தாண்டவம் - சினிமா விமர்சனம்

29-09-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

 
வழக்கமான பழி வாங்கும் படலம் அடங்கிய கமர்ஷியல் படம்தான்..! ஆனால் இத்தனை ஆண்டுகளாக பார்த்து, பார்த்து சலித்துப் போன திரைக்கதையில் ஹீரோவுக்கு கண் இல்லை.. ஆனால் இருப்பது போன்ற புதிய கான்செப்ட்டாக வைத்து நம்மை திருப்திப்படுத்த முனைந்திருக்கிறார் இயக்குநர் விஜய். ஆனால் முடியவில்லை என்றே நினைக்கிறேன்..!




'ரா' அமைப்பின் உயரதிகாரியாக இருக்கும் விக்ரம் டெல்லியில் இருந்து தப்பித்த தீவிரவாதக் கும்பலைப் பிடிக்க லண்டனுக்கு படையெடுக்கிறார். அங்கே ஏகப்பட்ட “சீன்”களை போட்டு துப்பறிய முயலும்போது ஒவ்வொரு டிவிஸ்ட்டாக அவிழ்கிறது. அந்தப் போராட்டத்தில் தனது கண் பார்வையையும், மனைவியையும் இழக்கிறார். அந்த வலியோடு அதற்குக் காரணமானவர்களைத் தேடிப் பிடித்து கொலையும் செய்கிறார். இறுதியில் தப்பித்தாரா இல்லையா..? உலகின் நம்பர் ஒன் லண்டன் போலீஸ் அவரை சும்மா  விட்டதா என்பதையெல்லாம் காசு கொடுத்தோ, கொடுக்காமலோ.. தியேட்டரிலோ, திருட்டி வீடியோவிலா பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள்..!

திரைக்கதை இவ்வளவு திராபையாக இருக்கும் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை..! அடுத்தடுத்த காட்சிகளை மிக எளிதாக யூகிக்கும்வகையிலேயே திரைக்கதை அமைத்திருப்பது ஏன் என்றும் தெரியவில்லை. ஒருவேளை இது நம்ம படம்ன்னு ஆடியன்ஸ் நினைச்சு கை தட்டுவாங்கன்னு நினைச்சாங்களோ என்னவோ..?

அதேசமயம் லண்டன் போலீஸை இதைவிடவும் வேறு யாரும் குறைவாக நினைத்து, கேவலமாக காண்பித்திருக்கவும் முடியாது.. சந்தானம் சிக்கிய பின்பும் அலட்சியமாக அவரை அனுப்பிவிட்டு, மேலும் ஒவ்வொரு கொலையின்போதும் அவரை தூக்குவது தமிழ்நாட்டு போலீஸின் பழக்கம். இதையே அந்த ஊர் போலீஸுக்கும் காண்பித்துவிட்டார் இயக்குநர்..!

ஐபேடை கையில் வைத்துக் கொண்டு நாசர் விசாரணை செய்வதெல்லாம் செம காமெடி.. வெறுமனே நோட்பேடில் எழுதி வைத்தெல்லாம் ஒரு கொலையின் முடிச்சை கண்டுபிடிக்க முடியுமா என்ன..? ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் விக்ரமை அவருக்கே தெரியாமல் புகைப்படம் எடுப்பதும், விக்ரம் அழிக்கச் சொன்னதும் அழிப்பதும் அந்த ஊர் மனித உரிமை மீறலுக்கு உதாரணமாக இருக்கலாம். ஆனால் லாஜிக்கே இல்லாமல் இவர் ஏன் போட்டோ எடுக்க வேண்டும் என்றுதான் தெரியவில்லை..! அதான் விபத்து ரிக்கார்டில் புகைப்படத்துடன் பதிவாகிவிடுமே..! அதைக்கூட சந்தானத்திடம் காட்டியிருந்தால் நமக்குத் தலைவலி 20 நிமிடத்தோடு போயிருக்கும்..!

இதைவிட அபத்தமான லாஜிக் மீறல். விக்ரமின் கல்யாணத்தில்.. படித்திருப்பது கண் டாக்டருக்கு.. வேலை பார்ப்பது டெல்லியில்.. இவ்வளவு எஜூகேட்டடாக இருக்கும் பெண்தான் தனக்கு வரப் போகும் கணவன் என்ன வேலை பார்க்கிறான் என்றுகூட தெரிந்து கொள்ளாமலா கழுத்தை நீட்ட சம்மதித்திருப்பாள்..?  அதிலும் இருவருக்கும் இடையில் லவ் வரும்வரையிலும் “நோ டச்சிங் டச்சிங்” என்று கவுரவமான ஒப்பந்தம் வேறாம்..! என்ன கண்றாவி திரைக்கதை இது..!?

கென்னியாக நடித்தவர் தனது சோகக் கதையைச் சொன்னவுடன்  அதற்காகவே காத்திருந்தாற்போல் அனைத்து வில்லன்களும் வரிசையாக விக்ரமின் கண் முன்னே ஒன்று சேர்கிறார்கள்.. திரைக்கதைக்காக ரூம் போட்டு யோசிக்காமல், காரில் போகும்போதே எழுதியிருப்பாரோ என்னவோ..?

சென்னை போலீஸ் மாதிரி லண்டன் போலீஸும் துரத்துது.. துரத்துது.. துரத்துது.. துரத்திக் கொண்டேயிருக்குது..! ஆனால் விக்ரமை பிடிக்க முடியவில்லை. அதே டிரெஸ்ஸை போட்டுக் கொண்டுதான் விக்ரம் லண்டனில் இதற்குப் பின்பும் வலம் வருகிறார்.. ரொம்ப பட்ஜெட் பற்றாக்குறையோ..?

இறுதிக் காட்சியில் இன்னும் காமெடி.. தளபதி படத்தின் தோல்விக்கு மிகப் பெரும் காரணமாய் இருந்தது அப்படத்தின் கிளைமாக்ஸ்தான்..! அதேதான் இங்கேயும்..! இத்தனை கொலைகளை செய்தவரை இரு நாட்டு அரசுகளும் பாராட்டுவதை கனவில்தான் காண முடியும்..! அதிலும் இங்கிலாந்தில்..!? முதலில் உளவுத்துறையின் ஏஜெண்ட், உயரதிகாரிகள் யாரையும் எந்த நாடுமே அடையாளம் காண்பிக்க மாட்டார்கள்..! உளவுத் துறையில் பணியாற்றுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்தந்த நாடுகளின் கண்காணிப்பில் இருக்கும் விருந்தினராக மட்டுமே செல்ல முடியும் என்று என் சிற்றறிவு  சொல்கிறது.. ஐயா.. கொலைகளையும் செய்துவிட்டு.. தப்பிக்கவும் செய்கிறார்.. சீரியஸ் டைப் கதைகளில் லாஜிக்கை பார்க்கத்தான் வேண்டும்..!

இதுதான் இப்படி என்றால் நடிப்பு.. மகா சொதப்பல்..! ராஜபாட்டையில் எந்தெந்த கோணங்களிலெல்லாம் விக்ரம் வயதானவராகத் தோன்றுவாரோ அது போலவே காட்சிகளை வைத்திருந்தார்கள். இதிலும் அப்படியே..! வயதாவதைத் தடுக்க முடியாதுதான்.. ஆனால் கேமிராவில் ஏமாற்றலாமே..? வழக்கமான விக்ரமையே காணோம்..! இறுக்கமான முகத்துடன் கண் பார்வையற்றவர் பேசும்பேச்சுக்கள் ஓகே.. ஆனால் கல்யாண மாப்பிள்ளை விக்ரமும் அப்படியேதான் பேச வேண்டுமா..? தில், தூள் விக்ரமெல்லாம் எங்கே போய்த் தொலைஞ்சார்..?

இதய தெய்வம்.. தங்கத் தாரகை அனுஷ்காவை இப்படி வீணடித்திருக்க வேண்டாம்.. அனுஷ்காவும் இல்லையேல் படத்தில் உக்காந்திருக்கவே முடியாது என்பது இன்னொரு விஷயம்..! அவரது அழகையும், நடிப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தெலுங்குவாலாக்கள்தான்.. அந்த டெக்னிக் அவர்களுக்குத்தான் வரும்போலிருக்கிறது..! முழுக்க, முழுக்க போர்த்திக் கொண்டு நடித்தாலென்ன..? ஒரு கனவுக் காட்சியிலாவது நடனத் தாரகையை ஆட வைத்திருக்கலாமே..? “உயிரின் உயிரே” பாடலில் மட்டும்தான் கொஞ்சமாவது பார்க்க முடிந்தது..!  “அனிச்சப் பூவழகி” பாடலில் நீரவ் ஷாவின் கேமிரா செய்த சதி வேலையில் அம்மணியின் முகம் விக்ரமின் முகத்தைவிட பயங்கரமாக காட்சியளித்ததுதான் கொடுமையிலும் கொடுமை..!

சந்தானம், சரண்யா, டெல்லி கணேஷ், தம்பி இராமையா என்று பட்டியல்கள் இருந்தாலும் எதுவும் கதைக்கு ஆகவில்லை. சந்தானத்தின் பேச்சுக்கு சிரிப்பதா அழுவதா என்று பட்டிமன்றமே நடத்தலாம்..! அந்த அளவுக்கு கொடுமை..! தம்பி இராமையாவின் பேச்சையெல்லாம் சிரிப்பு வருது ரீதியில் பலரும் எழுதியிருப்பதை பார்த்தவுடன் எனக்கே என் மீது டவுட் எழும்பியிருக்கிறது. நான்தான் முசுடாகிவிட்டேனோ..? என்ன கொடுமை சரவணா இது..?

லண்டன் அழகிப் போட்டியில் அழகியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் எமி ஜாக்சன். இராம.நாராயணன்கூட நல்லபடியாக இந்தக் காட்சியை எடுத்திருப்பார். இதுக்குத்தான்யா இந்த விஷயத்துல ஷங்கரை அடிச்சுக்க முடியாதுன்னு சொல்றது.. மெகா பட்ஜெட் படம்.. மிகப் பெரிய சீன்ஸ் சீக்குவேஷன்ஸ் வேண்டாமா..? நிஜமாகவே ஏவி.எம். ஏசி புளோரில் செட் போட்டு எடுத்திருக்கிறார்கள்..!  இது மட்டுமில்லை.. எமி ஜாக்சனுக்கு நடக்கும் பாராட்டு விழாவும் ஏவி.எம்.மில்தான். இந்தக் காட்சிக்குப் பின்புதான் படத்துக்கு பூசணிக்காய் உடைத்தார்கள். கூடவே கேக் வெட்டி எல்லாருக்கும் தன் கையாலேயே கேக்கை கொடுத்துவிட்டுத்தான் “ஐ” ஷூட்டிங்கிற்கு ஷிப்ட் ஆனார் எமி.. கேக் வாங்கிய புண்ணியவான்களில் அடியேனும் ஒருவன்..!

எந்தக் காட்சியிலும் அழுக வைக்காமல், மெல்லிதாக வருத்தப்பட வைத்தே நடிக்க வைத்திருப்பதால் எமியின் நடிப்புக்கு எதுவும் ஸ்கோர் சொல்ல முடியவில்லை. அடுத்தப் படத்தில் பார்க்கலாம். பெல்காம் அழகி  லட்சுமிராயும் இன்னொரு பக்கம் அவதாரமெடுத்திருக்கிறார். இதுவும் அடிக்கடி கண நேரத்தில் வந்துபோவதுதான்..! நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் பார்க்க பளீச் சென்று பிரெஷ்ஷாக இருந்தது இந்த டோனியின் கில்லிதான்..!

அண்ணன் கஜபதிபாபுவைப் பத்தியும் கொஞ்சம் சொல்ல வேண்டும்..! தெலுங்கில் கொஞ்சம் மார்க்கெட் வேண்டும் என்பதற்காக நடிக்க வைத்திருக்கிறார்கள்..! இதைவிட பெரிய விஷயம் படத்தில் ஏதுமில்லை.. ஆனால் நேரில் மனிதர் அவ்வளவு அழகான தமிழ் பேசுகிறார். பிறந்ததும், படித்ததும் சென்னையில்தானாம்..! அண்ணாத்தே ரொம்ப லேட்டா கோடம்பாக்கத்துல எண்ட்ரியாகியிருக்காரு..! விக்ரமுடன் போனில் பேசும்போது அனுஷ்காவை வைத்துக் கொண்டு "ஜாக்கிரதை.. தொலைச்சிருவேன்" என்பது போல் மறைமுகமாக எச்சரிக்கும்போதுதான் கொஞ்சூண்டு வில்லத்தனம் தெரிந்தது..!

தாண்டவம் டைட்டில் சாங்கும், “அனிச்சப் பூவழகி” பாடலும், “உயிரின் உயிரே” பாடலும் கேட்கும்படி இருந்தது என்றாலும், பார்க்கும்படி இல்லை..! ஜி.வி.பிரகாஷின் அடுத்த படங்களில் இதுபோல் சுதந்திரமாக தான் செய்ததை தானே திரும்பவும் எடுத்துக் கொடுத்தால்கூட நலம்தான்..!

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நீரவ்ஷாவின் ஒளிப்பதிவுதான்.. லண்டனையும், தமிழ்நாட்டையும் அழகாகக்  காண்பித்திருக்கிறார். ஆனால் அதற்காக அந்த ஆஸ்பத்திரியின் முகப்பையே எத்தனை தடவைதான் காட்டுவது..? வேறு கோணத்தில் இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாமே..? ஏரியல் வியூவில் லண்டன் நகரம் அழகுதான். ஆனால் குண்டு வெடிப்பதாகச் சொல்லி சிஜியில் ஆங்காங்கே காட்டுவதுதான் பல்லை இளிக்கிறது..! ரைட்டு.. விஜய்யை ரொம்பவும் ஓட்ட வேண்டாம்..! ஆனால் அதே சமயம், இந்தக் கதைக்கும், திரைக்கதைக்கும்தான் இத்தனை சண்டை, சச்சரவுகளா என்று ஆயாசமும் தோன்றுகிறது..!

படம் ரொம்ப மோசமும் இல்லை.. ரொம்ப ஓஹோவும் இல்லை. சராசரிதான்.. பார்க்கணும்னு நினைச்சா பார்க்கலாம். இல்லைன்னா விட்ரலாம்.. எதுவும் தப்பில்லை..!

33 comments:

Anonymous said...

சாட்டைக்கு எங்களையும் சேர்ந்து பிரச்சாரம் செய்து படத்த தியேட்டரில் பார்க்க சொன்னீக... இதுக்கு //காசு கொடுத்தோ, கொடுக்காமலோ.. தியேட்டரிலோ, திருட்டி வீடியோவிலா///

ஹீ ஹீ.. இது ஒன்னுலையே படத்தின் தரம் தெரியுதே...

Anonymous said...

தாண்டவத்த விடுங்க.. நமக்கென்னமோ யு.டி.வி.யின் தமிழ் படங்களின் பின்னடைவுக்கு இந்த தனஞ்செயனின் அலம்பலும் ஒரு காரணமாக இருக்குமோன்னு தோணுது. மோசர் பேர் பிக்சர்ச இழுத்து மூடுன மாதிரி யு.டி.வியையும் சீக்கிரம் மும்பைக்கே திருப்பி அனுப்புறதுலயே குறியா இருக்காரு போல...

இதுவரைக்கும் யு.டி.விக்கு தமிழில் சொல்லி கொள்வது போல ஒரு வெற்றி இல்லை.. ஓகே ஓகே ரேஞ்சுக்கோ, இல்ல அத தாண்டுன ரேஞ்சுக்கோ ஏன் யு.டி.வியால் தமிழில் ஒரு படம் இன்னும் கொடுக்க முடியவில்லை?

rajasundararajan said...

தம்பி, அனுஷ்கா படத்துல கண்டாக்டர். அப்புறம் 'தளபதி' வெற்றிப்படம் இல்லையா?

குட்டிபிசாசு said...

//கேக் வாங்கிய புண்ணியவான்களில் அடியேனும் ஒருவன்..!//

கேக்கா இல்ல அல்வாவா?

//கஜபதிபாபு//

ஜகபதிபாபுங்க?

வவ்வால் said...

அண்ணாச்சி,

//இதைவிட அபத்தமான லாஜிக் மீறல். விக்ரமின் கல்யாணத்தில்.. படித்திருப்பது கண் டாக்டருக்கு.. வேலை பார்ப்பது டெல்லியில்.. இவ்வளவு எஜூகேட்டடாக இருக்கும் பெண்தான் தனக்கு வரப் போகும் கணவன் என்ன வேலை பார்க்கிறான் என்றுகூட தெரிந்து கொள்ளாமலா கழுத்தை நீட்ட சம்மதித்திருப்பாள்..//

ரா ஆபிசர் சொல்லிட்டிங்க, அப்புறம் எப்படி என்ன வேலைன்னு சொல்வாங்க.

மேலும் அமெரிக்காவில் சாப்ட்வேர் எஞ்சினியர் என சொன்னால் ,என்ன ஏதுன்னு கேட்காமல் கழுத்தை நீட்டும் படித்த பெண்கள் இக்காலத்திலும் இருக்காங்க.

ஏற்கனவே சொன்னது போல இக்கதை டேர் டெவிலில் இருந்து பாதி சுடப்பட்டுள்ளது, மேலும் டான் பிரவுனின் நாவல் "டிஜிட்டல் ஃபோர்ட்ரஸில்" இருந்து கொஞ்சம் களவாடி இருக்காங்க.

--------
// அண்ணாத்தே ரொம்ப லேட்டா கோடம்பாக்கத்துல எண்ட்ரியாகியிருக்காரு..//

ஏற்கனவே ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்த மதராசி படத்திலும் இன்னொரு ஹீரோவாக ஜகபதி நடிச்சு இருக்காருங்கண்ணா.
-------

// உளவுத் துறையில் பணியாற்றுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்தந்த நாடுகளின் கண்காணிப்பில் இருக்கும் விருந்தினராக மட்டுமே செல்ல முடியும் என்று என் சிற்றறிவு சொல்கிறது..//

இதை ரப்பர் போட்டு அழிங்க, உளவுத்துறையில வேலை செய்றதா எந்த நாட்டுக்கும் தெரியாம வேலை செஞ்சாத்தான் உளவு துறை :-))

எனவே எல்லாரும் போலியான ஒரு பெயரில் தான் பயணம் செய்வாங்க, மேலும் ரா அதிகாரிகள் பலரும், பல்வேறு அரசு துறைகளில் ஏதோ ஒரு வேலையில் இருப்பதாக அரசு கணக்கில் காட்டப்பட்டு இருப்பார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு இந்திய வெளியுறவு துறை அதிகாரிக்கு ,அமெரிக்கா விசா மறுத்தது ,அவர் ரா ஏஜெண்ட் என்று சொல்லி.

இப்படித்தான் ரா செயல்படும், அவர்கள் எல்லாம் ஒர்க்கிங் அட் ரா என ஐ.டி.கார்ட் வைத்து இருக்க மாட்டார்கள்.

நம்பள்கி said...

///லண்டன் அழகிப் போட்டியில் அழகியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் எமி ஜாக்சன். இராம.நாராயணன்கூட நல்லபடியாக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்.///

ஒன்னு உங்களுக்கு இராம.நாராயணன் மீது கோபம்; இல்லை, எமி மீது கோபம்!

இராம.நாராயணன் மிருகங்களை மட்டும் தான் நல்லா படம் எடுப்பார் என்று கேள்வி!

இது வரைக்கும் 100 மிருகங்களை வைத்து படம் எடுத்திருப்பதாக கேள்வி! அப்ப எமி என்ன 101 ஆவதா?

'பதஞ்சலி' ராஜா said...

நல்ல படம் பாருங்கள்.. விமர்சனம் எழத
உங்களுக்கு வயது பத்தாது....இந்த படத்தின் என் உங்களுக்கு இவ்வளவு கோவம்?....
தாண்டவம் நல்ல படம் குடும்பத்துடன் பருங்கால்

'பதஞ்சலி' ராஜா said...

வவ்வால் ரெம்ப கதைக்குள்ள போக்காதீங்க .....வேற வேலை இருந்த பாருங்க...



செல்லாதவன் said...

thalapathy thoolvi padamnu sonna muthal aalu neengathan.unmayila neenga cine fieldlathan irukkengala?

செல்லாதவன் said...

thalapathy thoolvi padamnu sonna muthal aalu neengathan.unmayila neenga cine fieldlathan irukkengala?

செல்லாதவன் said...

thalapathy thoolvi padamnu sonna muthal aalu neengathan.unmayila neenga cine fieldlathan irukkengala?

முத்துசிவா said...

செம விமர்சனம்...

நாசர் பேசுற சிங்களத் தமிழப்பத்தி எதாவது சொல்வீங்கன்னு பாத்தேன்... மறந்துட்டீங்க போலருக்கு... :)

//இதய தெய்வம்.. தங்கத் தாரகை அனுஷ்காவை இப்படி வீணடித்திருக்க வேண்டாம்.. அனுஷ்காவும் இல்லையேல் படத்தில் உக்காந்திருக்கவே முடியாது என்பது இன்னொரு விஷயம்..!//

அய்யோ அண்ணாத்த... இதய தெய்வம்னு மட்டை ஆனவங்களத்தான் சொல்வாங்க... அனுஷ்காவ ஏன்... அவங்க இன்னும் ரொம்ப நாள் நல்லா இருந்து நிறைய படங்கள் நடிக்க வேண்டும்... :)

Prabu M said...

"தளபதி" படம் தோல்வியா?!!

உண்மைத்தமிழன் said...

[[[மொக்கராசு மாமா said...

சாட்டைக்கு எங்களையும் சேர்ந்து பிரச்சாரம் செய்து படத்த தியேட்டரில் பார்க்க சொன்னீக... இதுக்கு //காசு கொடுத்தோ, கொடுக்காமலோ.. தியேட்டரிலோ, திருட்டி வீடியோவிலா///

ஹீ ஹீ.. இது ஒன்னுலையே படத்தின் தரம் தெரியுதே...]]]

என்ன செய்யறது..? சொல்லக் கூடாதுதான்.. ஆனாலும் சொல்ல வேண்டியிருக்கே..?!

உண்மைத்தமிழன் said...

[[[மொக்கராசு மாமா said...

தாண்டவத்த விடுங்க.. நமக்கென்னமோ யு.டி.வி.யின் தமிழ் படங்களின் பின்னடைவுக்கு இந்த தனஞ்செயனின் அலம்பலும் ஒரு காரணமாக இருக்குமோன்னு தோணுது. மோசர் பேர் பிக்சர்ச இழுத்து மூடுன மாதிரி யு.டி.வியையும் சீக்கிரம் மும்பைக்கே திருப்பி அனுப்புறதுலயே குறியா இருக்காரு போல...

இதுவரைக்கும் யு.டி.விக்கு தமிழில் சொல்லி கொள்வது போல ஒரு வெற்றி இல்லை.. ஓகே ஓகே ரேஞ்சுக்கோ, இல்ல அத தாண்டுன ரேஞ்சுக்கோ ஏன் யு.டி.வியால் தமிழில் ஒரு படம் இன்னும் கொடுக்க முடியவில்லை? ]]]

கலகலப்பு மட்டும்தான் ஓகே.. இனிமேயாச்சும் முழிச்சுக்கிட்டா ஓகே. இல்லாட்டி நீங்க சொன்னதுதான் நடக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

தம்பி, அனுஷ்கா படத்துல கண் டாக்டர்.]]]

ஸாரிங்கண்ணா.. திருத்திட்டேன்..!

[[[அப்புறம் 'தளபதி' வெற்றிப் படம் இல்லையா?]]]

இல்லைன்னுதான் அந்த நேரத்துல எல்லா பத்திரிகைலேயும் எழுதியிருந்தாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[[குட்டிபிசாசு said...

//கேக் வாங்கிய புண்ணியவான்களில் அடியேனும் ஒருவன்..!//

கேக்கா இல்ல அல்வாவா?]]]]

கேக்குதான்..!

//கஜபதிபாபு//

ஜகபதிபாபுங்க?]]]

ஓகே.. திருத்திர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//இதைவிட அபத்தமான லாஜிக் மீறல். விக்ரமின் கல்யாணத்தில்.. படித்திருப்பது கண் டாக்டருக்கு.. வேலை பார்ப்பது டெல்லியில்.. இவ்வளவு எஜூகேட்டடாக இருக்கும் பெண்தான் தனக்கு வரப் போகும் கணவன் என்ன வேலை பார்க்கிறான் என்றுகூட தெரிந்து கொள்ளாமலா கழுத்தை நீட்ட சம்மதித்திருப்பாள்..//

ரா ஆபிசர் சொல்லிட்டிங்க, அப்புறம் எப்படி என்ன வேலைன்னு சொல்வாங்க. மேலும் அமெரிக்காவில் சாப்ட்வேர் எஞ்சினியர் என சொன்னால், என்ன ஏதுன்னு கேட்காமல் கழுத்தை நீட்டும் படித்த பெண்கள் இக்காலத்திலும் இருக்காங்க. ஏற்கனவே சொன்னது போல இக்கதை டேர் டெவிலில் இருந்து பாதி சுடப்பட்டுள்ளது, மேலும் டான் பிரவுனின் நாவல் "டிஜிட்டல் ஃபோர்ட்ரஸில்" இருந்து கொஞ்சம் களவாடி இருக்காங்க.

--------
//அண்ணாத்தே ரொம்ப லேட்டா கோடம்பாக்கத்துல எண்ட்ரியாகியிருக்காரு..//

ஏற்கனவே ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்த மதராசி படத்திலும் இன்னொரு ஹீரோவாக ஜகபதி நடிச்சு இருக்காருங்கண்ணா.
-------

// உளவுத் துறையில் பணியாற்றுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்தந்த நாடுகளின் கண்காணிப்பில் இருக்கும் விருந்தினராக மட்டுமே செல்ல முடியும் என்று என் சிற்றறிவு சொல்கிறது..//

இதை ரப்பர் போட்டு அழிங்க, உளவுத்துறையில வேலை செய்றதா எந்த நாட்டுக்கும் தெரியாம வேலை செஞ்சாத்தான் உளவு துறை :-))

எனவே எல்லாரும் போலியான ஒரு பெயரில்தான் பயணம் செய்வாங்க, மேலும் ரா அதிகாரிகள் பலரும், பல்வேறு அரசு துறைகளில் ஏதோ ஒரு வேலையில் இருப்பதாக அரசு கணக்கில் காட்டப்பட்டு இருப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு இந்திய வெளியுறவு துறை அதிகாரிக்கு, அமெரிக்கா விசா மறுத்தது, அவர் ரா ஏஜெண்ட் என்று சொல்லி. இப்படித்தான் ரா செயல்படும், அவர்கள் எல்லாம் ஒர்க்கிங் அட் ரா என ஐ.டி.கார்ட் வைத்து இருக்க மாட்டார்கள்.]]]

சரிங்கண்ணாச்சி.. நீரு சொல்லிட்டீரு.. அப்பால.. மறுக்க முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[நம்பள்கி said...

///லண்டன் அழகிப் போட்டியில் அழகியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் எமி ஜாக்சன். இராம.நாராயணன்கூட நல்லபடியாக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்.///

ஒன்னு உங்களுக்கு இராம.நாராயணன் மீது கோபம்; இல்லை, எமி மீது கோபம்! இராம.நாராயணன் மிருகங்களை மட்டும்தான் நல்லா படம் எடுப்பார் என்று கேள்வி! இதுவரைக்கும் 100 மிருகங்களை வைத்து படம் எடுத்திருப்பதாக கேள்வி! அப்ப எமி என்ன 101 ஆவதா?]]]

ஹீரோயினை வைச்சே நல்லபடியா எடு்த்திருப்பாருன்னு சொல்ல வந்தேன்..!

உண்மைத்தமிழன் said...

[[['பதஞ்சலி' ராஜா said...

நல்ல படம் பாருங்கள்.. விமர்சனம் எழத உங்களுக்கு வயது பத்தாது. இந்த படத்தின் என் உங்களுக்கு இவ்வளவு கோவம்?....
தாண்டவம் நல்ல படம் குடும்பத்துடன் பருங்கால்]]]

சரிங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[['பதஞ்சலி' ராஜா said...

வவ்வால் ரெம்ப கதைக்குள்ள போக்காதீங்க ..... வேற வேலை இருந்த பாருங்க...]]]

கண்டிப்பா அவர் திருந்திருவாருண்ணே..! விடுண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[செல்லாதவன் said...

thalapathy thoolvi padamnu sonna muthal aalu neengathan. unmayila neenga cine fieldlathan irukkengala?]]]

என் காதுல விழுந்த நியூஸைத்தான் சொல்றேன் சாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[Kamalakkannan c said...

ஆக மொத்தத்துல தாண்டவம் தடம் மாறி தாண்டிய படம்னு சொல்றீங்க:)]]]

அட.. இந்த வார்த்தை நமக்கு பிடிபடலையே..?

உண்மைத்தமிழன் said...

[[[முத்துசிவா said...

செம விமர்சனம்... நாசர் பேசுற சிங்களத் தமிழப் பத்தி எதாவது சொல்வீங்கன்னு பாத்தேன்... மறந்துட்டீங்க போலருக்கு... :)]]]

ஆமாமாம்.. மறந்திட்டேன்.. ஸாரி..!

//இதய தெய்வம்.. தங்கத் தாரகை அனுஷ்காவை இப்படி வீணடித்திருக்க வேண்டாம்.. அனுஷ்காவும் இல்லையேல் படத்தில் உக்காந்திருக்கவே முடியாது என்பது இன்னொரு விஷயம்..!//

அய்யோ அண்ணாத்த... இதய தெய்வம்னு மட்டை ஆனவங்களத்தான் சொல்வாங்க... அனுஷ்காவ ஏன்... அவங்க இன்னும் ரொம்ப நாள் நல்லா இருந்து நிறைய படங்கள் நடிக்க வேண்டும்... :)]]]

ஹி.. ஹி.. இளசுக வட்டாரத்துல அதுக்கு வேற அர்த்தம்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Prabu M said...

"தளபதி" படம் தோல்வியா?!!]]]

அப்படீன்னுதான் அப்போ சொன்னாங்க..!

supraja said...

உண்மையான காரணம் என்ன ?
கதை என்னுடையது என்று ஒருவர் கோர்டுக்கு போனார்.அவரை கோர்டுக்கு வெளியில் வது செட்டில் செய்து விட்டதாக தகவல் வந்தது.
அது உண்மையாக இருக்குமானால் இது தான் நடந்திருக்க வேண்டும்
மூல கதையும் திருடும் இயக்குனர்கள் ஒரு விஷயத்தை நினிவில் கொள்ள வேண்டும்.உயிரை விட்டு கதையை உருவாக்கி வைத்திருக்கு எந்த உதவி இயக்குனரோ எழுத்தாளரோ திரைக் கதையை சொல்ல மாட்டார்கள்.

தாங்கள் அதீத புத்திசாலி என்று நினைத்து கொள்ளும் இயக்குனர்கள் வழுக்கி விழுவது இங்குதான்.
கதைக்கு சொந்தக்காரர் எழுதி வைத்திருக்கும் திரைக் கதை சிறந்ததாக இருக்கும்.ஒருவருடைய குழந்தைக்கு அவரை விட சிறப்பான அலங்காரத்தை வேறு யாரும் செய்து விட முடியாது.

படம் வெற்றி அடையாததற்கு காரணம் அதுவாகத்தான் இருக்கும்.

ABDUL RAHMAN said...

தாண்டவம் பட இயக்குனரின் அயோக்கியதனம்.
பயங்கரவாதியை சந்திக்க போகும் இடம் Jama Masjid.,
பயங்கரவாதி என்றாலே முஸ்லிமா ?

வவ்வால் said...

அண்ணாசி,

//கண்டிப்பா அவர் திருந்திருவாருண்ணே..! விடுண்ணே..!//

ம்ம்க்... ஹ்ஹா.. ஆ... முதல்ல மொக்கையா படம் எடுக்கிறாங்களே...அவங்கள திருந்த சொல்லுங்கண்னே ...நான் திருந்தறேன்...

எவனோ ஒரு ஷேட் கம்னாட்டி காசு கொடுக்கிறான்னு ஏழைங்க பொழுது போக்க படம் பார்க்க வர்ராங்கன்னு கூட கவலைப்படாம காபி அடிச்சு படம் எடுத்து கொல்றாங்களே அவங்கள திருந்த சொல்லுங்கண்ணே...நான் திருந்தரேன் ஹ்ஹஆ ஆஹ்... அபிராமி..அபிராமி... இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித கமெண்ட் அல்ல அதையும் தாண்டி மொக்கையானது ...

உண்மைத்தமிழன் said...

[[[ABDUL RAHMAN said...

தாண்டவம் பட இயக்குனரின் அயோக்கியதனம். பயங்கரவாதியை சந்திக்க போகும் இடம் Jama Masjid. பயங்கரவாதி என்றாலே முஸ்லிமா?]]]

சில, பல சம்பவங்களின் தாக்கத்தினால் எழும் சர்ச்சைகளில் இதுவும் ஒன்று..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாசி,

//கண்டிப்பா அவர் திருந்திருவாருண்ணே..! விடுண்ணே..!//

ம்ம்க்... ஹ்ஹா.. ஆ... முதல்ல மொக்கையா படம் எடுக்கிறாங்களே அவங்கள திருந்த சொல்லுங்கண்னே நான் திருந்தறேன். எவனோ ஒரு ஷேட் கம்னாட்டி காசு கொடுக்கிறான்னு ஏழைங்க பொழுது போக்க படம் பார்க்க வர்ராங்கன்னுகூட கவலைப்படாம காபி அடிச்சு படம் எடுத்து கொல்றாங்களே அவங்கள திருந்த சொல்லுங்கண்ணே. நான் திருந்தரேன் ஹ்ஹஆ ஆஹ்... அபிராமி.. அபிராமி... இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித கமெண்ட் அல்ல அதையும் தாண்டி மொக்கையானது ]]]

சரி.. சரி.. உங்களை ஒரு நாளைக்கு அவர்கிட்ட புடிச்சுக் கொடுக்கணும்..!

மன்சி (Munsi) said...
This comment has been removed by the author.
மன்சி (Munsi) said...

படத்தில முஸ்லிம்கள் இடத்தில் போய் விசாரிக்கிறார்கள். முஸ்லிம்கள் ரா அதிகாரிக்கு உடந்தையாக இருக்கும் நல்லவர்களாகவே படத்தில் காட்டி இருக்கிறார்கள். வில்லன் இந்தியரும் வெளிநாட்டவரும். முஸ்லிம்கள் என்று காட்டவே இல்லை.

உண்மைத்தமிழன் said...

[[[மன்சி (Munsi) said...

படத்தில முஸ்லிம்கள் இடத்தில் போய் விசாரிக்கிறார்கள். முஸ்லிம்கள் ரா அதிகாரிக்கு உடந்தையாக இருக்கும் நல்லவர்களாகவே படத்தில் காட்டி இருக்கிறார்கள். வில்லன் இந்தியரும் வெளிநாட்டவரும். முஸ்லிம்கள் என்று காட்டவே இல்லை.]]]

இந்த விஷயத்தில் இயக்குநர்களின் பொது புத்தி இப்போதைக்கு இதுதான்..!