வென்று வருவான் - சினிமா விமர்சனம்

27-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் திருவளக்குறிச்சி என்ற கிராமத்தில் வாழும் வர்மன் எட்டுக் கொலைகளை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, அந்தக் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் தூக்குத் தண்டனை கிடைத்து தூக்கில் போடப்பட காத்திருக்கிறான்.

இன்னும் ஒரு வாரத்தில் தூக்கலிடப்பட இருக்கையில் இது பற்றி ஒரு பத்திரிகை, சிறப்புச் செய்தியை வெளியிட முடிவு செய்து, தனது செய்தியாளரை வர்மனை பற்றி அறிந்து கொள்ள திருவளக்குறிச்சிக்கு அனுப்புகிறது.
அங்கே வர்மனின் கதையைத் தெரிந்து கொள்கிறார் பத்திரிகையாளர். பிளாஷ்பேக்கில் நமக்கும் கதை விரிகிறது.
பிறப்பிலேயே கண் பார்வையில்லாத விதவைத் தாயின் மகன் வர்மன். தனது அம்மாவுடன் அந்தக் கிராமத்திலேயே வாழ்ந்து வந்தவன்.. தனது அம்மாவிற்கு நேரும் சின்னச் சின்ன கொடுமைகளைக்கூட தாங்கா மாட்டாமல் கோபப்படுகிறான். அந்த ஊர்த் தலைவரையே அடித்துவிடுகிறான்.
இதனால் பயந்து போன அவனது அம்மா அவனை காட்டுக்குள் அனுப்பி ஒரு சாமியாரின் அரவணைப்பில் வளர வைக்கிறாள். இதனால் எப்போதும் தனக்கென ஒரு உலகத்தை படைத்துக் கொண்டவன்போல வாழ்கிறான் வர்மன்.
அதே ஊரில் வசிக்கும் இளம் பெண் சமீராவின் காதலுக்கும் ஆளாகிறான் வர்மன். ஆனால் காதலிப்பது என்றால் என்னவென்று தெரியாமல் போய்.. கடைசியாக அதற்கும் ஒப்புக் கொள்கிறான்.
இருந்தாலும் தனது இயல்பின் காரணமாய் தவறு எங்கே நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கிறான். இதனால் ஊருக்குள் அவனுக்கு பல எதிரிகள். இந்தச் சூழலில் இவன் எதிர்த்த 4 ஊர்க்கார பையன்கள் கொலையுண்டு கிடக்க அந்தப் பழியும் இவன் மீது விழுகிறது. அதேபோல் ஊர்க்கார தலைவர் அவரது மகன் மற்றும் இருவரின் கொலைப் பழியும் வர்மன் மீது தானாகவே வந்து விழுக.. அவன் கைதாகிறான்.
தூக்குக்கு முதல் நாள் அவனது இறுதி ஆசை என்ன என்று கேட்கும்போது தனது தாய் தனக்காக பாட வேண்டும். அவளது பாட்டை கேட்பதுதான் தனது இறுதி ஆசை என்கிறான்.
இதற்காக அவனது தாயை அழைத்து வர ஏற்பாடு செய்கிறார் ஜெயில் அதிகாரி.. தாய் வந்தாளா..? தூக்குத் தண்டனை நிறைவேறியதா என்பதெல்லாம் திரைக்கதை..!
ஒரு சின்ன கிராமத்துக் கதை. அதனை தங்களால் முடிந்த அளவுக்கு நேர்மையாக தயாரித்து வழங்கியிருக்கிறார்கள் இந்த படக் குழுவினர்.
திரைக்கதை மிகவும் நீட்டாக எழுதப்பட்டிருக்கிறது. இடையில் அடிக்கடி வரும் நகைச்சுவை காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் நேர்த்தியான திரைக்கதை. அதிகம் குறை சொல்ல முடியாத அளவுக்கு இயக்கியிருக்கிறார் இயக்குநர் விஜேந்திரன்.
நிறை, குறைகள் என்று நிறையவே படத்தில் இருந்தாலும் படம் நெடுகிலும் ஏதோவொன்று இருந்து கொண்டுபோய் படத்தினை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறது.
வர்மனாக நடித்திருக்கும் வீர பாரதி அந்தக் கேரக்டருக்கு ஏற்ற முகம். இயல்பாக நடித்திருக்கிறார். இதேபோல் புதுமுக நடிகை சமீரா.. அவரும் அப்படியே..
இவர்கள் இருவரையும் ஓவர்டேக் செய்து படத்தையை ஹைஜாக் செய்திருக்கிறார் வீர பாரதியின் கண் பார்வையில்லாத அம்மாவாக நடித்திருக்கும் நடிகை எலிஸபெத் சூரஜ்.
aaraaro-aaraaro
இவர் நடித்திருக்கும் முதல் படம் என்று சொல்லும் அளவுக்கு மிக யதார்த்தமான நடிப்பு. கிளைமாக்ஸில் ‘ஆராரோ ஆராரோ’ பாடல் காட்சியில் கண்களை குளமாக்கிவிட்டது இவர் பாடும் பாடலும், இவரது நடிப்பும்..!
இத்தனை வருடங்கள் போராடியும் இப்போதுதான் இவருக்கே பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு கேரக்டர் கிடைத்திருக்கிறது. கிடைத்த்தை கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.
இடைவேளைக்கு பின்னான படத்தில் தீவிரவாதிகள் பிரச்சினை.. இதில் இன்ஸ்பெக்டர் தலையிடுவது.. பத்திரிகையாளரும், தலைவரின் உதவியாளரும் மாட்டிக் கொள்வது.. தப்பிப்பது.. தூக்கலிடும் நேரம் தள்ளிப் போவது.. மறுநாள் நீதிமன்றம் தலையிட்டு தூக்கை நிறுத்துவது.. என்று பரபர திரைக்கதையில் நேரம் போவதே தெரியாமல்போய்விட்டது..
படத்தில் பெரும் சோதனை நகைச்சுவை காட்சிகள் என்ற பெயரில் நேரத்தை வீணாக்கியிருப்பதுதான். இதனை திறமைமிக்க நகைச்சுவை எழுத்தாளர்களிடத்தில் சொல்லி நல்ல நகைச்சுவை போர்ஷனை இதே ஆட்களை வைத்தே படமாக்கியிருக்கலாம்.
‘சண்டி குதிரை’ படத்திற்கு பிறகு இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். அதிலும் ‘ஆராரோ ஆராரோ’ பாடல் இன்னமும் மனதைவிட்டு நீங்கவில்லை.
சின்ன பட்ஜெட் என்பதாலும், புதுமுக இயக்குநர் என்பதாலும் படத்தில் பல நிறை, குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அனைத்தையும் சொல்லிக் கொண்டேயிருந்தால் இந்த இயக்குநரின் திறமைக்கு நாமே முட்டுக்கட்டை போடுவது போலாகிவிடும்.
இயக்குநர் விஜேந்திரன் தனது அடுத்தடுத்த படங்களில் இன்னமும் சிறப்பான படங்களை இயக்குவார் என்று நம்புகிறோம்..!
வென்று வருவான் – அவசியம் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டிய படம் தோழர்களே.. கை விட்ராதீங்க..!

1 comments:

Unknown said...

எங்கள் குழுவில் ஒரு இயக்குனனின் படைப்பு
Here v go our short film Ann officially released in YouTube..... Thanks for all members in WCF....frnds....
https://m.youtube.com/watch?v=RBo9QJhQTkM
Here is the link pls do watch and support us...give ur valuable
comments....hope you I'll like it...share it.....thank you.....