சிவலிங்கா - சினிமா விமர்சனம்

17-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் பிரபு வெங்கடாச்சலம் வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா, சந்தான பாரதி, சக்திவாசு, பிரதீப் ராவத், ஜெயப்பிரகாஷ், வி.டி.வி.கணேஷ், மதுவந்தி அருண், மதுமிதா, பரத் கல்யாண் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஊர்வசி லாரன்சின் அம்மாவாகவும், கதாநாயகி ரித்திகா சிங்கின் அம்மாவாக பானுப்பிரியாவும் நடித்துள்ளனர்.
இயக்கம் – பி.வாசு, தயாரிப்பு – ஆர்.ரவீந்திரன், ஒளிப்பதிவு – சர்வேஷ் முராரி, இசை – எஸ்.எஸ்.தமன், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – ஜி.துரைராஜ், பாடல்கள் – விவேகா, நடனம் – ராகவா லாரன்ஸ், சிவா லாரன்ஸ், பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி – அனல் அரசு, தளபதி தினேஷ், மாஸ் மாதா, சிகை அலங்காரம் – ஏ.சப்தகிரிவாசன், புகைப்படம் – பி.ஜெயராமன், விஷுவல் எபெக்ட்ஸ் – இளங்கோ, சுபீஷ், சிறப்பு சப்தம் – சி.சேது, டிடிஎஸ் வல்லுநர் – கிருஷ்ணமூர்த்தி, டிஸைனர் – பவன் குமார், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – கோடா கிரிஷ், தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.என்.அஷ்ரப், டி.எஸ்.செல்வராஜ், மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.எஸ்.பழனியப்பன், ஆர்.விக்ரமன், இணை தயாரிப்பு – ஜெ.அப்துல் லத்தீப்.

சி.பி.சி.ஐ.டி. பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றும் சிவலிங்கேஸ்வரன் என்னும் ராகவா லாரன்ஸ் மிக நேர்மையானவர். ஆம்புலன்ஸில் கோடி, கோடியாய் பணத்தைத் திருட்டுத்தனமாக கடத்துவதை கண்டுபிடிப்பவர், அவர்கள் கொடுக்க முன் வரும் ‘பிப்டி பிப்டி ஷேர்’ என்கிற விஷயத்தைக்கூட ஏற்றுக் கொள்ளாமல் திருட்டுக் கும்பலை ஒட்டு மொத்தமாய் உள்ளே தூக்கி போடுகிறார்.
இவரிடத்தில் ஒரு வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. ரஹீம் என்னும் சக்தி வாசு ஒரு நாள் இரவில் ரயிலில் பயணம் செய்யும்போது திடீரென்று ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலைக்கு ஒரே சாட்சி ரஹீம் வளர்த்து வந்த சாரா என்னும் புறாதான். ஆனால் இந்த வழக்கிற்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடிய அளவுக்கான ஆதாரம் எதுவும் இல்லாததால் தற்கொலை என்று வழக்கை மூடுகிறது காவல்துறை.
ரஹீமை காதலித்து கல்யாணத்திற்காக காத்திருந்த அவருடைய காதலி, போலீஸ் கமிஷனரிடம் இது பற்றி புகார் செய்ய.. கேஸ் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படுகிறது. இப்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அங்கிருந்துதான் இந்த வழக்கு சிவலிங்காவின் கைக்கு வருகிறது.
இப்போது சிவலிங்கா பெண் பார்க்கப் போய் பெண்ணை மிகவும் பிடித்துப் போய் அவசரமாக கல்யாணமும் செய்துவிடுகிறார். அவருடைய மனைவியான ரித்திகா சிங் பேய்ப் படங்களை பார்த்து அலறுவதையே ஒரு திரில்லிங்காக செய்யக் கூடியவர்.
ரஹீம் கொலை விசாரணைக்காக வேலூர் வரும் ராகவா லாரன்ஸ், ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் தனது புதிய மனைவியுடன் குடியேறுகிறார். வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். முதல் சந்தேகம் ரஹீமின் காதலியின் அப்பா மீது பாய்கிறது. ஆனால் அவரோ “தான் எதுவும் செய்யவில்லை என்றும், மகளிடம் சொல்லி காதலை கத்தரிக்க நினைத்தேன். ஆனால் கடைசியில் ரஹீமின் நல்ல குணத்தைப் பார்த்து கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டேன்…” என்கிறார்.
விசாரணை மேலும் தீவிரமாகும்போது ரஹீமின் ஆவி ரித்திகாவின் உடலில் புகுந்து கொண்டு அவரை ஆட்டிப் படைக்கிறது. ரித்திகா திடீர், திடீரென்று வேறு வேறு மாதிரியாய் நடந்து கொள்வதை பார்த்து பயந்து போன ராகவா லாரன்ஸ் மனைவியை மருத்துவரிடம் அழைத்து வருகிறார். அப்படியும் சிக்கல் தீராமல் போக தர்ஹாவுக்கு மந்திரிக்க அழைத்து வருகிறார்.
அங்கேதான் அவளது உடம்பில் ஏறியிருப்பது ரஹீம் என்பது தெரிய வருகிறது. ரஹீமின் ஆவியோ ‘என்னைக் கொலை செய்தவன் யார்..? அவன் எதற்காக என்னைக் கொலை செய்தான் என்பது எனக்குத் தெரிய வேண்டும். சீக்கிரம் கண்டு பிடி. காரணம் தெரியாமல் நான் ரித்திகாவின் உடம்பில் இருந்து வெளியேற மாட்டேன்..’ என்கிறது.
இப்போது ராகவா லாரன்ஸுக்கு உடனடியாக இந்த வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. துப்பு துலக்கினாரா..? யார் குற்றவாளி.. எதற்காக ரஹீமை கொலை செய்தார் என்பதுதான் இந்த சஸ்பென்ஸ் அண்ட்  திரில்லர் படத்தின் திரைக்கதை.
‘சந்திரமுகி’, ‘காஞ்சனா’ டைப்பில் இந்த இரண்டு படங்களையும் இணைத்தது போன்ற கதையில் அதே பாணியில் இயக்கி வெற்றிப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பி.வாசு.
சிவா என்னும் சிவலிங்கேஸ்வரனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் வழக்கம்போலவே அற்புதமாக நடனடமாடியிருக்கிறார். தனக்குத் தெரிந்தவரையிலும் நடித்திருக்கிறார். பேயைக் கண்டால் பயப்படும் தனது டிரேட் மார்க் நடிப்பையும் காட்டியிருக்கிறார். சண்டை காட்சிகளில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்.
இடையிடையே உடல் ஊனமுற்றவர்களுக்கு தானே ஆபத்பாந்தவன் என்றும், ரஜினிக்கு பின்பு தான்தான் என்பதை மறைமுகமாகச் சொல்லும்விதமாகவும் ‘சின்ன கபாலி’ என்றும் படத்திற்கு விளம்பரம் செய்வதை போலவும் காட்சிகளை வைத்து அதையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
தாய்ப் பாசத்தை காட்டும்விதத்தில் “பெத்த அம்மாவ விட்டுட்டு எவனெல்லாம் தனியா போறேனோ, அவனெல்லாம் என் பார்வையில் ஒரு பொணம்டா…” என்கிறார். இன்னொரு இடத்தில் “தப்பு பண்ற ஒவ்வொருத்தனுக்கும் ஆண்டவன் ஏதோ ஒரு இடத்துல ஆப்பு வைப்பான்…” என்று பன்ச் வசனம் பேசி அடிக்கிறார். அதேபோல் பேயை பார்த்து பயப்படும் காட்சியில் “என் தலைவனுக்கு பாம்புன்னா பயம்; எனக்கு பேய்னா பயம்…” என்கிறார்.
இவருக்கு நடிப்புக்கான ஸ்கோப்பே கிளைமாக்ஸ் காட்சியில்தான் கிடைக்கிறது. அதிலும் ரஹீமின் ஆவியை தன் உடம்பில் இறக்கிக் கொண்டு அவர் ஆடும் ஆட்டமும், அதற்கேற்ற பின்னணி இசையும், காட்சியமைப்பும் ஒத்துழைப்பு தர.. ராகவா லாரன்ஸை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது.
‘இறுதிச் சுற்று’ ரித்திகா சிங்கா இது என்று கேட்க வைத்திருக்கிறார். நிஜத்தில் இவர் ஒரு குத்துச் சண்டை வீராங்கனை. நடனமே தெரியாது என்றுதான் திரையுலகப் பயணத்தின் துவக்கத்தில் சொன்னார். ஆனால் இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் இவர் ஆடியிருக்கும் ஆட்டம்.. அசத்தல்.. அதிலும் ‘ரங்கு ரக்கர’ பாடலில் ஆடியிருக்கும் ஆட்டத்தை லட்சுமி ராய் பார்த்தால் நிச்சயமாக கோபப்படுவார். அந்த அளவுக்கு லாரன்ஸுடன் ரொமான்ஸில் பின்னிப் பிணைந்திருக்கிறார்.
லாரன்ஸ் பெண் பார்க்க வந்த இடத்தில் பட்டென்று அவரே பேசத் துவங்கி.. “என்னை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்….” என்று இயல்பை மாற்றிப் போட்டு நடிப்பைத் துவக்கி.. ரஹீமின் பேய் அவருடைய உடம்பில் புகுந்தவுடன் அவர் காட்டும் ஆக்சன்கள் அத்தனையும் அசத்தல் ரகம். ‘சந்திரமுகி’ ஜோதிகாவை இந்த இடத்தில் நிஜமாகவே நினைவுபடுத்த வைத்திருக்கிறார் ரித்திகா சிங். அந்த பேயின் கொடூர முகத்துக்கான மேக்கப்புடன், நடிப்பையும் விட்டுவிடாமல் அழகாக நடித்திருக்கிறார். வாழ்த்துகள் ரித்திகா.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பட்டுக் குஞ்சமாக’ அவதாரமெடுத்திருக்கும் நடிகர் வடிவேலு பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். டென்ஷனை குறைக்க வைத்திருக்கிறார். இவரும், ஊர்வசியும் இருக்கும் காட்சிகளில் நடிப்பும், வசனமும் பின்னிப் பிடலெடுக்கிறது. ‘வடிவேலு இஸ் பேக் டூ தி பார்ம்’ என்று சொல்ல வைத்திருக்கிறார்.
“பொண்ணு முகத்தை பார்க்காம கல்யாணம் பண்றவங்க அவங்க; நெருப்புக்கு முன்னாடி கல்யாணம் பண்றவங்க நாம…” என்று அடக்கமாக மகளின் மனதை மாற்ற முயலும் ராதாரவியும் நடிப்பில் கவர்கிறார். “ஒரு பேய்க்கும், பேக்குக்கும் இடையில மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்….” என்று புலம்பும் ‘அறுசுவை அன்னலட்சுமி’ ஊர்வசியும் கலகலப்பையும் ஊட்டி, ரசிக்கவும் வைத்திருக்கிறார்.
வெகு நாட்களுக்குப் பிறகு பானுப்பிரியா. அலட்டல் இல்லாமல் அமைதியாக ரித்திகாவின் அம்மாவாக நடித்திருக்கிறார். மேலும் ரஹீமாக நடித்திருக்கும் சக்திவாசுவுக்கு நிஜமாகவே இந்தப் படம் ஒரு முக்கியமான படம்தான். பேய் வடிவத்தில் இவர் காட்டியிருக்கும் நடிப்புக்காக மிகப் பெரிய பாராட்டை இவருக்கு வழங்கலாம்.
சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த பலம்தான். இடையிடையே சி.ஜி., கிராபிக்ஸ் உதவியுடன் ஒளி கூட்டல்கள் இருக்கின்ற என்றாலும் அதுவும் படத்தை கலர்புல்லாகவே காட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளில் ரம்மியம் என்று சொல்லலாம். லொகேஷன்களை பார்த்து, பார்த்து செலக்ஷன் செய்திருப்பதால் இதுவும் ஒளிப்பதிவுக்கு ஏற்றதாகவே அமைந்திருக்கிறது.
படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் தன் வேலையை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். படத்தின் பிற்பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் கிரிப்பாக இருந்திருக்கும்..!
பேய் பங்களா.. பங்களாவுக்கு பின்பக்கம் சுடுகாடு.. வீட்டின் உள் அமைப்பு.. என்று பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்திருக்கிறார் கலை இயக்குநர் ஜி.துரைராஜ். பாராட்டுக்குரியவர்.
இப்போது பழைய இயக்குநர்களெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டார்கள் என்றெல்லாம் யார், யாரோ பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் இயக்கத்தை பார்த்துவிட்டு யாரும் அப்படி சொல்லிவிட முடியாது. பி.வாசுவின் இயக்கத் திறமைக்கு இந்தப் படம் ஒரு பெரிய சான்று.
ரித்திகாவுக்கும், ரஹீமுக்குமான தொடர்பு.. அந்தக் கதையின் முடிச்சு அவிழ்க்கப்படும் இடம், தொடரும் இடம்.. அது முடிவுக்கு வரும் இடம்.. என்று அனைத்தையும் பார்த்து, பார்த்து எழுதியிருக்கிறார் இயக்குநர் வாசு. படத்திலேயே எதிர்பாராத கதை இதுதான். வெல்டன் ஸார்..!
அதேபோல் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் அதிகாரி என்றுதான் அனைவரும் சொல்கிறார்களே தவிர.. ராகவா லாரன்ஸ் அங்கே என்ன பதவியில் இருக்கிறார் என்பதை உயரதிகாரியான மதுவந்தி அருண்கூட சொல்லவில்லை என்பதுதான் சோகம்.
அதேபோல் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தற்கொலை என்று தீர்ப்பாகிவிட்ட நிலையில் மீண்டும் இதனை திறப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்கிற விதிகளெல்லாம் இருக்கே..!? அதையெல்லாம் கேட்காமல், எந்தவிதமான காரணமும் இல்லாமல் பட்டென்று ஒரு போலீஸ் கமிஷனர் தன்னிடம் வந்த புகாரையடுத்து வழக்கை ரீ-ஓப்பன் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்றே சொல்லலாம்.
அதேபோல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் ஒரே இடத்தில் குவித்து வைத்து அவர்கள் முன்பாக விசாரித்து உண்மையை வரவழைக்க வேண்டிய தேவை என்ன இருக்கறது என்று தெரியவில்லை.
ஆனால் புதுமையான கிளைமாக்ஸுக்காக இயக்குநர் வாசு செய்திருக்கும் இந்த திரைக்கதையும் சுவையாகத்தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதால் இதனையும் ஏற்றுக் கொள்வோம்.
ஒரு கிரைம் – மர்டர் – சஸ்பென்ஸ் – திரில்லர் – கதையில் பேயையும் இணைத்து பேய்க் கதையாகவும் மாற்றி, அதையும் தனது சிறப்பான இயக்கத்தால் வெற்றிகரமாக இயக்கிக் காட்டியிருக்கும் இயக்குநர் பி.வாசுவுக்கு நமது பாராட்டுக்கள்..!
சிவலிங்கா – பார்க்க வேண்டிய படம்தான்.. இதில் சந்தேகமேயில்லை..!

0 comments: