27-02-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சில சினிமாக்களின் விமர்சனங்களை தனிப் பதிவாகப் போட்டு உங்களை கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லை. அதனால் மொத்தமாக ஒரே மொக்கையாகப் போட்டு தாளித்துவிட்டேன்.. பொறுத்துக் கொள்ளவும்..!
பாவி-சினிமா விமர்சனம்
ஹீரோ டாக்டராக நடித்திருக்கிறார். ஆனால் ஒரு காட்சியில்கூட ஒரு நோயாளியைக்கூட காட்டவில்லை.. வீட்டில் அக்காவும், வேலைக்காரியும் இருக்கிறார்கள். அக்கா பகலில் பரம பக்தையாகவும், இரவில் பரம பதிவிரதையாகவும் மாறிவிடுகிறார். ஹீரோவுக்கு தொழில் திருமணம் செய்துவிட்டு கொஞ்ச நாளில் புராதானத் தொழலுக்கு விற்றுவிடுவதுதான். இது தெரியாமல் ஹீரோயின் அவரிடம் சிக்குகிறார்.
கொடைக்கானலுக்கு போய் டூயட்டெல்லாம் பாடுகிறார்கள். கொஞ்சுகிறார்கள். திரும்பி வந்த்தும் அக்கா பட்டப் பகலில் அவுத்துப் போட்டு ஆடுவதைப் பார்த்துவிட்டு பயந்து போய் ஹீரோவுக்கு போன் செய்து சொல்கிறாள். ஹீரோவும் நடிக்கிறான். இப்படியே குஜாலுக்காக அக்காவை அவ்வப்போது ஆட விட்டு வேடிக்கை காட்டுகிறார்கள். கடைசியில் பாவமாய் முடித்திருக்கிறார்கள்.
ஹீரோவை பார்த்தாலே படத்தின் தரத்தை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். அதேதான்.. ஏதோ முடிந்த அளவுக்கு எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள்..! அவ்வளவுதான்..! நமக்குத் தலைவலி வருவதுதான் மிச்சம்..!
ஹீரோயின் பொண்ணு நிஜமாகவே அப்பிராணியாகத்தான் இருக்கிறது. நல்ல நடிப்புதான்.. இந்தப் பொண்ணின் போன் நம்பர் கேட்டு இந்தக் கம்பெனிக்கு போன் மேல் போன் போட்டும் கம்பெனிக்காரர்கள் மசியவில்லை. நம்பரைச் சொல்லவே இல்லையாம்..! ஒரு நல்ல நடிகையை நம் கண்ணில் காட்டவே மறுக்கிறார்கள்..! பாவம்.. என்ன பிரச்சனையோ..?
சூழ்நிலை-சினிமா விமர்சனம்
நிழல்கள் ரவி ஆச்சாரமான ஐயங்கார். லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையில் பணியாற்றுபவர். மகளும், மகனும் கல்லூரியில் படிக்கிறார்கள். அலுவலகத்தில் சுத்தத்தையும், ஆச்சாரத்தையும் எதிர்பார்க்கிறார் ரவி. கிடைக்காதபோது எரிந்து விழுகிறார். இன்னொரு பக்கம் அவரது பிள்ளைகள் ஆளுக்கொரு காதலையும் செய்கிறார்கள். தனக்கு வரப் போகும் மருமகள் வேறு மதம் என்றவுடன் கோபமாகி அவர்களது வீட்டிற்கே போய் கத்திவிட்டு வருகிறார். சூழ்நிலைக்கேற்றாற்போல் நாமளும் இப்போ மாறித்தான் ஆகணும் என்கிற தனது குடும்பத்தாரின் பேச்சை காது கொடுத்துக் கேட்க மறுக்கிறார் ரவி.
இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்ட நிதியில் பெரும் முறைகேடு என்ற புகாரை விசாரிக்க அந்தமானுக்குச் செல்கிறார் ரவி. அங்கே அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி ஒரு இடத்தில் விழுகிறது. ரவி உயிர் பிழைக்கிறார். அங்கே செந்தமிழில் பேசும் ஒரு மலைவாசிப் பெண் ரவியைக் காப்பாற்றி தன்னுடன் தங்க வைக்கிறார். சூழ்நிலைக்கேற்றாற்போல் நாமும் மாறத்தான் வேண்டும் என்ற தனது குடும்பத்தாரின் அறிவுறுத்தலை ஏற்காத ரவி, இங்கே சூழ்நிலைக்கேற்றாற்போல் மாறி அந்தப் பெண்ணுடன் கலவித் திருமணம் செய்துவிடுகிறார்.
பின்பு சில நாட்கள் கழித்து வேறு சிலரின் கண்ணில் பட்டு அவர்களால் காப்பாற்றப்பட்டு சென்னைக்கு வருகிறார். சென்னை வந்தவுடன் புத்தி வந்து தனது மகனின் காதலைச் சேர்த்து வைக்கிறார். அப்படியே அவரைக் கடத்த வந்த சுனாமி நிதியைச் சூறையாடிய கும்பலையும் கைது செய்கிறார். இவ்ளோதான் படம்..!
டைரக்சனா..? அப்படின்னா என்ன என்று கேட்க வைத்து நெளிய வைக்கிறார்கள்.. அதிலும் கஞ்சா கருப்பு அண்ட் கோ செய்யும் அலம்பலும் தாங்க முடியவில்லை. யாருக்காவது டென்ஷனாக இருந்தால் கஞ்சா கருப்பு கோஷ்டிக்கு போன் வரும். இந்த டீம் சென்றவுடன், டென்ஷனில் இருப்பவர் ஆத்திரம் தீர கஞ்சா கருப்புவை அடித்து, உதைத்து அனுப்பலாம். கூடவே காசும் தரணும். இதுதான் பிஸினஸாம்.. படத்தின் பிஸினஸுக்குக்கூட கஞ்சா உதவவில்லை..!
இப்படத்தின் மூலம் அனுகூலம் பெற்றவர் இசையமைப்பாளர் தினாதான். படத்தில் வில்லனாக நடிப்புத் திறமையைக் காட்டியவர், நிஜ வாழ்க்கையிலும் "ஒரு மாதிரி" வில்லனாகிவிட்டாராம்..! வாழ்க..!
விளையாட வா-சினிமா விமர்சனம்
கேரம் விளையாட்டை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். பொன்வண்ணன் வீடுகளுக்கு சென்ட்ரிங் போடும் வேலை. ஒரு மகன்.. லிவிங்ஸ்டன், மயில்சாமியுடன் மாலை வேளைகளில் கேரம் போர்டு விளையாடுகிறார். தெருவில் அனாதையா இருக்கும் ஒரு சிறுவன் மீது பரிதாப்ப்பட்டு அவனையும் மகனாக நினைத்து அவனுக்கு கேரம் போர்டு சொல்லிக் கொடுத்து பெரிய ஆளாக்குகிறார்.
கொடைக்கானலில் டோர்னமெண்ட்டுக்காக போன மகன், அங்கேயே ஒரு லவ்வில் குப்புறடித்து விழுகிறான். வருடா வருடம் அந்த ஊரில் ஜெயித்து வரும் காதலியின் அண்ணன் செய்யும் உள்ளடி வேலையில் காயம்பட்டாலும் இறுதியில் ஜெயிக்கிறார் ஹீரோ. இப்போது ஹீரோவுக்கு ஹீரோயின் தனது கம்பெனியில் வேலை போட்டுக் கொடுக்கிறார். எடுபிடி வேலை. அங்கேயே மேனேஜராக இருக்கும் நெடுநாள் குடும்ப நண்பரின் மகன் ஹீரோயின் தனக்குத்தான் என்று எண்ணியிருக்க.. ஹீரோவின் காதல் தெரிந்து அவனை டார்ச்சர் செய்கிறான். கடைசியில் மேனேஜர் வெளியேற்றப்பட.. ஹீரோவின் குடும்பத்திற்குள்ளேயே கலகம் செய்து குடும்பத்தை இரண்டாக்குகிறான் மேனேஜர்.. இறுதியில் இதற்காக தனது உயிரைக் கொடுத்து குடும்பத்தை ஒன்று சேர்க்கிறார் பொன்வண்ணன்..
இதுவும் ஆர்வக் கோளாறில் எடுத்த படமாகத்தான் இருக்கிறது..! ஒரே ஒரு ஆறுதல் ஹீரோவுக்கு வளர்ப்பு அம்மாவாக வரும் லஷ்மி ராமகிருஷ்ணனும், ஹீரோயின் திவ்யா பத்மினியும்தான்..!
சிற்சில இடங்களில் கவனிக்க வைத்தாலும்.. விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினாலும், கொஞ்சமாவது இயக்கத்தில் கவனத்தைச் செலுத்தி நல்லவிதமாக எடுத்திருந்தால் இயக்குநருக்காச்சும் பெயர் கிடைத்திருக்கும்..!
ஒரு மழை நான்கு சாரல்-சினிமா விமர்சனம்
கதை இருந்தால் திரைக்கதை இருக்காது. திரைக்கதை இருந்தால் இயக்கம் இருக்காது.. இது மூன்றும் இருந்தால் நடிப்பும் இருக்காது. இதில் ஏதாவது மூன்று இருந்தாலாவது படம் வெளியில் பேச வைக்கும். நமக்கு எது வருதோ, அதை மட்டும் சிறப்பாக செய்துவிட்டு மற்ற வேலைகளுக்கு மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால்தான் சிறப்பான படைப்புகள் வெளியாகும்.
இந்தப் படத்தின் இயக்குநர் கொஞ்சம் சிரத்தையுடன் செயல்பட்டு வேறு யாரிடமாவது இயக்கத்தையும், திரைக்கதை, வசனத்தையும் கொடுத்திருந்தால் கொஞ்சமாவது பேசப்பட்டிருக்கும். எல்லாத்தையும் நானேதான் செய்வேன் என்றால் இப்படித்தான் நடக்கும்.
ரவி, கர்ணா இருவரும் நண்பர்கள். ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். ரவி எதற்கெடுத்தாலும் கமிஷன் அடிக்கும் ஆள். கர்ணா ஆண்ட்டிகளை கவிழ்க்கும் பார்ட்டி. இருவருக்குமே நல்ல காசுதான். சுதர்சன், சதீஷ் என்னும் 2 பேரிடம் கமிஷனை வாங்கிக் கொண்டு தங்களது அறையில் சேர்த்துக் கொள்கிறான் ரவி. இதில் சதீஷ் சினிமாவில் உதவி இயக்குநர். சுதர்சன் பொறியியல் கல்லூரி மாணவர். கோடீஸ்வர்ரான அருள்மணியின் தங்கச்சியான ஹீரோயினை லவ்வித் தொலைக்கிறார்.
சுதர்சன் படிக்க பண உதவிகளை நண்பர்கள் செய்கிறார்கள். ஹீரோயினும் உதவுகிறாள். சுதர்சனுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து செல்கிறார். திடீரென்று திரும்பி வருகிறார். வந்தவுடன் மீண்டும் தனது காதலைத் தொடர கோடீஸ்வர அண்ணன் கோபப்படுகிறார். நண்பர்களுக்குள் கலகத்தை உண்டு செய்து நட்பை பிரிக்க முயல்கிறார். சதீஷிற்கு படத் தயாரிப்புச் செலவைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, சுதர்சனை கொலை செய்யச் சொல்கிறார். ரவியை போலீஸில் சொல்லி முட்டிக்கு முட்டி அடித்து உள்ளே தள்ளுகிறார். கர்ணாவையும் மடக்குகிறார்.. நண்பனை கொலை செய்ய விரும்பாமல் சதீஷ் தற்கொலை செய்து கொள்ள.. அடுத்தடுத்து ஹீரோயின் உட்பட அனைவருமே வீட்டு ஹாலில் பிணமாகிறார்கள்..! எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்..!
இதிலும் டைரக்சனை தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரே ஆறுதல் சிங்கமுத்துதான். அவரும் இல்லையெனில் சீட்டைக் கிழித்துவிட்டுத்தான் வெளியில் வர வேண்டியிருக்கும்..! பல இடங்களில் வாய் விட்டுச் சிரிக்க வைக்கிறார் சிங்கமுத்து. மனிதர் முயற்சி செய்தால் பல ரவுண்டுகள் வரலாம்..! எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான்..!
காதல் பாதை-சினிமா விமர்சனம்
இங்கேயிருந்து ஆக்ராவரைக்கும் நம்மை அழைத்துப் போய்க் காட்ட இயக்குநருக்கு ரொம்ப ஆசை. அதனால் தயாரிப்பாளரின் காசில் எடுத்துத் தள்ளிவிட்டார்..!
இதுவரையில் ஹீரோயின்களுக்காக உயிரையும்விடத் தயாராக இருக்கும் ஹீரோக்களை பார்த்திருக்கலாம். இதில் கொஞ்சம் வித்தியாசமாக ஹீரோயினுக்காக கொடைக்கானலில் இருந்து ஆக்ராவரைக்கும் சைக்கிளிலேயே பயணம் செய்கிறார்கள். கூடவே நம்மையும்தான்..! கொஞ்சம், கொஞ்சம் அறுவை, இழுவையுடன்.. எல்லார் வாயிலும் கம் போட்டு ஒட்டினால் என்று நினைக்கும் அளவுக்கு பேசித் தள்ளிவிட்டார்கள். மன்சூர் அலிகானின் கர்ஜனையைக் கேட்டு வயிறு கலங்கியதுதான் மிச்சம். நிஜத்தில் அழகாக பேசும், மன்சூர் திரைப்படத்தில் மட்டும் ஏன் இப்படி..?
என்னமோ காதல் படமென்றால் விழுந்தடித்து ஓடிவிடும் என்று நினைப்பு இவர்களுக்கு. படமாக்கியதிலாவது கொஞ்சம் ஜீவன் வேண்டாமா..? ஒளிப்பதிவை மட்டும் நல்லபடியாக வைத்துவிட்டால் இதற்காகவே கடைசிவரையிலும் அனைவரும் அமர்ந்திருப்பார்கள் என்று ஒரு நப்பாசை..! என்ன இருந்து என்ன புண்ணியம்..? பாடல்களையும், பாடல் காட்சிகளையும் மெனக்கெட்டு இத்தனை பிரமோட் செய்தும், பலனில்லை..! எப்படியோ ஒரு படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்தாகிவிட்டது என்ற புண்ணிய லிஸ்ட்டில் இந்தப் படமும் சேர்ந்துவிட்டது..! ஒரே ஆறுதல் ஹீரோயின்தான்.. ஹி.. ஹி.. ஹி..!
உடும்பன்-சினிமா விமர்சனம்
அவசியம் இது பத்தி பேசணுமா..? வேணாம்னு நினைச்சேன். பதிவு பண்ணி வைச்சுத் தொலையலாமேன்னு லேசா தோணுது..!
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்காங்களாம்..! எப்படின்னு மட்டும் கேக்காதீங்க.. உங்களுக்குத் தைரியம் இருந்தா படத்தை போய் பாருங்க..!
களவாணி தொழில் செய்யும் ஹீரோ ஐ.ஜி.யின் வீட்டில் கொள்ளையடிக்கப் போகிறார். “இப்பத்தான் காலைல பட்டப்பகல்ல ஸ்கூல்ல என் பொண்ணை சேர்க்கப் போனப்ப எல்லாத்தையும் கொள்ளையடிச்சிட்டாங்க”ன்னு ஐ.ஜி. லேசா பொளம்புறாரு. அவ்ளோதான். இந்த ஒரு வார்த்தையே ஹீரோவை தலைகீழா மாத்திருச்சாம். உடனே வீட்டுக்குள்ள புதைச்சு வந்திருந்த கொள்ளையடிச்ச பணத்தை வைச்சு ஸ்கூல் கட்டுறாரு. அதுக்குள்ள
ஜெயிலுக்கு போன அவரோட அண்ணன்காரன் வெளில வர்றாரு.. இடைல ஹீரோ ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்க.. அதுக்குள்ள அண்ணன் ஸ்கூலை வேற லெவலுக்குக் கொண்டு போய் அசத்திர்றாரு.. கடைசீல அண்ணனையும் விரட்டிட்டு, ஸ்கூலையும் காப்பாத்தி, பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்குற கல்வித் தந்தையா உருமாறாராம் ஹீரோ.. இதைத்தான்பா ஒரு அழுத்தமும் இல்லாம சொல்லிருக்காங்க..!
எல்லாத்தையும், எல்லாத்தையும்விட... ஹீரோவோட அண்ணன்காரன் அப்பப்போ முழிச்சிக்கிட்டே, வெறிச்சுக்கிட்டே நிப்பாரு பாருங்க.. அப்படியே அந்த டைரக்டரை.. சரி.. வேணாம்.. விட்டுர்றேன்..! இந்தப் படத்தைப் பார்க்காதவங்கதான் பாக்கியசாலிங்க.. ஒரு பாடலும், பாடல் காட்சியும் எடுக்கப்பட்ட விதம் அருமை. நல்ல பாடல். ஆனால் தேறாத படத்தில் இடம் பெற்று வீணாகிப் போனதுதான் மிச்சம்..!
இயக்கம் தெரிந்த ஒருவரிடம் படத்தின் கதையைக் கொடுத்து எடுக்கச் செய்திருக்கலாம்.. எல்லாம் வீண்..! இந்த லட்சணத்துல இது மாதிரி படத்துக்கெல்லாம் தியேட்டர் கிடைக்கலைன்னு பொலம்பல் வேற.. அடப் போங்கப்பா..!
இது மாதிரி குறைந்த பட்ஜெட் படங்களையெல்லாம் அதிகப்பட்சம் 1 கோடிக்குள் எடுத்துவிடலாம். ஆனால் படத்தை வாங்கத்தான் ஆளில்லாமல் இருக்கிறது. இதனை மட்டும் ஆரம்பத்தில் அவர்கள் உணர்வதில்லை. அல்லது இந்தச் செய்தியே தயாரிப்பாளர்களுக்கு மறைக்கப்படுகிறது. அதிலும் தற்போதைய லோ பட்ஜெட் தயாரிப்பாளர்கள் யார், யார் என்றால், தங்களது மகனையோ அல்லது தங்களையோ முன்னிறுத்தி படம் எடுப்பவர்கள்தான் .
மேற்குறிப்பிட்ட வரிசையில்கூட பாவி படத்தின் ஹீரோதான் தயாரிப்பாளர். விளையாட வா படத்தின் ஹீரோவின் தந்தைதான் தயாரிப்பாளராம். ஒரு மழை நான்கு சாரல் படத்தில் வீட்டு ஓனராக நடித்தவர்தான் தயாரிப்பாளராம். இதற்காகவே இவருக்கு படத்தில் சண்டைக் காட்சி ஒன்றும் உண்டு. பவர் ஸ்டாரெல்லாம் செத்துட்டாரு. அப்படியொரு ஸ்டண்ட்டு..! உடும்பன் படத்தின் தயாரிப்பாளர் பாடம் புத்தகத்தின் பப்ளிஷர், ஆசிரியர். ஏற்கெனவே நாகரிகக் கோமாளி என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியவர். காதல் பாதையும் இதே கதைதான்.. படத்தின் தயாரிப்பில் ஹீரோவின் பங்களிப்பும் உண்டாம். சூழ்நிலை மட்டுமே இயக்குநருக்கான படமாக தயாராகியிருக்கிறது..!
எல்லாஞ் சரி.. இப்படி படத்தையெல்லாம் எடுத்துவிட்டு படம் பார்க்க வாங்க என்று எந்தத் தைரியத்தில் இவர்கள் கூப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த மாதிரி படங்களை தியேட்டருக்கு வந்து பார்க்கும் மகா ஜனங்கள் என்ன படம் எடுத்திருக்கானுவ என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு போனால், செத்தாலும் திரும்பி தியேட்டருக்கு வர மாட்டார்கள். எல்லா படமும் இப்படித்தான் இருக்கும் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஏற்கெனவே தியேட்டர் கட்டணத்தைக் காட்டி குடும்பத்துடன் வர தயக்கத்துடன் இருக்கும் ரசிகர்களை மேலும், மேலும் சோகத்தில் தள்ளி அவர்களை தியேட்டர் பக்கமே வர விடாமல் தடுப்பதைத்தான் இது போன்ற படங்கள் செய்கின்றன. அதிகப்பட்சம் 10-ல் இருந்து 30 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கும் இப்படங்கள் அடுத்தடுத்த ரவுண்டுகளில் சொற்ப விலைக்கு விற்கப்பட்டு போஸ்டர் காசு கூட கிடைக்காமல் திருப்தியை மட்டுமே அளிக்கப் போகின்றன..!
லோ பட்ஜெட்டில் இப்படி ஏதோ ஒன்றை எடுத்து வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொள்வதைவிட இந்தப் பணத்தில் தங்களது பிள்ளைகள் பெயரில் சொத்தாவது வாங்கிக் கொடுத்தால் அவர்களுக்காச்சும் உதவும். எதுக்கு இந்த கலைச் சேவை..?