களத்தூர் கிராமம் - சினிமா விமர்சனம்

27-10-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இப்படத்தை ஏ.ஆர்.மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார். டட்டூ சினிமா சார்பில் ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் வெளியிட்டிருக்கிறார்.
கிஷோர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக யக்னா ஷெட்டி நடித்திருக்கிறார். இவர் ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்தவர். மேலும், ‘தகராறு’ சுலீல் குமார், அஜய் ரத்னம், தீரஜ் ரத்னம், ரஜினி மகாதேவய்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – புஷ்பராஜ் சந்தோஷ், இசை – இசைஞானி இளையராஜா, பாடல்கள் – இளையராஜா, கண்மணி சுப்பு, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், நடனம் – நிர்மல், சண்டை பயிற்சி – மகேஷ்- ஓம் பிரகாஷ். எழுதி இயக்கியிருப்பவர் சரண் கே. அத்வைதன்.

போலீஸ் ரெக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம்தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத் தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அதேசமயம் தங்களது கிராமத்துக்குள் நியாய, தர்மத்துக்கு கட்டுப்பட்டவர். அவரது உயிர் நண்பன் வீரண்ணாவோ (சுலில் குமார்) கொஞ்சம் சபல பேர்வழி. 
அதனால் உள்ளூரில் பெண் கிடைக்காத அவருக்கு கிஷோரின் உத்தரவாதத்தின் மூலம் பக்கத்து கிராமத்தில் இருக்கும் ஒரு குடும்பம் பெண் கொடுக்க முன் வருகிறது. ஆனால், நண்பனுக்காக பெண் கேட்க, சொன்ன நேரத்தில் கிஷோர் வர முடியாமல் போக நண்பர்கள் இருவருக்கும் பகை மூள்கிறது.
இந்த நேரத்தில் தன்னைத் தேடி வந்து தனது மகளை மீட்டுக் கொடுக்கும்படி கேட்கும் ஒரு பெரியவரின் பேச்சைக் கேட்க வேண்டிய சூழல் கிஷோருக்கு. பண்ணையாரின் வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கிவிட்டு ஹீரோயின் யக்னாவை தூக்கி வருகிறார் கிஷோர். ஆனால் திரும்பி வருவதற்குள் பண்ணையாரின் ஆட்கள் யக்னாவின் அப்பாவை கொலை செய்துவிடுகிறார்கள்.
இதனால் நிமிடத்தில் அனாதையாகும் யக்னாவின் மீது பரிதாபப்படும் கிஷோர் அவரை தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்புகிறார். இதே நேரம் போலீஸிடம் யக்னாவின் அப்பாவை கிஷோர்தான் கொலை செய்தார் என்றும், பண்ணையாரைத் தாக்கிவிட்டு யக்னாவை கடத்திச் சென்றுவிட்டதாகவும் புகார் சொல்கிறார்கள்.
இதனால் போலீஸார் கிஷோரை தேடி வர.. யக்னாவும், கிஷோரும் ஒரு மலைப்பகுதிக்கு சென்று பதுங்குகிறார்கள். அங்கேயே அம்மன் சிலை முன்பாக மாலை மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள். உறவு கொள்கிறார்கள். ஆனால் விடிந்த பொழுதில் போலீஸ் அவர்களைச் சுற்றி வளைக்கிறது.
தன் திருமண நிச்சயத்தார்த்தத்திற்கு வராமல் போய் கல்யாணம் நின்று போன கோபத்தில் கிஷோரை தேடி வருகிறார் வீரண்ணா. அவரிடம் தனது மனைவியான யக்னாவை ஒப்படைத்துவிட்டு அவளை தன் வீட்டில் பாதுகாத்து வைக்கும்படி சொல்கிறார் கிஷோர். பின்பு, தானே போலீஸிடம் சரண்டராகிறார் கிஷோர்.
இப்போது யக்னாவை ஊருக்கு அழைத்து வரும் வீரண்ணா அவளை தன் மனைவி என்று பொய்யாக ஊர் மக்களிடம் சொல்கிறான். இதை யக்னா எதிர்க்க.. உண்மையைச் சொன்னால் பண்ணையாரின் ஆட்களும், போலீஸும் உன்னை தூக்கிச் சென்றுவிடுவார்கள் என்று பொய் சொல்லி அவளது வாயை அடைக்கிறான்.
யக்னா கிஷோருடனான அந்த ஒரு நாள் உறவில் கர்ப்பமடைய.. மகனை பெற்றெடுக்கிறாள். சில வருடங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்த கிஷோர் தனது மனைவியை அழைக்க வர அப்போதுதான் ஊர்க்காரர்களுக்கே யக்னா கிஷோரின் மனைவி என்கிற விஷயமே தெரிகிறது.
இப்போது ஏற்படும் மோதலில் வீரண்ணாவை தானே கொல்ல வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார் கிஷோர். அதற்கு பிராயச்சித்தமாக தங்களுக்கு பிறந்த மகனை வீரண்ணாவின் பெற்றோரிடம் கொடுத்து நல்லவிதமாக வளர்க்க சொல்கிறார் கிஷோர்.
ஆனால் அவர்களோ கிஷோர் – யக்னா மீது வெறுப்பை ஊட்டி வளர்ப்பதுடன், சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டே வெளியேறுகின்றனர்.
கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கிஷோர் பரோலில் ஊருக்கு வருகிறார். இப்போது அவரை அங்கேயே தீர்த்துக் கட்ட போலீஸ் நினைக்கிறது. வீரண்ணாவின் பெற்றோரிடம் வளர்ந்த கிஷோரின் மகனும் அவரை கொல்ல நினைத்து ஊருக்கு வருகிறான். இருவரிடமிருந்து கிஷோர் தப்பித்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் பிற்பாதி கதை.
படம் முழுவதும் கிட்டத்தட்ட பிளாஸ்பேக்கிலேயே அதுவும் இரண்டுவிதமான காலகட்டத்திலே நகர்வதாக திரைக்கதை அமைந்துள்ளது. படத்தின் துவக்கத்தில் ஒரு பொட்டல் காட்டில் அக்கிராமத்தைச் சேர்ந்த சிலரை போலீஸ் போலியாக என்கவுண்ட்டர் செய்கிறது. இது பற்றி விசாரிக்க நீதிபதியான அஜய் ரத்னத்தின் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை கமிஷனில்தான் அந்த ஊர் மற்றும் அனைவரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகிறது.
‘கருவத்திருக்கை’ என்கிற கேரக்டரில் இரண்டுவிதமான தோற்றங்களில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் கிஷோர். சொல்லப் போனால் அவரைத் தவிர அந்த கேரக்டரில் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. மொத்தக் கதையையும் தனது தோளில் சுமந்து தூக்கி செல்கிறார் கிஷோர்.
நடிப்பு, வசன உச்சரிப்பு, தோற்றப் பொலிவு என்று அனைத்திலும் கிஷோரை மறந்து ‘கருவத்திருக்கை’யை மட்டுமே பார்க்க முடிகிறது. வயதான தோற்றத்திலும் தனது ஆளுமையை விட்டுக் கொடுக்காமல் போலீஸிடம் பேசுவதும், தனது மகனே தன்னைக் கொலை செய்ய வந்திருப்பதை அறிந்து பாசமும், அதிர்ச்சியும் கலந்து பேசுகின்ற காட்சியிலும் அப்ளாஸ் வாங்குகிறார் கிஷோர். 
கிஷோரின் நண்பன் வீரண்ணாவாக வரும் சுலில் குமார், பார்வையிலும் செயலிலும் தெனாவெட்டாக, பார்க்கும் நமக்கே கோபம் வரும் விதமாக தனது கேரக்டரை உள்வாங்கி பிரதிபலித்துள்ளார்.
கிஷோரின் மகனாக வரும் மிதுன்குமார் தானும் பொருத்தமான தேர்வுதான் என தனது பங்களிப்பை நூறு சதவீதம் தந்திருக்கிறார். தனது தந்தை பற்றிய உண்மையை அறிந்து கொள்ளாமலேயே அவரது கேரக்டரை நகர்த்தி சென்றிருப்பதன் மூலம் திரைக்கதைக்கு நியாயம் செய்துள்ளார் இயக்குநர் சரண் அத்வைதன்.
நாயகி யக்னா ஷெட்டி, அந்த களத்தூர் கிராமத்து பெண்ணாகவே மாறிப்போய்விட்டார். கொஞ்சம் அப்பாவி தோற்றத்துடன், பயந்த சுபாவத்துடனும் இயல்பாக நடித்திருக்கிறார். ஊரார் முன்னிலையில் வீரண்ணாவின் முகத்தை தோலுரித்துக் காட்டி கிஷோருடன் அவர் கிளம்பும் காட்சி கதைக்கு வலு சேர்க்கும் ஒன்று. வயதான காலத்தில் புதிய நபர்கள் யார் வந்தாலும் அது தன் மகன்தானோ என்று நினைத்து பரிதவிக்கும் தாயின் கேரக்டரில் கொஞ்சம் பரிதாபத்தை உணர்த்தியிருக்கிறார்.
வீரண்ணாவின் தந்தையாக வரும் நம்ம ராகுல் தாத்தாவும், அவரது மனைவியாக வருபவரும் யதார்த்தம் கலந்த, ஒரு சாமான்ய பெற்றோரின் ஆதங்கத்தை மிகச் சரியாக வெளிப்படுத்தி உள்ளனர். 
நீதிபதியாக, விசாரணை கமிஷன் அதிகாரியாக நடிப்பில் வரும் அஜய் ரத்னம், காவல் துறையினரை சாட்டையடி வார்த்தைகளால் விளாசும் காட்சிகளும், விசாரணையை நேர்மையாக நடத்தும் விதமும் நீதித் துறையின் மீதான மதிப்பை உயர்த்தவே செய்கின்றன.
தவிர, இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரிகளாக, காவலர்களாக நடித்துள்ள அனைவரும் எந்த இடத்திலும் இது ஒரு படம் என நாம் நினைத்துவிடாதபடி, வலம் வருகின்றனர். அதுதான் இந்தக் கதையின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. 
படம் முழுவதும் பிளாஸ்பேக் காட்சிகளாக கதை விரிந்தாலும் எடிட்டர் சுரேஷ் அர்ஸின் தெளிந்த நீரோடை போன்ற படத் தொகுப்பு குழப்பமில்லாமல் படத்துடன் ஒன்ற நமக்கு உதவுகிறது.
சுற்றுப் பக்கம் அனைத்தும் கருவேல மரங்கள் அடங்கிய ஒரு கிராமத்தை எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. அந்த கிராமும் அது சார்ந்த மலைப்பகுதியும் ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷின் கைவண்ணத்தில் நம்மையும் களத்தூர் கிராமத்துவாசியாகவே மாற்றி விடுகிறது.
இந்த மொத்தப் படத்திற்கும் தனது பின்னணி இசையால் உயிரூட்டியுள்ளார் இசைஞானி இளையராஜா.. படம் துவங்கியது முதல் வேறெந்த சிந்தனையும் இல்லாமல் படம் முடியும்வரை நாமும் கதை மாந்தர்களுடன் பயணிப்பதற்கு திரைக்கதையுடன் சேர்த்து பின்னணி இசையும் பக்கபலமாக இருப்பதை மறுக்க முடியாது.
இந்தப் படத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன குறைகள் தென்பட்டாலும்கூட, நல்ல சினிமாவில் தேடித் தேடி குறைகள் கண்டுபிடிப்பது சரியான விஷயம் இல்லை என்பது படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது உங்களுக்கும் புரியும்.
மொத்தத்தில் இந்த களத்தூர் கிராமம் ரசிகர்களை, இரண்டு மணி நேரம் அப்படியே முற்றிலும் மாறுபட்ட ஒரு  உலகத்திற்கு இந்தப் படம் அழைத்து செல்கிறது.. 
தனது முதல் படத்திலேயே அழுத்தமான  ஒரு உண்மை சம்பவத்தை கையிலெடுத்ததுடன் அதை கொஞ்சம்கூட அலுப்பு தட்டாமல் படமாக்கிய இயக்குநர் சரண் அத்வைதனை, அறிமுக இயக்குநர் என்று சொன்னால் நம்புவது கடினம்தான். தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையான இன்னொரு இயக்குநர் கிடைத்துவிட்டார் என தாரளமாக சொல்லலாம்.
நல்ல சினிமா வரவில்லை என குறைபட்டுக் கொள்பவர்கள் களத்தூர் கிராமம் பார்த்துவிட்டு கை தட்டிக் கொள்ளலாம்.
களத்தூர் கிராமம் – ஒரு வாழ்வியல் பதிவு

0 comments: