ப.பாண்டி - சினிமா விமர்சனம்

18-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடிகர் தனுஷ் தானே தயாரித்து, இயக்குநராகவும், நடிகராகவும் களமிறங்கும் இந்த  ‘ப.பாண்டி’ படத்தில் ராஜ்கிரண்  ஹீரோவாக நடிக்க ஜோடியாக  ரேவதி நடித்துள்ளார்.
இவர்களுடன்  பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா(அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
சிறப்பு தோற்றத்தில் மடோனா செபாஸ்டியனும், நட்புக்காக இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், பாலாஜி மோகன், நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – தனுஷ், ஒளிப்பதிவு – ரா.வேல்ராஜ், இசை – ஷான் ரோல்டான், பாடல்கள் – தனுஷ், செல்வராகவன் மற்றும் ராஜூ முருகன், நிர்வாக தயாரிப்பு – எஸ். வினோத் குமார், படத்தொகுப்பு – ஜி.கே. பிரசன்னா, நடனம் – பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி – சில்வா, ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மது. 

சினிமாவில் சண்டை பயிற்சியாளராகப் பணியாற்றி தற்போது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றிருக்கும் ராஜ்கிரண் தனது மகன் பிரசன்னா, மருமகள் சாயாசிங் மற்றும் பேரன், பேத்தியுடன் இருக்கிறார்.
தினப்பொழுதுக்கு ஓய்வில் இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார். அந்த ஏரியாவில் மிகப் பிரபலமானவராகவும் இருக்கிறார். ஏதாவது தவறுகள் நடந்தால் உடனேயே தட்டிக் கேட்கும் தைரியம் மிக்கவராகவும் இருக்கிறார்.
ஆனால் இவரது மகன் பிரசன்னா தான் உண்டு தன் வேலையுண்டு என்றே இருக்க நினைக்கிறார். தலைமுறை இடைவெளியும் இதனுடன் சேர்ந்து கொள்ள.. அப்பனுக்கும், மகனுக்கும் இடையில் எப்போதும் ஒரு பனிப்போர்.
ஏரியாவில் கஞ்சா விற்பவர்களை பற்றி போலீஸில் புகார் கொடுக்கிறார் ராஜ்கிரண். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த கான்ஸ்டபிள்கள் பிரசன்னாவை மிரட்ட.. ராஜ்கிரணை கடிந்து கொள்கிறார் பிரசன்னா. மகனின் பேச்சுக்காக ஸ்டேஷனுக்குச் சென்று தனது புகார் மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டு திரும்புகிறார்.
இதற்கிடையில் ராஜ்கிரணுக்கு ஒரு திரைப்படத்தில் சண்டை காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் சக்ஸ்ஸ்புல்லாக நடித்துக் காட்டுகிறார். வெகு நாட்களுக்கு பிறகு ஸ்டூடியோவில் தனக்குக் கிடைத்த மரியாதையை நினைத்து பூரிப்போடு வீடு திரும்புவரின் கண்ணில் மறுபடியும் அந்த கஞ்சா பார்ட்டிகள் சிக்கிவிட.. அவர்களை தூக்கிப் போட்டு மிதித்துவிடுகிறார்.
இந்தக் கேஸ் போலீஸுக்கு போக.. பிரசன்னா அப்பாவை எதிர்த்து கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறார். இதனால் வேதனைப்படும் ராஜ்கிரண், சட்டென எழுந்த கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
கண் போன போக்கில் போனவர் ஒரு இடத்தில் தன் வயதையொத்த நபர்களின் கூட்டத்தை பார்த்து அவர்களிடம் பேசுகிறார். அவர்கள் அவரது வாழ்க்கைக் கதையை கேட்கிறார்கள். தன்னுடைய முதல் காதலை பற்றி அவர்களிடத்தில் சொல்கிறார் ராஜ்கிரண்.
“இப்போ அவளை பார்க்கத்தான் போறியா..?” என்று ஒருவர் கேட்க.. “இதுவரைக்கும் அந்த எண்ணம் இல்லை. இப்போ வந்திருச்சு..” என்கிறார் ராஜ்கிரண். முகநூல் மூலமாக அவரது காதலியைத் தேடிக் கண்டுபிடிக்கும் அந்தக் கூட்டம், அவருடைய காதலி ஹைதராபாத்தில் இருப்பதாகச்  சொல்கிறார். உடனேயே அவரைத் தேடி ஹைதராபாத்திற்கு தனது பைக்கிலேயே பறக்கிறார் ராஜ்கிரண்.
இன்னொரு பக்கம் அப்பாவை காணாமல் பிரசன்னா பதறுகிறார். போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். நாலாபுறமும் தேடி வருகிறார். இந்த இக்கட்டில் ராஜ்கிரண் ஹைதராபாத்தில் தனது காதலியை கண்டுபிடித்தாரா இல்லையா..? என்ன ஆனது..? திரும்பவும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தாரா என்பதுதான் இந்தச் சுவையான திரைப்படத்தின் கதை.
இப்படியொரு குடும்பக் கதையை பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டது..? தனுஷ் தனது முதல் கதையை இப்படி தேர்வு செய்வார் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அதோடு இயக்கத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
முதலில் கதாபாத்திரங்களின் தேர்வுக்காகவே தனுஷை வெகுவாகப் பாராட்ட வேண்டும். ஆளுமை தன்மையுடனும், பாசத்துடனும், நேசத்துடனும், கண்டிப்புடனும் இருக்க வேண்டிய ஒரு தகப்பனாக ராஜ்கிரணின் நடிப்பு அற்புதம்.. தனது பேரன், பேத்திகளின் பாசத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டிய சூழல்.. பையனிடம் திட்டுவாங்கிவிட்டு பேரப் பிள்ளைகளிடம் அதற்காக பல்பு வாங்குவது.. பக்கத்து வீட்டு பையனுக்கு முதல் நாள் அட்வைஸ் செய்து, மறுநாள் அவனுடனேயே அமர்ந்து தண்ணியடிக்கும் காட்சியில் கொஞ்சம் காமெடியையும் சேர்த்தே தந்திருக்கிறார்.
தன்னை நோக்கிப் பாய்ந்த வார்த்தைத் தோட்டாக்களை தேக்கி வைத்திருந்து, ஒரு நாள் பிரசன்னாவிடம் திருப்பித் தரும் காட்சியில் ராஜ்கிரண் கைதட்டல்களை அள்ளியிருக்கிறார். தனுஷிடம் இப்படியொரு இயக்கத் திறமையை எதிர்பார்க்கவில்லை என்பதற்கு முதல் அச்சாரத்தை இந்த ஒரு காட்சியே விதைத்தது என்றால் அது மிகையில்லை.
ரேவதியை முதன்முதலில் பார்த்தவுடன் அவர் காட்டும் பரவசம்.. ரேவதியின் தொடுதலில் ஏற்படும் கிளர்ச்சி.. பேச்சில் காட்டும் நெருக்கத்தால் ஏற்படும் மன நிம்மதி.. விசாரிப்பில் விளையும் அன்பும், பாசமும்.. இப்படி அனைத்தையும் அந்த ஒரு பாடல் காட்சியிலேயே காட்டியிருக்கிறார் ராஜ்கிரண்.
தனது மனைவியின் இழப்பை நினைக்காதவரையும் நினைக்க வைக்கும் அளவுக்கான சம்பவங்கள் வீட்டில் நடந்துவிட அதை நினைத்து வருந்துகிறவரை சமாதானப்படுத்தும் பேரன், பேத்திகளிடம் அவர் பேசும்விதமும், நடந்து கொள்ளும்விதமும் ஒரு சாதாரண தாத்தாவைத்தான் காட்டுகிறது.
இறுதியில் ரேவதியிடம் பிரியாவிடை பெற்றுவிட்டு திரும்பிப் பார்க்காமலேயே ஒரு குறியீடாக டாட்டா காட்டிவிட்டு செல்கின்ற உடல் மொழியிலும்கூட ஒரு சபாஷ் போட வைத்திருக்கிறார் ராஜ்கிரண்.
ரேவதியை பார்த்து மிக நீண்ட நாட்களாகிவிட்டது. அந்த வயதுக்கேற்ற பக்குவமான நடிப்பைக் காட்டியிருக்கிறார். ராஜ்கிரணை பார்த்தவுடன் அவருக்குள் ஏற்படும் ஒரு ஜெர்க்கை முகத்தில் காட்டும் அந்த நொடியில் ரேவதியை அனைவருக்குமே பிடித்துவிடுகிறது.
இறுதியில் தன்னிடமிருந்த ராஜ்கிரணின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்துவிட்டு,  தான் எழுதிய கடைசியான காதல் கடித்த்தை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு கண்ணீர் மல்க விடை கொடுக்கும் காட்சி ஒரு காதல் கவிதை. அந்தக் கவிதையிலேயே ஒரு கவிதையாய் நிற்கிறார் ரேவதி.
சின்ன வயது ராஜ்கிரண் கேரக்டர்களில் வரும் தனுஷும், மடோனா செபாஸ்டியனும் சரியான தேர்வு. மடோனாவுக்கு நம்ம ஊர் பொண்ணு கேரக்டர் சற்றே ஒத்து வரவில்லை என்றாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். தனுஷுக்காகவே சண்டை காட்சியை வைத்திருந்தாலும் அது திணிக்கப்பட்டதாகவே தெரியவில்லை.
அந்தக் கிராமத்து போர்ஷனை வழவழவென இழுக்காமல் ரத்தினச் சுருக்கமாக அதே சமயம் அழகாக சுருக்கியிருக்கிறார்கள். கடைசியில் தன்னிடம் வரும் மடோனாவின் தம்பியைத் தூக்கிக் கொள்ளும் தனுஷின் செயலிலேயே அவருடைய பரிதவிப்பு தெரிகிறது. ஏ கிளாஸ் நடிப்புய்யா..!
பிரசன்னாவுக்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும். தந்தையைப் பற்றியே தான் எண்ணவில்லை என்பதை புரிந்து கொண்டு கடைசியாக குமுறி அழும் அந்த அப்பாவியின் நிலைமையில்தான் இன்றைக்கு பாதி இளைஞர்கள் நாட்டில் உள்ளனர். இந்தக் கேரக்டர் இல்லாத தெருக்களும், ஊர்களும் இந்தியாவிலேயே இருக்க முடியாது. மிகச் சிறப்பான கேரக்டர் ஸ்கெட்ச் இது.
மற்றும் மடோனாவின் அப்பாவாக நடித்திருக்கும் ‘ஆடுகளம்’ நரேன், லொட லொட வாயுடன் தனுஷின் முறைப்பெண்ணாக நடித்திருக்கும் வித்யுத்லேகா, திவ்யதர்ஷிணி என்று இந்தக் கோஷ்டியும் சிறப்பாகவே தங்களது கேரக்டரை செய்திருக்கிறார்கள்.
இதேபோல் இவரது மனைவியாக நடித்திருக்கும் சாயா சிங், பேரன் பேத்தியாக நடித்திருக்கும் குழந்தைகளுடன் பக்கத்து வீட்டுப் பையனாக நடித்திருப்பவன்கூட தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
இடையில் ஒரேயொரு காட்சியென்றாலும் கெளதம் வாசுதேவ் மேனனும், ரோபோ சங்கரும் கலக்கியிருக்கிறார்கள். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!
வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். இயக்குநருக்கான பாதி சுமைகளை ஒளிப்பதிவாளரே தூக்கி சுமந்திருப்பது தெரிகிறது. எப்போதும்போல இந்தப் படத்திலும் ஒரேயொரு காட்சியில் தலையைக் காட்டி படம் ஹிட்டாக தானும் ஒரு காரணமாகியிருக்கிறார் வேல்ராஜ்.
ஷான் ரோல்டனின் இசையில் ‘வெண் பனி மலரே’ பாடல் ஓகே.. அதேபோல் தனுஷ்-மடோனாவின் ‘பார்த்தேன்’ மெலடியான காதல் பாடலும் கேட்க இனிமை. இதைவிட பின்னணி இசையில் அடக்கி வாசித்து, சில இடங்களில் மெளனித்து படத்தை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
தனுஷின் இயக்கத் திறமையுடன், திரைக்கதை அமைத்திருக்கும் பாங்கும் சேர்ந்து அவரை இன்னொரு சகலகலாவல்லவராக காட்டுகிறது.
ராஜ்கிரண் ஒரு படத்தின் சண்டை காட்சியில் நடித்துவிட்டு மிகப் பெருமையாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுவிட்டு வீடு திரும்பும்போதுதான் அந்த கஞ்சா பார்ட்டிகளுடன் சண்டைக்கு போகிறார். அது அப்போதைய அவரது மனநிலையைக் காட்டுகிறது. இவ்வளவு யதார்த்தமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் தனுஷ்.
அப்பாவித்தனத்தோடு “என்ன இத்தனை வயசாகியும்.. ஒரு முடி கூட நரைக்கலை..?” என்று கேட்க. “அங்க மட்டும் என்ன வாழுதாம்..?” என்ற ரேவதியின் கேள்விக்கு.. “சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலுக்காக…” என்று பதில் சொல்ல.. “சால்ட் இருக்கு.. பெப்பர் எங்க..?” என்று ரேவதியின் அடுத்தக் கேள்விக்கு அசடு வழிவதுமாக வசனத்தாலேயே காட்சிகளை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
அந்த ஒரே நாளிலேயே ராஜ்கிரணுடன் ஊர் சுற்றும் ரேவதி மிக எளிதாக அவருடன் நெருங்கிப் பழகுவதும், தன்னுடைய மகள், பேத்தி வீட்டில் காத்திருப்பதை எளிதாகச் சொல்லிவிட்டு போக.. சட்டென்று அதை ஏற்காத ஆண் மனம் பேதலித்துப் போய் இருப்பதை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
“நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்கள்ல.. போ.. போய் சீக்கிரமா தூங்கு…” என்று மகள் திவ்யதர்ஷினி சொல்லிவிட்டுப் போனவுடன் ரேவதி தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து ஸ்டைலாக இரண்டு ஸ்டெப்புகள் வைத்துவிட்டு மீண்டும் நடக்கிறார் பாருங்கள். அங்கேயிருக்கிறது இயக்குநரின் இயக்கத் திறமை.. வெல்டன் தனுஷ்..!
“என் மனசுல நீ இப்பவும் இருக்கியா?” என்ற ஒற்றைக் கேள்வியைப் பிடித்துக் கொண்டு நள்ளிரவிலும் ரேவதியின் வீட்டுக்கு வந்து கேட்பதும்.. அதைத் தொடர்ந்து நடக்கும் வார்த்தை விளையாட்டுக்களில் படத்தை மிக, மிக ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
இறுதியில் இருவருமே தங்களிடமிருக்கும் அந்த ரகசிய ஆயுதத்தை பரிமாறிக் கொண்டு நட்புக்கு அச்சாரம் போட்டு, உறவுக்கு ‘தடா’ போடுவதை போல வைக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சிதான் படத்தின் மிகப் பெரிய ஹைலைட்.
படம் பார்த்த அனைவருக்குமே பிடித்தமான காட்சியாகவும், படத்தின் கதைக்கும், இக்காலத்திய சமூகச் சூழலுக்கும் இது மிகப் பொருத்தமானதாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
கொஞ்சம் தப்பினாலும் அது மறுமணம் விஷயத்தில் தவறாகிவிடும் என்பதுபோல் இருந்தாலும், “அது தேவையில்லை.. இப்போது போலவே இருப்போம்.. தவறுக்கு வருந்தி வந்து நிற்கும் மகனை புறந்தள்ள அப்பனுக்கு மனமில்லை. ஒரு குடும்பம் மறுபடியும் சேர்ந்திருக்கும் நேரத்தில் அதைப் பிரிக்க தனக்கும் விருப்பமில்லை என்று ரேவதியின் ஒதுங்கலுமான திரைக்கதை அமைப்புகள்தான் படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள்..!
படத்தின் ஒரேயொரு மைனஸ்.. ஹைதராபாத் மாலில் நடக்கும் சண்டை காட்சிதான். அது மட்டும்தான் வலிந்து திணிக்கப்பட்டது போன்ற உணர்வை கொடுத்ததோடு இல்லாமல், இதற்கு ரேவதி கொடுக்கும் முன்னோட்டமும் தேவையற்றது என்றும் சொல்லத் தோன்றுகிறது.
வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு. அதிலும் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் நடை பிணங்களாகத்தான் வாழ்வார்கள். இந்தியா போன்ற குடும்ப உறவு முறையை அதிகம் பேணும் சமூகத்தில் வயதானவர்கள் ஒதுக்கப்படுதலும், அடக்கப்படுதலும்தான் அவர்களால் அதிகம் தாங்க முடியாத விஷயமாக இருக்கிறது.
வீட்டில் அவர்களுக்கென்று இருக்கும் உரிமைகள் கொஞ்சம், கொஞ்சமாக காணாமல் போய் கடைசியில் அவர்களே வீட்டுக்கு தேவையில்லாத ஒரு பண்டமாக கருதப்படும்போதுதான் தாங்கள் இத்தனை நாட்கள் பிள்ளைகளை வளர்த்தது எதற்கு என்று யோசிக்கிறார்கள். யோசித்த பின் எடுக்கும் விளைவுகள் இப்படி ராஜ்கிரண் செய்யும் செயலில் போய்தான் முடியும்..!
இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தங்களது வீட்டில் இருக்கும் பெரியவர்களின் குறைகளை கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக தோன்றியிருக்கும். இதுதான் இந்தப் படம் சொல்லும் நீதி..!
இயக்குநர் தனுஷுக்கும், அவரது குழுவினருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!
ப.பாண்டி – அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்..!

0 comments: