இராவணன் - மணிரத்னம் சொன்னதும், சொல்லாமல்விட்டதும்..!


20-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2 வருடங்களாக மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தப் படத்தினை முதல் நாளே பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அண்ணன் தடாலடி ஜி.கெளதமிற்கும், தனக்குப் பரிசாகக் கிடைத்த டிக்கெட்டை எனக்குப் பரிசாக அளித்த  அண்ணன் என்.சொக்கன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி..!

முதலில் இது இராவணன் என்கிற சராசரி தமிழ்த் திரைப்படம்தான் என்கிற நோக்கில் கொஞ்சம் படிக்கலாம்..!

எல்லை மீறிய காதலைக் காட்டியாகிவிட்டது. சத்தியவான் சாவித்திரியைப் புரட்டியாகிவிட்டது. மகாபாரத்தை பல முறை படித்தாகிவிட்டது. பகவத்கீதையை காண்பித்தாகிவிட்டது.. கடைசியாக இந்த இராமாயணத்தையும் தொட்டுவிட்டால் இதிகாசங்கள் கதை முடிந்துவிடும் என்கிற நினைப்பில் மணிரத்னம் இத்திரைப்படத்தை எடுத்தாரோ என்னவோ..?

இராமாயணம்தான் பேஸ்மெண்ட் என்று தெரிந்தவுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் அனைவருக்குமே கதையும், கதையின் முடிவும் தெரிந்துவிட்டது..! ஆனால் மணி மீதான நல்ல அபிப்ராயத்தில் மேக்கிங் எப்படி என்பதை பார்ப்பதற்காகவே பெரும் கூட்டம் செல்கிறது என்று நினைக்கிறேன்..!


பழங்குடி மக்களுக்கு தளபதியாக இருக்கிறான் வீரா என்கிற வீரய்யா(விக்ரம், - ராவணன்). இவனது அண்ணன் சிங்கம்(பிரபு- கும்பகர்ணன்), தம்பி சக்கரை(முன்னா-விபீஷணன்), தங்கை வெண்ணிலா(ப்ரியாமணி- சூர்ப்பணகை) இவனை  வேட்டையாட வருகிறார் தேவ்(பிருத்விராஜ்-ராமன்). இந்த ராமனின் காதல் மனைவி ராகினி(ஐஸ்வர்யாராய்-சீதா). ராமனும், ராவணனும், சீதையும் இருக்கும்போது அனுமானும் இருந்துதானே ஆக வேண்டும். அது கார்த்திக். இப்படி கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார்.

என்னதான் வீரய்யாவை ஊர் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும், சட்டத்தின் முன் அவன் ஒரு தேடப்படும் குற்றவாளி. தனது இன மக்களை அழித்த அதிகாரவர்க்கத்தை அவன் எதிர்த்து போராடுகிறான். அதற்கு அவனது இன மக்கள் பெரும் ஆதரவு தருகிறார்கள்.

அதிகாரத்திற்கும், மக்களுக்குமான போட்டியில் வீரய்யாவின் தங்கை வெண்ணிலா அவளது திருமண தினத்தன்றே போலீஸாரால் கற்பழிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறாள். இந்தச் சோகத்தைத் தனது அண்ணன் வீரய்யாவிடம் சொல்லியவிட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள் வெண்ணிலா.

இதற்குப் பழிக்குப் பழி வாங்க அதிகாரி தேவின் மனைவி ராகினியை கடத்திக் காட்டுக்குள் கொண்டு செல்கிறான் வீரய்யா. தனது மனைவியைத் தேடி பெரும் படையுடன் காட்டை முற்றுகையிடும் தேவ் மற்றும் காவல்துறையினருக்கும், வீரய்யா மற்றும் அவனது இனத்து மக்களுக்கும் இடையில் நடக்கும் அக்கப்போரே மிச்சம், மீதியான கதை..!

இந்திய திரைப்பட உலகின் இயக்கத்தில் தான் ஒரு குரு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் மணிரத்னம். பிரேமுக்கு பிரேம் காட்சிகளை வித்தியாசப்படுத்தியிருக்கும் மணி, சராசரி ரசிகனுக்குள் ஒரு ஈர்ப்பை உற்பத்திதான் செய்திருக்கிறார். இதற்கு அவருக்குக் கை கொடுத்திருப்பவர்கள் விக்ரம், ஐஸ்வர்யா, ஒளிப்பதிவாளர்கள் மணிகண்டன், சந்தோஷ் சிவன், எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத், கலை இயக்குநர் சமீர் சந்தா மற்றும் ஏராளமான துணை நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும்தான்..!

தன்னைத்தானே முரடனாகவும், ஒடுக்கப்பட்டவனாகவும், தாழ்த்தப்பட்டவனாகவும், முட்டாளாகவும் காட்டிக் கொள்ளும் விதமாக விக்ரமின் இயல்பும், பேச்சும் அமைக்கப் பெற்று அவருடைய பாடி லாங்குவேஜில் அத்தனை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்..!

வழக்கமான மசாலா படங்களில் தேன் தடவிய தேள் கொடுக்கைக் காட்டும்விதமான காட்சிகளில் நடித்து வந்ததற்கும், இங்கே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும், ராபின்ஹூட் வகையறாவாக தன்னை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் அவருடைய கேரக்டர் இருப்பதினால் அதனை மீறாமல் அதற்குள்ளேயே வட்டமிட்டிருக்கிறார்..!

ஐஸ்வர்யாவை விரும்புகிறாரா இல்லையா என்பதைக்கூட வெளிப்படுத்திக் காட்ட முடியாமல் தவிக்கின்ற தவிப்பையும், “இங்கேயே இருந்துவிடேன்” என்று அவர் சொல்கின்ற காட்சியும், “இருந்து விடுகிறேன்” என்று ஐஸ்வர்யா சொல்கின்ற காட்சியிலும் காட்சியோடு ஒன்றத்தான் வைக்கிறார்..!

ஏற்கெனவே 'சேது'விலும், 'பிதாமகனி'லும் பேசாமலேயே நடித்துக் காட்டியிருக்கும் விக்ரமிற்கு இதில் கொஞ்சம் அதிகமான உடல் நடிப்பைக் காட்ட வேண்டிய நிலைமை.. ஆனாலும் அந்த 'டண்டண்டக்கா' வார்த்தை உச்சரிப்பும், திருப்பித் திருப்பித் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் முறையும் எரிச்சலைக் கூட்டியதையும் மறுக்க முடியாது..

இறுதிக் காட்சியில் ஐஸ்வர்யாவை பார்த்த மாத்திரத்தில் அவர் கொள்ளும் மகிழ்ச்சியும், ஆனந்தமும்.. அதைத் தொடர்ந்து அங்கு நடக்கும் கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பும் மீண்டும் ஒரு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கும்..!

ஆனால் அதனை உறுதியாக வாங்கியே தீருவது என்கிற லட்சியத்தில் உழைத்திருக்கிறார் ஐஸ்வர்யா.. இந்த அழகு தேவதைக்கு வயதாகிவிட்டது என்பது பிரேமில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தாலும், நடிப்பு என்ற ஒன்று அதன் முகத்திலேயே குடி கொண்டிருப்பதை மணிரத்னம், ஷங்கர் அளவுக்கு பாலிவுட் இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்று தெரியவில்லை..!

முதல் முறையாக விக்ரமிடம் இருந்து தப்பிக்க வேண்டி ஆற்றில் குதித்துவிட்டு கரையேறும் நிலையில் முகத்தை மட்டும் காட்டும் அந்த ஷாட் ஒன்றே போதும்..!

“உங்க பிரச்சினைல பொம்பளைங்களை எதுக்கு இழுக்குறீங்க?” என்று கேட்டு கோபப்படும் ஐஸ்வர்யாவையும், “தின்னாத் தின்னு திங்காட்டி போ..” என்று சொல்லிவிட்டு பிரபு சோற்றை வைக்கும் வேகத்தில், அதனை எடுத்து முழுங்கும் வேகத்திலும் நடிப்பென்னவோ அம்மணிக்கு பிய்த்துக் கொண்டு வருகிறது..!

விக்ரமின் மீதான தனது ஈர்ப்பு கூடிக் கொண்டே போவதை அந்தப் பாடல் காட்சியில் நின்று காட்டுவதிலும், பிரியாமணியைக் கற்பழித்த இன்ஸ்பெக்டரை காப்பாற்றத் துடிக்கின்ற வேகத்திலும் ஐஸோ ஐஸூ..!

“அவருக்கு ஒண்ணும் ஆகலியே..” என்று திரும்பித் திரும்பிக் கேட்பதாகட்டும்.. “நான் இங்கேயே இருக்குறேன். ஆனா அவரை விட்டிருவீங்களா?” என்று கேட்கும்போது அவரிடத்தில் இருக்கும் இரட்டை மனப்போக்கை வெளிக்காட்டுகின்ற காட்சியும்....

தான் இருக்கின்ற பிரேம்களில் முழுக் கவனத்தையும் ஈர்த்திருப்பது என்னவோ ஐஸ்வர்யாதான். இது ஒன்றே போதும்.. ஐஸின் ரசிகர்கள் இந்தப் படத்தில் அவருடைய நடிப்பிற்காக நி்ச்சயம் அவரைக் கொண்டாடலாம்..

அடுத்தது பிருத்விராஜ்.. எவ்வளவு தடுத்தாலும் மலையாள வாடை அடிப்பதைத் தடுக்க முடியவில்லை. ஆனாலும் முதிர் கன்னியான ஐஸுக்கு, தம்பி மாதிரியான பிருத்வியை போட்டதை மலையாள மார்க்கெட்டுக்காக மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்..!

ரொமான்ஸ் காட்சிகளில் ஐஸ் எப்போதுமே பிய்த்து வாங்குவார். உடன் பிருத்வியுடனும் அப்படியேதானா..? “எங்க நான் வைச்சுப் பார்க்குறேன்..” என்று ஐஸின் நெஞ்சில் கை வைக்கின்ற காட்சியில் தியேட்டரே திட்டித் தீர்த்தது பிருத்வியை..!

கேரக்டர்படி தனது நடிப்பை இயக்குநர் எதிர்பார்த்ததுபோல் கொட்டிக் காண்பித்திருக்கிறார்.. அவரது அப்பாவின் வெகு இயல்பான நடிப்பை மலையாளத்தில் பார்த்து ரசித்திருக்கிறேன்..! இன்றைக்கு இவருக்கும் அது தானாகவே வருகிறது..! வந்திருக்கிறது..!

ரயிலில் ஐஸிடம் கேட்கின்ற கேள்வியை சலனமேயில்லாமல் தனது காதலி, மனைவி என்றெல்லாம் தோணாமல் விசாரணை அதிகாரியைப் போல அவர் பேசுகின்ற பேச்சும், ஐஸின் பதிலும் கச்சிதம்..! வண்டியை விட்டு இறங்குகின்ற அந்தக் காட்சி வரையிலும் அதுவொரு கவிதைதான்..!

அனுமார் வேடம் என்றால் மரம் விட்டு மரம் தாவித்தான் ஆக வேண்டுமோ.. கார்த்திக்கு அதனைக் கொடுத்து தாவ விட்டிருக்கிறார்கள்.. ஆனால் என்னவோ படத்தில் எனக்கு எரிச்சலைக் கொடுத்த கேரக்டர் இது ஒன்றுதான்..!

எல்லா கேரக்டர்களின் ஸ்கெட்ச்சுகளையும் அக்குவேறு, ஆணிவேறாக அலசியிருக்கும் மணி, கார்த்திக்கில் மட்டும் கோட்டைவிட்டுவிட்டார். தனது அணியில் இருக்கும் ஒரு இன்ஸ்பெக்டரையே சந்தேகக் கண்ணோடு பார்த்து உளவாளி என்று கண்டுபிடிக்கும் பிருத்வி, கார்த்திக் மீது காட்டும் டிபார்ட்மெண்ட் பாசத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

வீரா பற்றித் தெரிந்த மலைவாழ் மக்கள் அனைவரும் டாக்குமெண்ட்ரி ஸ்டைலில் பிருத்வியிடம் பற்ற வைக்கும் காட்சியில் அருகிலேயே அமர்ந்து கமெண்ட் அடிக்கும் கார்த்திக்கின் செயல் எரிச்சலைத்தான் தந்தது..! இதனாலேயே வீரா பற்றிய அறிமுகம் மனதில் நிற்க முடியாமல் தத்தளிக்கத் துவங்கியது முதல் சில நிமிடங்களிலேயே..!

“எந்தக் கடைலதான் அரிசி வாங்குறாருன்னு தெரியலை” என்று கோடம்பாக்கமே வருடக்கணக்காக புலம்பும் அளவுக்கு தனது உடலை பிட்னெஸாக வைத்திருக்கும் அண்ணன் பிரபு கும்பகர்ணன் கேரக்டர்.. தம்பிக்காக.. என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற அந்தக் கேரக்டரில் குறையொன்றுமில்லை..!

ஆனால் இவரது மனைவியாக வரும் ரஞ்சிதா தோன்றும் காட்சியிலெல்லாம் தியேட்டரில் கை தட்டல் தூள் பறந்தது. யாருக்குமே கிடைக்காத கைதட்டல் இது. ரஞ்சிதாவே நேரில் பார்த்தால் அழுதுவிடுவார். யாராவது போனை போட்டுச் சொல்லுங்கப்பா..!

வெண்ணிலாவான முத்தழகி.. இவரும் கார்த்தியும் இனிமேல் ஒன்றுதான்.. மேற்கொண்டு புதிதாக எதையும் இவர்களிடமிருந்து கறக்க முடியாது போலிருக்கிறது..! ஆனாலும் அந்த தெனாவெட்டு தமிழ்ச் சினிமா கதாநாயகிகளிடம் பிரியாமணியிடம் மட்டுமே முத்திப் போன முருங்கைக்காய் போல் இருக்கிறது..!

விக்ரமை முறைத்துக் கொண்டு தனது வருங்கால கணவனைக் காப்பாற்ற நினைக்கும் முயற்சியிலும், “என் புருஷனை பார்த்தீங்களா மதினி.. பயந்துக்கிட்டு ஓடிட்டாரு. இப்படியொருத்தனை புருஷனா அடையறதுக்கு நான்தான் கொடுத்து வைச்சிருக்கணும்..” என்ற அமைதியான புலம்பலின்போதும் 'பருத்திவீரன்' முத்தழகிதான் தெரிந்தார்..!

விபீஷணனாக முன்னா.. ஐஸ், விக்ரம் தவிற வேறு யாருக்கும் குளோஸப் ஷாட்களை அதிகம் வைக்காமல் தவிர்த்திருப்பதால் இவர்களது நடிப்பையெல்லாம் இவர்கள் பேசிய வசனங்களே மென்று தின்று தீர்த்துவிட்டன..!

படத்தில் கொடி கட்டிப் பறப்பவர்கள் ஒளிப்பதிவாளர்களும், கலை இயக்குநரும்..!

இந்த மாதிரியான லொகேஷன்களில் ஷூட் செய்தால் எப்படி இயற்கை ஒளி கிடைக்குமோ அதனையே மிகச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.. போலீஸாரின் டெண்ட் கொட்டகைகள் மாடுகளை வைத்து இடித்துத் தரைமட்டமாக்கும்போது கேமிராவி்ன் ஸ்பீடே காட்சியை நகர்த்துகிறது..!

ஒவ்வொரு லொகேஷனிலும் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல் உள்ளது ஒளிப்பதிவு. இரண்டு ஒளிப்பதிவாளர்களும் எதை, எதை ஷூட் செய்தார்கள் என்பது தெரியாததால் இருவருக்குமே நமது பாராட்டுக்கள்..!

மணிக்கு மிகவும் பிடித்தமான மழையும், இருட்டுமாக படத்தில் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதை பார்க்கின்றபோது இது தமிழ்ப் படம் போலத் தோன்றவே இல்லை. இந்த ஒரு வித்தியாசமான அனுபவமே இந்தப் படத்தை தூக்கி நிறுத்தப் போகிறது..!

அத்துவானக் காட்டுக்குள் அந்த சிலையை எப்படி நிறுவினார்கள் என்றுதான் தெரியவில்லை. அசத்தல்.. ஒவ்வொரு காட்சிக்கும் கலை இயக்குநரின் உழைப்பு கச்சிதம்.. போலீஸின் டெண்ட்டில் அரிக்கேன் விளக்கைக்கூட விட்டு வைக்காமல் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்..!

சிற்சில இடங்களில் லொகேஷன்களின் அற்புதமான காட்சியமைப்பில் நமது பார்வை கேரக்டர்களைத் தவிர்த்து பிற இடங்களின் மேல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை..

இரண்டு மலைகளுக்கு நடுவில் பாலத்தைக் கட்டி அதில் எடுத்திருக்கும் சண்டை காட்சிகள்.. சிறுவர்களைக் கவர வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ..? ஆனால் இக்காட்சி படமாக்கப்பட்டிருக்கும்விதம் பாராட்டுக்குரியது..!

வழக்கம்போல மணியின் சிந்தர்சைஸர் ஒலிப்பதிவு..! வசனம் என்னவோ நாலு பக்கமே இருந்தாலும் அதனை உச்சரிப்பது நாலு டெசிபலில் மட்டுமே என்றால் எப்படி..? பாதி வசனங்கள் யாருக்குமே புரியவில்லை..! இந்தப் படத்தின் வசனத்தை புத்தகமாக வெளியிட்டால் மட்டுமே முழுமையான வசனங்களை  தெரிந்து கொள்ள முடியும்..!

வழமைபோல அதே “எங்க? ஏன்..? எப்படி..? எதுக்கு..?” என்ற ஒற்றை வரி டயலாக்குகளுடன் திருநெல்வேலி ஸ்லாங்கு்ம் சேர்ந்து கொள்ள ஆளாளுக்கு அதனை ஸ்டைலிஷ் செய்து கொடுத்திருக்கிறார்கள்.. தமிழகத்தின் மெட்ரோ சிட்டிகளைத் தவிர மற்ற இடங்களில் ஊருக்கு ஒன்றிரண்டு தியேட்டர்களில்தான் சவுண்ட் சிஸ்டம் பக்காவாக உள்ளது. இந்தப் படத்தை திண்டுக்கல் சென்ட்ரல் தியேட்டரில் பார்த்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்..! ம்ஹூம்..!

“உசிரே போகுதே” பாடல் உயிரைக் குடிக்கிறது என்று பலரும் எழுதிக் கிறுக்கித் தள்ளிக் கொண்டிருக்க.. அந்தப் பாடலின் முதல் சரணம் மட்டுமே ஓரிடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. அதுவும் கடைசியில்தான் அது இந்தப் பாடல் என்பதே புரிவதைப் போல் அமைந்திருந்தது நமது துரதிருஷ்டம்..!

பின்னணி இசையில்தான் பிய்த்திருக்கிறார் ரஹ்மான்..! ஆர்ப்பாட்டமான இசை..! படத்தின் கதைக்குத் தேவைக்கேற்ப பின்னணி இசையும் இழைந்து வந்திருக்கிறது.. முதல்முறையாக தமிழ்ப் படத்தின் பின்னணி இசையில் ரஹ்மான் என்னைக் கவர்ந்திருப்பது இந்தப் படத்தில்தான்..!

படத்தில் தென்பட்டதெல்லாம் நிறைகள்தானா..? மணிரத்னம் என்பதால் இப்படியா என்றெல்லாம் நினைக்கலாம்..! குறைகள் என்று ஒன்றைச் சுட்டிக் காட்டுவதற்கு எனக்கெல்லாம் தகுதியும் இல்லை. அனுபவமும் இல்லை.. எனது பார்வையில் கருத்தாக மட்டுமே முன் வைக்கிறேன்..!

முற்பாதியில் கதை எதை நோக்கி நகர்கிறது என்பதே தெரியாத அளவுக்கு ஐஸ், விக்ரமை சுற்றியே போய்க் கொண்டிருக்க.. அந்த ஜெட் வேகம் ஐஸின் மெழுகு உரித்த பொம்மை முகத்தினாலேயே கிடைத்துவிட்டது..! ஆனால் கதை..?

ஐஸை கடத்தியதே பிரியாமணியின் சாவுக்கு பழிக்குப் பழி வாங்கத்தான் என்பதையே இரண்டாவது பாதியில்தான் சொல்கிறார்கள். இதிலேயே கதை நம்மிடமிருந்து எங்கோ வெகுதூரமாக போய்விட்டது. இதனை முற்பகுதியிலேயே ஐஸ்வர்யா, “உங்க சண்டைல பொம்பளைங்கள எதுக்கு இழுக்குறீங்க..?” என்று கேட்கும்போதே வைத்திருந்தால் அட்லீஸ்ட் நம் மனதில் கர்ச்சீப் அளவுக்காவது கதை டச் ஆயிருக்கும்...!

அதுவும் பிரியாமணியின் கதையை பிளாஷ்பேக்கில் சொல்லுமிடத்தில் காட்சியமைப்பு படு சொதப்பல்..! விக்ரமின் கத்தல்.. ஐஸின் கதறல்.. பிரபுவின் உறுமல் என்று மூன்றும் மாறி மாறி கட் டூ சீன்களாக வந்து தொலைக்க.. ஏதோ டாக்குமெண்ட்ரி பார்த்தது போலாகிவிட்டது..!

படத்தின் கதைக்குச் சம்பந்தமில்லாமல் லொகேஷன்கள் மாறுவது பிரியாமணியின் கல்யாணத்தின்போதுதான்..! கலை இயக்குநரின் கலை வித்தையை நாம் அங்கே ரசிக்கலாம். ஆனால் இடறுகிறதே..!

பரமாத்மாவாக நிம்மதியாக இருக்கும் வைகுந்தப் பெருமாளிடத்தில் போய் ஐஸ் புலம்புகின்ற காட்சியில் ஏன் இவ்வளவு கொடூரமான வசனங்கள்.. “கெட்டவங்களை கெட்டவங்களாவே வைச்சிரு.. நல்லவங்களை நல்லவங்களாவே வைச்சிரு” என்று..! இதனை சுஹாசினியிடம் கேட்டுப் புண்ணியமில்லை. ஒரிஜினல் வசனகர்த்தாவிடம்தான் கேட்க வேண்டும்..

திடுதிப்பென்று ஐஸின் பாரதியாரின் பாடலையும் மீதிப் பாடலை வீரா சொல்கின்ற இடத்தில் “ரோஜா” படத்தில் அரவிந்த்சாமி “ஜெய்ஹிந்த்” என்று சொல்கின்ற எபெக்ட்டை மணி எதிர்பார்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. படு சொதப்பலாகிவிட்டது அந்தக் காட்சி..!

“நான் பட்டியான்.. கிராமத்தான்.. ஒடுக்கப்பட்டவன். படிக்காதவன்.. முட்டாள்.. ஒண்ணுமில்லாதவன்..” என்றெல்லாம் தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் வீராவின் கோபம் எதைப் பற்றியது.. யாரைப் பற்றியது.. என்பதையே டச் செய்யாமல் அவனை வீரனாக மட்டுமே சித்தரிக்க முயன்று தோற்றுப் போயிருக்கிறார் இயக்குநர்.

ஐஸை விக்ரம் விரும்புகிறாரா இல்லையா என்பதைப் போல் கதையை மாற்றிவிட.. இது பழி வாங்கும் கதையில் இருந்து புதிய காதல் கதையாகி கிளை பரவி வேர்விட்டதில் நொறுங்கிப் போனது மணி வடிவமைத்த கதையின் பேஸ்மெண்ட்..!

என்ன இருந்தாலும் ஒரு நல்ல கதையை இப்படிச் சிதைத்திருக்கக் கூடாது..! இப்படி நானும், நீங்களும் புலம்பினாலும் இந்தப் படத்தின் கதைக்குச் சொந்தக்காரர் யார் என்பது டைட்டிலில் தெரியாததால் இயக்குநர் மணியையே இதற்குச் சொந்தமாக்கி அவர் மீதே பழியைச் சுமத்துவோம்..!

படத்தில் எத்தனையோ நிறை, குறைகளைப் பற்றிச் சொன்னாலும் இயக்குநரும், அவர்தம் குழுவினரும் காட்டியிருக்கும் உழைப்பைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது..! எத்தனை நாட்கள் ஷூட்டிங் என்றாலும் இத்தனையிலும் பல்லைக் கடித்துக் கொண்டு சிரிப்பதும், அழுவதுமாக இரண்டு மொழிகளுக்கும் முகத்தைக் காட்டியிருக்கும் ஐஸ்வர்யா என்னும் தங்கத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்.. எப்படித்தான் அவரால் முடிந்ததோ..?

இத்தனை லொகேஷன்களில் ஷூட்டிங் நடத்தி ஒரு வியத்தகு மேக்கிங்கை வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்றால் தென்னிந்திய திரைப்பட ஊழியர்களின் திறமையை என்னவென்று சொல்வது..? அத்தனை பேருக்கும் எனது அப்ளாஸ்..!

தமிழ், இந்தி என்று அப்போதைக்கு அப்போதே அதே லொகேஷன்களில் உடனுக்குடன் காட்சிகளை ஷூட் செய்திருக்கிறார்கள் என்றால் மணிரத்னத்தின் புயல் வேக உழைப்பும், அவருடைய யூனிட்டாரின் திறமையும் இந்திய திரைப்பட உலகத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுதான்..!

இத்தோடு இத்திரைப்படத்தின் பெருமைகளை நிறுத்திக் கொண்டு இதற்குள் பொதிந்திருக்கும் அரசியல் செய்திகளைப் பார்ப்போம்..!

ஒரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டுமென்று நானே பல முறை எனது பதிவுகளில் எழுதியிருக்கிறேன்..! “உன்னைப் போல் ஒருவனில்” வலையுலகமே ஆட்டமோ ஆட்டம் ஆடியபோது “இரண்டு வசனங்களை மட்டுமே வைத்து படம் மொத்தத்தையும் எடை போடக்கூடாது” என்று சொன்னேன்.

இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்த்து அப்படியே தோசையைத் திருப்பிப் போட வேண்டிய கட்டாயம்..!

'ரோஜா', 'தளபதி', 'பம்பாய்', 'இருவர்', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'தில்சே' என்று தனது படங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு சென்சிட்டிவ் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்லும் மணிரத்னம், அதன் காரணம் என்னவாக இருக்கும் என்பதை மட்டும் கவனமாக டச் செய்யாமல் தன்னை வெறும் பார்வையாளனாக மட்டுமே வைத்துக் கொண்டு நடிகர்களைக் கொண்டு அதனை எதிர் கொள்ளும் தனி மனிதர்களின் பிரச்சினைகளாக உருவாக்கிக் கொண்டே சென்றுள்ளார். இதிலும் அதே கதைதான்..!

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் உச்சக்கட்ட வெறியில் ஆட்டமோ ஆட்டம் என்று ஆடிக் கொண்டிருக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

பழங்குடியினர், மலைவாழ் மக்களின் பூர்விகச் சொத்தான காடுகள், மலைகள், இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் விதமாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செயல்படும் இந்த அதிகார வர்க்கத்தின்  ஒரே குறிக்கோள்.. சட்டம், நீதிமன்றம் என்ற ஒன்றையே இந்த அப்பாவி மக்களின் கண்களில் காட்டாமல் இவர்களைக் கொன்றொழிப்பதுதான்..!

தண்டகாரண்யாவிலும், நந்திகிராமிலும் நடந்தவைகள் ஒன்றுதான்..! நந்திகிராம் அளவுக்கு தண்டகாரண்யாவின் நடந்தவைகள் பிளாஷ்லைட்டுக்கு கொண்டு வரப்படாததன் காரணத்திலும் பல அரசியல்கள் உள்ளன..!

இந்தப் படத்தின் கதைப்படி பழங்குடியினர் எதற்காக ஆளும் வர்க்கத்தை எதிர்க்க வேண்டும்..? அதிகார வர்க்கம் எதற்காக அவர்களைப் பழி வாங்கத் துடிக்க வேண்டும்..? அந்த மக்களுடன் இயைந்து அவர்களுக்கு வேண்டியவைகளைச் செய்து தர வேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்பித்திருக்கும் அதிகார வர்க்கம், அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. காப்பாற்றத் துடிக்கும் இளைஞனாக வீரய்யா.. இது இந்தியாவில் இப்போது பற்றியெரிந்து கொண்டிருக்கும் பொதுவான பிரச்சினை..

தேவ் என்கிற ஐ.பி.எஸ். அதிகாரிக்கும், வீரய்யா என்பவனுக்கும் சொந்தமாக வாய்க்கால், வரப்புத் தகராறு. அதனால் மனைவி கடத்தல் என்று கதையைக் கொண்டு போயிருந்தால் இது கிட்நாப்.. மனைவியின் கள்ளக்காதல் என்றாகி படம் வேறு திசையில் பயணித்திருக்கும்...!

ஆனால் கதை, தற்போது நாட்டின் கவனத்தைத் திசை திருப்பியிருக்கும் மாவோயிஸ்ட்டுகளைத் தொட்டுக் கொன்று சென்றுள்ளது.. ஆனால் அதனை அப்படியே பாதியிலேயே விட்டுவிட்டு அந்த வீரய்யாவின் தனிப்பட்ட காதல் பிரச்சினையை பெரிதாக்கி.. எஸ்.பி.யின் மனைவியை மீட்பது என்ற ஒற்றை வரி பிரச்சினையையும் பெரிதாக்கி.. வேறு இடத்திற்கு கொண்டு போக முனைந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை..!

வீரப்பன் வேட்டையிலும் இதே கதைதானே நடந்தது.. சாதாரணமாக இருந்த வீரப்பனை துப்பாக்கி ஏந்திய வீரப்பனாக உருமாற்றியது இந்த பாழாய்ப் போன அதிகார வர்க்கம்தானே.. இராமாயணக் கதையோடு இழையோடும் வகையில் விபீஷணனாக முன்னாவை சமரசத்திற்கு அனுப்பி வைக்கும் இடத்தில், வீரப்பன் வேட்டையும் என் ஞாபகத்திற்கு வந்தது.

வீரப்பனின் தம்பி அர்ஜூனனையும் இதேபோல் கைதிகள் பரிமாற்றத்திற்காக சமரசப் பேச்சு நடத்த அனுப்பி வைத்தார் வீரப்பன். அதற்குள்ளாக வீரப்பனின் பிடியில் இருந்தவர்கள் தப்பியோடி வந்துவிட.. போலீஸின் பிடியில் இருந்த அர்ஜூனன் சித்ரவதை செய்யப்பட்டு விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்..! இது அதிகார வர்க்கம் செய்த நயவஞ்சகத்தனம்..! அதேதான் முன்னாவுக்கும் நடந்தது..! பிரியாமணியின் கணவனுக்கும் நடந்தது..!

தனது மனைவியை மீட்பது ஒன்றே லட்சியம் என்ற நிலையில் இருக்கும் எஸ்.பி. தேவ், ஒரு கையை இழந்து துடித்துக் கொண்டிருக்கும் அந்த மாப்பிள்ளையை அந்தக் கோலத்திலும் சித்ரவதை செய்யும் மனநிலைக்கு போகிறாரே.. இதைத்தானே வீரப்பன் வேட்டையிலும் நமது காவல்துறை செய்தது..! படம் ரீலுக்கு ரீல் சுட்டிக் காட்டுவதெல்லாம் இந்த அரசியலைத்தான். ஆனால் அது நிஜமில்லை என்ற பொய் முகமூடியைப் போட்டு மறைத்துக் கொண்டுள்ளார் மணி. ஏன்..?

எத்தனை நல்ல சந்தர்ப்பம் மணிக்கு..? இன்றைய யதார்த்த நிலைமையை சுட்டிக் காட்டுவதைப் போல தான் செய்தது தன்னைச் சார்ந்த மக்களுக்காகவும், அந்த மக்களை பாராமுகம் காட்டி புறக்கணிக்கும் ஏகாதிபத்திய அதிகார வார்க்கத்தை எதிர்த்தும்தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தால் இத்திரைப்படம் இந்திய அரசியல் சினிமாவில் மிக முக்கியப் பங்கை அளித்திருக்கும்..! 




அதிலும் இந்திய சினிமாவின் ரசிகர்களில் 90 சதவிகிதம் பேர் பார்த்துவிடக் கூடிய சாத்தியமுள்ள மணிரத்னத்தின் படமாக இது இருப்பதினால் இந்த உண்மையான கதையை இந்திய மக்கள் முன் மணிரத்னம் வைத்திருந்தால் எத்தனை பெரிய பெருமையும், பெயரும் இத்திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கும்..?


ஆனால் மணி இதற்குள் ஆழமாகப் போக விரும்பாமல் அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் இருந்து தப்பிக்க நினைத்து ஐஸ்வர்யாவை நினைத்து வீரா ஏங்குவதைப் போலவும், வீராவை நினைத்து ஐஸ்வர்யா தவிப்பது போலவும் கதையைத் திருப்பிவிட கதை கந்தலாகிவிட்டது..!

மக்களுக்கு நன்மை செய்யவிருப்பவன், செய்து கொண்டிருப்பவன் என்கிற மேன்மையை அவன் மேல் திணித்து வைத்துவிட்டு, அடுத்த ரீலிலேயே அடுத்தவன் மனைவி மேல் ஆசைப்படுபவனைப் போலவும் காட்டிவிட்டால் சராசரியான ஒரு பார்வையாளனுக்கு அந்தக் கேரக்டர் மீது என்ன ஈர்ப்பு வரும்..?

தீவிரவாதிகளாக யாரும் இங்கே பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அப்படியொரு சூழலில் இருக்கும் அந்த மக்களிடையே அது பற்றிய சிந்தனை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக்கூட காட்டாமல் அவர்களுடைய வாழ்க்கை முறையை சந்தோஷமும், கூத்தும், கும்மாளமுமாக மாற்றிக் காண்பித்ததில் படத்தின் டெம்போ குறைந்ததுதான் மிச்சம்..!

பிரியாமணியின் மாப்பிள்ளை எந்த இனம் என்பதை கல்யாணத்தில் காட்ட நினைத்த மணி அது ஒரு வர்க்க பேதத்தையும், ஜாதி வித்தியாசத்தையும் குறிப்பதை மாப்பிள்ளை வீட்டாரை அடையாளப்படுத்துவதிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. துப்பாக்கிச் சூடு, அதிகார வர்க்கத்தின் தாக்குல் என்றவுடனேயே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் சிட்டிலைட் மனப்பான்மையை அந்த மாப்பிள்ளையின் மூலமாக வெளிக்காட்டியிருக்கிறார் மணி. இந்த ஒன்றுதான் இத்திரைப்படத்தின் மூலம் அவர் செய்திருக்கும் ஒரேயொரு நல்ல விஷயம்..!

ஆதிக்க சக்திகளின் அபகரிக்கும் குணம், பன்னாட்டு நிறுவனங்களின் அகசாய சூறையாடல்.. இதற்கு ஒத்துப் போகும் அதிகார வர்க்கம்.. இவர்களை எதிர்க்கும் அப்பாவி மக்களின் போராட்டம் என்று ஐஸ்வர்யா என்கிற பெண்ணின் கடத்தல் மூலமாக இந்தக் கதை சொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் இந்தியாவின் ரத்தினமாக சொல்லப்பட்டிருப்பார் மணிரத்னம்.

ஆனால் ஒரு திரைப்படத்தை செய்நேர்த்தியோடு செய்து முடித்திருப்பதில் மட்டுமே, மணி தனது பெயரை நிலை நாட்டியிருப்பதால் துரதிருஷ்டவசமாக இந்தியத் திரையுலகத்தின் ரத்தினம் என்ற பெயர் மட்டுமே அவருக்குக் கிடைத்திருக்கிறது..! வருந்துகிறேன்..!

இராவணன் - கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்..!

83 comments:

பார‌தி(Bharathy) said...

//இன்றைய யதார்த்த நிலைமையை சுட்டிக் காட்டுவதைப் போல தான் செய்தது தன்னைச் சார்ந்த மக்களுக்காகவும், அந்த மக்களை பாராமுகம் காட்டி புறக்கணிக்கும் ஏகாதிபத்திய அதிகார வார்க்கத்தை எதிர்த்தும்தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தால் இத்திரைப்படம் இந்திய அரசியல் சினிமாவில் மிக முக்கியப் பங்கை அளித்திருக்கும்..! //

ஆச்ச‌ரியம்..என‌து க‌ருத்தும் இதேதான்..!அருமையான‌ ஒரு க‌தைக் க‌ள‌த்தை வீரா விக்ர‌ம் ஐஸ்வ‌ர்யா ராய் மேல் கொள்ளும் காத‌லை க‌விதைப்ப‌டுத்துவ‌தில் வீண‌டித்திருக்கிறார்..
இருந்தாலும் ம‌ணிர‌த்ன‌ம் போன்ற‌ காப்ரேட் இய‌க்குன‌ர்க‌ளிட‌ம் அப்ப‌டி ஒன்றையும் எதிர்பார்ப‌து ந‌ம‌து ம‌ட‌மைதான்..:(

ராஜ நடராஜன் said...

நீங்க இந்த நேரமா பார்த்து பதிவு போடுங்க.அப்பத்தான் சீட்டு புடிக்க வசதியா இருக்கும்:)

(அப்படியும் பாரதியார் முந்திகிட்டாரு.)

ராஜ நடராஜன் said...

//இந்த அழகு தேவதைக்கு வயதாகிவிட்டது என்பது பிரேமில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தாலும், நடிப்பு என்ற ஒன்று அதன் முகத்திலேயே குடி கொண்டிருப்பதை மணிரத்னம், ஷங்கர் அளவுக்கு பாலிவுட் இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்று தெரியவில்லை..!//

இந்திப் படம் அதிகம் பார்க்கிறது இல்ல போல தெரியுது.முகபாவங்கள் மசாலா கதை,வசனம்,நல்ல பாட்டு,நடனம்,நகைச்சுவை,சண்டைக்காட்சி,வெளிநாட்டுப் படப்பிடிப்பு இவற்றிற்கு அப்புறம் கடுகு மாதிரி எங்காயாவது ஒளிந்து கொண்டிருக்கும்.தேடிப்பாருங்க.

ராஜ நடராஜன் said...

கலையும்,திரைப்படமும் பொழுது போக்கு,வியாபாரம் என்றும் அதற்கும் மேலாக சமூக அக்கறை என்ற இன்னொரு பக்கமும் இருக்கிறது.சமூக அக்கறை என்ற பக்கத்தை பெரும்பாலோர் தொட பயப்படுகிறார்கள் அல்லது தொட்டும் நிறைய பேர் சொதப்பி விடுகிறார்கள்.இதுவே இந்திய திரைப்படங்களின் இன்றைய நிலை.

பாலா said...

///இவனது அண்ணன் சிங்கம்(பிரபு- கும்பகர்ணன்)///

என்னது.. ராவணனோட அண்ணன் கும்பகர்ணனா???

குழப்பறீங்களே..

http://rkguru.blogspot.com/ said...

அருமையான விமர்சன
பதிவு...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

திருவாரூர் சரவணா said...

மாவோயிஸ்ட் பிரச்சனை தொடர்பான கதைக்களனைத் தேர்வு செய்தும் அதைப் பற்றி ஆழமாக படத்தில் மணியால் பேச முடியாததற்கு காரணம், இன்னும் நம் நாட்டில் அதிகார வர்க்கத்திடம் இருந்து சுதந்திரம் கிடைக்க வில்லை என்பது என்னுடைய கருத்து.

ஜோதிஜி said...

தமிழரே நீங்கள் எழுதியிருப்பது விமர்சன உரையா இல்லை படம் பார்பபவர்களுக்கு தேவைப்படும் விளக்கவுரையா? இரண்டு நாள்ல நீங்கள் ஒருத்தரு தான் கொஞ்சம் கொடி புடுச்சுருக்கீங்க.

துளசி கோபால் said...

//என்னது.. ராவணனோட அண்ணன் கும்பகர்ணனா???

குழப்பறீங்களே..//


இப்படி மாத்தி வைக்கலைன்னா கதை ராமாயணத்தை வச்சுன்னு தெரிஞ்சுடாதா?????

அதுக்குத்தான்......:-)

Bruno said...

//ஆனால் மணி இதற்குள் ஆழமாகப் போக விரும்பாமல் அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் இருந்து தப்பிக்க நினைத்து ஐஸ்வர்யாவை நினைத்து வீரா ஏங்குவதைப் போலவும், வீராவை நினைத்து ஐஸ்வர்யா தவிப்பது போலவும் கதையைத் திருப்பிவிட கதை கந்தலாகிவிட்டது..!
//

அப்படி ஆழமாக போயிருந்தால், கதையை திருப்பிவிடாமலிருந்தால் என்றால் திரையரங்குகளில் பாதி இடங்கள் காலியாக இருந்திருக்கும்.

உயிரேவில் செய்த தவறை அவர் மீண்டும் செய்யவில்லை

ஒரே கதையையும், அதற்கு சம்மந்தமான காட்சிகளையும் மட்டும் வைத்து அதற்கு சம்மந்தமில்லாத கிளைக்கதைகள் இல்லாமல் மணிரத்னம் பல படங்கள் எடுத்திருக்கிறார்

என்னவாயிற்று.

இரண்டாவது வாரத்திலேயே படம் ஆரம்பிக்கும் போதே பாதி இடங்கள்
காலியாக இருக்கும்

அதுவும் பாடல் முடிந்தவுடன் இருப்பவர்களில் மீதி பாதியும் இடத்தை காலி செய்துவிடுவார்கள்
தொடர்பான சுட்டி

Bruno said...

//கலையும்,திரைப்படமும் பொழுது போக்கு,வியாபாரம் என்றும் அதற்கும் மேலாக சமூக அக்கறை என்ற இன்னொரு பக்கமும் இருக்கிறது.சமூக அக்கறை என்ற பக்கத்தை பெரும்பாலோர் தொட பயப்படுகிறார்கள் அல்லது தொட்டும் நிறைய பேர் சொதப்பி விடுகிறார்கள்.இதுவே இந்திய திரைப்படங்களின் இன்றைய நிலை.//

மசாலா இல்லாமல் சமூக அக்கறையை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறாமல் போவதையும் கவனிக்க வேண்டும்

உயிரேயில் கிடைத்த அடியை அவர் மறந்திருக்க மாட்டார்

உண்மைத்தமிழன் said...

[[[பார‌தி(Bharathy) said...

//இன்றைய யதார்த்த நிலைமையை சுட்டிக் காட்டுவதைப்போல தான் செய்தது தன்னைச் சார்ந்த மக்களுக்காகவும், அந்த மக்களை பாராமுகம் காட்டி புறக்கணிக்கும் ஏகாதிபத்திய அதிகார வார்க்கத்தை எதிர்த்தும்தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தால் இத்திரைப்படம் இந்திய அரசியல் சினிமாவில் மிக முக்கியப் பங்கை அளித்திருக்கும்..! //

ஆச்ச‌ரியம். என‌து க‌ருத்தும் இதேதான்.! அருமையான‌ ஒரு க‌தைக் க‌ள‌த்தை வீரா விக்ர‌ம் ஐஸ்வ‌ர்யா ராய் மேல் கொள்ளும் காத‌லை க‌விதைப்ப‌டுத்துவ‌தில் வீண‌டித்திருக்கிறார். இருந்தாலும் ம‌ணிர‌த்ன‌ம் போன்ற‌ காப்ரேட் இய‌க்குன‌ர்க‌ளிட‌ம் அப்ப‌டி ஒன்றையும் எதிர்பார்ப‌து ந‌ம‌து ம‌ட‌மைதான்..:(]]]

கார்பரேட் இயக்குநர் என்று ஒரு மூலைக்குள் அவரைத் தள்ள முடியாது..!

சர்ச்சைகள் தன்னைச் சுற்றுவதை விரும்பாதவராக இருக்கலாம் என்பது எனது கணிப்பு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
நீங்க இந்த நேரமா பார்த்து பதிவு போடுங்க. அப்பத்தான் சீட்டு புடிக்க வசதியா இருக்கும்:) அப்படியும் பாரதியார் முந்திகிட்டாரு.)]]]

ஓ.. உங்களுக்கு இந்த நேரம்தான் வசதிப்படுங்களா..?

நல்லது..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//இந்த அழகு தேவதைக்கு வயதாகிவிட்டது என்பது பிரேமில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தாலும், நடிப்பு என்ற ஒன்று அதன் முகத்திலேயே குடி கொண்டிருப்பதை மணிரத்னம், ஷங்கர் அளவுக்கு பாலிவுட் இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்று தெரியவில்லை..!//

இந்திப் படம் அதிகம் பார்க்கிறது இல்ல போல தெரியுது. முகபாவங்கள் மசாலா கதை, வசனம், நல்ல பாட்டு, நடனம், நகைச்சுவை, சண்டைக் காட்சி, வெளிநாட்டுப் படப்பிடிப்பு இவற்றிற்கு அப்புறம் கடுகு மாதிரி எங்காயாவது ஒளிந்து கொண்டிருக்கும். தேடிப் பாருங்க.]]]

அப்படீங்கிறீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
கலையும், திரைப்படமும் பொழுது போக்கு, வியாபாரம் என்றும் அதற்கும் மேலாக சமூக அக்கறை என்ற இன்னொரு பக்கமும் இருக்கிறது. சமூக அக்கறை என்ற பக்கத்தை பெரும்பாலோர் தொட பயப்படுகிறார்கள் அல்லது தொட்டும் நிறைய பேர் சொதப்பி விடுகிறார்கள். இதுவே இந்திய திரைப்படங்களின் இன்றைய நிலை.]]]

ஏன் சேரனும், ஷங்கரும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள்..!

சொதப்பி விடுபவர்கள் அதிகம்தான் என்றாலும் மணி அது மாதிரி செய்ய முடியாதே.. துணிந்து செய்யலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

///இவனது அண்ணன் சிங்கம்(பிரபு- கும்பகர்ணன்)///

என்னது.. ராவணனோட அண்ணன் கும்பகர்ணனா??? குழப்பறீங்களே..]]]

பின்ன.. விக்ரமுக்கு தம்பி பிரபுன்னு போட்டா பிரபுவே அடிக்க வர மாட்டாரா..?

உண்மைத்தமிழன் said...

[[[rk guru said...

அருமையான விமர்சன பதிவு...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..

தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது

அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....

http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html]]]

வருகைக்கு நன்றி குருவே..!

உண்மைத்தமிழன் said...

[[[திருவாரூரிலிருந்து சரவணன் said...
மாவோயிஸ்ட் பிரச்சனை தொடர்பான கதைக்களனைத் தேர்வு செய்தும் அதைப் பற்றி ஆழமாக படத்தில் மணியால் பேச முடியாததற்கு காரணம், இன்னும் நம் நாட்டில் அதிகார வர்க்கத்திடம் இருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது என்னுடைய கருத்து.]]]

உண்மை.. பச்சையான உண்மை சரவணன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
தமிழரே நீங்கள் எழுதியிருப்பது விமர்சன உரையா இல்லை படம் பார்பபவர்களுக்கு தேவைப்படும் விளக்கவுரையா? இரண்டு நாள்ல நீங்கள் ஒருத்தருதான் கொஞ்சம் கொடி புடுச்சுருக்கீங்க.]]]

அண்ணே.. நான் எழுதினது விமர்சனம்தான்..!

படத்துக்கு விளக்கவுரை எழுதினா இப்படியா 14 பக்கத்துல முடியும்..?

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

//என்னது.. ராவணனோட அண்ணன் கும்பகர்ணனா??? குழப்பறீங்களே..//


இப்படி மாத்தி வைக்கலைன்னா கதை ராமாயணத்தை வச்சுன்னு தெரிஞ்சுடாதா????? அதுக்குத்தான்......:-)]]]

டீச்சர் கொள்ள அறிவு உங்களுக்கு..?

இதையெல்லாம் இப்படி வெளிப்படையா சொல்லப்படாது..!

பாவம் மணிரத்னம்..!

kavi said...

//படத்தில் தென்பட்டதெல்லாம் நிறைகள்தானா..? மணிரத்னம் என்பதால் இப்படியா என்றெல்லாம் நினைக்கலாம்..! குறைகள் என்று ஒன்றைச் சுட்டிக் காட்டுவதற்கு எனக்கெல்லாம் தகுதியும் இல்லை. அனுபவமும் இல்லை.. எனது பார்வையில் கருத்தாக மட்டுமே முன் வைக்கிறேன்..!//

ஒரு படத்தைப் பற்றி இவ்வளவு எழுதி விட்டு குறைகளைச் சுட்டிக் காட்டுவதற்கு தகுதியும், அனுபவமும் இல்லை எனச் சொல்வது, உங்கள் நிலையிலிருந்து நீங்கள் வழுக்குவதைப் போல் உள்ளது. அதற்கு ஏன் தயக்கம், அப்படியிருந்தால் நீங்கள் விமர்சனமே எழுதியிருக்கக்கூடாது. இல்லை என்றால் நீங்கள் எழுதியது விமர்சனம் இல்லை வெறும் என்னுடைய கருத்துதான் என ஒதுங்கிக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து இந்த வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை.

Paleo God said...

//ஆனாலும் முதிர் கன்னியான ஐஸுக்கு//

இவ்ளோ அப்பாவியான்ணே நீங்க? :))

SurveySan said...

good review

but, i didnt like the movie

Arun Kumar said...

அண்ணே நல்ல விமர்சனம்
ஒரு சிறிய திருத்தம்..தமிழ் இந்தியில் படம் நேரடியாக தயாரிகக்பட்டு தெலுங்கில் டப் செய்யபட்டு வெளியியிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஐஸ் தமிழில் சொந்த குரலில் டப்பிங் பேசி இருப்பதில் இருந்தே தெரிகிறது கண்டிப்பாக விருதை எதிர்பாக்கிறார்..கண்டிப்பாக கொடுக்க வேண்டும்

ராம்ஜி_யாஹூ said...

Its too lengthy, i dont have patience/interest to read lengthy writings pls

அபி அப்பா said...

\\துளசி கோபால் said...

//என்னது.. ராவணனோட அண்ணன் கும்பகர்ணனா???

குழப்பறீங்களே..//


இப்படி மாத்தி வைக்கலைன்னா கதை ராமாயணத்தை வச்சுன்னு தெரிஞ்சுடாதா?????

அதுக்குத்தான்......:-\\

ஆமாம் டீச்சர்! தமிழ்படத்திலே எல்லாம் இரட்டை வேடத்துக்கு முகத்திலே பரு வச்சு வித்யாசம் காட்டி மக்கள் கண்டுபிடிக்க விடாம செய்யும் அதே உத்தி. சூப்பர். நல்ல வேளை பிரபு மாத்திரம் விக்ரம்க்கு தம்பின்னு சொல்லியிருந்தாங்கன்னா இந்நேரம் இது ராமாயண கதையின் காப்பின்னு தெரிஞ்சு நாறி போயிருக்கும் மணியின் நிலமை:-))))

மத்தபடி உனா தானா அருமையான விமர்சனம் அய்யா! உங்க சேவைக்கு என் பாராட்டுகள்!

தருமி said...

//தனக்குப் பரிசாகக் கிடைத்த டிக்கெட்டை எனக்குப் பரிசாக அளித்த அண்ணன் என்.சொக்கன்..//

அவரைச் சொல்லணும்.

வழக்கம்போல் scroll பண்ணியாச்சு

Jackiesekar said...

அண்ணே நல்ல விமர்சனம்
ஒரு சிறிய திருத்தம்..தமிழ் இந்தியில் படம் நேரடியாக தயாரிகக்பட்டு தெலுங்கில் டப் செய்யபட்டு வெளியியிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஐஸ் தமிழில் சொந்த குரலில் டப்பிங் பேசி இருப்பதில் இருந்தே தெரிகிறது கண்டிப்பாக விருதை எதிர்பாக்கிறார்..கண்டிப்பாக கொடுக்க வேண்டும்--//

ஐசுக்கு குரல் நடிகை ரோகினி.. படம் வந்த அன்றே இரண்டு தியேட்டர்களில் தொடர்ந்து பார்த்தவன் என்ற முறையில்...

pichaikaaran said...

மணியின் உழைப்பு இருக்கட்டும்... தெளிவாக, துல்லியமாக, தொய்வில்லாமல் , விரிவாக விமர்சனம் எழுதிய உங்கள் அக்கறைக்கு ,உழைப்புக்கு ஆர்வத்துக்கு நன்றி.....

தெளிவான பார்வை.... நன்றி...

உங்களுக்கு என ஒரு பாணி அமைந்து விட்டது... யாரும் சொன்னார்கள் என்று சுருக்கமாக எழுத ஆரம்பித்து விடாதீர்கள் என உரிமையுடன் கேட்டு கொள்கிறேன்

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே படத்தோட ஸ்கிரிப்ட்டையே ரெண்டு பக்கத்துல எழுதிட்டாய்ங்கலாம். நீங்க விமர்சனத்தை நாலு பக்கம் எழுதி இருக்கீங்க :)))

அத்திரி said...

//இன்றைய யதார்த்த நிலைமையை சுட்டிக் காட்டுவதைப் போல தான் செய்தது தன்னைச் சார்ந்த மக்களுக்காகவும், அந்த மக்களை பாராமுகம் காட்டி புறக்கணிக்கும் ஏகாதிபத்திய அதிகார வார்க்கத்தை எதிர்த்தும்தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தால் இத்திரைப்படம் இந்திய அரசியல் சினிமாவில் மிக முக்கியப் பங்கை அளித்திருக்கும்..! //

அப்படினா நீங்க தான் சொந்தமா படம் எடுக்கனும்..நடக்குமா??

Pepe444 said...

VISIT MY BLOG PLEASE AND FOLLOW ME :) >>> http://artmusicblog.blogspot.com/

manasu said...

உருகி உருகி எழுதின வைரமுத்துவ பத்தி ஒரு வரி சொல்லல!!!!

கள்வரே கள்வரே என்ன அருமையான வரிகள்.

priyamudanprabu said...

ஆனால் இவரது மனைவியாக வரும் ரஞ்சிதா தோன்றும் காட்சியிலெல்லாம் தியேட்டரில் கை தட்டல் தூள் பறந்தது. யாருக்குமே கிடைக்காத கைதட்டல் இது. ரஞ்சிதாவே நேரில் பார்த்தால் அழுதுவிடுவார். யாராவது போனை போட்டுச் சொல்லுங்கப்பா..!
//////

சிங்கப்பூரிலும் அதேதான்

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///இராமாயணம்தான் பேஸ்மெண்ட் என்று தெரிந்தவுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் அனைவருக்குமே கதையும், கதையின் முடிவும் தெரிந்துவிட்டது..! ஆனால் மணி மீதான நல்ல அபிப்ராயத்தில் மேக்கிங் எப்படி என்பதை பார்ப்பதற்காகவே பெரும் கூட்டம் செல்கிறது என்று நினைக்கிறேன்.///


===>>> இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்???

நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்???

Meenakshi Sundaram said...

Very good review. I really like this.

Plus point of this movie
- Vikaram acting
- Santhosh Sivan camera
- Rahman music
- Support acters
prabhu
Priyamani
and some more people which I dont know.
- Costume of vikram and others also good. Usually people(not the latest generatio) who is in south
of tamilnadu, wears one doti, and banian and one karuppu kayiru(tiruappathi kayiru). Its not wonder. But I want to appreciate manirathan's perfection even in small things.

Minus points

- Screen plan could have been better. Manirathnam should thing about all the audience. Not only A center audienace. This could redcuce movies quality. But mani should compromise on this.

ஷர்புதீன் said...

அண்ணே பதிவுலகில் நிறைய நிறைய டைப் அடிப்பவர்கள் யாருன்னு ஒரு சர்வே எடுக்கட்டா ( நர்சிம் Vs அப்துல்லா பார்த்திருப்பீங்களே அது மாதிரி... :))

உண்மைத்தமிழன் said...

[[[புருனோ Bruno said...

//ஆனால் மணி இதற்குள் ஆழமாகப் போக விரும்பாமல் அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் இருந்து தப்பிக்க நினைத்து ஐஸ்வர்யாவை நினைத்து வீரா ஏங்குவதைப் போலவும், வீராவை நினைத்து ஐஸ்வர்யா தவிப்பது போலவும் கதையைத் திருப்பிவிட கதை கந்தலாகிவிட்டது..!//

அப்படி ஆழமாக போயிருந்தால், கதையை திருப்பி விடாமலிருந்தால் என்றால் திரையரங்குகளில் பாதி இடங்கள் காலியாக இருந்திருக்கும்.

உயிரேவில் செய்த தவறை அவர் மீண்டும் செய்யவில்லை. ஒரே கதையையும், அதற்கு சம்மந்தமான காட்சிகளையும் மட்டும் வைத்து அதற்கு சம்மந்தமில்லாத கிளைக் கதைகள் இல்லாமல் மணிரத்னம் பல படங்கள் எடுத்திருக்கிறார்.

என்னவாயிற்று.

இரண்டாவது வாரத்திலேயே படம் ஆரம்பிக்கும் போதே பாதி இடங்கள் காலியாக இருக்கும்.

அதுவும் பாடல் முடிந்தவுடன் இருப்பவர்களில் மீதி பாதியும் இடத்தை காலி செய்து விடுவார்கள்]]]

ஏன்..?

ரோஜா இல்லையா..? பம்பாய் இல்லையா..? கன்னத்தில் முத்தமிட்டால்..?

இருக்குங்கண்ணே.. அவரால முடியும்.. ஏன் அதை இதில் செய்யவில்லைன்னுதான் தெரியலை..!

உண்மைத்தமிழன் said...

[[[புருனோ Bruno said...

//கலையும், திரைப்படமும் பொழுது போக்கு, வியாபாரம் என்றும் அதற்கும் மேலாக சமூக அக்கறை என்ற இன்னொரு பக்கமும் இருக்கிறது. சமூக அக்கறை என்ற பக்கத்தை பெரும்பாலோர் தொட பயப்படுகிறார்கள் அல்லது தொட்டும் நிறைய பேர் சொதப்பி விடுகிறார்கள். இதுவே இந்திய திரைப்படங்களின் இன்றைய நிலை.//

மசாலா இல்லாமல் சமூக அக்கறையை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறாமல் போவதையும் கவனிக்க வேண்டும்.
உயிரேயில் கிடைத்த அடியை அவர் மறந்திருக்க மாட்டார்.]]]

உயிரேயின் தோல்வி அதனால் இல்லீங்கோ ஸார்..!

ரோஜா அளவுக்கு போராடக்கூடிய ஒரு மனுஷியின் வாழ்க்கையை அது வெளிப்படுத்தவில்லை என்பதால்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[kavi said...

//படத்தில் தென்பட்டதெல்லாம் நிறைகள்தானா..? மணிரத்னம் என்பதால் இப்படியா என்றெல்லாம் நினைக்கலாம்..! குறைகள் என்று ஒன்றைச் சுட்டிக் காட்டுவதற்கு எனக்கெல்லாம் தகுதியும் இல்லை. அனுபவமும் இல்லை.. எனது பார்வையில் கருத்தாக மட்டுமே முன் வைக்கிறேன்..!//

ஒரு படத்தைப் பற்றி இவ்வளவு எழுதி விட்டு குறைகளைச் சுட்டிக் காட்டுவதற்கு தகுதியும், அனுபவமும் இல்லை எனச் சொல்வது, உங்கள் நிலையிலிருந்து நீங்கள் வழுக்குவதைப் போல் உள்ளது. அதற்கு ஏன் தயக்கம், அப்படியிருந்தால் நீங்கள் விமர்சனமே எழுதியிருக்கக்கூடாது. இல்லை என்றால் நீங்கள் எழுதியது விமர்சனம் இல்லை வெறும் என்னுடைய கருத்துதான் என ஒதுங்கிக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து இந்த வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை.]]]

எல்லாம் ஒரு அடக்கத்துக்காகத்தாண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...

//ஆனாலும் முதிர் கன்னியான ஐஸுக்கு//

இவ்ளோ அப்பாவியான்ணே நீங்க? :))]]]

இப்பவாவது தெரிஞ்சுக்க ஷங்கரு..!

உண்மைத்தமிழன் said...

[[[SurveySan said...

good review

but, i didnt like the movie]]]

ஓகேண்ணே..! எல்லாருக்கும் எல்லா படமும் எப்படி பிடிக்கும்..?

உண்மைத்தமிழன் said...

[[[Arun Kumar said...

அண்ணே நல்ல விமர்சனம். ஒரு சிறிய திருத்தம். தமிழ் இந்தியில் படம் நேரடியாக தயாரிகக்பட்டு தெலுங்கில் டப் செய்யபட்டு வெளியியிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.]]]

ஆமாம்.. நானும் அவசரத்தில் எழுதிவிட்டேன் அருண்.. மாற்றிவிட்டேன். தகவலுக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
Its too lengthy, i dont have patience/interest to read lengthy writings pls]]]

படமே இரண்டே கால் மணி நேரம்ண்ணே..!

இது நீளம்ண்ணா எப்படி?

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...

\\துளசி கோபால் said...

//என்னது.. ராவணனோட அண்ணன் கும்பகர்ணனா???

குழப்பறீங்களே..//

இப்படி மாத்தி வைக்கலைன்னா கதை ராமாயணத்தை வச்சுன்னு தெரிஞ்சுடாதா? அதுக்குத்தான்\\

ஆமாம் டீச்சர்! தமிழ் படத்திலே எல்லாம் இரட்டை வேடத்துக்கு முகத்திலே பரு வச்சு வித்யாசம் காட்டி மக்கள் கண்டுபிடிக்க விடாம செய்யும் அதே உத்தி. சூப்பர். நல்ல வேளை பிரபு மாத்திரம் விக்ரம்க்கு தம்பின்னு சொல்லியிருந்தாங்கன்னா இந்நேரம் இது ராமாயண கதையின் காப்பின்னு தெரிஞ்சு நாறி போயிருக்கும் மணியின் நிலமை:-))))

மத்தபடி உனா தானா அருமையான விமர்சனம் அய்யா! உங்க சேவைக்கு என் பாராட்டுகள்!]]]

அபிப்பா.. உங்களோட பின்னூட்டத் தாக்குதலுக்கு எனது நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

//தனக்குப் பரிசாகக் கிடைத்த டிக்கெட்டை எனக்குப் பரிசாக அளித்த அண்ணன் என்.சொக்கன்..//

அவரைச் சொல்லணும். வழக்கம் போல் scroll பண்ணியாச்சு]]]

வயசுப் பசங்க நாலு பேரு நல்லாயிருந்தாலே இந்தப் பெரிசுங்களுக்குப் பிடிக்க மாட்டேங்குதுய்யா..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜாக்கி சேகர் said...
அண்ணே நல்ல விமர்சனம்
ஒரு சிறிய திருத்தம்..தமிழ் இந்தியில் படம் நேரடியாக தயாரிகக்பட்டு தெலுங்கில் டப் செய்யபட்டு வெளியியிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஐஸ் தமிழில் சொந்த குரலில் டப்பிங் பேசி இருப்பதில் இருந்தே தெரிகிறது கண்டிப்பாக விருதை எதிர்பாக்கிறார்..கண்டிப்பாக கொடுக்க வேண்டும்--//

ஐசுக்கு குரல் நடிகை ரோகினி. படம் வந்த அன்றே இரண்டு தியேட்டர்களில் தொடர்ந்து பார்த்தவன் என்ற முறையில்.]]]

தகவல்களுக்கு மிக்க நன்றி ஜாக்கி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

மணியின் உழைப்பு இருக்கட்டும்... தெளிவாக, துல்லியமாக, தொய்வில்லாமல், விரிவாக விமர்சனம் எழுதிய உங்கள் அக்கறைக்கு, உழைப்புக்கு ஆர்வத்துக்கு நன்றி.....

தெளிவான பார்வை.... நன்றி...
உங்களுக்கு என ஒரு பாணி அமைந்து விட்டது... யாரும் சொன்னார்கள் என்று சுருக்கமாக எழுத ஆரம்பித்து விடாதீர்கள் என உரிமையுடன் கேட்டு கொள்கிறேன்]]]

ஆஹா.. இப்படியொரு வேண்டுதலா..?

முருகா எங்கேயிருந்துப்பா இப்படியெல்லாம் கொண்டாந்து சேக்குற..?

நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே படத்தோட ஸ்கிரிப்ட்டையே ரெண்டு பக்கத்துல எழுதிட்டாய்ங்கலாம். நீங்க விமர்சனத்தை நாலு பக்கம் எழுதி இருக்கீங்க :)))]]]

நாலு பக்கமா..?

அடிங்கோ....

எம்.எஸ்.வேர்ட்ல பதினாலு பக்கமாக்கும்..!

துளசி கோபால் said...

//ஐஸ் தமிழில் சொந்த குரலில் டப்பிங் பேசி இருப்பதில் இருந்தே தெரிகிறது கண்டிப்பாக விருதை எதிர்பாக்கிறார்..கண்டிப்பாக கொடுக்க வேண்டும்-//

அட! யாரங்கே......?

ஐஸுக்கு ஒரு பரிசு பார்ஸேல்.........:-)

உண்மைத்தமிழன் said...

[[[அத்திரி said...

//இன்றைய யதார்த்த நிலைமையை சுட்டிக் காட்டுவதைப் போல தான் செய்தது தன்னைச் சார்ந்த மக்களுக்காகவும், அந்த மக்களை பாராமுகம் காட்டி புறக்கணிக்கும் ஏகாதிபத்திய அதிகார வார்க்கத்தை எதிர்த்தும்தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தால் இத்திரைப்படம் இந்திய அரசியல் சினிமாவில் மிக முக்கியப் பங்கை அளித்திருக்கும்//

அப்படினா நீங்கதான் சொந்தமா படம் எடுக்கனும். நடக்குமா??]]]

உன் வாய் முகூர்த்தம் பலிக்கணும்னு முருகனை வேண்டிக்க தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[Pepe444 said...

VISIT MY BLOG PLEASE AND FOLLOW ME :) >>> http://artmusicblog.blogspot.com/]]]

உத்தரவு சாமியோவ்..!

உண்மைத்தமிழன் said...

[[[manasu said...

உருகி உருகி எழுதின வைரமுத்துவ பத்தி ஒரு வரி சொல்லல!!!!

கள்வரே கள்வரே என்ன அருமையான வரிகள்.]]]

ம்.ம்.ம்.ம்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......!

பாராட்டுக்கள் வைரமுத்துவுக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் பிரபு said...

ஆனால் இவரது மனைவியாக வரும் ரஞ்சிதா தோன்றும் காட்சியிலெல்லாம் தியேட்டரில் கை தட்டல் தூள் பறந்தது. யாருக்குமே கிடைக்காத கைதட்டல் இது. ரஞ்சிதாவே நேரில் பார்த்தால் அழுதுவிடுவார். யாராவது போனை போட்டுச் சொல்லுங்கப்பா..!//

சிங்கப்பூரிலும் அதேதான்]]]

உலகம் முழுக்கத் தமிழர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

///இராமாயணம்தான் பேஸ்மெண்ட் என்று தெரிந்தவுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் அனைவருக்குமே கதையும், கதையின் முடிவும் தெரிந்துவிட்டது..! ஆனால் மணி மீதான நல்ல அபிப்ராயத்தில் மேக்கிங் எப்படி என்பதை பார்ப்பதற்காகவே பெரும் கூட்டம் செல்கிறது என்று நினைக்கிறேன்.///

இங்கு பலரது விமர்சனங்களைப் படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

அப்படி இருக்கும்போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக் கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோதான் ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு எதையும் மாற்றாமல் அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்???]]]

ஆட்டையாம்பட்டி ஸார்..!

இப்ப மூச்சுவிடாம முன்னூறு கொஸ்டீன் கேட்டா எப்படி..?

அதுனாலதான் மணியண்ணே ரொம்ப ஜாக்கிரதையா இது இராமயணத்தை மையமா வைச்சு எடுக்கப்பட்டது என்று எங்கேயும் சொல்லவில்லை..!

இப்ப நீங்க கேட்டா இதைத்தான் சொல்வாரு அண்ணேன்..!

வெளிப்படையா சொல்லிட்டு செஞ்சாத்தாண்ணே பிரச்சினை.. சொல்லாம செஞ்சிட்டா அடிப்படையிலேயே தப்பிச்சிரலாம் பாருங்க.. அதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[வெண்ணிற இரவுகள்....! said...
ஒரு கலைப் படைப்பு என்பது உண்மையை பிரதிபலிக்க வேண்டும். எப்படி முதாலளிகளுடன் கூட்டணி வைத்து உண்மையை சொல்ல முடியும் உண்மை அண்ணன்]]]

சொல்ல முடியாதுதான் தம்பி..!

இதுதான் எனது வருத்தமும்கூட..!

இதனாலேயே இது கலைப் படைப்பாகவும் இல்லாமல் அரசியல் படைப்பாகவும் இல்லாமல், சராசரி சினிமாவாகவும் இல்லாமல் நட்டாத்தில் நிற்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Meenakshi sundaram said...

Very good review. I really like this.

Plus point of this movie
- Vikaram acting
- Santhosh Sivan camera
- Rahman music
- Support acters
prabhu
Priyamani
and some more people which I dont know.

- Costume of vikram and others also good. Usually people(not the latest generatio) who is in south
of tamilnadu, wears one doti, and banian and one karuppu kayiru (tiruappathi kayiru). Its not wonder. But I want to appreciate manirathan's perfection even in small things.

Minus points

- Screen plan could have been better. Manirathnam should thing about all the audience. Not only A center audienace. This could redcuce movies quality. But mani should compromise on this.]]]

நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஷர்புதீன் said...
அண்ணே பதிவுலகில் நிறைய நிறைய டைப் அடிப்பவர்கள் யாருன்னு ஒரு சர்வே எடுக்கட்டா ( நர்சிம் Vs அப்துல்லா பார்த்திருப்பீங்களே அது மாதிரி... :))]]]

எடுங்க ஸார்.. எடுங்க..!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

You are evading my question. I repeat that for you again; please answer if you can?

இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்???

Again, நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்???

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///அதுனாலதான் மணியண்ணே ரொம்ப ஜாக்கிரதையா இது இராமயணத்தை மையமா வைச்சு எடுக்கப்பட்டது என்று எங்கேயும் சொல்லவில்லை///

Do we have to say that to file a case against the movie? No. Not at all.

A contradicting response:
///ஆமாம் டீச்சர்! தமிழ் படத்திலே எல்லாம் இரட்டை வேடத்துக்கு முகத்திலே பரு வச்சு வித்யாசம் காட்டி மக்கள் கண்டுபிடிக்க விடாம செய்யும் அதே உத்தி. சூப்பர். நல்ல வேளை பிரபு மாத்திரம் விக்ரம்க்கு தம்பின்னு சொல்லியிருந்தாங்கன்னா இந்நேரம் இது ராமாயண கதையின் காப்பின்னு தெரிஞ்சு நாறி போயிருக்கும் மணியின் நிலமை:-)///

ஜன்னல் said...

Supera elutha unaku andavan varam koduthirukiran sareavana....

Senthil said...

thalaa..I didnt expect the underlying Maoist/North East ppl angle..
hmm..lemme watch the movie.

பனித்துளி சங்கர் said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை நண்பரே . உங்களின் விமர்சனம் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

பார‌தி(Bharathy) said...

//கார்பரேட் இயக்குநர் என்று ஒரு மூலைக்குள் அவரைத் தள்ள முடியாது..!

சர்ச்சைகள் தன்னைச் சுற்றுவதை விரும்பாதவராக இருக்கலாம் என்பது எனது கணிப்பு..!//

ச‌ர்ச்சைக‌ள் த‌ன்னைச் சுற்றுவ‌தை விரும்பாத‌வ‌ராக‌ இருக்க‌லாம் என்னும் க‌ருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள‌ முடியாதுள்ள‌து ந‌ண்ப‌ரே..ச‌ர்ச்சைக்குரிய‌ விட‌ய‌ங்க‌ளை வைத்து அத‌ன் நியாய‌மான‌ விட‌ய‌ங்க‌ளை நீர்த்துப்போகும் வ‌ண்ண‌ம் க‌லைந‌ய‌த்தோடு த‌ருவ‌தில் அவ‌ர் விற்ப‌ன்ன‌ர்..ச‌ர்ச்சைக்குரிய‌விட‌ய‌ங்க‌ளை க‌ள‌மாக‌ த‌ன‌து ப‌ட‌த்தில் கையாளுவ‌த‌ன் மூல‌ம் ப‌ல‌ரையும் திரும்ப‌ப்பார்க‌ வைக்கும் ஒரு த‌ந்திர‌மாகவே என‌க்கு ப‌டுகிற‌து..(விதிவில‌க்காக‌ அலைபாயுதே, மௌன‌ ராக‌ம் )..ச‌ரிதானா??
ம‌ற்றும்ப‌டி உங்க‌ள் அனேக‌ க‌ருத்துட‌ன் ஒத்துப்போகின்றேன்..

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

//ஐஸ் தமிழில் சொந்த குரலில் டப்பிங் பேசி இருப்பதில் இருந்தே தெரிகிறது கண்டிப்பாக விருதை எதிர்பாக்கிறார். கண்டிப்பாக கொடுக்க வேண்டும்-//

அட! யாரங்கே......? ஐஸுக்கு ஒரு பரிசு பார்ஸேல்.........:-)]]]

இல்லியாம் டீச்சர்.. ஐஸுக்கு ரோகிணிதான் தமிழில் குரல் கொடுத்திருக்கிறாராம்..!

ஆனால் இந்தியில் ஐஸே பேசியிருக்கக் கூடும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

You are evading my question. I repeat that for you again; please answer if you can?

இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்???

Again, நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்???]]]

ஒண்ணும் செஞ்சிருக்க மாட்டாரு..! அவர்தான் காப்பியத்தோட காப்பின்னு வெளிப்படையா சொல்லவும் இல்லை.. ஒத்தக்கவும் இல்லியே..?

உண்மைத்தமிழன் said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

///அதுனாலதான் மணியண்ணே ரொம்ப ஜாக்கிரதையா இது இராமயணத்தை மையமா வைச்சு எடுக்கப்பட்டது என்று எங்கேயும் சொல்லவில்லை///

Do we have to say that to file a case against the movie? No. Not at all.

A contradicting response:

///ஆமாம் டீச்சர்! தமிழ் படத்திலே எல்லாம் இரட்டை வேடத்துக்கு முகத்திலே பரு வச்சு வித்யாசம் காட்டி மக்கள் கண்டுபிடிக்க விடாம செய்யும் அதே உத்தி. சூப்பர். நல்ல வேளை பிரபு மாத்திரம் விக்ரம்க்கு தம்பின்னு சொல்லியிருந்தாங்கன்னா இந்நேரம் இது ராமாயண கதையின் காப்பின்னு தெரிஞ்சு நாறி போயிருக்கும் மணியின் நிலமை:-)///]]]

ஓகே.. இதேதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜன்னல் said...
Supera elutha unaku andavan varam koduthirukiran sareavana....]]]

எல்லாம் முருகன் செயல்தான் நண்பா..!

வருகைக்கு மிக்க நன்றி..!

அந்த இரண்டாம் சாணக்கியன் என்ன ஆனார்..? எங்கே போனார்..? கொஞ்சம் வரச் சொல்றது..

உண்மைத்தமிழன் said...

[[[Sen said...
thalaa..I didnt expect the underlying Maoist/North East ppl angle.. hmm. lemme watch the movie.]]]

வருகைக்கு நன்றி சென்..!

உண்மைத்தமிழன் said...

[[[!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
நான் இன்னும் படம் பார்க்கவில்லை நண்பரே. உங்களின் விமர்சனம் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி]]]

பார்த்திருங்க சங்கர்..!

பார்க்க வேண்டிய திரைப்படம்தான்..!

கபிலன் said...

உஸ் ......கண்ணை கட்டுது......
மணிரத்னம் கூட இவ்வளவு டிஸ்கஸ் பண்ணிருக்க மாட்டார் ன்னு
நினைக்கிறேன்.
தங்கள் பொறுமை என்னை அசரடிக்கிறது.
வாழ்த்துக்கள்.

kanagu said...

indha padatha innum paakala na... unga vimarsanatha padichathuku param paakalama venamanu kozhappama irukku..

enaku ipa Maniratnam edukura padam edhuvum pudikirathu illa... etho technical la mattum nalla eduthutu irukkar..

Thenammai Lakshmanan said...

ஐஸை விக்ரம் விரும்புகிறாரா இல்லையா என்பதைப் போல் கதையை மாற்றிவிட.. இது பழி வாங்கும் கதையில் இருந்து புதிய காதல் கதையாகி கிளை பரவி வேர்விட்டதில் நொறுங்கிப் போனது மணி வடிவமைத்த கதையின் பேஸ்மெண்ட்..!//

மிக அருமையான விமர்சனம்
உண்மைத்தமிழன்

Bruno said...

//ரோஜா இல்லையா..? பம்பாய் இல்லையா..? கன்னத்தில் முத்தமிட்டால்..?

இருக்குங்கண்ணே.. அவரால முடியும்.. ஏன் அதை இதில் செய்யவில்லைன்னுதான் தெரியலை..!

Read more: http://truetamilans.blogspot.com/2010/06/blog-post_20.html#ixzz0rVGiuMGm
//

அண்ணே

கன்னத்தில் முத்தமிட்டால் எத்தனை நாள் அண்ணே ஓடியது

உண்மைத்தமிழன் said...

[[[பார‌தி(Bharathy) said...

//கார்பரேட் இயக்குநர் என்று ஒரு மூலைக்குள் அவரைத் தள்ள முடியாது..! சர்ச்சைகள் தன்னைச் சுற்றுவதை விரும்பாதவராக இருக்கலாம் என்பது எனது கணிப்பு..!//

ச‌ர்ச்சைக‌ள் த‌ன்னைச் சுற்றுவ‌தை விரும்பாத‌வ‌ராக‌ இருக்க‌லாம் என்னும் க‌ருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள‌ முடியாதுள்ள‌து ந‌ண்ப‌ரே. ச‌ர்ச்சைக்குரிய‌ விட‌ய‌ங்க‌ளை வைத்து அத‌ன் நியாய‌மான‌ விட‌ய‌ங்க‌ளை நீர்த்துப் போகும் வ‌ண்ண‌ம் க‌லைந‌ய‌த்தோடு த‌ருவ‌தில் அவ‌ர் விற்ப‌ன்ன‌ர். ச‌ர்ச்சைக்குரிய‌ விட‌ய‌ங்க‌ளை க‌ள‌மாக‌ த‌ன‌து ப‌ட‌த்தில் கையாளுவ‌த‌ன் மூல‌ம் ப‌ல‌ரையும் திரும்ப‌ப்பார்க‌ வைக்கும் ஒரு த‌ந்திர‌மாகவே என‌க்கு ப‌டுகிற‌து.

(விதிவில‌க்காக‌ அலைபாயுதே, மௌன‌ ராக‌ம்) ச‌ரிதானா??

ம‌ற்றும்ப‌டி உங்க‌ள் அனேக‌ க‌ருத்துட‌ன் ஒத்துப்போகின்றேன்..]]]

நண்பரே..

மணி பொதுவாகே மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புவார். அது அவருடைய இயல்பான குணம்..

இதனாலேயே சர்ச்சைகள், படம் பற்றிய கேள்விகளை அறவே தவிர்ப்பது அவரது வழக்கம். ஆரம்பத்தில் இருந்தே அவர் அப்படித்தான்..!

அதனால்தான் வருவது வரட்டும்.. எதிர்கொள்வோம். அது அப்படித்தான்.. அது அதுதான்.. என்று சொல்லும் மனம் அவருக்கில்லாமல் ஒதுங்கிப் போகிறார். அல்லது பயந்து ஒதுங்குகிறார் என்று நினைக்கிறேன்..!

இது எனக்கும் பிடிக்கவில்லைதான். ஆனால் என்ன செய்வது..? அது அவருடைய குணமாச்சே..!

உண்மைத்தமிழன் said...

[[[கபிலன் said...
உஸ் ......கண்ணை கட்டுது......
மணிரத்னம் கூட இவ்வளவு டிஸ்கஸ் பண்ணிருக்க மாட்டார் ன்னு
நினைக்கிறேன்.
தங்கள் பொறுமை என்னை அசரடிக்கிறது.
வாழ்த்துக்கள்.]]]

கபிலன்ஜி.. நன்றி..!

மணி அளவுக்கெல்லாம் பெர்பெக்ஷன் பார்க்க முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

indha padatha innum paakala na... unga vimarsanatha padichathuku param paakalama venamanu kozhappama irukku..

enaku ipa Maniratnam edukura padam edhuvum pudikirathu illa... etho technicalla mattum nalla eduthutu irukkar..]]]

இதையும் அப்படியே நினைச்சு பார்த்திருங்க கனகு..

பார்க்காம மட்டும் இருக்காதீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[thenammailakshmanan said...
ஐஸை விக்ரம் விரும்புகிறாரா இல்லையா என்பதைப் போல் கதையை மாற்றிவிட.. இது பழி வாங்கும் கதையில் இருந்து புதிய காதல் கதையாகி கிளை பரவி வேர்விட்டதில் நொறுங்கிப் போனது மணி வடிவமைத்த கதையின் பேஸ்மெண்ட்..!//

மிக அருமையான விமர்சனம்
உண்மைத்தமிழன்]]]

நன்றி தேனக்கா..!

cute photos said...

Hi,

cutephotos - http://vphottoss.blogspot.com is changed now...

New URL is : http://cutephotoss.blogspot.com/

please visit this blog..

மணிஜி said...

மேக்கிங்கோட, விமர்சனம் எழுத நிறைய நேரம் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்

உண்மைத்தமிழன் said...

[[[புருனோ Bruno said...

//ரோஜா இல்லையா..? பம்பாய் இல்லையா..? கன்னத்தில் முத்தமிட்டால்..?

இருக்குங்கண்ணே.. அவரால முடியும்.. ஏன் அதை இதில் செய்யவில்லைன்னுதான் தெரியலை..!//

அண்ணே... கன்னத்தில் முத்தமிட்டால் எத்தனை நாள் அண்ணே ஓடியது]]]

ஏன்..? அதுவும் நன்றாகத்தான் ஓடியது..!

abeer ahmed said...

See who owns wareseeker.com or any other website:
http://whois.domaintasks.com/wareseeker.com

abeer ahmed said...

See who owns superfaster.ro or any other website.