ஆச்சி மனோரமாவின் வாழ்க்கையில் சில சுவாரஸ்யங்கள்

23-101-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த அக்டோபர் 10-ம் தேதி இரவில் சென்னையில் காலமான பழம் பெரும் நடிகை ஆச்சி மனோரமா குறித்து அக்டோபர் 11-ம் தேதி நான் முகநூலில் எழுதிய குறிப்புகளின் தொகுப்பு இது. தொகுத்து வைத்தால் பின்னாளில் உதவும் என்பதால் இங்கே பதிவிட்டு சேமித்து வைக்கிறேன்.



 கைக்குழந்தையோடு நாடக அரங்கேற்றம்

கலைஞரின் 'மணிமகுடம்' நாடகத்திற்கு ஒத்திகை பார்க்க கைக்குழந்தையோடு வந்திருக்கிறார் ஆச்சி. பக்கம், பக்கமான வசனங்களை கைக்குழந்தைக்கு பால் கொடுத்தபடியே ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு மனப்பாடம் செய்வாராம்.. இப்படித்தான் அவரது நாடக வாழ்க்கை அழுகையோடும், கஷ்டத்தோடும் துவங்கியிருக்கிறது..!

அதிகப் படங்களில் நடித்ததன் காரணம்..


ஆச்சி அதிகப் படங்களில் நடித்தமைக்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. எந்தப் படத்தின் தயாரிப்பாளரிடமும் பணத்தை கறாராக கேட்டு வாங்க மாட்டார். அப்படி செய்யவும் அவருக்குத் தெரியாது. 

அவருடைய தாயார்தான் ஆரம்பக் கட்டத்தில் சம்பளம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பாதியைக் கொடுத்துவிட்டு மீதியை கடைசி ஷூட்டிங நாளில் தருவதாகச் சொல்வார்கள் தயாரிப்பாளர்கள். கடைசி நாளில் கண்ணில்படவே மாட்டார்கள். மனோரமாவும் ஆபீஸ் தேடிப் போய் கேட்கவும் மாட்டார். “இப்படியே விட்டுக் கொடுத்த பணத்தை இன்னிக்கு எண்ணினா 1 கோடிக்கு மேல வரும்ப்பா..” என்றார் ஒரு பேட்டியில்.. முக்தா சீனிவாசன் மட்டுமே வீடு தேடி வந்து பணத்தை செட்டில் செய்வார் என்றும் சொல்லியிருந்தார்..!

பொறுமையின் சிகரம்..!

ஒரு தெலுங்கு படம். ஆச்சி மனோரமா அதில் ஒரு கேரக்டர் நடித்தார். முதல் நாள் காலையிலேயே முதல் ஆளாக மேக்கப் போட்டு வந்து அமர்ந்துவிட்டார். சாயந்தரம்வரையிலும் அவரை நடிக்க அழைக்கவேயில்லை. பேக்கப் சொல்வதற்கு முன்பு துணை இயக்குநர் ஒருவர் வந்து, “இன்னிக்கு உங்களுக்கு ஷாட் இல்லையாம்மா.. டைரக்டர் சொன்னார்…” என்றாராம். “சரிப்பா…” என்று சொல்லிவிட்டு அதே சிரித்த முகத்தோடு கிளம்பினாராம்.. 

அதேபோல் இன்னொரு தெலுங்கு படப்பிடிப்பு..  2 மணி நேரமாக கலர் புல்லாக மேக்கப் போட்டு அசத்தலாக செட்டுக்குள் நுழைந்திருக்கிறார் ஆச்சி. இயக்குநரை பார்த்து வணக்கம் சொன்னவுடன்.. "இன்னிக்கு சீன்ஸ் மாத்திட்டோம்மா.. பிளாஷ்பேக் சீன்ஸ்தான் எடுக்கப் போறோம்.. மேக்கப்பையெ்லலாம் கலைச்சிட்டு கொஞ்சம் வயசான மாதிரி வாங்க..." என்று கூலாக சொல்லிவிட்டுப் போனாராம். வேற ஆர்ட்டிஸ்ட்டா இருந்தா கத்திக் குமிச்சிருப்பாங்க. ஆச்சியோ எந்த ரியாக்ஷனையும் காட்டாமல் "ஓகே ஸார்.." என்று சொல்லி மேக்கப் அறைக்குத் திரும்பினாராம்..! இதுதான் ஆச்சி..!

கிசுகிசு பற்றி எம்.ஜி.ஆர். சொன்ன ஆறுதல்

ஒரு குறிப்பிட்ட பத்திரிகையில் தொடர்ச்சியாக தேங்காய் சீனிவாசனையும் ஆச்சியையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்து கொண்டேயிருந்தன. ஒரு நாள் ஷூட்டிங்கின்போது இதைப் படித்து கண் கலங்கிப் போய், நடிக்கவே தோணாமல் அமர்ந்திருந்தாராம் ஆச்சி.


எம்.ஜி.ஆர். இதைப் பார்த்துவிட்டு “என்ன விஷயம்..?” என்று ஆச்சியிடம் கேட்டிருக்கிறார். ஆச்சியும் சொல்ல.. "அதை நானும் படிச்சேன். கண்டுக்காத. இதெல்லாம் இங்க சகஜம். இதையெல்லாம் தாண்டித்தான் நாம போகணும். இல்லைன்னா நாம தொழில் செய்ய முடியாது.." என்று ஆறுதல் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

சொன்னதோடு இல்லாமல் ஆச்சிக்கு தெரியாமலேயே அந்த பத்திரிகையாளரை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவழைத்து மேக்கப் ரூமில் வைத்து 'கும்மி'யெடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர்.

புரொடெக்சன் மேனேஜரை காப்பாற்றியவர்

வீரத்திருமகன் படத்தில் காமெடி ரோலில் மனோரமா நடித்திருந்தார். ஒரு நாள் ஷூட்டிங் கேன்ஸலாகிவிட்டது. இதனை புரொடெக்சன் மேனேஜர் மனோரமாகவுக்கு தெரியப்படுத்த மறந்துவிட்டார்.

மனோரமாவோ ஷூட்டிங் இருக்கு என்று நினைத்து புல் மேக்கப்போடு ஸ்டூடியோவுக்கு வந்து இறங்கிவிட்டார். அதன் பின்புதான் ஷூட்டிங் கேன்ஸல் என்று தெரிந்திருக்கிறது. மனோரமா வந்த்தை ஏவி.எம்.சரவணனும் பார்த்துவிட்டார். அவரும் விஷயம் தெரிந்து கோபமாகி தன் அறைக்கு போன பின்பு, பின்னாலேயே மனோரமாவும் உள்ளே வந்திருக்கிறார்.

"ஸார்.. ஏதோ தெரியாம அந்த புரொடெக்சன் மேனேஜர் செஞ்சிட்டாரு. எப்பவும் கரெக்ட்டா தகவல் கொடுத்திருவாரு. இன்னிக்குத்தான் இப்படி ஆயிருச்சு. நீங்க அவர் மேல எதுவும் ஆக்சன் எடுத்திராதீங்க.. பாவம் அவரு. அவர் வேலை போனதுக்கு நான்தான் காரணம்ன்னா எனக்கு மனசு தாங்காது." என்றாராம் வெள்ளந்தி மனுஷியாக.

நாகேஷ் - மனோரமா பிரிவின் காரணம்..

நடிகர் நாகேஷின் சொந்த மைத்துனர் கொலையான வழக்கில் நாகேஷி்ன் மனைவியை போலீஸ் கைது செய்திருந்தது. நாகேஷையும் கைது செய்யப் போவதாக வதந்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் கைதாகவில்லை.


வழக்கு விசாரணையின்போது தனக்கு ஆதரவாக சாட்சி சொல்ல மனோரமாவை அழைத்தார் நாகேஷ். மனோரமா ஏனோ மறுத்துவிட்டார். அடுத்த படத்தில் இருந்து நாகேஷ்-மனோரமா ஜோடி பிரிந்தது.. நாகேஷ் இதன் பின்பு பல்வேறு நடிகைகளும் ஜோடி போட்டு நடித்தார். அதிகமாக பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தது..

கடைசியாக நாகேஷ் காலமாவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு விழா மேடையில்தான் மனோரமாவை ‘ஆச்சி’ என்று சொல்லியும் பெயர் சொல்லியும் அழைத்தார். ஆச்சி மனோரமா அப்போது துளிர்த்த கண்ணீருக்கும் ஒரு விலை இருந்தது. அதுதான் அவரது பொறுமை..!

நிஜக் கதையே படமான சம்பவம்.. 

‘சின்னத்தம்பி’ படத்தின் ஷூட்டிங்கிற்காக கிளம்பிய காலைப் பொழுதில்தான் அவருடைய முன்னாள் கணவர் ராமநாதன் காலமான நியூஸ் அவருக்குத் தெரிந்தது. தாயின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மகனை அழைத்துக் கொண்டு போய் கணவருக்கு கொள்ளி வைக்க வைத்துவிட்டு தனது கடமையையும் செய்து முடித்துவிட்டுத்தான் வந்தார்.

3 நாட்கள் கழித்து அவர் நடிக்க வந்த முதல் காட்சியே ‘சின்னத்தம்பி’ படத்தில் ராதாரவி, கிராமத்து நடுவில் அவரைக் கட்டி வைத்து அவருக்கு பொட்டு வைத்து கலர் புடவை கட்டி அவமானப்படுத்தும் காட்சிதானாம்..

- இயக்குநர் பி.வாசு சொன்ன தகவல் இது..!

சோவுக்கு செய்த நன்றிக் கடன்


ஒரு சமயம் எம்.ஜி.ஆரின் படத்தில் நடிக்கும்போது ஆச்சி கால்ஷீட் சொதப்பல் செய்துவிட அதிலிருந்து 3 படங்களுக்கு தொடர்ச்சியாக ஆச்சிக்கு எம்.ஜி.ஆர். தன் படங்களில் வாய்ப்பளிக்கவில்லை.

எம்.ஜி.ஆர். தன்னை புறக்கணிக்கிறார் என்பதை தெரிந்தவுடன் ஆச்சி சோ-விடம் சொல்லி வருத்தப்பட.. சோவும், அசோகனும்தான் எம்.ஜி.ஆரிடம் வாக்குவாதம் செய்து மனோரமாவை நடிக்க வைத்தார்களாம்..

இந்த நன்றிக் கடனுக்காகத்தான் யார் தடுத்தும் கேளாமல் சோவின் 'உண்மையே உன் விலை என்ன' திரைப்படத்திலும், 'முகமது பின் துகளக்'கிலும் நடித்துக் கொடுத்தார்.  அந்த தைரியம் வேறு எந்த நடிகைக்காவது வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்..!

- சோவே எழுதியிருக்கும் தகவல்..!

காந்திமதி-மனோரமா லடாய்..

'அபூரவ சகோதரர்கள்' படத்தில் முதலில் மனோரமா நடிக்கவே இல்லை. காந்திமதிதான் அந்தக் கேரக்டரில் நடித்திருந்தார். காந்திமதியை வைத்து ‘ராஜா கைய வைச்சா’ பாடலைகூட ஷூட் செய்துவிட்டார்கள். ஆனால் நடனம் மற்றும் சென்னை பாஷை டயலாக் மாடுலேஷனில் காந்திமதியின் பெர்பார்மென்ஸ் எடுபடாமல் போகவே காந்திமதியை நீக்கிவிட்டு மனோரமாவை புக் செய்தார் கமல்ஹாசன்.

இதனால் தான் சாகின்றவரையிலும் மனோரமா மீது பிணக்கில்தான் இருந்தார் காந்திமதி. ‘சின்னக்கவுண்டர்’ படத்தில் மனோரமாவின் கேரக்டர், காஸ்ட்யூம்ஸ், மேக்கப் பற்றி ஓவராக கிண்டல் செய்து பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தார் காந்திமதி.

வழக்கம்போல ஆச்சி கப்சிப்புதான்..!

சம்சாரம் அது மின்சாரத்தில் இடம் பெற்றதே அதிர்ஷ்டம்

'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் முதலில் மனோரமா கேரக்டரே இல்லை. மனோரமா இதுவரையிலும் ஏவி.எம். நிறுவனத்தின் படங்களில் பெயர் பெறுகிற மாதிரி எதிலும் நடிக்கவில்லையே என்கிற ஆதங்கத்தில் ஏவி.எம்.சரவணன் 'இப்படியொரு வேலைக்காரி கேரக்டரை வைத்தால் நன்றாக இருக்கும்' என்று கருத்து சொல்ல இயக்குநர் விசுவும் அதை ஏற்றுக் கொ்ண்டார்.


இப்படித்தான் நம்முடைய 'கண்ணம்மா' அந்தப் படத்தில் உட்புகுந்தார். ஆனால் கடைசியில் தன் நடிப்பின் மூலம் வீட்டுக்கு ஒரு கண்ணம்மா இருக்கக் கூடாதா என்கிற ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்திவிட்டார் ஆச்சி.

ஆயுள் காலம் முழுவதும் நம்மால் மறக்க முடியாதது 'கம்முன்னு கெட' டயலாக்கும் அந்த நடிப்பும்..!

ரஜினியை காரசாரமாகத் திட்டியது

1996 தேர்தலின்போது அ.தி.மு.க.வில் சேர்ந்த ஆச்சி மனோரமா, அதிமுக மேடைகளில் ரஜினியை வெளுத்துக் கட்டினார். 'மெண்டல்', 'அரை லூஸு', 'கன்னடன்', 'குடிகாரன்', 'பேக்கு பய' என்றெல்லாம் விளாசி தள்ளிவிட்டார்..

அ.தி.மு.க. தேர்தலில் தோல்வியடைந்தது. அடுத்த ஆறு மாதங்களுக்கு ஆச்சிக்கு படங்களே இல்லாமல் போனது. ஆனாலும் இதன் பிறகு அவர் முதலில் நடிக்க ஒப்பந்தமான படம் ‘அருணாச்சலம்.’ அந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சியில் ரஜினியை சந்தித்தபோது சற்றுக் கூச்சத்துடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார்..! ஆனால் ரஜனியோ எதையும் கேட்காமலேயே போய்விட்டார்.. இதன் பின்பு யாரைப் பற்றியும் அரசியல் ரீதியாக அவர் தாக்கிப் பேசவே இல்லை..!

கலைஞருக்கு பேருதவி செய்த கதை..!

கலைஞர் மு.கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது கட்சிக் கூ்டடத்திற்காக வெளியூர் போய்விட்டு சென்னை திரும்பும் வழியில் விபத்துக்குள்ளாகி செனனை பொது மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார்.



அப்போது அவரைப் பார்க்க மனோரமா ஆஸ்பத்திரிக்கு போயிருந்தார். அந்த அறையில் ராஜாத்தியம்மாளும் இருந்திருக்கிறார். மனோரமாவுக்கு ராஜாத்தியம்மாவை நன்கு தெரியும். இருவருமே நாடகங்களில் கருணாநிதியுடன் நடித்தவர்கள். கருணாநிதி அவரை திருமணம் செய்து கொண்டதும் தெரியும்.

சிறிது நேரத்தில் அந்த அறைக்குள் தயாளு அம்மாவும் வந்திருக்கிறார். ராஜாத்தியம்மாவை கை காட்டி "யார் இந்த அம்மா..? என்று கேட்டிருக்கிறார் தயாளு அம்மாள். வழக்கம்போல கலைஞர் மு.கருணாநிதி பதில் சொல்லாமல் இருக்க.. மனோரமா வெள்ளந்தியாக "இவங்களைத் தெரியாதா..? இவங்கதான் ராஜாத்தி.." என்று சொல்லிவிட்டு சந்தேகத்தோடு கலைஞரிடம், "என்னங்க நீங்க சொல்லலையா..?" என்றும் கேட்டு விஷயத்தை பட்டென்று போட்டு உடைத்துவிட்டாராம்..!

இதை கருணாநிதியே ஆச்சி மனோரமா இருந்த ஒரு மேடையில் சொன்னார்.

எவ்வளவு பெரிய நல்ல காரியம் செஞ்சிருக்கு நம்ம ஆச்சி..?!

மைக்கேல் மதன காமராசனின் பாடலை ரீஷூட் செய்ய வைத்த கதை


'மைக்கேல் மதன காமராசன்' படத்தி்ல சிவராத்திரி பாடல் காட்சியை இப்போதைய வெர்ஷன் இல்லாமல் வேறுவிதமாக எடுத்திருந்தார்கள்.

ஆனால் படமாக்கும்வரையில் எதுவும் சொல்லாத மனோரமா இதன் பின்பு கமல்ஹாசனிடம், "அது நல்லாயில்லையேப்பா.. ரொம்ப வல்கரா இருக்கே.." என்று சொல்லியிருக்கிறார். "இல்லம்மா.. நல்லாத்தான் இருக்கு.." என்று கமல் சமாதானம் பேச.. "உனக்கு ஒண்ணுமில்ல. நானும்கூட நடிச்சிருக்கனே.. என்னையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு..." என்று கேட்டவுடன் ஜெர்க் ஆகி மறுபடியும் அந்த பாடல் காட்சியை வேறு மாதிரி ஷூட் செய்தாராம் கமல்ஹாசன்.!

வேறு மாதிரி ஷூட் செய்தே அந்தப் பாடல் காட்சி இப்படியிருக்கே..? அப்போ ஆச்சி ஆட்சேபித்த முதல் வெர்ஷன் எப்படியிருந்திருக்கும்..?

மலையாளப் படங்களில் நடிக்கவில்லை..


மலையாளப் படங்களில் சேலை இல்லாமல் ஜாக்கெட் அணிந்து நடிக்க வேண்டியிருக்கும் என்பதால் ஆச்சி மலையாளத்தில் அதிகம் நடிக்கவில்லை.

உடல் கவர்ச்சி காட்டி நடிக்கக் கூடாது என்பதில் முதலிலேயே தெளிவாக இருந்தார். தமிழில் ஒரு காலக்கட்டத்திற்கு மேல் அவருக்கென்று ஒரு மார்க்கெட் கிடைத்தவுடன் அதை இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

அப்படியிருந்தும் ஒரு ஹிந்தி படத்திலும், 'உண்மையே உன் விலை என்ன' படத்தில் சோவுக்காகவே நடித்துக் கொடு்ததாராம்..!

நம்பியாரை மிரட்டிய கதை..

நடிகர் நம்பியார் பழுத்த ஆன்மீகவாதி என்றாலும், நல்லவர்தான் என்றாலும், பண்பானவர்தான் என்றாலும் டபுள் மீனிங் டயலாக் பேசுவதில் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு நிகரானவர். வெண்ணிற ஆடை மூர்த்தி எல்லா இடங்களிலும் அதை பேசுவார். ஆனால் நம்பியார் பேச மாட்டார். அதுதான் வித்தியாசம்.

‘எஜமான்’ படத்தில் ஆச்சியுடன் நடித்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் நம்பியார் அடித்த கமெண்ட்டுகளை பார்த்து கடுப்பாகி கத்திக் குமுறிவிட்டார் ஆச்சி.. ‘இதோ பாருங்க. இன்னொரு தடவையும் இதே மாதிரி நான் இருக்கும்போது பேசுனீங்க.. நான் ஊருக்குக் கிளம்பிருவேன்…’ என்று எச்சரித்துவிட்டு அகன்றுவிட்டாராம்..

அந்தப் படம் முடியும்வரையிலும் நம்பியார் காம்பினேஷனில் இருவரையும் நடிக்க வைப்பதில் சிரமப்பட்டிருக்கிறார்கள்..

கலைஞருடன் பிணக்குக்கான காரணம்..

சில காலம் கலைஞருடன் பிணக்கில் இருந்தார் ஆச்சி மனோரமா. அது அவருடைய மகன் பூபதிக்கு மெடிக்கல் காலேஜ் சீட் கேட்டு ‘தருகிறேன்’ என்றும் சொல்லாமல், ‘தர மாட்டே்ன்’ என்றும் சொல்லாமல் கடைசிவரையிலும் இழுத்தடித்துவிட்டாராம் கருணாநிதி. இதனால் கடும் கோபத்தில் இருந்தார் மனோரமா. "அவர் நினைச்சிருந்தால் சீட் கொடுத்திரு்ககலாம்.." என்று பின்னாளில் வருத்தத்தோடு பேட்டியும் கொடுத்தார்.

இதனாலேயே இப்போது தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் முதலீடாக வைத்து தனது பேத்தியையும், பேரனையும் மருத்துவர்களாக்கி அவர்களுக்காகவே புதுச்சேரியில் ஒரு மருத்துவக் கல்லூரியும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்..!

என்னவொரு வைராக்கியம்..!?

டபுள் மீனிங்குன்னா எப்படியிருக்கணும் தெரியுமா..?

"இப்போதெல்லாம் காமெடி நடிகர், நடிகைகள்தான் அதிகமாக டபுள் மீனிங் டயலாக்குகளை பேசுகிறார்கள். இது சினிமாவுக்கு நல்லதா இல்லையே..?" என்ற நிருபரின் கேள்விக்கு,

"நல்லதில்லைதான். ஆனால் அதை வைக்குறவிதமா வைச்சாத்தான் பொம்பளைங்க ரசிப்பாங்க. டயலாக்கையே இலை, மறைவு காயாத்தான் அவங்க எதிர்பார்க்குறாங்க. இப்போ இருக்குற சினிமாக்காரங்களுக்கு அது புரிய மாட்டேங்குது.

'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்' படத்துல கவுண்டமணி என்னைப் பார்த்து 'உள்ள வா.. கொசு கடிக்குதுல்ல' என்று கூப்பிடுவார். அதன் அர்த்தம் அதுதான்.. இதை எத்தனை பொம்பளைங்க தியேட்டர்ல ரசிச்சாங்கன்னு போய் கேட்டுப் பாருங்க. இப்படி எழுதினா தப்பில்லை.. பொட்டுன்னு எழுதி விளக்கம் சொல்ற மாதிரி சங்கடப்படுத்தக் கூடாது.." என்றார் ஆச்சி..!

நான் நல்லா நடிக்கலையா..?

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தினை தெலுங்கில் ஏவி.எம். நிறுவனமே தயாரித்தது. தமிழில் மனோரமா செய்த கேரக்டரில் தெலுங்கில் செளகார் ஜானகி நடித்திருந்தார். 

படம் வெளியான பின்பு ஒரு நாள் ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு வந்த மனோரமா ஏவி.எம். சரவணனின் கையைப் பிடித்து “என் நடிப்பில் என்ன குறை..? என்னை ஏன் தெலுங்கு பதிப்பில் நடிக்க வைக்கவில்லை..?” என்று கேட்டு அழுதாராம். 

ஏவி.எம். சரவணன் தர்மசங்கடத்திற்குள்ளாகி மனோரமாக பெரும்பாடுபட்டு சமாதானம் செய்திருக்கிறார். “உங்கள் திறமையில் யார் என்ன குறை கண்டுபிடிக்க முடியும்..? ஹீரோ, ஹீரோயின் என்றால் யாரையும் போட்டு எடுத்துவிடலாம். மற்ற காமெடி, குணச்சித்திர வேடங்களில் குறிப்பாக வேலைக்கார்ர், சமையல்காரி போன்ற கேரக்டர்களில் நேட்டிவிட்டு ரொம்ப முக்கியம். அதனால்தான் உங்களை போடவில்லை..” என்று நயமாக பேசி சமாதானம் செய்தாராம்.

உன்னால் முடியும் தம்பி


மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு மனோரமா ஆச்சியை தன் படத்தில் நடிக்க அழைத்திருந்தார் கே.பாலசந்தர். அது ‘உன்னால் முடியும் தம்பி’. இதில் கமல்ஹாசனுக்கு அண்ணியாக நடித்திருந்தார் ஆச்சி.

ஷூட்டிங்கின்போது ஆச்சி நடித்த ஒரு  காட்சி மூன்று டேக்குகள் வரைக்கும் சென்றது. முதல் இரண்டு டேக்குகளில் ஆச்சிக்கே திருப்தியில்லாமல் ஒன் மோர் ஸார் என்று சொல்லிவிட்டார். மூன்றாவது டேக்கில் ஓகே என்றார் கே.பி. ஆனால் ஆச்சிக்கு அதிலும் திருப்தியில்லை. 

பொதுவாக கே.பி.யிடம் நேரில் கருத்து சொல்லவே நடிகர், நடிகைகள் பயப்படுவார்கள். ஆச்சி மெதுவாக கே.பி.யின் அஸோஸியேட் இயக்குநரான அனந்துவிடம், இன்னொரு டேக் எடுக்கலாம் ஸார்.. கேட்டுப் பாருங்க..” என்று தயக்கத்துடன் நின்றிருக்கிறார். அனந்துவும் சற்று யோசித்துவிட்டு கே.பி.யிடம் வந்து இதைச் சொல்ல.. கே.பி.யே ஆச்சியிடம் வந்திருக்கிறார்.

“அது ஓகேம்மா.. எனக்கு அது போதும். நல்லாத்தான் இருக்கு. நீங்க கிளம்பு.. அவ்வளவுதான்..” என்று பொட்டென்று சொல்லிவிட்டு போய்விட்டார். ஆச்சி மனமேயில்லாமல்தான் கிளம்பினாராம்.

பின்பு இது பற்றி கே.பி, உடன் நடித்த நடிகரான கவிதாலயா கிருஷ்ணனிடம் சொல்லும்போது, “மனோரமாகிட்டயிருந்து நான் இவ்ளோதான் எதிர்பார்த்தேன். இதுவே சரிதாவா இருந்தா நான் இன்னொரு டேக் போயிருப்பேன். நான் மனோரமாவை சரிதாவாக்க முயற்சி செஞ்சா ஆடியன்ஸ் சிரிப்பாங்கடா.. ஆச்சி தன்னோட இமேஜை தள்ளி வைச்சிட்டு இன்னொரு மனோரமாவா இதுல நடிச்சிருக்கு. எனக்கு இது போதும். எதுக்கு ரீ டேக்..?” என்றாராம்.

பாட்டி சொல்லைத் தட்டாதே


‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தின் பாடல் கம்போஸிங்கில் ஏவி.எம்.சரவணன் இருந்தபோது அங்கேயே மனோரமா அவரைத் தேடி வந்திருக்கிறார்.

“நான் பைட் பண்ணினா அது எடுபடாதுன்னு நம்ம செட்டுலயே எல்லாரும் சொல்றாங்க ஸார்..” என்று வருத்தப்பட்டிருக்கிறார். “உங்களால் பைட்டிங்  சீன் பண்ண முடியாதுன்னா சொல்லுங்க. உங்கள தொந்தரவு செய்யலை” என்று சொல்லியிருக்கிறார் சரவணன். “இல்ல.. இல்லை.. என்னால சண்டை போட முடியும்..” என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார் மனோரமா. “அப்படீன்னா வேற யார் எது சொன்னாலும் காதுல கேட்டுக்காதீங்க.. உங்க வேலையைப் பாருங்க..” என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாராம் ஏவி.எம்.சரவணன்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் சண்டை காட்சியும், சூப்பரான கார் சேஸிங் காட்சியும் அந்தப் படத்தை சூப்பர் ஹிட்டாக்கியது தெரிந்த்தே..!

ஆச்சி செய்த ஒரேயொரு பட விநியோகத் தொழில்..

ஒரு படத்தின் டப்பிங்கிற்காக டப்பிங் ஸ்டூடியோவுக்கு போன போது அங்கே இருந்த மேஜர் சுந்தர்ராஜனை சந்தித்தார். ஆச்சியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட படத்தைப் பற்றி பேசிய மேஜர், "அற்புதமான படம்.. ஆனா தமிழ்ல வருமான்னே தெரியலை.. விநியோகஸ்தர்கள் யாருமே வாங்க வர மாட்டேன்றாங்க.." என்று அலுத்துக் கொண்டார்.

ஆர்வம் கொண்ட ஆச்சி,  "அந்தப் படத்தை நான் பார்க்கணுமே.." என்று சொல்லி படத்தை பார்த்திருக்கிறார். படத்தில் லயித்துப் போன ஆச்சி, "நானே இதை வாங்கி விநியோகம் பண்றேன்..." என்று சொல்லி மேஜர் சுந்தர்ராஜனின் உதவியால் படத்தை வாங்கி தமிழகம் முழுவதும் அந்தப் படத்தை வெளியிட்டார்.

ஆச்சி தயாரிப்பு, விநியோகத் தொழிலில் ஈடுபட்ட முதலும், கடைசியுமான படம் அதுதான்..

அந்தப் படம் ‘சங்கராபரணம்.’

படத் தயாரிப்பில் இறங்காது நல்லதுதான்..!

மனோரமா ஒரு விழா மேடையில் அமர்ந்திருக்க. இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசினார்.

“ஆச்சி தன் வாழ்க்கையில் ஒரு நல்ல காரியத்தை செய்திருக்கிறார். அது அவர் பட தயாரிப்பு தொழில் இறங்காததுதான். ஏன்னா ஆச்சியால் ஒரு கண்டிப்பான தயாரிப்பாளரா இருக்கவே முடியாது. அவர் முழுக்க, முழுக்க அன்பினால் நிறைந்தவர். அவருக்கு அன்பாக பேச மட்டுமே தெரியும். யாரையும் குற்றம், குறை சொல்லக்கூட தெரியாது.

இப்பவெல்லாம் பல நடிகர்கள் ஷூட்டிங்கிற்கு நேரத்துக்கு வருவதில்லை. ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி தப்பிக்கிறாங்க. இப்படித்தான் ஆல் ஆர்ட்டிஸ்ட் காம்பினேஷன்ல நடிக்க வேண்டிய நாள்ல ஒரு நடிகர் எனக்கு வயித்துக் கடுப்பா போகுது. எந்திரிக்க முடியலைன்னு சொல்லிட்டு எஸ்கேப்பானாராம்.

இதையே வேற பழுத்த தயாரிப்பாளர்கிட்ட சொன்னார்ன்னு வைங்க.. அவர் நல்லா விசாரிச்சிட்டு சந்தேகம் வந்துட்டா ‘பரவாயில்லை.. அந்தப் பயலை கோவணத்தைக் கட்டிட்டு ஸ்டூடியோவுக்கு வரச் சொல்லு. கழுவி விடுறதுக்கு நானே ஆளை ஏற்பாடு பண்றேன்’னு சொல்வார்.

இதுவே தயாரிப்பாளரா நம்ம ஆச்சியா இருந்தா என்ன நடக்கும்..? ‘தங்கம், பவுனு.. உடம்பை பார்த்துக்க சாமி.. டாக்டர்கிட்ட போனியா..? மாத்திரை சாப்பிட்டியா..? நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு எப்போ சரியாகுதோ அப்போ வா.. அன்னிக்கு பார்த்துக்கலாம்’ன்னு சொல்வாங்க. அந்தப் படத்தை எடுத்து முடிச்சிருவாங்கன்னு நினைக்குறீங்க. 

இதனாலதான் சொன்னேன்.. ஆச்சிக்கு தயாரிப்பாளர் வேலையெல்லாம் பொருத்தமே இல்லை. நல்லவேளை அவங்களும் அதுல இறங்கலை. அதான் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க..” என்றார்.

இதுக்கு ஆச்சி கொடுத்த ரியாக்ஷன்ஸ் ஓராயிரம் சிரிப்புகள்..! 

பாக்யராஜுக்கு கை கொடுத்த ஆச்சி


‘ராசுக்குட்டி’ படத்தில் பாக்யராஜுக்கு அம்மாவாக நடித்தார் மனோரமா. அதில் ஒரு காட்சியில் மனோரமா குளிப்பது போலவும், குளிக்கும்போது வெளியில் கேட்கும் ஒரு வசனத்தால் கோபப்பட்டு தன் கணவரை பார்க்க அப்படியே அதே ஈரத் துணியுடன்  வருவது போலவும் காட்சியமைத்திருக்கிறார் பாக்யராஜ்.

ஆச்சி குளித்துவிட்டு அப்படியே வந்தால்தான் அந்தக் காட்சிக்கு ஒரு வலு கிடைக்கும் என்பது பாக்யராஜின் எண்ணம். இதை எப்படி ஆச்சியிடம் சொல்வது என்ற சங்கடத்துடனேயே தயங்கத் தயங்கி மனோரமாவிடம் சொல்லியிருக்கிறார் பாக்யராஜ். ஆச்சி சிச்சுவேஷனை கேட்டுவிட்டு, “இதைவிட போல்டான ஒரு சீன் இந்தப் படத்துல வேற எதுவுமில்லை. நான் கண்டிப்பா நடிக்கிறேன்..” என்று சொல்லி அந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்திருக்கிறார். 

உண்மையாகவே அந்தப் படத்தின் கிளைமாக்ஸில் வரும் இந்தக் காட்சியில் ஆச்சியின் நடிப்பு ஏ ஒன்.

பானுமதி வியந்த மனோரமா

‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தை தெலுங்கில் ஏவி.எம். நிறுவனமே தயாரித்த்து. அதில் மனோரமா கேரக்டரில நடித்தவர் பானுமதி. அந்தப் படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ்களை பார்த்த ஒரு விநியோகஸ்தர் ‘தமிழில்கூட மனோரமாவுக்கு பதிலாக பானுமதியையே நடிக்க வைத்திருக்கலாம்’ என்று ஏவி.எம்.சரவணனிடம் சொல்லியிருக்கிறார்.

ஏவி.எம். சரவணன் ஸார், பானுமதியை சந்தித்தபோது இது பற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு பானுமதி, “நோ.. நோ.. அந்த விநியோகஸ்தர் சொன்னது தப்பு. மனோரமாதான் அந்த பாத்திரத்தை உருவாக்கினார். நான் அதில் நடிக்கப் போகிறேன். அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியுமா.. என்பது சந்தேகம்தான்..”. என்றாராம்.

சொந்த வாழ்க்கையின் சோகம்..!

எந்தவொரு காமெடி நடிகருக்கும் சொந்த வாழ்க்கையில் நிம்மதியிருக்காது. இது உலகளாவிய உண்மை. நம்ம ஆச்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. தன் ஒரே மகன் பூபதியின் அளவுக்கதிமான குடிப் பழக்கத்தினால் தனது ஆயுட்காலம் முழுவதுமே அவர் நொந்து போய்தான் இருந்தார்.

பேரனும், பேத்திகளும் தலையெடுத்த பின்புதான் கொஞ்சம் ரிலாக்ஸானார். ஆனாலும் அவருடைய உடன் பிறந்தவர்களின் பிள்ளைகள் சொத்தில் பங்கு கேட்டு கோர்ட் படியேறி அத்தைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி சங்கடப்படுத்த.. கடைசி காலம் அவருக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது..!

நடிக்க கிடைக்காத கேரக்டர்

ஆச்சி மனோரமா கடைசிவரையிலும் நடிக்க விரும்பிய ஒரேயொரு கேரக்டர் அரவாணி. ‘அது போன்ற ஒரு கேரக்டர் கிடைத்தால் சம்பளம்கூட வாங்காமல் நடிக்கிறேன்’ என்றார். ஆனால் கடைசிவரையிலும் அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவேயி்லலை..

ஆம்பளைங்களுக்கு அப்புறமாத்தான் பொம்பளைங்க சாகணும்..


"பொம்பளைங்க எல்லாம் புருஷனுக்கு முன்னாடியே சாகணும்னு நினைக்காதீங்க. நமக்காவது வீட்டு வேலை செய்யத் தெரியும். சமைக்கத் தெரியும்.. நாலு வீடு வாசல்ல பழகத் தெரியும். நம்ம புருஷன்களுக்கு என்னத்த தெரியும்..? அதுனால கடைசிவரைக்கும், அவங்க உசிரோட இருக்குறவரைக்கும் அவங்கள பத்திரமா பார்த்துக்கணும்னு நினைங்க. நம்ம சாவு ஆம்பளைக்கு பின்னாடிதான் இருக்கணும். இதைத்தான் ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மனைவியும் நினைக்கணும்.."

- இப்படியொரு முறை பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்து பெண்ணிய போராளிகளிடத்தில் கன்னா பின்னாவென்று 'ஓல்டு பார்ட்டி' என்று வாங்கிக் கட்டிக் கொண்டார் ஆச்சி..!

ரசிகர்களுக்கு பதில் எழுதியனுப்பும் மரியாதை குணம்

5-ம் வகுப்புவரையிலுமே படித்தாவராக இருந்தாலும் பழகுவதிலும், பேசுவதிலும் இனிமையானவர் மனோரமா. ஷூட்டிங் ஸ்பாட்டில் டேக்கின்போது மட்டுமே அவருடைய குரல் ஓங்கியிருக்கும். மற்றபடி சக நடிகர்களிடத்தில் பேசும்போதும் ஒரு அம்மாவாக மட்டுமே தன்னை நினைத்துக் கொண்டு பேசுவார்.

கே.பாலசந்தர், ஏவி.எம்.மெய்யப்பச் செட்டியார், பி.நாகி ரெட்டி, எஸ்.எஸ்.வாசன் போன்றோரெல்லாம் தங்களுக்கு யாராவது போஸ்ட் கார்டில் கடிதம் எழுதினால்கூட பதில் போடுவார்கள். அந்த அளவுக்கு நாகரிகத்தைக் கடைப்பிடித்தார்கள். மனோரமா ஆச்சியும் அப்படித்தான். 

தனக்கு வந்த கடிதங்களுக்கு ஆள் வைத்து பதில் கடிதம் எழுதி கையொப்பமிட்டு அனுப்பிவிடுவார். இதனை கடைசிவரையிலும் அவர் தொடர்ந்திருக்கிறார் என்று புகழ்கிறார்கள் பத்திரிகை தொடர்பாளர்கள்.

கடைசியாக கலந்து கொண்ட விழா..!

கடந்த அக்டோபர் 2-ம் தேதி சென்னை தி.நகர்., பி.டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழாவில் மிக உற்சாகமாக கலந்து கொண்டார் ஆச்சி மனோரமா.



அந்த விழாவில் அவர் பேசும்போது போரில் புறமுதுகிட்டு தன் மகன் ஓடியதாக கேள்விப்பட்ட ஒரு தாய், தன் மார்பை அறுத்தெறிந்த வரலாற்றினை கலைஞர் கருணா்நிதி எழுதி தான் பேசிய அந்த நீண்ட கவிதை வசனத்தை அப்படியே பேசிக் காட்டினார்.

அதேபோல் இன்னொரு திரைப்படத்தில் அவர் பேசிய சென்னை பாஷை டயலாக்கையும் ஒரு சிறிய இடறல்கூட இல்லாமல் பேசி முடித்தார். ஒட்டு மொத்த அரங்கமும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டியது.

மேடையில் இருந்த நடிகர் கமல்ஹாசனை ‘என் மகன்’ என்றும் நடிகர் சிவக்குமாரை ‘என் தம்பி’ என்றும் பாசத்துடன் கூப்பிட்டு அவர்களையும் நெகிழ வைத்தார்..!

இந்த நிகழ்ச்சிதான் ஆச்சி கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சியாகும்..!

ஆச்சி மனோரமாவை கடைசியாக மேடையேற்றிய நிகழ்வால் சினிமா பத்திரிகையாளர் சங்கம் நிரம்பவே பெருமையடைகிறது..!

ஆச்சிக்கு போலீஸ் மரியாதை வேண்டும்..!

நடிப்பில் சிவாஜிக்கு இணையானவர். நடிகைகளுக்கே ஒரு இலக்கணமாகத் திகழ்ந்தவர். தென்னிந்தியாவின் 5 முதலமைச்சர்களுடன் நடித்தவர். 60 வருடங்களாக திரைப்படத் துறையில் பணியாற்றியவர். மிக அதிகமான படங்களில் நடித்தமைக்காக கின்னஸ் சாதனை படைத்த ஒரே இந்திய நடிகை.

'அம்மா' என்கிற வார்த்தைக்கு ஒரு அர்த்தத்தை தன்னுடைய நிஜ வாழ்க்கையில்கூட வாழ்ந்து காட்டியவர்.. 'ஆச்சி' என்கிற பெயருக்கே தனி மதிப்பினை கொடுத்தவர்.. எத்தனையோ புதியவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருந்தவர். இவருடைய இறப்பு பத்தோடு பதினொன்றாக அமைத்துவிடக் கூடாது..!

தமிழ்த் திரையுலக அமைப்புகள் முதலமைச்சரிடம் பேசி ஆச்சி மனோரமாவின் இறுதிச் சடங்கில் போலீஸ் மரியாதை பெற்றுத் தர வேண்டும். இதுதான் அந்த அம்மையாருக்கு கிடைக்கும் நிஜமான அரசு மரியாதையாக இருக்கும்..! திரையுலகத்திற்கும் மரியாதையாக இருக்கும்.. செய்வார்களா..?


எரிப்பிலும் பழமையேதான் வேண்டும்..!

இறுதி ஊர்வலம் துவங்கிவிட்டது.. வீட்டுக்குப் பக்கத்திலேயே கண்ணம்மாபேட்டை சுடுகாடு இருந்தாலும் மின் மயானத்தில் தன் உடலை எரிக்கக் கூடாது. பழைய முறைப்படி விறகுகளால்தான் எரிக்கப்பட வேண்டும் என்பது ஆச்சியின் விருப்பம் என்பதால் தொலைதூரத்தில் உள்ள மயிலாப்பூர் இடுகாட்டிற்கு ஆச்சியை கொண்டு செல்கிறார்கள். !

காற்றில் கரைந்தார் ஆச்சி..!

தமிழகத்து மக்களின் மனதுக்குப் பிடித்த கண்ணம்மா, தன் உடலை தீக்கு இரையாக்கிக் கொண்டார். தமிழ்த் திரையுலகத்தின் ஒரு தனித்த அடையாளம் தன்னை சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறது..! சென்று வருக ஆச்சி..! எப்போதும் எங்களது நெஞ்சங்களில் இருப்பீர்கள்..!

7 comments:

Nagendra Bharathi said...

அருமை

”தளிர் சுரேஷ்” said...

ஆச்சி மனோரமாவை பற்றிய அறியாத தகவல்களின் தொகுப்பு! சிறப்பு! நன்றி!

Yarlpavanan said...

சிந்திக்க வைக்கும் பதிவு
http://www.ypvnpubs.com/

வருண் said...

*** ஒரு சமயம் எம்.ஜி.ஆரின் படத்தில் நடிக்கும்போது ஆச்சி கால்ஷீட் சொதப்பல் செய்துவிட அதிலிருந்து 3 படங்களுக்கு தொடர்ச்சியாக ஆச்சிக்கு எம்.ஜி.ஆர். தன் படங்களில் வாய்ப்பளிக்கவில்லை.***

நெறையப்பேரு குடியக் கெடுத்தவர் ஒங்க "பொம்மனச்செம்மல்"ணு அதையும் பீத்த வேண்டியதுதானே?

வருண் said...

*** சொன்னதோடு இல்லாமல் ஆச்சிக்கு தெரியாமலேயே அந்த பத்திரிகையாளரை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவழைத்து மேக்கப் ரூமில் வைத்து 'கும்மி'யெடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர்.***

அடேங்கப்பா! புரச்சித் தலிவரு பெரிய "மாஃபியா டான்"னு பெருமைப் பட்டுக்கிறீங்களாக்கும்!



கலையன்பன் said...

மறைந்த ஆச்சியின் பல பண்புகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

S said...

A rare collection of events. a right tribute to the legend. unlike popular media, where it covers as customary, this one from the heart of some one cherish the memory. Thanks for the collection of rare information. Those who know her real life will appreciate her acting ability, she expressed unmatched comedian role despite the testifying, torturing real life events.It is really worth quoted "Fortunately she was not producer". with all love and not pressing for any demand. she has fortunate to avoid the other side. The stories of many producers except few like 'muktha seenivaasan' are in debt to her. she has not let down anyone intentionally. "AACHHI" expressed the real tamil world. all part known.