Pages

Friday, February 04, 2011

ஸ்பெக்ட்ரம் ராசா கைது - நவீன திருதராஷ்டிரனின் விடாத பாசம்..!

04-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு பக்கம் உச்சநீதிமன்றத்தின் சூடு நிறைந்த வார்த்தைகள்.. மறுபக்கம் எதிர்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரை கலாட்டா காலனியாக்கத் துடிக்கும் எதிர்க்கட்சிகள்.. இவைகள் இரண்டில் தப்பித்து கடலில் குதித்தாலும் எதிரில் அலைபாய்ந்து வரும் தேர்தல் என்னும் சுறா.. இந்தப் பக்கம் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வேண்டி பாராளுமன்றத்தைக் கூட்டினாலும் பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாத நிலைமை..

என்னதான் செய்வார் அடிமை மன்னமோகனசிங்..? அவருடைய ஆளுமையின் கீழ் வரும் சி.பி.ஐ.யை உச்சநீதிமன்றம் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தகுந்தபடி வாதாட வழக்கறிஞர்களுக்கு வேண்டிய உண்மைத் தகவல்கள் கிடைக்கவில்லை. பாவம் அவர்களென்ன செய்வார்கள்..? வழக்குத் தொடுத்திருப்பவர்களே முன் காலங்களில் அரசு வழக்கறிஞர்களாக இருந்தவர்கள்தான்.. அவர்களும் எத்தனை நாட்கள்தான் மெளனமாக இருப்பார்கள்?  வருங்கால சட்டவுலகம் இந்த மாமேதைகளின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியை எழுதுவதற்குள் தாங்கள் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்தப் பக்கம் தாத்தா தனது சொக்கத் தங்கம் ராசாவின் இன்னொரு முகத்தைக் கண்ட அதிர்ச்சியைவிட தனது வீட்டுக்குள்ளேயே ஒரு கொள்ளைக் கும்பல் இருப்பதைப் பார்த்து நிஜமாகவே அதிர்ந்து போயிருக்கிறார். 1980 தேர்தலில் கிடைத்த தோல்வியைவிடவும் தற்போது தனது துணைவியான சி.ஐ.டி. காலனியம்மாவுக்கும், கவி வாரிசுக்கும் ஸ்பெக்ட்ரமில் இருக்கும் பங்குதான் அவரை ரொம்பவே நோகடித்திருக்கும்..


இவரிடம் சொல்லிவிட்டுத்தான் இந்த ஊழலை இந்தக் கூட்டணி தொடங்கியிருக்கும் என்பதை நான் நம்பவில்லை. தாத்தாவுக்கு நிச்சயமாக இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் துணைவியாரின் ஏற்பாட்டில் இது நடந்திருக்க நிச்சயமாக வாய்ப்புண்டு. அந்த வகையில் தாத்தா இப்போது நடந்த தவறுகளை மூடி மறைக்கும் கவுரவ குடும்பத் தலைவராகவும், தனது வாரிசுகளைக் காப்பாற்ற தனது தள்ளாமையையும், தனது இத்தனை வருட கால உழைப்பையும் தராசுத் தட்டில் வைக்கும் குருட்டு திருதராஷ்டிரனாகவும் தென்படுகிறார்.

ஏற்கெனவே இந்த வழக்கை நேரடியாகத் தாங்களே நடத்தி வருகின்ற உச்சநீதிமன்றம் வரும் 10-ம் தேதியன்று என்னென்ன கேள்விகளைக் கேட்டு குடைச்சலைக் கொடுக்கப் போகிறதோ என்றெண்ணி கலக்கத்தில் இருக்கும் மத்திய அரசு, எப்பாடுபட்டாவது இதிலிருந்து சிறிதளாவாவது தப்பித்துக் கொள்ள எண்ணியுள்ளது. இதன் விளைவே ஸ்பெக்ட்ரம் நாயகன் ராசாவின் கைது..

மீனவர் பிரச்சினைக்காக பிரதமரிடம் பேசச் சென்றிருப்பதாக தமிழக மீனவர்களிடம் எதிர்பார்ப்பு.. மக்கள் பிரச்சினைகளைப் பேச சென்றிருப்பதாக அப்பாவி தி.மு.க. தொண்டர்களின் நம்பிக்கை.. ஆனால் நடந்ததோ வேறு..

காங்கிரஸுடனான தொகுதி உடன்பாடு இன்னமும் முடியாதபட்சத்தில் தனது தேர்தல் பிரச்சாரக் களத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்கிற மகா குழப்பத்தில் இருக்கிறது தி.மு.க. எதிர்க்கட்சிகளோ ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காகவே ஸ்பெஷல் மேடைகள் போடத் தயாராகிவிட்டன. போதாக்குறைக்கு தமிழர் அமைப்புகள் ஈழப் பிரச்சினையில் மாநில, மத்திய அரசுகள் செய்த துரோகத்தை மேலும் பட்டியலிடத் தயாராகவுள்ளன. இதற்குக் காரணமாகவே ஆளும்கட்சியை எதிர்க்க அனைத்துத் தரப்பினரும் தயார் நிலையில் உள்ளனர்.

போதாக்குறைக்கு தற்போது கழுத்தைச் சுற்றியிருக்கும் பாம்பாக தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினை. எத்தனை பிரச்சினைகளைத்தான் தாத்தா தாங்குவார். அவருக்கோ வயது 85. ஆனாலும் மாநிலத்தில் ஒரு பிரச்சினைவிடாமல் அனைத்தையும் செய்து முடிக்கிறாராம்.. ஆனாலும் நீரா ராடியா பிரச்சினையில் தனது குடும்ப உறவுகள் சீரழிந்த கதைக்கு மட்டும் இன்னமும் பதில் சொல்லாமல் டபாய்க்கிறார்.

டெல்லியில் “மீனவர் பிரச்சினைக்காக பதவியை ராஜினாமா செய்வீர்களா?” என்ற நிருபரின் கேள்விக்கு காது கேட்காமல் மறுபடியும் “என்ன..” என்று கேட்டுவிட்டு பதில் சொல்ல நிற்கிறார். அதற்குள்ளாக உடன் இருக்கும் அல்லக்கைகள் அவரைத் தள்ளிக் கொண்டு போகிறார்கள். இப்போது இவர் முதல்வரா அல்லது வீல்சேரைத் தள்ளிக் கொண்டு செல்பவர்கள் முதல்வர்களா..? யாரிடம் போய் கேட்பது..? எப்படியோ தாத்தாவைத் தள்ளிக் கொண்டு வந்துதான் கூட்டணி பேச வேண்டிய கட்டாயம் தி.மு.க.வுக்கு.

இரு தரப்பிலும் குள்ளநரித்தனம். எதை வைத்து சீட்டுக்களை அதிகமாகக் கேட்கலாம் என்பது காங்கிரஸின் எண்ணம். எதை வைத்து சீட்டுக்களைக் குறைவாகக் கொடுக்கலாம் என்பது தி.மு.க.வின் எண்ணம். இது காலை வாரி விடும் விளையாட்டுதான். இந்த விளையாட்டில் ஒரு பகுதியாகத்தான் தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழகத்தின் தலை சிறந்த தலித் இளைஞரும், தாத்தாவின் மனம் கவர்ந்த தம்பியுமான ஸ்பெக்ட்ரம் ராசாவின் கைது..

ஏற்கெனவே 3 முறை சி.பி.ஐ. அழைத்தபோதெல்லாம் மரியாதையாக நேரில் சென்று ஆஜராகி தனது விளக்கங்களைக் கொடுத்து வந்திருக்கும் ராசாவை நான்காவது முறையாக, அதுவும் அவரது தானைத் தலைவர் டெல்லிக்கு வந்திருக்கும் அன்றைக்கே விசாரணைக்கு அழைத்த தைரியத்தைப் பார்த்து நிச்சயம் கொஞ்சம் பயம் வந்திருக்கும்.

ஆனாலும் எத்தனையோ களங்களையும், துரோகங்களையும், எதிர்ப்புகளையும் சமாளித்துவிட்ட தாத்தா இந்த முறை, இந்த வயதான காலத்தில் இந்த மாதிரி கர்மத்தையெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறதே என்பதுதான் என்னுடைய வருத்தம்.. இப்போது அவரது வயதும் சேர்ந்து அவருக்கொரு பக்குவத்தைக் கொடுத்திருக்கிறது.

முன்பு நாம் தவறு செய்யவில்லை. துணிந்து நின்றோம். ஆனால் இப்போதோ அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறோம். எதிர்த்து நின்றால் அப்படியே நின்று அசிங்கப்பட வேண்டியதுதான். ஆகவே ஒத்துப் போய் கிடைக்கின்ற கோவணத்தையாவது வாங்கிக் கட்டிக் கொண்டு மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார் தாத்தா. இதைத்தான் அவர் டெல்லியில் காட்டியிருக்கும் அசாத்திய பொறுமை வெளிக்காட்டுகிறது.

ஜன்பத் அம்மாவுக்கு காய்ச்சல் என்றாலும், 86 வயதான இந்த அரசியல் சாணக்கியரை 8 மணி நேரம் காக்க வைத்துவிட்டு சந்தித்த தைரியம் இந்தியாவிலேயே சோனியாஜிக்கு மட்டுமே உண்டு. வாழ்க அந்தத் தாய்..

தேர்தலில் கூட்டு. 80 சீட்டுக்குக் குறைவில்லாமல். ஆட்சியில் பங்கு, அமைச்சர்கள் குறிப்பாக துணை முதல்வர் பதவி - இப்படியெல்லாம் அடுத்து பட்டத்துக்கு வரவிருக்கும் இளவரசர், அரசியார் சார்பாக கேட்டிருப்பதாக டெல்லி வட்டாரத் தகவல்கள்.. கேட்டிருந்தாலும் தப்பே இல்லை..

மத்திய அமைச்சரவையில் இடத்தைக் கொடுத்து ஆயிரம் கோடிகளுக்கு மேல் குடும்பத்தினருக்காக சம்பாதிக்க வாய்ப்பைக் கொடுத்திருக்கும் காங்கிரஸ் அரசு இதைக் கேட்டிருப்பதால் தவறேயில்லை..

ஆனால் இதோடு கூடவே ராசா மேட்டரும் பேசப்பட்டிருக்கலாம் என்றே நான் நம்புகிறேன். எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வேண்டியும், உச்சநீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமைக்காகவும் ராசா கைது அவசியம் என்பது தாத்தாவுக்கு குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். இதையே மன்னமோகனசிங்கும் குறிப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறேன். தாத்தாவிடம் முன் கூட்டியே சொல்லாமல் இந்தக் கைது நடந்திருக்க வாய்ப்பே இல்லை..


இப்போதைக்கு அரெஸ்ட்டுதான்.. 5 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்கிறோம். பின்பு கோர்ட்டில் ஒப்படைக்கும்போது ஜாமீன் போட்டு நீங்கள் மீட்டுக் கொள்ளுங்கள். ஆட்சேபணை தெரிவிக்க மாட்டோம். நிச்சயமாக திஹார் ஜெயிலுக்குள் தள்ள மாட்டோம் என்று சமாதானம் சொல்லப்பட்டிருக்கலாம்..

எனக்கென்னவோ வரும் திங்கட்கிழமையே ராசா ஜாமீனில் வெளியே வரலாம் என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் ராசாவைக் கொண்டு போய் திஹார் ஜெயிலில் வைத்துவிட்டு பின்பு இரண்டு மாதங்கள் கழித்து ஜாமீனில் வரும்வேளையில் பெரம்பலூர், நீலகிரி மாவட்டங்களில் தேர்தல் பணியினைச் சமாளிக்கவும், பதுக்கி வைத்திருப்பதை எடுத்துக் கொடுத்து ஓட்டுக்குக் காசாக்கும் வேலையைச் செய்யவும் வேறு ஆள் தி.மு.க.வுக்கு நிச்சயமாக இருக்காது. காங்கிரஸுக்கும் இது சம்மதமாகத்தான் இருக்கும்..

இரு தரப்புமே பரஸ்பர ஒப்பந்தத்தின்பேரில் இரண்டு கட்சிகளின் உறவுகளுமே இதனால் சீர் குலையாது என்று சொல்லியிருப்பதன் மூலமும் இதனை உணர முடிகிறது.

சென்ற மாதம்தான் தொலைத்தொடர்புத் துறையின் புதிய மந்திரியாகப் பொறுப்பேற்ற கபில்சிபில் ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இவர் சொன்னதையே தாத்தாவும், அவர்தம் கட்சியினரும் மாறி மாறி சொல்லி ஒரு வாரத்திற்கு சித்ரஹார் கொண்டாடினார்கள்.

ஆனால் இப்போது சி.பி.ஐ. ராசாவால் இந்திய அரசுக்கு 22000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளது. இப்போது கபில்சிபல் என்ன சொல்வார்..? செய்வார்..?

சி.பி.ஐ. அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரவையில் கபிலும் ஒரு அமைச்சர்தான். சி.பி.ஐ.க்கு பொறுப்பு வகிக்கும் பிரதமரிடம் இது பற்றி கபில்சிபல் பேசுவாரா..? அல்லது வினா எழுப்புவாரா..? சி.பி.ஐ. தவறு இழைத்திருக்கிறது என்று வாதாடுவாரா..?

இவராவது பரவாயில்லை. தாத்தாவும் இன்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் இதையேதான் திருப்பிச் சொல்கிறார். ராசா கைது தவறு. அவர் மீது வழக்குத் தொடர்ந்து அது கோர்ட்டில் விசாரணை நடைபெற்று அவர் குற்றவாளி என்று தீர்ப்பில் நிரூபணமானால் அப்போது ராசா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று திருவாய் மலர்ந்துள்ளார். இன்றைய நிலைமையில் இதைத் தவிர இந்த நவீன திருதராஷ்டிரனால் வேறென்ன சொல்ல முடியும்..?

ராசா கைது சட்டவிரோதம் என்றால் தனது உடன்பிறப்புக்காக இந்நேரம் கூட்டணியைவிட்டு விலகியிருக்க வேண்டாமா..? ஏன் இப்போது மட்டும் தொங்கிக் கொண்டே இருக்கிறீர்கள்..? ராசாவை சட்டவிரோதமாக பிரதமரின் கீழ் இயங்கும் சி.பி.ஐ. கைது செய்திருப்பதைக் கண்டித்து பிரதமரின் கொடும்பாவியை எரிக்கலாமே..? அண்ணா சிலை முன்னால் பிரதமரின் உருவப்படத்தை செருப்பால் அடித்து உங்களது கோபத்தைக் காட்டலாமே..? உடன்பிறப்புக்களால் இது முடியுமா..? முடியாது..

இப்போதைக்கு இவர்களால் இவ்வளவுக்குத்தான் வாயைத் திறக்க முடியும். இந்த ஒன்றை வைத்து காங்கிரஸ் தனது சீட் பேரத்தில் உறுதியாய் இருக்கிறது. கூட்டணி முறியக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தாத்தா, காங்கிரஸுக்கு நிச்சயம் சலாம் போட்டுத்தான் ஆக வேண்டும். தாத்தா முறித்துக் கொண்டால், துணைவியும், அருமைப் புதல்வியும் மாட்டிக் கொள்வார்கள்.. அவர்கள் இல்லையெனில் தாத்தாவுக்கு வாழ்க்கையே இல்லை..

ஸோ.. இதுவும் ஒரு வகையில் நாட்டு மக்களை ஏமாற்ற நடக்கும் நாடகமே.. ராசா திஹார் ஜெயிலுக்குள்ளேயே கொண்டு போய் அடைக்கப்பட்டாலும், மத்தியில் காங்கிரஸ் அரசு இருக்கின்றவரையில் இந்த வழக்கு சுடுகாட்டிற்குத்தான் கொண்டு போகப்படும்.

தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கில், சாட்சிகளெல்லாம் பல்டியடித்தபோது ஒரு சாட்சியைக்கூட பிறழ் சாட்சியாக அறிவிக்க சி.பி.ஐ. வக்கீலுக்குத் தோணவில்லையே என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கின்றபோது இந்த நாட்டில் நீதி, நேர்மை, நாணயம், அரசியல் சட்டம் இதுவெல்லாம் வெறும் எழுத்துக்களில் மட்டும்தான் கூடு கட்டி வாழ்கிறது என்பது தெரிகிறது.

கூட்டணி தர்மத்துக்காக தினகரன் வழக்கையே ஊதி முடித்து கருமாதியை கச்சிதமாகச் செய்த சி.பி.ஐ. இந்த வழக்கையும் இதே போன்றுதான் செய்யப் போகிறது. “இன்னும் 2 மாதங்களுக்கள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யப் போகிறோம்” என்று சிபிஐ சொன்னாலும், அது தாக்கல் செய்யவிருக்கும் குற்றப்பத்திரிகையை எதிர்த்து வாதாட, தினத்தந்தியில் மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஊழலைப் படித்த சாதாரணமானவனே போதுமாகத்தான் இருப்பான்.

ராசா ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்காக எத்தனை தயார் நிலையில் நிற்கிறார் என்பதையும், அவரை அப்பதவிக்குக் கொண்டு வருவதற்கு யார், யாரெல்லாம் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் உலகத்தின் நம்பர் ஒன் பி.ஆர்.ஓ. நீரா ராடியாவின் டேப்புகள் நமக்குச் சொல்கின்றன.

ஆனால் டேப்புகள் சம்பந்தமாக நீரா ராடியாவை மட்டுமே இதுவரையில் சி.பி.ஐ. விசாரித்திருக்கிறது. வேறு எவரையும் அது நெருங்கவில்லை.. கனிமொழி, ராஜாத்தியம்மாள், ரத்தன் டாட்டா, முகமூடி பத்திரிகையாளர்கள், அரசியல்வியாதிகள் என்று வேறு யார் மீதும் சி.பி.ஐ. கை வைக்கவில்லை. பின்பு ராசாவின் உள் நோக்கமான திட்டமிட்ட இந்தச் சதியை எப்படி கோர்ட்டில் இவர்கள் நிரூபிக்கப் போகிறார்கள்..?

கனிமொழி-நீரா ராடியா டேப்பில் இருக்கின்ற பேச்சுக்களே ராசாவின் ஸ்பெக்ட்ரம் மீதான ஆர்வத்தையும், தொலைத்தொடர்புத் துறையில் அவரை அமர்த்த வேண்டி இந்திய வர்த்தக உலகம் முனைப்புடன் செயல்படுவதும் தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டுமே..? நீரா ராடியாவின் பேச்சுக்கள் அனைத்தையும் கடைசியில் பி.ஆர்.ஓ. தனது பிராண்ட்டடை முன்னிலைப்படுத்த நடத்திய பிஸினஸ் பேச்சுக்களாக்கி சி.பி.ஐ. வாதாடப் போகிறது. இதனால் பயனடையப் போவது ராசாவைத் தவிர வேறு யாராக இருக்கும்..?

இப்படி எத்தனை ஓட்டைகளுடன் அது நீதிமன்றப் படியேறப் போகிறதோ தெரியவில்லை. என்னதான் உச்சநீதிமன்றம் வழக்கை நடத்தினாலும் எங்களால் இவ்வளவுதான் ஆதாரங்களைத் திரட்ட முடிந்தது என்று சொல்லி சி.பி.ஐ. அழுது புலம்பினால் அவர்களென்ன செய்வார்கள்..? இருக்கின்ற ஆதாரங்களை வைத்துத்தானே தண்டனையளிக்க முடியும்..?

திருப்தியில்லையெனில் நீதிபதிகளாக களத்தில் இறங்கி விசாரிக்கப் போகிறார்கள். ஆனானப்பட்ட போபர்ஸ் வழக்கையே ஊதி மூடலையா இந்த மூதேவிகள்..? இதுவெல்லாம் ச்சும்மா ஒரு கொசுதான்.. பார்த்துக் கொண்டேயிருங்கள்..

ஏற்கெனவே 1 லட்சத்து 70 கோடி ஊழலை, 22000 கோடிக்கு இறக்கிக் காட்டிவிட்டார்கள். போதாக்குறைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் என்கிற வார்த்தையைக் காட்டாமல் ஸ்பெக்ட்ரம் முறைகேடு என்று சொல்லி ஆளும் கட்சியின் பெரிய ஜால்ரா டிவி தனது செல்வாக்கை வைத்து மக்களிடம் திணித்து வருகிறது. ஆனால் ஆளும் கட்சியின் டிவியோ, இது பற்றியே மூச்சுவிடாமல் தனது ஜனநாயக தனித்தன்மையை வெளிக்காட்டி வருகிறது.

ராசா கைது என்று டிவிக்களில் செய்திகள் ஓடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தாத்தா இலவச டிவிக்களின் அடுத்தக் கட்ட விற்பனைப் புள்ளி ஒப்பந்தத்தைப் பிரிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இது பற்றிய செய்தியே ஆளும் கட்சி டிவியில் அமோகமாக ஓடிக் கொண்டிருந்தது.

ஆக மொத்தம், நமது மக்களின் பிச்சைக்காரத்தனத்தை அப்படியே தங்களுக்கான பலமாக எடுத்துக் கொள்ளும் இந்த திருட்டு அரசியல்வியாதிகளுக்கு ஊழலை மறைப்பதென்பதெல்லாம் மிகவும் சாதாரண விஷயம்..

இந்த மாதம் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகளையும், தமிழக அரசின் சினிமா விருதுகளையும், கலைமாமணி விருதுகளையும் வழங்கி நான்கு நாட்கள் தங்களது தொலைக்காட்சியில் வெளியிட்டு நமது மக்களுக்கு ஷோ காட்டப் போகிறார்கள். மறந்துவிடுவார்கள் மக்கள். அடுத்த மாதம் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பரிசு காத்திருக்கிறது. கலைஞர் நகரில் கலைஞர் ஸ்டூடியோ திறக்கும் விழா காத்திருக்கிறது.. எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் மக்களை மதிமயங்கச் செய்துவிடலாம்..

இதற்கு நடுவில் நம்ம தலித் ராசா, திஹாருக்குள் போய் வந்தால் என்ன? திஹாருக்குள் போகாமல் திரும்பினால்தான் என்ன..? அவர்கள் வாயில் போட்ட காசு மட்டும் திரும்ப வர வாய்ப்பே இல்லை..

வாழ்க ஜனநாயகம்..

வாழ்க பாரதம்..

வாழிய தலித் என்னும் கேடயம்..!

59 comments:

  1. ராசா கைதைக் கண்டித்து பஸ்ஸை உடைக்கறாங்க..இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல?

    ReplyDelete
  2. */அவர்கள் வாயில் போட்ட காசு மட்டும் திரும்ப வர வாய்ப்பே இல்லை/*

    ஏன் வயித்தெரிச்சலை கிளப்பிறீங்க.

    சவுக்கின் பழைய பதிவொன்று இன்னிக்கித்தான் வாசிச்சேன். உங்களுக்கு நன்றி சொல்லி எழுதியிருக்கிறார்.
    அப்ப நீங்களும் நம்ம ஆளா? இனி அடிக்கடி வந்திட்டு போறன்.

    Kaali.Krishna

    ReplyDelete
  3. தேர்தல் முடியும் வரைக்கும் தினந்தோறும் ஒன்று என்று போட்டுத் தாக்க திட்டம் வச்சுருக்கீங்களோ?

    ReplyDelete
  4. அண்ணே உங்களுக்கு என் சல்யூட் ...

    ReplyDelete
  5. நல்ல பதிவு . . . நன்றி . . .

    ReplyDelete
  6. [[[செங்கோவி said...
    ராசா கைதைக் கண்டித்து பஸ்ஸை உடைக்கறாங்க. இந்தக் கொடுமையை என்னன்னு சொல்ல?]]]

    உடன்பிறப்புகள், கழகத்தின் கண்மணிகள் இதனைச் செய்யாமல் இருந்தால்தான் அதிசயம்.. செய்ததில் ஆச்சரியமில்லை..!

    ReplyDelete
  7. [[[தம்பி கிருஷ்ணா said...

    */அவர்கள் வாயில் போட்ட காசு மட்டும் திரும்ப வர வாய்ப்பே இல்லை/*

    ஏன் வயித்தெரிச்சலை கிளப்பிறீங்க.]]]

    எனக்கு மட்டும் இல்லியா..?

    [[[சவுக்கின் பழைய பதிவொன்று இன்னிக்கித்தான் வாசிச்சேன். உங்களுக்கு நன்றி சொல்லி எழுதியிருக்கிறார். அப்ப நீங்களும் நம்ம ஆளா? இனி அடிக்கடி வந்திட்டு போறன்.
    Kaali.Krishna]]]

    நன்றி.. அடிக்கடி வாங்க..!

    ReplyDelete
  8. [[[Bala said...

    well analysed and written.
    thanks
    bala]]]

    நன்றி பாலா..!

    ReplyDelete
  9. [[[ஜோதிஜி said...
    தேர்தல் முடியும் வரைக்கும் தினந்தோறும் ஒன்று என்று போட்டுத் தாக்க திட்டம் வச்சுருக்கீங்களோ?]]]

    வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே அவர்கள்தான்..! அப்புறம் நாம எப்படி எழுதாம இருக்கிறது..?

    ReplyDelete
  10. [[[கே.ஆர்.பி.செந்தில் said...

    அண்ணே உங்களுக்கு என் சல்யூட்.]]]

    எனது பதில் சல்யூட் தம்பிக்கு உரித்தாகட்டும்..!

    ReplyDelete
  11. [[[udhavi iyakkam said...

    நல்ல பதிவு. நன்றி.]]]

    மிக்க நன்றி..!

    ReplyDelete
  12. இது தான் நாளைய செய்தி:- ......................
    ராஜாவுக்கு திடீர் நெஞ்சு வலி, ஆஸ்பத்திரியில் அனுமதி.

    ReplyDelete
  13. //
    ஸோ.. இதுவும் ஒரு வகையில் நாட்டு மக்களை ஏமாற்ற நடக்கும் நாடகமே.. ராசா திஹார் ஜெயிலுக்குள்ளேயே கொண்டு போய் அடைக்கப்பட்டாலும், மத்தியில் காங்கிரஸ் அரசு இருக்கின்றவரையில் இந்த வழக்கு சுடுகாட்டிற்குத்தான் கொண்டு போகப்படும்.//

    துக்ளக் நடிகர் "சோ" தானே?

    ReplyDelete
  14. மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரையில் ராசா கைது செய்யப்பட்டதாலேயே அவர் குற்றவாளி என்று சொல்லி விடமுடியாது என்றும்,ராசா செய்த ஒரே தவறு ஏழைகளுக்கும் கைபேசி அன்பளித்தார் என்றும் இதுவே தி.மு.கவின் அரசியல் தேசியகீதமாகவும் பாடப்பட்டு ஓட்டுக்களை அள்ளி மக்களுக்கு மீண்டும் ஒரு முறை நாமம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    இருந்தாலும் புத்தி உள்ளவன் யோசிக்க கடவன் என்று வடநாட்டுப் பத்திரிகைகள் உண்மைகளை வெளியே கொண்டு வரவே செய்கின்றன.

    சமீபத்து வெளியீடு:மும்பையைச் சார்ந்த DB Reality Group கருணாநிதியின் குடும்பத்தவர்கள் பங்குதாரர்களான க்லைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் பண மாற்றம் செய்திருக்கிறது.

    இந்த DB Reality Group வேறு யாருமல்ல.2008ல் 2ஜியில் லைசென்ஸ் பெற்று அலைவரிசையின் 45% துபாயைச் சார்ந்த Etisalat நிறுவனத்திற்கு 2009ல் அதிக விலைக்கு விற்று ஆட்டையப்போட்ட நிறுவனம்.

    இணையவாதிகள் சொன்னாலும்,பார்த்தாலும்,கேட்டாலும்
    இதுவெல்லாம் தமிழக மக்களைப் போய்ச்சேராது,அதனால் எங்களுக்கு தேர்தலில் எந்த பாதிப்புமில்லையென்று தி.மு.கவில் ஒருவர் அறிக்கை விடுகிறார். பார்ப்போம் மக்களின் தீர்ப்பை.

    ReplyDelete
  15. நல்லாத் தான் பெயர் சொல்லியிருக்கீங்க.,, குருட்டு திருதராஷ்டிரன்னு, இனிமேல்தான் துரியோதனாதியர்களா?..

    ReplyDelete
  16. இதுக்கெல்லாம் ஒரே வழி, "அப்பழுக்கற்ற அரசு ஊழியர்"ங்கிற மாதிரி "தான் தப்பே செய்யலைனு" யாரையாவது விட்டு ஒரு சர்டிபிகேட் வாங்கிக்கொள்ளலாம்...

    ReplyDelete
  17. >>> இன்று தனிக்காட்டு ராஜா படம் பாக்க போறேன்.

    ReplyDelete
  18. ராசா கைதுக்காக பஸ்சை உடைக்கும் கும்பலுக்கு ஒன்று சொல்லுகின்றோன், உன் காசு என் காசு என்று நம்முடைய பணதையும் கொள்ளை அடித்து இருகின்றர்கள். அவர்களை கைது செய்தது தவறு என்று தகராறு பன்னுகின்றையே, உன் வீட்டில் யாராவது கொள்ளை அடித்தல் இப்படித்தான் திருடனை பிடிக்க வேண்டாம் என்று சொல்லுவாய? அப்படியே கைது செய்தாலும் என்ன ஆயுள தண்டனையா கொடுகபோகின்றர்கள், நாளைக்கோ நாளை மறுநாளோ ஜெயிலில் எதோ கவுண்ட மணி செந்தில் காமடி பார்த்து விட்டு வருவது போல சிரித்து கொண்டு வந்துவிடபோகின்றார், இத்தனை கோடி கொள்ளை அடித்து இருகின்றர்களே உனக்கு என்ன பங்கா கொடுக்க போகின்றார்கள். அவர்கள் எத்தனை கோடி அடித்தாலும் உனக்கு வழக்கம் போல் குவடரும் கோழி பிரியாணியும் தான் இவர் வெறும் அம்புதன் எய்தவர் விஞ்ஞான முறையில் ஊழல் செய்த ஊழல் விஞ்ஞானி மஞ்சள் துண்டு. கட்சிஇல் சேரும்போது முளையை கழட்டி வைத்து

    ReplyDelete
  19. If Jaya was in Raja's position as Ex Telecom Min..Jaya might tell to CBI & Court that the Signature in Spectrum allocation documents is NOT her sign.
    Also how to drag a court case for 15 to 20 years without appearing in court.. Raja should learn lot from Jaya..

    ReplyDelete
  20. சமீபத்து வெளியீடு:மும்பையைச் சார்ந்த DB Reality Group கருணாநிதியின் குடும்பத்தவர்கள் பங்குதாரர்களான க்லைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் பண மாற்றம் செய்திருக்கிறது.

    இந்த DB Reality Group வேறு யாருமல்ல.2008ல் 2ஜியில் லைசென்ஸ் பெற்று அலைவரிசையின் 45% துபாயைச் சார்ந்த Etisalat நிறுவனத்திற்கு 2009ல் அதிக விலைக்கு விற்று ஆட்டையப்போட்ட நிறுவனம்.

    ReplyDelete
  21. //தாத்தாவுக்கு நிச்சயமாக இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் துணைவியாரின் ஏற்பாட்டில் இது நடந்திருக்க நிச்சயமாக வாய்ப்புண்டு.//

    100% I agree to DISAGREE this statement. Nothing will move without his approval. Raja is too small to even think such a scandal. M.K might NOT have the velocity of it but KNOWS the scam. When they had rift, Maran (SUN) screaming about SPECTRAM for 24 hours a day and you mean to say MK might be blind and deaf then. If he did not know the scam, he would NOT have got the same seat again to Raja.

    ReplyDelete
  22. கடேசியிலே தாத்தாவுக்கு தெரிஞ்சு தான் இந்த ஊழல நடந்த்ததுன்னு சொல்லிட்டிங்களே அண்ணே.. தாத்தாவும் தானே இதல partner. அவரோட துணைவின்னா அவருதாநேன்னா...

    ReplyDelete
  23. [[[Indian Share Market said...

    இதுதான் நாளைய செய்தி:-

    ......................

    ராஜாவுக்கு திடீர் நெஞ்சு வலி, ஆஸ்பத்திரியில் அனுமதி.]]]

    இது திங்கள்கிழமையன்று நடக்க வாய்ப்புண்டு, ஜாமீன் கிடைக்காவிட்டால்..!

    ReplyDelete
  24. [[[எண்ணத்துப்பூச்சி said...

    //ஸோ.. இதுவும் ஒரு வகையில் நாட்டு மக்களை ஏமாற்ற நடக்கும் நாடகமே.. ராசா திஹார் ஜெயிலுக்குள்ளேயே கொண்டு போய் அடைக்கப்பட்டாலும், மத்தியில் காங்கிரஸ் அரசு இருக்கின்றவரையில் இந்த வழக்கு சுடுகாட்டிற்குத்தான் கொண்டு போகப்படும்.//

    துக்ளக் நடிகர் "சோ" தானே?]]]

    சோ ஸார் சொல்றாருன்னுகூட வைச்சுக்குங்க..! நோ பிராப்ளம்..!

    ReplyDelete
  25. [[[ராஜ நடராஜன் said...

    மக்கள் முட்டாள்களாக இருக்கும்வரையில் ராசா கைது செய்யப்பட்டதாலேயே அவர் குற்றவாளி என்று சொல்லி விடமுடியாது என்றும், ராசா செய்த ஒரே தவறு ஏழைகளுக்கும் கைபேசி அன்பளித்தார் என்றும் இதுவே தி.மு.கவின் அரசியல் தேசியகீதமாகவும் பாடப்பட்டு ஓட்டுக்களை அள்ளி மக்களுக்கு மீண்டும் ஒரு முறை நாமம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.]]]

    இதற்காக என்றில்லை.. அரசியல்வியாதிகளின் ஊழல்கள் எல்லாம் சகஜம்தானே என்பதுதான் தற்போது மக்களின் மனோபாவம்.. இதனை கிள்ளி எறிய வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. மாறாக.. என்னைக் கொஞ்சம் கவனி. நான் உன்னைக் கவனிக்கிறேன் என்று காசு வாங்கிவிட்டு ஓட்டைக் குத்துகிறார்களே என்ற வருத்தம்தான் மிஞ்சியிருக்கிறது.

    ReplyDelete
  26. ராஜ நடராஜன் said...

    சமீபத்து வெளியீடு:மும்பையைச் சார்ந்த DB Reality Group கருணாநிதியின் குடும்பத்தவர்கள் பங்குதாரர்களான க்லைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் பண மாற்றம் செய்திருக்கிறது. இந்த DB Reality Group வேறு யாருமல்ல.2008ல் 2ஜியில் லைசென்ஸ் பெற்று அலைவரிசையின் 45% துபாயைச் சார்ந்த Etisalat நிறுவனத்திற்கு 2009ல் அதிக விலைக்கு விற்று ஆட்டையப் போட்ட நிறுவனம்.
    இணையவாதிகள் சொன்னாலும், பார்த்தாலும், கேட்டாலும்
    இதுவெல்லாம் தமிழக மக்களைப் போய்ச் சேராது. அதனால் எங்களுக்கு தேர்தலில் எந்த பாதிப்புமில்லையென்று தி.மு.கவில் ஒருவர் அறிக்கை விடுகிறார். பார்ப்போம் மக்களின் தீர்ப்பை.]]]

    இதையும் இல்லை என்று மறுக்கிறார்கள். ஆனால் எதற்காக கலைஞர் டிவியில் இந்த நிறுவனம் ஷேர்களை வாங்க முன் வருகிறது என்பதுதான் சந்தேகக் கேள்வி..! சுற்றி வளைத்துப் பார்த்தால் ஊழல்வியாதிகள் கலைஞரின் குடும்பத்தினர்தான் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
  27. [[[middleclassmadhavi said...
    நல்லாத்தான் பெயர் சொல்லியிருக்கீங்க. குருட்டு திருதராஷ்டிரன்னு, இனிமேல்தான் துரியோதனாதியர்களா?..]]]

    ஆமாம்.. வேறென்ன சொல்வது..? பாசம் தேவைதான். ஆனால் இந்த அளவுக்கா..?

    ReplyDelete
  28. [[[சீனு said...
    இதுக்கெல்லாம் ஒரே வழி, "அப்பழுக்கற்ற அரசு ஊழியர்"ங்கிற மாதிரி "தான் தப்பே செய்யலைனு" யாரையாவது விட்டு ஒரு சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளலாம்.]]]

    அதுதான் சி.பி.ஐ. தரப் போகுதே..?

    ReplyDelete
  29. [[[! சிவகுமார் ! said...
    >>> இன்று தனிக்காட்டு ராஜா படம் பாக்க போறேன்.]]]

    பாருங்க.. பாருங்க.. அவசியம் பாருங்க..!

    ReplyDelete
  30. [[[my blog said...

    ராசா கைதுக்காக பஸ்சை உடைக்கும் கும்பலுக்கு ஒன்று சொல்லுகின்றோன், உன் காசு என் காசு என்று நம்முடைய பணதையும் கொள்ளை அடித்து இருகின்றர்கள். அவர்களை கைது செய்தது தவறு என்று தகராறு பன்னுகின்றையே, உன் வீட்டில் யாராவது கொள்ளை அடித்தல் இப்படித்தான் திருடனை பிடிக்க வேண்டாம் என்று சொல்லுவாய? அப்படியே கைது செய்தாலும் என்ன ஆயுள தண்டனையா கொடுகபோகின்றர்கள், நாளைக்கோ நாளை மறுநாளோ ஜெயிலில் எதோ கவுண்ட மணி செந்தில் காமடி பார்த்து விட்டு வருவது போல சிரித்து கொண்டு வந்துவிடபோகின்றார், இத்தனை கோடி கொள்ளை அடித்து இருகின்றர்களே உனக்கு என்ன பங்கா கொடுக்க போகின்றார்கள். அவர்கள் எத்தனை கோடி அடித்தாலும் உனக்கு வழக்கம் போல் குவடரும் கோழி பிரியாணியும் தான் இவர் வெறும் அம்புதன் எய்தவர் விஞ்ஞான முறையில் ஊழல் செய்த ஊழல் விஞ்ஞானி மஞ்சள் துண்டு. கட்சிஇல் சேரும்போது முளையை கழட்டி வைத்து..]]]

    போச்சு.. போச்சு.. நீங்கள் திராவிட எதிரி.. தமிழரின் விரோதி.. தமிழ்நாட்டில் வாழவே முடியாது. ஜாக்கிரதை.. வீடு தேடி வந்து உதைக்கப் போகிறார்கள்..!

    ReplyDelete
  31. [[[Prakash said...
    If Jaya was in Raja's position as Ex Telecom Min.. Jaya might tell to CBI & Court that the Signature in Spectrum allocation documents is NOT her sign. Also how to drag a court case for 15 to 20 years without appearing in court.. Raja should learn lot from Jaya..]]]

    ஹா.. ஹா.. இப்படியும் நடக்கலாம்..! ஆத்தா செஞ்சாலும் செய்யும்..!

    ReplyDelete
  32. [[[Venkidupathi said...

    சமீபத்து வெளியீடு:மும்பையைச் சார்ந்த DB Reality Group கருணாநிதியின் குடும்பத்தவர்கள் பங்குதாரர்களான க்லைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் பண மாற்றம் செய்திருக்கிறது.

    இந்த DB Reality Group வேறு யாருமல்ல. 2008ல் 2ஜியில் லைசென்ஸ் பெற்று அலைவரிசையின் 45% துபாயைச் சார்ந்த Etisalat நிறுவனத்திற்கு 2009ல் அதிக விலைக்கு விற்று ஆட்டையப் போட்ட நிறுவனம்.]]]

    இல்லை என்று மறுக்கிறது கலைஞர் டிவி.

    ReplyDelete
  33. [[[vasan said...

    //தாத்தாவுக்கு நிச்சயமாக இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் துணைவியாரின் ஏற்பாட்டில் இது நடந்திருக்க நிச்சயமாக வாய்ப்புண்டு.//

    100% I agree to DISAGREE this statement. Nothing will move without his approval. Raja is too small to even think such a scandal. M.K might NOT have the velocity of it but KNOWS the scam. When they had rift, Maran (SUN) screaming about SPECTRAM for 24 hours a day and you mean to say MK might be blind and deaf then. If he did not know the scam, he would NOT have got the same seat again to Raja.]]]

    ஊழல் நடந்த பின்பு மு.க.வுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்..

    ReplyDelete
  34. [[[சிங்கம் said...
    கடேசியிலே தாத்தாவுக்கு தெரிஞ்சுதான் இந்த ஊழல நடந்த்ததுன்னு சொல்லிட்டிங்களே அண்ணே.. தாத்தாவும்தானே இதல partner. அவரோட துணைவின்னா அவருதாநேன்னா.]]]

    என்னத்த செய்ய..? வயசான காலத்துல துணைவியாரை கைவிட முடியுமா..?

    ReplyDelete
  35. (http://vimarisanam.wordpress.com
    தளத்தில் நான் இட்ட பின்னூட்டத்தின் நகல்)

    காவிரிமைந்தன் ,
    மிக அருமையான பதிவு.உங்கள் தார்மீக கோபம என்னை சிலிர்க்க வைத்தது.
    வேந்தன் ,உங்கள் பின்னூட்டம் ,என்னை கண்ணீர் சிந்த வைத்தது.
    ஒருபக்கம்,இட்லிவடையில் விஸ்வாமித்திரர்,உண்மைத்தமிழனில் சரவணன் ,இங்கே கா.மை பின்னி பெடல் எடுக்கிறார்கள்
    இவ்வளவு நேர்மையான துணிச்சலான நல்ல உள்ளங்களா,வலைதளத்தில்?உங்கள் தொடர்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறேன்.இதற்கு மூல காரணமான நம் முதலமைச்சருக்கு என் நன்றி.
    இந்தப்பதிவை அவரவர் தளத்திலும் போடப்போகிறேன்
    நன்றி.

    ReplyDelete
  36. //இரு தரப்பிலும் குள்ளநரித்தனம். எதை வைத்து சீட்டுக்களை அதிகமாகக் கேட்கலாம் என்பது காங்கிரஸின் எண்ணம். எதை வைத்து சீட்டுக்களைக் குறைவாகக் கொடுக்கலாம் என்பது தி.மு.க.வின் எண்ணம்.//

    பின்ன மீனவர்கள் பிரச்சினைக்கு திட்டம் அமைக்கலாம் என்றோ, அல்லது எளியோர் திண்டாட்டத்திற்கு வழி செய்யலாம் என்றோவா போட்டி போடப் போகிறார்கள். என்ன செய்ய? தமிழ்னாட்டின் தலைவிதி!!

    ReplyDelete
  37. அருமையான பதிவு!
    "குருட்டு திருதாரஷ்டிரன்"
    என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு

    "நல்லாத்தான் பெயர் சொல்லியிருக்கீங்க. குருட்டு திருதராஷ்டிரன்னு, இனிமேல்தான் துரியோதனாதியர்களா?.."
    இவ்வளவு நேர்மையான துணிச்சலான நல்ல பதிவுக்கு நன்றி
    குருட்டு திருதாரஷ்டிரனுக்கு நல்ல எண்ணங்கள் என்று வந்திருக்கிறது
    அப்படியே எப்பவாவது வந்தாலும் சகுனி அவரை விடமாட்டேன்.
    திருதரஷ்டிரனுக்கும் கௌரவர்களுக்கும்
    அழிவு விரைவில் என சொல்லாமல் சொல்கிறீர்கள்
    "தாத்தாவுக்கு நிச்சயமாக இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் துணைவியாரின் ஏற்பாட்டில் இது நடந்திருக்க நிச்சயமாக வாய்ப்புண்டு."

    "போச்சு.. போச்சு.. நீங்கள் திராவிட எதிரி.. தமிழரின் விரோதி.. தமிழ்நாட்டில் வாழவே முடியாது. ஜாக்கிரதை.. வீடு தேடி வந்து உதைக்கப் போகிறார்கள்..!"

    Er.T.K.Ganaesan.B.E from Coimbatore

    ReplyDelete
  38. [[[Ganpat said...
    (http://vimarisanam.wordpress.com
    தளத்தில் நான் இட்ட பின்னூட்டத்தின் நகல்)

    காவிரிமைந்தன், மிக அருமையான பதிவு. உங்கள் தார்மீக கோபம என்னை சிலிர்க்க வைத்தது.
    வேந்தன், உங்கள் பின்னூட்டம் என்னை கண்ணீர் சிந்த வைத்தது.
    ஒரு பக்கம், இட்லிவடையில் விஸ்வாமித்திரர்,உண்மைத்தமிழனில் சரவணன், இங்கே கா.மை பின்னி பெடல் எடுக்கிறார்கள். இவ்வளவு நேர்மையான துணிச்சலான நல்ல உள்ளங்களா, வலைதளத்தில்? உங்கள் தொடர்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறேன். இதற்கு மூல காரணமான நம் முதலமைச்சருக்கு என் நன்றி. இந்தப் பதிவை அவரவர் தளத்திலும் போடப் போகிறேன்
    நன்றி.]]]

    கருத்து ஆதரவிற்கு மிக்க நன்றி கண்பத்..!

    ReplyDelete
  39. [[[அன்னு said...

    //இரு தரப்பிலும் குள்ளநரித்தனம். எதை வைத்து சீட்டுக்களை அதிகமாகக் கேட்கலாம் என்பது காங்கிரஸின் எண்ணம். எதை வைத்து சீட்டுக்களைக் குறைவாகக் கொடுக்கலாம் என்பது தி.மு.க.வின் எண்ணம்.//

    பின்ன மீனவர்கள் பிரச்சினைக்கு திட்டம் அமைக்கலாம் என்றோ, அல்லது எளியோர் திண்டாட்டத்திற்கு வழி செய்யலாம் என்றோவா போட்டி போடப் போகிறார்கள். என்ன செய்ய? தமிழ்னாட்டின் தலைவிதி!!]]]

    இந்தத் தலைவிதியை மாற்ற வேண்டுமெனில் தயவு செய்து வாக்குப் பதிவன்று நல்ல முடிவையெடுங்கள் தோழர்களே..!

    ReplyDelete
  40. [[[சிவகாமி கணேசன் said...
    அருமையான பதிவு!
    "குருட்டு திருதாரஷ்டிரன்"
    என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு
    "நல்லாத்தான் பெயர் சொல்லியிருக்கீங்க. குருட்டு திருதராஷ்டிரன்னு, இனிமேல்தான் துரியோதனாதியர்களா?.."
    இவ்வளவு நேர்மையான துணிச்சலான நல்ல பதிவுக்கு நன்றி
    குருட்டு திருதாரஷ்டிரனுக்கு நல்ல எண்ணங்கள் என்று வந்திருக்கிறது
    அப்படியே எப்பவாவது வந்தாலும் சகுனி அவரை விடமாட்டேன்.
    திருதரஷ்டிரனுக்கும் கௌரவர்களுக்கும் அழிவு விரைவில் என சொல்லாமல் சொல்கிறீர்கள்
    "தாத்தாவுக்கு நிச்சயமாக இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் துணைவியாரின் ஏற்பாட்டில் இது நடந்திருக்க நிச்சயமாக வாய்ப்புண்டு."
    "போச்சு.. போச்சு.. நீங்கள் திராவிட எதிரி.. தமிழரின் விரோதி.. தமிழ்நாட்டில் வாழவே முடியாது. ஜாக்கிரதை.. வீடு தேடி வந்து உதைக்கப் போகிறார்கள்..!"
    Er.T.K.Ganaesan.B.E from Coimbatore]]]

    தங்களுடைய முதல் வருகைக்கும், ஆதரவான பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள்..!

    இதற்கெல்லாம் பயந்தால் எழுத முடியுமா..? பயத்தைத் தூரப் போட்டுவிட்டு மக்களுக்காக சில உண்மைகளை உரக்கச் சொல்வதுதான் நல்லது..! இது எனது கடுமையும்கூட..!

    ReplyDelete
  41. ஓட்டு கேட்க வரும்போது இது எதையும் மறக்காமல் மக்கள் இருக்க வேண்டும்
    குறைந்தபட்சம் அதையாவது எதிர்பார்த்து தொலையாலமே... வேறு என்ன செய்ய

    ReplyDelete
  42. Payment made to Kalaiger TV by DB investment is false news. This is an as usual cooked up story by North Indian TV Channels and Brahmin Vested elements.
    Pls check http://thatstamil.oneindia.in/news/2011/02/04/2g-scam-kanimozhi-kalaingnar-tv-under-scanner-aid0090.html
    No payment is made to Kalaiger TV.

    Why most of the blogers believe whatever North Indian TV Channels and Brahmin Vested elements says. May be they think that Men with White Skin won’t lie.

    ReplyDelete
  43. //இவரிடம் சொல்லிவிட்டுத்தான் இந்த ஊழலை இந்தக் கூட்டணி தொடங்கியிருக்கும் என்பதை நான் நம்பவில்லை. தாத்தாவுக்கு நிச்சயமாக இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.//அண்ணா, மத்தியில் ஆட்சி அமைக்கும் போது, எனக்கு கப்பல் போக்கு வரத்துத் துறை வேண்டும், IT துறை வேண்டுமென்று எங்கெங்கெல்லாம் பணம் கொழிக்குமோ அவற்றை மிரட்டி கேட்டு வாங்கினார்கள், மேலும் தராத நிலையில் இரண்டு நாள் பதவி ஏற்காமலேயே தரையில் புரண்டு அழுது வேண்டிய துறைகளை மஞ்சள் துண்டார் தனது கட்சியினருக்குப் பெற்றுத் தந்தாரே, இதெல்லாம் எதற்கு? மக்களுக்கு சேவை செய்யவா? கொள்ளையடிக்கத் தானே? அப்படியிருக்கும் போது இந்த ஊழலைப் பற்றி மற்றும் தெரியாமல் இருக்குமா?

    ReplyDelete
  44. //இந்தப் பக்கம் தாத்தா தனது சொக்கத் தங்கம் ராசாவின் இன்னொரு முகத்தைக் கண்ட அதிர்ச்சியைவிட தனது வீட்டுக்குள்ளேயே ஒரு கொள்ளைக் கும்பல் இருப்பதைப் பார்த்து நிஜமாகவே அதிர்ந்து போயிருக்கிறார்.// கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு, யார் நன்றாக கொள்ளையடித்துக் கொண்டு வந்து கொடுக்கிறார்களோ அவர்கள் தான் சொக்கத் தங்கம். ராசா சொக்கத் தங்கம்தான். திருடன் வீட்டில் இருப்பவர்கள் திருடர்கலாகத்தான் இருப்பார்கள், அதிர்ச்சியைந்திருக்க மாட்டார்.

    ReplyDelete
  45. //“மீனவர் பிரச்சினைக்காக பதவியை ராஜினாமா செய்வீர்களா?”// இதுவரை தமிழர்களுக்காக பலமுறை உயிரைக் கொடுத்திருக்கிறார். [எத்தனை தடவை என்று அவருக்கே ஞாபகம் இருக்காது]. ஆனால் பதவியை தலையில் இடி விழுந்தாலும் ராஜினாமா செய்யா மாட்டார், வாயில் வேண்டுமானால் பதவி எனக்குத் துண்டு மாதிரி துச்சம்,கொள்கை வேட்டி மாதிர் என்பார், நிஜத்தில் பதவி, பணம் கொள்ளைதான் முக்கியம், இதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார், தமிழனைக் காட்டி கொடுப்பது முதல்.

    ReplyDelete
  46. //தமிழகத்தின் தலை சிறந்த தலித் இளைஞரும், தாத்தாவின் மனம் கவர்ந்த தம்பியுமான ஸ்பெக்ட்ரம் ராசாவின் கைது..// ஐயோ பாவம் வாயில் விரலை வைத்தாலும் கடிக்கத் தெரியாத அப்பாவி. ஆனால், தனது சொந்த மாவட்டத்திலேயே தலித்துகளின் நிலங்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங் கேரளா தொழிலதிபர்களுக்கும், பிற பன்னாட்டு நிருவனகளுக்கும் விற்கும் அளவுக்கு தலித்துகளின் நன்மைக்காக பாடுபட்டவர். அம்பேத்கார், காந்தி, பெரியார் ஆகியோருக்கு அடுத்து இந்த திருடன்தான் இருப்பார். கொடுமைடா சாமி.

    ReplyDelete
  47. //முன்பு நாம் தவறு செய்யவில்லை. துணிந்து நின்றோம். ஆனால் இப்போதோ அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறோம். எதிர்த்து நின்றால் அப்படியே நின்று அசிங்கப்பட வேண்டியதுதான். ஆகவே ஒத்துப் போய் கிடைக்கின்ற கோவணத்தையாவது வாங்கிக் கட்டிக் கொண்டு மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார் தாத்தா.// இவரு என்னைக்கு தவறு செய்யாமல் யோக்கியமா இருந்தாருன்னு தெரியவில்லை. வேண்டுமென்றால் அடித்த கொல்லைக்கு ஆதாரத்தை அழித்துவிட்டு இருந்தார்ன்னு வேண்டுமானால் சொல்லல்லாம். மேலும் அடிக்கிறதே கொள்ளை, இதில் போய் என்ன மானம் அவமானம் இருக்கு? மொத்த இந்தியாவுமே காரி உமிழ்ந்த பின்னரும் ஒன்றுமே நடக்கவில்லை என்று தாங்கள் மிக யோக்கியர்கள் என்று வெட்கமில்லாமல் சொல்லித் திரியும் கூட்டம். மானமாவது, அவமானமாவது.

    ReplyDelete
  48. Please read this articles about spectrum

    http://new.vikatan.com/news.php?nid=965

    ReplyDelete
  49. [[[ஜீவன்சிவம் said...
    ஓட்டு கேட்க வரும்போது இது எதையும் மறக்காமல் மக்கள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அதையாவது எதிர்பார்த்து தொலையாலமே. வேறு என்ன செய்ய]]]

    இனிமேல் மக்கள் கைகளில்தான் உள்ளது..! அவர்கள்தான் பொறுப்புடன் செயல்பட வேண்டும்..!

    ReplyDelete
  50. [[[Prakash said...

    Payment made to Kalaiger TV by DB investment is false news. This is an as usual cooked up story by North Indian TV Channels and Brahmin Vested elements.

    Pls check http://thatstamil.oneindia.in/news/2011/02/04/2g-scam-kanimozhi-kalaingnar-tv-under-scanner-aid0090.html

    No payment is made to Kalaiger TV.

    Why most of the blogers believe whatever North Indian TV Channels and Brahmin Vested elements says. May be they think that Men with White Skin won’t lie.]]]

    அதெப்படி இந்தக் கம்பெனி தானாக தேடி வந்து கலைஞர் டிவியில் இன்வெஸ்ட் செய்ய முன் வர வேண்டும்..? இப்படியும் கொஞ்சம் யோசியுங்களேன்..

    ReplyDelete
  51. [[[Jayadev Das said...

    //இவரிடம் சொல்லிவிட்டுத்தான் இந்த ஊழலை இந்தக் கூட்டணி தொடங்கியிருக்கும் என்பதை நான் நம்பவில்லை. தாத்தாவுக்கு நிச்சயமாக இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.//

    அண்ணா, மத்தியில் ஆட்சி அமைக்கும் போது, எனக்கு கப்பல் போக்கு வரத்துத் துறை வேண்டும், IT துறை வேண்டுமென்று எங்கெங்கெல்லாம் பணம் கொழிக்குமோ அவற்றை மிரட்டி கேட்டு வாங்கினார்கள், மேலும் தராத நிலையில் இரண்டு நாள் பதவி ஏற்காமலேயே தரையில் புரண்டு அழுது வேண்டிய துறைகளை மஞ்சள் துண்டார் தனது கட்சியினருக்குப் பெற்றுத் தந்தாரே, இதெல்லாம் எதற்கு? மக்களுக்கு சேவை செய்யவா? கொள்ளையடிக்கத்தானே? அப்படியிருக்கும் போது இந்த ஊழலைப் பற்றி மற்றும் தெரியாமல் இருக்குமா?]]]

    இந்த அளவுக்கு ஊழல் செய்வார்கள் என்று தாத்தா கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். அத்தோடு பதவிக்காக தனது புதல்வியும், மாறன்களும், ராசாவும் நீரா ராடியாவுடன் தொடர்பில் இருந்ததும் அவருக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.!

    ReplyDelete
  52. [[[Jayadev Das said...

    //இந்தப் பக்கம் தாத்தா தனது சொக்கத் தங்கம் ராசாவின் இன்னொரு முகத்தைக் கண்ட அதிர்ச்சியைவிட தனது வீட்டுக்குள்ளேயே ஒரு கொள்ளைக் கும்பல் இருப்பதைப் பார்த்து நிஜமாகவே அதிர்ந்து போயிருக்கிறார்.//

    கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு, யார் நன்றாக கொள்ளையடித்துக் கொண்டு வந்து கொடுக்கிறார்களோ அவர்கள்தான் சொக்கத் தங்கம். ராசா சொக்கத் தங்கம்தான். திருடன் வீட்டில் இருப்பவர்கள் திருடர்கலாகத்தான் இருப்பார்கள், அதிர்ச்சியைந்திருக்க மாட்டார்.]]]

    தொகையிலும், வந்த வகையிலும்தான் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும்..!

    ReplyDelete
  53. [[[Jayadev Das said...

    //“மீனவர் பிரச்சினைக்காக பதவியை ராஜினாமா செய்வீர்களா?”//

    இதுவரை தமிழர்களுக்காக பலமுறை உயிரைக் கொடுத்திருக்கிறார். [எத்தனை தடவை என்று அவருக்கே ஞாபகம் இருக்காது]. ஆனால் பதவியை தலையில் இடி விழுந்தாலும் ராஜினாமா செய்யா மாட்டார், வாயில் வேண்டுமானால் பதவி எனக்குத் துண்டு மாதிரி துச்சம், கொள்கை வேட்டி மாதிர் என்பார், நிஜத்தில் பதவி, பணம் கொள்ளைதான் முக்கியம், இதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார், தமிழனைக் காட்டி கொடுப்பது முதல்.]]]

    ஹி.. ஹி.. இப்படி அவரை எக்ஸ்ரே எடுத்து வெளியிட்டால் எப்படிங்கண்ணா..?

    ReplyDelete
  54. [[[Jayadev Das said...

    //தமிழகத்தின் தலை சிறந்த தலித் இளைஞரும், தாத்தாவின் மனம் கவர்ந்த தம்பியுமான ஸ்பெக்ட்ரம் ராசாவின் கைது..//

    ஐயோ பாவம் வாயில் விரலை வைத்தாலும் கடிக்கத் தெரியாத அப்பாவி. ஆனால், தனது சொந்த மாவட்டத்திலேயே தலித்துகளின் நிலங்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங் கேரளா தொழிலதிபர்களுக்கும், பிற பன்னாட்டு நிருவனகளுக்கும் விற்கும் அளவுக்கு தலித்துகளின் நன்மைக்காக பாடுபட்டவர். அம்பேத்கார், காந்தி, பெரியார் ஆகியோருக்கு அடுத்து இந்த திருடன்தான் இருப்பார். கொடுமைடா சாமி.]]]

    ரொம்பத் திருட்டுப் பயலா இருக்காரு இந்த தலித்து ராசா..!

    ReplyDelete
  55. [[[Jayadev Das said...

    //முன்பு நாம் தவறு செய்யவில்லை. துணிந்து நின்றோம். ஆனால் இப்போதோ அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறோம். எதிர்த்து நின்றால் அப்படியே நின்று அசிங்கப்பட வேண்டியதுதான். ஆகவே ஒத்துப் போய் கிடைக்கின்ற கோவணத்தையாவது வாங்கிக் கட்டிக் கொண்டு மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார் தாத்தா.//

    இவரு என்னைக்கு தவறு செய்யாமல் யோக்கியமா இருந்தாருன்னு தெரியவில்லை. வேண்டுமென்றால் அடித்த கொல்லைக்கு ஆதாரத்தை அழித்துவிட்டு இருந்தார்ன்னு வேண்டுமானால் சொல்லல்லாம். மேலும் அடிக்கிறதே கொள்ளை, இதில் போய் என்ன மானம் அவமானம் இருக்கு? மொத்த இந்தியாவுமே காரி உமிழ்ந்த பின்னரும் ஒன்றுமே நடக்கவில்லை என்று தாங்கள் மிக யோக்கியர்கள் என்று வெட்கமில்லாமல் சொல்லித் திரியும் கூட்டம். மானமாவது, அவமானமாவது.]]]

    ஹா.. ஹா.. என்னைவிட ரொம்பச் சூடா இருக்கீங்க போலிருக்கு.. நன்றி..!

    ReplyDelete
  56. [[[Vijayavel said...

    Please read this articles about spectrum

    http://new.vikatan.com/news.php?nid=965]]]

    ஏற்கெனவே படித்துவிட்டேன் ஸார்..! நன்றி..!

    ReplyDelete
  57. a good preview. i get real feed up from your blog. thank you http://kopunniavan.blogspot.com. malaysia.

    ReplyDelete
  58. [[[ko.punniavan said...
    a good preview. i get real feed up from your blog. thank you http://kopunniavan.blogspot.com. malaysia.]]]

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete