கெத்து - சினிமா விமர்சனம்

16-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உதயநிதி ஸ்டாலின் சீரியஸாக ஆக்சன் காட்டியிருக்கும் முதல் படம் இது.
பழைய காலத்து தமிழ்வாணன் கதைகளில் இருக்கும் அதே திரைக்கதையுடன் எழுதப்பட்டிருக்கும் திரில்லர் கதை இது..!

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கூடலூரில் ஒரு பள்ளியில் பிடி மாஸ்டராக இருக்கிறார் சத்யராஜ். இவரது மகன் உதயநிதி. அருகில் இருக்கும் ஒரு பொது நூலகத்தில் வேலை செய்கிறார். அந்த நூலகத்தை நடத்துபவர் ராஜேஷ். ராஜேஷின் மாணவர்தான் இன்றைய இந்தியாவின் தலை சிறந்த விண்வெளி விஞ்ஞானி அப்துல் கமால்.
பல பெரிய சர்வதேச கொலைகளை செய்து வரும் விக்ராந்த்திடம் இப்போது ஒரு அஸைண்மெண்ட் ஒப்படைக்கப்படுகிறது. விஞ்ஞானி அப்துல் கமாலை கொலை செய்ய வேண்டும் என்பதுதான். இதற்காக அப்துல் கமாலை கொலை செய்ய வசதியான ஒரு இடத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இதற்கான திட்டம் தீட்டும்போது அவரது ஆசிரியரான ராஜேஷை கொலை செய்தால் அப்போது கமால் கண்டிப்பாக கூடலூருக்கு வருவார். அங்கே அவரை மிக எளிதாக கொலை செய்துவிடலாம் என்று விக்ராந்த் திட்டம் தீட்டி கூடலூர் வருகிறார்.
இந்த நேரத்தில் கூடலூரிலேயே இருக்கும் ஹீரோயின் எமி ஜாக்சனுக்கு ஒரு கெட்டப் பழக்கம். அது புத்தகத் திருட்டில் ஈடுபடுவது. ராஜேஷின் நூலகத்தில் இருந்து பல புத்தகங்களை திருடிக் கொண்டு வந்து தன் வீட்டிலேயே பெரிய நூலகத்தையே வைத்திருக்கிறார் எமி. உதயநிதி இதைக் கண்டுபிடித்து எமியிடமிருந்து புத்தகங்களை திருப்பி வாங்குகிறார். கூடவே மனசையும்தான். காதல் பிறக்கிறது. 2 டூயட்டுகளுக்கு வழியும் பிறக்கிறது.
இன்னொரு பக்கம் சத்யராஜ் பணியாற்றும் பள்ளியின் அருகேயே ஒரு கும்பல் டாஸ்மாக் பாரை துவக்குகிறது. இதனால் பள்ளி மாணவிகளுக்கு பிரச்சனை ஏற்படுவதால் பாரை அகற்றும்படி போலீஸில் புகார் கொடுக்கிறார் சத்யராஜ். இந்தப் பிரச்சினையில் பாரை நடத்தும் மைம் கோபி டீமுக்கும், சத்யராஜ் மற்றும் உதயநிதிக்கும் இடையில் சண்டை மூள்கிறது. அடிதடியும் நடக்கிறது.
இந்த நேரத்தில் திடீரென்று மைம் கோபி கொல்லப்பட்டு கிடக்கிறார். இதற்கான பழி சத்யராஜ் மீது விழுக.. அவரை போலீஸ் கைது செய்கிறது.. கோர்ட்டிலேயே சத்யராஜை கொலை செய்யும் முயற்சிகளெல்லாம் நடைபெற.. மகன் உதயநிதி தன் உயிரை பணயம் வைத்து தன் தந்தையைக் காப்பாற்றுகிறார்.
மைம் கோபியை கொலை செய்தது யார்..? ராஜேஷ் உயிர் தப்பினாரா..? விக்ராந்த் என்ன ஆனார்..? சொன்னதை செய்தாரா..? என்பதையெல்லாம் திரில்லர் என்று சொல்லப்படும் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கும்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு சிறிய, இரண்டு வரி கதையை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால் அரதப் பழசான திரைக்கதை என்பதால் அடுத்து என்ன நடக்கும் என்பதை நாமளே யூகிக்க முடிவதை போல இருப்பதுதான் திரைக்கதையின் மிகப் பெரிய பலவீனம். இதைவிடவும் அதிகப்படியான கதை, திரைக்கதையுடன் செமத்தியான திரில்லருடன் பல படங்கள் வந்துவிட்டதும் இதற்கு ஒரு காரணம்..!
ஒரு கொலை வழக்கு விபரங்களை சாதாரண கான்ஸ்டபிள் தனது நண்பனுக்காக வெளியிட்டு.. உடன் கூடவே சென்று தானாகவே விசாரிக்கத் துவங்குவதெல்லாம் சினிமாவுக்கு மட்டுமே சரியானதாக இருக்கும். கான்ஸ்டபிளான கருணாகரன் இல்லாமலேயே உதயநிதி விசாரிப்பதாக இருந்தால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனாலும் இவர்கள் போகும்போதெல்லாம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்வதெல்லாம் திரைக்கதையின் வேகமாக யுக்தியாகவே தெரிகிறது.!
சிசிடிவி ஆதாரத்தைக் கைப்பற்ற கடைக்கு வரும் விக்ராந்தை, கடைக்குள் நுழைந்தவுடன் ஷட்டரை மூடிவிட்டு பிடித்திருக்கலாம். ஆனாலும் அதற்குள்ளாக அவசரப்பட்டு ஓடவிட்டு.. ஒரு ரன்னிங் ரேஸை நடத்தியிருப்பதில் யாருக்கு என்ன திருப்தி கிடைத்திருக்கிறது இயக்குநரே..?
அத்தனை போலீஸ் செக்யூரிட்டி போட்டிருக்கும் இடத்தில் உதயநிதி மட்டும் போலீஸாருக்கு இடையில் ஓடி, நடந்து.. மரத்திற்கு நடுவில் வித்தியாசத்தைக் கண்டறிந்து.. தூரத்தில் இருக்கும் மாளிகையைக் கண்டு பிடிப்பதெல்லாம் எழுத்தில் ஓகே.. காட்சியில் எப்படி இயக்குநரே..?
கிளைமாக்ஸ் சண்டையில் அந்த நெடுந்தொலைவு துப்பாக்கியை கீழே தூக்கி போட்டிருந்தாலே சண்டையே தேவையில்லாமல் போயிருக்கும்.. எதற்கு இவ்வளவு பெரிய பில்டப் என்று தெரியவில்லை.. ஆனால் சண்டை காட்சிகளில் உதயநிதிக்கு கை, கால்களில் சுளுக்கு ஏற்படும் அளவுக்கு சண்டை பயிற்சியாளர்கள் வேலை வாங்கியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது..! அவரது கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்..
இனிமேல் வெறும் காமெடி நடிகராகவே வலம் வந்தால் தேறுவது கடினம் என்பதால்தான் இந்தப் படத்தில் ஒரு ஆக்சன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் உதயநிதி. நடிப்பென்று பார்த்தால் எதுவும் வித்தியாசமாக இல்லை. ஏதாவது சொல்லும்படியாக இருந்தால் மட்டுமே சொல்ல முடியும் என்பதால் மற்ற கமர்ஷியல் ஹீரோக்கள் போலவே வலம் வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்..!
எமி ஜாக்சன் இந்தப் படத்திற்கு எதற்கு என்று தெரியவில்லை. இவருக்குக் கொடுத்த காசுக்கு கூடுதலாக 20 நிமிடங்கள் திரைக்கதை எழுதி எடுத்திருக்கலாம். வீணான போர்ஷன் ஹீரோயின்தான்..! இவர் கடித்துத் துப்பும் வசனத்தையெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக் கொண்டேயிருப்பது என்று தெரியவில்லை..!
சத்யராஜ் சின்ன கேரக்டர் என்றாலும் மனதில் நிற்கிறார். இதேபோல் வசனத்திலேயே தனது கேரக்டரை உறுதிப்படுத்தும் ராஜேஷையும் பாராட்ட வேண்டும்..! மைம் கோபி தன் வில்லத்தனத்தில் புதிய எதிர்பார்ப்பை உண்டு செய்து கொண்டேயிருக்கிறார்..!
படத்தின் ஒரேயொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் ‘மைனா’ சுகுமார்தான். படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் கேமிராவின் குளுமையான காட்சிகளில் படமே வித்தியாசமான ஒரு உணர்வைத் தருகிறது.  ஹாரிஸ் ஜெயராஜ் என்ற ஒருவர் இசையமைத்திருக்கிறாராம். கொடுத்த காசு என்னாச்சு என்று தெரியவில்லை. பாடல்கள் நினைவிலேயே இல்லை..!
இன்னும் ஒரு 20 நிமிடங்கள் கொஞ்சம் கூடுதலான, அழுத்தமான காட்சிகளோடு எடுத்து இணைத்திருந்தால் ஒரு முழுமையான திரில்லர் படத்தை பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்..!

2 comments:

Vinoth Subramanian said...

Kudalur illa. kumuzhi. and, haris oda song hit. Other than that, whatever you said was right. The movie was guessable.

Francis Rajesh said...

hello Sir, I took think that you are a harris hater because unga review la maximum haaris a criticise panringa