சரவணன் இருக்க பயமேன் - சினிமா விமர்சனம்

13-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.
இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க, ரெஜினா கேஸண்ட்ரா, சிருஷ்டி டாங்கே இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும், சூரி, லிவிங்ஸ்டன், மன்சூரலிகான், ரோபோ ஷங்கர், யோகிபாபு, சாம்ஸ், ரவி மரியா, மதுமிதா, நித்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.ஜி.வெங்கடேஷ், இசை – டி.இமான், கலை – ருத்ரகுரு, பாடல்கள் – யுகபாரதி, படத் தொகுப்பு – கே.ஆனந்தலிங்க குமார், நடனம் – பிருந்தா, தினேஷ், தினா, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, எழுத்து, இயக்கம் – எஸ்.எழில்.
இயக்குநர் எழிலின் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியாகி அதிரி புதிரி ஹிட்டடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்திற்கு பிறகு பெரிய எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் இது.

ஹீரோ உதயநிதி தனது சண்டை கோழியான பால்ய காலத் தோழி தேன்மொழி என்னும் ரெஜினாவை சமீபத்தில் இறந்து போன தன்னுடைய இளமைக் கால தோழியான பாத்திமா என்னும் சிருஷ்டி டாங்கேயின் உதவியுடன் எப்படி காதலித்து கரம் பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதைக் கரு.
ஒரு அகில இந்திய கட்சியின் மாநாட்டில் கட்சியின் அடுத்தக் கட்டத் தலைவர்களில் ஒருவருக்கு சிக்கன் பீஸ் கொடுக்காததால் கோபப்பட்டு அவர் கட்சியை இரண்டாக உடைக்கிறார். உடைபட்ட புதிய கட்சிக்கு தமிழகத்தின் தலைவராக விரும்பும் சூரி இதற்காக டெல்லி சென்று பெரும்பாடுபட்டு மாநில கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டு ஊர் திரும்புகிறார்.
ஊரில் வேலை வெட்டியில்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் உதயநிதி, ஊர் திருவிழாவில் ஆட வரும் ஜிகினாஸ்ரீயை வரவேற்கும் போஸ்டர்களில் தனது பெயரை அடிக்க புகைப்படம் எடுத்து போஸ்டர்களுக்கு ஆர்டர் கொடுக்கிறார். ஆனால் அந்தக் குடிகார போட்டோகிராபர் போட்டோக்களை மாற்றிக் கொடுத்ததினால் ஊருக்குள் பெரிய வில்லனாக இருக்கும் மன்சூரலிகான் ஜிகினாஸ்ரீயுடன் ஒட்டிக் கொண்டு நிற்கும் போஸ்டர் மன்சூரலிகானின் வீட்டு சுவற்றிலேயே ஒட்டப்படுகிறது.
பதினெட்டு அடி அரிவாளோடு கொலை வெறியோடு தன்னைத் துரத்துபவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டி துபாய்க்கு தப்பியோடிய சூரி, அங்கே ஒட்டகம் மேய்த்து கஷ்டப்படுகிறார். இங்கே போஸ்டர் மாறியதால் அந்த சிக்கன் பீஸ் கட்சிக்கு மாநிலத் தலைவராகிறார் உதயநிதி.
உதயநிதியின் பால்ய காலத்து குடும்ப நண்பரான லிவிங்ஸ்டன் திரும்பவும் ஊருக்கே வருவதால் அதுவரையிலும் கட்சி அலுவலகமாக பயன்படுத்திவரும் அந்த வீட்டை காலி செய்து கொடுக்கும்படி உதயநிதியின் அப்பா ராஜசேகர் உதயநிதியிடம் கேட்கிறார். ஒரு வார காலம் அவகாசம் கேட்கிறார் உதயநிதி.
அதற்குள்ளாக லிவிங்ஸ்டன் தனது மனைவி நித்யா மற்றும் மகள் தேன்மொழி என்னும் ரெஜினா கேஸண்ட்ராவுடன் ஊர் திரும்புகிறார். சின்ன வயதிலேயே பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்து பழகியிருந்தாலும் உதயநிதிக்கும், ரெஜினாவுக்கும் ஆகவே ஆகாது. எலியும், பூனையும் மாதிரியிருக்கிறார்கள்.
“நான் ஊருக்குத் திரும்பி வரும்போது நீ கண்டிப்பா பிச்சையெடுத்திட்டிருப்ப பாரு…” என்று ரெஜினா சவால்விட்டிருக்கிறார். ஆனால் இப்போது உதயநிதி ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பது அவரது ஈகோவை உசுப்பிவிடுகிறது. உதயநிதியோ, ரெஜினா என்னும் அழகு தேவதையை பார்த்தவுடன் லவ்வாகிறார். ஆனால் ரெஜினாவோ உதயநிதியை வெறுக்கிறார். இவரை வெறுப்பேத்த வேண்டுமே என்பதற்காகவே சாம்ஸை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து நிச்சயத்தார்த்தமும் நடைபெறுகிறது.
இந்த நேரத்தில்தான் உதயநிதி கல்லூரி படிக்கும்போது அவர் மீது காதிலில் இருந்த பாத்திமா என்னும் சிருஷ்டி டாங்கே உதயநிதியை காப்பாற்ற வேண்டி ரெஜினாவின் உடலில் அவ்வப்போது புகுந்து பல குழப்பங்களை செய்து வருகிறது.
பாத்திமா ஆவியின் திருவிளையாடல்களை அறிந்த உதயநிதி, தனக்கும் ரெஜினாவுக்குமான காதல் ஒர்க் அவுட்டாக உதவி செய்யும்படி பாத்திமாவை வேண்டிக் கொள்ள.. ஆவியும் இதற்கு ஒப்புக் கொள்கிறது.
ஆவி தன் வாக்கைக் காப்பாற்றியதா..? உதயநிதி-ரெஜினா காதல் நிறைவேறியதா என்பதுதான் இந்த பாதி சிரிப்பு படத்தின் கதை..!
உண்மையாக இந்தப் படத்தின் பெயரை ‘பாத்திமா இருக்க பயமேன்’ என்றுதான் வைத்திருக்க வேண்டும். ஹீரோயிஸத்திற்காக மாற்றி வைத்துவிட்டார்கள்.
தியேட்டருக்கு வரும் ரசிகர்களை லாஜிக் பார்க்காமல் சிரிக்க வைக்க மட்டுமே முடிவு செய்திருந்த இயக்குநர், திரைக்கதையில் சற்று சோம்பலாகிவிட்டதால் படத்தின் பல இடங்களில் தொய்வு ஏற்படுவதை மறுப்பதற்கில்லை.
கதையென்று பார்த்தால்கூட அது மூன்று தளங்களில் போய்க் கொண்டிருப்பதால் எது முதன்மையானது என்றே யோசிக்க முடியவில்லை. கட்சித் தலைவர்.. காதலியை அடைவது.. பேய்க் கதை என்று மூன்று பக்கமுமே அவ்வப்போது திரைக்கதை செல்வதால்தான் இந்தக் குளறுபடி. துவக்கத்தில் இருந்தே பேய்க் கதையாகவே எடுத்திருந்தால் நிச்சயமாக இந்தப் படம் இதைவிட அதிகமாகவே பேசப்பட்டிருக்கும்..!
உதயநிதிக்கென்று தனியாக ஒரு இருப்பிடம் இல்லை. அதே சமயம் யாரையும் இரிடேட் செய்தும் அவர் நடிக்கவில்லை. தனக்கு எது வருகிறதோ அதையே செய்து கொண்டிருக்கிறார். இதிலும் அப்படியே.. நடிப்புக்கென்று பெரிய ஸ்கோப் இல்லாத படமென்பதால் தன்னால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார்.
ரெஜினாவுக்கு இந்தப் படத்தில்தான் அழுத்தமான நடிப்பைக் காட்ட பெரிய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. அழகு தேவதையாக சில காட்சிகளில் தென்படுகிறார். கோபம், ஆத்திரம், வீறாப்பு, பொறாமை, தந்திரம் என்று பலவகையான குணாதிசயங்களையும் தன்னுடைய முகத்திலேயே காட்டி நடித்திருக்கிறார். தென்னகத்தின் ஜூலியா ராபர்ட்ஸ் என்று சும்மாவா சொன்னார்கள்..?
பாத்திமா என்னும் காதலியாக நடித்திருக்கும் சிருஷ்டியும் ஏமாற்றவில்லை. பாடல் காட்சிகளில் தேவதை போலவே காட்சியளித்திருக்கிறார். சில காட்சிகளே என்றாலும் மனதில் நிற்கிறார்.
கணக்கிலடங்காத குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்களின் மிரட்டல்கள் படத்தில் அதிக இடங்களில் ஒங்கி ஒலித்திருக்கின்றன.
பஞ்சாயத்து பேச வரும் ‘மகுடேஸ்வரன்’ ரவி மரியா, ‘சகுடேஸ்வரன்’ ரோபா சங்கரின் கோஷ்டியும் அந்த நிகழ்வுகளும்தான் சில நிமிட தொடர்ச்சியான காமெடியை காட்டியிருக்கிறது.
இன்னொரு பக்கம் சாம்ஸும் யோகி பாபுவும் தனி ரகளை செய்திருக்கிறார்கள். “எலெக்சன்ல டெபாசிட்டே வாங்காத கட்சிக்காகவெல்லாம் இனிமேலும் அடி வாங்க முடியாதுப்பா…” என்ற யோகியின் டயலாக்கிற்குத்தான் மொத்த தியேட்டரும் அதிர்கிறது..!
சாம்ஸ் தனது டைமிங் வசனங்களால் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதேபோல் படம் முழுவதும் வசனம் பேசியே கொன்றிருக்கும் கல்யாணம் என்னும் சூரியும் சில இடங்களில் தெறிக்க விட்டிருக்கிறார். மறுப்பதற்கில்லை.
வீரசிங்கமான மன்சூரலிகானை பதம் பார்க்கும் மாமனார் ஜி.எம்.குமார், இவரது மனைவி, இவரது இரண்டாவது மனைவி.. என்று கதை போகுமிடங்களில் நல்ல காமெடிதான். ஆனால் விட்டுவிட்டு வருவதால் சட்டென்று அதனுள் புக முடியவில்லை.
டி.இமானின் இசையில் ‘எம்புட்டு இருக்கு ஆசை’ பாடல் மெலோடியில் கலக்குகிறது. ‘லாலா கடை’ குத்துப் பாடல் ஈர்க்கிறது. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் விசாகப்பட்டிணம் கடற்கரை பகுதியின் அழகு தென்படுகிறது என்றாலும் இன்னும் நன்றாகவே படமாக்கியிருக்கலாமே என்றும் சொல்லத் தோன்றுகிறது.
தொழில் நுட்பத்தின் உதவியுடன் திலீப் சுப்பராயனின் சண்டை பயிற்சிகள் உதயநிதிக்கு பெரிதும் உதவியிருக்கின்றன. இதேபோல் பிருந்தா, தினேஷ், தினா நடன மாஸ்டர்களின் அனுக்கிரஹத்துடன் உதயநிதிக்கு நடனமும் கை வந்த கலையாகிவிட்டது. ஆனாலும் நடிப்பென்று முகத்தில் காட்டும் நவரசத்தில் ஏதும் மாற்றம் வரவில்லையென்றால் எதுவும் செய்ய முடியாது.. சொல்லவும் முடியாது..!
இயக்குநர் எழில் குறைவில்லாமல் நன்றாகத்தான் இயக்கியிருக்கிறார். ஆனால் பல காட்சிகளில் நமக்குத்தான் காமெடியே வரவில்லை. அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார் என்று மட்டுமே சொல்லலாம்..!

0 comments: