சங்கிலி புங்கிலி கதவ தொற - சினிமா விமர்சனம்

20-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அட்லீயின் சொந்த பட நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’  நிறுவனம், பாக்ஸ்  ஸ்டார் நிறுவனத்துடன்  இணைந்து தயாரித்துள்ள படம் இது.
படத்தின் கதாநாயகன் ஜீவா.  இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீதிவ்யா. இவர்களுடன் ராதாரவி, ராதிகா சரத்குமார், சூரி, கோவை சரளா, தம்பி ராமையா, தேவதர்ஷிணி என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஒளிப்பதிவு – சத்தியன் சூரியன், படத் தொகுப்பு – டி.எஸ்.சுரேஷ், இசை – விஷால் சந்திரசேகர், தயாரிப்பு வடிவமைப்பு – லால்குடி என்.இளையராஜா, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், பாடல்கள் – நா.முத்துக்குமார், விஜய் விவேக், அருண்ராஜா காமராஜ், பின்னணி பாடியவர்கள் – எஸ்.டி.ஆர்., அனிருத் ரவிச்சந்திரன், ஜி.வி.பிரகாஷ்குமார், பிரேம்ஜி, சக்திஸ்ரீ கோபாலன், எம்.எம்.மான்ஷி. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரனாகிய ஐக் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது இவருக்கு முதல் படமாகும்.

பேய்ப் படம்தான். ஆனால் குடும்பப் பாசமுள்ள பேய். மனைவியை இழந்து தனது சின்னஞ்சிறிய பையனுடன் தனிமையில் வாடும் ராதாரவிக்கு துணை அவருடைய மூன்று சகோதரர்கள்தான். அரண்மனை போன்ற வீட்டில் தனியே இருக்கும் ராதாரவியை சந்திக்க விடுமுறை நாட்களில் மூன்று பேரும் குடும்பத்தினருடன் வந்து போகிறார்கள்.
அப்படி வந்த ஒரு பொழுதில் சொத்துப் பிரச்சினை தலையெடுக்க அன்றைய இரவில் ராதாரவியும், அவரது மகனும் உறவினர்களாலேயே கொல்லப்படுகிறார். ஆனால் அவர்கள் இருவரின் ஆத்மாவும் சாந்தியாகாமல் அந்த வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள்.
ராதாரவியின் தம்பிமார்களை வீட்டை விட்டு துரத்துகிறது ராதாரவியின் ஆவி. இதைத் தொடர்ந்து இந்த வீட்டுக்கு யாருமே குடி வரவில்லை. வாங்கியவர்களும் அப்படியே விட்டுவிட.. இப்போது தனித்து நிற்கிறது இந்த அரண்மனை பங்களா..!
சிறு வயதிலிருந்தே வாடகை வீட்டில் வசித்து வந்ததால் பல்வேறு அவமானங்களையும், கஷ்டங்களையும் பட்டுவிட்ட ஹீரோ ஜீவாவின் வாழ்நாள் லட்சியமே தனக்கென்று ஒரு தனியாக வீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதுதான். அதிலும் சிறு வயதில் தான் ஒரு வீட்டை வாங்கி தன் அம்மாவை அதில் குடி வைத்து அழகு பார்ப்பதாக வாக்குறுதியளித்த அதே பங்களாவை வாங்க வேண்டும் என்று ஆசை.
இந்த பங்களாவின் இப்போதைய உரிமையாளர் வீட்டை விற்க முயற்சி செய்ய.. இல்லாதது, பொல்லாதது எல்லாவற்றையும் சொல்லி வீடு விற்பனையாகாமல் தடுத்து வைத்திருக்கிறார் ஜீவா. கடைசியில் ஜீவா சொல்லும் 40 லட்சம் ரூபாய்க்கே அந்த வீட்டை விற்றுவிட்டு போகிறார் உரிமையாளர்.
வீடு வாங்கிவிட்ட சந்தோஷத்தில் தனது அம்மா ராதிகா, மாமா இளவரசு குடும்பத்தினர், தனது உயிர் நண்பன் சூரியோடு அந்த பங்களாவுக்குள் காலடி எடுத்து வைக்கிறார் ஜீவா. ஆனால் பூட்டப்பட்ட அந்த வீட்டுக்குள்ளேயே ஏற்கெனவே தம்பி ராமையா, தனது மனைவி தேவதர்ஷிணி, மகள் ஸ்ரீதிவ்யாவுடன் குடும்பம் நடத்தி வருவதை பார்த்து அதிர்ச்சியாகிறார்.
ஜீவாவுக்கு முன்பாகவே தான் அந்த வீட்டை விலைக்கு வாங்கிவிட்டதாக தம்பி ராமையா சொல்கிறார். பலவித கட்டப் பஞ்சாயத்துக்களும் பலிக்காமல் போக இருவருமே அந்த வீட்டில் இருக்கலாம் என்று தற்காலிக ஒப்பந்தம் ஏற்பாடாகிறது.
ஜீவா ஏற்கெனவே ஒரு வீட்டைப் பார்க்கப் போன இடத்தில் அறிமுகமாயிருந்த ஸ்ரீதிவ்யாவுடன் அப்போதே ஏற்பட்டிருந்த காதலை இங்கேயும் இருவரும் தொடர்கிறார்கள்.
இந்த நேரத்தில் அந்த வீட்டில் ஏற்கெனவே இருந்து வரும் ராதாரவி மற்றும் அவரது மகன் ஆவிகள்.. இந்த இரண்டு குடும்பத்தினரையும் அந்த வீட்டைவிட்டு வெளியேற்ற பெரும் முயற்சி செய்கின்றன.. ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் ஆவிகள் இருப்பதை உணரும் ஜீவாவின் குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியேற நினைக்கிறார்கள்.
ஆனால் ஜீவாவோ எப்பாடுபட்டாவது அந்த வீட்டிலேயே குடியிருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இறுதியில் பேய்களும், மனிதர்களும் என்னவாகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
பேய்க் கதை என்றார்கள். ஆனால் எந்த பயமுறுத்தலும் இல்லை. காமெடி என்றும் சொன்னார்கள். வாஷிங்மெஷினை மையப்படுத்திய டபுள் மீனிங் டயலாக்கை தவிர வேறு எதற்கும் சிரிப்பே வரவில்லை.
ஜீவாவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவும் நடிக்கவில்லை அல்லது நடிக்க வைக்கப்படவில்லை. ஸ்ரீதிவ்யாவுக்கும் இதே நிலைமைதான். பாப்பாவுக்கு இந்தப் படத்தில் மதுவருந்தும் காட்சியை வைத்திருக்கிறார்கள். பெண்கள் மதுவருந்தினால் தப்பென்ன என்ற கேள்வியையும் இயக்குநர் கேட்டிருக்கிறார். வாழ்க.. வளர்க..
தம்பி ராமையாவும், தேவதர்ஷிணியும்தான் படத்தை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்கள். இருவரின் குடும்பச் சண்டையும், குடுமிப்பிடி பாசமும்தான் பார்க்க பிடித்திருக்கிறது. ராதிகாவின் மென்மையான அம்மா நடிப்பு எத்தனையோ படங்களில் பார்த்தாகிவிட்டது.
ராதாராவி தனது பாசமான தந்தை, அண்ணன் கேரக்டரை செய்திருக்கிறார். இதைவிடவும் பேயாக அப்படியே சிலையாக நிற்கும்போதுகூட நடித்திருப்பது போலவே தெரிகிறது. பாராட்டுக்கள்..!
சூரி வழக்கம்போல வசனங்களை ஸ்பீடு போஸ்ட்டாக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். இளவரசு ஒரு பக்கம்.. மயில்சாமி இன்னொரு பக்கம் கிச்சுகிச்சு மூட்ட நினைத்து உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறார். இதுவும் வீண்தான்.. சிறிது நேரமே வந்தாலும் கோவை சரளா, தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பிவிட்டுப் போகிறார்.
இந்தப் பேய் குடும்பப் பாசத்துக்கு ஏங்கிய பேய். அதனால் நாம் பேய்களின் கண்களுக்கு பாசமாக இருப்போம். அதைப் பார்த்து பேய் மனமிரங்கி ஓடிப் போய்விடும் என்கிற அந்த சின்ன கான்செப்ட் மட்டுமே படத்தில் செல்லுபடியான திரைக்கதை..!
பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் இரவுக் காட்சிகள் என்பதால் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு பெரிது. அவருக்கு நமது பாராட்டுக்கள்..! விஷால் சந்திரசேகரின் இசையில் 5 இசையமைப்பாளர்கள் சேர்ந்து பாடியதாக ஒரு பாடலும் இருக்கிறது. வெளியில் வந்தவுடன் மறந்துவிட்டது.
எத்தனை பேய்களை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள். ஆனால் அந்த பேய்கள் இதுவரையிலும் பார்க்காத புதுமையான பேய்களாக இருந்தால் மட்டுமே இனிமேல் அவைகள் செல்லுபடியாகும் என்பதை இந்தப் படத்தின் கதி தமிழ்த் திரையுலகத்திற்கு உணர்த்துகிறது..!

0 comments: