அஞ்சுக்கு ஒண்ணு - சினிமா விமர்சனம்

24-11-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இது.
இந்தப் படத்தில் ஜெரால்டு, ராஜசேகர், அமர், நசீர், சித்தார்த், உமாஸ்ரீ, மேக்னா  மற்றும் சிங்கம் புலி, முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா, காளையப்பன், சிவநாரயணமூர்த்தி  மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – நந்து, படத் தொகுப்பு – வி.பழனிவேல், இசை – சாகித்யா.ஆர், பாடல்கள்  – கானா பாலா, தொல்காப்பியன், கவிக்குமார், நடனம் – தீனா, காதர், அருண்குமார், ஸ்டில்ஸ் – அருண், டிசைன்ஸ் – சிவா, தயாரிப்பு மேற்பார்வை – ரஞ்சித், கே.ஆர்.பழனியப்பன்,  மக்கள் தொடர்பு-எம்.பி.ஆனந்த், இணை  தயாரிப்பு-S.S.ராஜ், இயக்கம் – ஆர்.வி.யார், பேனர்  –  பேரண்ட்ஸ் பிக்சர்ஸ், தயாரிப்பு  – எவர்கிரின் எஸ். சண்முகம்.

கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதை இது. தாய், தந்தை இல்லாது அனாதையாகிப் போய் சிறு வயதிலேயே நண்பர்களுடன் சேர்ந்து வளர்ந்தே வருகிறார்கள் ஐவரும்.
சென்னையில் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் கட்டிட வேலை செய்து வருகிறார்கள். பகலில் வேலையும் இரவில் குடியும், கூத்துமாக இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக ஒரே காண்ட்ராக்டரிடம் பணியாற்றி வருவதால் இவர்களை கட்டிடம் கட்டும் இடத்திலேயே தங்கவும் அனுமதித்திருக்கிறார்கள்.
அதே இடத்தில் அதே வேலைக்கு வரும் உமாஸ்ரீ மீது சித்தார்த்துக்கு காதல். குடித்தாலும், பெண்களிடத்தில் போனாலும் ஐந்து பேரும் ஒன்று போலவே வரிசையாக போய்விட்டு வரும் நிலையில், ஒரேயொருவன் மட்டும் தனியே கல்யாணம் செய்து கொள்ளப் போவது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை.
சித்தார்த்தை கண்டிக்கிறார்கள். அடிதடியில் ஈடுபடுகிறார்கள். இதனையும் மீறி சித்தார்த்தும், உமாஸ்ரீயும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதன் பின்பும் நண்பர்கள் தம்பதிகள் மீது கோபமாகவே இருக்க.. நண்பர்களை எந்த வகையிலும் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கிறான் சித்தார்த். உமாஸ்ரீயும் தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களை நல்வழிப்படுத்த முயல்கிறாள். கடைசியில் அவளுக்கே அது ஆபத்தாக முடிகிறது.
ஆனாலும் விடாமல் போராடி தங்களுடைய நல்ல மனதை அவர்களிடத்தில் காட்டி அவர்களையும் நண்பர்களாக்குகிறார்கள் தம்பதிகள். இடையில் காண்ட்ராக்டரின் மகளுக்கும் இன்னொரு கூட்டாளியான அமருக்கும் இடையில் காதல் மலர்கிறது. இந்த நேரத்தில் இன்னொரு கூட்டாளிக்கு உடல் நலமில்லாமல் போக.. மருத்துவரிடம் செல்லக்கூட காசில்லாமல் தவிக்கிறார்கள்.
மழை என்னும் பேராபத்தில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் கடைசியாக சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் போக.. தன்னால் இவர்கள் படும் கஷ்டத்தை தாங்காமல் அந்த நோயாளி நண்பன் எடுக்கும் முடிவு இவர்களை அதிர்ச்சியாக்குகிறது.
அதோடு காண்ட்ராக்டர் தனது மகளின் காதலைப் பற்றி அறிந்து அதை தடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறார். கடைசியில் என்னவாகிறது என்பதுதான் படமே..!
ஒரு அப்ரண்டிஷிப் இயக்குநர் இயக்கியிருந்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருக்கிறது படம். அழுத்தமான காட்சிகளோ, பார்வையாளனை கட்டிப் போட வைக்கும் இயக்கமோ இல்லாமல்.. எல்லாவற்றிலும் ஏனோ, தானோவென்று இருக்கிறது. திரைக்கதையில் ஒரு சுவாரசியமும் இல்லாத காரணத்தினால் படம் எந்தவிதத்திலும் கவரவில்லை.
இந்த ஐந்து பேரும் இல்லாவிட்டால் ஏதோ அந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியே திவாலாகிவிடும் போல வசனம் வைத்திருப்பதும், காட்சிகளை அமைத்திருப்பதும் ஏன் என்று தெரியவில்லை. சாதாரண செங்கல்லை அடுக்கும், வெள்ளையடிக்கும், பெயிண்ட் அடிக்கும், சுண்ணாம்பு கலக்கும் தொழிலாளர்களை நம்பியா கட்டுமான நிறுவனங்கள் வாழ்கின்றன. இவர்கள் இல்லாவிட்டால் இன்னொரு குழு. திரைக்கதையில் இருக்கும் மகா சொதப்பல் இதுதான்..!
நடிகர்களைப் பொறுத்தவரையில் உமாஸ்ரீயும், சித்தார்த்தும், நண்பர்களும் கதைக்கேற்றவாறு.. அவர்களுக்கேற்ற கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
உமாஸ்ரீயின் காதல் வளரும் பாடல் காட்சியும், தீபாவளி பாடல் காட்சியும் மட்டுமே படத்திற்கு ஒரேயொரு ஆறுதல். இன்னொரு நாயகியான மேக்னாவின் காதல் எதனால் உருவானது.. எப்படி உருவானது என்பதே தெரியாமல் பார்த்தவுடன் பட்டென்று உருவாகி கடைசியில் கண்ணைக் கசக்கும்விதமாக கரைகிறது..!
இந்த நண்பர்கள்தான் இப்படியென்றால் மேஸ்திரியான சிங்கம்புலியின் கேரக்டர் ஸ்கெட்ச்சும்கூட அநியாயமானது. வீட்டில் மனைவியிருக்க வேறு பெண்களை கூச்சமே இல்லாமல் நாடுவதும்.. அவள் கணவனிடமே அதைப் பற்றிப் பேசுவதுமாக திரைக்கதை செல்வது.. தமிழ்ச் சினிமாவுலகம் எதார்த்தம் என்கிற பெயரில் எங்கே போகிறது என்று யோசிக்க வைக்கிறது.
இது கட்டிட தொழிலாளர்களிடத்தில் மட்டுமல்ல.. இவர்களையும் தாண்டி மற்ற துறைகளில் இருக்கும் அடிமட்ட தொழிலாளர்களிடமும் இருக்கும் பிரச்சினைதான். அன்றைக்கு சம்பாதிப்போம். அதையே கொண்டாடி அழிப்போம் என்றே இவர்களில் பெரும்பாலோர் அவர்களது வாழ்க்கையை அவர்களே அழித்துக் கொள்கிறார்கள்.
இத்தனை வயதாகியும் திருமணம், குழந்தை என்ற எண்ணமே இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணவோட்டத்தை பதிவு செய்ய முயன்ற இயக்குநர் அதில் தோல்வியடைந்திருக்கிறார். இப்படியொரு எண்ணமே இல்லாமல், குடி கூத்தாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் சமூகத்திற்குக் கெட்டவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கேற்ற கண்டனத்தை இந்தப் படம் பதிவு செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இன்னமும் 50 சதவிகிதம் உழைத்திருக்க வேண்டியிருக்க படம் இது..!

0 comments: