கோலிசோடா - சினிமா விமர்சனம்

30-01-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சாலை ஓரங்களில் சில சமயங்களில் நம் கண்ணில்படும் அழுக்கு உடையணிந்த சிறுவர்களை பார்க்கின்றபோது நம்ம நிலைமை எவ்வளவோ தேவலையப்பா என்றுதான் நினைக்கத் தோன்றும்.. தெருக்களில் கிடக்கும் பொருட்களை அள்ளி தோளில் சுமக்கும் சாக்குப் பைகளில் போட்டுக் கொண்டு ரோட்டோர டீக்கடைகளில் பன்னும், டீயும் குடித்துவிட்டு அக்கம்பக்கம் மலங்க மலங்க விழிக்கும் சிறார்களை பார்த்து பயந்ததுண்டு.. பாவப்பட்டதுண்டு.. இப்படிப்பட்ட வாழ்க்கை இவர்களுக்கு ஏன் முருகா என்று வருந்தியதுண்டு..!

காய்கனிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் உள்ளே நுழையும்போதே, அதன் பின்னாலேயே ஓடி வந்து துண்டு போட்டு மூட்டைகளை இறக்க அனுமதி கேட்கும் சிறார்களை இன்றைக்கும் கோயம்பேட்டுக்கு போனால் நீங்கள் பார்க்கலாம். ஒரு மூட்டையை இறக்கினால் 5 ரூபாய்.. இப்படித்தான் அந்த அதிகாலை வேளையில்  4 மணியில் இருந்து 8 மணிக்குள்ளாக வரும் அனைத்து வண்டிகளுக்கும் ஆளாய்ப் பறப்பார்கள் அந்த சிறுவர்கள். அதில் வரும் காசுதான் அவர்களின் அன்றாடப்படி.. 

இந்தச் சிறுவர்களின் தாய் தந்தை யார்.. குடும்பம் எங்கே..? உற்றார், உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எவருக்கும் தெரியாது.. ஏன் அவர்களுக்கே தெரியாது.. அது பற்றிய சிந்தனையே இல்லாமல் கிடைக்கின்ற காசில் சாப்பிட்டுவிட்டு மீண்டும், மீண்டும் உழைத்துக் கொண்டேயிருக்கும் 4 சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சின்ன கதைதான் இந்த கோலிசோடா..!

புள்ளி, குட்டிமணி, சித்தப்பா, சேட்டு என்ற நான்கு சிறுவர்களும் ஆச்சியின் கடையில் ஏற்றல் இறக்கல் வேலைகளைச் செய்து பிழைத்து வருகிறார்கள்.. இவர்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டும் என்று நினைக்கும் ஆச்சி.. கோயம்பேடு மார்க்கெட்டையே கைக்குள் வைத்திருக்கும் மீட்டர் வட்டி தாதா நாயுடுவின் உதவியை நாடுகிறாள். நாயுடு பலவித யோசனைகளுடன் மூடிக் கிடக்கும் ஒரு கடையைக் கை காட்ட.. அதில் ஆச்சி மெஸ் உருவாகிறது..!

இந்தப் பையன்களின் கடின உழைப்பில் ஆச்சியின் அரவணைப்பில் மெஸ் ஓஹோவென ஓடிக் கொண்டிருக்கும்போது நாயுடுவின் மைத்துனன் மயிலின் வில்லங்கத்தால் அதில் ஓட்டை.. ஒரு இரவு நேரம் குடித்துவிட்டு.. பஸ்ஸுக்காக காத்திருந்த பெண்ணை நைச்சியமாக அங்கே அழைத்து வந்து ஏமாற்றி அனுபவித்துவிட்டு.. அங்கேயே தூங்கியிருந்து காலையில் எழுந்தும் டார்ச்சர் செய்யும் மயிலை இந்தப் பையன்கள் அனைவரின் முன்பாகவும் அடித்துவிட.. பிரச்சினை இங்கேயிருந்துதான் துவங்குகிறது..!

கவுரவம் என்ற ஒற்றைச் சொல்லுக்காகவே உயிர் வாழும் நாயுடு.. இது தன்னுடைய கவுரவப் பிரச்சினை என்று சொல்லி பையன்களை அடிக்கச் சொல்லி ஏற்பாடு செய்ய.. அதுவும் சொதப்பலாகி.. போலீஸ் கேஸாகிறது.. மறுபடியும் ரவுண்டு கட்டி அடித்து பையன்களை பிரித்து இந்தியாவின் ஆளுக்கொரு மூலையில் கொண்டு போய் தள்ளுகிறார்கள்.. 

இராப்பகலாக உழைத்து, உழைத்து உருவாக்கிய அந்தக் கடையை நம்பியே வாழ்ந்திருந்த அந்த நால்வருக்கும் அந்தக் கடையை விட்டுக் கொடுக்க மனசில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் தனித்தனியே பிரிந்திருக்கிறாகள். அவர்களது உற்ற தோழியாக இருக்கும் ஏடிஎம் என்ற சீதா, இவர்களைத் தேடிப் பிடித்து ஒன்று சேர்க்க.. இவர்களுக்குள் ஒரு வைராக்கியம் பிறக்கிறது. எப்பாடுபட்டாவது அந்த ஆச்சி மெஸ்ஸை மீட்டே தீர வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அதனை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதுதான் மிச்சம், மீதி படம்..!

ஏற்கெனவே ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தினை இயக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், அதைவிட பரபரப்பாக இந்தப் படத்தினை படைத்திருக்கிறார்..! முதல் பாதியில் முக்கால்வாசி நேரமும் படம் எதை நோக்கி போகிறது என்பதே தெரியாமல் இருந்தாலும் இடைவேளையின்போதுதான் படத்தின் கதையே துவங்குகிறது.. அங்கிருந்து துவங்கும் விறுவிறுப்பான திரைக்கதையை அதன் டெம்போ குறையாமல் கடைசிவரையிலும் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்..! 

அந்தச் சிறுவர்கள் நான்கு பேரும் ஷார்ப்பான செலக்சன்.. ஒவ்வொருவருக்கும் வைத்திருக்கும் பட்டப் பெயர்கள்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணப் பெயர்கள் எல்லாமே நகைச்சுவை ததும்பிய சோகங்கள்..! அந்த வயதுக்கே உரித்தான எதிர் பாலின கவர்ச்சி.. அதை அடையும் பொருட்டு அவர்கள் செய்யும் குட்டிக் கலாட்டாக்கள்.. அதன் எதிர்வினை.. பள்ளிக்குச் செல்லும் மாணவியிடம் செல்போனை வைத்து டிராமா போடுவது.. பின்பு அவள் யாரென தெரிந்து ஜெர்க் ஆவது.. ஆச்சி அவர்களை அதன் பின்பும் அரவணைப்பது என்று சட்டு சட்டென்று திரைக்கதை மாறினாலும், ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு கூட்டத்தின் பாசம், நேசம், அன்பு, முட்டல், மோதல்களை இயல்பாகவே சொல்லியிருப்பதால் ரசிக்க முடிகிறது..!

நான்கு பையன்களின் கடின உழைப்பை மயிலுடனான சண்டை காட்சியில் காண முடிகிறது.. மிக பரபரப்பான அந்தச் சண்டை காட்சியை அமைத்துக் கொடுத்திருக்கும் சண்டை பயிற்சியாளரையும் அதனை கச்சிதமாக படம் பிடித்திருக்கும் விஜய் மில்டனையும் எவ்வளவு பாராட்டனாலும் தகும்.. அந்த ஒரு காட்சிக்கே காசு செத்துச்சு எனபார்களே... அந்த டயலாக்கை இந்தப் படத்தின் இந்தக் காட்சிக்கு சொல்லிக் கொள்ளலாம்..!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேரக்டர் ஸ்கெட்ச்.. மந்திரவாதி என்ற இமான் அண்ணாச்சிக்கு ஒரு சோகக் கதை.. அவ்வப்போது இவர் செய்யும் அலப்பறைகள்தான் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.. போலீஸ் ஸ்டேஷனில் தண்ணியடித்துவிட்டு குடிகாரர்களின் சார்பாக இவர் பேசும் வசனங்கள் நிச்சயம் உம்மணா மூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும்.. 

யாமெனி கேரக்டரைவிட ஏடிஎம் என்னும் அந்தச் சின்னப் பெண்ணின் தேர்வும், நடிப்பும் கச்சிதம்.. இப்படியொரு கேரக்டரை படைத்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள்.. மெஸ்ஸின் வாசலில் பையன்களை நையப்புடைக்கும் காட்சியில்  யாமெனியும், ஏடிஎம்முன் உட்புகும் காட்சிகளும், சண்டையில் அவர்களுக்கு உதவுகின்ற போர்க்களமும் ஒரு வித்தியாசமான உணர்வை பார்வையாளர்களுக்கு நிச்சயம் தரும்.. இதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணாமாகவும் இருக்கலாம்..!

சேலம் சுஜாதாவிற்கு மிக அழுத்தமான கேரக்டர்.. தன்னை கிண்டல் செய்வதைக்கூட தாங்கிக் கொண்டு பையன்கள் மீது உண்மையான அன்பு வைத்திருந்து அவர்களுக்காக செய்யும் உதவிகளும்.. தன் மகளை சைட் அடிக்கிறார்கள்.. ஒரு பையன் காதலிக்கிறான் என்று தெரிந்தும் உதவிகளைத் தொடர்ந்து செய்வதும்.. மார்க்கெட் சங்கத் தேர்தலில் நிற்க வந்து நின்று, நாயுடுவிடம் தப்பு பண்ணிட்ட.. என்று முறைப்பு காட்டும்விதத்திலும்   இந்த ஆச்சி அசத்தியிருக்கிறார்..

ஒளிப்பதிவின் நாயகனே படத்தின் இயக்குநர்தான் என்பதால் ஒளிப்பதிவு பற்றி சொல்லியா தர வேண்டும்..? கோயம்பேட்டின் பிரமாண்டத்தை பல காட்சிகளில் படம் பிடித்துக் காட்டியிருக்கும் இவரது கேமிரா இருட்டிலும்கூட மென்மையான ஒளியில் காட்சிகளை மிக அழகாக படமெடுத்திருக்கிறது.. ஒரு பக்கம் கேரளா.. இன்னொரு பக்கம் அரபிக் கடல்.. இன்னொரு கோணம் பெளத்த கோவில்.. என்று பல இடங்களிலும் இந்த கேமிரா கவிஞனின் கேமிரா இயங்கியிருக்கிறது.. 

துண்டு துண்டான சில பாடல் காட்சிகள் இருப்பதுதான் ஒரேயொரு குறை.. ஆனாலும்  இசையமைப்பாளர் பின்னணி இசையில்தான் அதிக கவனம் செலுத்தி அதிரடி ஆடியிருக்கிறார்..  சம்பந்தமே இல்லாமல், கடைசியான ஒரு பாடல் காட்சியில் புவர் ஸ்டார் சீனிவாசனும், ஆண்டர்சனும் செம ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.. வெகுஜன ரசிகர்களையும் கொஞ்சம் திருப்திப்படுத்த வேண்டியிருக்கிறது என்கிறார் இயக்குநர். இயக்குநர் பாண்டிராஜின் வசனங்கள் படத்திக்கு மிகப் பெரிய பலமாகவே அமைந்திருக்கிறது.. பையன்களின் சோக்க் கதையை வசனத்தாலேயே கடந்து செல்கிறார்.. ஆச்சியை மருத்துவமனையில் நாயுடு மிரட்டும்போது நான் நேத்தே செத்து போயிட்டேன் என்று சொல்லும் அந்த ஒரு வரி வசனம் பல கதைகளைச் சொல்கிறது.. இமான் அண்ணாச்சி போலீஸிடம் பேசும் வசனங்கள்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயுடுவை சமாதானப்படுத்த முயலும் காட்சிகள்.. இறுதியில் தங்களுக்கென இருக்கும் ஒரேயொரு அடையாளமே அந்த ஆச்சி மெஸ்தான் என்பதை மட்டுமே பையன்கள் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அவர்கள் பையன்களாகவே இருக்கிறார்கள் என்பதை நாயுடுவுக்கும், ஆடியன்ஸுக்கும் கச்சிதமாகப் புரிய வைத்திருக்கிறார்கள்..!   

நாயுடுவின் கேரக்டர் ஸ்கெட்ச்.. கவுரவத்திற்காக அவர் எதையும் செய்வார் என்பதையும் அளந்து, அளந்து வசனத்தில் கொடுத்திருக்கிறாகள்.. மெஸ்ஸில் ஒரு பெண்ணை பயன்படுத்தியதற்காக மயிலையும் அடித்துவிட்டு, பையன்கள் அடித்தது தப்பு.. அது எனக்கு கவுரவப் பிரச்சினை.. என்று சொல்லி குண்டை தூக்கிப் போடும் அந்த கவுரவமான நடிப்புக்கு ஒரு சோடா கடையையே எழுதி வைக்கலாம்..! மனிதர் வாழ்ந்திருக்கிறார்.. மொட்டையடித்த நிலையில் பையன்களை தேடி வந்து உதைக்கும் காட்சியிலும், அந்த கிளைமாக்ஸில் அவருக்கு இருக்கும் அந்தச் சின்ன டிவிஸ்ட்டும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது..!

இத்தனை நல்லவராக இருப்பவர் ஏன் கவுரவத்தை முதன்மையாக நினைக்கிறார்..? அடித்துத் துரத்துபவர் கொலையே செய்திருக்கலாமே..? ஆளுக்கொரு மூலையில் கொண்டு போய்விடப்பட்டவர்கள்.. ஒரு சின்னப் பெண்ணின் முயற்சியால் ஒன்றிணைவது சாத்தியமா..? சின்ன பையன்களை நம்பி ஆச்சி தன்னையே பணயம் வைப்பது.. இத்தனை பெரிய ரவுடிக்கு எதிராக களமிறங்க ஒரு நொடியில் முடிவெடுப்பது.. ஆத்தாவை பாசத்துடன் கட்டியணைத்த நிலையிலேயே ஆர்வத்தில் பெண்ணின் கையையும் பிடித்திழுக்கும் காதல் காட்சி..  சில இடங்களில் அவர்களது வயதுக்கு மீறிய வசனங்கள்.. கோயம்பேட்டில் எது நடந்தாலும், போலீஸின் கைகள் கட்டப்பட்டிருப்பது.. போன்ற காட்சிகளெல்லாம் படத்தின் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்ப்பதாகவே இருந்தாலும், திரைக்கதையின் வேகத்தில் இதுவெல்லாம் வீட்டுக்கு வந்த பின்புதான் தோன்றுகிறது..!

இதில் இருக்கும் டிவிஸ்ட்டுகளும், சில காட்சிகளும் பலமான குறியீடுகளாகவே படத்தில் தென்படுகின்றன.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் படம் அவார்டு படமாகும் சூழல் வருவதால் அதனை நாம் தவிர்த்துவிடுவோம்..! சின்னச் சின்ன குறைகளை  பொருட்படுத்தாமல் விட்டோமானால்.. வழக்கு எண் போலவே இந்தப் படமும் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக நிச்சயம் கருதப்படும்.. இயக்குநர் விஜய் மில்டனுக்கும், நடித்தவர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள். வாழ்த்துகள்.. இந்தப் படம் நிச்சயம் பல விருதுகளை வாரிக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை..! 

மிஸ் பண்ணிராதீங்க..!

5 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

தளம் காணாம போய் மீண்டப்பின் பதிவுகளே காணோனு பார்த்தால்,இத்தனை பதிவுகள் போட்டு இருக்கீங்களே,அவ்வ்!

எனக்கு பழையப்பதிவு தான் கண்ணில் பட்டுது அதில் கருத்தை சொல்லி வச்சேன்.

#//காய்கனிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் உள்ளே நுழையும்போதே, அதன் பின்னாலேயே ஓடி வந்து துண்டு போட்டு மூட்டைகளை இறக்க அனுமதி கேட்கும் சிறார்களை இன்றைக்கும் கோயம்பேட்டுக்கு போனால் நீங்கள் பார்க்கலாம்.//

என்னிக்கு போய் பார்த்திங்க அவ்வ்!

சின்னப்பசங்களுக்குலாம் லோட்மேன் வேலையே அங்க இல்லை அவ்வ்!

அங்க வர மூட்டைகளை எல்லாம் சின்னப்பசங்க எறக்கவே முடியாது...சுமார் 100 கி.கி இருக்கும்.

# லோட் மேன் யூனியன் ஆளுங்களை தவிர யாரும் லாரில ஏறி இறக்க முடியாது,தனியா ஆளு வச்சு இறக்க பார்த்த வியாபாரிய ரவுண்டுக்கட்டி பஞ்சாயத்து செய்ததை நானே பார்த்துள்ளேன்.

# 14-15 வயசில் வேலை செய்றாங்க,ஆனால் எடுபிடி வேலை அல்லது "கழிவு காய்கள் பொறுக்குவது",சில்லறை வியாபாரத்துக்கு வாங்குபவர்களுக்கு குட்டியானை எனப்படும் லோட் ஆட்டோவில் ஏற்ற வேலை செய்வது.

# காமன் மேன்களுக்கு டேஞ்சரான ஏரியா, ஒர் ஓரமா பிஸ்ஸடிக்க போனால் கூட அங்கே யாராவது ஜல்சா செய்துக்கொண்டிருப்பதை காணலாம்,என்னமோ அவன் ஊட்டு பெட்ரூல எட்டிப்பார்த்தாப்பொல நம்மளத்தான் திட்டுவானுங்க அவ்வ்!

#//கோயம்பேட்டில் எது நடந்தாலும், போலீஸின் கைகள் கட்டப்பட்டிருப்பது.. போன்ற காட்சிகளெல்லாம்//

கோயபேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலைய கடைக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் போலீஸ் மூக்கை நுழைக்காது.

காரணம் எல்லா கடைகளும் அரசியல்பினாமிகளது.

ஒரு முறை லோட் மேன்கள் இருப்பிரிவினராக சண்டைப்போட்டுக்கொண்டதற்கு கலைக்க போன போலீசை லோட்மேன்கள் எல்லாம் சேர்ந்து அடிப்பின்னிட்டாங்க அவ்வ்!

இந்துல கூட நியுஸ் வந்தது,அதெல்லாம் படிக்க மாட்டிங்களா?

உசிலை விஜ‌ய‌ன் said...
This comment has been removed by the author.
உசிலை விஜ‌ய‌ன் said...

என்ன ஆச்சு ஏன் நீண்ட நாளாய் கணவில்லை. உங்கள் பக்கம் முடங்கி கிடந்தது?

சரி என்ன படம் பார்த்த்தீர்கள் நீங்கள்?
ஏன் பசங்களை கொலை செய்யவில்லைன்னு படத்துலையே சொல்லியிருப்பாருல்ல(அவரது இரண்டாவது மனைவி நிறைமாத கர்பிணியா இருப்பதால்).

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, தளம் காணாம போய் மீண்டப்பின் பதிவுகளே காணோனு பார்த்தால்,இத்தனை பதிவுகள் போட்டு இருக்கீங்களே,அவ்வ்!
எனக்கு பழைய பதிவுதான் கண்ணில்பட்டுது அதில் கருத்தை சொல்லி வச்சேன்.]]]

வருகைக்கு மிக்க நன்றிகள் வவ்ஸ்..!

[[[#//காய்கனிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் உள்ளே நுழையும்போதே, அதன் பின்னாலேயே ஓடி வந்து துண்டு போட்டு மூட்டைகளை இறக்க அனுமதி கேட்கும் சிறார்களை இன்றைக்கும் கோயம்பேட்டுக்கு போனால் நீங்கள் பார்க்கலாம்.//

என்னிக்கு போய் பார்த்திங்க அவ்வ்!
சின்னப் பசங்களுக்குலாம் லோட்மேன் வேலையே அங்க இல்லை அவ்வ்!
அங்க வர மூட்டைகளை எல்லாம் சின்னப் பசங்க எறக்கவே முடியாது. சுமார் 100 கி.கி இருக்கும்.
லோட் மேன் யூனியன் ஆளுங்களை தவிர யாரும் லாரில ஏறி இறக்க முடியாது, தனியா ஆளு வச்சு இறக்க பார்த்த வியாபாரிய ரவுண்டு கட்டி பஞ்சாயத்து செய்ததை நானே பார்த்துள்ளேன்.]]]

இப்போ போய் பாருங்கண்ணே..! என்ன நடக்குதுண்ணு..? லோடுமேனுகளுக்கு உதவியாளர்களா பல சின்னப் பசங்க வேலை செஞ்சுக்கிட்டிருக்காங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[உசிலை விஜ‌ய‌ன் said...

என்ன ஆச்சு ஏன் நீண்ட நாளாய் கணவில்லை. உங்கள் பக்கம் முடங்கி கிடந்தது? சரி என்ன படம் பார்த்த்தீர்கள் நீங்கள்? ஏன் பசங்களை கொலை செய்யவில்லைன்னு படத்துலையே சொல்லியிருப்பாருல்ல(அவரது இரண்டாவது மனைவி நிறைமாத கர்பிணியா இருப்பதால்).]]]

மால்வேர் வைரஸ் அட்டாக்கினால் தளம் முடக்கப்பட்டிருந்தது. அதனால்தான் இவ்ளோ லேட்டு..?

கொலை செய்யாமல் விடுவது.. ஒரு ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்ஷிப்புக்காக..! இன்னொரு முறை படத்தை பாருங்கள்.. புரியும்..!