Pages

Thursday, February 10, 2011

ஒண்ணே முக்கா லட்சம் கோடி.. 2 லட்சம் கோடி.. அடுத்ததென்ன..?

10-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஏற்கெனவே வெள்ளித்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியே இன்னமும் பேசி முடிக்கவில்லை. அதற்குள்ளாக அடுத்த ஊழல் லீலைகள் அம்பலமாகிவிட்டது..

இப்போதெல்லாம் இந்தியாவில் செய்யும் ஊழல்களின் மதிப்பு கோடி, ஆயிரக்கணக்கான கோடி, லட்சக்கணக்கான கோடி என்று சர்வசாதாரணமாகிவிட்டது. 2-ஜி-ஊழலை வெட்ட வெளிச்சமாக்கிய சி.ஏ.ஜி. என்றழைக்கப்படும் காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட் ஜெனரல் ஆஃப் இந்தியா என்ற அமைப்புதான் இந்த ஊழலையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

ஆனால் இந்தப் புகார் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே ஒரு முறை எழுந்து அமுங்கிப் போய்க் கிடந்தது. இப்போது 2-ஜி-யில் தி.மு.க.வை இந்தியாவே வறுத்து எடுத்துக் கொண்டிருக்கும்போது பிரதமரையும், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியையும் மட்டுமே குறிப்பெடுத்துத் தாக்குவதற்காக இந்த ஊழல் விஷயம் மீண்டும் விசுவரூபமெடுத்துள்ளது.

அதற்கேற்றாற்போல் 2-ஜி-யில் சற்று அடக்கி வாசித்து வரும் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவின் காம்பவுண்ட்டில் இருந்து வெளிவரும் பிஸினஸ்லைன் பத்திரிகைதான் இந்த ஊழல் பற்றிய செய்தியை இப்போது வெளிப்படையாக்கி இன்னொரு திசை திருப்பலை செய்திருக்கிறது. இந்த முறை மாட்டியிருப்பது சாட்சாத் அமைதியின் திருவுரும்.. நேர்மையின் சிகரம்.. நாணயத்தின் அடையாளமாகச் சொல்லப்படும் பிரதமர் மன்னமோகனசிங்குதான்.

அவருடைய நேரடி கண்காணிப்பின் கீழ் வரும் வி்ண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் நடந்திருக்கும் இந்த ஊழலையும் படித்துப் பார்த்தால் இந்தியாவில் ஊழலை வளர்த்துவிடுவதற்கு முழு காரணமும் அரசியல்வியாதிகள்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

தகவல் தொழில் நுட்பத் துறை இதுவரையில் 2-ஜி மற்றும் 3-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரங்களை மட்டுமே கையாண்டு வந்திருக்கிறது. பிரதமரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்திய விண்வெளித் துறையும் அதன் துணை அமைப்பான இந்திய விண்வெளித் துறை ஆய்வு மையம் ஆகியவையும் பொதுவாக கேபினட்டின் சக்திக்கு அப்பாற்பட்டு வெளியிலேயே செயல்படக் கூடியவையாக உள்ளன.

இந்த மெகா ஊழலில் என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், முதல் பிள்ளையார் சுழி 2005-ம் ஆண்டு இந்திய விண்வெளித்துறையின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரக்ஸுக்கும் தேவாஸ் மல்ட்டி மீடியா என்கின்ற ஒரு தனியார் கம்பெனிக்கும் இடையே போடப்பட்ட ஒரு ஒப்பந்தம்தான்.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரோ, தேவ்ஸ் மல்ட்டி மீடியாக கம்பெனிக்காக ஜி-சாட்-6, ஜி-சாட்-6-ஏ ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும். இதில் ஒரு சாட்டிலைட்டுக்கு தலா 10 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தி தேவாஸ் மல்ட்டி மீடியா பணம் சம்பாதித்துக் கொள்ளும். அத்துடன் 20 வருடங்களுக்கு எந்தவிதத் தடையுமில்லாமல் மிக விலையுயர்ந்த எஸ் பாண்ட்டின் 70 மெகா ஹெர்ட்ஸ் ஒளிக்கற்றை தேவாஸ் கம்பெனிக்கு இந்திய விண்வெளித் துறையால் தாரை வார்க்கப்படும்.

இந்த எஸ் பேண்ட்டை சர்வதேச தகவல் தொழில் நுட்பத் துறையில் 4-ஜி என அழைப்பார்கள். இதனைப் பயன்படுத்தி தொலைத்தொடர்புத் துறையின் நான்கு விதமான தளங்களிலும் இயங்க முடியுமாம்.

அதாவது லேண்ட்லைன் என அழைக்கப்படும் வீட்டில் உள்ள சாதாரண தொலைபேசி, 2-ஜி எனப்படும் செல்லூலர் தொலைபேசி, 3-ஜயில் வரக்கூடிய குரல் மற்றும் இண்டர்நெட் வசதி, நான்காவதாக செயற்கைக்கோள் மூலம் டவரே இல்லாமல் எல்லா இடத்திலும் பயன்படுத்தக் கூடிய வசதி. இதுதான் இந்த 4-ஜி என்கிறார்கள்.

இந்த ஒளிக்கற்றை இந்தியாவில் 190 மெகா ஹெர்ட்ஸாக இருக்கிறது. இந்த 190 மெகா ஹெர்ட்ஸில் 150 மெகா ஹெர்ட்ஸை விண்வெளி்த் துறையின் பயன்பாட்டில் செயற்கைக் கோள் வசதிக்காகவும், மொபைல் வசதிகளை உருவாக்குவதற்காகவும் மத்திய அரசு அளித்திருக்கிறது.

இதே பேண்ட்டில் உள்ள 20 மெகா ஹெர்ட்ஸை சென்ற ஆண்டு மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூபாய் 12847 கோடி ரூபாய்க்கு அளித்தது. ஆனால் இதே பேண்ட்டில் இருக்கும் 70 மெகா ஹெர்ட்ஸ் அளவுள்ள அலைக்கற்றையை வெறும் 1000 கோடி ரூபாய்க்கு தேவாஸ் நிறுவனத்திற்கு விண்வெளித்துறை அளித்துள்ளது.

சி.ஏ.ஜி.யின் கணக்குப்படி இதன் உண்மையான மார்க்கெட் விலை குறைந்தபட்சம் 2 லட்சம் கோடியாக இருக்கும் என்பதுதான் இதில் இருக்கும் முக்கியக் குற்றச்சாட்டு.

இந்தப் பேரத்திற்காக தகவல் தொழில் நுட்பத் துறை மூலமாக உள்ளே நுழையாமல் விண்வெளித்துறை வழியாக, பின் வழியாக நுழைந்து தனது வியாபாரத்தை முடித்திருக்கிறது தேவாஸ் நிறுவனம்.

இந்த தேவாஸ் கம்பெனியின் உரிமையாளர் பெயர் எம்.ஜி.சந்திரசேகர். இவர் இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி. 2004-ல் இவர் ஓய்வு பெற்ற பின்புதான் இந்த நிறுவனத்தையே துவக்கியுள்ளார்.

இவருடைய கம்பெனியில் புகழ் பெற்ற ஜெர்மன் தொலைத் தொடர்பு நிறுவனமான டாயிஸ் டெலிகாம் 17 சதவிகித பங்குகளைப் பெற்றுள்ளது. அதுவும் இஸ்ரோவுக்கும், தேவாஸ் நிறுவனத்துக்குமான ஒப்பந்தம் நிறைவேறிய பின்புதான்..

இந்த இஸ்ரோவின் முன்னாள் அதிகாரியுடன் பணியாற்றிய இந்நாள் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து சட்டத்திற்குப் புறம்பாக தொலைத் தொடர்புத் துறையில் தங்களுக்கான பெரிய இடத்தைப் பெறுவதற்காக இந்தக் கம்பெனியை உருவாக்கி, அதனுடன் இது போன்ற ஒப்பந்தத்தை(20 வருடங்களுக்கு 70 மெகா ஹெர்ட்ஸ் எஸ் பேண்ட், வெறும் 1000 கோடி ரூபாய்களுக்கு) செய்து கொண்டனர் என்பதும் சி.ஏ.ஜி.யின் மற்றொரு குற்றச்சாட்டு..

இதில் சி.ஏ.ஜி. சுத்தும் குற்றச்சாட்டுக்களைப் படித்துப் பார்த்தால் நமக்குத்தான் தலை சுற்றுகிறது.

1. எஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் தேவாஸூக்கு அளிக்கப்படுவதற்கு முன்பு ஒரு போட்டி ஏலதாரர்கூட அழைக்கப்படவில்லை..

இது எவ்வளவு பெரிய முறைகேடு..? சாலைகளில் ஜல்லி போட்டு சமன் செய்யும் சிறிய வேலைகளுக்குக்கூட ஏலம் முறையைப் பின்பற்ற வேண்டும் என்கிற விதிமுறைகள் இருக்கின்றபோது இவ்வளவு பெரிய வியாபாரத்தை செய்கின்றபோது ஏலத்திற்கே விடாமல் தாங்கள் விரும்பியவர்களுக்குக் கொடுத்தால் இதில் உள்ளடி அரசியலும், ஊழலும் இல்லாமலா இருக்கும்..?

2. குறித்த காலத்திற்குள் செயற்கைக் கோளை செலுத்தாவிட்டால் இந்திய விண்வெளித்துறை ஐரோப்பிய விண்வெளித் துறை மூலம் செயற்கைக் கோளை செலுத்தி தேவாஸுக்கு நஷ்டம் ஏற்பாடதவகையில் பார்த்துக் கொள்ளும் என்ற பெனால்டி விதிமுறையும் இதில் இருக்கிறது.

ஆஹா.. இந்த பாலிஸி நல்லாயிருக்கே. பொதுமக்கள் பணம்  நஷ்டமானாலும் பரவாயில்லை. நாமும், நமது குடும்பமும் கஷ்டப்படக் கூடாது என்கிற நமது சராசரி அரசியல்வியாதிகளின் புத்தி இந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது என்பது நம்மை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் செய்தி..

3. ஜி-சாட்-6-ஐ இதுவரை ஏவ முடியாத இஸ்ரோ, ஏற்கெனவே ஏரியன்ஸ் ஸ்பேஸ் என்கிற ஐரோப்பிய விண்வெளி ஏவுவதற்குத் தயாராகி வருகிறது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்ரோவே செயற்கைக்கோளை ஏவினால் அதற்கு லாபம். இதை ஐரோப்பிய நிறுவனம் மூலம் ஏவினால் எடுத்தவுடனேயே 2400 கோடி ரூபாய் நட்டம் வந்துவிடுகிறது. தேவாஸுக்கு நட்டம் வர வேண்டாம் என்பதற்காகவே இஸ்ரோ நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என்பதுபோல் இந்த ஒப்பந்தம் இருப்பதை சி.ஏ.ஜி. சுட்டிக் காட்டுகிறது.

ஆமாம். வேறு எதை இந்த நிபந்தனை காட்டுகிறது. ஒரு தனி நபருக்காக இஸ்ரோ என்னும் விண்வெளிக் கழகமே வளைந்து கொடுத்திருக்கிறது என்றால் பணம் எந்த அளவுக்கு பாய்ந்திருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது..!

4. இஸ்ரோ அமைப்புக்குள் இருக்கக்கூடிய ஒப்பந்த முறைகள் எதுவும் தேவாஸூடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பின்பற்றப்படவில்லை. பிரதமர், மத்திய அமைச்சரவை மற்றும் இந்திய விண்வெளி கமிஷன் ஆகிய மூவருக்கும் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி எவ்வித முறையான தாக்கீதுகளும் செல்லவில்லை.

சபாஷ்.. இதுவும் ஸ்பெக்ட்ரம் போலவேதான். பிரதமரின் டேபிளுக்கே போகவில்லை. எல்லாத்தையும் நாங்கதான் செஞ்சோம் என்று முதலிலும், மாட்டியவுடன் எல்லாத்தையும் அந்த சிங்குகிட்ட சொல்லிட்டு்ததான் செஞ்சேன் என்று மாற்றிப் பேசியும் கவிழ்த்ததைப் போல இதையும் இப்போது மாற்றித்தான் பேசப் போகிறார்கள்.

பிரதமருக்கே இது தெரியாது எனில் நமது அரசியல் நிர்வாக அமைப்பே கேவலமாக இருக்கிறது என்றுதான் பொருள். பின்பு எதற்கு இந்த மனிதர் பிரதமர் என்ற பதவியில் இன்னமும் வெட்கமில்லாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறாராம்..?

5. இதுவரை இந்திய விண்வெளித் துறை தயாரித்து வந்த அனைத்து செயற்கைக் கோள்களும் மல்ட்டி பர்போஸ் என்றழைக்கப்படும் பல்வேறு பயன்பாடுகளுக்கான செயற்கைக் கோள்கள்தான். ஆனால் தேவாஸுக்காக அவர்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மட்டுமே 2 செயற்கைக் கோள்களை உருவாக்கியிருப்பது நடைமுறையில் இதுவரை இல்லாத நிகழ்வு என்பது மட்டுமில்லாமல், பொது பயன்பாட்டுக்கு உருவாகக் கூடிய ஒரு செயற்கைக் கோளை இந்திய மக்கள் இழந்துவிட்டனர்.

வெரிகுட்.. முழுக்க நனைஞ்சாச்சு.. முக்காடு எதுக்கு என்றுதான் இதற்கும் துணிந்திருக்கிறார்கள்..!

6. எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக இதுவரையில் தேவாஸ் மல்ட்டி மீடியா நிறுவனம் தகவல் தொடர்புத் துறையிடமிருந்து எந்தவிதமான லைசென்ஸையும் பெறவில்லை. லைசென்ஸ் பெறுவதற்கு முன்பு ஸ்பெக்ட்ரம் உறுதி செய்யப்பட்ட உலகத்தின் முதல் கம்பெனியாக தேவாஸ் கம்பெனி இருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய குற்றச்சாட்டு.

அப்பாடா.. ஊழலுக்கான ஊற்றுக் கண்ணே இங்கேதான் சிக்கியுள்ளது. இப்படி லைசென்ஸே கொடுக்கப்படாத ஒரு நிறுவனத்திற்கு நாட்டின் மிகப் பெரிய சொத்தையே தூக்கிக் கொடுக்கும் அளவுக்குத்தான் நமது மத்திய அரசின் நிர்வாகத் திறன் இருக்கிறது என்றால் இவர்களையெல்லாம் நாம் தலைமை தாங்க வைத்திருப்பதற்கு நாம்தான் வெட்கப்பட வேண்டு்ம். அவர்கள் ஒரு நாளும் வருத்தமோ வெட்கமோ படமாட்டார்கள்..

எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற அரசியல் வேலைப்பாடுகளுடனேயே ஒரு பிரதமர் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தால் நாடு எப்படி வெளங்கும்..? இப்படித்தான் இருக்கும்.

ஒப்பந்தம்தான் போடப்பட்டுள்ளது. இதுவரையில் ஒப்படைக்கப்படவில்லை. ஆகவே பயப்படாதீர்கள் என்கிறார்கள் இப்போது..! இதுவரையில் இது தொடர்பாக இஸ்ரோவில் தொடர்ந்து வந்திருக்கும் வேலைகளுக்கு செய்யப்பட்டிருக்கும் செலவுகளை யார் சுமப்பதாம்..? மன்னமோகனசிங்கின் மாமனாரா..?

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அது வெறும் யூகமான ஊழல் என்றெல்லாம் கதை விட்டவர்கள்.. லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் தாங்கள் பங்கு விற்ற பணத்தினை லைசென்ஸ் கொடுத்தவர்களுக்கே திருப்பிவிட்டிருக்கும் கதையைப் படித்தவுடன் பதில் பேச தெரியாமல் இப்போது அமைதியாகிவிட்டார்கள்.

அதேபோலத்தான் தேவாஸ் நிறுவனத்தின் ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் மூலம் அந்நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் ஜெர்மனி கம்பெனியின் முதலீடும் ஒரு முறைகேடான பணம்தான். அதில் இருந்து பெருமளவு இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொடுத்தவர்களுக்கு போயிருக்கும் என்பதை இந்திய அரசியலை கூர்ந்து கவனித்து வரும் சாதா இந்தியர்களுக்கே கண்டிப்பாக புரிந்திருக்கும்..!

சி.ஏ.ஜி. சொல்லியிருப்பது, அந்த 4-ஜி அலைக்கற்றையின் இன்றைய மார்க்கெட் மதிப்பு 2 லட்சம் கோடிகளைத் தாண்டிவிடும். அதை பொதுச் சந்தையில் ஏல முறையில் விடுத்தால் இந்த அளவுக்கு பணம் இந்திய அரசுக்கும், மக்களுக்கும் கிடைக்குமே என்ற வகையில்தான் என்பது புரிகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்திருக்கும் பண ஆதாயத்தில் திளைத்துக் குளித்தது யார் என்பதை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் யாராவது மனு தொடுத்தால்தான் வெளிவரும்போல் தெரிகிறது.

ஏனெனில் இன்று நடந்திருக்கும் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் சில மந்திரிகள் இது தொடர்பாக எப்படி விற்பனை நடந்தது என்று கேட்டதற்கு பிரதமர் பதிலே பேசவில்லையாம்.. ஐயா எப்படி பேசுவார்..? அவரது நேர்மையின் சிகரம் என்ற பெயர்தான் இன்றைக்கு கோவணமாகக் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறதே. இவரது சீர்கெட்ட நிர்வாகத் திறனுக்கு இந்த 2 லட்சம் கோடி மதிப்பு வாய்ந்த மோசடியும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!

அரசியல்வியாதிகளும், ரெளடிகளும், மாபியாக்காரர்களும், கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும்தான், மோசடியான பத்திரிகையாளர்களும், நேர்மையற்ற எழுத்தாளர்களும் இந்தியாவை அழிவுப் பாதைக்குக் கொண்டு போய் கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், நமது மதிப்பிற்குரிய விஞ்ஞானிகளும் இந்த லிஸ்ட்டில் இணைந்துவிட்டார்கள் என்பதை நினைத்தால்தான் இன்னமும் வேதனையாக இருக்கிறது.

இந்தியாவில் இனிமேல் காமன்மேனுக்கு பதில் ஆறுதலை இன்னொரு காமன்மேன்தான் சொல்ல வேண்டும் போலும்..!

உதவி : பல்வேறு பத்திரிகைகள், இணையத்தளங்கள்

32 comments:

  1. //2. குறித்த காலத்திற்குள் செயற்கைக் கோளை செலுத்தாவிட்டால் இந்திய விண்வெளித்துறை ஐரோப்பிய விண்வெளித் துறை மூலம் செயற்கைக் கோளை செலுத்தி தேவாஸுக்கு நஷ்டம் ஏற்பாடதவகையில் பார்த்துக் கொள்ளும் என்ற பெனால்டி விதிமுறையும் இதில் இருக்கிறது.

    ஆஹா.. இந்த பாலிஸி நல்லாயிருக்கே. பொதுமக்கள் பணம் நஷ்டமானாலும் பரவாயில்லை. நாமும், நமது குடும்பமும் கஷ்டப்படக் கூடாது என்கிற நமது சராசரி அரசியல்வியாதிகளின் புத்தி இந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது என்பது நம்மை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் செய்தி..

    Read more: http://truetamilans.blogspot.com/2011/02/2.html#ixzz1DaDQqptU
    //

    இன்னும் என்னவெல்லாம் வெளில வரப் போகுதோ, அப்துல் கலாம் இருந்தவரை இஸ்ரோவின் மதிப்பு எண்ணிக்கையிலடங்காதது, இப்ப இந்த சேதிய படிச்சவுடனே... You Too Brutus?னு கேக்க வைக்குது!! :(

    ReplyDelete
  2. //ஒண்ணே முக்கா லட்சம் கோடி..ரெண்டு லட்சம் கோடி..அடுத்தது என்ன..?//

    சற்று இடைவேளை (அ) தேர்தல்.

    மீண்டும் நாலே முக்கா லட்சம் கோடி..அஞ்சு லட்சம் கோடி..

    போங்க சரவணா. வயிறு எரியுது.

    ReplyDelete
  3. யப்பா.........தலையே சுத்துது.

    லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று எண்ணி முடிக்கிறதுக்குள்ள அவிங்க அடுத்ததரம் ஆட்சிய புடிச்சிருவாங்க. ஊழலின் ஜாம்பவான்கள் காங்கிரஸ், திமுக ஆட்சி நடக்கும்போது இதெல்லாம் ஜுஜுபி.

    ReplyDelete
  4. இவங்க இவ்வளவு பணத்தை அடிச்சு என்ன செய்யப் போறாங்கன்னு புரியவே இல்லைண்ணே..இதை செலவழிக்கவே ஏழு ஜென்மம் எடுத்தாலும் போதாதே...

    ReplyDelete
  5. >>> மனுசன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே....அது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே..

    ReplyDelete
  6. நமது மதிப்பிற்குரிய விஞ்ஞானிகளும் இந்த லிஸ்ட்டில் இணைந்துவிட்டார்கள் என்பதை நினைத்தால்தான் இன்னமும் வேதனையாக இருக்கிறது.

    நாம எங்கே அவங்களுக்கு உண்டான மரியாதையை கொடுத்து இருக்கோம்? இது போன்ற சமயங்களில் தான் அவங்களப்பத்தி நாம பத்திரிக்கைகள் வாயிலாக தெரிந்து கொள்ளமுடியும். விடுங்க. பாடுபட்டவங்க. பொழச்சுப் போகட்டும்.

    ReplyDelete
  7. மெகா கோடிகளும்.. மகா கேடிகளும் .. பைத்தியக்கார மக்களும் ...

    ReplyDelete
  8. எல்லாம் நல்லதுக்குத்தாண்ணே! எவனும் நம்பத்தகுந்தவனல்ல என்று நமக்குப் புரிய வைக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டியது, whistle blowers எனப்படும் தனிமனிதர்கள் முயன்று பிரம்மாண்டமான ஊழல்களை அம்பலப்படுத்தியிருப்பது. பார்க்கலாம் என்ன நடக்குமுன்னு!

    ReplyDelete
  9. அன்புள்ள சரவணன்,

    பெருந்தலைவர் காமராஜர் பள்ளி சென்று படிக்காதவர்.எளியவர்.இவரால் ஆள முடியுமா என்ற ஐயத்தை உடைக்கும் வகையில் பல்லாண்டுகள் மிக நேர்மையாக ஆண்டு, பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார்.சி.எஸ்.
    ஆர்.வி போன்ற நல்ல சீடர்களையும் உருவாக்கினார்.
    மன்மோகன் சிங் மிக படித்த உலகப்புகழ் பெற்ற மாமேதை.பொருளாதாரத்தில் நிகரற்ற அறிவு படைத்தவர் என சொல்லப்படுகிறது.இவர் ஆண்ட 7 ஆண்டுகளில் நம் நாடு அடைந்த சீர்கேடு அளவிடமுடியாதது.இவர் கொண்டுவந்த சீர்திருத்தம் நாட்டில் கொஞ்ச நஞ்சம இருந்த நேர்மையையும் சுத்தமாக அழித்து நாட்டையே நஞ்சாக்கிவிட்டது.
    ஒண்ணும் புரியல!

    ReplyDelete
  10. அடுத்த வாரம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து +2, 10th பரிட்சைகள் வர இருக்கின்றன. உலகக் கோப்பை முடியவும் ஐ.பி.எல். கோலாகலங்கள் தொடங்கப் போகிறது. ஊழல்களை வசதியாக மறந்துவிட மக்களுக்குத்தான் எத்தனை தீனி!!!

    சேப்பாக்கம் கிரவுண்டில் கருணாநிதி பரிவாரங்களுடன் அமர்ந்து மேட்ச் பார்க்கப் போகிறார். ஊழல் செய்திகள் நாலாம் ஐந்தாம்தர செய்திகளாகப் போகின்றன!!

    ReplyDelete
  11. இந்தியா என்று ஒரு நாடு 2020 இல் இறுக்குமா?

    ReplyDelete
  12. [[[அன்னு said...

    இன்னும் என்னவெல்லாம் வெளில வரப் போகுதோ, அப்துல் கலாம் இருந்தவரை இஸ்ரோவின் மதிப்பு எண்ணிக்கையிலடங்காதது, இப்ப இந்த சேதிய படிச்சவுடனே... You Too Brutus?னு கேக்க வைக்குது!!:(]]]

    இதுதான் ஒவ்வொரு சராசரி இந்தியனின் வருத்தமும்..!

    ReplyDelete
  13. [[[பா.ராஜாராம் said...

    //ஒண்ணே முக்கா லட்சம் கோடி..ரெண்டு லட்சம் கோடி..அடுத்தது என்ன..?//

    சற்று இடைவேளை (அ) தேர்தல்.
    மீண்டும் நாலே முக்கா லட்சம் கோடி. அஞ்சு லட்சம் கோடி.. போங்க சரவணா. வயிறு எரியுது.]]]

    நமக்கு வயிறும் எரியுது. குடலும் எரியுது.. மனசும் எரியுது.. ஆனால் அரசியல்வியாதிகளுக்கு ஒண்ணுமே இல்லையே ஸார்..! இப்போ இருக்குற இவனுகளையெல்லாம் ஒட்டு மொத்தமா ஒழிச்சாத்தான் சரிப்படும்..!

    ReplyDelete
  14. [[[தம்பி கிருஷ்ணா said...
    யப்பா......... தலையே சுத்துது.
    லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று எண்ணி முடிக்கிறதுக்குள்ள அவிங்க அடுத்த தரம் ஆட்சிய புடிச்சிருவாங்க. ஊழலின் ஜாம்பவான்கள் காங்கிரஸ், திமுக ஆட்சி நடக்கும்போது இதெல்லாம் ஜுஜுபி.]]]

    இப்போ இவங்களுக்குள்ள இருக்குற போட்டியே யார் அதிகமா கொள்ளையடிக்கிறது என்பதுதான்..!

    ReplyDelete
  15. [[[செங்கோவி said...
    இவங்க இவ்வளவு பணத்தை அடிச்சு என்ன செய்யப் போறாங்கன்னு புரியவே இல்லைண்ணே. இதை செலவழிக்கவே ஏழு ஜென்மம் எடுத்தாலும் போதாதே.]]]

    அதான் ஏழு குடும்பம் வைச்சிருக்காங்கள்ல.. மொத்தமா ஒரே ஜென்மத்துல செலவழிக்கப் போறாங்க..!

    ReplyDelete
  16. [[[! சிவகுமார் ! said...
    >>> மனுசன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே. அது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே..]]]

    இதையெல்லாம் முன் கூட்டியே யூகித்துதான் எழுதியிருக்கிறான் மக்கள் கவிஞன்..!

    ReplyDelete
  17. [[[ஜோதிஜி said...

    நமது மதிப்பிற்குரிய விஞ்ஞானிகளும் இந்த லிஸ்ட்டில் இணைந்துவிட்டார்கள் என்பதை நினைத்தால்தான் இன்னமும் வேதனையாக இருக்கிறது. நாம எங்கே அவங்களுக்கு உண்டான மரியாதையை கொடுத்து இருக்கோம்? இது போன்ற சமயங்களில்தான் அவங்களப் பத்தி நாம பத்திரிக்கைகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும். விடுங்க. பாடுபட்டவங்க. பொழச்சுப் போகட்டும்.]]]

    இப்படியே விட்டால் கடைசியாக யார்தான் மிஞ்சுவது ஜோதிஜி..?

    ReplyDelete
  18. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    மெகா கோடிகளும்.. மகா கேடிகளும். பைத்தியக்கார மக்களும்]]]

    சூப்பர்.. சரியான பன்ச்..! நன்றி செந்திலண்ணே..!

    ReplyDelete
  19. [[[சேட்டைக்காரன் said...
    எல்லாம் நல்லதுக்குத்தாண்ணே! எவனும் நம்பத்தகுந்தவனல்ல என்று நமக்குப் புரிய வைக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டியது, whistle blowers எனப்படும் தனி மனிதர்கள் முயன்று பிரம்மாண்டமான ஊழல்களை அம்பலப்படுத்தியிருப்பது. பார்க்கலாம் என்ன நடக்குமுன்னு!]]]

    அடுத்தது இதைவிட அதிகத் தொகையில் இன்னொரு ஊழல் வரத்தான் போகிறது.. அவ்வளவுதான்..!

    ReplyDelete
  20. [[[Ganpat said...
    அன்புள்ள சரவணன்,
    பெருந்தலைவர் காமராஜர் பள்ளி சென்று படிக்காதவர். எளியவர். இவரால் ஆள முடியுமா என்ற ஐயத்தை உடைக்கும் வகையில் பல்லாண்டுகள் மிக நேர்மையாக ஆண்டு, பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார்.சி.எஸ்.
    ஆர்.வி போன்ற நல்ல சீடர்களையும் உருவாக்கினார். மன்மோகன் சிங் மிக படித்த உலகப் புகழ் பெற்ற மாமேதை. பொருளாதாரத்தில் நிகரற்ற அறிவு படைத்தவர் என சொல்லப்படுகிறது. இவர் ஆண்ட 7 ஆண்டுகளில் நம் நாடு அடைந்த சீர்கேடு அளவிட முடியாதது. இவர் கொண்டு வந்த சீர்திருத்தம் நாட்டில் கொஞ்ச நஞ்சம இருந்த நேர்மையையும் சுத்தமாக அழித்து நாட்டையே நஞ்சாக்கிவிட்டது.
    ஒண்ணும் புரியல!]]]

    படிக்காதவன் நாட்டை முன்னேற வைச்சான்.. படிச்சவன் நாட்டை அழிக்கிறான். இதுக்கெதுக்கு இம்புட்டு படிப்பு..?

    ReplyDelete
  21. [[[ரிஷி said...

    அடுத்த வாரம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து +2, 10th பரிட்சைகள் வர இருக்கின்றன. உலகக் கோப்பை முடியவும் ஐ.பி.எல். கோலாகலங்கள் தொடங்கப் போகிறது. ஊழல்களை வசதியாக மறந்துவிட மக்களுக்குத்தான் எத்தனை தீனி!!!

    சேப்பாக்கம் கிரவுண்டில் கருணாநிதி பரிவாரங்களுடன் அமர்ந்து மேட்ச் பார்க்கப் போகிறார். ஊழல் செய்திகள் நாலாம் ஐந்தாம் தர செய்திகளாகப் போகின்றன!!]]]

    நம்ம மக்களைத்தான் இதுக்குக் குத்தம் சொல்லணும்..! தன் வீட்டுக் காசு கரியானால் மட்டும்தான் இவர்கள் புலம்புவார்கள். பொதுப்பணம் என்றால் எவன் வீட்டுக் காசோ என்றுதானே எண்ணுகிறார்கள்.. தப்பு நம்ம மக்கள்ஸ் மேலேயும் இருக்கு ரிஷி..!

    ReplyDelete
  22. [[[Indian Share Market said...

    இந்தியா என்று ஒரு நாடு 2020 இல் இறுக்குமா?]]]

    இருக்கும். ஊழலில் முதலிடத்தில்..!

    ReplyDelete
  23. //மன்மோகன் சிங் மிக படித்த உலகப்புகழ் பெற்ற மாமேதை.பொருளாதாரத்தில் நிகரற்ற அறிவு படைத்தவர் என சொல்லப்படுகிறது.இவர் ஆண்ட 7 ஆண்டுகளில் நம் நாடு அடைந்த சீர்கேடு அளவிடமுடியாதது.இவர் கொண்டுவந்த சீர்திருத்தம் நாட்டில் கொஞ்ச நஞ்சம இருந்த நேர்மையையும் சுத்தமாக அழித்து நாட்டையே நஞ்சாக்கிவிட்டது.//

    அப்படியே முழுவதுமாக மன்மோகனை குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.பனிப்போருக்கு அடுத்த கட்டமாக இலகுவாக்கிய பொருளாதாரக்கொள்கைகள் தேசத்தின் முகத்தை மாற்றியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.இதில் நரசிம்ம ராவுக்கும்,மன்மோகனுக்கும் முக்கிய பங்குண்டு என்பதில் ஐயமில்லை.

    இனி மன்மோகன் தாடியைப் புடிச்சு இழுக்கணும்ன்னா அவரது கோழைத்தனம்,பின் பக்கமிருந்து சோனியா ரிமோட்,எங்கோயோ கோளாறுன்னு விவாதங்கள் நிகழும் இந்த நேரத்திலும் வாய் மூடி மவுனியாக இருப்பது என்ற அவரது Sensitive person என்ற குணநலன்கள்.

    ReplyDelete
  24. [[[ராஜ நடராஜன் said...

    //மன்மோகன் சிங் மிக படித்த உலகப் புகழ் பெற்ற மாமேதை.பொருளாதாரத்தில் நிகரற்ற அறிவு படைத்தவர் என சொல்லப்படுகிறது. இவர் ஆண்ட 7 ஆண்டுகளில் நம் நாடு அடைந்த சீர்கேடு அளவிட முடியாதது. இவர் கொண்டுவந்த சீர்திருத்தம் நாட்டில் கொஞ்ச நஞ்சம இருந்த நேர்மையையும் சுத்தமாக அழித்து நாட்டையே நஞ்சாக்கிவிட்டது.//

    அப்படியே முழுவதுமாக மன்மோகனை குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. பனிப்போருக்கு அடுத்த கட்டமாக இலகுவாக்கிய பொருளாதாரக் கொள்கைகள் தேசத்தின் முகத்தை மாற்றியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இதில் நரசிம்மராவுக்கும், மன்மோகனுக்கும் முக்கிய பங்குண்டு என்பதில் ஐயமில்லை.]]]

    அன்றைய காலக்கட்டத்தில் திறந்துவிட்ட பொருளாதாரத்தினால்தான் இன்றைக்கு வெங்காயத்தின் விலை இத்தனை தூரம் பறந்திருக்கிறது..!

    [[[இனி மன்மோகன் தாடியைப் புடிச்சு இழுக்கணும்ன்னா அவரது கோழைத்தனம், பின் பக்கமிருந்து சோனியா ரிமோட், எங்கோயோ கோளாறுன்னு விவாதங்கள் நிகழும் இந்த நேரத்திலும் வாய் மூடி மவுனியாக இருப்பது என்ற அவரது Sensitive person என்ற குணநலன்கள்.]]]

    இவருக்கு ஒத்து வராத அரசியலுக்கு இவர் ஏன் வந்து உக்காந்து திருடர்களுக்கு கால் பிடிச்சு விடணும்.. இந்த வகையில் இவரும் ஒரு திருடர்தான்..!

    ReplyDelete
  25. makkal therubile irangi seruppala adikkanum.... i dont know but we are heading to egypt situation.... i can see everyone lost respect for that thoppi.... kalaignar kooda sernthu kettana ille kalaignar ponnu avanai keduthucha... evanachum porulathara methainnu sonna seruppai kalatti vayileye adikkanum

    ReplyDelete
  26. ஒரு பெரிய கோடு போட்டு அதை அழிக்காமல் சிறிதாக்குவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?.

    ReplyDelete
  27. [[[sekar said...
    makkal therubile irangi seruppala adikkanum. i dont know but we are heading to egypt situation. i can see everyone lost respect for that thoppi. kalaignar kooda sernthu kettana ille kalaignar ponnu avanai keduthucha. evanachum porulathara methainnu sonna seruppai kalatti vayileye adikkanum.]]]

    -)))))))))))

    ReplyDelete
  28. [[[புலிக்குட்டி said...
    ஒரு பெரிய கோடு போட்டு அதை அழிக்காமல் சிறிதாக்குவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?.]]]

    அப்போ இந்த 2 லட்சம் கோடியையும் மிஞ்சுற மாதிரி இன்னொரு ஊழல் வெளில வரும்கிறீங்க..? ம்.. பார்ப்போம்.. எவ்வளவோ தாங்கிட்டோம். இதைத் தாங்கிர மாட்டோமா..?

    ReplyDelete
  29. super News Sir,

    Keep it up, Thank You For your Information Sir.

    ReplyDelete
  30. [[[gurumoorthy said...

    super News Sir, Keep it up, Thank You For your Information Sir.]]]

    நன்றி குருமூர்த்தி ஸார்..!

    ReplyDelete
  31. //அன்றைய காலக்கட்டத்தில் திறந்துவிட்ட பொருளாதாரத்தினால்தான் இன்றைக்கு வெங்காயத்தின் விலை இத்தனை தூரம் பறந்திருக்கிறது..!//

    போய்யா வெங்காயம்ன்னு வேணுமின்னா மன்மோகனை திட்டுங்க!ஆனா வெங்காய விலைக்கு மன்மோகன் தான் காரணமுன்னு சொல்றது நல்லாயில்லே.

    வெங்காய விலை ஏறுவதற்கு முன் தமிழகத்தில் அடிச்ச மழையத்தான் நான் நேரில் பார்த்தேனே.

    பெட்ரோல் விலைக்கு இந்தியாவும் ஒரு முக்கிய காரணமாம்.முன்னாடி டவுன் பஸ்,ரூட் பஸ்ல போன ஆளுக எல்லாம் கார்,பைக்ன்னு மாறிட்டாங்க.தொழில் துறை,கட்டமைப்புக்கள் வளருகின்றன.

    கூடவே ஆட்டையப் போடுற ஆளுகளும் அதிகமாய்ட்டாய்ங்க என்பதால் விலைவாசி அதிகரிப்பு என்பதெல்லாம் வெங்காயத்துக்கு மட்டுமில்ல,மொத்த உற்பத்திக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  32. [[[ராஜ நடராஜன் said...

    //அன்றைய காலக்கட்டத்தில் திறந்துவிட்ட பொருளாதாரத்தினால்தான் இன்றைக்கு வெங்காயத்தின் விலை இத்தனை தூரம் பறந்திருக்கிறது..!//

    போய்யா வெங்காயம்ன்னு வேணுமின்னா மன்மோகனை திட்டுங்க! ஆனா வெங்காய விலைக்கு மன்மோகன்தான் காரணமுன்னு சொல்றது நல்லாயில்லே.
    வெங்காய விலை ஏறுவதற்கு முன் தமிழகத்தில் அடிச்ச மழையத்தான் நான் நேரில் பார்த்தேனே.]]]

    அதைவிட முக்கியம்.. யூக அடிப்படையிலான ஏல முறைக்கும், இணையம் வழி ஏல முறைக்கும் தடை விதிக்கணும். அப்பாவி விவசாயிகளை மூளைச் சலவை செய்து நிறைய பணம் உடனே கிடைக்கிறதே என்கிற காரணத்துக்காக அவர்களிடமிருந்து வெங்காயத்தை மொத்தமாகக் கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்குக்கூட கொண்டு வராமல் ஏற்றுமதி செய்தது தப்பாச்சே. அந்த வெங்காயம் மார்க்கெட்டுக்கு வந்திருந்தால் போட்டி ஏற்பட்டு விலை குறைஞ்சிருக்குமே.. இந்த சாதாரண விஷயம்கூட ஒரு பிரதமருக்கும், விவசாயத் துறை மந்திரிக்கும் தெரியலைன்னா பின்ன எதுக்கு இவங்க பதவில இருக்காங்க..?

    ReplyDelete