சொத்துக் குவிப்பு வழக்கு - குன்ஹா தீர்ப்பு விவரம் - 3

11-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துகள் மட்டுமல்ல, வருமானத்துக்கு அதிகமாக செய்த செலவுகளும்தான் ஜெயலலிதாவை இன்று சிறைக்குள் அடைத்துள்ளது. பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக செய்த செலவுகளுக்கு அடிப்படை உதாரணமாகத் திகழ்கிறது ஜெயலலிதாவின் அன்றைய வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண அத்தியாயம்.

ரசீதுகள், வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகள், சாட்சிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மதிப்பீடுகள் என சுதாகரனின் ஆடம்பரத் திருமணத்தை ஜெயலலிதா நடத்தியவிதத்துக்கு எதிராக ஏகப்பட்ட ஆதாரங்களைத் தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை. ஆனால், அவற்றை இல்லை என்று மறுப்பதற்கு ஜெயலலிதா தரப்பிடம் எதுவும் இல்லை. அதை நீதிபதி குன்ஹா தன்னுடைய தீர்ப்பில் விவரித்துள்ள விதம் இதுதான்...!



திருமணச் செலவு விவரம்..!

''ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் மகள் (சாந்தி) வயிற்றுப் பேத்தி சத்தியலட்சுமிக்கும் ஜூலை 7, 1995 அன்று திருமணம் நடைபெற்றது. அதில் பந்தல்கள் அமைப்பதற்கு 5 கோடியே 21 லட்சத்து 23 ஆயிரத்து 532 ரூபாயும் உணவு, தண்ணீர், தாம்பூலம் கொடுத்த செலவு 1 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரத்து 125 ரூபாயும் நான்கு லட்சம் ரூபாய்க்கு வெள்ளித் தட்டுகளும் அழைப்பிதழ்களைத் தபாலில் அனுப்பிய வகையில் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயும் செலவாகியுள்ளது. இந்தத் திருமணத்துக்காகச் செய்யப்பட்ட அனைத்து செலவுகளையும் அரசுத் தரப்பு, ஆறுமுகம், தங்கராஜன், ரமேஷ், வின்சென்ட், பிரேம்குமார், சலபதி ராவ், மகாலிங்கம், ஸ்ரீநிவாசன், ஏ.ஜி.கிருஷ்ணமூர்த்தி, கே.பி.முத்துச்சாமி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.செல்வராஜ், கே.என்.தியாகராஜ சுவாமி, ராஜசேகரன், ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.எஸ்.ஜவஹர், டி.கிருஷ்ணராவ், என்.நல்லம்மா நாயுடு ஆகிய சாட்சிகளைக்கொண்டு நிரூபித்துள்ளது.''

பந்தலோ பந்தல்..!

''அரசுத் தரப்பின் 181-வது சாட்சி தங்கராஜன். பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளரான இவர்தான், சுதாகரன் திருமணச் செலவுகளை மதிப்பிட்டவர். திருமணத்துக்குப் பந்தல் அமைத்த ஆர்க்கிடெக்ட் விஜயசங்கர், ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, கோபிநாத், தோட்டா தரணியின் உதவியாளர்கள் ரமேஷ், சீனிவாசன், மின்விளக்கு அலங்காரம் செய்த எலெக்ட்ரீசியன் பி.எஸ்.மணி, சையத் முகமத் ஆகியோரைச் சந்தித்து ஆதாரங்களைத் திரட்டி இந்த மதிப்பீட்டைச் செய்துள்ளனர். திருமணம் நடைபெற்றபோது, பொருள்களின் விலை சந்தை மதிப்பில் என்ன இருந்ததோ, அந்த விலையை வைத்தே கணக்கிட்டு உள்ளனர். அதன்படி, சுதாகரன் திருமணச் செலவாக இவர்கள் கணக்கிட்ட தொகை ரூ.5 கோடியே 91 லட்சம்..!


திருமண வரவேற்புக்காக எம்.ஆர்.சி நகரில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 200 சதுர அடியில் பந்தல் போடப்பட்டு, அதன் இரண்டு பக்கமும் தென்னை ஓலைகளால் ஆன தட்டிகள் வேயப்பட்டு இருந்தன. அதன் செலவு மதிப்பீடு 18 லட்சத்து 81 ஆயிரத்து 600 ரூபாய். உணவு பரிமாறிய இடத்தில் 2 லட்சத்து 16 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலின் மதிப்பீட்டு¢த் தொகை ரூ.17 லட்சத்து 28 ஆயிரம்.

வி.ஐ.பி-க்கள் சாப்பிடுவதற்கு தகரத்தில் அமைக்கப்பட்ட பந்தல் 24,000 சதுர அடி. அதன் செலவு மதிப்பீடு 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய். முகப்புப் பந்தல் மற்றும் அதில் இருந்த வேலைப்பாடுகள் 1 லட்சத்து 57,000 சதுர அடி. வண்ணக் காகிதங்களால் செய்யப்பட்டு இருந்த வேலைப்பாடுகளின் செலவு மதிப்பீடு 66 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய். இரும்பு, செங்கல் பயன்படுத்தி அமைக்கப்பட்ட மணமேடை, மணமக்கள் ஓய்வறை, வரவேற்பு அறைகள், கழிப்பறைகளின் மதிப்பு 35 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய். ஏ.சி-களின் செலவு மதிப்பீடு 3 லட்சம் ரூபாய்.

2,500 வி.ஐ.பி நாற்காலிகளுக்குச் செலவான தொகை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய். 10,000 சாதாரண நாற்காலிகளுக்குச் செலவு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். சாப்பாட்டு அறையில் 12,800 சேர்கள் போடப்பட்டு இருந்தன. அதன் செலவு மதிப்பீடு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய். 4,800 சமையல் மேசைகள் போடப்பட்டு இருந்தன. அதன் செலவு மதிப்பீடு 48,000 ரூபாய். வி.ஐ.பி சமையல் மேசைகளுக்கான செலவு 2 லட்சத்து 72 ஆயிரத்து 880 ரூபாய். மேலும் ஏழு லட்சத்து 28 ஆயிரத்து 527 ரூபாய் சாலைகளில் செய்யப்பட்டு இருந்த அலங்காரங்களுக்குச் செலவான தொகை என்று மதிப்பிட்டு உள்ளனர். இதுபோக, மூன்று வேளை உணவு, குடிநீர், பட்டாசுகள், டோங்கா நடனம், யானை, குதிரை வண்டிகள், வீடியோ, இசை நிகழ்ச்சி, பரத நாட்டியம் என்ற வகையில் செலவான தொகை என மொத்தமாக ரூ.5 கோடியே 91 லட்சத்தை மதிப்பிட்டு உள்ளனர். இவர்களின் இந்த மதிப்பீடு தொடர்பாக நீண்ட குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு 80 பக்கங்களில் அது பதிவும் செய்யப்பட்டுள்ளது.''

பந்தல் அமைக்கச் சொன்னது சசிகலா..!

''அரசுத் தரப்பின் இந்தச் சாட்சிகளை எதிர்த்து வாதிட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார், ''சுதாகரனின் திருமணம் நடைபெற்று இரண்டரை ஆண்டுகள் கழித்து தயாரிக்கப்பட்ட இந்த மதிப்பீடுகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல. அதை மதிப்பீடு செய்துள்ள இந்தச் சாட்சிகள் சுதாகரனின் திருமணத்தை நேரில் பார்க்காதவர்கள். அங்கு அமைக்கப்பட்டு இருந்த வேலைப்பாடுகள், பந்தல்கள் பற்றி இவர்களுக்கு என்ன புரிதல் இருக்க முடியும்? எனவே, இந்தச் சாட்சிகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது’ என்று வாதிட்டார்.

மூத்த வழக்கறிஞர் பி.குமாரின் வாதம் நியாயமானது. அதே சமயம் அரசுத் தரப்புச் சாட்சி உதவிப் பொறியாளர் தங்கராஜ், எப்படி இந்த மதிப்பீட்டுக்கு வந்தார் என்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.

அரசுத் தரப்பு சாட்சியாகப் பொதுப்பணித் துறையின் மூத்த இன்ஜினீயர் முத்துச்சாமி விசாரிக்கப்பட்டார். இவர்,  அரசு நிகழ்ச்சிகளில் பந்தல் அமைக்கும் பணிகளை மேற்பார்வை செய்பவர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.ஏஸ் அதிகாரி ஜவஹர் பாபு, முத்துச்சாமியைத் தொலைபேசியில் அழைத்து, ''முதலமைச்சர் வீட்டில் நடைபெற உள்ள திருமணம் குறித்து உங்களிடம் பேச வேண்டும். எனவே, போயஸ் கார்டன் வீட்டுக்கு வாருங்கள்'' என்று கூறி உள்ளார். அதன்படி முத்துச்சாமி மறுநாள் ஜவஹர் பாபுவை சந்தித்து, சசிகலாவிடம் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சசிகலா, அவரிடம் 'சுதாகரன் திருமணத்துக்கான பந்தல் அமைக்கும் வேலைகளை எல்லாம் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

முத்துச்சாமியின் சாட்சிப்படி, பந்தல்கள் அமைப்பதற்கு விஜய சங்கர் வரைபடம் தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன்படி, அந்தப் பந்தல்களை அமைப்பதற்கான இடம், மட்டம் ஆகியவற்றை மட்டும் முத்துச்சாமி குறித்துக் கொடுத்துள்ளார்.''

ஜெயலலிதா மேற்பார்வை செய்தார்..!

''இதையடுத்து எம்.ஆர்.சி நகரில், ஐந்து முக்கிய பந்தல்கள் 70x50 அடியில் போடப்பட்டு உள்ளன. தூத்துக்குடி ராஜப்ப நாடார் அதை செய்து கொடுத்துள்ளார். 8 தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பந்தல்கள் 60ஜ்450 அடியில் அமைக்கப்பட்டு உள்ளன. வி.ஐ.பி-களுக்கான உணவுப் பந்தலை 60x200 அடியில் மன்னார்குடி ராஜகோபால் என்பவர் அமைத்துக் கொடுத்துள்ளார். சமையலறை பந்தல்கள்

45x1,356 அடியில் குமரேசன் நாடார் என்பவர் அமைத்துக் கொடுத்துள்ளார். திருமண மேடை, மணமக்கள் ஏ.சி-கள், அவர்களுக்கான ஓய்வறைகள், கழிப்பறைகள் போன்றவற்றை எத்திராஜ் அமைத்துக் கொடுத்துள்ளார். இதற்கான செலவுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் குடும்பம் ஏற்றுக்கொண்டதாக கூறி உள்ளார். வி.ஐ.பி-களுக்கான அமரும் இடம், அதில் உள்ள வேலைப்பாடுகள், அவர்களின் உணவறைகள் போன்றவற்றை ஆர்ட் டைரக்டர் கோபிநாத் செய்து கொடுத்துள்ளார். தண்ணீர் வசதிக்காக 5 போர்வெல்களை பால்தாசன் என்பவர் போட்டுக் கொடுத்துள்ளார். அதுபோக, லாரிகள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை நடந்துள்ளது. சி.எஸ்.சந்திரசேகரன் என்பவர் மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதற்காக 2-10 கே.டபிள்யூ ஜெனரேட்டர்களையும் 4 மொபைல் ஜெனரேட்டர்களையும் அவர் பயன்படுத்தி உள்ளார். இந்த வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, 'ஜெயலலிதாவும் சசிகலாவும் அவற்றை மேற்பார்வையிட்டனர்’ என்றும் முத்துச்சாமி சாட்சியம் அளித்துள்ளார்.''



ஜெயலலிதா செக் கொடுத்தார்..!

மணமகளின் தந்தை நாராயணசாமி இவர்களுக்குக் கொடுத்த தொகை போக மீதித் தொகை அனைத்தையும் ஜெயலலிதா கொடுத்துள்ளார். அதுவும் தன்னுடைய பெயரில் செக் கொடுத்துள்ளார். அவை அனைத்தும் வங்கியில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளன. பால்பாபு என்ற வட இந்திய அலங்கார நிபுணருக்கு போயஸ் கார்டனில் இருந்து, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செக் கொடுக்கப்பட்டு உள்ளது. அடையாறு விநாயகர் கோயிலில் இருந்து எம்.ஆர்.சி நகர் வரையிலான பாதையை செப்பனிட்டு இரண்டு பக்கமும் விளக்குகளால் அலங்காரம் செய்த சுப்பிரமணி மற்றும் சாமி ஆகியோருக்கு ஜெயலலிதா தன்னுடைய பெயரில் செக் கொடுத்துள்ளார்.

இப்படி... பந்தல் தொடங்கி, சுதாகரன் திருமணத்தில் நடைபெற்ற அனைத்து வேலைகளையும் மேற்பார்வை பார்த்த முத்துச்சாமியிடம் விசாரித்துத்தான் பொறியாளர் தங்கராஜ், பந்தலுக்கான செலவு மற்றும் இதர விஷயங்களை மதிப்பிட்டுள்ளார். அதுவும், திருமணம் நடந்த 1995-ம் ஆண்டில் அந்தப் பொருள்கள் சந்தையில் என்ன விலைக்கு விற்றதோ அந்த விலையிலேயே மதிப்பிட்டுள்ளார்.

65 ஆயிரம் அழைப்பிதழ்கள்...

மௌலிஸ் அட்வர்டைசிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ். இவரையும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜவஹர் பாபு தொலைபேசியில் தொடர்புகொண்டு, முதலமைச்சர் வீட்டுத் திருமணத்துக்கான அழைப்பிதழை வடிவமைத்து அச்சடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரமேஷ், தன்னுடைய நிறுவனத்தில் வடிவமைத்து அழைப்பிதழ்களை ஜெயலலிதா வீட்டில் காண்பித்து, ஒப்புதல் பெற்று, அதன்பிறகு 65 ஆயிரம் அழைப்பிதழ்கள் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் அச்சடித்துக் கொடுத்துள்ளார். அந்த அழைப்பிதழ் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதோடு 5,000 வாகன அனுமதி அட்டைகளும் அச்சடித்துக் கொடுத்துள்ளார். இதற்கு 11 லட்சம் ரூபாயை ஜெயலலிதா செக் மூலம் கொடுத்துள்ளார். இது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.

மற்றொரு சாட்சி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் வின்சென்ட். சுதாகரனின் திருமணத்துக்காக விருந்தினர்களை அழைத்து வர கார்களை அனுப்பியவர். 1995 செப்டம்பர் 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரைக்கும், இவர் 10 கார்களை அனுப்பி உள்ளார். அதற்காக இவர் பெற்ற தொகை ரூ.27 ஆயிரம். அதற்குக் கொடுக்கப்பட்ட செக்கில் ஜெயலலிதாதான் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.''

இன்னும் பணம் பாக்கி வைத்துள்ளார்கள்!

''பந்தல் அமைக்கும் சலபதியின் சாட்சிப்படி, மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சச்சிதானந்தம், தன்னிடம் நேரில் வந்து முதலமைச்சரின் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு மேசை நாற்காலிகள் வேண்டும் என்று கேட்டு அதற்காக முன்பணமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான செக் கொடுத்தார். மேஜை நாற்காலிகளை எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் வைக்குமாறு சொன்னார். அதை நான் செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவரைத் தொடர்புகொண்ட அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டல் மேனேஜர் நவீன்,  சுதாகரன் திருமணத்துக்கான அலங்கார வேலைகளுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் துணிகளைக் கொடுக்கும்படி கேட்டதாகவும், அதற்கு ஜெயலலிதா பெயரில் 57 ஆயிரத்து 250 ரூபாய்க்கு செக் கொடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுவும் வங்கி ஆவணங்களின் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த வழக்கு தொடரப்படும் வரை இன்னும் இவருக்கு 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளனர் என்பதையும் இந்தச் சாட்சி பதிவு செய்துள்ளார். இந்தச் சாட்சிகளின் மூலம் அழைப்பிதழ்கள் எத்தனை அச்சடிக்கப்பட்டன, எத்தனை நாற்காலிகள் போடப்பட்டன என்பது தெளிவாக நிரூபணமாகிறது. இதன்மூலம் அதற்கான செலவுகள் மதிப்பிடப்பட்டு உள்ளன'' என்று நீதிபதி கூறியுள்ளார்.

விளம்பரங்களும் வாகனங்களும், ஆடிட்டர் மூலம் சிக்கிய ஆணித்தரமான ஆதாரங்கள்... இதற்கு ஜெயலலிதா அளித்த விளக்கம் அடுத்த இதழில்!

நன்றி : ஜூனியர்விகடன்

0 comments: