Pages

Tuesday, August 09, 2011

என்னத்த சொல்லுறது..?

09-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
 அப்போதுதான் அலுவலகம் வந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது.. முதலில் சுர்றென்று மண்டையில் ஏறியது வலி. அதன் தொடர்ச்சியாக தலையின் அனைத்துப் பக்கங்களிலும் விர்றென்ற வலி கூடியது. தலையைச் சற்றுக் குனிந்தபோது விசுக்கென்று ஒரு வலி.. ஒரு அலையே வந்து பின் பக்கத் தலையில் முட்டியதுபோல். தாங்க முடியவில்லை. சில நொடிகளில் விடைபெற்றது.

அடுத்து எந்தப் பக்கம் திரும்பினாலும் அதே போன்று வலிகள். இந்த 40 வயதில் இதுவரையில் எப்போதுமில்லாத வலி அது. சேரில் இருந்து எழுந்தவன் உட்கார்வதற்கே முடியவில்லை. தலையைக் குனிந்த நிமிடத்தில் தண்ணீர் அலம்புவதைப் போல அலை வந்து தாக்கியது. “அம்மா” என்று கதறலுடன் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது.

இனிமேலும் தாங்காது என்ற நிலைமை வந்தவுடன் அலுவலகத்தைவிட்டு ஓட வேண்டும்போல் தோன்றியது. அதையேதான் செய்தேன். நேராக ஆஸ்தான மருத்துவர். இடுப்பில் ஒரு ஊசியைப் போட்டுவிட்டு மாத்திரைகளை கொடுத்துவிட்டு “தலையில் நீர் தேங்கியுள்ளது. அடிக்கடி ஆவி பிடியுங்கள்” என்பதுடன் முடிந்தது அவரது அட்வைஸ்.

வீட்டுக்கு வந்து தலையைச் சாய்த்தால் அடங்கவில்லை வலி. படுத்தாலும் வலி. எழுந்தாலும் வலி என்று பாடாய்ப்படுத்திவிட்டது. அலுவலகத்தில் தொடர்ச்சியான 2 நாட்கள் லீவு என்றாகி மாத்திரைகளின் வீரியத்தினாலும், தினம்தோறும் எனது இடுப்பை பதம் பார்த்த ஊசிகளின் மகிமையினாலும் கொஞ்சம் பணிந்த்து வலி.

அடுத்த நாள் மாலை தம்பி வெட்டோத்தி சுந்தரம் பட விழாவுக்கு அழைக்க வீட்டுக்கு வந்த இயக்குநர் வடிவுடையான் என் நிலைமையைப் பார்த்து அவரே கடைக்கு ஓடிப் போய் டிராகன் என்னும் மருந்தை வாங்கி வந்து கொடுத்தார். இப்போதுவரையிலும் அதுதான் எனக்கு உற்ற துணைவன்..! அறிமுகப்படுத்திய நண்பர் வடிவுடையானுக்கு நன்றி..

இந்தத் தலைவலியுடனேயே அடுத்து வந்த அத்தனை நாட்களும் அலைய வேண்டியதாகிவிட்டது. ரோட்டில் எச்சில் துப்புவது எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் அதனை வம்படியாகச் செய்யும்படியாகிவிட்டது. நான் போட்ட மாத்திரைகளின் பணியே சளியை வெளியேற்றுவதுதானாம். அது இருந்தால் இன்னும் தலைவலி கூடும் என்ற மருத்துவரின் எச்சரிக்கையால் செய்யப் பிடிக்காத “அந்த” செயலை சில நாட்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது. எனக்கே வெட்கமாகத்தான் இருந்தது. இருக்கிறது.

அலுவலகத்தில் மிக நேராக ஏஸி காற்று எனது தலையில்தான் வீசுகிறது. அலுவலகத்தில் என்னைத் தவிர அத்தனை பேரும் ஜெர்கின் போட்டுச் சமாளிக்கிறார்கள். நான்தான் எதையும் சமாளிப்போம்ல என்று நக்கல் அடித்துவிட்டு இப்போது கண்ணீர் விடுகிறேன்.

அடிக்கிற ஏஸியில், 5 நிமிடத்தில் பாட்டில் தண்ணீர் ஜில்லென்றாகிறது. இதில் ஐஸ் வாட்டர் குடிக்க்க் கூடாது என்றால் எப்படி? இருக்கிற தண்ணீரே அப்படித்தான். ஒவ்வொரு தடவையும் சுடுதண்ணீர் வைத்து குடிக்கவும் சோம்பேறித்தனம். விட்டுவிட்ட வந்த வலி மீண்டும் சூடு பிடித்தது இந்த வாரம்.

சனிக்கிழமையன்று காலை பிடித்த தலைவலி கர்மம் மதியத்திற்குமேல் உச்சத்திற்குச் சென்றது. எங்காவது தலையை முட்டிக் கொண்டால்தான் நிம்மதி என்ற நிலையில் மறுபடியும் மருத்துவர். இம்முறை வேறு மாத்திரைகள். ஊசி. இவற்றுடன் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது. அன்று இரவு அழையா விருந்தாளியாக குளிர் காய்ச்சல். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அடித்துப் போட்டுவிட்டது.

மறுநாள் காலை மீண்டும் மருத்துவர். புதிய ஊசி. புதிய மாத்திரைகள். போதுமடா சாமி என்றாகிவிட்டது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக இப்போது காய்ச்சலும் வந்து அதுவும் மெதுவாகி, பின்பு வயிற்று வலி வந்தது. அது வயிற்று வலியா அல்லது வயிற்று பசியா என்றே தெரியவில்லை. சாப்பிட வேண்டும் போல தோன்றியது. ஆனால் ஒரு கவளம் சோற்றை வாயில் போட்டவுடன், உள்ளே போகவில்லை. ம்ஹூம்.. இது சரிப்படாது என்றெண்ணி ஆபத்துக்குப் பாவமில்லை என்ற ரீதியில் பிரெட் பாக்கெட்டை வாங்கி 4 பிரெட்டுகளை அள்ளி வாயில் போட்டு அரை சொம்பு பாலைக் குடித்துவிட்டு படுத்தேன்.

திங்கள்கிழமை ஆபீஸுக்கு போயே ஆகணுமே என்ற நினைப்பில் எழுந்தவனுக்கு எதுவும் தெரியவில்லை. எல்லாம் நன்றாகவே தெரிந்தது. ஒரு காபியை குடித்துவிட்டு சலூன் கடையில் சவரம் செய்துவிட்டு அலுவலகம் கிளம்புவோமாக என்றெண்ணி காபி கடையில் காபியை வாங்கி ஒரு சிப் அருந்தியவனின் தலை நொடியில் 180 டிகிரியில் சுற்றத் தொடங்கியது. கையில் வைத்திருந்த தினத்தந்தியின் செய்திகளெல்லாம் தாறுமாறாக எனது விழித்திரையில் ஓடத் துவங்கின..

நிலைமை புரிந்தது. இது போன்ற எத்தனையோ சுற்றல்களைத்தான் பார்த்தாச்சே. காபி குடிக்க வந்த சலூன் கடைக்கார அண்ணனின் கையைப் பிடித்திழுத்து, “வீடுவரைக்கும் துணைக்கு வாண்ணே..” என்றழைத்து ஒரு பத்தடி நடந்திருப்பேன். அதற்கு மேல் என் கால்களுக்குச் சக்தியில்லை. அப்படியே பொத்தென்று விழுந்தது நினைவிருக்கிறது.

அப்புறம் மெள்ள கண்ணைத் தொறந்து பார்த்தபோது சுற்றிலும் கால்வாசி பிரேமில் மனித முகங்களாகத் தென்பட்டு அதிலும் அதிகம் நான் பார்த்திருந்த எனது எதிர்வீட்டு அம்மா என் கன்னத்தைத் தட்டிக் கொடுப்பது லேசாகத் தெரிந்தது.

யாரோ சிலர் என்னைத் தூக்கி ரோட்டு ஓரமாக உக்கார வைத்திருந்தார்கள். யாருடைய கால்களிலோ நான் வசதியாக சாய்ந்து படுத்திருந்தேன். யாரோ ஒரு நண்பர் முகத்தில் தண்ணீரை அடித்தார்.. வாயில் தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்ததுதான் தெரியும். முழுவதையும் குடித்துவிட்டுத்தான் சொம்பை விட்டேன் என்று பக்கத்து வீட்டம்மா மதியவாக்கில் சொன்னார். மீண்டும் படுத்தேவிட்டேனாம்.. மறுபடியும் தண்ணீர் அடித்து எழுப்பி, மறுபடியும் தண்ணீரைக் குடிக்க வைத்து எழுப்பினார்கள். இப்போது ஓரளவுக்கு முகமெல்லாம் மங்களமாகத் தெரிந்தது.

அதற்குள்ளாக எனது மாப்பிள்ளை ஆமை வேகத்தில் மெதுவாக நடந்து வந்து “என்ன மாமா..?” என்றான். இது எங்க குடும்ப பழக்கம். வேறு வழியில்லாமல் அவனது தோளில் கை போட்டபடி வீடு வந்து சேர்ந்து படுத்தவன் மதியம்தான் எழுந்தேன். இப்படியொரு அவமானம் நமக்குத் தேவையா..? ராத்திரில 4 பிரெட் தின்னணே.. அது இந்த அரை சாண் வயித்துக்குப் பத்தலையா..? கொடுமையா இருக்கு..! அன்னிக்குப் பொழப்பும் போச்சு.

இப்படி ஒரு மாசமா இந்த கண்றாவிகளோட அல்லாடிக்கிட்டிருக்கேன். நேத்து மதியம் பக்கத்து வீட்டுக்காரம்மா செஞ்சு கொடுத்த கருவாடு என்னமோ என் வயித்தை செஞ்சு கொஞ்சம் பசியா சாப்பிட வைச்சுச்சு. வாந்தி வர்ற மாதிரி இருந்தா காணாமப் போனதுல கொஞ்சூண்டு சந்தோஷம். இன்னிக்கு காலைல 3 நாள் லீவுக்கு அப்புறம் ஒழுங்கு மருவாதையா ஆபீஸ்ல போய் ஆஜராயிட்டேன்..

ஆனாலும் என்ன..?
சினிமாவுக்குச் சென்று 25 நாட்களாகிவிட்டன. முடியலை.  தினத்தந்தில டெய்லி பக்கம், பக்கமாக சினிமா விளம்பரத்தைப் பார்த்தா கடுப்பா இருக்கு. நானே போக முடியாதப்ப எதுக்கு தவறாம வெள்ளிக்கிழமை படத்தை ரிலீஸ் செய்யுறானுக..?  இன்னிக்காவது போட்டோ போட்டி(படம் பரவாயில்லை. பார்க்கலாம்னு நமக்குத் தகவல்) போவலாம்னு மனசைத் தேத்திக்கிட்டு தயாரா இருந்தேன். சரியா 4 மணிக்கு தலைவலியார் தனது வேலையை ஆரம்பிச்சிட்டாரு.. டிராகனை இருக்கிறவரைக்கு தேய்ச்சுட்டு எல்லாத்தையும் மூடிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்..

டாக்டரை கேட்டா வீட்டுல டஸ்ட் அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன். அதுனாலதான் இப்படி அடிக்கடி வருது. ஒண்ணு வீட்டை மாத்துங்க. இல்லைன்னா வீட்டை சுத்தமா வைச்சுக்குங்க என்கிறார்.

என்னதான் வாரத்துக்கு ஒரு தடவைன்னு வீட்டைக் கூட்டினாலும் டெய்லி கிலோ கணக்குல தூசி வந்து அப்புது. இதுல எங்கே போய் தப்பிக்கிறது..? போன மாசந்தான் புத்தக அலமாரியை துடைச்சு சுத்தமா வைச்சேன். அதுக்கப்புறம்தான் இந்த தலைவலியே ஆரம்பிச்சதுன்னு டாக்டர் சொன்ன பின்னாடி யோசித்த பின்புதான் தெரிந்த்து.

இன்னும் 2 ஷெல்ப் இருக்கு. அதையும் எடுத்து.. அடுத்து 3 மாசத்துல மறுபடியும் 9 நாள் லீவெடுத்து.. அப்புறம் கடைசியா நிரந்தரமா நான் வீட்லயே இருந்திர முடியும்னு நினைக்கிறேன்.

இந்த முருகன் பயலும் ச்சும்மா இருக்கவிட மாட்டேன்றான்..! அதான் நேராவே வர்றேன்னு சொல்லிட்டனே.. அப்புறமேன்ன ஒரே அள்ளா அள்ளிட்டுப் போக வேண்டியதுதானே..? தறுதலைப் பயபுள்ளை.. போட்டு பாடாய்ப் படுத்துறான்..! ஒழுங்கா வேலைக்கு போய் நாலு பேர்கிட்ட நல்ல பேர் எடுக்க விடுடான்னா அதையும் செய்யறதில்லை. எதையாவது செஞ்சு சட்டுப்புட்டுன்னு தூக்குடான்னு சொன்னாலும் அதையும் செய்யறதில்லை..

போஸ்ட் போட்டு 1 வாரமாகப் போகுது.. இது வேற இன்னொரு பக்கம் இழுத்து வைக்குது.. ஜூலை மாசம் வெறும் 10 போஸ்ட்டுதான் போட்டிருக்கேன். ஆகஸ்ட்ல 2-தான்.. ஐயையோன்னு இருக்கு. இதை நம்பி விளம்பரத்தை வேற வாங்கிப் போட்டிருக்கேன். இப்போ அவங்களுக்கும் நான் பதில் சொல்லியாகணும்..! வேற வழியில்லை.. அதனால இருக்கிற தலைவலியோட அந்தத் தலைவலியை பத்தியே சொல்லித் தொலைக்கிறேன்..!

திட்டுறவங்க திட்டிக்குங்க..!

74 comments:

  1. அண்ணே என்ன இது. உடம்பை பாத்துக்கங்க. பதிவு பத்தி கவலைப்படதீங்க.

    ReplyDelete
  2. அண்ணே! உடம்பைக் கவனமாப் பார்த்துக்குங்கண்ணே! சீக்கிரம் உடல்நலம் முழுமையாய் சீரடைய அன்னை காளிகாம்பாளிடம் வேண்டுகிறேன்!

    ReplyDelete
  3. போஸ்ட் எல்லாம் அப்புறம் போடலாம் முதல்ல உடம்பு !! அப்புறம் தான் போஸ்ட் !!! மாசத்துக்கு ஒரு இட்லி ,வடை ,சாம்பார் போடுங்க .,ஒரு மாசம் தாக்கு பிடிக்கும் போஸ்ட் அது .,

    ReplyDelete
  4. இதுக்கெல்லாம் உங்களை திட்ட முடியுமா ??? உடம்பை பார்த்துகோங்க அண்ணே ..

    ReplyDelete
  5. சரவணா! டேக் கேர்! இதுக்கு மேல என்னாத்த சொல்ல? மனசு பதறுது. இந்த பதிவை கூட படிக்காம என் பஸ்ல வேற உன்னை திட்டிகிட்டு இருக்கனே. ஏன்யா ஏன்யா இப்புடி. அதான் உடம்பு முடியலைல்ல... எங்க போய்ட போராரு கலைஞர். நல்லா ஆனதுக்கு பின்னே வந்து திட்டலாம் தானே.. அடப்போப்பா...

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. சுவரை வைத்துதான் சித்திரம்..
    "அவரை" வை(த்)துதான் பதிவு..
    சரவணன் ரெஸ்ட் எடுத்துக்கோங்க..
    விரைவில் பூரண நலம் அடைய பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  8. அண்ணே. உடம்ப பாத்துகோங்க. நேத்தே உங்களுக்கு மெயில் அனுப்புனேன். என்ன ஆச்சு உடம்பு சரி இல்லையான்னு கேட்டு. ரெஸ்ட் எடுங்க.

    ReplyDelete
  9. அண்ணே என்ன இது. உடம்பை பாத்துக்கங்க.அப்பன் முருகன் துணையிருப்பான்!!

    ReplyDelete
  10. உடம்பைப் பார்த்துக்கோங்கண்ணே..எல்லாம் சரியாகும்..முருகன் இருக்கான்.

    ReplyDelete
  11. ரொம்ப நாள் ஆச்சி நம்ம தமிழ் அண்ணாச்சி பதிவு படிச்சி...ஆசையோடி படிச்சா ..ஒன்னும் இல்லா ...உடம்ப பார்த்துகோங்க ...அடுத்த அதிரடி பதிவுக்கு காத்து இருக்கிறோம்

    ReplyDelete
  12. உடம்பை பார்த்துக்குங்க அண்ணாச்சி. பதிவு கருமாந்திரம் எல்லாம் கிடக்கட்டும்..

    ReplyDelete
  13. Mr.Saravanan,

    Please dont exert yourself. Kindly go to a good physician and not just to the local clinic.Please try to get the correct diagnosis of what is causing this problem.Health is of paramount importance everything else is dispensable.Please take care. If you want I can check out on a good doctor for you. Do watching films matter in this condition. Dont even think about it.

    ReplyDelete
  14. லொள்ளப்பாரு. உடம்பு முடியாம, சினிமா போஸ்டுன்னு. நார்த் போக் ரோட்ல ஆர்ய வைத்திய பார்மஸி இருக்கு பாருண்ணே. அங்க மண்டையிடிக்கு பத்து போடுற மாத்திரைன்னு கேளுங்க. சிவப்பு கலர்ல குண்டு குண்டா இருக்கும். அதக் குழச்சு ராத்திரில நெத்தில அப்பிக்கிட்டு படுத்தா காலைல தலைக்கனம் போயிடும்.

    ReplyDelete
  15. அண்ணே, முதல்ல உடல் நலத்துல கவனம் செலுத்துங்க, அப்புறம் பதிவு போடறதுல கவனம் செலுத்தலாம்
    அப்புறம் கூகிள் அட்சென்ஸ் பற்றி கவலைப்பட தேவையில்லை...

    ReplyDelete
  16. //அங்க மண்டையிடிக்கு பத்து போடுற மாத்திரைன்னு கேளுங்க. சிவப்பு கலர்ல குண்டு குண்டா இருக்கும். அதக் குழச்சு ராத்திரில நெத்தில அப்பிக்கிட்டு படுத்தா காலைல தலைக்கனம் போயிடும்// அந்த மாத்திரை பேரு நீர்க்கோவை. நானும் எப்போதெல்லாம் sinus தொல்லை வருகிறதோ, அப்போதெல்லாம் இதையே உபயோகிக்கிறேன்.

    ReplyDelete
  17. பதிவெல்லாம் கிடக்கட்டும் உண்மையாரே, மொதல்ல் உடம்பைப் பாருங்க. சுவர் இருந்தால்தான் சித்திரம்.

    ReplyDelete
  18. "migraine" னு சொல்லுவாங்க இல்ல, அது மாதிரி ஏதாவது தலைவலியா இருக்கும். இதுக்கு மருந்து நெறையாவே இருக்கு. டாக்டரிடம் கன்சல்ட்ப் பண்ணி வாங்கி வச்சுக்கோங்க. தலைவலி வரும்போது மாத்திரை சாப்பிட்டால்த்தான் இது போகும். ஒரு நல்ல டாக்டரா முதல்ல பாருங்க! பதிவெழுத முன்னால அதைத்தான் நீங்க மொதல்ல செஞ்சிருக்கனும்! Take care!

    ReplyDelete
  19. உடம்பை பாத்துக்கோங்க சரவணன், பதிவு, பஸ்ஸெல்லாம் எங்கயும் போகாம நான் பத்திரமா பாத்துக்கறேன்.

    அப்புறம் உடல் நிலை சரியா இல்லாத போது சாவைப் பற்றி நினைக்காதீர்கள், பேசாதீர்கள் - ரொம்ப டிப்ரஸிங்கா இருக்கும். ஆச்சு இன்னும் ரெண்டு நாளில் சரியாகிடுவேன், இந்த வேலைகளையெல்லாம் ஒரு வாரத்தில் செஞ்சி முடிச்சிடுவேன்னு லிஸ்ட் போடுங்க, பாஸிட்டிவா திங்க் பண்ணுங்க,
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்.

    ReplyDelete
  20. விக்ஸ் வேப்போரப் போட்டு ஆவிபுடிங்கண்ணே....!

    ReplyDelete
  21. சரவணன்,

    உடம்பைப் பார்த்துக்குங்க.

    எதுக்கும் ஆயுர்வேத மருத்துவர் ஒருவரைப் பாருங்கள். சரியான தீர்வு கிடைக்கும்.

    ReplyDelete
  22. ஏ ஸியில் இருப்பது சைனஸ் காரர்களுக்கு அலெர்ஜி ஆகும் என்றால் அதை முதலில் மாற்ற வழி செய்யவும்.

    கணினித் திரையை ரொம்ப நேரம் பார்ப்பது இது போன்ற விஷயங்களுக்கு காரணமாகலாம். குறைக்கவும். அமரும்போதும் கணினித் திரையிலிருந்து போதுமான இடைவெளி விட்டு பார்க்கவும்.

    இந்த மாதிரி சமயங்களில் டிவி பார்ப்பதே தவறு. சினிமா கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

    காதில் ஹெட்செட் வைத்து பாட்டு கேட்கும் பழக்கம் இருந்தால் தவிர்க்கவும்.

    எண்ணெய்ப் பண்டங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பித்தம் கூடக் காரணமாகலாம். கடைகளில் எப்போதுமே கிடைக்கும் தீபாவளி மருந்து என்று சொல்லப் படும் சுக்கு, மிளகு, திப்பிலி லேகியம் வாங்கி தினமும் காலையில் சாப்பிடலாம். (தாயார், அம்பிகா போன்ற கடைகளில் எப்போதும் கிடைக்கும்)

    டிராகன், AXE போன்ற தைலங்களும் சரி, சுக்குப் பத்து, நீர்க்கோவை, போன்றவைகளும் சைனஸ் துவாரங்களில் சேரும் சளி, நீரை அகற்றும் பணிதான் செய்கின்றன.

    குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடவும். ஆபத்தில்லாத சாப்பாடு சாப்பிடவும். வாந்தி வரும் போல இருந்தால் காய்ந்த நார்த்தங்காய் வாயில் அடக்கிக் கொள்ளலாம்.

    தேவைப் பட்டால் ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்து விடவும்.

    Please dont ignore. Take care about your health.

    ReplyDelete
  23. விக்ஸ் வேப்போரப் போட்டு ஆவிபுடிங்கண்ணே....!


    ப,ராமசாமி........ சிரித்துக் கொண்டே இருக்கேன்.

    சரவணன் உங்களுக்கெல்லாம் சாவு வர இன்னும் ரொம்ப காலம் இருக்கு. கூகுள்காரனே கதறனும். அந்த அளவுக்கு உங்க எழுத்துக்களை கொண்டு போய் ரொப்புங்க.

    அப்புறம் ஸ்ரீராம் சொன்னது தான் ரொம்பச் சரி.

    உடல்நலத்தில் ரொம்பவே கவனம் தேவை. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. Don't use big words. Simply take care.Samy

    ReplyDelete
  25. அண்ணே உடம்பை பார்த்துக்கோங்க. ஆவி பிடிக்கிறேன்னு சுடுகாட்டு பக்கம் போயிடாதீங்க!!!

    ReplyDelete
  26. போட்டோ போட்டு ஊர ஏமாத்தலாம் உடம்ப ஏமாத்த முடியுமா? வயசாயிடிச்சிண்ணே உங்களுக்கு, நேர்ல வந்து பாக்கறேன். ஒழுங்கா ரெஸ்ட் எடுங்க.

    ReplyDelete
  27. சரவணன் நல்லா இருக்கீங்களான்னு கேட்கலாமேன்னு உள்ள வந்தாக்கா இப்புடி சீக்கா கெடக்குறீங்க.

    I think you have wandering pain, from head to stomach :)) Take care.

    Get well soon.

    ReplyDelete
  28. Get well soon sir namma annan kathirkamamurugan koodave iruppar

    ReplyDelete
  29. உடம்பைப் பார்த்துக்கோங்க..
    சுக்கு உரைத்து கழுத்து நெற்றியில் தடவுங்க..நீர் எறங்கும்..சற்று எரியும் ஆனா..

    ReplyDelete
  30. அண்ணே! உடம்பைக் கவனமாப் பார்த்துக்குங்கண்ணே!போஸ்ட் எல்லாம் அப்புறம் போடலாம் முதல்ல உடம்பு !! அப்புறம் தான் போஸ்ட் !!!

    ReplyDelete
  31. சீக்கரம் உடல் நலம் தேற வாழ்த்துக்கள்.
    ஒரு suggestion. உடல் சகஜ நிலைமைக்கு திரும்பிய பின் உங்கள் ரெகுலர் வேலைகளையெல்லாம் மறந்து விட்டு (பதிவு எழுதுவதையும் தான்)செல் போனை ஆஃப் செய்து விட்டு எங்காவது சுற்றுலா சென்று வரவும். அல்லது கிராமத்தில் தோட்டம் எதாவது இருந்தால் அங்கு சென்று 4 அல்லது 5 நாட்களை கழிக்கவும்.
    இயற்கைக்கும் நமக்குமான இடைவெளியை ரொம்ப குறைத்து விடக்கூடாது

    ReplyDelete
  32. நல்ல கதை.
    Thanks,
    Priya
    http://www.ezdrivingtest.com

    ReplyDelete
  33. போஸ்ட் போடுறேன்னு போடற போஸ்ட படிக்க நீ இல்லாம போய்டாத உ.த. முதல்ல ஆஸ்தான டாக்டரெல்லாம் விட்டுட்டு உருப்படியான ENT(if i'm right) டாக்டர பொய் பாருய்யா.

    ReplyDelete
  34. ஹோமியோபதி மருத்துவம் முயற்சி செய்யுங்கள். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என நினைக்கிறேன்.

    உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளவும்.. பதிவெல்லாம் எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  35. அட என்னாங்க சினிமா, பதிவுல்லாம் அவ்வளவு முக்கியமா? உடம்பை பாத்துக்கோங்க.

    get well soon.

    ReplyDelete
  36. திரும்பவுமா? ரெஸ்ட் எடு அண்ணே..எதாச்சும் உதவி தேவையின்னா கூப்பிடு..

    ReplyDelete
  37. அண்ணே உடம்பப் பாத்துக்குங்க. சங்கடப்படாம சுடுதண்ணி குடிங்க. ஏஸி நேரா படாம பாத்துக்குங்க. நாங்கல்லாம் இருக்கோம்.

    ReplyDelete
  38. இந்த வேதனையிலும் ஏன்......ரெஸ்ட் எடுங்க அண்ணே..

    இதுவும் கடந்து போகும்...
    அண்ணே உங்க நல்ல மனுசுக்கு முருகர் சோதனை கொடுப்பார் தவிர கைவிட மாட்டார்.

    ReplyDelete
  39. ஏற்கெனவே 42 கமெண்ட்ஸ். ஸோ.. 42+42=84 கமெண்ட்ஸ் உறுதி!! :-)

    சமீபத்தில் காதுக்குள் நுழைந்த வண்டு தன் சந்ததியினரைப் பெருக்கி தலை முழுவதும் உலா வந்திருக்கலாம். எதுக்கும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துடுங்க..! :-)

    jokes apart.. உடம்பை நல்லாப் பார்த்துக்குங்க. take care.. take care.. take care..

    ReplyDelete
  40. சரவணன் அண்ணே!நான் உங்களை டிசம்பரில் நேரில் சந்தித்ததில் தோன்றுவது இன்னும் பல வருடங்கள் அடிச்சு ஆடும் உடல் வாகு உங்களுக்கு.நிறைய மருத்துவ ஆலோசனைகள் நண்பர்களே இங்கே கூறுகிறார்கள்.மருத்துவர் புருனோ ஆலோசனை கேட்கலாம்.

    சென்னைக்கு முக்கியமான எதிரி குப்பை துகள்கள் மற்றும் சூடான சீதோஷ்ண நிலை.இவற்றிலிருந்து காத்துக்கொள்ள தலைக்கு கட்டாயம் எண்ணை தேய்ப்பதும்,இரவில் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் கண்ணுக்கு இடுவதும்,மீண்டும் காலை குளித்தவுடன் இரண்டு சொட்டு எண்ணை விட்டுக்கொள்வதும்.நான் முன்பு எழுத்துக்கு மட்டும் கண்ணாடி அணிந்து கொண்டிருந்தேன்.இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் கட்டாயப் பழக்கத்தால் இப்போது கண்ணாடியே அணிவதில்லை 12 மணிநேரம் கணினியை உற்றுப்பார்த்துக் கொண்டும்.

    காலை (அல்லது மாலை) யோகா பயிற்சிகள் பின்பே நீண்ட பதிவுகளும்,அன்றாட வேளைகளும் என்ற பழக்கங்களும் காசு செலவழிக்காத இலவச வைத்தியம்.

    ReplyDelete
  41. அண்ணே! உடம்பைக் கவனமாப் பார்த்துக்குங்கண்ணே! உங்களுக்கு சீக்கிரம் உடல்நலம் முழுமையாய் சீரடைய அந்த அருணாசலனை வேண்டுகிறேன்!

    ReplyDelete
  42. இம்மாதிரியெல்லாம் பொதுவில் உடம்பு பிரச்சினைகளை இறக்கிவைத்தோமானால் ஆளாளுக்குச் சொல்லும் வைத்தியங்களில் எதை மேற்கொள்வது என்பதில் பைத்தியமே பிடித்துவிடும். சரியான பிரச்சினை என்ன என்று கண்டுபிடிப்பதற்காக ஆங்கில மருத்துவமனை சென்று தரோவாக ஒரு மருத்துவப்பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அப்புறம் ஒரு நல்ல ஹோமியோபதி டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிட ஆரம்பியுங்கள். கூடவே திரு ராஜநடராஜன் சொல்லியிருக்கும் யோகா மற்றும் கண்ணுக்கு விளக்கெண்ணெய் வைத்தியத்தை ஆரம்பியுங்கள். காலையில் கடற்கரைக்குப்போய் நூற்றியெட்டு தடவை மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.உங்களுக்கு இருக்கும் இதே பிரச்சினை கொண்டவர்களை ரெய்கி மூலமும் மூச்சுப்பயிற்சி மூலமும் நானே குணப்படுத்தியிருக்கிறேன். ஆகவே பயப்படாமல் அதே சமயம் உங்கள் பதிவில் புலம்பியிருக்கிறீர்களே அப்படிப்புலம்பாமல் இருங்கள்.நல்ல பாசிட்டிவ் எண்ணங்களை மனதில் நிரப்பிக்கொள்ளுங்கள். கொஞ்ச நாட்களுக்கு யாரையும் கலைஞர் உட்பட திட்டாமல் இருங்கள். நீங்கள் திட்டவில்லையென்று அவர் நிச்சயம் கவலைப்பட மாட்டார்.

    ReplyDelete
  43. கோபித்துக் கொள்ளாமல் திருச்செந்தூர் சென்று முருகனைத் தரிசியுங்கள். நல்ல சித்த/ஆயுர்வேத மருத்துவரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள். ஓய்வெடுக்கிறோமே என்ற குற்றவுணர்வின்றி ஓய்வெடுங்கள். ஞாயிறன்று ஓய்வு என்பது வாரமுழுதும் உழைக்கத் தயார் செய்துகொள்ள என்பது போல இந்த ஓய்வு ஒரு நீண்ட நல்ல பயனுள்ள வாழ்வுக்கு முன் ஒரு தயாரிப்புக் காலம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். மாலை வேளைகளில் நடை பயிலுங்கள். நலம் வாழ வாழ்த்துக்கள். முருகன் துணையிருப்பான். அவனுக்கு வேறென்ன முக்கிய வேலை, உங்களைத் தேற்றுவதை விட?

    ReplyDelete
  44. kaathila erumbu poonthathukku oru pathivu.padiththuvittu panjai vaiththukonden.thalaivalikku oru pathivu.juram adichchuvitta maathiri irunthathu.nalla munnerram intha pathivil izhuvai illai.innum konja naalil "nachchunu" ezhutha vaazhththukkal!

    ReplyDelete
  45. சார்!
    இது புனைவாக இருந்தால் நல்ல புனைவு.
    உண்மையாக இருந்தால் மிகவும் கவலையாக இருக்கிறது. முழு உடற் பரிசோதனை மேற் கொண்டு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் பூரண குணம் அடைய விருப்பங்கள்.

    ReplyDelete
  46. Consult ENT specialist. Because frequent headaches for a person with hearing prob is different from the headache for a normal person.

    It means something different.

    ReplyDelete
  47. sir udamabai kavaninga, nalla throught medical check up allopathyla seythuut homopathyla consult panni marundhu saabiddunga indha sinus, allergy, thalaivazhi ellam poyidum. melum diabetica irrukura neenga saapidaaama vitta ippaudi thaane aagum. Namma oorila payapullaiga sarithaan ovara thannilyila mattai aayitaannu thitikitte povaanga. athaala unga aargokiyaththai paarunga anne; yeene ippudi 40la saaganumnu pesureenga ungalai inge eththanai perukku nabanaa antha mugan vaichirugaaru ippudi pesalaama neenga? viraivil kunamadaiya vendiyapadi

    ReplyDelete
  48. உங்களுக்கு ஒன்றும் ஆகாது. வெந்தகுமாரன்களும், அலி பாபாக்களும், கிழ கபோதிகளெல்லாம் நலமாக இருக்க உங்களை கைவிட மாட்டான் என் அப்பன் முருகன். நலம்பெற வாழ்த்தும்...

    ReplyDelete
  49. உடம்பை பார்த்துக்குங்கண்ணே...

    ReplyDelete
  50. டஸ்ட்ன்னால வர தலைவலின்னா அது மைக்ரெய்ன் வகை.. ஒற்றை தலைவலி..

    வெளியில போகும்போது சன்கிளாஸ் போட்டுகிட்டு போங்க..

    விரைவில் குணம்பெற வேண்டுகிறேன்..

    ReplyDelete
  51. Dear TT,
    Please consult a neuro surgeon,u can go to VHS Adayar and see Dr.Ravi Ramamurthy or Dr.Vasudevan or Dr.Sridhar.They are the best in their profession.Dont postpone on health matters.

    ReplyDelete
  52. என்னண்ணே.. இம்புட்டு நேரமா பதில் போடாம இருக்கீய?

    திரும்ப.. மட்டையாகிட்டீங்களா?

    என் ஆபீஸுலயும் வேலையில்லாத நேரத்துல, மண்டையை போட்டுடாதீங்க. அப்புறம் எனக்கு எட்டு மணி நேரம் என்ன பண்ணுறதுன்னே தெரியாது. :)

    டேக் கேர் அண்ணே!! இதெல்லாம் ஒரு மேட்டரா?

    வேணும்னா.. மன ‘சாந்தி’க்கு... குலேபகாவலில எதோ ஒரு பொறம்போக்கு.. ‘கலவித் தொழிற்சாலை’ன்னு ஒரு தொடர் எழுதுறானாம். அதை படிச்ச அதுல வர்ற படத்தை பாருங்க.

    முருகனும் கொஞ்சம் சந்தோசப்படுவார். :)

    ReplyDelete
  53. அண்ணே இப்ப எப்படியிருக்கு?

    ஓவரு
    சுமார்
    பரவாயில்லை

    இதில் எது ஒரு டிக் மார்க் மட்டும் பண்ணுங்க.

    ReplyDelete
  54. சரவணன்,

    உடனடியாக ப்ளட் ப்ரஷர், ஷுகர் செக் பண்ணுங்கள். நீங்கள் செய்ய நினைப்பது வெறும் symptomatic treatment மட்டுமே. அடிப்படைக் காரணம் என்னவென்று கண்டுபிடித்தே ஆகவேண்டும். Lab tests மிக அவசியம். ஜள்ப்பு, நீர்க்கோர்வை என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக்கொள்ளாதீர்கள்.

    பதிவெல்லாம் கிடக்கட்டும். உடம்பு மிக முக்கியம். நீங்கள் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  55. அண்ணே அடத்த தடவை டாக்டரிடம் போகும் போது நான் ஒரு பிர்பல பதிவர் என்று சொல்லுங்கள். அப்பதான் தலைவலிக்கு டாக்டர் சரியான மருந்து எழுதி தருவார்:-)

    ReplyDelete
  56. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
    என்ன ஒற்றுமை இந்தப் பதிவைப் படிக்கும் போது எனக்கும் இதே வியாதி.

    செலவில்லாமல் வைத்தியம் பெற்று விட்டேன்,உங்கட புண்ணியத்தில்.

    எனக்கு அம்மா பக்கத்தில் இருப்பதால்,நோய் பெரிதாய்ப் படுத்தவில்லை.ஆனால் அன்றாடக் காரியங்கள் தான்,பாதிக்கப்படுகிறது.

    விரைவில் சுகப்பட வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  57. டியர் உ.த

    Hope you are fine.

    // லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...


    உடனடியாக ப்ளட் ப்ரஷர், ஷுகர் செக் பண்ணுங்கள். நீங்கள் செய்ய நினைப்பது வெறும் symptomatic treatment மட்டுமே. அடிப்படைக் காரணம் என்னவென்று கண்டுபிடித்தே ஆகவேண்டும். Lab tests மிக அவசியம். ஜள்ப்பு, நீர்க்கோர்வை என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக்கொள்ளாதீர்கள்.

    பதிவெல்லாம் கிடக்கட்டும். உடம்பு மிக முக்கியம். நீங்கள் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.//

    நான் வழிமொழிகிறேன்

    ReplyDelete
  58. Please take care of your health. Once you are alright, you can post 3 in a day.

    ReplyDelete
  59. அண்ணே! ஓய்வு அவசியம், உடம்பை நல்ல படியாக பார்த்துக்கொள்ளுங்க...
    அன்புடன்,
    மதுமணி

    ReplyDelete
  60. உடம்பை பார்த்துக்குங்கண்ணே...

    ReplyDelete
  61. அன்புடன் நலம் விசாரித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

    வானம்பாடி வாசு அண்ணே சொன்னதுபோல ஆயுர்வேத மருந்து கடையில் தலைவலி மருந்து வாங்கித் தடவியதில் அதிசயமாக நல்ல முன்னேற்றம்.. கிட்டத்தட்ட இல்லாத நிலை.. அவ்வப்போது வந்து வந்து செல்கிறது.. பரவாயில்லை. வெகு சீக்கிரம் குணமாகிவிடும் என்று நம்புகிறேன்..

    நீங்களும் தேவையெனில் இந்த மருந்தினை வாங்கிப் பயன்படுத்துங்கள்..!

    மீண்டும் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  62. Dear Friend, If possible, you can watch videos in this site. Mr. Baskar clearly explained about our body and diseases, how to live without diseases. Videos: http://anatomictherapy.org/YoutubeTreat.html
    Main site: http://anatomictherapy.org

    ReplyDelete