06-08-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கதைக்குள்ள போறதுக்கு முன்னால 2 மாசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தைப் பத்திச் சொல்றேன்.. மதுரையின் இலக்கியச் செல்வர் கார்த்திகைபாண்டியனின் திருமணத்திற்கு மதுரை செல்வதற்காக நானும், அண்ணன்கள் தண்டோராவும், வாசுவும் பெருங்களத்தூர் பஸ்ஸ்டாண்டில் ஒரு மதியவேளையில் மொட்டை வெயிலில் நின்று கொண்டிருந்தோம்.
எங்களுக்குச் சற்றுத் தொலைவில் 3 பெண் குழந்தைகள், 1 பையனுடன் கணவன், மனைவி நின்றிருந்தனர். அந்தாள் மனைவியிடம் “காசு கொடு காசு கொடு” என்று செல்போனை பிடுங்குவதும், பர்ஸை பிடுங்குவதுமாக கெஞ்சிக் கொண்டிருந்தான். மனைவியோ வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் வீசியெறிந்து அவனை கேவலப்படுத்திக் கொண்டிருந்தாள்.. “டேய்.. டேய் நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..? உனக்கெல்லாம் பொண்டாட்டி, பிள்ளைக ஒரு கேடா.. சம்பாதிக்க துப்பில்லை.. குடிக்க காசு கேக்குதா உனக்கு..?” என்று எட்டியிருந்த கடைக்காரர்களுக்கூட கேட்கும் அளவுக்கு திட்டித் தீர்த்தாள்.. ஆனாலும் நம்மாளு இம்மியும் அசையவில்லை. காசு கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தான்.. ஒரு அளவுக்கு மேல் அதைப் பார்க்கவே கடுப்பாக இருந்தது.. இத்தனை பேர் சுற்றி நிற்குமிடத்தில் இப்படி கேவலப்படுகிறோமோ என்ற சொரணைகூட இல்லாத அந்தக் குடிகாரனை காலில் கிடப்பதை எடுத்து நாலு சாத்து சாத்தலாம் போலத்தான் தோன்றியது..!
குடிகாரர்களின் உலகம் புரிந்து கொள்ள முடியாததுதான்.. ச்சும்மா ஜாலிக்குக் குடிக்கிறோம் என்று குடிப்பவர்கள்கூட ஒரு பெக் உள்ளே போனவுடன் ஊரில் இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளும் தன்னைச் சுற்றியே நடப்பதாக நினைத்து அளந்துவிடுவார்கள்..! பிரச்சினைகளோடு இருப்பவர்கள் அதனை மறக்கவே குடிக்கிறேன் என்று சொன்னாலும், மீண்டும், மீண்டும் அதனுடையே உழல்வார்கள்..!
ஆனால் இதில் இருக்கும் ஒரேயொரு அழகான முரண்பாடு எனில், அத்தனை தீவிரமான குடிகாரர்களும் மிகுந்த பாசக்காரர்களாக இருக்கிறார்கள்..! அவர்களுடைய குடியே அவர்களை அன்னியப்படுத்துகிறது என்பது அவர்களுக்கு புரிந்தாலும், பாசத்தையும் வெளிப்டுத்த்த் தெரியாமல், குடிப்பதையும் நிறுத்த முடியாமல்.. தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்..! இந்த முரண்பாட்டை எனது தந்தை, நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலரிடமும் கண்டிருக்கிறேன்..!
விபச்சார விடுதியினை போலவே டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் பற்றியும் அது பற்றி அறியாத மக்களுக்கு ஒரு ஆர்வம் இருக்கிறது..! விதம்விதமான குடிகாரர்கள் ஒன்று கூடும் அந்த இடத்தில், ஒரு நாளில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதனால்தான் தைரியமாகவே இதில் கதை என்று எதுவும் இல்லை என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். இந்தத் தைரியத்துக்கு முதலில் எனது சல்யூட்..!
டாஸ்மாக் ஊழியர்.. பார் ஓனர்.. 2 சப்ளையர்கள்.. பார் ஓனரின் மகள்.. பார் கிளீனர்கள்.. பாத்திரம் கழுவும் அம்மா.. சமையல்காரர்.. குடிக்க வரும் அன்றாட வாடிக்கையாளர்கள்.. மாமூல் போலீஸ்காரர்.. என்று இவர்களையே சுற்றிச் சுற்றி வருகிறது கதை..!
பத்து காசு பாக்கெட்டில் இல்லாமல் பாருக்குள் நுழைந்து டீஸண்ட்டாக பிச்சையெடுத்து ஓசி சரக்கடிக்கும் அந்த கேரக்டரும், யாரைப் பார்த்தாலும் எகத்தாளம் பேசினாலும், உணர்ச்சிவசப்பட்டால் காலில் விழுகவும் தயங்காத பெட்டிஷன் மணியும்தான் படத்தின் பிரதான கேரக்டர்கள்..! கதை இவர்களாலேயே அவ்வப்போது நகர்த்தப்படுகிறது..!
கடையில் இருந்து வெளியேறச் சொல்லும்போது போராட்டம் வெடிக்கும் என்று அறிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் பெட்டிஷன் மணியை ஏதோ பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது.. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் இந்தப் புண்ணியவான்தான் எழுதியிருக்கிறார். 2 முக்கிய பாடல்களையும் இவரேதான் பாடியிருக்கிறார்.
துவக்கத்தில் இவர் செய்யும் அலம்பல்களுக்கு ஒட்டு மொத்த பதிலடியாக காதல் தோல்வியால் சரக்கடிக்க வந்திருக்கும் இளைஞன், இவரிடம் பெண்களைப் பற்றிப் பேசும்பேச்சில் தியேட்டரே அதிர்கிறது..! இதற்கு மணி கொடுக்கும் ரியாக்ஷன்தான் சூப்பர்..!
ஓசி சரக்கடிக்கும் நபர், ஒவ்வொருவரின் சோகத்திலும் பங்கெடுத்துக் கொள்வதுபோல தானும் கொஞ்சம் லவட்டிக் கொள்வது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது..! ஒவ்வொரு பாரிலும் இப்படியும் ஒருத்தன் நிச்சயம் இருப்பான் என்கிறார்கள் வலையுல பார் அனுபவஸ்தர்கள்..
துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் ஒரே இடத்தைத்தான் காண்பிக்கப் போகிறோம் என்பதை முதலிலேயே முடிவு கட்டிவிட்டதால் காட்சிகளை மாற்றிப் போட்டு, கதாபாத்திரங்களையும் மாற்றி, மாற்றி வரவழைத்து, வசனத்தில் தேனையும், மிளகாயையும் குழைத்து, ஒரு சைட் டிஷ்ஷாக அளித்திருக்கிறார் இயக்குநர்..! படத்தின் பிற்பாதியில் கொஞ்சம் அலுப்புத் தட்டியது என்னவோ உண்மைதான்.. இருந்தாலும் பெட்டிஷன் மணியின் புண்ணியத்தில் அது சிறிது நேரத்திலேயே காணாமலும் போனது..!
இவ்வளவு களேபரத்திலும் சப்ளையரின் காதல் காட்சியில் ஒரு அதீத உடற்சேர்க்கைக்கான முன்னுரை காத்திருப்பதை முதல் காட்சியிலேயே உணர்த்துகிறார் இயக்குநர்.. காதலர்களின் லிப் டூ லிப் காட்சி இதனாலேயே கொஞ்சமும் அதிர்ச்சியைத் தரவில்லை.. அதான் முன்னாடியே எதிர்பார்த்தோமோ என்பதாலும், காதலர்கள் ஊரைவிட்டுக் கிளம்பும் இறுதிக் காட்சியும் மனதில் நிற்காமலேயே போய்விட்டது..!
இயக்குநரின் இயக்குதல் திறமை பல இடங்களில் பளீச்சிடுகிறது..! டாஸ்மாக் வாசலில் கடை திறக்க லேட்டாவது குறித்து எழும் சர்ச்சை.. வாத்தியார், பையன்கள் காட்சிகள்.. சண்டைக் காட்சியை படமெடுத்த கேமிரா கீழே தள்ளப்பட்டவுடன் அப்படியே நிலைகுத்தி நிற்க.. யாரோ தூக்கிவிட்ட பின்பு மீண்டும் சரியான இடத்துக்கு வந்து நிற்பது.. பார் ஓனர் தனது மகளின் முத்தக் காட்சியை பார்த்துவிட்ட பின்பும் அமைதி காத்து, அடியாட்கள் மூலம் காதலனை அடிக்க செட்டப் செய்யும் காட்சி.. என்று பல இடங்களில் இயக்குதலை ரசிக்க முடிகிறது..!
பாலை படத்தின் இசையமைப்பாளர் வேத்ஷங்கர்தான் இதற்கும் இசை. 4 பாடல்களில் 3 ஓகே ரகம்தான்.. பின்னணி இசையை சில இடங்களில் உலாவ்விட்டும், பல இடங்களில் அடித்து ஆடவும் அனுமதித்திருக்கிறார் இயக்குநர். உதாரணத்திற்கு சப்ளையர்களை வாடா போடா என்றழைக்கும் அந்த கேரக்டரின் வருகையின்போதும், பெட்டிஷன் மணியிடம் டிப்டாப் இளைஞன் சரக்கை ஆட்டையைப் போடும் காட்சியிலும் இசையை கேட்டுப் பாருங்கள்.. பாருக்குள் அடிதடி நடக்கும்போது அத்தனையையும் நிறுத்திவிட்டு நம்மை யோசிக்கவும் வைக்கிறார்கள்..!
சமரசம் உலாவும் இடமே பாடல் காட்சியை ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்கள். கூடவே அப்பாடல் காட்சியிலேயே அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்தியிருப்பதும் பாராட்டுக்குரியது.. “கள்ளுக் குளம் வெட்டி ராமன் குளிச்சதும்” பாடலை இறுதி டைட்டில் காட்சிகளில் போட்டதற்குப் பதிலாக படத்தின் நடுவிலேயே வைத்திருக்கலாம்.. மிக இனிமையாகவும் இருந்தது..
ஒரு பாரின் உள்ளரங்கை கச்சிதமாக நிர்மாணித்தது.. தப்பும் தவறுமாக தமிழில் எழுதி வைத்திருப்பது.. எதற்கும் அஞ்சாத சப்ளையர்கள் மனநிலை.. உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கேன் என்பது போன்ற அவர்களது தொடர்ச்சியான பேச்சுக்கள்.. அடாவடியாக பேசும் ஆளை சோத்துக் கையாலேயே அடித்துவிரட்டுவது.. கடை மூட இன்னும் 10 நிமிஷம் இருக்கு என்று டாஸ்மாக்கிற்கு வந்து சட்டம் பேசும் குடிமகன்கள்.. மாமூவை வெட்கமில்லாமல் வந்து வாங்கிச் சொல்லும் கான்ஸ்டபிள்.. டிப்டாப்பாக உடையணிந்து கொண்டு காலையிலேயே பொய் சொல்லி காசு வாங்கி வந்துவிட்டு.. தலைகுனிந்த நிலையிலேயே அமர்ந்திருக்கும் இளைஞன்.. ராமர் வேடத்தில் இருப்பவனை பிச்சைக்காரனை போலவும், அனுமாரை அவனுக்காக கட்டிங் வாங்கிக் கொடுக்கும் ஆளாகவும் காட்டியிருப்பது.. மதுவில் கலப்படம் செய்வது.. குடிகாரர்களின் பேச்சுக்கள் அனைத்தையும் குடியினால் விளைந்த பேச்சாகவே எடுத்துக் கொள்வதாக படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் காட்டியிருக்கும் வசனங்கள்.. என்று இது அனைத்திலும் இயக்குநரின் கைவண்ணம் அமோகம்..!
டிஜிட்டல் கேமிரா.. முற்றிலும் புதுமுகங்கள்.. சின்ன பட்ஜெட்.. இதனாலேயே இந்தப் படத்தை ஓஹோ என்று சொல்லலாமா என்கிறார்கள்..! டிஜிட்டலில் படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக இது போன்ற கதைகளை படமாக்கலாமா என்று திட்டுபவர்களும் உண்டு..! ஆனால் இது போன்ற “குறிப்பாக எது பற்றியும் இல்லாத - நான் லீனியர் வகை திரைப்படங்கள்” தமிழுக்கு நிச்சயம் புதுசுதான்..
இதையே ஒரு கோவில், ஒரு பள்ளிக்கூடம், ஒரு மருத்துவமனை என்று அமைத்திருந்தால் படம் சாதாரண தமிழ்ப் படங்களைப் போல பிரித்து மேய்ந்திருக்கலாம்.. ஆனால் இது டாஸ்மாக் பாராகவே அமைந்துவிட்டதால் இந்தக் குடிகாரர்களின் சேட்டைகளையும், அனுபவங்களையும், விரோதங்களையும், பேச்சுக்களையும், சோகங்களையும், தாகங்களையும் தமிழகத்துப் பெண்கள் பார்க்க முடியாமல் போய்விட்டது என்பது சோகம்தான்..!
“இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தாலே எப்படியும் பெண்கள் வர மாட்டார்களே.. பின்பு எப்படி தைரியமாக வைத்தீர்கள்..?” என்று இயக்குநரிடம் பிரஸ் மீட்டிலேயே கேட்டேன்.. “இது எனக்கும் தெரியும்தான்.. ஆனால் படம் வெளியான பின்பு மெளத் டாக்கினால் நிச்சயம் வருவார்கள்..” என்றார் உறுதியாக.. இப்போது வருகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்..! ஆனால் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டத்தான் வேண்டும்..!
கதையை விட்டுத் தள்ளுங்கள்.. ஆனால் இயக்கம் சூப்பர்..! தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு சிறந்த புதுமுக இயக்குநர் கிடைத்திருக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல்லாம்..! அடுத்தடுத்த படங்களில் இந்த இயக்குநர் புதுவித கதைகளில் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்..!