கமரகட்டு - சினிமா விமர்சனம்

23-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு விஷயத்தில் இந்தப் படத்தின் இயக்குநர் ராம்கி ராமகிருஷ்ணனை பாராட்டியே தீர வேண்டும். இதுவரையிலும் 4 முறை இந்தப் படத்தின் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் படம் பேய்ப் பட வரிசையில் ஒன்று என்பதைச் சொல்லாமல் எஸ்கேப்பாகி கடைசியாக படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ள வைத்திருக்கிறார்.
திருவண்ணாமலை, சித்தர்கள், கமர்கட்டு, சிவ புராணம் என்றெல்லாம் நூல் விட்டுத் திரித்தவர் கடைசியில் தற்போதைய டிரெண்ட்படி பேய்ப் படமாக எடுத்திருக்கிறேன் என்பதை மட்டும் சொல்லாமல் எஸ்கேப்பாகியிருக்கிறார்.
எல்லா படங்களிலும் பெண் பேய்களையே காட்டிக் கொண்டிருக்கிறார்களே என்று வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இதில் இனிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
இரண்டு ஆண் பேய்கள், தங்களை பேய்களாகும் நிலைமைக்கு தள்ளியவர்களை எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒட்டு மொத்தக் கதை..!

பள்ளியில் பிளஸ்டூ படிக்கும் மாணவர்களான யுவனும், ஸ்ரீராமும் முறையே சக மாணவிகளான ரக்சா ராஜ் மற்றும் மனீஷா ஜித்தை சைட் அடித்தும், காதலித்தும் வருகிறார்கள். காதலிகளுக்கு இவர்களால் முடிந்தது கமர்கட்டும், பஜ்ஜியையும்தான் வாங்கித் தர முடிகிறது.
இறுதித் தேர்வில் காதலிகள் இருவரும் வெற்றி பெற.. காதலர்கள் படு தோல்வியடைகிறார்கள். ஆனாலும் தங்களது காதல் மட்டும் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
கல்லூரி வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தவுடன் காதலிகளின் போக்கில் பெரும் மாற்றம். வெறும் கமர்கட்டும், பஜ்ஜியையும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஏஸி கார், பர்கர் என்று ஸ்டைலிஷ் வாழ்க்கைக்கு அடிபணிகிறார்கள். உடன் படிக்கும் மாணவர்களிடத்தில் தங்களது காதலை டிரான்ஸ்பர் செய்து கொள்கிறார்கள்.
முந்தைய காதலர்கள் கடும்கோபம் கொண்டு காதலிகளிடம் நியாயம் கேட்க “பிச்சைக்காரனையெல்லாம் காதலிக்க முடியாது…” என்று சொல்லிவிட்டு போகிறார்கள். இவர்களது கோபப் பேச்சால் கவலைப்படும் முன்னாள் காதலர்கள் காதலிகளின் தாயிடம் சென்று முறையிடுகிறார்கள்.
இப்போதைய காதலர்களின் பூர்வீகத்தையும், செல்வாக்கையும் தெரிந்து கொண்ட காதலிகளின் தாய், தந்திரமாக இவர்களிடத்தில் கையொப்பம் பெற்றுக் கொண்டு அடியாட்களை வைத்து இருவரையும் கொலை செய்கிறாள். பிளஸ்டூவில் பெயிலானதால் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லி கேஸை இழுத்து மூடுகிறாள்.
மேலே போக வேண்டிய காதலர்களின் ஆவிகள் தங்களது சாவுக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் மேலுலகம் செல்ல விருப்பமில்லாமல் தங்களது காதலிகளின் உடலுக்குள் புகுந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்கிறார்கள். இவர்களது புதிய காதலர்களுடனான கல்யாணத்துக்கும் வேட்டு வைக்கிறார்கள்.
இவ்வளவையும் தாண்டி கடைசியாக ஆவிகளின் பரலோகத்தை அடைந்தார்களா..? காதலிகள் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் மிச்சம் மீதிக் கதை..!
காதல் எப்படி உருவானது என்றெல்லாம் திரைக்கதையில் நீட்டாமல், முழுக்காமல் கத்தரித்து இருந்தாலும் படம் அநியாயத்திற்கு நீளமானது. நிறைய கத்திரி போட்டிருக்கலாம். 25 நிமிடங்கள் கட் செய்தால் படம் நிச்சயம் கிரிப்பாக இருக்கும்..!
யுவன், ஸ்ரீராம் இருவரும் பள்ளி வயது மாணவர்களுக்கான தோற்றம்தான். அதற்கேற்ற நடிப்பையும் கொஞ்சம் காட்டியிருக்கிறார்கள். ஆனால் காதல் தோல்வியடைந்தவுடன் அடிக்கடி தலையைப் பிடித்துக் கொண்டு ‘ஐயோ’ என்று கதறுவதெல்லாம் டூ மச்சு..! ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணி வேலைக்குப் போய் அப்புறமா காதல், கல்யாணம்ன்னு ஆக வேண்டிய வயசுல காதலிக்காகவே பிளஸ்டூல பெயிலாயிட்டு வந்து நின்னா கேரக்டர் மேல எப்படி ஒரு ஈர்ப்பு வரும்..?
ஹீரோயின்களாக ரக்சா ராஜ், மனீஷா ஜித். இருவரும் பேயாக வரும் காட்சிகளிலெல்லாம் சிறப்பான நடிப்பைக் காட்டியிருக்கிறார்கள். அதென்னவோ அனைத்து நடிகைகளுமே பேய் கேரக்டர்களில் மட்டுமே 100 சதவிகிதம் நடிப்பைக் காட்டித் தொலைக்கிறார்கள். ஏதோ சாபம் போலிருக்கு..! மனிஷா ஜீத்தைவிட ரக்சா ராஜ் நல்ல அழகு.. நல்ல நடிப்பு.
அதற்காக பேய் பிடித்தவுடன் இருவரும் காட்டுகின்ற வெறித்தனமான நடிப்பைப் பார்த்தால் நமக்கு திக்திக்கென்றாகிறது. போதாக்குறைக்கு காதுக்குள்ளேயே போய் உட்கார்ந்து கொண்டு டிரம்ஸ் வாசிப்பது போல பின்னணி இசை.. தாங்க முடியலையே..? இரைச்சலை கொஞ்சம் குறைச்சிருக்கலாம்.
கிரேன் மனோகர், வாசு விக்ரம், பாலாசிங், சேத்தன் என்று அனுபவப்பட்ட நடிகர்கள் தங்களது அனுபவத்தை படத்தின் பிற்பாதியில் ஆங்காங்கே தெளித்திருப்பதால் படம் கொஞ்சமும் சோர்வடையாமல் பயணிக்கிறது.
ஆர்.ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் கிராமப் பின்னணி பார்க்க அழகாக இருக்கிறது. பாடல் காட்சிகளில் ரம்மியமாக சுழன்றிருக்கிறது கேமிரா. படத்தின் பாடல்கள் அனைத்துமே கேட்கும்படி இருப்பது படத்தின் இன்னொரு சிறப்பு. அதிகமாக எஃப்.எம். ரேடியோக்களில் இவைகள் ஒலிபரப்பானால் இயக்குநருக்கு நிச்சயம் பெரிய பெயர் கிடைக்கும்.
பள்ளிப் பருவ மாணவர்களுக்கு காதல், கீதலெல்லாம் தப்பான விஷயம் என்று சொல்லாத ஒரு விஷயத்திற்காக மட்டுமே இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.
முற்பாதியைவிடவும் பிற்பாதியில்தான் அமானுஷ்யம், பேய், மந்திரம், தந்திரம் என்று அனைத்தையும் இறக்கிவிட்டிருப்பதால் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை முன்பேயே யூகிக்க முடிந்தாலும்கூட இந்த ‘கமரகட்டு’ ரசிக்கத்தான் வைக்கிறது.

0 comments: