திறந்திடு சீசே - சினிமா விமர்சனம்

23-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தின் தயாரிப்பாளரை போன்ற தைரியசாலி மற்றும் எதையாவது புதிதாகச் செய்ய நினைக்கும் சினிமா மீதான ஆர்வலர்களை பார்ப்பது அரிது. 2013-ம் ஆண்டு வெளிவந்த ‘மதுபானக்கடை’ படத்தின் உரிமையாளரும் இதே ரகம்தான்..!
எடுக்கப் போவது பக்கா ‘ஏ’ படம். நிச்சயம் வரிவிலக்குக் கிடைக்காது. தமிழக அரசு வழங்கும் தயாரிப்பாளர்களுக்கான சலுகையும் கிடைக்காது என்பது நன்கு தெரிந்தும் துணிச்சலாக ஒரு மாறுபட்ட கோணத்தில் இப்படத்தைக் கொடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.

வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் சமத்துவமான குடிமக்கள் என்று அறியப்படும் பார் என்ற உயர்குடி மக்கள் மதுவருந்தும் மதுக்கூடம் அது. இரவு நேரம். மது அருந்த வருகிறார் சார்மி என்ற இளம் பெண்.
அவளைப் பார்த்தவுடனேயே சபலப்படுகிறார்கள் பாரில் ஊற்றிக் கொடுக்கும் நாராயணனும், சப்ளையர் வீரவனும். இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இலவச கட்டிங்குகளைக்கூட அவளுக்குக் கொடுக்கிறார்கள்.
நேரம் ஓடுகிறது. சார்மி மூக்குமுட்ட குடித்துவிட்டு நிதானம் இழந்த நிலையில் இருக்கிறாள். கூட்டம் கலைகிறது. அனைவரும் சென்றுவிட்டார்கள் என்று நினைத்திருந்த நேரத்தில் நாராயணன் தற்செயலாக பாத்ரூமுக்கு செல்ல அங்கே கீழே விழுந்து கிடக்கிறாள் சார்மி.
வீரவனின் துணையோடு அவளைத் தூக்கி வந்து ஹாலில் கிடத்தி தண்ணீர் ஊற்றி எழுப்புகிறார்கள். எழுந்த சார்மி தன் உடலில் ஏதோவொரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தவள் சில நொடிகளில் தான் பலாத்காரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறாள்.
அவர்கள் இருவரிடமும் அது பற்றி விசாரிக்க இருவருமே அலறுகிறார்கள். தாங்கள் இருவரும் அவள் மீது ஆசைப்பட்டது உண்மைதான் என்றாலும் இருவருமே அவளைத் தொடவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால் இதனை நம்ப மறுக்கிறாள் சார்மி.
நாராயணன் தனது ஆஸ்தான பெண் மருத்துவரை அழைக்க.. அவரும் வந்து சார்மியை செக் செய்துவிட்டு அவள் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள் என்று உறுதியாகச் சொல்கிறார். இதைக் கேட்டு ஆவேசப்படும் சார்மி, இந்த இருவரில் ஒருவர்தான் தன்னைக் கற்பழித்த கயவன். அது யாரென்று தெரியாமல் தான் இங்கேயிருந்து வெளியேறப் போவதில்லை என்று சொல்லி பாரினுள் அமர்ந்து கொள்ள அந்த அர்த்த ராத்திரியில் அந்த பாரில் மட்டும் சுவாரஸ்யம் தட்டுகிறது.
அந்த நள்ளிரவில் வீடு திரும்பாத வீரவனை பார்க்க அவனது மனைவி பாருக்குள் வர மோதல் தெரிக்கிறது. விஷயம் அவளுக்கும் தெரிந்து வாக்குவாதம் ஏற்படுகிறது. கோபப்படும் சார்மி வீரவனின் மனைவியை சுட்டுக் கொன்றுவிட.. அலறுகிறார்கள் அனைவரும்..
சார்மியை கற்பழித்தது யார் என்கிற கேள்விக்கான விடையை தியேட்டரில் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்வதுதான் நியாயமானது.
படம் முழுவதும் இருட்டிலேயே எடுக்கப்பட்டிருப்பது படத்தின் மிகப் பெரிய பலவீனம். இந்த அளவுக்கு ஒளியமைப்பை தெளிவாக்கிக் காட்டும் திரையரங்குகள் தமிழ்நாட்டில் மிக குறைவானவை என்பதை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் ஏன் மறந்தார்கள் என்று தெரியவில்லை. படத்தில் பேசப்படும் வசனங்களும் சுவாரஸ்யமாக பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைக்கவும் செய்திருக்கின்றன.
வீரவன் ஸ்டாலின் புதுமுகம் என்றாலும் அது தெரியாத அளவுக்கே நடித்திருக்கிறார். குடித்துவிட்டு பேசும் வீரவனும், குடிக்காமல் பேசும் வீரவனும் வேறு வேறு நபர்கள் என்பதை தனது பாடி லாங்குவேஜ் மூலமாகக் காட்டியிருக்கிறார். இவரது வாழ்க்கைக் கதை இன்னொரு பாடம். அதையும் நறுக்கென்று காட்டியிருப்பது அழகு.
நாராயணன் படத்திற்குப் படம் தன்னை மெருகேற்றிக் கொண்டே வருகிறார்.  கொஞ்சம் ஏமாளித்தனம்.. அதிகம் ஏமாற்றுத்தனம் இரண்டிற்குமான நடிப்பில் கவர்ந்திருக்கிறார்.
தன்ஷிகா அதிர்ச்சியடைத்தான் வைத்திருக்கிறார். இதுவரையிலான படங்களில் இல்லாத அளவுக்கான நடிப்பு இதில். நம்ப முடியவில்லை. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கே மிகப் பெரிய தைரியம் வேண்டும். அவளை ரேப் பண்ணுடா என்று நாராயணனைத் தூண்டிவிடும்போது பகீரென்றானது. ஆனால் அதனைத்தான் எத்தனை அழுத்தம், திருத்தமாக திரும்பத் திரும்ப உச்சரிக்கிறார் தன்ஷிகா. உங்க கேரியர்லேயே நடிப்புக்கு பெஸ்ட் இந்தப் படம்தான் மேடம்..
ஒரு காட்சியே வந்தாலும் வசன உச்சரிப்பாலேயே நகைச்சுவையை தெளித்திருக்கிறார் இயக்குநர் ராம்தாஸ். போலீஸார் எப்படித்தான் மாமூலையும், லஞ்சத்தையும் பிரித்து பிரித்து வாங்குகிறார்கள் என்பதை நகைச்சுவையான வசனங்களின் மூலம் அசத்தலாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மேலும் மற்றுமொரு நாயகியான அஞ்சனா கீர்த்தியும் தன்னுடைய வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
மதுபானக் கடைக்குள்ளேயே அதிகக் காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதால் ஒளிப்பதிவாளர் குளஞ்சி குமார் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறார். முதல் பாடல் கேட்பதற்கு இனிமையாகத்தான் இருந்தது. வாழ்த்துகள் கணேஷ் ராகவேந்திராவுக்கு..
இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய நிமேஷ் வர்ஷன்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லரை கடைசிவரையிலும் காப்பாற்றி இறுதியில் கிளைமாக்ஸில் வைத்திருக்கும் ஒரு உலக மகா டிவிஸ்ட் எதிர்பாராதது..  ஆனால் அவசியமானதும்கூட.. இப்படியும் செய்யலாமா என்றும் யோசிக்க வைக்கிறது.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்கிற கதையில் வரும் திறந்திடு சீசேம் என்கிற பாஸ்வேர்டை மையமாக வைத்து படத்திற்குத் தலைப்பை வைத்திருக்கிறார்கள்.
மனம் என்ற குரங்கை கட்டுப்படுத்த பாஸ்வேர்டு போன்ற கிளைமாக்ஸ் டிவிஸ்ட் மிக அவசியம்தான் என்பது படத்தை பார்த்த பின்பு தோன்றுகிறது. மதுபானக் கூடத்திற்குள்ளேயே மதுபான பிரியர்களை பார்க்க வைத்து அதே மதுபானத்தை மனம் வெறுக்கும் அளவுக்கு ஒரு கடைசி சிச்சுவேஷனுடன் எண்ட் கார்டு போடுவது படத்தின் கச்சிதமான கிளைமாக்ஸ்..!
இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்..!

0 comments: