Pages

Saturday, July 12, 2008

ஜோதிடம் - உண்மையா? பொய்யா? - செந்தழல் ரவிக்கு எனது பதில்!

13-07-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த சில நாட்களாகவே என் அப்பன் முருகப் பெருமானின் திருவிளையாடலால், தமிழ்மணத்தின் பக்கமே என்னால் வர முடியாமல் போய்விட்டது. ஜிமெயிலில் கமெண்ட்டுகள் வந்தால் அதனை அனுமதிப்பது மட்டுமே என்னால் முடிந்த ஒன்றாக இருந்தது.

அப்பன் முருகனின் தூண்டுதலால் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த பலத்த கட்டுக்காவலையும் மீறி, இரண்டு பதிவுகளை சில தவறுகளுடன் போட்டிருந்தேன். மாலை நேரத்தில் கொரியா நாட்டுத் திரைப்படங்களோடு ஐக்கியமாகியிருந்த காரணத்தால், இணையத்தள கடைகளுக்கும் செல்ல முடியாத சூழல்.

நேற்றுதான் கொஞ்சம் இடைவெளி கிடைத்து தமிழ்மணத்தின் முன் அமர்ந்தேன். சர்ச்சைகளும், சண்டைகளும், வாதங்களும், பிரதிவாதங்களும் நமக்குப் புதிதல்ல. இருந்தாலும் என் கண் முன்னே தெரிந்த ஒரு வாக்குவாதம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

“ஜோதிடம் பொய்யா அல்லது உண்மையா?” என்ற நோக்கில் கேள்விகளை வீசியிருக்கிறான் அருமைத் தம்பி செந்தழல் ரவி. யாரிடம்..? செந்தழல் ரவியின் அகில உலக ரசிகர் மன்றத் தலைவரான திரு.சுப்பையா வாத்தியார் அவர்களிடம்.. இதுதான் எனக்கு ஆச்சரியம்..

ஏனெனில் செந்தழல்ரவி மீதான சுப்பையா வாத்தியாரின் ‘காதல்’ எப்படிப்பட்டது என்பதை நேரில் கண்டவன் நான்.

கோவையில் ஓசை செல்லா ஏற்பாட்டின்பேரில் கடந்த 2007, மே 20-ம் தேதியன்று வலைப்பதிவர் சந்திப்பு நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் வாத்தியாரையும், ரவியையும் நான் முதல் முறையாக நேரில் சந்தித்தேன். அன்றைய கூட்டத்தில் உடல்நலக் குறைவால் செல்லா பங்கேற்க முடியாமல் போய், தோழர் பாமரன் ‘சபாநாயகர்’ வேலையை மேற்கொண்டிருந்தார்.

கூட்டத்தில் யார், யார் என்ன சப்ஜெக்ட்டை எவ்வளவு நேரம் பேசுவது என்றெல்லாம் திட்டமிடல் எதுவும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த நேரத்தில், சுப்பையா வாத்தியார் தனது வலைப்பதிவு ஈடுபாடுகள் பற்றி பேசத் துவங்கினார். பேசினார்.. பேசினார்.. பேசிக் கொண்டேயிருந்தார்.. எப்போது முடிப்பார் என்று எங்களில் யாருக்கும் தெரியவில்லை.

நேரம் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்து தம்பி பாலபாரதிக்கு கோபமான கோபம். தன் கண் முழி பிதுங்கி விடும் அளவுக்கு அருகில் இருந்த மா.சிவக்குமாரை பார்த்து முறைத்தார். ஆகஸ்ட்-5, சென்னை வலைப்பதிவர் பட்டறையில் ‘பின்னவீனத்துவ பிடாரி’ வளர்மதியிடமிருந்து மைக்கை பிடுங்கும் அளவுக்குத் தைரியமானவராக இருந்த மா.சிவக்குமாருக்கு, இங்கே வாத்தியாரிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் சங்கடமாகி என்னைப் பார்த்தார். நான் அவர்கள் இருவரையும் பார்த்தேன்.

இப்படி நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்து ‘இளிப்பதைக்’ கண்டு எங்கள் மூவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த ‘பெங்களூர் மைனர்’ மோகன்தாஸ், தன் வாயில் கை வைத்து பொத்திக் கொண்டு குலுங்கி, குலுங்கி சிரித்தான். தோழர் பாமரனோ, ‘ஐயா எப்போது முடிப்பார்?’ என்பது தெரியாததால் வெண்குழல் பற்ற வைக்க எழுந்தோடி விட்டார்.

பார்த்தேன்.. ஏற்கெனவே பதிவுகள் வாயிலாக ரவிக்கும், வாத்தியாருக்குமான நட்பு எனக்குத் தெரிந்திருந்ததால் ரவியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு வாத்தியாரைக் காட்டி “என்னப்பா..?” என்று கண்களாலேயே கெஞ்சினேன். ‘தற்போதைய துணைவியார்’ அப்போது உடனிருந்ததால் ‘மிதப்பில்’ இருந்த ரவி, போட்டிருந்த மைனர் பனியனை உலுக்கிவிட்டுக் கொண்டு திடீரென்று இடையில் புகுந்து எதையோ சொல்லி வாத்தியாரின் பேச்சை நிறுத்தி, எங்களுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்தான். (வாத்தியாரே, மன்னிக்கணும்.. மன்னிக்கணும்.. மன்னிக்கணும்.. அன்றைக்கு இருந்த சூழல் அப்படி.. வேறு வழியில்லை..)

இந்த சந்திப்பின்போதுதான் வந்திருந்த 40 பதிவர்களையும் விட்டுவிட்டு, வாத்தியார் தனது ‘காதலன்’ செந்தழல் ரவிக்கு மட்டும் தான் வாங்கி வந்திருந்த துண்டை, ‘பொன்னாடை’ என்று சொல்லி அணிவித்து மகிழ்ந்தார். அந்தளவிற்கு ரவி மீதான பாசம் வாத்தியாருக்கு இருந்தது என்பது நீண்ட நாள் பதிவாளர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

வாத்தியார் நீண்ட நாட்களாகவே தனது வகுப்பறையில் ஜோதிடம் பற்றிய பாடங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிடித்தவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலும் அவ்வப்போது ரவி வந்து கமெண்ட் போட்டுச் செல்வதுண்டு.

ஆனால், இப்போது திடீரென்று ‘பொங்கியிருப்பதுதான்’ சந்தேகத்தைக் கிளப்புகிறது. அதிலும் இப்போது கல்யாணம் ஆனதில் இருந்தே இந்தப் பய ஒரு ‘மார்க்கமாக’த்தான் இருக்கிறான்.. என்னவென்று தெரியவில்லை.

ரவி கேட்டிருக்கும் கேள்விகளால் வாத்தியார் வருத்தமடைந்திருப்பதை அவருடைய பதிவைப் படித்துப் பார்த்ததில் இருந்தே தெரிந்தது. அவருடைய வருத்தமெல்லாம், இத்தனை வருடங்களாகத் தன்னை நன்கு தெரிந்து வைத்திருந்த ரவி, இப்படி சண்டைக்காரனைப் போல் தனி பதிவு போட்டு பிரச்சினையைக் கிளப்பலாமா என்பதே..!

இதுவரையில் வாத்தியார் எழுதியிருந்த ஜோதிடம் பற்றிய பதிவுகளிலெல்லாம் கேள்வி கேட்காமல், இப்போது முக்கால் கிணறு தாண்டிய பின்பு அருமைத் தம்பிக்கு திடீரென்று ஞானதோயம் எதற்கு, எங்கிருந்து வந்தது என்றுதான் எனக்கும் தெரியவில்லை. அப்படியே வந்திருந்தாலும் கொஞ்சம் நாசூக்காக அவர் பதிவிலேயே போய் கேட்டிருந்திருக்கலாம். இப்படி தனிப்பதிவு போட்டு, படிச்ச எல்லாரும் தனியா போய் ‘சுண்டக்கஞ்சி’ அடிக்கிற அளவுக்கு வைச்சுப்புட்டான்..

இரு தரப்புப் பதிவுகளிலும் வந்திருந்த பின்னூட்டங்கள், வாதங்கள், அது தொடர்பான பிரதிவாதங்களால் என்னைப் போன்ற அடிமுட்டாள்கள் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. கிடைத்தன. நன்றிகள் அப்பதிவர்களுக்கு.

ஜோதிடத்தை நம்புகிறவர்கள் யார்..? ஜோதிடத்தால் வெற்றியடைந்தவர்கள் அல்லது வெற்றியடைந்த கதையைக் கேட்டவர்கள். நிச்சயம் தோல்வியடைந்தவர்கள் ஜோதிடம் மற்றும் இன்ன பிற துறைகளின் பக்கம் போகவே மாட்டார்கள். ஆக ஜோதிடத்தால் வெற்றியடைந்தவர்கள் ஜோதிடத்தை நம்பத்தான் செய்வார்கள்..

தெற்குத் திசை நோக்கிய நிலையில் அப்ளிகேஷனை நிரப்பி அனுப்பிவிட்டு, யாரும் படிக்காமல் இருக்கப் போவதில்லை. அப்படி ஜோதிடத்தை நம்பி ஒன்றுமே செய்யாமல் குப்புறப் படுத்து தூங்குபவர்கள் நிச்சயம் முட்டாள்கள்தான்.. ஆனால் இந்த முட்டாள்களால் ஜோதிடத்தை பரப்புவது முடியவே முடியாது. ஏனெனில் தோல்வியடைந்தவன் ஒருபோதும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ முடியாது. யாரும் நம்பவும் மாட்டார்கள்.

ஜோதிடம் என்பதே ஏமாற்றுவேலை என்று சொல்வதற்கு எவ்வளவு ஆதாரங்கள் கிடைக்குமோ, அதே அளவு ஆதாரங்கள் ஜோதிடம் உண்மை என்பதற்கும் கிடைக்கும். இரண்டுமே வாழ்க்கையில் காணக்கிடைக்கும் விஷயங்கள்தான். பரந்துபட்ட மனிதர்கள் ஒவ்வொருவரும் தினுசு, தினுசாக வாழ்வதற்கு அவர்களது எண்ணங்கள் எப்படி உதவுகிறதோ, அதே அளவு நாமும் யோசித்தால் மனிதர்களை முற்றிலும் வகைப்படுத்திவிட முடியுமா என்ன..?

“கிரகம், ராசி, லக்கினம் என்று உப்புப் பெறாத விஷயங்களை வைத்து வகுப்பறை நடத்துகிறீர்களே? இவற்றில் எல்லாம் மருந்துக்குக்கூட பகுத்தறிவு என்பதே இல்லையே? யோசிக்க மாட்டீங்களா வாத்யாரே?” என்றிருக்கிறான் ரவி.

அப்படி பார்த்தால் இந்தியாவில் நடக்கும் 65 சதவிகிதத் திருமணங்கள் இந்தப் பகுத்தறிவு இல்லாத முறையில்தான் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.. இதில் யோசிக்க வேண்டியது யார்..?

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவரவர் திருப்திக்காக மட்டுமே. ஜாதகப் பொருத்தம் 10-க்கு 9 மிகச் சரியாக இருப்பதினாலேயே அத்தம்பதிகள் Made for each other என்பதைப் போல் வாழ்ந்துவிடப் போவதில்லை. பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்பவர்களும் அதே போல் இருப்பதுமில்லை. இவை இரண்டிலுமே கொஞ்சம், கொஞ்சம் வில்லங்கங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளன.

“முன்னாடியே ஜாதகம் பார்த்தோமே அப்படியும் இப்படி ஆயிருச்சே..” என்று யாரும் அழப் போவதில்லை. அவர்களுக்குத் தெரியும்.. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்று..! அப்போதுதான் அனைவரும் ஒரு வார்த்தையை வீசுகின்றனர், “இப்படித்தான் நடக்கணும்னு இருந்திருக்கு. அது நடந்திருச்சு.. என்ன செய்ய..?” என்று..

இதைத்தான் வாத்தியாரும் தனது பதிவுகளில் அடிக்கடி சொல்லி வருகிறார், “எல்லாம் விதிப்படிதான் நடக்கும்” என்று.. அந்த நடந்துவிட்ட ஒரு நிகழ்வுக்கு காரணமான, கண்ணுக்குப் புலப்படாத ஒரு வஸ்துவுக்கு பெயர்தான் ‘விதி’ என்கிறார்.

“செவ்வாய் தோஷம் என்று கல்யாணத்தைத் தள்ளிப் போட்டு பெண்களை முதிர்கன்னியாக்கும் கொடுமை இன்னும் வேண்டுமா?” என்கிறான் தம்பி..

“வேண்டாம்” என்றுதான் அனைவரும் சொல்கிறோம். தோஷத்தை நம்புபவர்களை மாற்றுவது யாரால் முடியும்? அதுதான் முதலிலேயே சொல்லிவிட்டேன்.. ஜெயித்தவர்கள்தான் நம்புகிறார்கள். அது முதலில் அவர்களுக்குள் இறங்கி ஜெயித்துக் காட்டியிருக்கிறது. தோஷ பரிகாரம் என்று அவர்கள் சொல்வதுகூட அவர்களை, அவர்களே சமாதானப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில்தான்.

ஊர், உலகமே அந்த தோஷத்தில் சிக்கியிருக்க ஒருவர், இருவர் மட்டும் ஊரையே மாற்ற வேண்டும் என்று கோஷம் போட்டால், அது எத்தனை பேரின் காதுகளை எட்டும்?

இப்போதெல்லாம் இந்தத் தோஷமுள்ளவர்கள் அதே தோஷமுள்ளவர்களைத் தேடிப் பிடித்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள். முடியாதவர்கள்கூட தோஷத்தைப் புறக்கணித்துவிட்டுத் திருமணம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனது தம்பி ஒருவனுக்கும் சின்ன வயதிலேயே திருமணமானது. காரணம் செவ்வாய் தோஷம். அவனுக்குக் கிடைத்த பெண்ணுக்கும் செவ்வாய் தோஷம். “அந்தப் பெண்ணை இப்போதுவிட்டால் இவனுக்கு வேறு பெண் கிடைக்காது. முடித்துவிடுவோம்” என்று சொல்லி முடித்துவிட்டார்கள். வேறு வழி..?

அறிவுரை சொல்வது எளிது.. அதன் பின் அந்த அறிவுரையின் பலனால் அக்குடும்பத்தில் ஏற்படும் நிகழ்வுகளுக்கும் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த இயந்திரமயமான உலகத்தில் அது முடிகிற காரியமா? “ஏன் சின்ன வயதில் திருமணம் செய்து வைக்கிறீர்கள்?” என்று மட்டும் கேட்டுவிட்டு சமர்த்துப் பிள்ளையாக கல்யாணத்திற்குப் போய் சாப்பிட்டுவிட்டு வந்தேன். அக்குடும்பம் இன்றைக்கும் நிம்மதியாகத்தான் உள்ளது.

மாப்பிள்ளையோ, பெண்ணோ கிடைக்காதவர்கள் எனில் கஷ்டம்தான்.. ஆனால் தோஷமுள்ள பெண்தான் வேண்டும் என்று சொல்வது அதீதமான குருட்டு நம்பிக்கை என்பது எனது கருத்து. காலப்போக்கில் இது போன்ற சின்னச் சின்ன தடங்கல்கள் காணாமல் போய்விடும் என்றே நான் கருதுகிறேன்.

“வாஸ்துவுக்காக அவ்வளவு காசை வீணாக்க வேண்டுமா?” என்கிறான் தம்பி.

இது படித்த முட்டாள்கள் செய்யும் முட்டாள்தனமான செலவு. உனக்கு எது கிடைக்க வேண்டும் என்று ஆண்டவன் நினைத்திருக்கிறானோ, அது நிச்சயம் கிடைக்கும். இவ்வளவுதான் விஷயம். தோல்வியடைந்தவர்களைத் திசை திருப்ப மனிதன் கண்டுபிடித்த சுருக்கு வழி இது என்று நான் நினைக்கிறேன்.

நாயர்களின் டீக்கடையைப் போல் நம்மவர்களின் கிளி ஜோஸியம் புகழ் பெற்றதாகிவிட்டது. வாய்வழியாகக் கிடைத்த பாடத்தைக் கற்றுத் தெரிந்து கொண்ட ஒரு கூட்டம் ஊர், ஊராகச் சென்று மக்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை கூட்டிக் கொண்டிருந்த காலத்தில், இந்த கிளி ஜோஸியம் பரவியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் எனக்கு இதில் நம்பிக்கையில்லை. இதுவும் ஒரு சூதாட்டம் போலத்தான்.. கிளிக்கு எத்தனை ஆப்பிள் துண்டுகளை கொடுத்திருக்கிறானோ அதற்கேற்றாற்போலத்தான் சீட்டுக்களை தூக்கிவீசிவிட்டு ஒரு சீட்டை எடுக்கும். அதில் வரும் புகைப்படத்திற்கெல்லாம் அந்த ஜோஸியக்காரனின் பேரன்வரைக்கும் ஒரே கதைதான்.. என் பால்ய வயதில் எனக்குக் கிடைத்த சீட்டில் அப்பன் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தான். ஜோஸியக்காரன் சொன்னது “இவனுக்கு ரெண்டு பொண்டாட்டி நிச்சயம்” என்று! கூடியிருந்த கூட்டம் சிரித்தது. ஆனால் ‘நிஜ வாழ்க்கை’ என்னைப் பார்த்து இன்றைக்கும் சிரித்துக் கொண்டிருக்கிறது.

போகிறபோக்கில் முட்டாள்தனமான கேள்வி ஒன்றையும் ரவி இங்கே கேட்டிருக்கிறான்..

பேயை பார்த்து சிறுவன் பயப்படுகிறான் எனில் அதற்கு ஜாதகமும், ஜோஸியமுமா காரணம்..? தனியாக எங்கேயும் போய்விடக்கூடாது என்பதற்காக எல்லார் வீட்டிலும் சின்னப் பிள்ளைகளிடம் “அங்க பேய் இருக்கு.. இங்க பிசாசு இருக்கு.. தனியா போயிராத..” என்று பயமுறுத்தி வைப்பது வழக்கம்தான். ஏன்?! தம்பிக்கும் இந்த அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கும். இதற்கும் வாத்தியாரின் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்..?

இப்போது எனது சொந்தக் கதைக்கு வருகிறேன்.

எனக்கும் ஜோதிடம், மற்றும் ஜாதகத்தில் ஆர்வம் இல்லாமல்தான் இருந்தது. அது ஒரு காலக்கட்டம் வரைக்கும். எப்படி எனக்குக் கிடைத்த அனுபவங்களே நாத்திகனாக இருந்த என்னை ஆத்திகனாக மாற்றியது. அதேபோல் எனக்குக் கிடைத்த தோல்விகளே, என்னை இந்த வஸ்துகளை நம்ப வைத்தது. காரணம், எனக்கு வேறு வழியில்லை.

முதலில் அப்பாவும், பின்பு அம்மாவும் இறக்கிறார்கள். அண்ணனின் திருமணம் முடிந்தபின். வீட்டில் ஒரு அனாதை.. இருந்தும் நல்வழிப்படுத்தவோ, வழி காட்டவோ யாருக்கும் அக்கறையில்லை. அவரவர் பாடு அவரவர்க்கு என்று ரெண்டுகெட்டான் வயதான எனக்குத் தண்ணி காட்டியது.

தனித்தியங்க சென்னை வந்தேன். பலப் பல அனுபவங்கள் கிடைத்தபடியே இருந்தன. பணம் கவலையில்லாமல் கிடைத்தவரை என்னைப் பற்றிய அக்கறையே எனக்கில்லாமல் இலக்கில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். தொலைநோக்குப் பார்வை என்ற வார்த்தையையோ, வாழ்க்கையில் எதை அடையப் போகிறாய்? என்னவாக விரும்புகிறாய் என்றெல்லாம் எவரும் என்னிடம் கேட்க முடியாத அளவுக்கு ஊராரோடு விலகியிருந்தேன். இது எனது தவறுதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இதனை தவறு என்று எனக்கு யாரும் புரியவைக்கவில்லையே.. அல்லது புரியும்படியான அறிவு எனக்குள் இருக்கவில்லையே.. அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?

எல்லா வசந்த காலத்திற்கும் ஒரு முடிவு உண்டே! வந்தது. உடன் படித்தவர்களும், நண்பர்களும், துணையாயிருந்தவர்களும் திருமணம், மனைவி, பிள்ளைகள், வீடு என்று பிரிந்து சென்று, வாழ்க்கை ஜோதியில் தங்களை ஐக்கியமாக்கிக் கொண்ட பின்புதான் எனது சொந்த புத்தி விழித்துக் கொண்டது.

எங்கே தவறு நடந்தது..? ஏன் அவர்களைப் போல் என்னால் இருக்க முடியவில்லை. ஏன் முன்பே யோசிக்கவில்லை..? என் எனது உடன்பிறந்தோர் எனக்கு மட்டும் வழி காட்டவில்லை..? என்றெல்லாம் யோசித்தேன். விடை கிடைத்தது.

நான் மாட்டிக் கொண்டது குடும்பச் சூழலில். குடும்பத்திற்காக நான் செய்த முதல் தியாகத்தால் எனது பள்ளி மேற்படிப்பு பாதியில் முடிந்தது. அடுத்தத் தியாகத்திற்காக நான் இழந்தது எனது காதுகளை.. மூன்றாவது தியாகம் எனது அப்பாவிற்காக நான் மேற்கொண்ட படிப்பின் மீதான காதலை.. நான்காவது எனது அம்மாவிற்காக நான் வீட்டில் அமைதியாக இருந்த 3 பொன்னான வருடங்கள்.. ஐந்தாவது எனது இரண்டாவது அக்காவின் திருமணத்திற்காக நான் காத்திருந்த 2 வருடங்கள்.. அனைத்தும் என்னைக் கடந்து போன பின்புதான் எனக்கு ஞானதோயம் வருகிறது..

இதெல்லாம் எதற்கு? எனக்கு மட்டும்தானே இது வந்தது? என்னுடைய உயிர் நண்பர்களுக்கோ, எனது எதிர்வீட்டு, பக்கத்து வீட்டு நண்பர்களுக்கோ வரவில்லையே..? ஏன்..? நான் மட்டும்தான் விளையாட்டுப் பொருளா..?
இப்போது யோசித்து என்ன புண்ணியம்.. ஆக வேண்டியதைப் பார் என்றவுடன், இப்போதுதான் வாழ்க்கை என்றால் என்ன என்பதே எனக்குப் புரியத் துவங்கியது..

‘சனி’ என்பதை அனைவரும் ஒரு சம்பவத்தைச் சொல்லிப் புரிய வைப்பார்கள். ஆனால் அதனை நான் எனது அன்றாட நிகழ்விலேயே தினமும் என் தோளிலேயே தூக்கிச் சுமந்தேன்.

சொந்தக் காலில் நிற்கத் துவங்கி முடிவெடுத்து அதற்கான முயற்சியில் நான் ஈடுபட்ட 5-வது நாளிலேயே, அதுவரையில் எனக்காக இயன்றளவு உதவிகள் செய்து கொண்டிருந்த எனது சின்னக்கா காலமானார். அன்றைக்கு ஆரம்பித்ததுதான் எனக்கும், என் அப்பன் முருகனுக்குமான போராட்டம்..

உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது.. உமி விற்கப் போனால் காத்தடிக்கிறது என்பார்களே.. அது எனக்கு நிஜமாகவே ஆரம்பித்தது. டைப்பிங் செய்ய உட்கார்ந்தால் கரண்ட் போய்விடும். கரண்ட் இருந்தால் பிளாப்பி வேலை செய்யாது. பிளாப்பியும் வேலை செய்துவிட்டால், பிரிண்டர் ஒர்க் ஆகாது. பிரிண்டர் சரியாக இருந்தால் பேப்பர்கள் இருக்காது. பிரிண்ட் அவுட் வந்தாலும், கேட்ரிட்ஜ்ஜில் மை இல்லாமல் இருக்கும். இது அனைத்தும் நான் சந்தித்த தினசரி நிகழ்வுகள்.

கோபமென்றால் கோபம்.. ஆத்திரமென்றால் அவ்வளவு ஆத்திரம் வரும். யாரை நோவுவது..? யார் மேல் கோபப்படுவது..? 150 பக்கத்தை கை வலிக்க டைப்பிங் செய்து முடித்துவிட்டு வேலை கொடுத்தவருக்கு போன் செய்தால் பாதி ரேட்டை குறைப்பார். அல்லது இப்போது பணமில்லை என்பார். பாதி பணமாவது வருகிறதே என்று சொல்லி விட்டுக் கொடுத்திருக்கிறேன் வேறு வழியில்லாமல்.

வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல் தெரிந்தவர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு இரவு லேட்டாகச் சென்று, தவிர்க்க முடியாமல் அங்கேயே தங்கிவிட்டு செல்வதாகப் பொய் சொல்லி தங்கியிருந்திருக்கிறேன்.

சாப்பிட காசில்லாமல் இருந்தபோது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்ததானம்கூட செய்திருக்கிறேன்.. 5 நாள் இடைவெளியில் 4-வது முறையாகச் சென்றபோது வாங்க மறுத்துவிட்டார்கள். “உங்க உடம்புக்கே ரத்தம் வேணும் தம்பி.. போயிட்டு வாங்க..” என்று அன்பாகச் சொல்லியனுப்பினார்கள்.

பக்கத்து வீடுகளில் நேரடியாக சாப்பாடு கேட்க கூச்சப்பட்டுக் கொண்டு “என்ன வாடை தூக்குது?” என்று நைச்சியமாகப் பேசி பிச்சையெடுத்திருக்கிறேன். எனது உயிராக இருந்த புத்தகங்களை விற்றுவிட்டு வீட்டிற்கு வந்து குமுறி, குமுறி அழுதிருக்கிறேன்.

தினந்தோறும் ஏதாவது பிரச்சினைகள் புதிது, புதிதாக அவதாரம் எடுத்து வரும்போதுதான் நண்பர்கள் கழன்று ஓடினார்கள். “இவன் சரியான நொச்சுடா.. எப்ப பார்த்தாலும் ஏதாவது பிரச்சினைம்பான்” என்றார்கள். ஆனால் பிரச்சினைகள் கண் முன்னே வந்து பூதாகரமாக நிற்பதை, நான் காட்டும்போது சத்தம் காட்டாமல் ஓடிவிடுவார்கள்.

நல்ல நண்பர்களைத் தேடினேன். கிடைக்கவில்லை.. சிறந்த ஆசிரியர்களைத் தேடினேன். கிடைக்கவில்லை. உற்ற உறவினர்களைத் தேடினேன்.. “வராதே..” என்றார்கள்.. என் குடும்பத்தினரிடம் கேட்டேன்.. “வேடசந்தூரில் பஞ்சு மில்லில் வேலையிருக்காம்.. போய்ச் சேரு..” என்றார்கள் எனது லட்சியம் அறியாமல்.. “லட்சியமா பெரிசு.. சோறுதான் பெரிசு.. டைப் வேலையை மட்டும் பார்த்திட்டுப் போவியா..?” என்று கூசாமல் அட்வைஸ் சொன்னவர்கள், ஒரு காலத்தில் ராத்திரி 11 மணிக்கு போன் செய்து “இன்னைக்கு எபிஸோட் நல்லாயிருந்தது” என்று புகழ்ந்தவர்கள்தான்..

ஏதாவது வேலை விஷயமாகச் செல்கின்றபோது தினமும் ஏதோ ஒன்றை மறந்துவிட்டுப் போயிருக்கிறேன். எப்படி என்பது எனக்கு இன்றுவரையிலும் தெரியவில்லை. பேப்பரில் நோட் செய்து வைத்தும் பார்த்தேன். மறுநாள் அந்த பேப்பரைகூட மறந்து தேடிய அனுபவமும் உண்டு. எப்படி மறதி வந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை என்பதுதான் சோகம்.

இப்படி முருகனின் திருவிளையாடல்கள் அளவுக்கு அதிகமாகப் போய்க் கொண்டிருக்க எனக்கு நானே சமாதானம் செய்து கொள்ள நான் நாடியதுதான் ‘என் விதி இதுவே; எனக்கு வாய்த்தும் இதுவே’ என்கிற வார்த்தை. இந்த விதியின் கயிற்றைச் சுண்டிவிடுவது முருகப் பெருமானும், அவனது அடிப்பொடி சனி பகவானும் என்பது எனது நம்பிக்கை. அதன் பின்புதான் இவர்கள் இருவரையும் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் கடையில் பிரிண்ட் அவுட் எடுப்பது வழக்கம். 20 KB அளவே உள்ள ஒரேயொரு பைலை 2 சிடிக்களில் ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக’ கொண்டு செல்வேன். கடைக்காரன் சிரிப்பான்.. “உங்களை மாதிரி ஒருத்தரை பார்த்ததே கிடையாது ஸார்..” என்பான். அவன் சொல்லி முடிப்பதற்குள் கடையில் கரண்ட் கட்டாகிவிடும்.

மறுநாளில் இருந்து நான் கடைக்குள் செல்வதற்குள் அவனே வாசலுக்கு வந்து விஷயத்தைக் கேட்டு சிடியை வாங்கிச் செல்வான். அடுத்து அவனது கம்ப்யூட்டர் படுத்துவிடும். இன்ன பிற ‘விளையாட்டுக்களும்’ அரங்கேற.. ஒரு கட்டத்தில் “தயவு செஞ்சு இங்க வராதீங்க ஸார்..” என்று சொல்கின்ற அளவுக்கு ஆகிப் போனது ‘சனி பகவானின்’ வேலை.

இதுபோலத்தான் இன்றுவரையிலும் நான் எந்தக் காரியத்தை எடுத்தாலும், செய்தாலும் அதில் ஒரு தடங்கல் வந்து நின்றுவிடும். அதனைச் சமாளித்துவிட்டு போவதற்குள் அடுத்தத் தடங்கல் வரும். இப்படித்தான் நானும் சனி பகவானும் தினந்தோறும் தொட்டுப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

இங்கே முருகப் பெருமானையும், சனி பகவானையும் ஏன் பெயர் குறிப்பிட்டு குற்றம் சொல்கிறேன்?

அவர்கள் இருவரையும் என்னால் பார்க்க முடியாது. பேச முடியாது. எனது வாழ்க்கையில் எனக்குக் கிடைக்கும் தோல்விகள், சோகங்கள் அனைத்தையும் அவர்கள் மீது சுமத்துவதற்கு காரணம், எனது கோபப்பார்வை எனது குடும்பத்தினர் மீதோ, என் சறுக்கல்களின் மீது உடனடிருந்த சக மனிதர்கள் மீதோ வந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான். வந்துவிட்டால்..?

ஸ்டேட் பேங்க் ஆ·ப் இந்தியாவில் கிளார்க் வேலைக்கு நேர்முகத் தேர்விற்காகச் சென்றேன். வரிசையாக அமர்ந்திருந்த பலருக்கும் காபி கொடுத்தபடியே வந்த ஊழியர், மிகச் சரியாக வெள்ளை வெளேர் சட்டையில் வந்திருந்த என் மீது மொத்த காபியையும் கொட்டினார். வெலவெலத்துப் போனேன். இந்தச் சலசலப்பில் உடனேயே அழைப்பும் வர.. பதட்டத்தில் மிக, மிக எளிமையான கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லாமல் சொதப்பி.. வாய்ப்பில் இரண்டாமிடத்தில் இருந்த எனக்கு 8 இடங்களில் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை என்பது எப்போதும் மறக்க முடியாத சோகம்.

இருபது பேர் அமர்ந்திருக்க மிகச் சரியாக என் மீதுதான் வந்து விழ வேண்டுமா? இதற்கு நான் யாரை நோவுவது..? “ஏண்டா காபியை என் மேல வந்து கொட்டின..? அதனாலதான டென்ஷன்ல பதில் சொல்ல முடியாம வேலை கையைவிட்டுப் போயிருச்சு..” என்று இப்போதும் போய் அந்த ஊழியரின் சட்டையைப் பிடித்தால் என்னவாகும்..? தார்மீக உரிமை இருக்கிறது.. ஆனால் செய்ய முடியுமா..?

இதற்குத்தான் நான் முருகனைத் திட்டுகிறேன். அவனை நொந்து கொள்கிறேன். “எனக்கு அந்த இடம் வேண்டாம் என்று முருகனே முடிவு செய்திருக்கிறான்..” என்று எனக்கு நானே முடிவு செய்து அமைதி காக்கிறேன். இதைத்தான் வாத்தியார் மீண்டும், மீண்டும் சொல்கிறார் அவருடைய அனுபத்தினாலே.. “எல்லாம் விதிப்படிதான் நடக்கும்” என்று.

அறிவுஜீவிகளைப் போல அந்த நேரத்திலும் டென்ஷன் ஆகாமல் நான் பேசியிருக்க வேண்டும் என்று சொன்னால், டென்ஷன் உருவாகி பெயர் ஹைப்போதலாமஸில் இருந்து பாய்ந்து வாய்வரைக்கும் வந்தும், உச்சரிக்க முடியாமல் போனது யார் குற்றம்..?

என் வாழ்க்கை என் கையில் என்று சொல்லி ஒதுக்கினார்களே எனது குடும்பத்தினர்.. அவர்களது நல்வாழ்வுக்காக நான் எவ்வளவோ அழுதிருக்கேனே.. அதற்கெல்லாம் பதிலாக எனது வாழ்க்கையை அவர்கள் செப்பனிட்டுத் தந்திருக்கலாமே.. தரவில்லையே.. இப்போது அவர்களிடம் போய் சட்டையைப் பிடித்து சண்டையிட்டு பேசுவதால் என்ன நடந்துவிடப் போகிறது..? அப்படிப் பேசுவதுதான் சரியானதாக இருக்குமா?

ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் நான் எழுதிய மர்மக்கதை கதை ஒன்றை கொடுத்திருந்தேன். 'அப்புறம் கூப்பிடுறேன்.. ஒரு மாசமாகட்டும். ஒரு வாரமாகட்டும்..' என்று இழுத்தடித்தார்கள். எனக்கு ஒன்று புரிந்து போனது. அப்போதைய கிரியேட்டிவ் இயக்குநர் இருக்கின்றவரையில் என் கதை அங்கே எடுக்கப்படாது என்பதுதான். விட்டுவிட்டேன்.

ஒன்றரை வருடங்கள் கடந்தன. புதிய கிரியேட்டிவ் டைரக்டர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். சென்றேன். அதே கதையைக் கொடுத்தேன். படித்தார். ஆச்சரியத்துடன், “என்ன ஸார் இது? இந்தக் கதையைத்தான் நாங்க எடுத்து முடிச்சு, ரிப்பீட்டும் ஓடி முடிஞ்சிருச்சு ஸார்..” என்றார். “நீங்க எழுதியிருந்ததுல ஹீரோயின்தான் மெயின். நாங்க ஹீரோதான் மெயின்னு எடுத்திருந்தோம்..” என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டார்.

என்ன செய்வது? இப்போது அந்த பழைய கிரியேட்டிவ் டைரக்டரைத் தேடிப் பிடித்து உதைக்கலாம். ஆனால் ஆதாரம் வேண்டுமே? என்ன செய்ய?

பலரையும் வீட்டிற்கு வந்து தூக்கிச் சென்று வேலை கொடுக்கிறார்கள். இப்படி நாம் வாட்ச்மேன் மாதிரி வாசலில் தவம் கிடக்கிறோம். நமக்கு வாய்ப்பு வர மறுக்கிறதே என்று பல நாட்கள் தூங்காமல் குமுறியிருக்கிறேன். என்ன செய்து என்ன புண்ணியம்? என் தேடலில், உழைப்பில் எந்த இடம் தவறு என்று யாரும் சொல்லக்கூட மறுக்கிறார்கள் என்பதுதான் மிகப் பெரிய சோகம்.

இங்கேதான் எனக்குக் கிடைத்த ஒரேயொரு பிடிமானமாக ஆன்மிகம் கிடைத்தது. ஆன்மிகத்தின் ஒரு பிரிவாக ஜோதிடம் கிடைத்தது. அதன் பயனாய் எனது ஜாதகம் அலசப்பட்டு நான் பார்த்து வந்த வாழ்க்கையையே இப்போது எனக்குப் பதிலாக சொல்கிறது..

“இந்த ஜாதகக்காரருக்கும், அவருடைய சகோதரருக்கும் 15 வயதிலிருந்தே முரண்பாடுகள் துவங்கிவிடும்” என்ற முதல் ஆருடமே எனக்கு ஜெயித்திருக்கிறது.

“குடும்பத்திற்கு பலம் சேர்ப்பார். ஆனால் அவர்களால் இவருக்கு பலனில்லாமல் போகும்” என்ற அடுத்த வார்த்தை அட்சரச் சுத்தமாக நடந்திருக்கும் உண்மை.

ஜோதிடத்தில் முழுக்க, முழுக்க 100 சதவிகிதமும் உண்மையாகவே நடக்க வாய்ப்பில்லை என்றாலும், கொஞ்சமாவது நடக்கத்தான் செய்கிறது என்கிறார்கள் என்னைப் போன்ற அனுபவஸ்தர்கள். அந்த அனுபவம்தான் தோல்வியடைந்தவர்களுக்கு கிடைக்கின்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் அவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்ற உழைப்பிற்கு கொண்டு செல்கிறது. இது சுழற்சியாக நடந்து வருவதால்தான் மனநோய் மருத்துவரிடம் செல்ல வேண்டியவர்களெல்லாம் ஜோதிட நோட்டை கையில் வைத்து திருப்தியடைந்து கொண்டிருக்கிறார்கள்.

பதிவுலகிலும் இதுதானே எனக்கு நடந்திருக்கிறது. நான் உள்ளே வரும்போதே இங்கே ஒரு அநாகரிக அரசியல் நடக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்லியிருந்தால் “எனது அம்மா ஒரு விபச்சாரி” என்ற வார்த்தையை நானே படிக்க வேண்டிய துர்ப்பாக்கியம் எனக்கு வந்திருக்காதே..?

“முன்பே சொல்லவில்லையே” என்று சம்பந்தப்பட்டவரிடம் போய் சட்டையைப் பிடித்தால் என்னாகும்? நீங்களே கும்மிவிட மாட்டீர்கள்.. ஆனாலும் பொறுக்கமாட்டாமல் கேட்டேன்.

“உங்களை யார் அப்படி எழுதச் சொன்னது?” என்றார். “அது எனது சுதந்திரம்..” என்றேன். “அப்படியானால் அதுவும் அவரது சுதந்திரம். யாரும் இதில் தலையிட முடியாது..” என்றார். “ஆனால் அது என்னை அவமானப்படுத்துகிறது..” என்றேன். “உண்மைதான். ஆனால் யாராலும் தடுக்க முடியாது.. முடியவில்லை..” என்றார். “இதற்கு முடிவுதான் என்ன?” என்றேன்.. “ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் எழுதாமல் இருந்திருக்கலாம்..” என்றார். “நீங்கள் முன்பே வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம்.. எனது வயது 36. எதையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் எனக்குண்டு. சொல்லாதது உங்களது தவறு..” என்றேன். “வருபவர்களுக்கெல்லாம் முழுதையும் சொல்லி கிளாஸ் எடுப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை..” என்றார். முடிந்தது.

எனது குடும்பத்துப் பெயர் அண்டார்டிகாவரைக்கும் பரவியதுதான் இந்த வலைத்தளத்தால் நான் பெற்ற ஒரே புண்ணியம். இருப்பவர்களிடத்தில் எல்லாம் முரண்பட்டு நின்று வெறும் 7 பேரோடு சுடுகாட்டுக்கு போகக்கூடாது என்பதற்காகத்தான் இதையும் முருகன் செயல் என்று சொல்லி ஜீரணித்துக் கொண்டேன்.

இதையும் எனது விதிப்பயன் என்று நான் எடுத்துக் கொண்டால், நீங்கள் மகிழ்வீர்கள் என்றே நான் நம்புகிறேன்.

இந்த விதிப்பயன், ஜாதகத்தை அப்படியே முழுமையாக நம்பிக் கொண்டு வீட்டிலேயே அமர்ந்திருக்கவில்லை. முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வாய்ப்புகள் கிடைக்கின்றபோது வருகின்ற இடைஞ்சல்கள்தான் பெரிதும் துன்புறுத்துகின்றன. ஆனாலும் ஒரே ஒரு ஆறுதல் நமக்கு இன்னமும் நேரம் வரவில்லை என்பதுதான்.

இதைத்தான் ஜாதகக்காரர்களும் சொல்லிச் சொல்லி நம்பிக்கையூட்டுகிறார்கள். இந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதுதான் ஒரே நம்பிக்கை. நம்பிக்கை இல்லாதவர்களும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்குமென்றாலும், பலன் கிடைக்காமல் போனவர்கள் பாதியிலேயே தங்களது வாழ்வை முடித்துக் கொள்கின்ற சோகங்களும் நடக்கின்றன. அப்படியொரு சோகத்தை அணுகாதவண்ணம் இருப்பவர்களிடத்திலும் கடைசிக் கட்ட நம்பிக்கையை கொடுப்பது ஆன்மீகமும், அது சார்ந்த ஜோதிடமும்தான்..

இதுவரையிலும் உனக்கு நடக்க வேண்டியதுதான் நடந்திருக்கிறது. யாரையும் வையாதே.. நிந்திக்காதே.. நிமிர்ந்து நில்.. தொடர்ந்து செல்.. முருகன் இருக்கிறான் துணைக்கு. துணிந்த உன் வழியில் உனது உழைப்பைத் தொடர்ந்து செய்.. உனது உண்மையான உழைப்பு என்றைக்கு 99 சதவிகிதத்தைத் தொடுகிறதோ, அன்றைக்கு அவனது கிருபையான 1 சதவிகிதம் என்னும் அந்த அதிர்ஷ்டத்தைக் கொடுப்பான். பெற்றுக் கொள்.. வாழ்ந்துவிடு.. என்கிறது எனது மனம்.

கடைசியாக ஒன்று..

எனது வலைத்தளம் பலருடைய சிஸ்டத்திலும் திறக்க மறுப்பதாகப் பலரும் பல முறை புகார் தெரிவித்து வந்திருக்கிறார்கள். நானும் பலவித வழிகளைச் செய்து பார்த்துவிட்டேன். முடியவில்லை. முடியவே இல்லை. நேற்றைக்குக்கூட ஒரு சிறிய திருத்தம் செய்து வைத்திருக்கிறேன். இப்போதும் திறக்க மறுக்கிறது என்று புகார் வருகிறது..

யோசித்துப் பார்த்தேன். எனக்குப் புரிந்துவிட்டது. 15 வருட அனுபவமாச்சே.. உங்களுக்குப் புரியாது என்று நினைக்கிறேன். இதன் உண்மையான காரணம் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா..? சவாலே விடுகிறேன்.. முடியவே முடியாது.. ஒன்றை நிவர்த்தி செய்தால், வேறொன்றால் தடங்கல் வரும்..

ஏனெனில்,

இந்த வலைப்பதிவு திண்டுக்கல் மாநகரில் கன்னி ராசி, அஸ்த நட்சத்திரத்தில் ஒரு உச்சி வெயில் பொழுதில் சவடமுத்து-திருமலையம்மாள் என்கிற தம்பதிகளுக்கு 4-வது குழந்தையாக பிறந்து தொலைத்த, உருப்படாத ஜாதகக்காரனான சரவணன் என்பவனுக்குச் சொந்தமானது.

இதுதான் உண்மையான காரணம்..!

பொறுமையாகப் படித்து முடித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.. !

வாழ்க வளமுடன்!

107 comments:

  1. உண்மைத்தமிழன் அவர்களே,

    எனது சோகம்தான் பெரியது என நினைத்தேன்.

    ஆனால் எனதேல்லாம் மிகச்சாதாரணம் என நிருபிக்கிறது உங்களுடையது....

    அந்த பழனியாண்டவரின் காலடியில் சோகத்தை வைத்துவிட்டு நாம் நம் வழி செல்வேம்

    நானும் ஒரு பதிவிட்டுள்ளேன் படியுங்கள்
    http://scssundar.blogspot.com/2008/07/blog-post_12.html

    ReplyDelete
  2. //எனது வலைத்தளம் பலருடைய சிஸ்டத்திலும் திறக்க மறுப்பதாகப் பலரும் பல முறை புகார் தெரிவித்து வந்திருக்கிறார்கள். நானும் பலவித வழிகளைச் செய்து பார்த்துவிட்டேன். முடியவில்லை. முடியவே இல்லை. நேற்றைக்குக்கூட ஒரு சிறிய திருத்தம் செய்து வைத்திருக்கிறேன். இப்போதும் திறக்க மறுக்கிறது என்று புகார் வருகிறது..//

    எதற்கும் சிறிய பதிவாக எழுதிப்பாருங்களேன்!

    ReplyDelete
  3. உண்மைத்தமிழன்,

    ஒவ்வொருவருக்கும் சோகம் உண்டென்றாலும், உங்களுடையது மிக மிக விளிம்பு நிலை. ஆறுதலைத் தவிர வேறு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

    விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  4. நல்லாவே திறக்குதே சரவணன். ஆனால் நான் லினக்ஸ் இல் இருக்கேன்.
    சோகக்கதை! இதுவே 4-5 வருஷம் முந்தி அழுதிருப்பேன்.
    கர்மா தியரியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டோ? நம் வினைதான் நம்மை துரத்துகிறது. அதே போல இப்போது செய்யும் வினை நாளை நம்மை பயக்கும். தொடருங்கள் உழைப்பை. முருகன் இப்ப சோதித்தாலும் அப்புறம் எல்லாம் சரியாக போகும்.
    இன்னைய தேதியில் வாழ்ந்து பழகுங்க. கடந்த காலம் போயாச்சு. திரும்பாது. அதிலிருந்து பாடம் கற்பதுதான் ஒரே பயன். நாளை என்ன நடக்கும் யார் அறிவார்? அது பத்தி ரொம்ப கவலை பட்டு பயனில்லை. இன்றைய தேதி, மணி, நிமிடம்தான் நிஜம்.
    நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. //இந்த வலைப்பதிவு திண்டுக்கல் மாநகரில் கன்னி ராசி, அஸ்த நட்சத்திரத்தில் ஒரு உச்சி வெயில் பொழுதில் சவடமுத்து-திருமலையம்மாள் என்கிற தம்பதிகளுக்கு 4-வது குழந்தையாக பிறந்து தொலைத்த, உருப்படாத ஜாதகக்காரனான சரவணன் என்பவனுக்குச் சொந்தமானது.//

    மனது வலிக்கிறது சரவணன்.விதியை எல்லாம் தாண்டிய வலிமை படைத்தவன் நீங்கள் வணங்கும் முருகன்.மார்க்கண்டேயனுக்கு விதி 16 வயதில் சாகவேண்டும் என்று இருந்தது.சிவன் அதை வினாடியில் மாற்றவில்லையா?

    ஜாதகம்,தோஷம் எல்லாவற்றையும் தாண்டி தனது பக்தனை முருகன் கைதூக்கி விடுவான். உருப்படாத ஜாதகம் என்று எதுவுமே இல்லை. வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் எல்லாம் அடிபட்டு,மிதிபட்டுத்தான் மேலுக்கு வந்திருக்கிறார்கள். நீங்களும் அதேபோல் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரும் வெற்றிகளை எல்லாம் இனித்தான் அடைய இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்ட தில்லை;
    தரும் கைகள் தேடி பொருள் வந்த தில்லை!
    மனம் என்ற கோயில் - திறக்கின்ற நேரம்
    அழைக்காமல் அங்கே - தெய்வம் வந்து சேரும்!

    ReplyDelete
  7. நீ பார்த்த பார்வைகள் -
    கனவோடு போகும்;
    நீ சொன்ன வார்த்தைகள்-
    காற்றோடு போகும்;
    ஊர்பார்த்த உண்மைகள்-
    உனக்காக வாழும்;
    உணராமல் போவோர்க்கு-
    உதவாமல் போகும்!

    ReplyDelete
  8. பொய்யான சில பேர்க்குப் -
    புது நாகரீகம்;
    புரியாத பலபேர்க்கு
    இது நாகரீகம்:
    முறையாக வாழ்வோர்க்கு -
    எதுநாக ரீகம்?
    முன்னோர்கள் சொன்னார்கள்
    அதுநாக ரீகம்!

    ReplyDelete
  9. யார் சிரித்தால் என்ன? - இங்கு
    யார் அழுதால் என்ன?
    தெரிவது என்றும் தெரிய வரும்
    மறைவது என்றும் மறைந்து விடும்!

    ReplyDelete
  10. அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும்
    விரிவழி வந்த தில்லை:
    ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம் -
    இறைவனும் தந்த தில்லை!

    ReplyDelete
  11. படைத்தவன்மேல் பழியுமில்லை
    பசித்தவன்மேல் பாவமில்லை;
    கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்;
    உழைத்தவர்கள் தெருவில் நின்றார்

    ReplyDelete
  12. திருந்தாத உள்ளங்கள்
    இருந்தென்ன லாபம்?
    வருந்தாத உருவங்கள்-
    பிறந்தென்ன லாபம்?
    இருந்தாலும் மறைந்தாலும்
    பேர்சொல்ல வேண்டும்;
    இவர்போல யாரென்று -
    ஊர்சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  13. கல்லாவதும் கனியாவதும்
    கடவுளின் கையெழுத்து
    கனவவதும் நனவாவதும்
    மனிதா உன் தலையெழுத்து!
    நீ என்பதும் நான் என்பதும்-
    மறைகின்ற நீரெழுத்து;
    படைக்கின்றவன் வரைகின்றதே-
    அழியாத ஒரெழுத்து!

    ReplyDelete
  14. வாத்தியார் அய்யா ? ஏன் இந்த கொலைவெறி ?

    :)))

    உண்மைத்தமிழன்...

    உங்களுக்கு எழுதிய நீண்ட பின்னூட்டம் காணாமல் போய்விட்டது... :(((( மீண்டும் டைப் செய்வதற்குள் தனிப்பதிவே போட்டுவிடலாம் ஹும்.

    ReplyDelete
  15. உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது சில சமயம் மனது நெகிழும்.ஆனால் இன்று அழுதேன்.எல்லாம் வல்ல முருகனின் கருணையால் கவலைகளும்,குழப்பங்களும் பனி போல் நீங்கும்.முருகனின் பாதங்களைப் பற்றிய பிறகு கவலை ஏன்?

    ReplyDelete
  16. என்ன சொல்லுவது என்று தெரியவில்லை உண்மை தமிழரே,

    ///////உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது.. உமி விற்கப் போனால் காத்தடிக்கிறது என்பார்களே.. அது எனக்கு நிஜமாகவே ஆரம்பித்தது. டைப்பிங் செய்ய உட்கார்ந்தால் கரண்ட் போய்விடும். கரண்ட் இருந்தால் பிளாப்பி வேலை செய்யாது. பிளாப்பியும் வேலை செய்துவிட்டால், பிரிண்டர் ஒர்க் ஆகாது. பிரிண்டர் சரியாக இருந்தால் பேப்பர்கள் இருக்காது. பிரிண்ட் அவுட் வந்தாலும், கேட்ரிட்ஜ்ஜில் மை இல்லாமல் இருக்கும். இது அனைத்தும் நான் சந்தித்த தினசரி நிகழ்வுகள்.////////

    என்வாழ்கையிலே நடந்த சம்பவங்களை அப்படியே பிரதிபலிக்கின்றது.

    லண்டனுக்கு போய் பட்டினி கிடந்தவன் என்றால் யாரும் நம்ப மாட்டர்கள். நான் இருந்திருக்கின்றேன். இலங்கையில் கடன் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த நான் இங்கு கண்டவர்களிடமெல்லாம் கை நீட்டியிருக்கின்றேன். இரவுகள் நித்திரை இல்லாமல் எதிர்காலத்தை நினைத்து ஏங்கியிருக்கின்றேன். குளிருக்குள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வரும் வழியில் தொலைத்திருக்கின்றேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று குழம்பி போய் இருக்கின்றேன்.
    சொன்னால் யாரும் நம்ப மாட்டர்கள் சிலவேளை எனக்கு பைத்தியம் பிடித்துவிடுமோ என்று நான் பயப்பட்டதும் உண்டு.
    அப்போது எல்லாம் கண்ணதாசன் கடற்கரையில் படுத்து அழுததையும், மக்சீம் கார்கியும் பட்ட கஷ்டங்களையும் நினைத்து பார்த்திருக்கின்றேன்.
    உனக்கு கடுமையான கால சர்ப்ப தோஷம் 27 வயது வரைக்கும் தான் கஷ்டம் பிறகு நன்றாக இருப்பாய் என்று சொன்னார்கள். நன்றாக இருப்பேனோ இல்லையோ தெரியாது ஆனால் அந்த வார்த்தை எனக்கு வாழ்கையில் ஒரு நம்பிக்கையை கொடுத்தது என்றால் அது 100% உண்மை.

    எனக்கு மேல ஏதோ ஒரு சக்தி இருக்கு என்று உணரவைத்தது நான் கஷ்டப்பட்ட அந்த ஆறு வருடம் பெற்ற அனுபவம் தான்.

    ReplyDelete
  17. உனா தானா அண்ணே
    * உங்கட வலி எனக்கு புரியுது. வலி நிவாரணி என்ன என்று நினக்கிறீங்கள்?

    * உங்கட ஜாதகம் உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கிறது என்றது தான் இந்தப்பதிவின்ற சாரம் என்று நான் நினைக்கிறது சரியா?

    இல்லாவிட்டால் ஒருவரியில பதிவின்ற சாரம் சொல்லுங்கோ. உங்கட பதிவில இருக்கிற முரண்பாடுகளை நான் சுட்டிக்காட்டிறன்.

    பீனா கூனா:
    உங்கட திறமை உங்களுக்கே தெரியேல்ல. உங்களுக்கே தெரியாமல் சிலருக்கு, ஒரு சில விடயங்களுக்கு, நீங்கள் முன்மாதிரியா இருப்பதா எனக்கு ஒரு எண்ணம். தவறா?

    ReplyDelete
  18. தோல்வி நிலையென நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா
    வாழ்வை சுமையென நினைத்து
    தாயின் கனவை மறக்கலாமா

    காலம் ஒரு நாள் மாறும்
    நம் கவலைகள் யாவும் தீரும்

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    உணர்ந்து பார்த்து நிம்மதி நாடு
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்


    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
    கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
    ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
    இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

    எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
    நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
    நமக்காக நம் கையால் செய்வது நன்று

    ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
    என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
    பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
    பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்


    நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
    அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
    வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல

    உண்மை தமிழரே உங்கள் எழுத்து நடை மிகவும் அபூர்வமானதாக மெலிதான நையாண்டி வாசத்துடனும்
    கொஞ்சம் இருள் கவிந்த கனத்த சோகத்துடனும் கலந்து படிக்கும் போதே மனதை என்னவோ செய்கிறது.

    நீங்கள் சிந்திக்கும் செயல்படும் விதமோ சராசரிக்கு வெகுவாய் மாறுபட்டு நீங்கள் ஒரு செவ்வாய் கிரக வாசியோ என நினைக்க வைக்கிறது.

    எது உங்கள் சாபமாக இருந்ததோ அதுவே இறையருளால் வரமாக மாறலாம். கால வர்த்தமான சுழற்சியில் வாழ்ந்தவன் வீழ, சிறுவயதில் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்தவர், பிற்காலத்தில் உயர ஏதுவாகிறது.

    புறக்கைகளுக்கு தலா வெறும் ஐந்து விரல்கள் மட்டுமே. ஆனால் நம்பிக்கை என்ற அகக்கைக்கு ஆயிரம் விரல்கள். அவற்றால் வாழ்க்கையை இறுகப்பற்றுங்கள், நினைத்தது நிறைவேறும்.

    வாழ்த்துக்களுடன் தமாம் பாலா

    ReplyDelete
  19. சரவணா,

    இனிமேல் நீ நன்றாக இருப்பாய்.

    இப்படிக்கு,
    ராவணன்

    ReplyDelete
  20. வாத்தியார் கவிதை மழை பொழிஞ்சுட்டாரே! மிகப்பொருத்தம்.!

    ReplyDelete
  21. அன்பு நண்பரே !
    வாழ்க்கையில் எனது சோகம் தான் பெரிது என்று நினைத்து கொண்டு இருந்தேன் !
    அதற்கும் மேலே ஆட்கள் உண்டு என்றும் எனக்கு வரும் தடங்கலை விடவும் அதிகமான தடங்கலை சிலருக்கு சிவபெருமான் வழங்கி வருகிறார் என்றும் தெரிந்து கொண்டேன்

    எனக்கு வேறு ஒரு வகையில் தண்டனை !
    பார்க்கும் அனைவரும் என்மேல் வெறுப்பினை காண்பிப்பார்கள் !
    பெற்ற தாய் தந்தை உட்பட அனைவரும் .
    என்ன செய்வது நான் வாங்கி வந்த வரம் அப்படி .
    அப்பொழுது நான் கவியரசு கண்ணதாசனின் கீழ்க்கண்ட வரிகளை நினைத்து கொள்கிறேன் !
    பிள்ளைக்கு தந்தை ஒருவன்
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
    நீ ஒருவனை நம்பி வந்தாயா
    இல்லை இறைவனை நம்பி வந்தாயா ?

    ..............
    ஏனென்று கேட்காமல் வருவான்
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் ,இறைவன் .

    என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான் !

    காலம் ஒருநாள் மாறும்
    நம் கவலைகள் யாவும் தீரும்

    இதுவும் நமது கவியரசு சொன்னது தான் !

    நான்கு கோடி பேருடன் போராடி தான் தாயின் கருவறையிலேயே இடத்தை பிடிக்கிறோம் !
    அதற்க்கு அருள் புரியும் இறைவன் நேரம் பார்த்து நமக்கு நல்லதை வழங்குவான் என்பது எனது நம்பிக்கை .
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர்

    ReplyDelete
  22. உண்மை தமிழன் அண்ணே விரைவில் எல்லாம் நல்லதே நடக்கும்! சீக்கிரம் பெரிய ஆளா ஆகப்போறீங்க பாருங்க.

    ReplyDelete
  23. நிஜமா முழுவதும் படிச்சேன்.

    ReplyDelete
  24. //கூடுதுறை said...
    உண்மைத்தமிழன் அவர்களே, எனது சோகம்தான் பெரியது என நினைத்தேன். ஆனால் எனதேல்லாம் மிகச் சாதாரணம் என நிருபிக்கிறது உங்களுடையது....அந்த பழனியாண்டவரின் காலடியில் சோகத்தை வைத்துவிட்டு நாம் நம் வழி செல்வேம். நானும் ஒரு பதிவிட்டுள்ளேன் படியுங்கள். http://scssundar.blogspot.com/2008/07/blog-post_12.html//

    யாருக்குத்தான் சோகமில்லை.. எல்லா மனிதர்களுக்கும் சோதனைகள் நிச்சயம் வரும். உடனிருந்து தாங்கிப் பிடிக்க நபர்கள் இருந்து சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டால், அவரவர் மனப்பாரம் நிச்சயம் குறையும். இல்லாவிடில் இப்படி நான் தனியே புலம்புவதைப் போல் புலம்ப வேண்டியதுதான்.

    அந்த பழனியாண்டவனிடம் என்னையே ஒப்படைத்து வெகுநாட்களாகிறது.. அவனே சோதிக்கிறான். அவனே விலக்குகிறான்.. ஆனால் கூப்பிடத்தான் மறுக்கிறான்..

    உங்களுடைய பதிவையும் படித்தேன். நன்று.. எனக்குத் தனிப்பதிவு வேறு போட்டு பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.. மிக்க நன்றி ஸார்..

    ReplyDelete
  25. ///நாமக்கல் சிபி said...
    //எனது வலைத்தளம் பலருடைய சிஸ்டத்திலும் திறக்க மறுப்பதாகப் பலரும் பல முறை புகார் தெரிவித்து வந்திருக்கிறார்கள். நானும் பலவித வழிகளைச் செய்து பார்த்துவிட்டேன். முடியவில்லை. முடியவே இல்லை. நேற்றைக்குக்கூட ஒரு சிறிய திருத்தம் செய்து வைத்திருக்கிறேன். இப்போதும் திறக்க மறுக்கிறது என்று புகார் வருகிறது..//
    எதற்கும் சிறிய பதிவாக எழுதிப ்பாருங்களேன்!///

    சோகத்தை மறக்கடித்து குபீர் சிரிப்பை வரவழைத்துவிட்டீர்கள் முருகா.. நல்லது.. இப்படி அடிக்கடி வந்து முகத்தைக் காட்டினா எனக்கும் தெம்பா இருக்கும்..

    ReplyDelete
  26. //வெண்பூ said...
    உண்மைத்தமிழன், ஒவ்வொருவருக்கும் சோகம் உண்டென்றாலும், உங்களுடையது மிக மிக விளிம்பு நிலை.//

    இல்லை நண்பரே.. என்னைவிடவும் சோகத்தைச் சுமந்து கொண்டு லட்சக்கணக்கானோர் குடிசை வீடுகளிலும், சிறைகளிலும் அடைபட்டுள்ளார்கள்.. எனக்குக் கிடைத்தது சிறிய பொரி அளவுதான் என்று நினைத்து சமாதானமாகிக் கொள்கிறேன்..

    //ஆறுதலைத் தவிர வேறு என்ன சொல்வது என்றே புரியவில்லை. விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புவோம்.//

    நன்றிகள் கோடி..

    ReplyDelete
  27. //திவா said...
    நல்லாவே திறக்குதே சரவணன். ஆனால் நான் லினக்ஸ் இல் இருக்கேன். சோகக்கதை! இதுவே 4-5 வருஷம் முந்தி அழுதிருப்பேன். கர்மா தியரியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டோ? நம் வினைதான் நம்மை துரத்துகிறது. அதே போல இப்போது செய்யும் வினை நாளை நம்மை பயக்கும். தொடருங்கள் உழைப்பை. முருகன் இப்ப சோதித்தாலும் அப்புறம் எல்லாம் சரியாக போகும். இன்னைய தேதியில் வாழ்ந்து பழகுங்க. கடந்த காலம் போயாச்சு. திரும்பாது. அதிலிருந்து பாடம் கற்பதுதான் ஒரே பயன். நாளை என்ன நடக்கும் யார் அறிவார்? அது பத்தி ரொம்ப கவலை பட்டு பயனில்லை. இன்றைய தேதி, மணி, நிமிடம்தான் நிஜம். நல் வாழ்த்துக்கள்!//

    சிலருக்கு மட்டுமே திறப்பதில் பிரச்சினை ஸார்.. அனைவருக்கும் அல்ல..

    நம் வினைதான் துரத்துகிறது என்பதில் எனக்கு இப்போதுதான் நம்பிக்கை வந்துள்ளது.. இப்போது செய்வதையும் யோசித்து செய்து கொண்டிருக்கிறேன்..

    தங்களுடைய அறிவுரைக்கும் நன்றி..

    ReplyDelete
  28. ///செல்வன் said...
    //இந்த வலைப்பதிவு திண்டுக்கல் மாநகரில் கன்னி ராசி, அஸ்த நட்சத்திரத்தில் ஒரு உச்சி வெயில் பொழுதில் சவடமுத்து-திருமலையம்மாள் என்கிற தம்பதிகளுக்கு 4-வது குழந்தையாக பிறந்து தொலைத்த, உருப்படாத ஜாதகக்காரனான சரவணன் என்பவனுக்குச் சொந்தமானது.//
    மனது வலிக்கிறது சரவணன். விதியை எல்லாம் தாண்டிய வலிமை படைத்தவன் நீங்கள் வணங்கும் முருகன். மார்க்கண்டேயனுக்கு விதி 16 வயதில் சாகவேண்டும் என்று இருந்தது. சிவன் அதை வினாடியில் மாற்றவில்லையா? ஜாதகம்,தோஷம் எல்லாவற்றையும் தாண்டி தனது பக்தனை முருகன் கைதூக்கி விடுவான். உருப்படாத ஜாதகம் என்று எதுவுமே இல்லை. வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் எல்லாம் அடிபட்டு, மிதிபட்டுத்தான் மேலுக்கு வந்திருக்கிறார்கள். நீங்களும் அதேபோல் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரும் வெற்றிகளை எல்லாம் இனித்தான் அடைய இருக்கிறீர்கள்.///

    இந்த நம்பிக்கையில்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.. உருப்படாத ஜாதகம் என்று சொல்வதற்குக் காரணம் சிலருக்கு வாழ்க்கையில் தோல்வி மட்டுமே கிடைக்கும்.. அப்படி ஊருக்கு ஒரு பத்து பேராவது இருப்பார்கள். தேடிப் பாருங்கள் கிடைப்பார்கள். நான் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன்..

    ReplyDelete
  29. //SP.VR. SUBBIAH said...
    பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்ட தில்லை;
    தரும் கைகள் தேடி பொருள் வந்த தில்லை!
    மனம் என்ற கோயில் - திறக்கின்ற நேரம்
    அழைக்காமல் அங்கே - தெய்வம் வந்து சேரும்!//

    வாழ்க்கையின் முரண்பாடுகள் இங்கேதான் இருக்கின்ற வாத்தியாரே.. கொடுக்க மனது உள்ளவனுக்கு பொருள் இருப்பதில்லை. பொருளை வைத்திருப்பவனுக்கோ கொடுக்கும் மனமில்லை. இரண்டையுமே 'அவன்'தானே படைத்தான்? ஏன் இந்த பாகுபாடு..?

    ReplyDelete
  30. //SP.VR. SUBBIAH said...
    நீ பார்த்த பார்வைகள் -
    கனவோடு போகும்;
    நீ சொன்ன வார்த்தைகள்-
    காற்றோடு போகும்;
    ஊர்பார்த்த உண்மைகள்-
    உனக்காக வாழும்;
    உணராமல் போவோர்க்கு-
    உதவாமல் போகும்!//

    பக்தி என்னும் உண்மைதான் என்னைப் போன்ற இல்லாதவர்களுக்கு ஊன்றுகோல் என்பதனை நான் உணர்ந்தே இருக்கிறேன் வாத்தியாரே..

    ReplyDelete
  31. //SP.VR. SUBBIAH said...
    பொய்யான சில பேர்க்குப் -
    புது நாகரீகம்;
    புரியாத பல பேர்க்கு
    இது நாகரீகம்:
    முறையாக வாழ்வோர்க்கு -
    எது நாகரீகம்?
    முன்னோர்கள் சொன்னார்கள்
    அது நாகரீகம்!//

    உண்மை.. உண்மை.. உண்மை. முறையாக வாழ்வோரின் நடத்தை உண்மையான நாகரீகம்.. அந்த முறை என்ன என்பதில்தான் நமது இளையதலைமுறை எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது..

    ReplyDelete
  32. //SP.VR. SUBBIAH said...
    யார் சிரித்தால் என்ன? - இங்கு
    யார் அழுதால் என்ன?
    தெரிவது என்றும் தெரிய வரும்
    மறைவது என்றும் மறைந்து விடும்!//

    தற்காலிகப் புகழும், சில கால இன்ப வாழ்க்கையும் காணாமல் போய் 'உண்மை' வாழ்க்கை வாழும்போதுதான் முன்னோர்கள் சொல்லிவைத்தது புரியும் என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  33. //SP.VR. SUBBIAH said...
    அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும்
    விரிவழி வந்ததில்லை:
    ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம் -
    இறைவனும் தந்ததில்லை!//

    இரண்டும் மாறி, மாறி தொடர்ந்து கொண்டுதான் இருக்கறது.. இன்பத்தை பங்கு போடுவதுபோல் துன்பத்தை பங்கு போட யாரும் வருவதில்லை என்பதால்தான் அவரவருக்கு இறைவன் தேவைப்படுகிறான்.. அங்கேதான் அவனது ஆட்சி நடக்கிறது..

    ReplyDelete
  34. //SP.VR. SUBBIAH said...
    படைத்தவன்மேல் பழியுமில்லை
    பசித்தவன்மேல் பாவமில்லை;
    கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்;
    உழைத்தவர்கள் தெருவில் நின்றார்.//

    எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.. பிரித்துக் கொண்டவர்கள், தெருவில் நின்றவர்களால்தான் உயர்ந்தவர்கள் என்பதனை உணர மறுக்கிறார்களே..

    ReplyDelete
  35. //SP.VR. SUBBIAH said...
    திருந்தாத உள்ளங்கள்
    இருந்தென்ன லாபம்?
    வருந்தாத உருவங்கள்-
    பிறந்தென்ன லாபம்?
    இருந்தாலும் மறைந்தாலும்
    பேர்சொல்ல வேண்டும்;
    இவர்போல யாரென்று -
    ஊர்சொல்ல வேண்டும்!//

    சிலரது வாழ்க்கை பலருக்கும் பாடம்.. ஆனாலும் இந்த வரிகளில் இருக்குமளவுக்கு கோபம் எனக்கில்லை.. முருகன் திருத்தட்டும் என்கிறேன்..

    பிறப்பில் யாரைக் குற்றம் சொல்வது? சொல்லுங்கள் வாத்தியாரே..

    ReplyDelete
  36. //SP.VR. SUBBIAH said...
    கல்லாவதும் கனியாவதும்
    கடவுளின் கையெழுத்து
    கனவாவதும் நனவாவதும்
    மனிதா உன் தலையெழுத்து!
    நீ என்பதும் நான் என்பதும்-
    மறைகின்ற நீரெழுத்து;
    படைக்கின்றவன் வரைகின்றதே-
    அழியாத ஒரெழுத்து!//

    அந்தத் தலையெழுத்தை நினைத்துத்தான் ஆறுதலைத் தேடுகிறது மனம்.. படைத்தவனின் ஓரெழுத்து ஓங்காரமாய் நெஞ்சில் உறைந்துள்ளது வாத்தியாரே..

    நல்லது.. நன்றிகள்.. பாட்டாலேயே உணர்த்திவிட்டீர்கள்.. இதுவும் ஒரு வகைப்பாடம்தான் வாத்தியாரே..

    ReplyDelete
  37. //செந்தழல் ரவி said...
    வாத்தியார் அய்யா? ஏன் இந்த கொலைவெறி?:)))//

    செய்றதையெல்லாம் செஞ்சுப்புட்டு, தேவையில்லாததையெல்லாம் கேட்டுப்புட்டு ஸ்மைலி வேற போடுறியா..? மவனே..

    //உண்மைத்தமிழன்... உங்களுக்கு எழுதிய நீண்ட பின்னூட்டம் காணாமல் போய்விட்டது... :(((( மீண்டும் டைப் செய்வதற்குள் தனிப் பதிவே போட்டுவிடலாம் ஹும்.//

    போடு.. போட்டுப் பாரு.. காத்திருக்கிறேன்.. தப்பிக்கலாம்னு நினைச்ச..?

    ReplyDelete
  38. //நல்லதந்தி said...
    உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது சில சமயம் மனது நெகிழும். ஆனால் இன்று அழுதேன். எல்லாம் வல்ல முருகனின் கருணையால் கவலைகளும், குழப்பங்களும் பனி போல் நீங்கும்.முருகனின் பாதங்களைப் பற்றிய பிறகு கவலை ஏன்?//

    கவலை முருகனை நினைத்து அல்ல.. சோகத்தைக் கொடுக்கிறவன் என்று முகம் காட்டுவானோ என்ற ஏக்கம்..

    வருகைக்கு நன்றிகள் ஸார்.

    ReplyDelete
  39. //கல்கிதாசன் said...
    என்ன சொல்லுவது என்று தெரியவில்லை உண்மை தமிழரே, என் வாழ்கையிலே நடந்த சம்பவங்களை அப்படியே பிரதிபலிக்கின்றது. லண்டனுக்கு போய் பட்டினி கிடந்தவன் என்றால் யாரும் நம்ப மாட்டர்கள். நான் இருந்திருக்கின்றேன். இலங்கையில் கடன் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த நான் இங்கு கண்டவர்களிடமெல்லாம் கை நீட்டியிருக்கின்றேன். இரவுகள் நித்திரை இல்லாமல் எதிர்காலத்தை நினைத்து ஏங்கியிருக்கின்றேன். குளிருக்குள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வரும் வழியில் தொலைத்திருக்கின்றேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று குழம்பி போய் இருக்கின்றேன். சொன்னால் யாரும் நம்ப மாட்டர்கள.் சிலவேளை எனக்கு பைத்தியம் பிடித்துவிடுமோ என்று நான் பயப்பட்டதும் உண்டு. அப்போது எல்லாம் கண்ணதாசன் கடற்கரையில் படுத்து அழுததையும், மக்சீம் கார்கியும் பட்ட கஷ்டங்களையும் நினைத்து பார்த்திருக்கின்றேன். உனக்கு கடுமையான கால சர்ப்ப தோஷம் 27 வயது வரைக்கும்தான் கஷ்டம.் பிறகு நன்றாக இருப்பாய் என்று சொன்னார்கள். நன்றாக இருப்பேனோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்த வார்த்தை எனக்கு வாழ்கையில் ஒரு நம்பிக்கையை கொடுத்தது என்றால் அது 100% உண்மை. எனக்கு மேல ஏதோ ஒரு சக்தி இருக்கு என்று உணரவைத்தது நான் கஷ்டப்பட்ட அந்த ஆறு வருடம் பெற்ற அனுபவம்தான்.//

    நன்று கல்கிதாசன். தன்னை உணர்வதற்குத்தான் அவன் சோதனைகளைக் கொடுக்கிறான். அவனை உணர்ந்து கொண்டால் நம்மைவிட சோகத்தைத் தாங்கியவர்கள் நம் கண் முன்னே வருவார்கள்..

    அனைத்தும் விதிப்பயன் என்று சொல்வதில் என்ன தவறு..?

    ReplyDelete
  40. //commenter said...
    உனா தானா அண்ணே.. * உங்கட வலி எனக்கு புரியுது. வலி நிவாரணி என்ன என்று நினக்கிறீங்கள்?//

    கஷ்டங்கள் தீர வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன..?

    //* உங்கட ஜாதகம் உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கிறது என்றதுதான் இந்தப ்பதிவின்ற சாரம் என்று நான் நினைக்கிறது சரியா?//

    முற்றிலும் சரி.. உருப்படாத ஜாதகத்தைக் கையில் வைத்திருக்கிறான் என்பதால்தான் எனது தோல்விகள் அனைத்தும் எனக்கு சமாதானத்தைத் தருகின்றன.

    //பீனா கூனா: உங்கட திறமை உங்களுக்கே தெரியேல்ல. உங்களுக்கே தெரியாமல் சிலருக்கு, ஒரு சில விடயங்களுக்கு, நீங்கள் முன் மாதிரியா இருப்பதா எனக்கு ஒரு எண்ணம். தவறா?//

    இந்த பீனா கூனா யார்..? பெயரை முழுதாகச் சொல்லியே அழைத்திருக்கலாமே..?

    ReplyDelete
  41. //ராவணன் said...
    சரவணா, இனிமேல் நீ நன்றாக இருப்பாய்.
    இப்படிக்கு,
    ராவணன்//

    முருகா.. இதுவும் உன் திருவிளையாடல்தானா..? எப்படி ஐயா நேரம் கிடைக்கிறது..?

    ReplyDelete
  42. //திவா said...
    வாத்தியார் கவிதை மழை பொழிஞ்சுட்டாரே! மிகப்பொருத்தம்.!//

    அதையும் ஒரு பாடமாக நினைத்துப் படித்துவிட்டேன் திவா.. நன்றி..

    ReplyDelete
  43. //ARUVAI BASKAR said...
    அன்பு நண்பரே! வாழ்க்கையில் எனது சோகம் தான் பெரிது என்று நினைத்து கொண்டு இருந்தேன்! அதற்கும் மேலே ஆட்கள் உண்டு என்றும் எனக்கு வரும் தடங்கலை விடவும் அதிகமான தடங்கலை சிலருக்கு சிவபெருமான் வழங்கி வருகிறார் என்றும் தெரிந்து கொண்டேன். எனக்கு வேறு ஒரு வகையில் தண்டனை! பார்க்கும் அனைவரும் என்மேல் வெறுப்பினை காண்பிப்பார்கள்! பெற்ற தாய் தந்தை உட்பட அனைவரும். என்ன செய்வது நான் வாங்கி வந்த வரம் அப்படி. அப்பொழுது நான் கவியரசு கண்ணதாசனின் கீழ்க்கண்ட வரிகளை நினைத்து கொள்கிறேன் ! பிள்ளைக்கு தந்தை ஒருவன். நம் எல்லோருக்கும் தந்தை இறைவன். நீ ஒருவனை நம்பி வந்தாயா. இல்லை இறைவனை நம்பி வந்தாயா? ஏனென்று கேட்காமல் வருவான். நம் எல்லோருக்கும் தந்தை இறைவன், இறைவன். என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்! காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும். இதுவும் நமது கவியரசு சொன்னதுதான்! நான்கு கோடி பேருடன் போராடி தான் தாயின் கருவறையிலேயே இடத்தை பிடிக்கிறோம்! அதற்க்கு அருள் புரியும் இறைவன் நேரம் பார்த்து நமக்கு நல்லதை வழங்குவான் என்பது எனது நம்பிக்கை.
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர்//

    நன்றிகள் பாஸ்கர்.. அந்த நம்பிக்கையில்தான் தோல்வி மேல் தோல்வி கிடைத்தும் தொடர்ந்து முன் சென்று கொண்டிருக்கிறேன்.. கண்ணதாசனை படித்தவன் இதனை உணராமல் இருக்க முடியுமா என்ன..?

    ReplyDelete
  44. //குசும்பன் said...
    உண்மை தமிழன் அண்ணே விரைவில் எல்லாம் நல்லதே நடக்கும்! சீக்கிரம் பெரிய ஆளா ஆகப் போறீங்க பாருங்க.//

    குசும்பா.. வாழ்த்துக்கு நன்றிப்பா.. ஆமா, ஏன் இவ்ளோ லேட்டு..? இப்பல்லாம் முருகன் கனவுல வர்றதில்லையா..?

    ReplyDelete
  45. //குசும்பன் said...
    நிஜமா முழுவதும் படிச்சேன்.//

    நிஜமா நான் இதை நம்புறேன் ராசா..

    ReplyDelete
  46. //
    //பீனா கூனா: உங்கட திறமை உங்களுக்கே தெரியேல்ல. உங்களுக்கே தெரியாமல் சிலருக்கு, ஒரு சில விடயங்களுக்கு, நீங்கள் முன் மாதிரியா இருப்பதா எனக்கு ஒரு எண்ணம். தவறா?//

    இந்த பீனா கூனா யார்..? பெயரை முழுதாகச் சொல்லியே அழைத்திருக்கலாமே..?
    //


    பின்குறிப்புங்க சாமியோவ்!!.........

    ReplyDelete
  47. உனா தானா அண்ணே


    * உங்கட வலி எனக்கு புரியுது. வலி நிவாரணி என்ன என்று நினக்கிறீங்கள்?//
    கஷ்டங்கள் தீர வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன..?

    கைப்புண்ணுக்கு [சரியான] மருந்து போட்டால் புதுசா திசுகள் வளர்ந்து புண் சுகமாகுமாம். பல்வலி வந்தா சில நேரம் பல்லை பிடுங்கவேண்டி வருமாம்.
    அப்படியே விட்டால் அப்பன் முருகன் எல்லா பழியையும் ஏற்றுக்கொள்வாராம்.


    //* உங்கட ஜாதகம் உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கிறது என்றதுதான் இந்தப ்பதிவின்ற சாரம் என்று நான் நினைக்கிறது சரியா?//

    முற்றிலும் சரி.. உருப்படாத ஜாதகத்தைக் கையில் வைத்திருக்கிறான் என்பதால்தான் எனது தோல்விகள் அனைத்தும் எனக்கு சமாதானத்தைத் தருகின்றன.


    முரண்பாடுகளின் பட்டியலுக்கு முன்

    * உங்களால் உங்களுடைய [அனேகமான] எல்லா பிரச்சனைகளையும் தெளிவாக பட்டியலிட முடிகிறது. இது எத்தனை பெயரால் முடியும்?

    * முருகா முருகா என்று இப்படி நீங்கள் கூப்பிடுவது, முருகனுக்கே வெட்கம் வரவைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? [எனக்கு எப்படி தெரியும் என்று கேட்க வேண்டாம்.]

    * பக்கம் பக்கமா பல பதிவுகள் எழுதி ஏன் இப்படி வலையிலை பதியிறனீங்கள்? அதால உங்களுக்கு என்ன கிடைகிறது? [ஆத்ம திருப்தி ஒரு பதில் !]

    ReplyDelete
  48. தோல்வி நிலையென நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா
    வாழ்வை சுமையென நினைத்து
    தாயின் கனவை மறக்கலாமா

    காலம் ஒரு நாள் மாறும்
    நம் கவலைகள் யாவும் தீரும்

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    உணர்ந்து பார்த்து நிம்மதி நாடு
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

    காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
    கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்


    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
    கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
    ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
    இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

    எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
    நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
    நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
    நமக்காக நம் கையால் செய்வது நன்று

    ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
    என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
    பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
    பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்


    நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
    அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
    வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல

    உண்மை தமிழரே உங்கள் எழுத்து நடை மிகவும் அபூர்வமானதாக மெலிதான நையாண்டி வாசத்துடனும்
    கொஞ்சம் இருள் கவிந்த கனத்த சோகத்துடனும் கலந்து படிக்கும் போதே மனதை என்னவோ செய்கிறது.

    நீங்கள் சிந்திக்கும் செயல்படும் விதமோ சராசரிக்கு வெகுவாய் மாறுபட்டு நீங்கள் ஒரு செவ்வாய் கிரக வாசியோ என நினைக்க வைக்கிறது.

    எது உங்கள் சாபமாக இருந்ததோ அதுவே இறையருளால் வரமாக மாறலாம். கால வர்த்தமான சுழற்சியில் வாழ்ந்தவன் வீழ, சிறுவயதில் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்தவர், பிற்காலத்தில் உயர ஏதுவாகிறது.

    புறக்கைகளுக்கு தலா வெறும் ஐந்து விரல்கள் மட்டுமே. ஆனால் நம்பிக்கை என்ற அகக்கைக்கு ஆயிரம் விரல்கள். அவற்றால் வாழ்க்கையை இறுகப்பற்றுங்கள், நினைத்தது நிறைவேறும்.

    வாழ்த்துக்களுடன் தமாம் பாலா

    ReplyDelete
  49. உங்களது பதிவை கண்டு உண்மையிலேயே என் கண்கள் கலங்கிவிட்டன.

    தேர்வுக்காக மிக நன்றாக படிப்பேன். ஆனால் தேர்வு எழுத உட்காரும்போது படித்தது எல்லாமே மறந்து விடும். தோல்வி மேல் தோல்வி அலைகளை போல வந்ததால் ஒரு கட்டத்தில் 'கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா' என்றே எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது.

    ஆனால் இது கடவுளின் விளையாட்டு என்பது பிறகு தான் புரிந்தது. நம்பிக்கையை தளரவிடாதீர்கள். கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு துணை புரிவான். அனுபவத்தில் சொல்கிறேன். கெட்ட நேரம் என்பது நிரந்தரம் அல்ல. நல்ல காலம் நிச்சயமாக பிறக்கும். இது உறுதி.

    ReplyDelete
  50. //Anonymous said...
    பின்குறிப்புங்க சாமியோவ்!!.........//

    ரொம்பத்தான்யா ஆடுறீங்க..

    ReplyDelete
  51. பொறுமையாகப் படித்து முடித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.. !

    அண்ணே உங்க எழுத்து திறமையால நீங்க கண்டிப்பா வெற்றி அடைவீங்க... நன்றி

    ReplyDelete
  52. //commenter said...
    உனா தானா அண்ணே
    கைப்புண்ணுக்கு [சரியான] மருந்து போட்டால் புதுசா திசுகள் வளர்ந்து புண் சுகமாகுமாம். பல்வலி வந்தா சில நேரம் பல்லை பிடுங்க வேண்டி வருமாம். அப்படியே விட்டால் அப்பன் முருகன் எல்லா பழியையும் ஏற்றுக் கொள்வாராம்.//

    எந்த முட்டாள் சொன்னது..? நான் முருகனைச் சுட்டுவது, அந்தப் பல்வலி எனக்கு வந்தால்தான்.. அதுவே ஒரு சோதனைதானே..? சோதனைகளே இல்லாத வாழ்க்கையைக் கேட்பதில் தவறில்லையே..

    //* உங்களால் உங்களுடைய [அனேகமான] எல்லா பிரச்சனைகளையும் தெளிவாக பட்டியலிட முடிகிறது. இது எத்தனை பெயரால் முடியும்?//

    நிச்சயம் முடியும். யோசித்துப் பார்த்தால் பட்டியல் புலப்படும். சொல்வதற்கு தளங்கள்தான் வேண்டும்.

    //* முருகா முருகா என்று இப்படி நீங்கள் கூப்பிடுவது, முருகனுக்கே வெட்கம் வரவைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? [எனக்கு எப்படி தெரியும் என்று கேட்க வேண்டாம்.]//

    நிச்சயமாக இல்லை. எனக்கு இப்போதைக்கு என்னுடன் இருக்கும் ஒரே நண்பன் அவன்தான். வேறு யாரை கூப்பிடுவது..?

    //* பக்கம் பக்கமா பல பதிவுகள் எழுதி ஏன் இப்படி வலையிலை பதியிறனீங்கள்? அதால உங்களுக்கு என்ன கிடைகிறது? [ஆத்ம திருப்தி ஒரு பதில்!]//

    ஆத்ம திருப்திக்காக அல்ல. இதுவரையிலும் சொல்வதற்கு ஆளில்லாததால் சொல்லாமல் இருந்தேன். இப்போது ஒரு இடமும், நேரமும் கிடைத்ததால் சொல்வதைப் போல் எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான்..

    ReplyDelete
  53. //Expatguru said...
    உங்களது பதிவை கண்டு உண்மையிலேயே என் கண்கள் கலங்கிவிட்டன. தேர்வுக்காக மிக நன்றாக படிப்பேன். ஆனால் தேர்வு எழுத உட்காரும்போது படித்தது எல்லாமே மறந்து விடும். தோல்வி மேல் தோல்வி அலைகளை போல வந்ததால் ஒரு கட்டத்தில் 'கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா' என்றே எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது. ஆனால் இது கடவுளின் விளையாட்டு என்பது பிறகுதான் புரிந்தது. நம்பிக்கையை தளரவிடாதீர்கள். கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு துணை புரிவான். அனுபவத்தில் சொல்கிறேன். கெட்ட நேரம் என்பது நிரந்தரம் அல்ல. நல்ல காலம் நிச்சயமாக பிறக்கும். இது உறுதி.//

    நம்பிக்கைதான் வாழ்க்கை நண்பரே.. அதனை மனதில் கொண்டுதான் இன்னமும் திட்டமிட்ட நோக்கில், பாதையில் உண்மையாகவே உழைத்துக் கொண்டிருக்கிறேன்..

    வாழ்த்துகளுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  54. //இம்சை said...
    பொறுமையாகப் படித்து முடித்த அனைவருக்கும் எனது நன்றிகள்..! அண்ணே உங்க எழுத்து திறமையால நீங்க கண்டிப்பா வெற்றி அடைவீங்க... நன்றி.//

    நன்றி இம்சை.. நிஜமாவே கடைசிவரைக்கும் படிச்சிருப்பீகன்னு நம்புறேன்..

    ReplyDelete
  55. //தமாம் பாலா (dammam bala) said...
    உண்மை தமிழரே உங்கள் எழுத்து நடை மிகவும் அபூர்வமானதாக மெலிதான நையாண்டி வாசத்துடனும் கொஞ்சம் இருள் கவிந்த கனத்த சோகத்துடனும் கலந்து படிக்கும் போதே மனதை என்னவோ செய்கிறது. நீங்கள் சிந்திக்கும் செயல்படும் விதமோ சராசரிக்கு வெகுவாய் மாறுபட்டு நீங்கள் ஒரு செவ்வாய் கிரகவாசியோ என நினைக்க வைக்கிறது. எது உங்கள் சாபமாக இருந்ததோ அதுவே இறையருளால் வரமாக மாறலாம். காலவர்த்தமான சுழற்சியில் வாழ்ந்தவன் வீழ, சிறுவயதில் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்தவர், பிற்காலத்தில் உயர ஏதுவாகிறது. புறக்கைகளுக்கு தலா வெறும் ஐந்து விரல்கள் மட்டுமே. ஆனால் நம்பிக்கை என்ற அகக்கைக்கு ஆயிரம் விரல்கள். அவற்றால் வாழ்க்கையை இறுகப் பற்றுங்கள், நினைத்தது நிறைவேறும்.
    வாழ்த்துக்களுடன் தமாம் பாலா//

    தமாம்பாலா.. அருமை.. மிகவும் ரசித்தேன் உங்களது இந்தப் பின்னூட்டத்தை.. கோடி நன்றிகள்..

    பற்றிக் கொண்ட வாழ்க்கையை அவனாகத்தான் விடுவிக்க முடியும். அப்படிப் பிணைத்துக் கொண்டுள்ளேன். என்னதான் செய்வான்..? பார்த்துவிடுவோமே..?

    ReplyDelete
  56. //இப்படி அடிக்கடி வந்து முகத்தைக் காட்டினா எனக்கும் தெம்பா இருக்கும்..//

    கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உம்மோடு துணையிருப்பேன் என்றென்றும்!

    ReplyDelete
  57. ///யாமிருக்க பயமேன் said...
    //இப்படி அடிக்கடி வந்து முகத்தைக் காட்டினா எனக்கும் தெம்பா இருக்கும்..//
    கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உம்மோடு துணையிருப்பேன் என்றென்றும்!///

    யாரென்று தெரிகிறது.. புரிகிறது.. தெளிந்து கொண்டேன்..
    முருகா உனையன்றி யாரையும் அணுகேன்..

    ReplyDelete
  58. அண்ணா நமக்கு வந்த பதில்பதிவுகளுக்கு இதில் பதிலிட்டுள்ளேன். ஏதேனும் விட்டிருந்தால் நீங்கள் கவனித்துக்கொள்ளூங்கள்

    நன்றி

    http://scssundar.blogspot.com/2008/07/blog-post_14.html

    ReplyDelete
  59. வால்பையன் சார் ஒரு உண்மை இப்போ தெரிஞ்சு போச்சு.!

    தமிழ்மண பதிவுகளின் தலைப்புகள் பல சமிப காலமாக " மலையாள படத்திற்கு தமிழக திரை களில் " "ரா........." என வால்போஸ்ட் அடித்து கூட்டத்தை கூட்ட வது போல் " சுண்டி இழுக்கும் காமத்துபால் தலைப்புகளும் ,ஜ... கதைகளும் இருக்கும் போது
    வாசகர்களின் மன ஒட்டத்தை திருப்ப எடுத்த முயற்சியும், உங்கள் பகுத்தறிவு கொள்கை பிரச்சாரம்( இப்போ தமிழகத்தில் முன்பிருந்த வலு இப்போ இல்லாதது மாதிரி தோற்றம்)யுக்தியும் தானே

    "ஒரு கல்லில் இரு மாங்காய்"

    பதிவாளர்களுக்குள் இது ஒரு நல்ல ஆரோக்கிய போட்டி

    "சாபாஸ் சரியான போட்டி"
    (வஞ்சிக் கோட்டை வாலிபன் வீரப்பா பாணியில்)

    வாசக அன்பர்களுக்கு நல்ல அறிவுச் செய்தி வேட்டை.பாரட்டுக்கள்

    இப்போ வலைத்தளத்தில் " on line voting " இருக்கே
    (protection againast second voting by the same person)

    வாசகர் எண்ணம் என்ன என்று அறிய செய்தால் தமிழக இன்றய நிலையின் பிரதி பலிப்பை ( ஒரளவுக்கு)
    தெரிய வாய்ப்பு.

    தேர்தல் வேற வந்திடும் போலுள்ளதே!

    அதுவும் இப்போ என்ன நடக்கப் போவதுன்ன பல பெரியவங்க விரும்பினமாதிரி இரு கட்சி ஆட்சி முறை ( மேல் நாடுகளில் உள்ளது மாதிரி
    --please vist dondu.blogspot.com for further details about other nations( usa,u.k,france,germany ...etc)

    ஆனால் என்ன அது இரு கம்பெனி
    ஆட்சிமுறையாய் மாறும் திக்கில் செல்கிறது.

    1.அண்ணன் ராமனின் இடது சாரி அணி
    2.தம்பி லக்குமனனின் வலது சார் அணி.

    1.அணுசக்தி ஒப்பந்தம் எதிர்ப்பு அணி

    2.அணுசக்தி ஒப்பந்தம் ஆதரவு அணி

    என்ன திடிரென்று கருத்து வேறு பக்கம் செல்கிறதே என்றா?

    இதுவும் ஜோதிடம் சம்பந்தமாக( அதவது எதிர்காலக் கணிப்பாளர்களின் ஆருடங்கள்)
    பற்றிதான்.
    நாஸ்டர்டாம் போல் ஒரு கணிப்பு ( படித்த உண்மைச் செய்தி)
    "வரும் காலங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து உலகில் எந்தப் பகுதியில்
    வாழும் மனிதனும் தான் மாதம் பெரும் மொத்த ஊதியத்தையும்( total monthly income form all sources)
    தனது குடுப்பத்தின் மாதாந்திர உணவுத் தேவைக்கு மட்டும் செலவளிக்க வேண்டியது வரும் எனவே அது சமயம் மற்ற பொருடகளை (consumer goods) வாங்க ஆளில்லாமல் பணப்புழக்கம் குறைந்து( பணவீக்கம் பணம்புழங்காச் சூழலாய் மாறி) real estate வணிகம் "பேய்கள் வாழும் மாளிகயாய் மாறும்( பேய் என்பதுகூட ஒரு கற்பனைதான் சண்டைக்கு வரவேண்டாம்- வால் பையன் சார்)

    இதுக்கு பங்கு வணிகத்தில் நல்ல அளுமை உள்ளவர் என "டோண்டு ராகவன் சாரால்" வெகுவாய்ப் பாரட்டப்பட்ட வால்பையன் சார் என்ன சொல்கிறார்.

    விவாதம் இந்த திசையில் செல்லட்டுமே
    வரும் காலத்தில் பொருளாதார எருக்கடிக்கு ஆலாகப் போகும் "வெகுஜனம்" காரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டால்

    நல்லது அல்லவா.

    இது நடக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உலகில் கட்டியங் கூற அரம்பித்துவிட்டன்

    1.பணக்கார அமெரிக்காவின் பொருளாதர வீழ்ச்சி

    2.கச்சா எண்ணெயின் உயர்ந்து வரும் அதீத விலையுர்வு( 200 டாலரை தொடும் என்பது கணிப்பு)

    3. இந்தியாவின் பனவீக்கம் 20 ஐ நோக்கி நகர்வதாக தகவ்ல்.

    4.உலக் வெப்பமாதலின் காரனத்தல்,
    ஏற்படும் இழப்புக்கள் அனைத்து துறைகளிலும்( எரி சக்தியில் குறிப்பாக)

    5.விவசாய நிலங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டு விவசாயப் பரப்பு வேகமாய் குறைந்து வரும் அபாயகரம்

    6.நம்மைவிட வேகமாக வளர்ந்துவரும் "சைனாவின்" பொறாமை(வில்லத்தனம்)நரித் தனங்கள்

    7. 2010ல் அரிசியை இறக்குமதி செய்தால்தான் அனைவருக்கும் சோறிட முடியும் எனக் கணிப்பு( அரசுத் துறை)

    8.குறுக்கு வழியில் பனம் குவிக்கும்" வல்லான் பணம் குவிக்கும்" என்று பாரதி தாசன் பாடியதை மெய்பிக்கும் விதமாக செயல் படுவோர்

    9.பெருகிவரும் மக்கட் தொகை பெருக்கம்

    10.அரசியல் வாதிகளின் சுயநலப் போக்கு( லஞ்ச, லாவண்யம், கட்சி மாரும் போக்குகள்)

    11.மக்களின் புரிந்தும் புரியாத் தன்மைகள்

    12.மரங்கலை வெட்டுதல் ,பிளாஸ்டிக் பொருட்களை உலகின் தரை,வானவெளிகள்,நிர் நிலைகள், காற்று மண்டலம் முழுவதும் பரப்பி நீர்,நிலம்,காற்று ஆகிய மனித ஜீவாதாரங்களை வேகமாய் கெடுத்து இயற்கயின் சமன் சூநிலையை பாழ்படுத்தும் நாம்.


    இந்த 12 ம் தான் இந்திய ஜாதகத்தில் 12 ராசிக் கட்டத்தில் உள்ல கிரகங்கள் போல்--முக்கியாமன 9 பவர் கூடியது எனவும்-மற்றவை காலிக் கட்டம்- அதாவது சிலதை சரி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்))


    copy to

    1.http://dondu.blogspot.com/
    2.http://classroom2007.blogspot.com/
    3.http://scssundar.blogspot.com
    4.http://truetamilans.blogspot.com/

    ReplyDelete
  60. தமிழரே,
    வருத்ப்படதீர் உங்கள் காலம் வரும் நேரம் வெகு தூரமில்லை, அதுவரை உங்களை அந்த முருகன் காப்பராக.
    நாங்கள் உண்டு உங்களுக்காக, வலையில் மட்டும் அல்ல, நிஜத்திலும் தான்.

    ReplyDelete
  61. //கூடுதுறை said...
    அண்ணா நமக்கு வந்த பதில்பதிவுகளுக்கு இதில் பதிலிட்டுள்ளேன். ஏதேனும் விட்டிருந்தால் நீங்கள் கவனித்துக்கொள்ளூங்கள். நன்றி
    http://scssundar.blogspot.com/2008/07/blog-post_14.html//

    நேரம் கிடைக்கட்டும். வருகிறேன்.. எனக்கும் சேர்த்து பதில் சொன்னமைக்கு எனது உள்ளம்கனிந்த நன்றிகள்..

    ReplyDelete
  62. //கோவை விமல்(vimal) said...
    தமிழரே, வருத்தப்படாதீர்.. உங்கள் காலம் வரும் நேரம் வெகு தூரமில்லை, அதுவரை உங்களை அந்த முருகன் காப்பராக. நாங்கள் உண்டு உங்களுக்காக, வலையில் மட்டும் அல்ல, நிஜத்திலும்தான்.//

    ReplyDelete
  63. வணக்கம் உண்மைத்தமிழன் அவர்களே,

    பஞ்சதந்திரம் தேவயானி மாதிரி சொல்ல விட்டுட்டீங்களே... யம்மாஆஆஆஆம் பெரிய பதிவு

    தங்கள் முருகபக்தி வியக்கவைக்கிறது, முருகனின் கருணை என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்.பக்தராக இருந்துகிட்டு ஜோதிடத்தை நம்புகிறீர்களே நியாயமா, சரி அது உங்கள் கருத்து. வசந்தங்கள் வாழ்வில் வர வாழ்த்துக்கள்.

    சூரியனுக்கே டார்ச்சான்னு சொல்லுவோம், இறைவன் அருகில் இருக்கும் பக்தனுக்கு மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள கோளிலிருந்தும் வரும் அதிர்வு ஒன்றும் செய்யாது.

    ...
    ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
    ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

    சரவணன்

    ReplyDelete
  64. உண்மைத் தமிழன்,

    மனசை இப்படிப் பாடாப் படுத்திட்டீங்களே(-:

    போனவாரம் இதே புதன் கிழமையில் உங்க நினவு(ம்) வந்துச்சு. அப்ப நான் இருந்த இடம் முருகனின் சந்நிதி.

    என் சோகம் பெரிதென நினைத்தேனே இதுக்குமுன் அது எம்மாத்திரம்?

    ReplyDelete
  65. உண்மைத்தமிழரே,

    முருகனின் முன் வினைப்பயன், நல்ல நேரம் கெட்டநேரம், ஜாதகம் அவ்வளவு ஏன் எமதர்மனே ஒண்ணும் செய்ய முடியாது.

    நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த
    கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!!!

    சரவணன்

    ReplyDelete
  66. //கோவை விமல்(vimal) said...
    தமிழரே, வருத்தப்படாதீர்.. உங்கள் காலம் வரும் நேரம் வெகு தூரமில்லை, அதுவரை உங்களை அந்த முருகன் காப்பராக. நாங்கள் உண்டு உங்களுக்காக, வலையில் மட்டும் அல்ல, நிஜத்திலும்தான்.//

    சந்தோஷம் விமல்.. முருகனின் பல அவதாரங்களை அவன் அனுப்பி வைத்த நபர்கள் மூலமாக அறிந்திருப்பவன் நான். உங்களை அறிய மாட்டேனா..? நம்பிக்கை தந்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  67. //துளசி கோபால் said...
    உண்மைத் தமிழன், மனசை இப்படிப் பாடாப் படுத்திட்டீங்களே(-: போனவாரம் இதே புதன கிழமையில் உங்க நினவு(ம்) வந்துச்சு. அப்ப நான் இருந்த இடம் முருகனின் சந்நிதி. என் சோகம் பெரிதென நினைத்தேனே இதுக்குமுன் அது எம்மாத்திரம்?//

    டீச்சர்.. என் நினைவுக்கு வருகிறது என்பதே நான் பெற்ற பாக்கியம்.. அதனை மனப்பூர்வமாக உணர்கிறேன்.. அதிலும் முருகன் சன்னிதானத்தில் என்றால் இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு..?

    தங்களுடைய நல்உள்ளத்திற்கு எனது நன்றிகள்..

    ReplyDelete
  68. //சரவணன் said...
    வணக்கம் உண்மைத்தமிழன் அவர்களே,
    பஞ்சதந்திரம் தேவயானி மாதிரி சொல்ல விட்டுட்டீங்களே... யம்மாஆஆஆஆம் பெரிய பதிவு//

    ரசிக்கிறேன்..

    //தங்கள் முருகபக்தி வியக்கவைக்கிறது, முருகனின் கருணை என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்.பக்தராக இருந்துகிட்டு ஜோதிடத்தை நம்புகிறீர்களே நியாயமா, சரி அது உங்கள் கருத்து. வசந்தங்கள் வாழ்வில் வர வாழ்த்துக்கள்.//

    பக்தர்கள்தான் ஜோதிடத்தை நம்புவார்கள்.. வேறு யார் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்கள் சரவணன்..?

    //சூரியனுக்கே டார்ச்சான்னு சொல்லுவோம், இறைவன் அருகில் இருக்கும் பக்தனுக்கு மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள கோளிலிருந்தும் வரும் அதிர்வு ஒன்றும் செய்யாது.//

    அவனே அருகில்தானே இருக்கிறான்.? பிறகு எதற்கு அப்பால் உள்ள கோளிலிருந்து அதிர்வலைகள்.. அதுவும் இங்கேயிருந்துதான் கொடுக்கப்படுகிறது..

    //ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
    ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
    சரவணன்//

    கவிதைக்கும், உணர்வுக்கும் வணக்கம்..

    ReplyDelete
  69. //இந்த வலைப்பதிவு திண்டுக்கல் மாநகரில் கன்னி ராசி, அஸ்த நட்சத்திரத்தில் ஒரு உச்சி வெயில் பொழுதில் சவடமுத்து-திருமலையம்மாள் என்கிற தம்பதிகளுக்கு 4-வது குழந்தையாக பிறந்து தொலைத்த, உருப்படாத ஜாதகக்காரனான சரவணன் என்பவனுக்குச் சொந்தமானது.//



    ஏன் இந்த அளவிற்கு விரக்தி உண்மைத் தமிழன்? எல்லா விஷயத்திலும் எல்லாரும் உண்மை பேசிவிடுவதிலை. ஜோதிடம், ஜாதகம், நியூமராலஜி நம்பிக்கை என்பது ஓர் அளவில் தான் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இவற்றின் மீது நம்பிக்கையில்லை, ஆனாலும் உங்கள் நம்பிக்கை உங்களுக்கு. திண்டுக்கல் மாநகரில் கன்னி ராசி, அஸ்த நட்சத்திரத்தில் ஒரு உச்சி வெயில் பொழுதில் பிறந்தவர்களை பற்றி நீங்கள் எண்ணியது உண்டா? அவர்களும் உங்களைப் போலவே இருப்பார்கள் என்று நம்புகிறீர்களா? இப்படி விரக்தியாக உங்களை நீங்களே நொந்துகொள்ளும்படி இப்பொழுது என்ன ஆயிற்று? இப்படி சிந்தித்துப் பாருங்கள், உலகில் எவ்வளவோ சரவணன் இருக்கலாம் யாரெல்லாம் உண்மைத் தமிழன் என்று blog வைத்து உங்களைப் போல பிரபலம் அடைந்து உள்ளனர்? எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது. இப்பேர்ப்பட்ட அறிவை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். இன்னும் நன்றாக வளர, நன்றாக எழுத, என்றும் தங்களின் வாழ்க்கையில் சாந்தியும், சமாதானமும், சந்தோஷமும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

    வாழ்த்துக்கள் சரவணன்.
    வாழ்க வளமுடன்!


    நட்புடன்
    --மஸ்தான்

    ReplyDelete
  70. //Mastan said...
    ஏன் இந்த அளவிற்கு விரக்தி உண்மைத் தமிழன்? எல்லா விஷயத்திலும் எல்லாரும் உண்மை பேசிவிடுவதிலை. ஜோதிடம், ஜாதகம், நியூமராலஜி நம்பிக்கை என்பது ஓர் அளவில் தான் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இவற்றின் மீது நம்பிக்கையில்லை, ஆனாலும் உங்கள் நம்பிக்கை உங்களுக்கு.//

    நீண்ட வருடங்களாக மனதிற்குள் குமைந்து கொண்டிருந்ததுதான்.. ஆரம்பித்தவுடன் நிறுத்த இயவில்லை. விரக்தி என்பது வெறுப்பின் உச்சக்கட்டம் நண்பரே..

    //திண்டுக்கல் மாநகரில் கன்னி ராசி, அஸ்த நட்சத்திரத்தில் ஒரு உச்சி வெயில் பொழுதில் பிறந்தவர்களை பற்றி நீங்கள் எண்ணியது உண்டா? அவர்களும் உங்களைப் போலவே இருப்பார்கள் என்று நம்புகிறீர்களா? இப்படி விரக்தியாக உங்களை நீங்களே நொந்துகொள்ளும்படி இப்பொழுது என்ன ஆயிற்று?//

    நம்பவில்லைதான். ஆனால் அனைவருமே ஆளுக்கொரு கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் எனது கஷ்டத்தைவிட பரவாயில்லை என்றாவது நினைத்து ஆறுதல் அடையட்டுமே.. இதிலேயே சில பின்னூட்டங்களைப் படித்துப் பாருங்களேன்.. தெரியும்..

    //இப்படி சிந்தித்துப் பாருங்கள், உலகில் எவ்வளவோ சரவணன் இருக்கலாம.் யாரெல்லாம் உண்மைத் தமிழன் என்று blog வைத்து உங்களைப் போல பிரபலம் அடைந்து உள்ளனர்? எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது. இப்பேர்ப்பட்ட அறிவை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். இன்னும் நன்றாக வளர, நன்றாக எழுத, என்றும் தங்களின் வாழ்க்கையில் சாந்தியும், சமாதானமும், சந்தோஷமும் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
    வாழ்த்துக்கள் சரவணன்.
    வாழ்க வளமுடன்!//

    இல்லைதான்.. ஆனால் பிளாக்கில் ழுதியதால் எனக்குக் கிடைத்தது என்ன என்பதையும் இதில் நான் எழுதியிருக்கிறேன். 100 சதவிகிதம் மோசமும், 100 சதவிகிதம் உங்களைப் போன்ற முகம் தெரியாத அன்பர்களின் அக்கறையான உறவும் கிடைத்துள்ளது. வேறொன்றுமில்லை.

    தினமும் அப்பன் முருகனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. உங்களுடைய வாழ்த்துரைக்கு நன்றிகள் மஸ்தான்..

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  71. //Vijay said...
    What is 15270788164745573644?//

    Blogger Number.

    ReplyDelete
  72. /////..
    What is 15270788164745573644?//

    Blogger Number./////

    அப்ப உங்களுக்கு முன்னாடி 15270788164745573643 பேர் இருக்காங்களா ? உலக சனத்தொகையைவிட கூட வரும் போல இருக்கே? :-))))))

    ReplyDelete
  73. Try Astakavarga and for easy identification of trends of events you can use Sundaram Rules.

    http://groups.yahoo.com/groups/KAstakavargaResearch

    Astrology is something which identifies, those anumasya patterns and helps you to cushion the ill events. You like chaos theory, then you can accept rythmic vibrations of planets.

    Pariharas are humbugs. Money making items, for the lowly paid astrologers. Talk to Shelvi, you would know.

    I know couple of my Athiest relatives (one is a Doctor) uses it for everyday trend. Believing in God is different he says like Kamal. Irunda nalla irdundirukkum. Scientologist.

    Kamal virumbi padikkum Vivekanandavin oru article inge...
    http://astrologyayurveda.blogspot.com/2008/07/vivekananda-incident-to-remember.html

    ReplyDelete
  74. ///கல்கிதாசன் said...
    //What is 15270788164745573644?
    Blogger Number.//
    அப்ப உங்களுக்கு முன்னாடி 15270788164745573643 பேர் இருக்காங்களா ? உலக சனத ்தொகையைவிட கூட வரும் போல இருக்கே? :-))))))///

    பிளாக்கர் கம்பெனிகிட்டதான் கேக்கோணும்.. எனக்கும் இந்த டவுட் இருக்கு..

    ReplyDelete
  75. //Vijay said...
    Try Astakavarga and for easy identification of trends of events you can use Sundaram Rules.
    http://groups.yahoo.com/groups/KAstakavargaResearch
    Astrology is something which identifies, those anumasya patterns and helps you to cushion the ill events. You like chaos theory, then you can accept rythmic vibrations of planets.
    Pariharas are humbugs. Money making items, for the lowly paid astrologers. Talk to Shelvi, you would know.
    I know couple of my Athiest relatives (one is a Doctor) uses it for everyday trend. Believing in God is different he says like Kamal. Irunda nalla irdundirukkum. Scientologist.
    Kamal virumbi padikkum Vivekanandavin oru article inge...
    http://astrologyayurveda.blogspot.com/2008/07/vivekananda-incident-to-remember.html//

    நண்பரே.. நீங்கள் கொடுத்த சுட்டிகளுக்குள் நுழைந்து பார்த்தேன்.. முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் இருப்பதால் படிப்பதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. தமிழ் மொழி பெயர்ப்புகள் இருந்தால் சுட்டிகளைத் தரவும். படிக்க ஆவலாக உள்ளேன்..

    நன்றி..

    ReplyDelete
  76. ----- Original Message -----
    From: "RAMESH APPADURAI" maraththadiramesh@hotmail.com
    To:Maraththadi@yahoogroups.com
    Sent: Sunday, February 09, 2003 6:57 AM
    Subject: [Maraththadi] future by logic knowledge



    மனதினை அறிந்ததின் பலன் :-

    நண்பர்களே,

    இதன் மூலம் மேலும் ஒரு உண்மையைத்தெரிந்து கொண்டேன்.அதாவது,இந்த பழமையான ஜோதிடம் என்பதானது தர்க்க ரீதியான வானவியலையும்,இடம் மற்றும் கால சூழ்நிலையையும், சக மனிதர்களையும் ,பிற உயிர்களையும் சார்ந்த ஒவ்வொரு மனிதனின் மனோதத்துவ இயல்.இதனை சரியாகப் புரிந்து ஒவ்வொரு மனிதரையும் அவர்கள் படைக்கப்பட்டதன் காரணம் அறிந்து கொள்ளலாம் என உறுதியாகக்கூறுகிறேன்.
    ஏனென்றால்,இவைகள் எல்லாம் எனக்கு வெளிப்படுத்தப்பட்டன எனது கேள்விகள் மூலமாக.அந்த நம்பிக்கையில் நான் ஜோதிடம் எனும் கடினமான மற்றும் பழமையான தர்க்கரீதியான ஒரு கல்வியை கற்று , அதன் காரணத்தை அறிந்து
    இப்போதுள்ள physical science மற்றும் இந்த உளவியல் ரீதியாக அந்த காலத்தில் நமது நாட்டின் தர்க்கவியலார்கள் உருவாக்கின கல்வியையும் இணைக்கமுற்படுவேன்.

    இது ஒரு உண்மை என்பதற்கு எனக்கு உடனே தோன்றிய உதாரணம்,நான் முன்பு படித்த "TAO OF PHYSICS" எனும் புத்தகத்தில், இன்றைய இயற்பியல் விதி என்பதானது உலகில் உள்ள பொருண்மை(MATTER) என்பதைப்பற்றிய கணக்கீடுகள்.
    அது போல ஆசியாவில் உள்ள ஞானிகள் அந்த காலத்தில் கடவுளை தேடுவதில் தர்க்கரீதியாக உணர்ந்து அதனை வேதங்களாக எழுதிவைத்திருக்கிறார்கள் என இரண்டையும் ஒப்பீடுசெய்திருப்பார்.
    (ஞானப்பழத்தினை அடைய -முருகன்,பிள்ளையார் என்பவர்களின் குணங்களாக)

    அதன் முடிவில் அவர் கூறியிருப்பார், இரண்டும் படைப்பினை அறியும் மனதின் இருவிதமான புரிந்துகொள்ளுதல் என.

    அதன் பின் அவர் எழுதிய பொருண்மை மற்றும் மனம் பற்றிய "WEB OF LIFE" எனும் புத்தகத்தில் இந்த பூமியில் உள்ள உயிர்களும் மற்றும் அண்ட சராசரமும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக உயிருள்ளது எனக்கூறி முடித்திருப்பார்.
    அப்படியானால் அது போன்று உணர்கின்ற ரீதியாக உலக உயிர்களை அணுகுவது என்பதானது நமது முன்னோர்கள் கண்டு பிடித்த தர்க்கரீதியான ஜோதிடம் தான் என்பதில் இப்போது சந்தேகம் இல்லை,அதாவது அது மனித உயிர்களின் மனோதத்துவ இயலே.

    இது இன்னும் சொல்லப்போனால் மேலைநாட்டினர் சொல்கின்ற "நல்ல எண்ணங்கள்"(POSITIVE THINKING)என்பதான மனித வாழ்க்கையை அணுகும் ஒரு இயலே.ஆனால்,பிறகு வந்த ஆக்கிரமிப்பினால் நாமே சந்தேகிக்கப்படுவதான ஒரு மூடத்தனமாகிப்போனது.

    ஆனால் அதன் தர்க்க ரீதியான அணுகுமுறை என்ன என்று அறிந்தால், அதன் மூலம் உலகில் பல பிரச்சனைகள் மற்றும் பிணிகள் நீக்கலாம்.

    ஏன், இப்போதய ஒரு போர் மூழும் அபாயத்தையே நிறுத்தலாம்.ஏனென்றால் நான் படித்த புத்தகத்தில் குறிப்பிட்ட பழமையான நாகரிக குறியீடாகிய 108 எண்ணில் இருந்தும்,நான் பார்த்த 1999ம் வருட எரி நட்ச்சத்திர மழையின் நிகழ்ச்சியில் இருந்தும் இப்போதய சூழல் மனித மனதில் நமது விலங்கின போரிடும் குணத்தினை INSTINCT ஆக தூண்டிவிட்ட செயலோ என எண்ணத்தோன்றுகிறது.அதாவது நாம் உணர்ந்து கொள்ள நினைக்கிற குணங்களை அமிழச்செய்து மனிதனை போராடச்செய்து விடும் போல உள்ளது.

    ஆனால், நான் இதில் இருந்து என்ன நினைக்கிறேன் என்றால் இது போன்ற ஒட்டு மொத்த மனித மனதினை புரிந்து குறி சொல்லிய நாஸ்ரடாமஸின் மற்றும் நமது ஜோதிட ஆருடங்களை வைத்து, அது மாதிரியாக குறிக்கப்பட்ட வருடங்களுக்கு முன்பும் பின்பும் மருத்துவ ரீதியாக ஒரு ஒட்டுமொத்த மாதிரி ரத்த சாம்பிள் எடுத்து அட்ரீனலின் சோதித்து விடைகளை ஆராயலாம் என தோன்றுகிறது.ஆனால் மக்களுக்கு மறுக்கப்பட்ட அல்லது மன ரீதியாக மூட நம்பிக்கையாக ஒதுக்கப்பட்ட நிலையில் அது அவ்வளவு எளிதன்று உணர்கிறேன்.

    நன்றி

    ரமேஷ் அப்பாதுரை

    ReplyDelete
  77. //நிஜமா நல்லவன் said...
    :(//

    ரொம்ப நல்லவர்தாங்க நீங்க.. ஒத்துக்கறேன்.. ஒத்தை சிம்பல்ல முடிச்சிட்டீங்க பாருங்க மேட்டரை.. அதுனால சொல்றேன்..

    ReplyDelete
  78. ரமேஷ் அப்பாத்துரை அவர்களுக்கு எனது நன்றிகள்..

    சில வரிகள் புரியாமல் இருப்பதால் முழுவதையும் உணர்ந்து படிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்..

    ஆனாலும், தர்க்க ரீதியாக அணுகுவதற்கு மனித மனங்களுக்கு ஏதுவாக இருப்பது ஆன்மீகமும், ஜோதிடமும்தான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

    நடக்கவே நடக்காதது இப்போது ஏன் நடந்தது என்ற கேள்விக்கு அறிவியலால் முழுதாக பதில் சொல்லிவிட முடியாது. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. இப்போது நடந்தேறிவிட்டது என்கிற ஆன்மீகத்தின் முதல் படிதான் முழுமையான ஆறுதல்படுத்தமையாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

    சிலருக்கு நடக்கிறது.. பலருக்கு நடக்கவில்லை. ஆனால் நடந்திருக்கும். அந்தப் பலரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்பதுதான் ஜோதிடத்தின் வெற்றி.

    ReplyDelete
  79. /உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    ///கல்கிதாசன் said...
    //What is 15270788164745573644?
    Blogger Number.//
    அப்ப உங்களுக்கு முன்னாடி 15270788164745573643 பேர் இருக்காங்களா ? உலக சனத ்தொகையைவிட கூட வரும் போல இருக்கே? :-))))))///

    பிளாக்கர் கம்பெனிகிட்டதான் கேக்கோணும்.. எனக்கும் இந்த டவுட் இருக்கு../

    அப்படி இருக்க சான்ஸ் இல்லை. ஏன் என்றால் ஒருவரே பல ID வைத்து இருக்கலாம், உதாரணமாக http://www.blogger.com/profile/1 மற்றும் http://www.blogger.com/profile/2 Evan Williams என்பவர் வைத்துள்ளார். மேலும் http://www.blogger.com/profile/3, 5,6,7,8... என்று தேடினோம் என்றால் கிடைக்காது. blogger ஆரம்பத்தில் 1,2,3... என்று ID கொடுத்து இருக்க வேண்டும். இப்பொழுது ID கொடுக்க ஏதாவது algorithm உபயோகப்படுத்தப்படும் என்று நினைக்கிறேன்.

    --Mastan

    ReplyDelete
  80. ///Mastan said...
    //What is 15270788164745573644?
    Blogger Number.//
    அப்படி இருக்க சான்ஸ் இல்லை. ஏன் என்றால் ஒருவரே பல ID வைத்து இருக்கலாம், உதாரணமாக http://www.blogger.com/profile/1 மற்றும் http://www.blogger.com/profile/2 Evan Williams என்பவர் வைத்துள்ளார். மேலும் http://www.blogger.com/profile/3, 5,6,7,8... என்று தேடினோம் என்றால் கிடைக்காது. blogger ஆரம்பத்தில் 1,2,3... என்று ID கொடுத்து இருக்க வேண்டும். இப்பொழுது ID கொடுக்க ஏதாவது algorithm உபயோகப்படுத்தப்படும் என்று நினைக்கிறேன்.//

    இப்படியிருக்காது என்று நான் நினைக்கிறேன். இந்த நம்பரின் மூலமாக எந்த கண்டம், எந்த நாடு என்பதனை எளிதாகக் கண்டறியும்வகையில் அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.. அதனால்தான் நம்பர் ஒரு உறவுமுறை இல்லாமல் மாறி, மாறி வருகிறது மஸ்தான்..

    நன்றி..

    ReplyDelete
  81. என்ன சொல்வது என்று தெரியவில்லை, இன்றுதான் உங்கள் வலைப்பதிவுக்கு வந்தேன்.உங்கள் வாழ்க்கை வளமாக அமைய நானும் இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  82. //
    ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் நான் எழுதிய மர்மக்கதை கதை ஒன்றை கொடுத்திருந்தேன். 'அப்புறம் கூப்பிடுறேன்.. ஒரு மாசமாகட்டும். ஒரு வாரமாகட்டும்..' என்று இழுத்தடித்தார்கள். எனக்கு ஒன்று புரிந்து போனது. அப்போதைய கிரியேட்டிவ் இயக்குநர் இருக்கின்றவரையில் என் கதை அங்கே எடுக்கப்படாது என்பதுதான். விட்டுவிட்டேன்.

    ஒன்றரை வருடங்கள் கடந்தன. புதிய கிரியேட்டிவ் டைரக்டர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். சென்றேன். அதே கதையைக் கொடுத்தேன். படித்தார். ஆச்சரியத்துடன், “என்ன ஸார் இது? இந்தக் கதையைத்தான் நாங்க எடுத்து முடிச்சு, ரிப்பீட்டும் ஓடி முடிஞ்சிருச்சு ஸார்..” என்றார். “நீங்க எழுதியிருந்ததுல ஹீரோயின்தான் மெயின். நாங்க ஹீரோதான் மெயின்னு எடுத்திருந்தோம்..” என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டார்.

    என்ன செய்வது? இப்போது அந்த பழைய கிரியேட்டிவ் டைரக்டரைத் தேடிப் பிடித்து உதைக்கலாம். ஆனால் ஆதாரம் வேண்டுமே? என்ன செய்ய?
    //


    உண்மைத்தமிழன்.

    உங்கள் கதை உங்களுடையதுதான் என நிரூபிக்க ஒரு எளிய வழி.

    1. உங்கள் கதையை பேப்பரில் எழுதியோ, டைப்பியோ, உங்கள் கையெழுத்து மற்றும் தேதியுடன் ஒரு அஞ்சல் உறையில் இட்டு ஒட்டவும்.
    2. அஞ்சல் உறையில் உங்கள் முகவரியை எழுதி தபாலில் உங்களுக்கே அனுப்பி விடுங்கள்.
    3. தேதி மற்றும் தபால் அலுவலக முத்திரையுடன் தபால்காரர் கடிதத்தை உங்களுக்குக் கையளிப்பார்.
    3. பெற்றுக் கொண்ட தபாலைப் பிரிக்காமல் வைத்திருங்கள்.

    எப்போதாவது கதை பற்றிய சச்சரவு வந்தால் இம்முறையில் உங்கள் உரிமையை நிரூபிக்கலாம்.

    ReplyDelete
  83. //babu said...
    என்ன சொல்வது என்று தெரியவில்லை, இன்றுதான் உங்கள் வலைப்பதிவுக்கு வந்தேன். உங்கள் வாழ்க்கை வளமாக அமைய நானும் இறைவனை வேண்டுகிறேன்.//

    முகம் காணாமல் உறவு தேடுகின்ற நட்புதான் மனிதர்களின் மிகப் பெரிய சொத்து.. தேடி வந்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  84. நன்றி பெத்தராயுடு அவர்களே..

    இந்த முறை எனக்குத் தெரியுமென்றாலும், யார் செய்யப் போகிறார்கள் என்று அலட்சியமாக இருந்துவிட்டேன்.

    'சுடுவது' என்பது சினிமாவில்தான் சாத்தியம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நடந்த பின்பே புத்தி வருகிறது.

    இனிமேல் சுதாரிப்பாகத்தான் இருக்க வேண்டும்.

    தங்களுடைய மேலான அறிவுரைக்கு எனது நன்றிகள்..

    ReplyDelete
  85. //பேப்பரில் எழுதியோ, டைப்பியோ, //

    காகிதத்தில் எழுதியோ, தட்டச்சியோ(தட்டச்சு செய்தோ) :) :) :)

    ReplyDelete
  86. உண்மைதமிழா! நான் பலமுறை உங்களுக்கு எப்படிப்பட்ட உதவி வேண்டும் என நேரிலும், மறைமுகமாகவும் கேட்டபின்பும் நீங்கள் சொல்லவில்லை. இதுவும் விதி தானோ??????

    அன்புடன்
    அபிஅப்பா

    இதுவும் கடந்து போகும் என போங்க எல்லாம் நல்லதுக்கே!!

    ReplyDelete
  87. உண்மை தமிழன் உங்கள் பதிவை படித்த பிறகு என் மனது கனத்து விட்டது.

    கஷ்டம் என்பது யாருக்கு தான் இல்லை, ஒரு சிலருக்கு இல்லாமல் இருக்கலாம் (அதற்க்கு முற்பிறவி மற்றும் பல வினை பயன்கள் காரணங்கள்), என்னுடைய அப்பாவிற்கு கூட கடுமையான கஷ்டம் கிட்டத்தட்ட 40 வருடத்திற்கும் மேல் இதை விளக்க ஒரு பதிவு போட்டால் கூட பத்தாது. இத்தனைக்கும் மிக திறமையானவர் மிக மிக நேர்மையானவர் அனைத்து முயற்சியையும் செய்பவர் விதியின் மேல் காரணத்தை போட்டு விலகுபவர் அல்ல, ஆனால் அதை நம்புபவர். சுருங்க கூறின் கடமையை சரியாக செய்து விட்டு பலனை எதிர்பாராதவர். தற்போது தான் என் மூலமாக அவருக்கு கொஞ்சம் பாரம் குறைந்துள்ளது, இருந்தும் அவரின் நிலை அப்படியே தான் உள்ளது. நீங்கள் சொன்னது போல எங்களுக்கும் நேர்ந்தது எங்களுக்கு இருக்கும் பண பிரச்சனையால் எங்கள் இடத்தை விற்க முற்ப்பட்ட போது, பலரும் வந்து பார்ப்பார்கள் ஆனால் வாங்க மாட்டார்கள், ஆனால் பக்கத்து இடம் அவர்கள் கேட்காமலேயே அதிக விலைக்கு மற்றவர்களால் கேட்கப்படும்.

    இதை என்னவென்று சொல்வது? இது நேரம் தான். ஆனாலும் தளர்ந்து விடாமல் நேர்மையாகவே அனைவரும் நடந்து கொள்வதாலோ என்னவோ மிக சிரமமான காலங்களில் எங்கேயிருந்தாவது கண்டிப்பாக உதவி வரும், அது எனக்கு எப்போதும் ஆச்சர்யம் அளிக்கும். தற்போது 40 வருட போராட்டத்திற்கு பிறகு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் குறைந்து ஒரு தெளிவான நிலையை அடைந்து வருகிறோம், இன்னும் முடியவில்லை ஆனால் முன்பு போல கழுத்தின் மீது கத்தி இல்லை. இத்தனை பிரச்சனை நடந்தும் என் அப்பா எப்போதும் தன்னம்பிக்கையுடனே காணப்பட்டார், அந்த தைரியமே தற்போதைய நல்ல நிலைக்கு காரணம். என் அப்பா கொஞ்சம் தளர்ந்து இருந்தாலும் அல்லது கஷ்டங்களை பார்த்து பயந்து இருந்தாலும், நாங்கள் என்றோ காணாமல் போய் இருப்போம்.

    நம்முடைய எண்ணங்களே நம்மை உயர்த்தும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. நாம் என்ன நினைகின்றமோ அதுவே நாம் ஆகிறோம், நம் எண்ணங்களே நம்மை அந்த பாதையில் அழைத்து செல்கிறது.

    நான் இதை எதற்கு கூறுகிறேன் என்றால், நீங்கள் உங்கள் கஷ்டங்களை பற்றி நினைக்காமல் இருக்க வேண்டும், அதை நினைத்து கொண்டே இருந்தால் நமக்கு புதிய முயற்ச்சிகளை தொடர அனுமதிக்காது. உற்சாகமாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வைக்காது. நாம் உற்சாகமாக இல்லை என்றாலும் குறைந்தது அப்படி இருப்பது போன்றாவது காட்டி கொள்வது நமக்கு நலம்.

    இந்த நேரத்தில் ஒன்றை கூற விரும்புகிறேன். நான் என் நண்பனின் உதவியோடு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன் நிபந்தனையோடு, அதாவது சரியாக வேலை செய்ய வில்லை என்றால் 6 மாதத்திற்கு பிறகு வேலையை விட்டு தூக்கி விடுவார்கள். எனக்கு வாழ்வா சாவா பிரச்சனை, என்னுடைய வீட்டு கஷ்டம் பற்றி ஏற்கனவே கூறி விட்டேன். என்னுடைய சம்பளம் ஒரு மாதம் இல்லை என்றாலும் என் அப்பாவுக்கு மிக மிக சிரமம் ஆகி விடும். வட்டியே பாதி பணம். நான் வேலையில் நேர்மையான, திறமையான மற்றும் மிக ஒழுக்கமானவன் அப்படி இருந்தும் ஏதாவது பிரச்சனை என்னை தேடி வந்தது. இருந்தாலும் பொறுமையாக சமாளித்தேன், இதை விட கொடுமை நான் சாதரணமாக பேசும் பேச்சு கூட பெரிய பிரச்சனையாக ஆனது. எனக்கே ஆச்சர்யம் என்னடா இது ஒண்ணும் இல்லாத விஷயம் இப்படி பெரிதாகின்றதே என்று. அப்போது முடிவு செய்தேன்,சரி பேசுவதால் தானே பிரச்சனை எதுவும் பேசாமலே இருந்து விடுவோம் என்று முடிவு செய்தேன், அதன் பிறகு எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. சத்யமாக.. நம்புங்கள்.

    எனவே பிரச்சனை என்னவென்று அறிந்து நாம் கொஞ்சம் உஷாராக இருந்தால் பல கஷ்டங்களை தவிர்க்கலாம். விதியையும் என்ன சங்கதி என்று கேட்கலாம்? பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியாது ஆனால் வராமல் தவிர்க்கலாம், பிரச்சனையின் அளவை குறைக்கலாம் கொஞ்சம் யோசித்தால்.

    இப்ப உன் நிலைமை ஓரளவுக்கு நல்லா இருப்பதால் நீ பேசுகிறாய் என்று மட்டும் தயவு செய்து நினைத்து விடாதீர்கள். நானும் உங்களை போல பல கஷ்டங்களை பார்த்தவன் தான், பார்த்துக்கொண்டு இருப்பவன் தான் இருந்தாலும் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாததால் நிம்மதியாக இருக்கிறேன், இத்தனை பிரச்சனையிலும் எனக்கு படுத்தால் உடனே தூக்கம் வருகிறது. தெளிவான மனதையும் குழப்பம் இல்லாத எண்ணங்களையும் கொண்டு இருந்தாலே உங்கள் பல பிரச்சனைகள் தீரும் என்பது என் கருத்து.

    நான் படித்த ஒரு விஷயத்தை கூறுகிறேன், இதை தொடருங்கள் பாதி பிரச்சனை சரி ஆகும், பல கவலைகள் தீரும்.

    முதலில் எதற்கு கவலை படுகிறோம் என்று யோசியுங்கள், கவலை படுவதால் மட்டுமே அந்த பிரச்சனை தீர்ந்து விடுமா என்று யோசியுங்கள்...கவலை பட்டதால் எத்தனை பிரச்சனை தீர்ந்து உள்ளது என்று பாருங்கள். இதை நீங்க உண்மையாக உணர்ந்தாலே நீங்கள் மன நிம்மதியோடு இருப்பீர்கள். நீங்கள் படுத்தவுடன் என்றைக்கு தூங்குகிறீர்களோ அன்று உங்கள் கவலைகள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.இதற்க்கு என்ன அர்த்தம் என்றால் குழப்பமான சிந்தனை இருந்தால் நிம்மதியாக தூங்க முடியாது, அதுவரை உங்களுக்கு இந்த எண்ணங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.

    எனக்கும் காலம் நேரம் விதி அனைத்திலும் நம்பிக்கை உண்டு, ஆனால் அதை காரணம் காட்டிக்கொண்டே இருக்க கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து. நம் கடமையை நாம் சரியாக செய்தாலே போதுமானது.

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. எனவே நம்பிக்கையோடு இருங்கள்.

    கடைசியாக நம்பிக்கை தான் வாழ்க்கை உங்களையும் நம்புங்கள் கடவுளையும் நம்புங்கள்.

    பெரிய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். நான் கூறி இருந்தது உங்களை எந்த விதத்திலாவது காய படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னியுங்கள்.

    ReplyDelete
  88. ///புருனோ Bruno said...
    //பேப்பரில் எழுதியோ, டைப்பியோ, //
    காகிதத்தில் எழுதியோ, தட்டச்சியோ(தட்டச்சு செய்தோ) :) :) :)///

    டாக்டர் ஸார்.. இம்மாம் பெரிய பதிவுல உங்களுக்கு இது ஒண்ணுதான் கண்ணுல தெரிஞ்சதா..?

    இதெல்லாம் எங்களுடைய பொது வாழ்க்கைல சகஜம் ஸார்..

    ReplyDelete
  89. //Anonymous said...
    உண்மைதமிழா! நான் பலமுறை உங்களுக்கு எப்படிப்பட்ட உதவி வேண்டும் என நேரிலும், மறைமுகமாகவும் கேட்ட பின்பும் நீங்கள் சொல்லவில்லை. இதுவும் விதிதானோ??????
    அன்புடன்
    அபிஅப்பா
    இதுவும் கடந்து போகும் என போங்க எல்லாம் நல்லதுக்கே!!//

    இல்லை அபிப்பா.. சரியான ஒரு வழிக்காகக் காத்திருக்கிறேன். தங்கள் மூலமாகத்தான் அது நடக்குமெனில் அப்படியே அது நடக்கும்ப்பா..

    இந்த நல்ல உள்ளத்துக்கு என்ன பேர்ல நன்றி சொல்றது..?

    நானே விரைவில் தேடி வருகிறேன் ஸார்..

    எல்லாம் நன்மைக்கே..

    ReplyDelete
  90. மிக நீண்ட அருமையான கமெண்ட்டுக்கு மிக்க நன்றி கிரி அவர்களே..

    யாருக்குத்தான் கஷ்டமில்லை.. வீட்டுக்கு வீடு வாசல்படிதான்.. நான் உணராமல் இல்லை. ஆனால் கஷ்டப்படுகிறவர்கள் என்று ஒரு ஜாதி ஒன்று உலகில் உண்டு. அதில் நானும் ஒருவன் என்றுதான் சொல்கிறேன்.

    காலம், நேரம், ஜாதகம், ஜோதிடம் என்று கண்ணுக்குத் தெரியாதயையெல்லாம் காரணம் சொல்லி வீட்டில் முடங்கிக் கிடக்கவில்லை. தேடியலைந்து கொண்டிருக்கிறேன்.. உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்..

    என் அப்பன் முருகனின் கருணை என்றைக்கு கிடைக்கிறதோ அன்றைக்கு எனது உழைப்புக்கு வெற்றி கிடைக்கும் என்பது எனது நிலைப்பாடு.

    தங்களுடைய வாழ்த்துகளுக்கும், வெளிப்படையான எழுத்துக்கும் நன்றிகள் ஸார்.. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் முருகன் அருள் கிடைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்..

    ReplyDelete
  91. முதன் முதலாக இப்பொழுது தான்
    உங்கள் பதிவினை படித்தேன்.

    எவ்வளவு சோதனைகள்?
    எவ்வளவு வேதனைகள்?

    படித்து முடித்ததும்
    கண்கள் குளமாகிவிட்டன.

    ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில்
    நடப்பதுதான் மிகுந்த சோதனை
    என நினைத்து கொண்டு இருப்பார்கள்.

    ஆனால் உங்கள் வாழ்வில் நடந்த
    சோதனைகள் அனைத்தையும்
    வெற்றி படிக்கட்டுகளாக
    அமைத்து கொண்ட உங்கள்
    தன்னம்பிக்கை, மனோ பலம்
    உங்களுக்கு வரப்பிரசாதம்.

    வாழ்வில் நீங்கள்
    மேலும் மேலும் உயர்ந்து
    மன அமைதியும்,
    சந்தோஷமும் காண
    இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  92. அன்புள்ள உண்மைத்தமிழா. நன்றி. பின்னூட்டம் இடும் இடத்திலேயே தமிழில் எழுதுவது எப்படி என்று பலரைக் கேட்டும் சரியான பதில் கிட்டவில்லை. நீர் ஒருவர்தான் சரியான வழி காட்டினீர். நன்றி. உமக்கே முதல் பின்னூட்டம். ஞாநி.

    ReplyDelete
  93. //Anonymous said...
    முதன் முதலாக இப்பொழுதுதான் உங்கள் பதிவினை படித்தேன். எவ்வளவு சோதனைகள்? எவ்வளவு வேதனைகள்? படித்து முடித்ததும் கண்கள் குளமாகிவிட்டன. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடப்பதுதான் மிகுந்ததனை என நினைத்து கொண்டு இருப்பார்கள்.

    ஆனால் உங்கள் வாழ்வில் நடந்த சோதனைகள் அனைத்தையும் வெற்றி படிக்கட்டுகளாக அமைத்து கொண்ட உங்கள் தன்னம்பிக்கை, மனோ பலம் உங்களுக்கு வரப்பிரசாதம். வாழ்வில் நீங்கள் மேலும் மேலும் உயர்ந்து மன அமைதியும், சந்தோஷமும் காண இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.//

    நன்றி அனானியாரே..

    எனக்கு மட்டுமல்ல.. என்னைவிடவும் மேலான சோகங்களை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கோடிக்கும் மேல்..

    எனக்குக் கிடைத்ததே பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு என் உறவிலும் பல வீடுகளிலும் சோகங்கள் அப்பிக் கொண்டிருப்பது கண் கூடு.

    எனக்கு வெளியில் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைப் பயன்படுத்துகிறேன். பயன்படுத்த முடியாதவர்களின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்..

    அந்த அபலைகளுக்கு இப்போது கிடைத்துள்ள ஒரே மனோபலம் அவர்களுடைய மனதில் குடி கொண்டுள்ள ஆண்டவர்கள்தான்.. அவர்கள் யாராக இருந்தால் என்ன..? யாரோ ஒருவர்.. அந்த ஒருவரே கதி என்றிருக்கிறார்கள். அவரும் இல்லையெனில்..

    ReplyDelete
  94. //gnani said...
    அன்புள்ள உண்மைத்தமிழா. நன்றி. பின்னூட்டம் இடும் இடத்திலேயே தமிழில் எழுதுவது எப்படி என்று பலரைக் கேட்டும் சரியான பதில் கிட்டவில்லை. நீர் ஒருவர்தான் சரியான வழி காட்டினீர். நன்றி. உமக்கே முதல் பின்னூட்டம்.
    ஞாநி.//

    நன்றிகள் போய்ச் சேர வேண்டிய இடம் 'கிழக்குப் பதிப்பகம்' திரு.பத்ரி அவர்களுக்கும், பொறியாளர் திரு.நாகராஜ் அவர்களுக்கும்தான்..

    தங்களின் சார்பாக நானும் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    இனி நிறைய இடங்களில் உங்களுடைய பின்னூட்டங்களை எதிர்பார்க்கலாமா..?

    எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  95. அன்பு உண்மைத் தமிழன் அவர்களே!..

    என்னடா இது..இவரு வாழ்க்கையும் கிட்டத்தட்ட நம்ம சொந்த அனுபவம் போல இருக்குதே என நினைத்தேன். கடைசியில் தான் தெரிந்தது.. இவரும் கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம் என்று. எனக்கும் இப்படித்தான் எங்கு போனாலும் தடங்கல் பிரச்சனைகள்.அதுவரை சும்மா இருக்கும் வானம் வெளியில் சென்றதும் பொத்துக் கொண்டு விடும். அல்லது தூறலாவது போடும். பிளாப்பி வேலை செய்யாது. டிஸ்க் கரப்ட் என்று சொல்வார்கள்.வேலையிலும் இதே போன்று பல பிரச்சனைகள். நீங்கள் சொல்லும் அதே முருகப் பெருமான் தான் என்னையும் இப்படி ஆட்டி வைக்கிறான்.

    ஆமாம்.. நீங்கள் மார்ச் மாதம் 29/1972ல் அல்லது 1971ல் பிறந்தவரா? கேது 12ம் வீட்டில் இருக்கிறானா? பிரச்சனை சனீஸ்வரனால் அல்ல என்று மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.

    முருகன் நிறைய சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான். சூரனையே அவன் கொல்லவில்லையே! மயிலாகவும், கொடியாகவும் தானே ஆக்கிக் கொண்டான். நேரம் வரும்போது எங்கேயோ உயரத்திற்கு நம்மை தூக்கி வைப்பான் என்பதில் ஐயமில்லை. கவலையற்க.

    -நாதன்

    ReplyDelete
  96. nanbare,

    thamizhilil illai ange. ungal mail id irundal, vivaram annupalam. pirantha thethi matrum pirantha oor vendum. oru nambikkai than.

    naanum kanni rasi hastham than 8 il shani (m g r madhiri) so varutham vendam - ungal peyar ulagukku theriyum oru naal. m g rukku shani disaiyil than yogam. (marakaamal sothu, kulandaigalukku ezhuthi vidavum)

    ( day to day exp. eppadiyo poikondu irukkum. ketta sagavaasam vidavum. nanmai nadakkum. murugan methu baaram pottu, oru varudam veetileya saami kumbidavum. ).

    ReplyDelete
  97. //swamins6 said...
    அன்பு உண்மைத் தமிழன் அவர்களே!.. என்னடா இது..இவரு வாழ்க்கையும் கிட்டத்தட்ட நம்ம சொந்த அனுபவம் போல இருக்குதே என நினைத்தேன். கடைசியில் தான் தெரிந்தது.. இவரும் கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம் என்று. எனக்கும் இப்படித்தான் எங்கு போனாலும் தடங்கல் பிரச்சனைகள்.அதுவரை சும்மா இருக்கும் வானம் வெளியில் சென்றதும் பொத்துக் கொண்டு விடும். அல்லது தூறலாவது போடும். பிளாப்பி வேலை செய்யாது. டிஸ்க் கரப்ட் என்று சொல்வார்கள்.வேலையிலும் இதே போன்று பல பிரச்சனைகள். நீங்கள் சொல்லும் அதே முருகப் பெருமான்தான் என்னையும் இப்படி ஆட்டி வைக்கிறான்.

    ஆமாம்.. நீங்கள் மார்ச் மாதம் 29/1972ல் அல்லது 1971ல் பிறந்தவரா? கேது 12ம் வீட்டில் இருக்கிறானா? பிரச்சனை சனீஸ்வரனால் அல்ல என்று மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.

    முருகன் நிறைய சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான். சூரனையே அவன் கொல்லவில்லையே! மயிலாகவும், கொடியாகவும் தானே ஆக்கிக் கொண்டான். நேரம் வரும்போது எங்கேயோ உயரத்திற்கு நம்மை தூக்கி வைப்பான் என்பதில் ஐயமில்லை. கவலையற்க.
    -நாதன்//

    கடைசியாக நீங்கள் சொல்லியிருக்கும் நம்பிக்கையுடன்தான் நானும் அவனது ஆசிக்காக காத்திருக்கிறேன்.. தருவான் என்று நினைக்கிறேன். எப்போது என்றுதான் தெரியவில்லை.

    நீங்களும் என் கேஸ்தான் என்கிறீர்கள்.. விரைவில் நாம் இருவருமே வெல்வோம்..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  98. //அந்த அபலைகளுக்கு இப்போது கிடைத்துள்ள ஒரே மனோபலம் அவர்களுடைய மனதில் குடி கொண்டுள்ள ஆண்டவர்கள்தான்.. அவர்கள் யாராக இருந்தால் என்ன..? யாரோ ஒருவர்.. அந்த ஒருவரே கதி என்றிருக்கிறார்கள். அவரும் இல்லையெனில்..//

    நிதர்சனமாமான உண்மை உண்மைத்தமிழன்.

    VIZHI

    ReplyDelete
  99. மனசு வலிக்கிறது நண்பரே;

    இதுவரை என்னை பூரணமாக வழி நடத்திவருகின்ற அந்த இறை அருள் உங்களை ஆசிவதித்து இனி நல்வழியை காட்டும், இறையை இனி தங்கள் பொருட்டும் அடியேன் துதிப்பேன், வாழ்த்துக்கள் வளமான எதிகாலத்திற்க்கு ..........

    Mani Pandi

    ReplyDelete
  100. //Vijay said...
    nanbare, thamizhilil illai ange. ungal mail id irundal, vivaram annupalam. pirantha thethi matrum pirantha oor vendum. oru nambikkai than.
    naanum kanni rasi hastham than 8 il shani (m g r madhiri) so varutham vendam - ungal peyar ulagukku theriyum oru naal. m g rukku shani disaiyil than yogam. (marakaamal sothu, kulandaigalukku ezhuthi vidavum)
    day to day exp. eppadiyo poikondu irukkum. ketta sagavaasam vidavum. nanmai nadakkum. murugan methu baaram pottu, oru varudam veetileya saami kumbidavum.//

    நன்றி விஜய்..

    நீங்களும் கன்னியா..? ஹஸ்தமா..? என் கேஸ்தானா..?

    பரவாயில்லை என் பாரம் குறைஞ்சு கொண்டே போகுது..

    உங்களை மாதிரியான நண்பர்களின் பி்ன்னூட்டங்களைப் பார்க்கின்றபோது..

    ReplyDelete
  101. ///VI said...
    //அந்த அபலைகளுக்கு இப்போது கிடைத்துள்ள ஒரே மனோபலம் அவர்களுடைய மனதில் குடி கொண்டுள்ள ஆண்டவர்கள்தான்.. அவர்கள் யாராக இருந்தால் என்ன..? யாரோ ஒருவர்.. அந்த ஒருவரே கதி என்றிருக்கிறார்கள். அவரும் இல்லையெனில்..//
    நிதர்சனமான உண்மை உண்மைத்தமிழன்.
    VIZHI///

    நன்றி விழி அவர்களே..

    ReplyDelete
  102. //மணி said...
    மனசு வலிக்கிறது நண்பரே;
    இதுவரை என்னை பூரணமாக வழி நடத்திவருகின்ற அந்த இறை அருள் உங்களை ஆசிவதித்து இனி நல்வழியை காட்டும், இறையை இனி தங்கள் பொருட்டும் அடியேன் துதிப்பேன், வாழ்த்துக்கள் வளமான எதிகாலத்திற்க்கு.
    Mani Pandi//

    நன்றி பாண்டி..

    எங்க ரொம்ப நாளா காணோம்..

    உங்களுடைய தொலைபேசி எண்ணைத் தொலைத்துவிட்டேன்.

    தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.

    ReplyDelete
  103. விளக்கமான பதிவு அருமை

    ReplyDelete