காதல் கசக்குதய்யா - சினிமா விமர்சனம்

13-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எட்செட்ரா எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் துருவா, வெண்பா, சார்லி, மறைந்த நடிகை கல்பனா, லிங்கா, ஜெயகணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். துருவா, இதற்கு முன் ‘திலகர்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
வெண்பா ‘கற்றது தமிழ்’ படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு   குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘அதே கண்கள்’  மற்றும் ‘சேதுபதி’ படத்தில் மூர்த்தியாக நடித்த லிங்கா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்திற்கு இசையமைத்த தரண் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். புதுமுக இயக்குநரான துவாரக் ராஜா இயக்கியுள்ளார்.
இதுவரையிலும் சொல்லப்படாத ஒரு காதலை வேறொரு கோணத்தில் சொல்லியிருக்கிறார்கள்.


உயரம் அதிகமான ஒரு இளைஞன் உயரம் குறைவான ஒரு காதலியை நினைத்துக் கூட பார்க்க மாட்டான். ஆனால் இந்தப் படத்தின் நாயகனுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கிறது. அதோடு அந்த காதலிக்கும், அவனுக்குமான வயது வித்தியாசம் 8. இதனாலேயே ஹீரோ காதலை புறந்தள்ளுகிறார். ஆனால் காதலி விடாப்பிடியாக தன் காதலை வற்புறுத்த.. முடிவில் என்னாகிறது என்பதுதான் இந்தக் ‘காதல் கசக்குதய்யா’ படத்தின் கதை.
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ஹீரோ. இவரது அப்பாவும், அம்மாவும் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். அந்த விபத்தில் அப்பா இறந்துவிட அம்மா மட்டும் உயிர் தப்புகிறார். உயிர் மட்டுமே. இப்போதும் மருத்துவமனையில் கோமாவில் இருக்கிறார். விபத்து என்பதால் இவருக்குண்டான அனைத்து மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்றிருக்கிறது.
பகலில் வேலைக்குச் செல்லும் ஹீரோ இரவில் தாயைப் பார்க்க வருகிறார். என்றாவது ஒரு நாள் தன் தாய் கண் முழிப்பாள் என்று கனவு காண்கிறார். தாய் மாமனோ இந்தக் கொடுமையை காணச் சகிக்காமல் பேசாமல் கருணைக் கொலை செய்துவிடலாம் என்கிறார். ஆனால் ஹீரோ இதனை ஏற்க மறுக்கிறார்.
இந்த நிலையில் அரசுப் பணியில் உயரதிகாரியாக வேலை செய்யும் சார்லியின் ஒரே மகளான ஹீரோயின் வெண்பா, பள்ளிக்கூடம் செல்லும் வழியில் ஹீரோவை பார்க்கிறார். ஹீரோ தனது மன அழுத்த்த்தைப் போக்கிக் கொள்ள செயின் ஸ்மோக்கராக இருக்கிறார். உடன் இரண்டு நண்பர்களும் இருக்கிறார்கள்.
ஏதோ ஒன்று.. ஹீரோவை ஹீரோயினுக்கு பிடித்துவிடுகிறது. அவளே தேடிப் போய் ‘ஐ லவ் யூ’ சொல்கிறாள். ஹீரோவுக்கு அதிர்ச்சியாகிறது. தன்னைவிட உயரம் குறைவு. கூடுதலாக 8 வயது குறைவு. அதுவும் ப்ளஸ் டூ மாணவி. எப்படி காதலிக்க முடியும் என்று நினைத்து காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்.
ஆனாலும் ஹீரோயின் அசரவில்லை. ஹீரோ பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்து காதலில் வெற்றிக் கொடி நாட்டிவிடுகிறாள். இந்த நேரம் பார்த்து ஹீரோயினை ஒன் சைடாக லவ்விக் கொண்டிருந்த வேறொரு பள்ளி மாணவர்கள் இதனை சார்லியிடம் போட்டுக் கொடுக்க சார்லி காதலைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறார்.
காதல் கூடி வந்த வேளையில் ஏற்பட்ட இந்தப் பிரிவால் ஹீரோ மனமுடைந்து போகிறார். இன்னொரு பக்கம் அவரது அம்மாவின் நிலைமை.. ஹீரோயினோ மணந்தால் மகாதேவன் என்று உறுதியாய் இருக்கிறார். இறுதியில் என்னாகிறது என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.
துருவாவுக்கு வயதுக்கேற்ற கேரக்டர். காதலை ஏற்க சட்டென மறுக்கும் புத்தியும், யோசிக்கும் அளவுக்கு அறிவும் உள்ளவராக இருக்கிறார். அவரது அம்மா மீதான அவரது பாசத்தைக் காட்டும் சில காட்சிகளில் உளமாற நடித்திருக்கிறார்.
சிறுக சிறுக அந்தக் காதல் வலையில் அவர் சிக்கும் காட்சிகள் ரசனையானவை. இயக்குநரின் இயக்கத் திறமையாலும், திரைக்கதையாலும் ஏற்க முடியாத ஒரு விஷயத்தைக்கூட ஏற்க வைத்திருக்கிறார்கள்.
அவருடைய தாயாரை திரும்பவும் நல்ல நிலைமையில் பார்த்தவுடன் அவர் காட்டும் நடிப்பும், காதலிக்காக படத்தின் பிற்பாதியில் அவர் படும்பாடும் குறைவில்லாத நடிப்பு என்றே சொல்லலாம்.
இவருடைய தாயாராக நடித்திருக்கும் மறைந்த நடிகை கல்பனாவின் அந்த 10 நிமிட நடிப்பே சிறப்பு. ஆனாலும் கோமாவில் இருந்து கண் முழித்தவர் அடுத்த நிமிடமே இது போல் சரளமாக பேசுவார். நடப்பார் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லியா இயக்குநரே..!?
படத்தின் மிகப் பெரிய பலம் ஹீரோயின்  வெண்பா. பள்ளிப் பருவ கேரக்டருக்கு மிக பொருத்தமான முகவெட்டு. அழகான தோற்றம். மிக அருமையாகவும் நடித்திருக்கிறார். அந்த வயதுக்கே உரித்தான துள்ளல்.. சிடுசிடுப்பு.. கோபம்.. எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார்.
வீட்டில் எந்நேரமும் படிப்பு.. படிப்பு.. என்று அனத்திக் கொண்டேயிருப்பதால் எங்காவது ஒரு கிளை கிடைத்தால் அதைப் பற்றிக் கொண்டு தாவிவிடலாம் என்று தான் நினைத்ததை கடைசியாகத்தான் சொல்கிறார். இது பெற்றோர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டிய விஷயம்.
சார்லி தான் ஒரு பண்பட்ட நடிகர் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். மகளை மீட்டெடுக்கும் காட்சியிலும், போலீஸ் ஸ்டேஷன் காட்சியிலும் மனிதர் அசர வைத்திருக்கிறார் நடிப்பில்..! வெல்டன் ஸார்..!
ஹீரோவின் நண்பர்களாக நடித்தவர்களும், ஹீரோயினின் நண்பியாக நடித்தவரும்கூட சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.
ஹீரோ டென்ஷனாக இருக்கிறார் என்பதற்காக இத்தனை தூரம் சிகரெட்டுகளை பாக்கெட், பாக்கெட்டாக ஊதித் தள்ளுபவராக காட்டியிருக்க வேண்டாம். குறைத்திருக்கலாம் இயக்குநரே..!
பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. சி.சரண் குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். காட்சிகளை மிக எளிமையாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு கேரக்டர்கூட சோடை போகாத அளவுக்கு இயக்கம் சிறப்பாக இருக்கிறது. சின்ன பட்ஜெட்.. சின்ன நடிகர்கள் என்ற பிரச்சினைக்குள் இந்தப் படமும் சிக்கிக் கொண்டு ரசிக்கும்படியான திரைக்கதையும் இல்லாமல் இருப்பதால் படம் பேசப்படாமல் போய்விட்டது இவர்களது துரதிருஷ்டம்..!
ஆனால் காதலை மையப்படுத்திய படங்களில் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க படமாகும்..!

0 comments: