செம - சினிமா விமர்சனம்

28-05-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பசங்க புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குநரும், தயாரிப்பாளருமான பாண்டிராஜ், மற்றும் லிங்க பைரவி புரொடெக்சன்ஸ் சார்பில் அதன் தயாரிப்பாளர் பி.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாகவும், அர்த்தனா பினு ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
மேலும், யோகி பாபு, மன்சூரலிகான், கோவை சரளா, ‘பருத்தி வீரன்’ சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, இயக்கம் – வள்ளிகாந்த், வசனம் – பாண்டிராஜ், ஒளிப்பதிவு – எம்.எஸ்.விவேகானந்தன், இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், படத் தொகுப்பு – பிரதீப் ஈ.ராகவ், கலை இயக்கம் – ஜே.கே., ஆடை வடிவமைப்பாளர் – நட்ராஜ், ஒப்பனை – விஜி, பாடல்கள் – யுகபாரதி, ஏகாதசி, அருண்ராஜா காமராஜ், நடன இயக்கம் – பாபா பாஸ்கர், காதல் கந்தாஸ், விஜி சதீஷ், சண்டை இயக்கம் – சுதேஷ், புகைப்படங்கள் – ஹரி சங்கர், போஸ்டர் டிசைன்ஸ் – சிந்து கிராபிக்ஸ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி.ஒன்.
‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் கதையை கொஞ்சம் அப்படி, இப்படி மாற்றி உருமாற்றி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வள்ளிகாந்த்.

திருச்சியில் தனது தாய் மற்றும் நண்பன் யோகி பாபுவுடன் வசித்து வரும் நாயகன் ஜி.வி.பிரகாஷ், சீசனுக்குத் தகுந்தாற்போல் வியாபாரம் செய்வதில் கெட்டிக்காரர். ஒரு மாதம் காய்கறிகள், அடுத்த மாதம் பழங்கள், கனிகள், அதற்கடுத்த மாதம் மீன்.. அது மீய்ந்து போனால் கருவாடு என்று வெரைட்டியாக வியாபாரம் செய்து வருகிறார்.
இவரும் ஒரு பெண்ணின் பின்னால் மாதக்கணக்காக சுற்றி ‘ஐ லவ் யூ’ சொல்லி வருகிறார். ஆனால் அந்தப் பெண் அதனை ஏற்க மறுக்கிறாள். தன் மகனுக்கு சீக்கிரமாக திருமணம் செய்து வைத்துவிட அம்மா சுஜாதா நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த எண்ணத்தில் எண்ணெய்யை ஊற்றுகிறார் ஒரு ஜோசியர். “உன் மகன் ஜாதகத்திற்கு இன்னும் 3 மாதத்தில் திருமணம் நடக்கவில்லையென்றால் அடுத்த 6 வருடத்திற்கு கல்யாணமே நடக்காது…” என்று சாபம் கொடுக்காத குறையாகச் சொல்கிறார் ஜோஸியர்.
இதனால் அவசரம், அவசரமாக தனது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார் சுஜாதா. ஜி.வி. காதலிக்கும் பெண்ணிடம் போய் கேட்கும்போது அவர் மறுக்கிறார். இதைத் தொடர்ந்து வேறு பல இடங்களில் பெண் பார்க்கப் போயும் யாரும் சம்மதிக்கவில்லை.
இவர்களின் பெண் பார்க்கப் போகும் படலம் அந்தத் தெருவுக்கே தெரிகிறது. அனைவரின் வாயிலும் சுஜாதாவும் அவரது மகனும்தான் விழுந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு நொந்து போன நிலையில் இருக்கும் சுஜாதாவிற்கு திருவாரூரில் ஒரு பெண் இருப்பதாகச் செய்தி வர அங்கே போகிறார்கள்.
ஊர் முழுக்க கடன் வாங்கி வைத்திருக்கும் மன்சூரலிகானின் பெண் அர்த்தனாவை பார்த்தவுடன் ஜி.வி.பிரகாஷூக்கு பிடித்துப் போய்விடுகிறது. பெண்ணுக்கும்தான். பூ வைக்கும் நாளையும் குறிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் அந்த ஊர் எம்.எல்.ஏ.வின் மகன் ஹீரோயினை தான் ஒன் சைடாக லவ்வுவதாகவும், தான்தான் அவளைத் திருமணம் செய்து கொள்வேன்.. இதற்கு பரிகாரமாக மன்சூரலிகானின் கடன் பிரச்சினையை தான் தீர்த்து வைப்பதாகவும் சொல்ல.. மன்சூரலிகானின் மனம் மாறுகிறது.
பூ வைக்கும் விசேஷத்திற்காக பேருந்தில் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷிடம் “பூ வைக்க யாரும் வர வேண்டாம். கல்யாணம் கேன்சல்..” என்கிறார் மன்சூரலிகான். இதைக் கேட்டு சுஜாதா கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார்.
இன்னொரு பக்கம் ஜி.வி.யும், அர்த்தனாவும் ஒருவரையொருவர் மறக்க முடியாமல் தவிக்கிறார்கள். அர்த்தனாவின் தாய் கோவை சரளா எப்படியாவது தனது கணவரை ஏமாற்றி காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்.
இறுதியில் என்ன நடக்கிறது..? காதலர்கள் திருமணம் நடந்ததா..? அல்லது மன்சூரலிகானின் விருப்பப்படி நடந்ததா…? என்பதுதான் படத்தின் திரைக்கதை.
‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் பாக்யராஜ்-சுலக்சனா கல்யாணத்தை நடத்தி வைக்க போராடுவார் நம்பியார். இதில் அதையே கொஞ்சம் மாற்றி கணவருக்குத் தெரியாமல் ஹீரோயினின் அம்மாவே அதனைச் செய்து வைக்கப் போராடுவதாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
கோவை சரளாவின் அடுத்தடுத்த சமாளிப்புகளால் ஆங்காங்கே சிரிப்பலை எழும்பினாலும், இதற்கு தோதான மத்தளமாகவும் இருக்கிறார் மன்சூரலிகான். வில்லத்தனத்தை ஒளித்து வைத்துவிட்டு கொஞ்சம் காமெடி பக்கமும் திரும்பியிருக்கிறார் மன்சூரலிகான்.
கடன் கொடுத்தவர்களின் பெயர்களை 1 லட்சம், 2 லட்சம், 50 ஆயிரம் என்றெல்லாம் பெயர்களை வைத்துவிட்டு போன் வந்த பின்பு அதை எடுக்காமல் தவிப்பதும், கடன்காரர்களை சமாளிக்கும்விதமும் இவருக்குள்ளேயும் இருக்கும் ஒரு காமெடிக்காரனை வெளிக்கொணர்ந்திருக்கிறது.
இறுதியில் அத்தனை கோபமானாலும் பேத்தியை பார்த்தவுடன் கூலாகி அனைவரையும் மன்னித்து தாத்தாவாகிவிடும் காட்சியில் பாண்டிராஜின் அழகான வசனங்களால் நம் மனம் கவர்கிறார் மன்சூரலிகான்.
கொங்கு தமிழில் இழுத்துப் பேசும் வசன நடை இருக்கும்வரையிலும் கோவை சரளாவை யாரும் அசைச்சுக்க  முடியாதுதான். டைமிங்கான இவரது பல வசனங்கள்தான் இடைவேளைக்கு பின்னான திரைக்கதையில் கொஞ்சம், கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறது.
இன்னொரு புலம்பல் அம்மாவாக சுஜாதா. முணுக்கென்றால் தற்கொலைக்கு முயலும் கேரக்டர். எப்படியாச்சும் பொய் சொல்லியாவது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கும் அப்பாவி அம்மா. அந்தக் கேரக்டரை கச்சிதமாகச் செய்திருக்கிறார் சுஜாதாம்மா.
யோகிபாபு படம் நெடுகிலும் ஜி.வி.யுடனேயே வந்து கொஞ்சம் அலப்பறை செய்திருக்கிறார். டைமிங்சென்ஸ் காமெடியில் யோகியும் ரொம்பவே தேறிவிட்டார். வெல்டன் ஸார்..!
ஹீரோயின் அர்த்தனாவைவிடவும் ஜி.வி.பிரகாஷால் காதலிக்கப்படும் பெண்ணாக நடித்தவர் மிகச் சிறப்பாக தனது நடிப்பைக் கொட்டியிருக்கிறார். ஆனால் குளோஸப் காட்சிகளில்தான் பார்க்க சகிக்கவில்லை.
அறிமுக நடிகையான அர்த்தனாவின் அழகு ஈர்ப்பாக இருந்தாலும், நடிப்பு திறமையைக் காட்டுதற்கு படத்தில் பெரிதாக ஸ்கோப் இல்லாததால் அடுத்தடுத்த படங்களில் இவரைப் பார்த்துக் கொள்வோம்.
ஹீரோ ஜி.வி.பிரகாஷ் தனக்குத் தோதான கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கிறார் போலும். இது அவருக்கு தோதாத தைக்கப்பட்ட சட்டைதான். கலர், கலரான பட்டன்களை வைத்து கலர்புல்லாக இருந்தாலும், துணி பழைய காலத்து துணி என்பதால் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.
சின்னப் பையனை போன்ற அவரது தோற்றமே பல கதைகளை இன்னும் அவருக்குக் கொடுக்கக் காத்திருக்கின்றன. நடிப்பில் கோலம் போட்டு சொல்லும் அளவுக்கு இந்தப் படத்திலும் எதுவும் இல்லை. எல்லாம் வெறுமனே புள்ளி வைத்து சேர்த்து வைத்தது போலத்தான் இருக்கிறது.
எம்.எஸ்.விவேகானந்தனின் ஒளிப்பதிவு வண்ணக் கலவை. கிரேடிங்கை சூப்பராக செய்திருக்கிறார்கள். இசையில் ‘சண்டாளி’ பாடல் கேட்கும் ரகம். ஆனால் ‘சண்டாளன்’ என்கிற பெயரில் ஒரு சாதி இருக்கிறது என்பதையும் மறந்து போய் அனைத்து பாடலாசிரியர்களும் இதே வார்த்தையில் பாடல்களை புனைவது காலம் கடந்த கொடுமையாய் தொடர்கிறது.
‘உருட்டு கண்ணால’ பாடல் காதல் ரசம் சொட்டச் சொட்ட படமாக்கியிருக்கிறார்கள். இதேபோல் ‘வச்சு செஞ்சாச்சு’ ஆட வைக்கும் பாடல். பாடல்கள், இசையில் குறைவில்லாமல்தான் தந்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்குமார்.
கேஸ்ட்டிங்கில் மற்ற கேரக்டர்களுக்கு பார்த்து பார்த்து தேர்வு செய்த இயக்குநர் எம்.எல்.ஏ. மகன் கேரக்டரில் மட்டும் ஏன் சறுக்கினார் என்று தெரியவில்லை. அது கேமிராவுக்கு ஏற்ற முகமல்ல. அதேபோல் நடிப்பும் சுத்தமாக இல்லை. வீணாகிவிட்டது அந்தக் கேரக்டர்.
‘வசனம்-பாண்டிராஜ்’ என்றார்கள். சிற்சில இடங்களில் அது தெரிகிறது. ஆனால், திரைக்கதையில் சொதப்பல் இருக்காது என்று நினைத்தால் படு சறுக்கலைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு எம்.எல்.ஏ. பையனுக்கு தான் காதலிக்கும் பெண் சென்னையில் எங்கே, எந்த நிறுவனத்தில் என்ன மாதிரியான வேலையில் இருக்கிறாள் என்பதைக் கண்டறிய முடியாதா என்ன..? அப்படியொரு சப்பையாக எம்.எல்.ஏ. மகனின் கேரக்டர் ஸ்கெட்ச்சை உருவாக்கியிருக்கிறார்கள்.
கட்டிய மனைவியே “கணவரை 6 மாசத்துக்கு ஜெயிலிலேயே வைத்திருந்தால் அதற்குள்ளாக திருமணத்தையும் முடித்துவிட்டு புள்ளையையும் பெற்றுக் காண்பித்து அவர் மனதை மாற்றிவிடலாம்…” என்று சொல்வதெல்லாம் டூ மச்சாகத் தெரியவில்லை..?
விசாரணை கைதியை அதுவும் ஜாமீன் கிடைக்காமல் வாடிக் கொண்டிருந்தவரை 6 மாதத்திற்குள்ளாக அண்ணா பிறந்த நாளுக்காக விடுதலை செய்துவிட்டதாக மன்சூரலிகான் சொல்வது உலக மகா காமெடி. பாண்டிராஜ் பங்கெடுக்கும் படத்தில் இப்படியொரு கொடுமை இருக்கலாமா..?
ஒரு எம்.எல்.ஏ.வின் மகனால் லோக்கலில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் சிக்கிய தன் வருங்கால மாமனாரை உடனடியாக ஜாமீனில் எடுக்க முடியாதா என்ன..?
இது மாதிரி லாஜிக்கே பார்க்காமல், காமெடியை மட்டுமே நினைத்து படத்தைப் பாருங்கள் என்றால் காமெடி எங்கேயிருக்கிறது என்று தைரியமாகத் திருப்பிக் கேட்கலாம். அப்படித்தான் இருக்கிறது படத்தின் மேக்கிங்.
1990-ம் காலத்து கதையை அதே பழைய திரைக்கதை யுக்தியோடு கொணர்ந்திருக்கிறார் இயக்குநர். திரைக்கதையிலும், படத்தின் மேக்கிங்கிலும் புதுமை எதுவும் இல்லாததால், இந்தப் படமும் பத்தோடு பதினொன்றாகவே காட்சியளிக்கிறது.

0 comments: