இறுதிச் சுற்று - சினிமா விமர்சனம்

31-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பெண் இயக்குநர் இயக்கிய படம்தானே என்று அலட்சியமாக சென்றால், ‘அட’ என்று ஒரு ஆச்சரியக் குறியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.  2010-ம் ஆண்டு ‘துரோகி’ என்ற தமிழ்ப் படத்தை இயக்கியிருக்கும் சுதா, மணிரத்னத்திடம் திரைப்பாடம் பயின்றவர். இந்தியில் ‘சாலா கதூஸ்’ என்ற பெயரிலும் தமிழில் இந்தப் பெயரிலுமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
எடுத்துக் கொண்ட கதையும், திரைக்கதையும், பேசப்பட்டிருக்கும் வசனமும், இயக்கமும் பல படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட ஒரு ஆண் இயக்குநர்தான் இயக்கியிருக்கிறார் என்கிற பிரமையை ஏற்படுத்துகிறது.

குத்துச் சண்டை விளையாட்டில் இந்திய அளவில் மிகச் சிறந்த பயிற்சியாளராக இருக்கிறார் மாதவன். இவருடைய மனைவி இவரைவிட்டு விலகிச் சென்றுவிட்டதால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். பெண்களுடனான தொடர்பு, குடிப் பழக்கம், கட் அண்ட் ரைட்டாக பேசுவது என்று முரண்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இவரை குத்துச் சண்டை சம்மேளனத்திலிருந்து நீக்க முடியாமல் சென்னைக்கு மாற்றல் செய்கிறார்கள். “அங்கே போய் உன் வீரத்தைக் காட்டி யாரையாவது தேசிய லெவலுக்கு கொண்டு வா பார்ப்போம்..” என்று கிண்டல் செய்கிறார்கள் சங்கத்தின் நிர்வாகிகள்.
சென்னை வரும் மாதவன் முதலில் பயிற்சியில் ஆர்வமே இல்லாமல் இருக்கிறார். ஹீரோயின் ரித்திகாவின் அக்காவான மும்தாஜ் இங்கே வீராங்கனையாக இருக்கிறார். ஆனால் அவரால் எக்காலத்திலும் குத்துச் சண்டையில் சோபிக்க முடியாது என்று ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கும் மாதவன், ரித்திகாவிடம் குத்துச் சண்டை வீரனுக்கே உரித்தான கோபமும், குணமும், வீரமும் இருப்பதை அறிகிறார்.
மீன் விற்று பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் ரித்திகாவிடம் தினமும் பயிற்சிக்கு வந்தால் 500 ரூபாய் தருவதாகச் சொல்லி ஆசை காட்டுகிறார் மாதவன். இந்தப் பணத்துக்காகவே ரித்திகாவும் வர சம்மதிக்கிறார்.  இந்தப் பயிற்சியின்போது மாதவனின் கடுமையான சொற்களை தாங்க முடியாமல் வெளியேற நினைக்கிறார் ரித்திகா. ஆனாலும் மாதவன் வம்படியாக ரித்திகாவுக்கு டிரெயினிங் கொடுத்து மேம்படுத்த.. தேசிய லெவல் போட்டிகளுக்கு ரித்தாக ஆயத்தமாகிறார்.
இந்த நேரத்தில் மும்தாஜின் முட்டாள்தனமான பொறாமையால் அந்தப் போட்டியில் ரித்திகா தோல்வியடைகிறார்.  தனது கனவெல்லாம் உடைந்து போனதையடுத்து மாதவன் ரித்திகாவை அடித்து, உதைத்து, திட்டிவிட்டுச் செல்கிறார்.
இப்போது போட்டிகள், அதன் உள்ளடக்கம்.. பயிற்சியாளர்.. விளையாட்டு என்பதன் சீரியஸை உணரும் ரித்திகா மீண்டும் விளையாட ஆயத்தமாகிறார். ஆனால் மாதவன் இல்லாமல் போகும் ஒரு தருணத்தில் சங்கத்தின் தேசிய தலைவர் ரித்திகாவை பாலியல் ரீதியாய் அணுக.. அவனை அடித்துவிடுகிறார்.
இதனால் ஒரு பொய்யான குற்றச்சாட்டின் பேரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்லப்படுகிறார் ரித்திகா. மாதவனே வந்து ரித்திகாவை விடுவிக்க.. இப்போது ரித்திகாவின் மன நிலை அறிந்து அவரை சண்டிகர் தேசிய பயிற்சி கூடத்திற்கு தன் பொறுப்பில் அழைத்துச் செல்கிறார்.
இதையடுத்து ரித்திகாவுக்கு கடுமையான பயிற்சி கொடுத்து அவரை தேசிய சேம்பியன் லெவலுக்குக் கொண்டு போக நினைக்கிறார் மாதவன். இது முடிந்ததா இல்லையா என்பதுதான் மிச்சமான திரைக்கதை.
படத்தின் துவக்கமே ஆச்சரியம்தான். ஒரு பாலியல் தொழிலாளியுடன் மாதவன் படுக்கையில் இருக்கும் காட்சியுடன்தான் படமே துவங்குகிறது. ஒரு பெண் இயக்குநரின் படத்தில் இப்படியொரு மங்களகரமான துவக்கக் காட்சியை இதுவரையில் பார்த்ததேயில்லை..!
படத்திற்கு தேவையில்லாத ஒரு சின்ன ஷாட்கூட படத்தில் இல்லை. அவ்வளவு கச்சிதமான படத்தொகுப்பு. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யாவுக்கு ஒரு ஷொட்டு. படம் நெடுகிலும் மாதவன் உச்சரிக்கும் கோப, ஆவேச, நக்கல் வசனங்களை எழுதியிருக்கும் அருண் மாதேஸ்வரனுக்கு ஒரு ஷொட்டு. இப்படி குத்தீட்டியாய் வசனத்தை எழுத வைத்து அதனை சரியான கோணத்தில் படமாக்கியிருக்கும் இயக்குநருக்கும் ஒரு ஷொட்டு..!
இயல்பாகவே ரித்திகா குத்துச் சண்டை வீராங்கனை என்பது படத்திற்குக் கிடைத்த கூடுதல் போனஸ் என்பதால் அந்த வன்முறைக் களமான குத்துச் சண்டை போட்டிகளை ஆக்ரோஷமாக கேமிராமேன் சிவகுமார் விஜயனின் துணையுடன் படமாக்கியிருக்கிறார். இந்த சண்டை காட்சிகளே தூக்கிவாரிப் போடுகின்றன.
குத்துச் சண்டையை எப்போதும் விளையாட்டாக நினைக்கவே கூடாது. மற்யுத்தம் ஒருவிதமான உடல் பயிற்சி போர் என்பதால் அதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இப்படி ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் முட்டாள்தனமான சண்டையை விளையாட்டு என்றால் எப்படி..? தாங்க முடியவில்லை..! இத்தனை கோரமாக இருக்கும் இதனை எந்த மடையன் விளையாட்டு என்ற பிரிவில் சேர்த்தான் என்று தெரியவில்லை..! வெட்டணும் அவனை..!
பொதுவாக அனைத்து படங்களிலும் இது உண்மைக் கதை இல்லை என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ‘இது பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு’ என்கிற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இரண்டரை வருடங்களாக இதற்காக ஆராய்ச்சி செய்து அலைந்து, திரிந்து பலருடன் இணைந்து திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.. மிகப் பெரிய பாராட்டுக்கள்..!
எப்படியிருந்தாலும் இந்தப் படம் இப்போதைய இந்தியாவில் விளையாட்டுத் துறை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக் கொள்ள முடியும்..! ஆதர்சமான விளையாட்டு வீராங்கனையாக ரித்திகா கேரக்டரும், துரோணாச்சார்யா விருதினைப் பெற தகுதியுடைய பயிற்சியாளராக மாதவன் கேரக்டரும் இருக்க முடியாது.. கூடாது என்பதும் இந்தப் படம் சொல்லும் நீதிதான்..!
ஏனெனில் ஒரு பயிற்சியாளர் எப்படியெல்லாம் இருக்க்க் கூடாதோ அப்படியெல்லாம் இருக்கிறார் மாதவன். இப்படியொரு கேரக்டரைசேஷன் கொண்டவர்கள் பயிற்சியாளர்களாக இருந்தால் இவர்களை நம்பி எப்படி வீரர்களை அனுப்புவது..? பயிற்சியாளரும் ஒரு ஆசிரியரே.. நமக்குக் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதையேதான் இங்கேயும் எதிர்பார்க்க வேண்டும். வெளியுலகத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கற்றுக் கொடுப்பதில் மட்டும் திறமைசாலியாக இருந்தால் போதும் என்று எந்த பள்ளியும் நினைப்பதில்லை.. விளையாட்டு சங்கமும் நினைப்பதில்லை. நினைத்தால் அதுதான் மிகப் பெரிய தவறு..!
இறுதியில் ரித்திகா வெற்றி பெற்ற கையோடு ஓடி வந்து மாதவன் மீது தாவிக் கொள்வதெல்லாம் சந்தோஷத்திலா அல்லது காதலினாலா என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். அது சந்தோஷம் என்றால் நமக்கும் சந்தோஷமே..? மாறாக அது காதல் என்றால் இது வெறும் சினிமா என்று நினைக்க வேண்டியதுதான்..!
சாக்லேட் பாய் மாதவனை இப்படியொரு கேரக்டரில் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த அழகு முகத்தில் தாடியோடு எப்படிய்யா ரசிப்பார்கள் என்று போஸ்டரை பார்த்து நினைத்திருந்தோம். ஆனால் படத்தில் ‘அசால்ட்டு சேது’வாக பல காட்சிகளில் அனைவரையும் அசர வைத்துவிட்டார் மனிதர்..!
முதல் காட்சியில் இருந்து முடிவுவரையிலும் அவருடைய முகம் காட்டும் இறுக்கமே ஒருவித ஈர்ப்பை அளிக்கிறது. ஒரு வரி, ரெண்டு வரிகளில் அனைவரின் வாயையும் அடைக்கும்விதமாக பேசும் ‘படாபட்’ வசன உச்சரிப்புகளும், யாருக்காகவும், எதற்காகவும் காம்பரமைஸ் ஆகாமல் இருக்கும்விதமான தனது தனித்தன்மையை கடைசிவரையிலும் காப்பாற்றிக் காட்டுவதில் மாதவன் தனது உடல் மொழியால் அசத்தியிருக்கிறார்.
ரித்திகாவிற்கு மிகப் பெரிய பாராட்டு மழைகள் பொழிந்து கொண்டிருக்கின்றன. இதைவிடவும் மிகப் பிரமாண்டமான அறிமுகம் இவருக்குத் தேவையில்லை. கிடைத்த வாய்ப்பில் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் ரித்திகா. முதல் முறை வேண்டுமென்றே தோல்வியடைந்து, நடுவரை அறைந்துவிட்டு மாதவனை அலட்சியமாக பார்க்கிறாரே ஒரு பார்வை.. அசத்தல் நடிப்பு..!
அக்காவை தேர்வு செய்யாத நடுவர்களை பாய்ந்து சென்று தாக்கும் காட்சியிலிருந்து கடைசியில் வெற்றி பெற்ற கையோடு சங்கத்தின் தலைவரை புரட்டியெடுத்துவிட்டு மாதவனை தேடி வந்து தாவிக் கொள்ளும் காட்சிவரையிலும் ‘என்ன நடிப்புடா சாமி’ என்கிற ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறார்.
காளி வெங்கட்டின் கிறித்துவ மதம் மாற்றம் காட்சியை ஆட்சேபிக்காத சென்சார் போர்டு அதே இடத்தில் இந்து மதமோ, முஸ்லீம் மதமோ இருந்தால் இந்நேரம் விட்டு வைத்திருக்குமா என்று தெரியவில்லை. சென்ஸிட்டிவ் விஷயங்களில் போய் காமெடியை திணிக்கிறார்களே..?
துணை கோச்சாக நடித்திருக்கும் நாசர், சம்மேளனத்தின் துணைத் தலைவரான ராதாரவி.. ஹீரோயினின் அம்மாவாக நடித்த நடிகை.. சம்மேளனத் தலைவர் என்று அனைவருமே மிகச் சிறப்பான இயக்கத்தினால் தங்களது சிறந்த நடிப்பை காண்பித்திருக்கிறார்கள்.
‘வா மச்சானே’ பாடலும், பாடலுக்கான ஆட்டமும் கச்சிதம். முதல் பாதியில் 3 பாடல்களை வைத்திருந்து பிற்பாதியில் ஒரு பாடலை மட்டுமே வைத்து பெப் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர். வசனத்திற்கும், காட்சிகளுக்கும் இடையூறு இல்லாமல் பின்னணி இசையை ரம்மியமாக அமைத்துக் கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு ஒரு நன்றி.
மணிரத்னத்தின் சீடர் என்பதாலோ என்னவோ வசன உச்சரிப்பிலும், வசன ஒலிப்பதிவிலும் அதே பாணியை பயன்படுத்தியிருப்பதால் பல இடங்களில் வசனங்கள் மின்னல் வேகத்தில் நம்மை கடந்து செல்கின்றன. அடுத்த படத்திலாவது கொஞ்சம் பார்த்துக்குங்க மேடம்..!
விறுவிறுப்பான திரைக்கதை.. கச்சிதமான படத் தொகுப்பு.. அழகான ஒளிப்பதிவு.. அருமையான நடிப்பு.. இடையிடையே படத்தினை தொய்வடையவிடாமல் செய்யும் பாடல் காட்சிகள்.. அனைத்தையும் ஒருங்கிணைத்த சிறப்பான இயக்கம் என்று அனைத்திலும் சிறப்பாக வந்திருக்கும் இந்தப் படம், இந்த வருடத்திய டாப் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
ஒரு பெண் இயக்குநர் இயக்கிய சிறந்த தமிழ்ப் படம் என்பதற்கு உதாரணப் படமாக இது திகழும் என்பதில் சந்தேகமில்லை..!
இறுதிச் சுற்று – சினிமா ஆர்வலர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

4 comments:

Karthik said...

அதென்ன ஆண் இயக்குனர் / பெண் இயக்குநர் கம்பாரிசன்? ஆரம்பிக்கும் போதே கூமுட்டைத்தனமா இருக்கு. அவாய்ட் பண்ணிருக்கலாம்.

Karthik said...

அதென்ன ஆண் இயக்குனர் / பெண் இயக்குநர் கம்பாரிசன்? ஆரம்பிக்கும் போதே கூமுட்டைத்தனமா இருக்கு. அவாய்ட் பண்ணிருக்கலாம்.

காரிகன் said...

Clint Eastwood இயக்கிய Million Dollar Baby என்ற படத்தில் தழுவல் போலத் தோன்றுகிறது. ஆனால் இதுவரை யாரும் இதைப் பற்றி பேசவில்லை.

Unknown said...

அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை......