சதுரம்-2 - சினிமா விமர்சனம்

19-09-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில வகையான திரைப்படங்கள் தமிழில் எடுக்கப்படவே கூடாது என்று ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தன. அது அதீத வன்முறை எனப்படும் சித்ரவதைக் காட்சிகள் அடங்கிய திரைப்படங்கள்.
இவைகளெல்லாம் ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும், ஏன் தெலுங்கில்கூட எடுத்து முடிக்கப்பட்டும் தமிழில் அதிகமாக வரவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில படங்கலில் சில காட்சிகளில் மட்டுமே காட்டப்படும். அவைகள்கூட ‘ஏ’ சர்டிபிகேட்டுடன் அதிகம் பார்வையாளர்களைக் கவராமலேயே போய்ச் சேர்ந்துவிடும்.
அரிவாள் வெட்டு, ரத்தக் களறியைவிடவும் இது போன்ற படங்கள் அதிகளவில் மனதைப் பாதிக்கும் வாய்ப்புண்டு என்பதாலும், தமிழ்ச் சூழலுக்கு இவை அன்னியமானவை என்று புறந்தள்ளப்பட்டிருந்தன.
2014-ம் ஆண்டு ‘SAW’ என்கிற பெயரில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் போட்ட முதலீட்டைவிடவும் 100 மடங்கு லாபம் சம்பாதித்து ஹாலிவுட்டையே அதிர வைத்தது. 5 அல்லது 10 மடங்கு என்றால்கூட பரவாயில்லை. 100 மடங்கு எனில் எப்படி..?
எப்படி கிடைத்தது இந்த வெற்றி..? புதுமையான கதை.. சுவையான திரைக்கதை.. அழுத்தமான இயக்கம்.. அற்புதமான நடிப்பு.. இதுவரையிலும் பார்த்திராத ஒரு திரைப்படம் என்று புதுமை வடிவத்தில் வந்திருந்த அந்த படத்தின் தொடர்ச்சியான சீரியஸ் வந்துவிட்டன. இருந்தாலும் முதல் பகுதி இப்போதும் தனித்தே நிற்கிறது.
அந்த ஹாலிவுட் படத்தின் கதையை முறைப்படி எழுதி வாங்கி.. அதில் தமிழுக்கேற்றாற்போல் சிற்சில மாற்றங்களை செய்து ‘சதுரம்-2’ என்கிற பெயரில் உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.

2014 ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் நெல்லூர் அருகே விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே இறந்து போகிறார்கள். இப்படித்தான் படம் துவங்குகிறது.
ஆனால் அடுத்தக் காட்சியிலேயே, இரும்பு ஷட்டரால் அடைக்கப்பட்ட ஒரு சதுர வடிவிலான அறையில் இரண்டு பேர் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் கண் விழிக்கிறார்கள். இருவருக்கும் ஒருவரையொருவர் அறிமுகமே இல்லை. யார், எதற்காக தங்களை இங்கே கடத்தி வந்து கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. அவர்கள் இருவருக்கும் நடுவில் வித்தியாசமான ஒரு கொலைக் கருவியை தலையில் மாட்டிய நிலையில் ஒரு பிணம் கிடக்கிறது.
முதல் லின்க்காக அவர்கள் இருவரின் பேண்ட் பாக்கெட்டிலும் கவருக்குள் ஆடியோ கேஸட் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. சற்றுத் தொலைவில் டேப் ரிக்கார்டரும் இருக்க மாட்டிக் கொண்டவர்களில் ஒருவரான ரோஹித் அதை எடுத்து அதில் கேஸட்டை போட்டுக் கேட்கிறார்.
“நீங்கள் இருவருமே தப்பு செய்தவர்கள். இந்த உலகத்தில் வாழவே தகுதியற்றவர்கள். இங்கேயிருந்து தப்பிக்க சில வழிகள் உண்டு. நீங்கள் ஒருவரையொருவர் கொலை செய்தால் தப்பிக்கலாம். இல்லையெனில் தப்பிக்கிறதுக்கு இதிலேயே க்ளூ உண்டு. முடிந்தால் சாயந்தரம் 6 மணிக்குள்ளாக தப்பித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் நான் உங்களை கொலை செய்வேன்..” என்கிறது குரல்.
இருவருக்குமே இதே எச்சரிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க.. இருவரும் சற்று யதார்த்த நிலைமைக்கு வந்து யோசிக்கிறார்கள். தாங்கள் யார்..? தங்களுக்குள் ஏதாவது தொடர்பு முன்பு இருக்கிறதா என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள்..
உண்மையில் ரோஹித் ஒரு புகைப்படக் கலைஞன். அதிலும் வில்லங்கமான புகைப்படங்களை எடுத்து அதில் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறிக்கும் ஒரு வித்தியாசமான புகைப்படக் கலைஞன். யோஜ் ஜெபி ஒரு மருத்துவர். மனைவி, மகள் என்று குடும்பம் இருந்தாலும், தனது கிளினிக்கில் பணியாற்றும் சக பெண் மருத்துவரான சனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் பிரதீப்பும், சுஜா வாருணியும் அன்னியோன்யமான தம்பதிகள். சுஜா இரட்டைக் குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறார். பிரதீப் தான் வேலை செய்யும் நிறுவனத்தை லாபம் ஈட்ட வைத்தமைக்காக பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கப் பெற்று பெருமைக்குரியவராக இருக்கிறார்.
ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கேன்சர் என்கிறார்கள். இன்னும் எத்தனை நாள் அவர் உயிருடன் இருப்பார் என்பதே தெரியாத நிலையில் வாழ்க்கையை ஓட்டுகிறார். இந்த நேரத்தில் டெல்லிக்கு அலுவலக வேலையாக கிளம்புகிறார் பிரதீப். கூடவே சுஜாவையும் அழைத்துக் கொண்டு செல்கிறார். இவர்கள் சென்ற விமானம்தான் திடீரென்று விபத்துக்குள்ளாகி அந்த விபத்தில் சுஜா இறந்து போக.. தனிக்கட்டையாகிறார் பிரதீப்.
இப்போது இந்த பிரதீப்புக்கும், டாக்டர் யோக் ஜெபிக்கும், ரோஹித்துக்கும் என்ன தொடர்பு..? கடைசியாக அந்த இடத்தில் இருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா..? யார் அவர்களை இப்படி கட்டிப் போட்டு வைத்தது என்பதெல்லாம் சுவையான திரில்லர் கலந்த திரைக்கதையின் முடிவு.
ஒரு திரில்லர் படம் எப்படி இருக்க வேண்டுமோ அது அப்படியே இந்தப் படத்திலும் இருக்கிறது. முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சிவரையிலும் செமத்தியான விறுவிறுப்பு.. திரைக்கதையில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கப்படும்போதும் சுவாரஸ்யங்கள் கூடிக் கொண்டே போவதால் படத்தின் மீதான ஈர்ப்பு பெரிதும் கூடுகிறது.
சுவர்க் கடிகாரம்.. உளவு கேமிரா.. சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கோடாரி, துப்பாக்கி, பர்ஸில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம்.. இருவரில் ஒருவர் அடையாளம் தெரிய ஆரம்பித்து இருவருக்குள்ளும் புகைச்சல் ஆரம்பிக்கும் சமயம்.. வேறொரு கோணத்தில் படம் நகர்வது.. என்று பல்வேறு வகையான சஸ்பென்ஸ், திரில்லர்களை திரைக்கதையில் இணைத்து நம்மை பயமுறுத்தியிருக்கிறார் இயக்குநர்.
‘சா‘ படத்தின் தொடர்ச்சிகளின் வெற்றிக்குக் காரணமே விதம்விதமான சாவு கருவிகளை படத்தில் காட்டியிருப்பதுதான். இதிலும் ஒரு திருட்டு வழக்கறிஞரை அது போன்ற ஒரு கருவியினால்தான் கொலை செய்கிறார்கள். இதுவும் ஒரிஜினல் ‘சா’ படத்தில் இருப்பதுதான்.
“ஒரு நிமிடத்திற்குள் நம்பரைத் தட்டி கழட்டவில்லையெனில் துப்பாக்கி வெடித்து மூளை சிதறி பரிதாபமாய் சாவாய். நீயே நம்பரை தேடிக் கொள். அருகில் இருக்கும் பெட்டிக்குள் இருக்கும் 20 ரூபாய் நோட்டில் இந்தக் கருவியை செயலிழக்கச் செய்யும் பாஸ்வேர்டு இருக்கிறது. முடிந்தால் தப்பித்துக் கொள்…” என்கிறான் கொலைகாரன். அந்த நிமிட பதைபதைப்புடன் பெட்டியைத் திறந்தால் உள்ளே ஏகப்பட்ட 1000 ரூபாய் பண நோட்டுக்கள். அதில் அந்த 20 ரூபாய் நோட்டை தேடியெடுப்பதற்குள்ளாக நேரமானதால் ஆள் காலி.. ஆனாலும் அந்த நேர பரபரப்பையும், டென்ஷனையும் கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.
“வாழ்க்கையை நாம தேர்ந்தெடுக்கலாம். நம்மளையே தேர்ந்தெடுக்குற ஒரு விஷயம் மரணம் மட்டும்தான்..”, “வாழத் தகுதியில்லாதவங்களுக்கு மரணம்தான் பரிசு…”, “வாழணும்னு ஆசைப்படுறவனால வாழ முடியல; ஆனா கிடைச்ச வாழ்க்கையை ஒழுங்கா வாழலைன்னா மரணம் உறுதி…” – இது மாதிரியான வசனங்களை கட்டைக் குரலில் பேசி திகிலைக் கூட்டியிருக்கிறார்கள். படத்தின் திரைக்கதைக்குப் பொருத்தமான வசனங்கள்தான்..!
‘பில்லா’ படத்தில் வில்லனாக நடித்து பயமுறுத்திய யோக் ஜெபிதான் இந்தப் படத்தின் நாயகனை போல வாழ்ந்திருக்கிறார். அடக்கமான கணவர்.. யோக்கியமான மருத்துவர்.. மகள் மீது அக்கறை கொண்ட அப்பா.. அதே சமயம் மனைவியையும் மீறி கேர்ள் பிரண்டை நேசிக்கும் குணம்.. என்று பலவிதங்களிலும் தனது நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.
அந்த சதுர அறைக்குள் முதலில் “கூல் டவுன்…” என்று சொல்லி நிதானமாக யோசிக்கச் சொல்கிறார். பின்பு இவரே தனது குடும்பத்தினரை கடத்தி வைத்திருக்கிறான் என்பது தெரிந்தவுடன் எல்லாவற்றையும் மறந்து தனது காலை தானே கட் செய்துவிட்டு தப்பிக்க நினைக்கிறார். அந்த நேரத்து நடிப்பும், துடிப்பும் படத்தை தாங்கியிருக்கிறது.
இவருக்கு ஈக்குவலாக நடித்திருக்கும் ரோஹித்தும் அப்படியே.. அவருடைய பாகத்தில் பதட்டத்தையும், பரபரப்பையும் கூடுதலாகவே கொடுத்திருக்கிறார். அதே சமயம் அடக்கமான சி.இ.ஓ. போன்று இருக்கும் பிரதீப் கடைசியில் பொங்கியெழுந்து சாமியாடும்போது நம்பவே முடியவில்லை.
யோக் ஜெபியின் மனைவி, மகள், சனம் பிரசாத், காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் டிவி நடிகர்கள் என்று பலரும் தங்களது கேரக்டர்களில் கச்சிதமாகத்தான் நடித்திருக்கிறார்கள்.
ஜி.சதிஷீன் ஒளிப்பதிவும், கிரீஷின் பின்னணி இசை இயக்குநருக்கு பெரிதும் ஒத்துழைத்திருக்கின்றன. பயத்தைக் கூட்டிக் காண்பித்ததில் இருவருக்கும் பெரும் பங்குண்டு. இதேபோல் காட்சிகளை நறுக்குத் தெரித்தாற்போல் கிளைமாக்ஸில் காட்டி அசத்தியிருக்கும் படத் தொகுப்பாளர் ராஜா சேதுபதிக்கும் நமது பாராட்டுக்கள்.
ஒரு சிறிய கதை.. ஆனால் சுவாரஸ்யமான திரைக்கதை.. பாடல்கள் இல்லை. ஆடல்கள் இல்லை.. சண்டை காட்சிகள் இல்லை. ஆனால் படத்தை பயத்துடன் கடைசிவரையிலும் உட்கார வைத்து பயத்துடனேயே பார்க்க வைத்துவிட்டார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.
குழந்தைகள் மட்டும் பார்க்கவே கூடாத படம். வயதுக்கு வந்தவர்கள் துணையுடன் பார்க்கலாம்.. ஆனால் படம் முடிந்தவுடன் அந்த கொலை வெறி மைண்ட்டை அங்கேயே கழட்டிவைத்துவிட்டு வீடு திரும்புவது அவருக்கும் நல்லது.. அவர்தம் குடும்பத்திற்கும் நல்லது.

2 comments:

Unknown said...

Anna yog japee is not a villain in billa 2

Unknown said...

Anna yog japee is not a villain in billa 2