Pages

Wednesday, September 21, 2011

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-21-09-2011

21-09-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அன்புக்கு நான் அடிமை..!

இதுவரையில் நீட்டமாக வயரை மாட்டி காது கேட்கும் மெஷினை வைத்திருந்த நான் கடந்த 10 நாட்களாக புதிய மாடல் மெஷினை மாட்டிக் கொண்டு திரிகிறேன்.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜவஹர் ஐ.ஏ.எஸ்.ஸின் பொற்கரங்களால் ஒரு சுதந்திர தினத்தன்று, மதுரை ரேஸ்கோர்ஸ் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற விழாவொன்றில்தான் அந்த பழைய மிஷினை நான் வாங்கினேன்..!

கடந்த 20 ஆண்டுகளாக அது என்னுடன் உடன் பிறந்த சகோதரனை போன்று இருந்து வந்திருக்கிறது. ஹியரிங் எய்டு கடையில் சொன்னால் நம்ப மறுத்தார்கள். கருவிழிகள் இரண்டும் பிதுங்கி வெளியே வரும் அளவுக்கு ஆச்சரியப்பட்டார்கள். “எப்படி ஸார்..? எப்படி ஸார்..? அதுவும் கவர்ன்மெண்ட்ல கொடுத்தது. மட்ட ரகமாத்தான ஸார் இருக்கும்..” என்றார்கள். இதுதான் எனக்கும் புரியவில்லை.  ஆனாலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு நானே அதற்கு கட்டாய ஓய்வளித்து வீட்டில் உட்கார வைத்துள்ளேன்.

பதிவுலகத் தம்பி இராமசாமி தனது தந்தையார் மூலமாக என்னிடம் கேட்காமலேயே எனக்காக இந்த புதிய மிஷினை வாங்கி நமது எளக்கிய விடிவெள்ளி மயில் ராவணன் மூலமாகக் கொடுத்தனுப்பியுள்ளார். இந்த மாதம் நானே வாங்கலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் “ஏற்கெனவே நாங்க வாங்கி தயாரா வைச்சிருக்கோம் பிரதர்.. மருவாதையா இதைத்தான் நீங்க போடணும்..” என்று சொல்லி இதனை அன்பளிப்பாக கொடுத்துவிட்டிருக்கிறார் இராமசாமி..! (பெயரை சொல்லாமல் இருந்து தொலையக் கூடாதா என்று தம்பிகள் திட்டக் கூடாது. இதையெல்லாம் சொல்லித்தான் ஆகணும்) 

தம்பிகள் இராமசாமி மற்றும் மயிலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..! 

வன்மையான கண்டனம்..!

பொதுவாகவே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டாலே நமது காவல்துறையினருக்கு மாமியார் வீட்டுக்கு வந்தது போன்ற சந்தோஷம்.  சட்டத்தின் துணை கொண்டு அவர்களுடைய அராஜகங்களும் ஆரம்பித்துவிடும். இந்த முறையும் சப்தமில்லாமல் செய்துதான் வருகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க.வின் அத்தனை பெருந்தலைகளும் உள்ளே போயாக வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கட்டளைபோலும். இதற்காக அவர்கள் மீது புகார் இல்லையென்றாலும்கூட தி.மு.க. ஆட்சியில் புகார் கொடுக்க வந்து ஏற்றுக் கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டவர்களைக்கூட தேடி கண்டுபிடித்து புகாரை வாங்குகிறார்கள்.

பல புகார்கள் உண்மையாக இருந்தாலும், சில புகார்களை கேள்விப்படும்போது சம்பந்தப்பட்டவரை உள்ளே வைப்பதற்காகவே புகார்கள் பெறப்பட்டவை போல தோன்றுகின்றன. இது ஒரு புறம் இருக்கட்டும். கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறைப்படுத்தலாம். ஜாமீன் கிடைத்தால் அவர்கள் வெளியேறலாம். காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வழக்கை நேர்மையான வழியில் நடத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களை அடித்து, உதைத்து, சித்ரவதைப்படுத்துவது அவர்கள் செய்த செயலைவிட மிகப் பெரிய கொடூரம்.

மதுரையில் கைதான அத்தனை தி.மு.க. வி.ஐ.பி.களுக்கும் இதே மரியாதைதான் கிடைத்திருக்கிறது. கேட்டால், போலீஸையே எதிர்த்து பேசினான் ஸார்.. எங்களையே சல்யூட் அடிக்க வைச்சான் ஸார் என்று ஏதோ அவர்களை தேவதூதுவர்கள் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள் போலீஸார்.. 

சென்னையில் சக்சேனாவையும், அவரது உதவியாளர் ஐயப்பனையும் அடித்து உதைத்திருக்கிறார்கள். இந்த குரூர சந்தோஷம் யாரை திருப்திப்படுத்த..? பாவம் ஐயப்பன்.. கால்கள் வீங்கி நடக்கக்கூட முடியாமல் நடந்து வருவதைப் பார்த்தபோது வருத்தமாக இருந்தது. க்க்கூஸ்ல உக்கார கூட முடியலை என்று தனது வழக்கறிஞரிடம் சொல்லி அழுதாராம்.. ஜெயலலிதாவை கைது செய்தபோது போலீஸார் இதே போன்று செய்திருந்தால் இந்த அம்மையார் சும்மா இருந்திருப்பாரா..? இதுதான் ஆட்சியாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்..!





குற்றம் செய்தார்கள்.. கைது செய்தேன் என்கிறார்களே போலீஸார்.. சென்ற ஆட்சியின்போது இதே குற்றச்சாட்டுக்களுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றவர்களிடம் புகார்களை வாங்கக்கூட மறுத்து அவர்களை அடித்து விரட்டினார்களே.. அந்த போலீஸார் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அது மட்டும் தவறில்லையா..? புகார் கொடுக்க வந்தவர் யாராக இருந்தாலும், எவர் மீதான புகாராக இருந்தாலும் புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்து, விசாரித்து குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டியது அவர்களுடைய கடமையில்லையா..? அந்தக் கடமையை செய்யத் தவறிய போலீஸ்காரர்களுக்கு யார் தண்டனை தருவது..? ஆத்தா ரொம்பத்தான் கூவுதுய்யா..!

பரபரப்பில் சின்னத்திரை நடிகர்கள் சங்கம்

பேங்க் பேலன்ஸ் 1 லட்சமோ, 2 லட்சமோ.. இவ்வளவுதான் இருக்கும். ஆனால் உறுப்பினர்கள் எண்ணிக்கை 1250. சின்னத்திரையில் தினமும் நம்மையெல்லாம் அழுக வைக்கும், சிரிக்க வைக்கும் இந்த நடிகர்களின் சங்கத்தில் தற்போது கடும் புகைச்சல்.

தற்போது முதல் முறையாக இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 9-ம் தேதியன்று நடக்கவுள்ள தேர்தலில் நடிகர்கள் 3 அணிகளாக பிரிந்து போட்டியிடுகிறார்கள் என்பதுதான் கவலைக்குரிய விஷயம். 

தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன். இவர் தலைமையில் ஒரு அணி. தற்போதைய செயலாளர் ராஜ்காந்த். இவருடைய தலைமையில் 2-வது அணி, தற்போதைய துணைத் தலைவர் பானுபிரகாஷ். இவருடைய தலைமையில் 3-வது அணி. 

போட்டியிடும் அணிகளின் பட்டியல்..!

ராஜ்காந்த் அணி


தலைவர் - ராஜேந்திரன்
செயலாளர் - ராஜ்காந்த்
பொருளாளர் - தினகர்
துணைத் தலைவர்கள் - விஜயபாபு, மனோபாலா
இணைச் செயலாளர்கள் - சத்யப்பிரியா, கன்யா பாரதி, சதீஷ், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்
செயற்குழு உறுப்பினர்கள் - குமரேசன், சுக்ரன், ஸ்ரீகுமார், தேவ், பி.ராஜ்குமார், விஜய் ஆனந்த், ஜெயந்த், நிதீஷ், பரத், வீரா, வசந்த், ரூபஸ்ரீ  டாக்டர் ஷர்மிளா, ஷிவானி.

அபிஷேக் அணி


தலைவர் - பானுபிரகாஷ்
துணைத் தலைவர் - அபிஷேக், பாத்திமா பாபு
செயலாளர் - பூவிலங்கு மோகன்
பொருளாளர் - ஸ்ரீதர்
இணைச் செயலாளர்கள் - ஆர்த்தி கணேஷ், கமலேஷ், டிங்கு, விச்சு
செயற்குழு உறுப்பினர்கள் - பப்லூ, பிருந்தாதாஸ், மீனா குமாரி, வெங்கட், விஜய் ஆதிராஜ், சாய்ராம், மேஜர் கெளதம், பிரேம், சாக்சி சிவா, சுபகணேஷ், ஆதித்யா, சங்கீதா, பிரியதர்ஷிணி, பாபூஸ், சத்யா

சிவன் சீனிவாசன் அணி

தலைவர் - சிவன் சீனிவாசன்
பரத் கல்யாண், பாபு கணேஷ், மாலி, ரிஷி, வின்சென்ட் ராய், தர், சாய்பிரசாத், சங்கர், குண்டு கல்யாணம், கர்ணா, ராஜேந்திரன், சுரேஷ், எம்.டி.மோகன், ரொசாரியா, சி.ஐ.டி. சகுந்தலா, சந்திரா லட்சுமண், பாக்ய, ராணி, தேவி, புஷ்பலதா, சிந்து, சுந்தரி.

கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரையிலும் பெவிகால் போட்டு ஒட்டியதுபோல் பிரிக்க முடியாத நட்பாக இருந்த நடிகர்கள் சங்கத்தினர் இப்போது 3 அணிகள் அமைக்க வேண்டிய கட்டாயம் என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. 3 பேருமே அதனை வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறார்கள்.

ஆனால் சமீபத்தில் நடந்த அவர்களது சங்கத்தின் பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்களும், வாக்குவாதங்களும் நடந்திருக்கின்றன. அதன் பின்புதான் மனக்கசப்பு ஏற்பட்டு நின்னு பார்த்திருவோம் என்று களத்தில் இறங்கிவிட்டதாகத் தெரிகிறது.

இந்தக் குழப்பங்களுக்கு பிள்ளையார்சுழி போட்டது, கடந்த கால ஆட்சியில் கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்த இயக்குநர் விடுதலைதான் என்று அனைவரும் குற்றம்சாட்டுகிறார்கள். பாலாஜி என்ற நடிகரை இயக்குநர் விடுதலை, ஒரு நாள் இரவில் பூஸ்ட் அணிந்திருந்த வேளையில் தாக்கிவிட்டார். இந்த விஷயத்தில் நடிகர் சங்கத் தலைவராக இருந்த சிவன் சீனிவாசன் சரிவர செயல்படவில்லை. விடுதலையைக் கண்டிக்கவில்லை என்று குற்றம்சாட்டிதான் பலரும் அவர் மீது கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. 

இப்போது கடைசி நேரத்தில் சிவன் சீனிவாசனுடன் ஒன்றாகவே இருந்த பானுபிரகாஷ் தலைமையில் வேறொரு அணி உருவாகிவிட்டது. 

உண்மையில் இந்த அணிக்குத் தலைவர் நடிகர் அபிஷேக்தான். அவர் தலைமையில் ஒரு நட்சத்திர பட்டாளங்கள் அணி வகுத்த பின்னர் அணியில் இருக்கும் கலைஞர்கள் அனைவரும் பிராமணர்களாக இருக்கிறார்களே என்றெல்லாம் பேச்சு எழும்பியிருக்கிறது. இதனால் தலைவர் பதவிக்கு போட்டியிட நினைத்த அபிஷேக், துணைத் தலைவர் பதவிக்கு டிரான்ஸபராகிக் கொள்ள பானு பிரகாஷ் தலைவராகிவிட்டாராம்.

3 அணிகளாகப் போட்டியிட்டாலும், யார் ஜெயித்தாலும் அவர்களுடன் இணைந்து சங்கத்தை வளர்க்கப் பாடுபடுவோம் என்று உறுதியுடன் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு சந்தோஷமே..!


மெய் மறக்கச் செய்த பாம்பே சாரதா..!

2 மாதங்களுக்கு முன்பாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் விழா நடந்த தினத்தன்று சங்கரா டிவியில் பாம்பே சாரதா என்ற இந்தப் பெண்ணை முதல்முறையாகப் பார்த்தேன். சுமாராக 2 மணி நேர கச்சேரி. இரவு 7 மணியில் இருந்து நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. 

சாரதா பாடியவை அத்தனையும் தமிழ்ப் பாடல்கள்தான். கூடவே அத்தனைக்கும் அபிநயத்துடன் நடித்தும் காண்பித்தார். அசத்தல்..! 2 மணி நேரமும் மெய்மறந்து போயிருந்தேன். அந்த வீடியோவை இத்தனை நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. சங்கரா டிவியில்கூட கேட்டுப் பார்த்தேன். “மறு ஒளிபரப்பு வரும்போது பார்த்துக்குங்க ஸார். நாங்க தனியா டிவிடி போட மாட்டோம்..” என்றார்கள். நெல்லை வாழ் நண்பர்கள், பதிவர்களிடமும் சொல்லி கேட்டுப் பார்த்தேன். கிடைக்கவில்லை. 

என்றைக்குக் கிடைத்தாலும் அதனை நிச்சயமாக வலையில் ஏற்றுகிறேன். அதுவரையில் தற்போதைக்கு இணையத்தில் இருக்கும் சாரதாவின் இந்த 2 பாடல்களை மட்டும் கேளுங்கள்..!







ஆஸ்திரேலியாயாயாயாயாயாயா..!

ஆஸ்திரேலிய நாட்டின் பெண் நிதியமைச்சரான Penny Wong  தனது லைப் பார்ட்னருக்கு வரும் டிசம்பரில் பிரசவம் நடக்கும் என்று கூறியிருக்கிறார். சந்தோஷம்தான். 



இதில் சுவாரஸ்யம் இவருடைய லைப் பார்ட்னரும் பெண்தான்.. பெயர் Sophie Allouache. விந்தணு தானம் மூலமாக கர்ப்பமாகியிருக்கும் அவரது மூலம் தனக்கு வாரிசு வருவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறியிருக்கிறார் பென்னி.


தற்போதைய பிரதமரான கில்லர்டு தலைமையில் இயங்கும் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் பென்னி சார்ந்திருக்கும் தொழிலாளர் கட்சி ஓரினச் சேர்க்கைக்கு எதிரான கொள்கையுடன்தான் இப்போதும் இருந்து வருகிறது என்பது ஒரு மேலதிகச் செய்தி. ஆனாலும் பென்னிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் கில்லர்டு, விரைவில் தனது கட்சியில் இது தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

வாழ்க தம்பதிகள்..!


ஜெயலலிதாவின் கொடுத்த பேதி மாத்திரை..!

தனக்கு மிக நெருக்கமானவர்களைத் தவிர மற்ற சினிமாக்காரர்களை போயஸ் கார்டன் பக்கமே வர விடாமல் தடுத்திருக்கும் ஜெயலலிதா கொஞ்சம், கொஞ்சமாக திரையுலகத்தினருக்கு எனிமா கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை தற்போது இருக்கும் 15 சதவிகித்த்தில் இருந்து 30 சதவிகிதமாக உயர்த்த அரசு உத்தேசித்துள்ளது என்று மட்டும் புகையும் கண்ணீர்ப் புகை குண்டை வீசியிருக்கிறார். பத்து நாட்களாக கண்களைக் கசக்கிக் கொண்டிருந்த திரையுலகத்தினர் இன்றைக்கு முறைப்படி அனைவரும் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி கண்களைத் துடைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த கேளிக்கை வரியினால் திரையுலகத்தினருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அண்ணாமலை தெளிவாக விளக்கியிருக்கிறார்.

“தமிழகம் முழுக்க 10 மாநகராட்சிகள் மற்றும் 22 நகராட்சிகளில் 15 சதவிகிதம் கேளிக்கை வரியாக தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாயத்துக்களில் 10 சதவிகிதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது தற்போது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 30 சதவிகிதமாகவும், பஞ்சாயத்துக்களில் 20 சதவிகிதமாகவும் உயர்த்தப்படவிருக்கிறது. 

சென்னை போன்ற பெருநகரங்களில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் ஒரு டிக்கெட் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் 15 சதவிகிதமான 18 ரூபாய் கேளிக்கை வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தற்போது 36 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது. இதனால் ஒரு டிக்கெட்டுக்கு 84 ரூபாய் மட்டுமே திரையரங்க உரிமையாளருக்குக் கிடைக்கும். இதில் 70 சதவிகிதமான 58 ரூபாய் விநியோகஸ்தர்கள் பங்காக போய்விடும். மீதமிருக்கும் 25 ரூபாயில்தான் திரையரங்குக்கான பராமரிப்புச் செலவுகள், ஊழியர்களுக்கான ஊதியம், மின்சார கட்டணம் போன்றவற்றைக் கொடுத்துவிட்டு லாபத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே போன்று சென்னை தவிர்த்த மற்ற நகரங்களில் 50 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட்டுக்கு 7 ரூபாய் 50 காசுகள் கேளிக்கை வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தற்போது 15 ரூபாயாக உயர்த்தப்பட்டால், வெறும் 10 ரூபாய் மட்டுமே திரையரங்க உரிமையாளருக்குக் கிடைக்கும். இதனை வைத்து நாங்கள் என்ன செய்வது..” என்று கேட்கிறார் இவர். (அதே சமயம், தமிழக அரசு புதிதாக கொண்டு வந்திருக்கும் சில நிபந்தனைகளுடன் கூடிய விதிமுறைகளை செயல்படுத்தி படங்களைத் தயாரித்தால், கேளிக்கை வரி அவர்களுக்கு ரத்தாகும்.) 

இதனால்தான் இன்றைக்கு அவசரமாகக் கூட்டப்பட்டிருக்கும் திரையுலகப் புள்ளிகளின் கூட்டத்தில் பிரபல நடிகர்கள் அனைவரும் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். இது நியாயமானதுதான்.. படம் முடிவடைந்தவுடன் ஹீரோ மட்டும் முழு தொகையுடன் வீட்டுக்கு போய்விட, தயாரிப்பாளர்கள் மட்டுமே நஷ்டத்தை முழுமையாக சந்தித்து அடுத்த படம் எடுப்பதற்கான சக்திகூட இல்லாமல் தொழிலைவிட்டே போய்விடுகிறார்கள். 

ஊர் கூடி தேர் இழுப்பதைப் போல திரையுலகமே ஒன்று சேர்ந்து அமர்ந்து பேசினால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்..!


கூடன்குளம் மின் திட்டம் தேவையா..?!

கூடன்குளம் அணு மின் திட்டத்தை எதிர்த்து கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். அலைகடலாக திரண்டு வந்திருக்கும் அவர்களை பார்த்தபோது எந்த அளவுக்கு அணுக் கசிவு பற்றிய செய்திகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது.


அந்தத் திட்டத்தை கொண்டு வந்தபோதே பல கட்சியினரும், பொதுமக்களும் எதிர்த்தார்கள். போராட்டம் நடத்தினார்கள். காவல்துறையின் கடுமை காட்டியதாலும், கட்சிகளுக்குள் இருந்து ஒற்றுமையின்மையாலும் அது அப்போது பிசுபிசுத்துப் போயிருந்தது. இப்போது ஜப்பானிலும், பிரான்ஸ், ஜெர்மனியிலும் அடுத்தடுத்து அணு உலைகளில் ஏற்பட்ட கசிவு பற்றிய செய்திகள் அந்த மண்ணை எட்டியவுடன் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிய உணர்வு அவர்களுக்கு வந்திருக்கிறது. இந்த முறை தங்களது கோரிக்கையில் உறுதியாகவே இருக்கிறார்கள்.

மின்சாரத் தேவைகளுக்கான திட்டங்கள் தேவைதான் என்றாலும், அவற்றை மாற்று வழிகள் இருந்தால் அவைகள் மூலமாக பெறுவதற்கு முயலலாமே..? பிரச்சினைகள் வரவே வராது என்று யாரும் வாக்குறுதி தர முடியாது.. சுனாமி வந்தபோது யாராவது அதனை நினைத்து பார்த்திருந்தார்களா..? சுனாமி என்ற வார்த்தையையே அப்போதுதான் தமிழகத்து மக்கள் தெரிந்து கொண்டார்கள்.


இத்தனை மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களைப் புறக்கணித்துவிட்டு இந்த்த் திட்டத்தை தொடர வேண்டுமா என்று மத்திய, மாநில அரசுகள் யோசிக்க வேண்டும். ஜெயலலிதா வழக்கம்போல முதல் நாள் ஒரு கொள்கையும், மறுநாள் வேறொரு கொள்கையும் பேசி தான் ஜெயலலிதாதான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார். 

அனல் மின்சாரம், கடல் நீரில் இருந்து மின்சாரம், காற்றாலை மின்சாரம் என்று மாற்று வழிகளை ஆராய்ந்து அதற்குச் செலவிட்டாலும் பரவாயில்லை. என்றைக்கோ கூட்டம், கூட்டமாக கொள்ளை கொண்டு போகக் காத்திருக்கும் இந்த எமன் நமக்குத் தேவையில்லை..!



33 வருடங்களில் 333 திரைப்படங்கள்

பரிச்சூரி பிரதர்ஸ். முதலில் இவர்களை புக் செய்துவிட்டு பின்புதான் அலுவலகம் அமைக்கும் முடிவுக்கே வருவார்கள் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள். 


பரிச்சூரி வெங்கடேஸ்வரராவ், பரிச்சூரி கோபாலகிருஷ்ணா என்ற இரண்டு பிரதர்ஸ்கள்தான் தெலுங்கு சினிமாவை கடந்த 33 ஆண்டு காலமாக ஆட்டி வைத்த திரைக்கதையாசிரியர்கள். இவர்களிடத்தில் தங்களுக்காகவே கதை கேட்டு, இவர்களது டேட்ஸ் கேட்டு காத்திருந்த ஹீரோக்களே தெலுங்கில் அதிகம்.

என்.டி.ராமரா, நாகேஸ்வரராவ், சோபன்பாபுவில் ஆரம்பித்து, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், மோகன்பாபு ஆகியோர் வரையிலும் அவரவர்க்கு ஏற்ற கதைகளை எழுதி இதில் பல படங்களை சூப்பர்ஹிட்டாக்கியவர்கள் இந்த பரிச்சூரி பிரதர்ஸ்..! 33 வருடங்களில் 333 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இவர்களைப் பாராட்டி தெலுங்குலகில் சமீபத்தில் விழா எடுத்திருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தியிருக்கிறது.  இவர்களுடைய அரசியல் அடிதடி படங்களுக்கு ஆந்திராவில் கிடைத்த பாராட்டுக்களே, இந்தச் சகோதரர்களின் பெயரை காலாகாலத்திற்கும் சொல்லும்..!

நம்மூரில் 1000 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை எழுதிய ஒரு எழுத்தாளரும் இருக்கிறார். பெயர் ஆரூர்தாஸ். சென்ற வாரம் நல்ல குப்புச்சாமி செட்டியார் தனது சொந்த செலவில் பாராட்டு விழா நடத்தி அவரை கெளரவித்தார். தமிழ்த் திரையுலகில் இப்போது எத்தனை பேருக்கு ஆரூர்தாஸை தெரியும் என்று தெரியவில்லை..! பின்பு யார் பாராட்டு விழா நடத்துவது..? அவர் தலையெழுத்து அவ்வளவுதான்..!


வயசானாலும் பாட்டியில்லை..!

சில விஷயங்கள் கண்ணில்படும்போது  ஆச்சரியத்தில் கண்கள் விரிகின்றன. இந்த வீடியோவை பாருங்கள்.. நம்மூரு கிழவி வயசுதான். ஆனால் ஜிம்னாஸ்ட்டிக் டான்ஸ் செய்யறாங்க.. இந்த வயதிலும் அவருடைய உடல் இந்த அளவுக்கு ஒத்துழைப்பதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் உள்ளது..! 



பாலை திரைப்படம்

3000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனின் வாழ்க்கை முறை என்ன என்பது பற்றி நாம் அதிகம் சிந்தித்த்தில்லை. புத்தகங்களும் அதிகமில்லை. இன்றைய நடப்புகளை பார்க்கவே நமக்கு நேரமும் இல்லை. அதிகம் படிக்காத, தெரிந்து கொள்ள விரும்பாத இந்தச் செய்தியை நிகழ்வுகளாக்கி அதனை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் தோழர் செந்தமிழன்.

'பாலை' என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் பங்கு கொண்டிருக்கும் அத்தனை பேருமே இளைஞர்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் இருவரும் திரைப்படக் கல்லூரி மாணவர்கள். படத்தின் நாயகி ஷம்மு. படம் லோ பட்ஜெட் படம் என்பதால் கிராமவாசிகளுக்காக அதிகம் பேரை பயன்படுத்தாமல் கச்சிதமாக எண்ணி நடிக்க வைத்திருக்கிறார்கள்.


காலச் சூழலில் ஒரு கிராமம் பாலைவனமாக போகும் சூழல் இருப்பதால் அவர்கள் இடம் பெயர்ந்து செல்ல விரும்புகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் மீது தங்களது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும் வேறொரு கிராமத்து மக்கள் அவர்கள் மீது போர் தொடுக்க.. யார் ஜெயித்தது என்பதுதான் கதை..!

'கற்றது தமிழ்' படத்தில் இயக்குநர் ராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய தோழர் செந்தமிழன் பல சின்னத்திரை தொடர்களில் எழுத்தாளராகப் பணியாற்றியிருக்கிறார். தன்னுடைய சொந்தப் பணம் மற்றும் தோழமை உணர்வோடு ஒருமித்தக் கருத்தோடு இணைந்தவர்களிடமிருந்து கிடைத்த பணத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறாராம். வெற்றி பெற வாழ்த்துகிறேன்..!


டெர்மினேட்டர்-5 

உலக சினிமா ரசிகர்களிடையே டெர்மினேட்டர் சீரியஸ் படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. இது அடுத்து வரவிருக்கும் 5-வது பாகத்தின் டிரெயிலர். ரிலீஸ் அடுத்த ஆண்டுதான் என்றாலும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்..!






தொடர்கிறது காங்கிரஸின் துரோகம்..!

வெட்கம்கெட்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தான் தமிழனுக்கு என்றுமே எதிரி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

இலங்கையில் மஹிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மத்திய அரசு, நீதிமன்றத்திலேயே சொல்லியிருக்கிறது. டக்ளஸ் செய்த குற்றம் என்ன என்பதை இந்தத் தளத்திற்குச் சென்று படித்துப் பாருங்கள்.


அவர் அயல் நாட்டில் அமைச்சராக இருக்கிறாராம். அந்த நாட்டு ஜனாதிபதியோடு உடன் வந்தாராம். அதனால்தான் கைது செய்ய முடியவில்லையாம். ஆனால் அதே சமயம் இனிமேலும் கைது செய்யும் எண்ணமும் இல்லை என்றே சொல்லியிருக்கிறது மத்திய அரசு.

கொலை செய்துவிட்டு அடுத்த நாட்டிற்கு ஓடிவிட்டாலோ, அடுத்த நாட்டில் அமைச்சராகிவிட்டாலோ இந்திய அரசு யாரையும் எதுவும் செய்யாது என்பது டக்ளஸின் விளக்கத்தின் மூலம் தெளிவாகிறது. நம் நாட்டில் சிறைகளில் இருப்பவர்கள் இதையே முன் உதாரணமாக வைத்து இனிமேல் நீதிமன்றங்களில் வாதாட வேண்டும். அனைவருக்கும் வருவதும், வந்த்தும் ரத்தம்தான்.. தக்காளி ஜூஸ் அல்ல என்று அனைத்து கொலை குற்றவாளிகளும் ஒன்று சேர்ந்து வாதாடினால், அப்போது இந்த வெட்கம் கெட்ட காங்கிரஸ்காரர்கள் என்ன சொல்வார்கள் என்று பார்ப்போம்..! 


எங்கேயும் எப்போதும் - மாசமா பாடல்

6 மாதங்களுக்கொரு முறை ஏதாவது ஒரு பாடல் ஏதேனும் ஒரு வித்த்தில் ஹிட்டாகிவிடும். அதற்கடுத்து அந்தப் பாடல் காட்சியில் நடித்தவர்களும், இசையமைத்தவரும், பாடலை எழுதியவரும், நடன இயக்குநரும், படத்தின் இயக்குநரும் போதும்டா சாமிகளா.. விடுங்கடா என்று கதறுகின்றவரையில் அதை வைத்து கும்மியடிப்பது மீடியாக்களின் வழக்கம்.

தற்போது 'எங்கேயும் எப்போதும்' படத்தின் 'மாசமா' பாடல் அதனைத்தான் துவக்கியிருக்கிறது. இதனை அடித்துக் கொள்ள வேறொரு பாடல் வரும்வரையில் இதுதான் டிவிக்களின் தினசரி ஊறுகாய்.. 

எதையாவது புதுமையாக செய்தாவது ரசிகர்களைக் கவர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதினால் இது போன்று வித்தியாசத்தை காட்டினால்தான் அந்த இயக்குநர் பெயர் கொஞ்ச நாளைக்கு இங்கே பேசப்படும். இயக்குநர் சரவணனே இந்தப் பாடலை எழுதியிருக்கிறாராம்.  அதனை படமாக்கிய விதமும் பாராட்டுக்குரியது. ஆர்க்கெஸ்ட்ராகாரர்களும், மேடை நடனக் கலைஞர்களும்தான் பாவம்..! தோளைக் குலுக்க தனியா டிரெயினிங் எடுத்தாகணும்..! 





பச்சைக்குடை திரைப்படம்

அன்னக்கிளி செல்வராஜ். தமிழ்த் திரையுலகம் மறக்க முடியாத பெயர். பல நெஞ்சைத் தொட்ட உன்னத கதைகளுக்குச் சொந்தக்காரர். "கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், புதுமைப் பெண், முதல் மரியாதை. கடலோரக் கவிதைகள், புது நெல்லு புது நாத்து, அந்தி மந்தாரை, இதயக் கோவில், உதய கீதம், சின்னக்கவுண்டர், டும் டும் டும், அலைபாயுதே" என்று இந்த எழுத்தாளரின் கை வண்ணத்தில் எழுந்தவை இன்றைக்கும் மறக்க முடியாத திரைக்காவியங்கள்.

இவரை மாதிரியிருப்பவர்களுக்கு ஒரு கிறுக்கு குணம் இருக்கும். எதையாவது புதிதாகச் செய்கிறேன் என்று சொல்லி சம்பாதித்த காசை விட்டொழிப்பார்கள். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. ரோஜாவின் மேக்கப் இல்லாத நடிப்பில் உப்பு என்றொரு படத்தினை எடுத்து அதற்காக தேசிய விருதையும் பெற்றார். ஆனால் டப்பு தேறவில்லை.

இப்போது இந்த ஆண்டு ஐ.நா. சபை பசுமையை பாதுகாப்போம் என்ற கோஷத்தை எழுப்பியுள்ளதால் அதற்கேற்றால்போல் படம் எடுக்கிறேன் என்று சொல்லி பச்சைக்குடை என்ற படத்தினை தயாரித்து, இயக்கியிருக்கிறார். 


“பத்து கிணறுகள், ஒரு குளத்திற்குச் சமம்.
பத்து குளங்கள், ஒரு ஏரிக்குச் சமம்.
பத்து ஏரிகள், ஒரு மகனுக்குச் சமம்
பத்து மகன்கள், ஒரு மரத்துக்குச் சமம்.”

- இதுதான் படத்தின் கான்செப்ட். 

மரங்களை நேசிப்போம். வனங்களைக் காப்போம் என்கிறார் செல்வராஜ். இசைஞானி இளையராஜா பணம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்தாலும் பட்ஜெட் 40 லட்சங்களைத் தொட்டுவிட்டது. பிரபல மலையாள நடிகை நித்யாதாஸ் நடித்திருக்கும் இப்படத்தில் இதற்கு மேலும் மார்க்கெட்டிங் நடிகர்கள் யாருமில்லை. 

“இந்தப் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படமாட்டாது. டிவிக்களில்தான் ரிலீஸ் செய்யப் போகிறேன்..” என்கிறார் செல்வராஜ் ஸார். அடுத்த மாதம் நியூயார்க்கிற்கும் இந்தப் படம் பறக்கவிருக்கிறதாம். ஐ.நா. சபையில் திரையிடப்படவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்..! எதற்கு இந்த வேலை என்றால், “நாம பொறந்த இந்த மண்ணுக்கு ஏதாவது செய்யணுமே..” என்கிறார். பழுத்த கம்யூனிஸ்ட்டான செல்வராஜ், இத்தனை ஹிட்டடித்த படங்களை கொடுத்த பின்னும் இன்னமும் வாடகை வீட்டில்தான் இருக்கிறார். "உண்மையான கலைஞர்களுக்கு பாராட்டும், மரியாதையுமே போதும்" என்கிறார். வாழ்த்துகிறேன்.. நீங்களும் வாழ்த்துங்கள்..!





கலையுலக வாழ்க்கையில் 50 ஆண்டுகள்..!

'காதோடுதான் நான் பேசுவேன்' என்ற கொஞ்சலுக்குச் சொந்தக்காரரான எல்.ஆர்.ஈஸ்வரி இந்த மாதம் தன்னுடைய கலையுலக வாழ்க்கையின் 50-ம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளிலும் 1000 திரைப்பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் ஈஸ்வரியின் சாதனை மகத்தானது..! அவருடைய கீச்சுக் குரலையும் கொஞ்ச வைக்கும் குரலையும் கொஞ்சமாகத்தான் தமிழ்த் திரையுலகம் பயன்படுத்தியிருக்கிறது என்ற வருத்தம் அவருக்கும் உண்டு.


இருந்தாலும் தமிழக்கு மக்கள் மத்தியில் அவரை என்றென்றும் மறக்க முடியாத அளவுக்கான திரைப்பாடல்கள் அவருக்குக் கிடைத்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான். எந்த குக்கிராம்மாக இருந்தாலும் கல்யாண வீடுகளில் ஒளிபரப்பப்படும், ‘மணமகளே மணமகளே வா.. வா..’ என்ற பாடலும், ‘வாராயோ தோழி வாரோயோ’ என்ற பாடலும் ஈஸ்வரியம்மா பாடியதுதான்.. தமிழகத்தின் அத்தனை புகழ் வாய்ந்த ஆர்க்கெஸ்ட்ராக்களிலும் தவிர்க்க முடியாத பாடலாக இருக்கும் ‘பட்டத்து ராணி’ பாடலைப் பாடியவரும் இவரே. இரவு நேரங்களில் அத்தனை எஃப்.எம். ரேடியோக்களும் ஒலிக்கவிடும் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்ற பாடலை பாடியதும் இவர்தான்..! 

இவர் பாடி எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் வரும் ‘அடி என்னடி உலகம்.. இதில் எத்தனை கலகம்’ என்ற பாடல்தான். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. எத்தனை, எத்தனையோ அர்த்தங்களை இந்தப் பாடல் மீண்டும், மீண்டும் கற்பிக்கிறது..! வாழ்க கவிஞர்..!

ஒரு புறம் சினிமா பாடல்கள் என்றாலும் இன்னொரு பக்கம் பக்தி பாடல்களில் ஈஸ்வரியம்மாவை அசைக்க முடியவில்லை. ‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ளும், ‘கற்பூர நாயகியே கனகவல்லி’யும், ‘அம்பிகையை கொண்டாடுவோம்’ பாடலும் இன்றைக்கும் ஆடி மாதம் முழுவதும் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் பாடல்கள். 

தமிழ் மொழி உள்ளவரையில் ஈஸ்வரியம்மாவின் புகழ் என்றென்றும் தமிழர்களிடையே நிலைத்திருக்கும். வாழ்க..





படித்து வெறுத்தது..!

எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்குப் போக வேண்டுமென்று புறப்பட்டார். இதற்கொரு காரணம் உண்டு. போன முறை அங்கே போனபோது மூர்த்தி கணேஷ்பட், இனி நீங்கள் இங்கே வர முடியாது என்று எம்.ஜி.ஆரிடம் சொன்னாராம். இதை எம்.ஜி.ஆர். விளையாட்டாக எடுத்துக் கொண்டார். ஆனால் ஜானகி அம்மாள் பதறிப் போய் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற கோயில், கோயிலாக அப்போதே போக ஆரம்பித்துவிட்டார்.

போன முறை எம்.ஜி.ஆர். ஈரோட்டிற்கு ஒரு பத்திரிகை விழாவுக்காக வந்தார். சேஷசாயி பேப்பர் மில்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். திருப்பூர்வரை வந்து மங்களூர் எக்ஸ்பிரஸில் ஏறினார். திருப்பூரில் இருளோடு இருளாக ஒரு பெண்மணியை திருப்பூர் மணிமாறன் எக்ஸ்பிரஸில் ஏற்றிவிட்டார்.

அந்தப் பெண்மணி எம்.ஜி.ஆரின் ஏ.சி. முதல் வகுப்புப் பெட்டிக்குள் நுழைந்த 15 நிமிடத்தில் எம்.ஜி.ஆர். வெளியில் வந்தார். அவரது சட்டை சுக்கு நூறாகக் கிழிந்திருந்தது. கோபத்தில் அவராகக் கிழித்துக் கொண்டாரா அல்லது இந்தப் பெண்மணியே கிழித்துவிட்டாரா என்று தெரியவில்லை.

அப்போது அடுத்த பெட்டியில் பரமசிவம் ஸார், பிச்சாண்டி, டாக்டர் சுப்பிரமணியம் எல்லோரும் இருந்தார்கள். ஆத்திரத்தில் வெளியேறிய அந்தப் பெண்மணியை டாக்டர் சுப்பிரமணியம் மாத்திரம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அருகில் அழைத்தார். “ஏற்கெனவே அவர் சுகமில்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ஏதாவது நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது? ஆத்திரத்தை அடக்குங்கள்” என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். நல்லவேளை இந்த ஆட்சியில் சுப்பிரமணியத்தின் வீடு சுக்குநூறாகக் கிழிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் மூகாம்பிகை கோவிலுக்குப் போனார் எம்.ஜி.ஆர். ஆனால் பாதி வழியிலேயே திரும்பிவிட்டார். அடுத்த்த் தடவை சென்றபோது இனி வர மாட்டீர்கள் என்று குறி சொல்லப்பட்டது. சென்னை வந்த எம்.ஜி.ஆர். அந்தக் காலக்கட்டத்தில் 3 நாட்கள் மயக்கத்தில் இருந்தார். இந்த மூன்று நாட்களும் ஜானகி அம்மாள் பச்சைத் தண்ணீரைத் தவிற வேறு ஒன்றையும் அருந்தாமல், அவர் அருகிலேயே இருப்பதைப் பார்த்து நான் கண்ணீர்விட்டேன்.

- 'வணக்கம்' புத்தகத்தில் 'வார்த்தைச் சித்தர்' வலம்புரிஜான்


பார்த்து ரசித்தது



68 comments:

  1. பட்ட ஜிலேபி

    ReplyDelete
  2. அண்ணாச்சி கண்ணன் எங்க அப்பாரு.. உங்களுக்கு அவர் தம்பியில்ல :-)

    ReplyDelete
  3. ராமசாமிக்கும் ,, மயிலுக்கும் பெரிய மனசுதான் .. அண்ணே அடிகடி இப்படி ஏதாவது எழுதுங்க அப்போதான் நீங்களாவது எழுதுறீங்களே சந்தோசமா இருக்கும் :)

    ReplyDelete
  4. அந்த சோனா, SPB சரண்?? ஏமாத்திட்டீங்கண்ணே?!

    ReplyDelete
  5. அன்பின் உ.த - நீண்ண்ண்ண்ண்ண்ண்ட இடுகை - பொறுமையாகப் படித்தேன் - இட்லி தோசை பொங்கல் வடை சட்னி சாம்பார் நல்லாவே இருந்திச்சி - ப்ரோட்டா குருமா காபி சேத்திருக்கலாம். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. பாருங்க நம்ம பச்சபுள்ள பழமைபேசியை ஏமாத்திபுட்டீங்க.

    ReplyDelete
  7. ’பில்’ கொடுக்காம டிபன் சாப்பிட்ட மாதிரி இருந்திச்சுண்ணே! :-)

    ReplyDelete
  8. ஒரே நேரத்தில் ருசியாக நிறைய சாப்பிட்ட திருப்தி.
    நன்றி.

    ReplyDelete
  9. //பாவம் ஐயப்பன்.. கால்கள் வீங்கி நடக்கக்கூட முடியாமல் நடந்து வருவதைப் பார்த்தபோது வருத்தமாக இருந்தது. க்க்கூஸ்ல உக்கார கூட முடியலை என்று தனது வழக்கறிஞரிடம் சொல்லி அழுதாராம்.
    //

    ஆனால் *வில்லன் அஜீத்* மாதிரி கோர்ட்டுக்கு வெளியே
    நன்றாக நடந்ததாக 18-09-2011 குமுதம் ரிப்போர்ட்டர் சொல்கிறதே?

    ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு மாதிரி செய்தியைப் போடுவார்கள். வாசகர்கள் அவரவர்க்குப் *பிடித்த* செய்தியை எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கு.

    *****
    அதுபற்றிக் கண்டு கொள்ளாத சுவாமி, ‘‘சக்சேனாவின் கூட்டாளி ஐயப்பன் கோர்ட்டில் அழுது புலம்பியதைப் பார்த்தாயா?’’ என்றார்.

    ‘‘பார்த்தேன்... இப்படியா அடிப்பார்கள்?’’

    ‘‘டி.வி.யில் ஒளிபரப்பான அந்தக் காட்சிகளைப் பார்த்தவர்கள்
    எல்லோருமே இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால், அங்கே இருந்தவர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள். ‘வேனில் இருக்கும் போதும், கோர்ட்டில் இருந்து மீண்டும் வேனில் ஏறிய போதும் நன்றாகத்தான் இருந்தார்கள். ஆனால் கோர்ட்டில் மட்டும் ஏன் இப்படி நடிக்கிறார்கள்?’ என்று கேட்கின்றனர்.’’

    ‘‘ஏன் அப்படி நடிக்க வேண்டும்?’’

    ‘‘அவர்களை கோர்ட்டுக்குக் கொண்டு வந்த மறுநாள்தான் அதை சன் டி.வி. ஒளிபரப்பியது. முதல் நாள் ஏன் ஒளிபரப்பவில்லை? அவர்கள் இருவரும் கோர்ட்டுக்கு வரும் போது வழக்கமாக எந்த பத்திரிகைகளும் போவதில்லை. ஆனால் அன்று சன் டி.வி. ஆட்கள் மட்டும் போயிருக்கிறார்கள். இது ஏன்? என்றும் கேட்கிறார்கள். ‘சமீபகாலமாக அந்த நிறுவனத்தினர் சமாதானம் பேச தீவிரமாக முயற்சி எடுத்தனர். ஆனால் ஆளும்கட்சி தரப்பில் யாரும் பேசவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்று வெளியே செய்தி கசிய விடப்பட்டது. போலீஸார் தொடர்ந்து நிறுவனத் தலைவர் பற்றி விசாரிக்க ஆரம்பித்ததால், அடித்து உதைத்து வாக்குமூலம் வாங்க முனைவதாக செய்தியைப் பரப்புகிறார்கள்’ என்கிறார்கள்.’’

    ‘‘அப்படியானால் சிக்கல் நீடிக்கிறது என்று சொல்லுங்கள்...’’

    ‘‘அப்படித்தான் மேல் மட்டத்தில் சொல்கிறார்கள்’’ என்று சொன்ன வம்பானந்தா, தண்ணீரை எடுத்துக் குடித்தார். *****

    ReplyDelete
  10. சட்டு புட்டுன்னு புது மிஷினோட ஒரு போட்டோவ எடுத்து ப்ரொபைல்ல மாத்தலாமுல்லா...

    ReplyDelete
  11. மகிழ்ச்சிண்ணே. இராமசாமிக்கும், மயிலுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்! :))

    ReplyDelete
  12. எம்.ஜி.ஆர் ரகசியம் கனக்க செய்கிறது

    ReplyDelete
  13. உங்களின் செய்தி தொகுப்பு மிகவும் அருமை.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  14. வயிறாரச் சாப்பிட்டேன் அண்ணே ரொம்ப நன்றி,

    இராமசாமி, மயிலின் உதவி நெகிழ வைத்தது, வாழ்க

    ReplyDelete
  15. ஒரு மசாலா படம் பார்த்த மாறி இருக்கு பல் சுவை செய்திகள்

    திரு ராமசாமி அவர்களுக்கு என் வணக்கங்கள்

    ReplyDelete
  16. இட்லி தோசை பொங்கல் வடை சட்னி சாம்பார் ருசியோ...ருசி.
    // சென்ற ஆட்சியின்போது இதே குற்றச்சாட்டுக்களுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றவர்களிடம் புகார்களை வாங்கக்கூட மறுத்து அவர்களை அடித்து விரட்டினார்களே.. அந்த போலீஸார் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அது மட்டும் தவறில்லையா..? புகார் கொடுக்க வந்தவர் யாராக இருந்தாலும், எவர் மீதான புகாராக இருந்தாலும் புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்து, விசாரித்து குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டியது அவர்களுடைய கடமையில்லையா..? அந்தக் கடமையை செய்யத் தவறிய போலீஸ்காரர்களுக்கு யார் தண்டனை தருவது..?//
    நியாயமான கேள்வி, ஆனால் காக்கி சட்டையை மாட்டும்போது மனச்சாட்சியை கழற்றி வைத்து விடுகிறார்களே!
    தமிழக அரசாங்க உழியர்களிலேயே, அம்மா ஆட்சிக்கு வந்தால் சந்தோஷ படுவது காவல்துறை மட்டுமே!

    அருமை... மிக்க நன்றி.

    ReplyDelete
  17. ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கு ! ! திருப்தி ! ! ! !

    ReplyDelete
  18. நீண்ட நாட்கள் கழித்து நல்ல பதிவு.

    ReplyDelete
  19. இட்லி தோசை பொங்கல் வடை சட்னி சாம்பார்....
    என்பதற்கு ஏற்றாற்போல பலவிதமான விடயங்களையும் ஒரே இடத்திலை படிக்கமுடிந்தது. நன்றிகலந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. இராமசாமி மற்றும் மயில் ராவணன் இருவருக்கும் ஹாட்ஸ் ஆப்.

    ReplyDelete
  21. [[[யோஹான் said...
    பட்ட ஜிலேபி]]]

    இப்படியொரு ஜிலேபியா..? நான் கேள்விப்பட்டதே இல்லையே..?

    ReplyDelete
  22. [[[இராமசாமி said...

    அண்ணாச்சி கண்ணன் எங்க அப்பாரு.. உங்களுக்கு அவர் தம்பியில்ல :-)]]]

    ஸாரிங்கண்ணே.. மாத்திட்டேன்..!

    ReplyDelete
  23. [[[அருண்மொழித்தேவன் said...

    ராமசாமிக்கும், மயிலுக்கும் பெரிய மனசுதான்.. அண்ணே அடிகடி இப்படி ஏதாவது எழுதுங்க அப்போதான் நீங்களாவது எழுதுறீங்களே சந்தோசமா இருக்கும் :)]]]

    சந்தோஷமாத்தான் இருக்கும். நேரம் வேணும்.. அத்தோட விஷயமும் வேணும்.. ச்சும்மா மொக்கையா எழுத முடியுங்களா..?

    ReplyDelete
  24. [[[பழமைபேசி said...

    அந்த சோனா, SPB சரண்?? ஏமாத்திட்டீங்கண்ணே?!]]]

    விடுங்கப்பா.. எல்லாம் தெரிஞ்ச மேட்டர்தானே..?

    ReplyDelete
  25. [[[cheena (சீனா) said...

    அன்பின் உ.த - நீண்ண்ண்ண்ண்ண்ண்ட இடுகை - பொறுமையாகப் படித்தேன் - இட்லி தோசை பொங்கல் வடை சட்னி சாம்பார் நல்லாவே இருந்திச்சி - ப்ரோட்டா குருமா காபி சேத்திருக்கலாம். வாழ்க வளமுடன்.]]]

    வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா..!

    ReplyDelete
  26. [[[JOTHIG ஜோதிஜி said...

    பாருங்க நம்ம பச்ச புள்ள பழமைபேசியை ஏமாத்திபுட்டீங்க.]]]

    அவரா பச்சப் புள்ள..? நாட்டுல எத்தனையோ விஷயம் இருக்கும்போது கரீக்ட்டா இதை மட்டும் கேக்குறாரு பாருங்க..!

    ReplyDelete
  27. [[[அகில் பூங்குன்றன் said...

    Expecting more idly vadi pathivugal.]]]

    நன்றி அகில்..

    ReplyDelete
  28. [[[சேட்டைக்காரன் said...

    ’பில்’ கொடுக்காம டிபன் சாப்பிட்ட மாதிரி இருந்திச்சுண்ணே! :-)]]]

    ஹி.. ஹி.. நேர்ல பார்க்கும்போது என்கிட்ட கொடுத்திருங்க..!

    ReplyDelete
  29. [[[அமைதி அப்பா said...

    ஒரே நேரத்தில் ருசியாக நிறைய சாப்பிட்ட திருப்தி.
    நன்றி.]]]

    வாழ்க வளமுடன் அமைதி அப்பா..!

    ReplyDelete
  30. இந்தியன் ஸார்..

    உண்மையாகவே ஐயப்பனும், சக்சேனாவும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். குமுதம் ரிப்போர்ட்டர் கொஞ்சம் நடுநிலைமை தவறியே இந்தச் செய்தி பற்றி குறிப்பிட்டிருக்கிறது..!

    ReplyDelete
  31. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    சட்டு புட்டுன்னு புது மிஷினோட ஒரு போட்டோவ எடுத்து ப்ரொபைல்ல மாத்தலாமுல்லா...]]]

    ஒரு நல்ல போட்டோகிராபர் இருந்து வரச் சொல்லுங்க. போஸ் குடுக்குறேன்..!

    ReplyDelete
  32. [[[【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    மகிழ்ச்சிண்ணே. இராமசாமிக்கும், மயிலுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்! :))]]]

    நீ எனக்கு டாடா நானோ கார் வாங்கித் தரேன்னு சொல்லியிருக்குற..? ஞாபகம் இருக்கா..?

    ReplyDelete
  33. [[[’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

    எம்.ஜி.ஆர் ரகசியம் கனக்க செய்கிறது.]]]

    என்ன செய்யறது..? கஷ்டம்தான்.. அந்த மனுஷனுக்கு கடைசி நேரத்துல இம்புட்டு கஷ்டம் வந்திருக்கக் கூடாதுதான்..

    ReplyDelete
  34. [[[Kannan said...
    உங்களின் செய்தி தொகுப்பு மிகவும் அருமை.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com]]]

    வருகைக்கு நன்றி கண்ணன்..!

    ReplyDelete
  35. [[[கானா பிரபா said...

    வயிறாரச் சாப்பிட்டேன் அண்ணே ரொம்ப நன்றி,

    இராமசாமி, மயிலின் உதவி நெகிழ வைத்தது, வாழ்க.]]]

    வருகைக்கு நன்றி தம்பி..!

    ReplyDelete
  36. [[[G.Ganapathi said...

    ஒரு மசாலா படம் பார்த்த மாறி இருக்கு பல்சுவை செய்திகள்.

    திரு ராமசாமி அவர்களுக்கு என் வணக்கங்கள்.]]]

    ஆஹா.. அப்படியா.. மிக்க மகிழ்ச்சி கணபதி..!

    ReplyDelete
  37. [[[Thomas Ruban said...

    இட்லி தோசை பொங்கல் வடை சட்னி சாம்பார் ருசியோ...ருசி.

    நியாயமான கேள்வி, ஆனால் காக்கி சட்டையை மாட்டும்போது மனச்சாட்சியை கழற்றி வைத்து விடுகிறார்களே! தமிழக அரசாங்க உழியர்களிலேயே, அம்மா ஆட்சிக்கு வந்தால் சந்தோஷபடுவது காவல்துறை மட்டுமே!

    அருமை... மிக்க நன்றி.]]]

    நியாயமான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறேன்.. ஆட்சிகள் மாறினாலும் கொண்டாட்டத்தில் இருக்கப் போவதென்னவோ போலீஸ்தான்..!

    ReplyDelete
  38. [[[Ponchandar said...

    ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கு!! திருப்தி ! ! ! !]]]

    நன்றி.. நன்றி..

    ReplyDelete
  39. [[[RAJESH said...

    நீண்ட நாட்கள் கழித்து நல்ல பதிவு.]]]

    நன்றி ராஜேஷ்..!

    ReplyDelete
  40. [[[அம்பலத்தார் said...

    இட்லி தோசை பொங்கல் வடை சட்னி சாம்பார்.... என்பதற்கு ஏற்றாற்போல பல விதமான விடயங்களையும் ஒரே இடத்திலை படிக்க முடிந்தது. நன்றி கலந்த வாழ்த்துக்கள்.]]]

    வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்..!

    ReplyDelete
  41. [[[! சிவகுமார் ! said...

    இராமசாமி மற்றும் மயில் ராவணன் இருவருக்கும் ஹாட்ஸ் ஆப்.]]]

    ம்.. ம்.. ம்..

    ReplyDelete
  42. [[[ஒரு வாசகன் said...

    தூள் தலைவா!!!!!]]]

    நன்றி தொண்டா..!

    ReplyDelete
  43. நாங்க எங்க கடமையத்தான செஞ்சோம். நான் ரொம்ப நாளா நெனைச்சிக்கிட்டு இருந்ததுதான்.கெட்டியமா வெச்சிக்கிடுங்கன்ணே. முருகன் அருள் முன்னிற்கும்.

    ReplyDelete
  44. சாம்பாரில் காரம் கம்மி

    ReplyDelete
  45. நீண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவானதால் சேமித்து (Save) வாசிக்கிறேன்... கேசரி மிஸ்ஸிங்?

    ReplyDelete
  46. Dear TT,
    You r projecting this iyappan as a Buddha, He is an henchman of Financier Anbu, you can find this guy and Azhagar brother of this anbu wherever there is film world katta panchayat, this fellow is fit for an encounter,dont ever feel sorry for this idiot.One thing is sure that Lord Muruga is punishing this guy for all his misdeeds in the previous govt.This thug shouls not be alowed to live in this world for all the wrongs he has done particularly to the fairer sex!

    ReplyDelete
  47. அய்யபனும் சரி, சக்ஸ்சேனா-வும் சரி செமையா நடிக்கிறானுங்க.

    ReplyDelete
  48. பச்சைக் குடை பத்தி படிச்சதும் பச்சை மனிதன் படம் ஞாபகத்துக்கு வந்துச்சு. இது பத்தி நான் எழுதிய பதிவின் பின்னூட்டத்தில் கே.ஆர்.பி செந்தில் அந்தப் படத்தின் இயக்குனர் ஷரத்சூர்யாவின் தற்போதைய நிலை பற்றி எழுதியிருந்தது மிகவும் வருத்தமளித்தது. இதப் பத்தி கொஞ்சம் ஆராஞ்சு எழுது நைனா.

    ReplyDelete
  49. ஆடி மாதத்தில் எங்கோ தூரத்தில் இருந்து வரும் கற்பூர நாயகியே ....முழித்தும் முழிக்காத அதிகாலை
    அரை தூக்கத்தில் சான்சே இல்ல.

    உனக்கு பெரிய "ரஜினி" ன்னு நெனப்பா?

    கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

    ReplyDelete
  50. [[[மரா said...
    நாங்க எங்க கடமையத்தான செஞ்சோம். நான் ரொம்ப நாளா நெனைச்சிக்கிட்டு இருந்ததுதான். கெட்டியமா வெச்சிக்கிடுங்கன்ணே. முருகன் அருள் முன்னிற்கும்.]]]

    நன்னி தம்பி.. முருகன் அருள் உங்களுக்கும் கிடைக்கட்டும்..!

    ReplyDelete
  51. [[[ஸ்ரீகாந்த் said...

    சாம்பாரில் காரம் கம்மி.]]]

    எனக்குக் காரமே பிடிக்காதே..!?

    ReplyDelete
  52. [[[ரெவெரி said...

    நீண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவானதால் சேமித்து (Save) வாசிக்கிறேன்... கேசரி மிஸ்ஸிங்?]]]

    எதையாவது கேஸரின்னு நினைச்சுக்குங்களேன்..!

    ReplyDelete
  53. [[[San said...

    Dear TT, You r projecting this iyappan as a Buddha, He is an henchman of Financier Anbu, you can find this guy and Azhagar brother of this anbu wherever there is film world katta panchayat, this fellow is fit for an encounter,dont ever feel sorry for this idiot.One thing is sure that Lord Muruga is punishing this guy for all his misdeeds in the previous govt.This thug shouls not be alowed to live in this world for all the wrongs he has done particularly to the fairer sex!]]]

    நண்பரே.. நான் ஐயப்பனையும், சக்சேனாவையும் தவறு செய்யாதவர்கள் என்று சொல்லவில்லை.. போலீஸாரின் அத்துமீறலைத்தான் தவறு என்கிறேன்..!

    ReplyDelete
  54. [[[ConverZ stupidity said...

    அய்யபனும் சரி, சக்ஸ்சேனா-வும் சரி செமையா நடிக்கிறானுங்க.]]]

    எனக்கு அப்படித் தோணவில்லை. அன்றைக்கு மட்டும்..!

    ReplyDelete
  55. [[[விஜய்கோபால்சாமி said...

    பச்சைக் குடை பத்தி படிச்சதும் பச்சை மனிதன் படம் ஞாபகத்துக்கு வந்துச்சு. இது பத்தி நான் எழுதிய பதிவின் பின்னூட்டத்தில் கே.ஆர்.பி செந்தில் அந்தப் படத்தின் இயக்குனர் ஷரத்சூர்யாவின் தற்போதைய நிலை பற்றி எழுதியிருந்தது மிகவும் வருத்தமளித்தது. இதப் பத்தி கொஞ்சம் ஆராஞ்சு எழுது நைனா.]]]

    விசாரிக்கிறேன் விஜய்..!

    ReplyDelete
  56. [[[IlayaDhasan said...

    ஆடி மாதத்தில் எங்கோ தூரத்தில் இருந்து வரும் கற்பூர நாயகியே. முழித்தும் முழிக்காத அதிகாலை
    அரை தூக்கத்தில் சான்சே இல்ல.]]]

    இதே நினைவுகள்தான் எனக்கும்..!

    ReplyDelete
  57. nichayam antha ponnu romba santhoshapatirukkum ( yaro mugam theriyatha antha who hurt by saxena in car accident issue ) so murpagal cheyyin pirpagal vilayum .

    ReplyDelete
  58. தடபுடல் விருந்தே படைத்துவிட்டீர்கள்.அருமை ..
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  59. எல்.ஆர்.ஈஸ்வரி என்று தேடிப்போய் அன்புக்கு அடிமை,நடிகர் சங்கம்,தேர்தல்,பாபே சாரதா,பென்னி வாங்க்,கூடங்குளம்,பரிச்சூரி ப்ரதர்ஸ்,வயசான பாட்டி,பாலை சினிமா,டெர்மினேட்டர்,காங்கிரஸ்,மாசமா பாடல்,பச்சைக் குடை படம்,எல்.ஆர்.ஈஸ்வரி,ஒபாமா என ரொம்ப நேரம் சுற்ற வேண்டிவந்தது. இவைகளை தனித்தனி போஸ்டிங்காய் போட்டால் படிக்க ஈஸியாய் இருக்குமே !

    ReplyDelete
  60. ஏசு நாதர் கூடத்தான் இந்தியாவுக்கு வந்து கற்றுக் கொண்டு போய் அங்கே சொல்லிக் கொடுத்தது பெரிய மதமாய் ஆயிருச்சு. பஞ்சாங்கத்தை சரியாய் கற்றுக் கொள்ள முடியாததால முஹமது நபி சந்திரன் தெரியும் மூன்றாம் பிறையை முதல் நாளாய் வைத்து ஒரு காலண்டரை உண்டாக்கினார். (அவர் அப்பா,தாத்தா எல்லாம் மகேஷ்வர் கோவிலில் குருக்கள்தான்). இந்த இரண்டு செய்தியுமே நெட்டில் கிடைத்ததுதான். இந்தியாவின் மதம்தான் எல்லா மதங்களுக்குமே தாய் என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  61. ஏழாம் அறிவுக்காக எழுதியது தமிழ்மணம் மூலம் இங்கே வந்துருச்சு. சும்மா படிங்க பாஸ்.

    ReplyDelete
  62. [[[thekkadu mangutty said...

    nichayam antha ponnu romba santhoshapatirukkum (yaro mugam theriyatha antha who hurt by saxena in car accident issue) so murpagal cheyyin pirpagal vilayum.]]]

    ம்.. ஒரு பக்கம் நீர் சொல்வதும் உண்மையாகத்தான் படுகிறது..!

    ReplyDelete
  63. [[[வேலன். said...

    தடபுடல் விருந்தே படைத்துவிட்டீர்கள். அருமை.. வாழ்க வளமுடன்.

    வேலன்.]]]

    நன்றிகள் வேலன் அண்ணனுக்கு..!

    ReplyDelete
  64. [[[ashokha said...
    எல்.ஆர்.ஈஸ்வரி என்று தேடிப்போய் அன்புக்கு அடிமை, நடிகர் சங்கம், தேர்தல், பாபே சாரதா, பென்னி வாங்க்,கூடங்குளம், பரிச்சூரி ப்ரதர்ஸ், வயசான பாட்டி, பாலை சினிமா, டெர்மினேட்டர், காங்கிரஸ்,மாசமா பாடல்,பச்சைக் குடை படம், எல்.ஆர்.ஈஸ்வரி, ஒபாமா என ரொம்ப நேரம் சுற்ற வேண்டிவந்தது. இவைகளை தனித்தனி போஸ்டிங்காய் போட்டால் படிக்க ஈஸியாய் இருக்குமே !]]]

    ஈஸியாத்தான் இருக்கும். ஆனால் எனது இட்லிவடைக்கு மேட்டர் வேணுமே..? இவைகளின் தொகுப்புதான் இட்லிவடை.. வேறு வழியில்லை..! மன்னிக்கணும் நண்பரே..!

    ReplyDelete
  65. [[[ashokha said...

    ஏசுநாதர் கூடத்தான் இந்தியாவுக்கு வந்து கற்றுக் கொண்டு போய் அங்கே சொல்லிக் கொடுத்தது பெரிய மதமாய் ஆயிருச்சு. பஞ்சாங்கத்தை சரியாய் கற்றுக் கொள்ள முடியாததால முஹமது நபி சந்திரன் தெரியும் மூன்றாம் பிறையை முதல் நாளாய் வைத்து ஒரு காலண்டரை உண்டாக்கினார். (அவர் அப்பா,தாத்தா எல்லாம் மகேஷ்வர் கோவிலில் குருக்கள்தான்). இந்த இரண்டு செய்தியுமே நெட்டில் கிடைத்ததுதான். இந்தியாவின் மதம்தான் எல்லா மதங்களுக்குமே தாய் என்பதுதான் உண்மை.]]]

    என்னடா இது தெரியாத விஷயமாய் இருக்கே.. தேடிப் படிக்கிறேன்..!

    ReplyDelete
  66. [[[ashokha said...

    ஏழாம் அறிவுக்காக எழுதியது தமிழ்மணம் மூலம் இங்கே வந்துருச்சு. சும்மா படிங்க பாஸ்.]]]

    நன்றி. படிக்கிறேன்..!

    ReplyDelete