந்துவிடுகிறது அதகளம்.. அந்த இரவில் ராஜேஷ் மகனைத் தூக்கிச் சென்ற வேன் டிரைவரை பிடித்தால்தான் உண்மை தெரியும் என்பதால் பார்த்திபன், விமல் இருவரும் டிரைவரைத் தேடிப் பிடிக்க அதற்கடுத்து நடப்பவைகள்தான் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்..! 

சின்ன கதை.. படம் நெடுகிலும் கேரக்டர்கள் மூலமாகவே சட்டு சட்டென கதை மாறும்விதம்.. அழகான லொகேஷன்கள்.. இனிப்பான பாடல்கள்.. மிக நகைச்சுவையான வசனங்கள்.. என்று படம் மிக ஈர்ப்பாகவே இருக்கிறது..! 

வழக்கம்போல பார்த்திபன்தான் தனது டைமிங்சென்ஸ் வசனத்தில் காட்சிகளை ரசிக்க வைக்கிறார்..! அவரும் சிங்கம்புலியும் பேசுகின்ற வசனங்களும், கட்டிங் போடுவது தொடர்பானவைகளும் அசத்தல்.. விமல்கூட அழகாக டயலாக்குகளை பேசியிருக்கிறாராப்பா..! ஆச்சரியம்..! அதிலும் கொஞ்சம் கூடுதலாக நடிக்கவும் செய்திருக்கிறார்.. "லெட்டரை கொடு" என்று மணிஷா யாதவிடம் விமல் கோபப்படும் காட்சிகளில் இருக்கும் விமலை, வேறெந்த படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.. எல்லாம் இயக்கத்தைப் பொறுத்ததுதான்..! 

அண்ணன் கரு.பழனியப்பனின் படம் என்றாலே பொதுவாக பொது அறிவு வசனங்கள் நிறையவே இருக்கும்.. ஆனால் இதில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே பார்த்திபன் மூலமாக பேச வைத்திருக்கிறார்.. மற்றபடி வசனங்கள்தான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம்..! 

விதார்த், பூர்ணா, மணிஷா யாதவ்.. அவரவர் கேரக்டர்களை அளவோடு செய்திருக்கிறார்கள்.. விதார்த்தின் கிளைமாக்ஸ் அவதாரம் எதிர்பார்க்காதது. ஆனால் இந்த கேரக்டர் அவரது நடிப்பு கேரியரிலும் ஒரு வித்தியாசமானதும், முக்கியமானதுமாகும்..! ஆனாலும் மணிஷா யாதவிற்குப் பதிலாக கிளைமாக்ஸில் பார்த்திபனுடன் கடலை போடும் மோனிகாவையே நடிக்க வைத்திருக்கலாம்..! உல்டா பண்ணிட்டாரு டைரக்டரு..! 

வித்யாசாகரின் இசையில் 'என்னடி என்னடி' பாடலும், 'உன்னைப் பார்க்காம' பாடலும் முணுமுணுக்க வைக்கின்றன..! நீண்ட நாட்கள் கழித்து நல்லதொரு மெலடி பாடல்கள் தமிழ்ப் படத்தில்..!  

டெப்போவில் இருந்து மெக்கானிக் சந்தானபாரதி வந்து ரிப்பேரை தொடங்கும்போதே வெளிப்படும் காமெடியையும் தாண்டி ஏதோவொன்று அப்போதே நடக்கப் போவதை உணர்த்தும்விதமாக காட்சியமைப்பும், பின்னணி இசையும் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு வருவதை படம் பார்ப்பவர்கள் நிச்சயம் உணரலாம்..! வெல்டன் வித்யாசாகர் ஸார்..!

தமிழ் வணிகச் சினிமா நோக்கத்தில் சில காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பதை பார்த்து கொஞ்சம் சங்கடப்பட வேண்டியிருக்கிறது..! மேலும், பார்த்திபன்-டீக்கடைக்காரப் பெண் காதல் சாதாரணமாக இருப்பதும்.. விதார்த்தின் முடிவுக்குப் பிறகு ஊர்க்காரர்கள் சட்டென சகஜ நிலைமைக்கு திரும்புவதும்..  ஜீப் சர்வீஸை புறக்கணித்துவிட்டு மக்கள் பேருந்தில் பயணம் செய்வது தொடர்பான சர்ச்சையில் உடனுக்குடன் காட்சிகள் மாறி, பார்வையாளனின் மனநிலையைச் சட்டென மாற்றுவதும்.. பார்த்திபனின் அழுத்தமில்லாத சில நடிப்பு காட்சிகளும், எப்போதும் சீரியஸ் படங்கள் என்றாலே எதிர்பார்க்கும் அழுவாச்சி காவிய நடிப்புகள் இதில் இல்லாததும்.. படத்தின் இறுதியில் ஏதோவொன்று மிஸ்ஸிங் என்பது போலவே சொல்கிறது..!

அப்படியிருந்தும் படத்தை நிச்சயம் ஒரு முறையாவது பார்க்கலாம் என்று சொல்வதற்கு ஒரேயொரு காரணம்தான்.. அது பழனி டூ பண்ணைக்காடு என்கிற கதைக்களம்..! ஒரு புதிய அனுபவத்தையும், ஒரு சிறுகதையையும் வாசித்த திருப்தியை இந்தப் படம் எனக்கு அளித்திருக்கிறது..!

ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்..! 

சதுரங்கம் - சினிமா விமர்சனம்

08-10-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2005-ம் ஆண்டிலேயே இந்தப் படம் வெளிவந்திருந்தால் பத்திரிகையுலகிலும், அரசியல் உலகத்திலும் தனியிடம் பிடித்திருக்கும். காலதாமதத்தால் தமிழ்ச் சினிமாவிலும் தனக்கென இருந்திருக்க வேண்டிய ஒரு இடத்தை இழந்துவிட்டது என்றே எண்ணுகிறேன்..


திசைகள் என்னும் புலனாய்வு வார இதழில் ரிப்போர்ட்டராகப் பணியாற்றுகிறார் ஸ்ரீகாந்த்.. வேலை செய்கிறார் என்றால் சாதாரணமாக இல்லை. உண்மையாகவே சிறைச்சாலைக்குள் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய, வேண்டுமென்றே பஸ்ஸில் டிக்கெட் எடுக்காத சின்ன வழக்கொன்றில் சிக்கி ஜெயிலுக்குள் செல்கிறார். தனது இன்வெஸ்டிகேட்டிவ் மூளையைப் பயன்படுத்தி ஜெயிலுக்குள் நடைபெறும் லஞ்ச, ஊழல், அநியாயங்களை தொடர் கட்டுரையாக எழுதி வைக்கிறார். இதில் பாதிக்கப்படுபவர்கள் பலர் இருந்தும், இவர்களில் ஒருவர் பதிலுக்கு ஸ்ரீகாந்தின் காதலி சோனியாவை கடத்திச் செல்ல.. அவரை மீட்க அல்லல்படுகிறார் ஸ்ரீகாந்த். தனது காதலியை மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை..!

பத்திரிகையாளர்களால் பாதிக்கப்படும் அரசியல்வியாதிகள் தங்களுடைய கோபத்தை பல்வேறு ரூபங்களில் காட்டத்தான் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இவைகள் அதிகப்பட்சமாக தெய்வத்தாய் ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்திருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய கொடுமை..!

தராசு, நெற்றிக்கண், நக்கீரன் பத்திரிகைகள் தாக்கப்பட்டது.. நக்கீரன் நிருபர் மதுரையில் கொலை செய்யப்பட்டது.. நக்கீரனின் பதிப்பாளர் கணேசன் கொலை செய்யப்பட்டது.. போலீஸ் செய்தி பத்திரிகையின் நிருபர் கொலையானது.. நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது.. அவருடைய பத்திரிகையின் நிருபர்கள் பலரும் கைதானது.. என்று பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை நம்மால் மறக்க முடியாதுதுதான்..!

இதையெல்லாம் வெளிப்டையாகக் காட்டினால் கரு.பழனியப்பனே வெளிப்படையாக நடமாட முடியாது என்பதினால் கதையில் கொஞ்சம் சமரசம் செய்திருக்கிறார். அதே பத்திரிகையாளனின் கை, கால்களை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைப்பதில் வரும் பீலிங்கைவிட, அவனது காதலியை கடத்துவது தியேட்டருக்கு வரும் இள வயது ரசிகர்களை அதிகம் கவலைக்குள்ளாக்கும் என்பது இயக்குநரின் கணிப்பு. நல்லதுதானே..! இனிப்பை எந்த வகையில் கொடுத்தாலென்ன? மைசூர் பாக்காக இருந்தாலும். அல்வாவாக இருந்தாலும் இனிப்பு, இனிப்புதானே.. அதைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஜெயில் காட்சிகள் அனைத்துமே உண்மைதான். தமிழகத்தில் அத்தனை ஜெயில்களிலும் தினம்தோறுமான வசூலே பல லட்சங்கள். போர்த்திக் கொள்ள போர்வை கேட்டால்கூட காசு வைத்தால்தான் வரும் என்கிறார்கள். அதேபோல் முன்னாள் அமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கும்போது எலிகளை பிடித்து உள்ளே போட்டு அவரை வாட்டி எடுப்பதை டி.பி.கஜேந்திரனின் வாயாலேயே சொல்லியிருப்பதும் உண்மைதானே.. இந்தப் படம் அப்போதே வந்திருந்தால் இந்த விஷயத்தில் மிகப் பெரிய தாக்கமாகவும் இருந்திருக்கும்.

ஜெயலலிதாவின் முதல் கொடுங்கோல் ஆட்சிக் காலத்தில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனையும், அவரது கணவரையும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்ற மொக்கை குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அப்போது தினமும் இரவில் சுப்புலட்சுமி தூங்கப் போகும்போது, வேண்டுமென்றே அறை முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்களாம்.. இதேபோல் ஜெகதீசனின் அறையில் பெருச்சாளிகளை ஓடவிட்டு அவரை அலற வைத்திருக்கிறார்கள். இந்த ட்ரீட்மெண்ட்டை தாங்க முடியாமல்தான் முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜன் அப்ரூவராக பல்டியடித்ததாக அப்போதே பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன. இது போன்ற உண்மைகளை அப்பட்டமாகச் சொல்லியிருக்கும் அண்ணன் பழனியப்பனுக்கு எனது நன்றி..!

ஸ்ரீகாந்த்தின் நடிப்பில் இந்தப் படமும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்க வேண்டியது. ஏன் அவருடைய கேரியரில் பெரும் மாற்றத்தைக்கூட தந்திருக்கும் முன்பே படம் வெளிவந்திருந்தால்..! இப்போது அவருடைய பெயரை மறக்காமல் இருக்க வைக்கவும் இந்தப் படம் உதவும் என்று நினைக்கிறேன்..!

திருப்பதிசாமி. விகடன் பத்திரிகையாளர்கள் வட்டத்தில் மறக்க முடியாத பெயர். சாலை விபத்தில் மரணமடைந்த இயக்குநரான தனது நண்பர் திருப்பதிசாமியின் பெயரையே ஸ்ரீகாந்துக்கு சூட்டி அழகு பார்த்திருக்கிறார் பழனியப்பன். ஸ்ரீகாந்த் சோனியா முதல் சந்திப்பு நடக்கின்ற காட்சியின் விஷூவல்ஸ் காதல் சிச்சுவேஷன்களை மிக எளிதாக உருவாக்கியது.. இதுக்கு மேலேயும் அபெக்ஷன் வராமல் இருந்துவிடுமா என்ன? 

ஸ்ரீகாந்த், சோனியா இருவரின் காதல் காட்சிகளும் படு ஜோர்.. சோனியா வீடு தேடி வந்து ஏதேதோ சொல்லி பேச்சை டயாப்ப்பதும், பிரா ஸ்டிரிப் நழுவியிருப்பதை காந்த் சொல்வதும், அதனையே கல்லூரியில் சோனியா திருப்பிச் சொல்வதும் அழகான, மெச்சூரிட்டியான லவ் சிச்சுவேஷன்ஸ்..!

சோனியா க்யூட்.. அம்புலிமாமா பாடல் காட்சியில்தான் செம கிளாமர்.. சிக்கென்ற உடையிலேயே இறுக்கமும், கிறுக்கமும் காட்டுகிறார்..! இடைவேளைக்கு பின்பு நடிப்பதற்கு அதிகம் வாய்ப்பில்லை என்றாலும்,  ரசகுல்லா ரசகுல்லாதான்..!

பழனியப்பனின் மிகப் பெரிய பலமே வசனங்கள்தான். இதிலும் அது அதகளம்.. ஜெயில் காட்சிகளில் துவங்கி இறுதிவரையில் வசனத்தில் பத்திரிகையாளனின் குரலாகவே ஒலிக்கிறது..!

“தரம் பார்த்துதான் நண்பனா வைச்சுக்குவேன்.. தகுதி பார்த்துதான் எதிரியா வைச்சுக்குவேன். உனக்கு அந்தத் தகுதி இல்ல தம்பி..” என்று பில்டிங் ஓனர் சொல்கின்ற காட்சியின் வசனமே அடுத்தடுத்த திரைக்கதைகளை எழுதிவிட்டது..

முதலில் ஒரு திரில்லிங்கை கூட்ட வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீகாந்தின் எழுத்தால் பாதிக்கப்பட்ட லஞ்சம் வாங்கிய அதிகாரி, முன்னாள் அமைச்சர், பில்டிங் ஓனர் என்று பலரையும் சுட்டிக் காட்டியிருப்பதுபோல் தோன்றுகிறது.

“டெபாஸிட் கிடைக்குற அளவுக்குக்கூட ஓட்டுப் போடாத உங்களுக்கு எதுக்கு நன்றி..” என்று மேடையில் பொளந்து கட்டும் இளவரசு, மனைவியையே காட்டாமல் அடிமை கணவனாக மாவாட்டும் மனோபாலா, கிழிந்த பேப்பரை எடைக்கு எடை போட்டு காசு பார்க்க நினைக்கும் சரண்யா, தனது தங்கை காதலனின் தோளில் கை போட்டு தெனாவெட்டாக பேசுவதை பார்த்தும் ரசிக்கும் அண்ணன் ஸ்ரீமன், கண்ணில் வலி என்று சொல்லி நடித்துவிட்டு  நமீதாவின் புகைப்படத்தைப் பார்த்து இரு விழிகளையும் விரித்துப் பார்க்கும் மயில்சாமி.. என்று இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துமே ரசிக்க வைக்கின்றன..!

மணிவண்ணன் இந்தக் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். நடிகையின் புகைப்படத்தையே பெரிசாக போடச் சொல்லிவிட்டு அதுவே ஒரு மேட்டர்தானே என்பதும், திருப்பதிசாமிக்காக நான் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை.. என்று சப்போர்ட் செய்வதுமாக ஒரு கச்சிதமான ஆசிரியர் வேடம் அவருக்கு. நிஜத்தில் திருப்பதிசாமி மாதிரியான பத்திரிகையாளர்களை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் மணிவண்ணன் மாதிரியான ஆசிரியர்களைப் பார்ப்பதுதான் கஷ்டம்..!

இடைவேளைக்கு பின்பான கதையில் காதலியைத் தேடிப் போகும் ஸ்ரீகாந்தை அலையவிடும் காட்சிகளும்.. செல்கின்ற இடங்களில் நடக்கும் சட்ட விரோதச் செயல்களெல்லாம் இப்போதைக்கு இரண்டாம்பட்சமாகி தனது காதலியே பிரதானமாக அந்தப் பத்திரிகையாளனுக்குத் தெரிவதாகச் சொல்வதெல்லாம் உண்மையான திரைக்கதை..!

இங்கே திரைப்படத்திற்கு சமரசம் செய்து கொள்ளாமல், இதைப் பற்றிக்கூட அதே பத்திரிகையாளனிடம் கேள்வியையும் எழுப்புகிறார் இயக்குநர். பாராட்டுக்குரிய விஷயம் இது..! கள்ளச்சாராயம் காய்ச்சும் இடம், விபச்சார மேன்ஷன், அரிசிகளை கடத்தி மறைத்து வைத்திருக்கும் குடோன், டூவீலர்களை திருடி விற்கும் இடம்(இது மட்டும் சரியாக எஸ்டாபிளீஸ் செய்யப்படவில்லை) என்று இதை வைத்தே நிறைய கதை எழுதிவிடலாம். அத்தனையையும் கடந்துதான் காதலியைத் தேடிச் செல்கிறார் திருப்பதிசாமி..!

வித்யாசாகரின் இசையில் எனக்குப் பிடித்தது அம்புலிமாமா பாடல்.. படமாக்கியவிதமும் ரசிக்கும்படியாகவே இருந்தது. வசனங்கள் போலவே பாடல் வரிகளும் இலக்கியத்தனமாகவே இருக்கின்றன. பழனியப்பன் என்ற ஆசிரியர், இதிலும் கொஞ்சம் வெளிப்பட்டிருக்கிறார்..  

ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் அழகாகவும், ரவுத்திரமாகவும் எடுக்கப்பட்டிருந்தாலும், அதுவே மனதில் ஒட்டவில்லை என்கிற ஒரேயொரு குறைதான் இப்படத்தில்.. இறுதிக் காட்சியில் மக்களே தீர்ப்பு வழங்குவது போல் செய்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.

அப்போதைய ஸ்ரீகாந்தின் ஹீரோயிஸம், தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பு, விநியோகஸ்தர்களின் வற்புறுத்தல் இத்தனையையும் தாண்டி இந்த அளவுக்கு கொண்டு வந்திருப்பதே பெரிய விஷயம்தான்..!

வாழ்த்துகளும், நன்றிகளும் இயக்குநர் திரு.கரு.பழனியப்பனுக்கு..!  

சதுரங்கம்-வலைப்பதிவர்களுக்கான சிறப்புக் காட்சி

03-10-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதன்முதலில் வலைப்பதிவர்களுக்காக 'மந்திரப் புன்னகை' படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சியை ஏற்பாடு செய்து, நம்மை பெருமைப்படுத்திய இயக்குநர் கரு.பழனியப்பன், வலைப்பதிவர்களை மீண்டும் ஒரு முறை அன்போடு அழைக்கிறார்..!


தனது முதல் படமான 'பார்த்திபன் கனவு' படத்திற்குப் பின்பு இரண்டாவது படமாக 'சதுரங்கம்' என்னும் திரைப்படத்தை 2005-ம் ஆண்டு இயக்கியிருந்தார் பழனியப்பன். 

இதில் ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், மணிவண்ணன், சரண்யா, மனோபாலா, மகாதேவன், இளவரசு போன்றோர் நடித்திருந்தனர். திவாகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். 

ஒரு நேர்மையான பத்திரிகையாளனுக்கு அரசியல்வியாதிகளால் ஏற்படும் பிரச்சினைகளும், இதனால் வெகுண்டெழும் அந்தப் பத்திரிகையாளனின் சூரசம்ஹாரமும்தான் இந்தப் படத்தின் கதை என்று, ஒரு கழுகார் கூறுகிறார்..! 


இந்தத் திரைப்படம் சில வணிகக் காரணங்களினால் இதுவரையிலும் வெளிவராமல் இருந்தது. இப்போது கடைசியாக, 6 ஆண்டுகள் கழித்து வரும் அக்டோபர் 6-ம் தேதி வியாழக்கிழமையன்று இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

வலைப்பதிவர்களுக்காக இத்திரைப்படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சி, வரும் அக்டோபர் 6-ம் தேதி மாலை 6.15 மணிக்கு சென்னை சாலிக்கிராமம், பிரசாத் பிரிவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னைவாழ் வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் இத்திரைப்படத்தை காண வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறார் படத்தின் இயக்குநர் கரு.பழனியப்பன்.

'மந்திரப்புன்னகை' திரைப்பட சிறப்புக் காட்சியின்போதே இயக்குநர் பழனியப்பன் சொல்லியிருந்த “வாக்குறுதி” இப்போதும் அமலில் இருப்பதால், படம் நமக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவோம். மாற்றுக் கருத்து இருந்தால் அதனையே விருப்பு, வெறுப்பில்லாமல் முன் வைப்போம்..! 

வாருங்கள்..!  


பெருமைப்படுத்திய வலைப்பதிவர்களுக்கு நன்றி..!

24-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று நடந்த மந்திரப்புன்னகை படத்தின் சிறப்புக் காட்சிக்கு வருகை தந்த அனைத்துப் பதிவர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

வருகிறேன் என்று சொல்லி கடைசி நிமிடத்தில் வர இயலாமல் போனதாகத் தெரிவித்த பதிவர்களுக்கும் எனது நன்றிகள்..!


இயக்குநர் திரு.கரு.பழனியப்பனை 15 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். நான் முதன் முதலாகச் சென்னைக்கு வந்த பொழுதில் இருந்தே எனக்கு அறிமுகமானவர்தான். பழகுவதற்கு இனியவர். நிறைய படிப்பாளி. ஆனந்தவிகடனில் மாணவ நிருபராக தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகமானவர்..!

நான் இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை அவரைச் சந்தித்துப் பேசியபடிதான் இருந்தேன். இருக்கிறேன். இந்த மந்திரப்புன்னகை படத்தினை சென்ற வெள்ளிக்கிழமையன்றே நான் சந்திரன் தியேட்டரில் பார்த்துவிட்டு எனது கருத்தை அவரிடம் தொலைபேசியில் கூறிவிட்டேன்.

மிக நேர்மையான முறையில் அதனை உள்வாங்கிக் கொண்டார். கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்டார். பதில் விளக்கமளித்தார். எனது சந்தேகங்களுக்கான தீர்வாக “இன்னொரு முறை அந்தப் படத்தை நீங்கள் பார்த்தால்தான் புரியும்” என்றார்.

அத்தோடு அந்தப் பேச்சு முடிவடைந்தது. திங்கள்கிழமையன்று அவரிடத்தில் இணை இயக்குநராக இருப்பவரும், எனது இன்னொரு நண்பருமான திரு.பிரபாகரன் அவர்கள் போன் செய்து “வலைப்பதிவர்களுக்கு தனியாக ஒரு ஷோ நடத்தலாம் என்று பழனி ஸார் விரும்புகிறார். ஏற்பாடு செய்யலாமா..?” என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் அப்போதே எனது சந்தேகத்தினை அவரிடமும் தெளிவுபடுத்திவிட்டேன்.

“பிரிவியூவில் பார்ப்பதினால் வலைப்பதிவர்கள் திரைப்படத்திற்குச் சாதகமாக எழுதுவார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். வலையுலகில் பலரும் இப்போது அறிமுக எழுத்தாளர்கள் நிலையில்தான் உள்ளார்கள். இதற்கெல்லாம் அசரவும் மாட்டார்கள். பிடிக்கவில்லையென்றால் முதல் வரியிலேயே மொக்கை என்றுதான் ஆரம்பிப்பார்கள்...” என்று நமது வலையுலகக் கலாச்சாரத்தை அவர் மூலமாக பழனியப்பனிடம் தெரிவிக்கச் சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னை போனில் அழைத்த பிரபாகரன், “அது ஒரு விஷயமே இல்லை. என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பல தரப்பட்ட விமர்சனங்களை இயக்குநர் எதிர்பார்க்கிறார். உங்களுக்கு அவரைப் பற்றித் தெரியாததல்ல.. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வளவுதான்..” என்றார். இதன் பின்புதான் நானும் இதற்குச் சம்மதித்தேன்.

நேற்றைய தினம் முழுவதும் பழனியப்பன் மந்திரப்புன்னகை படத்தின் பிரமோஷனுக்கான ஏற்பாடுகள் மும்முரமாய் இருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சிக்கான படப்பதிவு ஏவி.எம். ஸ்டூடியோவில் நடப்பதால், நமது திரையிடலையும் பக்கத்திலேயே வைத்துக் கொண்டால் அவரும் வந்து கலந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் ஏவி.எம். பிரிவியூ தியேட்டர் ஏற்பாடானது.

எப்படியும் இயக்குநர் பழனியப்பனே நேரில் வந்தால்தான் நமக்குத் திருப்தியாக இருக்கும் என்பதால் நேற்று காலை கரு.பழனியப்பனுக்கே போன் செய்து விஷயத்தைச் சொல்லி அவருடைய வருகையை உறுதிப்படுத்திக் கொண்டேன்..!

பல்வேறு போன் கால்கள். எனது போன் இத்தனை பிஸியாக இருந்தது நேற்று ஒரு நாளில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். நேற்றுபோல் என்றும் இருந்ததில்லை..! வருபவர்களெல்லாம் வாருங்கள்.. குடும்பத்தை அழைத்து வாருங்கள் என்று சொல்லியும் மூன்று பேர் மட்டுமே மனைவியருடன் வந்திருந்தார்கள். பலரும் அலுவலகத்தில் இருந்து அப்படியே நேராக வந்ததால் வீட்டுக்குச் சென்று அழைத்து வர முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள். ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையாக இருந்திருந்தால் நிச்சயம் குடும்பம் சகிதமாக சந்திப்புகள் நடந்திருக்கும். வந்தவரையில் மகிழ்ச்சிதான்..!

நேற்று மாலை ஸ்டூடியோ 5 தியேட்டரில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும் மந்திரப்புன்னகை படத்தைப் பார்க்க வந்திருந்ததால், பழனியப்பன் கொஞ்சம் திண்டாடித்தான் போனார். இதற்கிடையில் பிரசாத் கலர் லேப்பிலும் வேறொரு ஷோ ஓடியது.

ஆக.. இந்த மூன்று இடங்களுக்கும் மாறி, மாறி அவர் செல்ல வேண்டியிருந்ததால் பதிவர்களிடம் நீண்ட நேரம் பேச முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதாகக் கொஞ்சம் வருத்தப்பட்டுக் கொண்டார். அடுத்த முறை விரிவான முறையில் நன்கு திட்டமிட்டு ஒரு சந்திப்பை மேற்கொள்வோம் என்றேன்.

சமீபகாலமாக வலைப்பதிவர்களாகிய நாம் அனைவரும் சந்திக்கக் கூடிய சூழல் இல்லாத வருத்தம் நமக்குள் இருந்த நிலையில் திரையிடல் முடிந்தும் அரைமணி நேரமாக பேசியிருந்துவிட்டுத்தான் பல பதிவர்கள் கிளம்பினார்கள். இது மாதிரியான சந்திப்பு நிகழ்வுகளை இனி மாதத்திற்கு ஒரு நாள் வைக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.. இதற்கான வாய்ப்புகளைத்தான் நாம் இனிமேல் தேட வேண்டும்.

நாம் நேற்று பார்த்த திரையிடல் பற்றி தமிழ்சினிமா.காம்-ல்  கரு.பழனியப்பனின் புதிய ஏற்பாடு வலைப்பூ எழுத்தாளர்க­ளுக்கு வரவேற்பு
என்றும், தேட்ஸ்தமிழ்.காம் இணையத்தளத்தில்  கரு.பழனியப்பனின் 'பிளாக்கர்ஸ் ஷோ!' என்ற தலைப்பிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

தேட்ஸ்தமிழ்.காம்-ல்   வெளியான செய்தியில் இருக்கும் கோபம், கிண்டலை நாம் பொருட்படுத்த வேண்டாம்..! அவர்களுடைய செய்தியை நாம் பல இடங்களில் கொண்டு போவதும், அதில் அவர்களுடைய பெயர் மறைக்கப்படுவதினாலும் ஏற்படும் இயல்பான கோபம்தான் அவர்களுடையது என்று நினைக்கிறேன்..!

ஒரு பக்கம் அவர்களது கோபம் நியாயமானது என்றாலும், சில வார்த்தைகள் தேவையில்லாதது. மீடியாக்களின் வளர்ச்சி ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இணையம் இல்லையேல் தேட்ஸ்தமிழ்.காம் இல்லை. நாம் இல்லையேல் தேட்ஸ்தமிழ்.காமுக்கும் அதிகப்படியான விளம்பரங்கள் கிடைக்காது. ஓசியில் நாம் கொடுக்கும் விளம்பரங்களைக் கணக்கில் எடுக்காமல் புரிந்து கொள்ளாத சூழலில் நம்மைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.. விட்டுவிடுவோம்..!

மந்திரப்புன்னகையின் விமர்சனங்களை இயக்குநர் கரு.பழனியப்பன் பெரிதும் வரவேற்கிறார். படிக்கவும் ஆர்வமாக இருக்கிறார். எழுத விரும்புவர்கள் அவர்களது நியாயமான விமர்சனத்தை முன் வைக்கலாம். திரையிடல் நிகழ்ச்சி பற்றி நினைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அவர் சார்பில் மீண்டும் ஒரு முறை உறுதிமொழியை உங்களுக்கு வழங்குகிறேன்.

மேலும் நேற்று நண்பர் சுரேஷ்கண்ணன் கூகிள் பஸ்ஸில் இது போன்ற ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்தார். அந்த பஸ்ஸில் நானும் இது பற்றிய உண்மையை எழுதியிருந்தேன். இது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் இத்தகைய விளக்கம்..!

விமர்சனங்களை வரவேற்கும்விதத்தில் நம்மையும் மதித்து அன்போடு வரவேற்று கருத்துக்களைப் பகிர வைத்த இயக்குநர் கரு.பழனியப்பனுக்கும், எல்லா உதவிகளையும் செய்த இணை இயக்குனர் திரு.பிரபாகரனுக்கும், அவருடைய உதவி இயக்குநர்கள் குழுவிற்கும் வந்திருந்த வலைப்பதிவர்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

மிகக் குறுகிய காலமே இருந்தாலும் அழைப்பை ஏற்று பல சிரமத்திற்கிடையிலும் நேரில் வந்து கெளரவப்படுத்திய சகோதர வலைப்பதிவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது நன்றி..!