Pages

Wednesday, January 19, 2011

விஜய்யின் காவலனுக்கு நேர்ந்த கதி..!

19-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என்ன இருந்தாலும் இளைய தளபதி விஜய்க்கு இந்த நிலைமை வந்திருக்கக் கூடாதுதான். லோ பட்ஜெட் படங்களையும், டப்பிங் ஆங்கிலப் படங்களையும் மட்டுமே திரையிட்டு வரும் சென்னை, ஜாபர்கான்பேட்டை விஜயா தியேட்டரில் 'காவலன்' ரிலீஸ் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.

'சுறா' படம் தமிழகம் முழுவதும் 600 தியேட்டர்களுக்கும் மேலாக ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் இப்போது 'காவலன்' திரைப்படம் தமிழகத்தில் 200-க்கும் உட்பட்ட தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட்டிருப்பது எதிர்பாராத அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்..!


அரசியல்வியாதிகள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு விஜய்க்கு ஏற்பட்டுள்ள இந்தச் சறுக்கலையும் உதாரணமாக்கலாம்..

தமிழகத்தில் பரவலாக இருக்கும் பெரிய தியேட்டர்கள் அனைத்தும் தொடர்ந்து குறிப்பிட்ட மூன்று பேரன்களின் கட்டுப்பாட்டில் இருப்பது திரைத்துறையையே அவர்களிடம் அடகு வைத்தது போலாகியிருக்கிறது என்று திரையுலகில் அனைவருமே முனங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். (கவனிக்க : முனங்கிக் கொண்டு மட்டுமே.. இது மட்டுமே அவர்களால் முடியும்.. இதற்கு மேல் ஒரு முழுக்கத்தையும் இவர்களால் செய்ய முடியாது..)

ஆனால் இவர்களுடைய திரைப்படங்களில்தான் ஹீரோக்கள் ரேஷன் கடை அநியாயத்தையும், போலி மருந்துக் கொள்ளையையும், மனித உரிமையை மீட்கவும், நிலை நாட்டவும் அந்தரத்தில் பறந்து, பறந்து அடிப்பதுபோல் காட்சிகளை வைப்பார்கள். இதுதான் இவர்களால் முடியும்.

இந்தக் கூத்திற்கு விஜய்யே முன்பு உடந்தையாக இருந்தவர்தான். 'சுறா' படமும் இதே போலத்தான் ஏற்கெனவே கைகளுக்குள் அடங்கியிருந்த தியேட்டர்களில் கோலாகலமாகத் திரையிடப்பட்டது. அப்போது விஜய் அவர்களுக்கு அடங்கியிருந்தார். இப்போது அடங்கவில்லை.

அரசியல்வியாதிகளை எதிர்த்தால் அது இன்னொரு அரசியல்வியாதியாக இருந்தால் அரசியலில் மறைமுகமாக அடிப்பார்கள். கூட்டணி வைத்து முறிப்பார்கள். அரசியலில் இல்லை என்றால் நேரடியாகச் சொல்லியே தாக்குவார்கள். இப்போது விஜய் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

'சுறா' படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக தன்னை இழு, இழுவென்று இழுத்த சன் டிவி மீது கோபத்தில் இருந்த விஜய், இனி இது போன்ற சேனல்களிடம் அடிமையாக சிக்குவதில்லை என்ற முடிவுக்கு அப்போதே வந்துவிட்டார். தனது நெருங்கிய நண்பர்களுக்குப் போட்டுக் காட்டுவதற்காக 'சுறா' படத்தின் ஒரு பிரிண்டை வரவழைக்க எஸ்.ஏ.சி.யே சன் டிவி அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்க வேண்டிய கட்டாயம் வந்ததே அவருக்கு நிச்சயம் எரிச்சலைக் கொடுத்திருக்க வேண்டும்..

பெரும் அசுரர்களான சன் டிவியை பகைத்துக் கொண்டு, கூடுதலாக இப்போது அரசியலிலும் கால் வைப்பதற்கு நேரம், காலம் பார்த்துக் கொண்டிருக்கும் விஜய்யை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுவார்களா என்ன..? கூடவே 'காவலனை' விலைக்கு வாங்க ஆசையோடு காத்திருந்த சன் டிவிக்கு டிமிக்கி கொடுத்ததில் இன்னமும் கடுப்பாகிவிட்டார்கள்..

தன்னை எதிர்ப்பவர்களை முளையிலேயே கிள்ளியெறிவதுதான் அரசியல் புத்திசாலிகளின் தந்திரம். அதைத்தான் கடந்த 30 ஆண்டு காலமாக நம்ம திராவிடத் தாத்தாவும் செய்து கொண்டிருக்கிறார். விஜய் கட்சி ஆரம்பிக்கிறாரோ இல்லையோ.. அப்படியொரு எண்ணம் விஜய்க்குப் பிறகு வேறு எந்த நடிகனுக்கும் ஏற்படக் கூடாது என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே தனது சகல சக்திகளையும் பயன்படுத்தி வருகிறது ஆளும்கட்சி என்பது கண்கூடாகத் தெரிகிறது.

இத்துப் போன 'இளைஞன்' படத்திற்குக்கூட 14 போஸ்டர்களை உதயம் தியேட்டரில் வைக்க விட்டிருக்கும் தியேட்டர் நிர்வாகம் காவலன் போஸ்டர்களுக்குத் தடை விதித்து “ரொம்ப நீளமா இருக்கு தம்பிகளா..?” என்று போலீஸை வைத்து அப்புறப்படுத்தியிருக்கும் செயல் நிச்சயமாக அரசியல்தனமானது.. அற்பத்தனமானது.. தமிழ்நாடு முழுக்கவே காவல்துறை இதுபோல் 'காவலன்' பட போஸ்டர்களை அப்புறப்படுத்தி நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றி வருவதாகப் புலம்பி வருகிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்..

சன் டிவியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தியேட்டர்கள் 'ஆடுகள'த்திற்கு என்றாகிவிட்டது. கூடுதலாக சன் டிவியின் கடைக்கண் பார்வையில் பட்டவைகளும் அதற்கே போய்விட்டன. சன் டிவிக்குப் போக மிச்சமிருந்ததில் அடுத்ததாக சுருட்டியது 'இளைஞன்'. முதலமைச்சரின் படம் என்றே விளம்பரப்படுத்தப்படுவதால் கேட்கின்ற தியேட்டர்களை இல்லை என்று சொல்ல முடியாது என்பதால் இதுவும் ஆக்கிரமிப்பானது. கடைசியில் 'சிறுத்தை'. இந்தப் படத்தின் மீது பி அண்ட் சி-யில் இருந்த  எதிர்பார்ப்பு அதனைத் தக்க வைத்துக் கொண்டது.

ஒரு கட்டத்தில் வெறும் 75 தியேட்டர்களே காவலனுக்குக் கிடைத்திருக்கிறது என்பதைப் படித்தபோது ஆச்சரியம்தான் மிஞ்சியது. கடைசியில் அடித்துப் பிடித்து 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளைப் பிடித்து வெளியிட்டுள்ளார்கள். இந்த அளவுக்குப் போராடியதை பாராட்டத்தான் வேண்டும். லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்டாய் இடத்தைப் பிடிப்பதைப் போல பொங்கல் திரைப்படங்களின் வசூலில் முதலிடத்தையும், படம் பரவலாக அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்ற பெயரையும் பெற்றிருக்கிறது 'காவலன்'. இது ஒன்றே விஜய்க்கு பரம திருப்தியைக் கொடுத்திருக்கும்..

அதே சமயம் ஒருவகையில் விஜய்யும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த சில மாதங்களாகவே விஜய்யின் முந்தைய படங்களினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட பணத்தைத் திருப்பித் தரும்படி தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி தூக்கியபடியேதான் இருந்தார்கள்.

விஜய் அப்பொழுதே இந்தப் பிரச்சினையை சுமூகமாகப் பேசி முடித்திருந்தால் ஒருவேளை இதைவிடவும் அதிகமான தியேட்டர்களில் காவலனை ரிலீஸ் செய்திருக்கலாம். ஆனால் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.யின் பிடிவாதம் அவரை இன்னொரு பக்கம் இக்கட்டுக்குள் கொண்டுபோய் தள்ளிவிட்டது.

அத்தோடு கூடவே காவலனின் மொத்த விநியோக உரிமையை ஷக்தி சிதம்பரம் என்றொரு இயக்குநருக்கு தூக்கிக் கொடுத்தது அதைவிட முட்டாள்தனமாகிவிட்டது. அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாகி ஒரு நாள் தாமதமாகி, ஒரு நாள் வசூலையும் நாசமாக்கிவிட்டது இந்த இயக்குநரின் தில்லாலங்கடி வேலையினால்..

முதலில் எதனை முன் வைத்து, எந்த நம்பிக்கையில் ஷக்தி சிதம்பரத்திற்கு இத்தனை லம்பமாக படத்தினை 60 கோடிக்கு விற்றார்கள் என்றே தெரியவில்லை. இந்தச் செய்தி வெளியே வந்தபோது “ஷக்தி சிதம்பரத்துக்கிட்டே ஏதுய்யா இவ்ளோ காசு..?” என்று திரையுலகமே ஆச்சரியப்பட்டது. ஆனால் கடைசியில்தான் தெரிந்தது ஷக்தி, வெறும் வாயிலேயே முழம் போட்டிருக்கிறார் என்று..

எப்போதும் தயாரிப்பாளர்களிடம் கொடுத்த கடனை வசூலிக்க கடன் பார்ட்டிகள் படத்தின் ரிலீஸ் சமயத்தில்தான் ஆக்ஷன் எடுப்பார்கள். இதையேதான் ஷக்தி சிதம்பரத்திற்கும் நடந்துள்ளது. அவர் தயாரித்து இயக்கிய திரைப்படங்களுக்கு முன்பு கடன் கொடுத்திருந்தவர்கள் இப்போது 'காவலன்' ரிலீஸ் சமயத்தில் கோர்ட்டில் வழக்குப் போட்டு கதையை முடித்துவிட்டார்கள்.

இப்படி கடன் வழக்குப் போட்டுத் தாக்கியது ஒரு புறமிருக்க.. இந்த காவலன் படத்தின் மூலப்படமான மலையாள 'பாடிகார்டை' தமிழில் தயாரிக்கும் உரிமையை ஏற்கெனவே கோகுலம் சிட்பண்ட்ஸ் உரிமையாளர் பெற்றிருந்தார். அவரிடம் சொல்லாமல், ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாமல் கதாசிரியரும், இயக்குநருமான சித்திக் இதனை தமிழில் வேறு தயாரிப்பாளர் மூலம் தயாரித்ததே தவறு என்று சொல்லி பாதிக்கப்பட்டவரும் வழக்குப் போட்டுவிட்டார்.

"ஒட்டு மொத்தமாக அனைத்திற்கும் சேர்த்து 15 கோடியை லேபில் கட்டிவிட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள்" என்று நீதிமன்றத்தில் உத்தரவாக.. கடந்த 13-ம் தேதியன்று  பணத்தைக் கட்டிவிட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

இதில் ரிலீஸுக்கு முன்பாக மூன்று நாட்களாக சென்னையில் கடும் பஞ்சாயத்தாம். ஷக்தி சிதம்பரத்தை அடித்துத் துவைத்ததுவரையான சோகக் கதைகள் பத்திரிகைகளில் நிறைய வெளிவந்திருக்கின்றன. இந்த ஒரு படத்தை வைத்தே நிறைய பேரிடம் கடன் வாங்கியிருக்கிறாராம் ஷக்தி. கையில் பணமே இல்லாமல் ஒருவர் இவ்வளவு பெரிய அக்ரிமெண்ட்டை போட்டிருக்கிறார் என்றால் இவரைவிட தயாரிப்பாளர் ரொமேஷ்குமாரைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.

லோக்கல் விநியோகத்தில் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் செங்கல்பட்டு ஏரியாவைக் கொடுத்தார்கள். அவரும் கடைசி நேரத்தில்தான் தியேட்டர்களை புக் செய்து கொடுத்தாராம். இத்தனைக்கும் இவர்தான் விஜய்யின் அடுத்தப் படமான 'வேலாயுதம்' படத்தின் தயாரிப்பாளர். 

உலக உரிமை கொடுத்த இடத்திலும் தகராறுதானாம்.. ஏற்கெனவே வாங்க ஆர்வம் காட்டிய ஐங்கரன் பிலிம்ஸை ஓரம்கட்டிவிட்டு யாரோ ஒரு சரவணன் என்னும் புதியவருக்குக் கொடுத்துவிட அவர் கடைசி நேரம்வரையிலும் லைனுக்கு வரவில்லையாம்.. அதனால் அவரை ஓரம்கட்டிவிட்டு வேறொருவரிடம் அக்ரிமெண்ட் போட.. அந்தச் சரவணன் இப்போது கோர்ட்டிற்கு மட்டும் விழுந்தடித்து ஓடோடி வந்திருக்கிறார்.

இத்தனை களேபரங்களையும் சந்தித்து முடிப்பதற்குள் ஒரு நாள் முழுதும் போய்த் தொலைந்திருக்க ஒரு நாள் தாமதத்தினால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத் தொகையை இப்போது விஜய் தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்திருக்கிறார். கொடுக்கத்தான் வேண்டும். இப்போதாவது கொடுத்தாரே என்று சந்தோஷப்படும் அதே நேரத்தில்.. தன்னிடம் நஷ்ட ஈடு கேட்ட தியேட்டர் அதிபர்களுக்கு அப்போதே அவர் சிறிதளவாவது பணத்தைக் கொடுத்து செட்டில் செய்திருந்தால் இன்றைய பிரச்சினைகளில் பாதி அன்றைக்கே முடிந்திருக்கும்..

ஒரு படம் தோல்வியடைந்து நஷ்டமானால் அந்தத் தொகை பல லட்சங்களில் இருப்பதினால் இந்த லட்சங்களை அடுத்து இதே போன்ற பெரிய படங்களை வாங்கி விநியோகம் செய்தால் மட்டுமே பெற முடியும் என்பதால் விநியோகஸ்தர்கள் மீண்டும் இந்தப் புதைக்குழியில் இறங்கி, அடுத்தப் படத்தையும் வாங்குகிறார்கள். அதுவும் தோல்வியடைந்தால்..? அதுதான் விஜய் படங்களை வாங்கியவர்களுக்கு நேர்ந்தது.. தொடர்ச்சியான தோல்விகளை விஜய்யே எதிர்பார்க்காதபோது இவர்களைக் குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..?

ஒப்பந்தப்படி தர முடியாது என்று இருந்தாலும் மனிதாபிமானத்துடன்தான் 'பாபா', 'குசேலன்' படங்களில் பட்ட நஷ்டத்திற்காக சிறிதளவு தொகையையாவது திருப்பிக் கொடுத்தார் ரஜினி. ரஜினிக்கு முன்பாகவே டி.ராஜேந்தரும் தனது படங்கள் தோல்வியடைந்தால் விநியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பித் தரும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். சமீபத்தில் வெளிவந்த சூப்பர்ஹிட் 'எந்திரன்' திரைப்படத்திற்குக்கூட ஒரு பெட்டிக்காக வாங்கிய தொகைக்கும், வசூலான தொகைக்கும் கிடைத்த வித்தியாசம் பல லட்சங்களாக இருந்ததினால் சன் பிக்சர்ஸ் விநியோகஸ்தர்களை அழைத்து சில லட்சங்களை திருப்பிக் கொடுத்து விநியோகஸ்தர்களையும், தியேட்டர் அதிபர்களையும் கூல் செய்து அனுப்பியது.

இதுவெல்லாம் எதற்காகவெனில் அடுத்தப் படத்திற்கு அதே விநியோகஸ்தர்கள் ஆர்வத்துடன் விரைந்து வந்து பிஸினஸை முடித்துவிட வேண்டும் என்கிற பிஸினஸ் நோக்கத்திற்காகத்தான்.. இதுதான் சினிமா வியாபாரத் தந்திரம்..

நேர்மை, நீதி, நாணயம் என்பதையெல்லாம் தாண்டி மனிதாபிமானம் என்ற ஒன்றையும் பார்க்க வேண்டுமே..? சில ஆயிரங்கள் என்றால்கூட தாங்கிக் கொள்ளலாம்.. பல லட்சங்கள் என்றால் எப்படி தாங்குவார்கள்..? விஜய் பணத்தைத் திருப்பிக் கொடுத்து அவர்களிடமே காவலன் பெட்டியை வாங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருந்தால் காவலன் படத்தின் ரிலீஸ் தியேட்டர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து இப்போது வசூலும் அதிகரித்திருக்கும். அவர் செய்யாததினால் இப்போது அவருக்குத்தான் பாதிப்பு.

முன்பெல்லாம் படத்தை வெளியிடுவதற்கு முன்பாக பிரிவியூ காட்சியை விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டுவார்கள். அதில் படம் பார்க்கும் விநியோகஸ்தர்கள் படம் நிச்சயம் பிய்த்துக் கொண்டு போகும் என்பதுபோல் தெரிந்தால் போட்டி போட்டுக் கொண்டு விலையை உயர்த்திக் கேட்டு பெட்டியை வாங்கிச் செல்வார்கள். இப்போது அப்படியில்லை என்றாகிவிட்டது.

விநியோகஸ்தர்களுக்கான பிரிவியூ ஷோவிலேயே படம் புட்டுக்குச்சு என்று ஆள், ஆளுக்கு வத்தி வைத்துவிடுவதால் படத்தின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக நினைத்து அந்த முறையை ஊத்தி மூடிவிட்டார்கள். ஒரு சில லோ பட்ஜெட் படங்கள் மட்டுமே இன்றைக்கும் பிரிவியூ ஷோ போடப்பட்டு வியாபாரம் பேசப்படுகிறது.

விஜய் இந்த லெவலையெல்லாம் தாண்டி ரொம்ப வருடங்களாகிவிட்டது.. அவர் நடித்த படம் என்றாலே வசூலுக்குக் குறைவில்லை என்கிற கதையையே உண்மை வார்த்தையாக நம்பித்தான் படம் பார்க்காமலேயே பொட்டியை வாங்கிச் சென்றார்கள்.

இங்கே மாதந்தோறும் ரசிகர்களின் மனநிலை மாறி வருகிறது என்பதை விஜய் இன்னமும் புரிந்து  கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மிஷ்கினின் 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' திரைப்படங்களில் நடிக்கக் கேட்டும் கதை தனக்கு செட்டாகாது என்று சொல்லி மறுத்துவிட்ட விஜய்யை என்னவென்று சொல்வது..?

இப்படியெல்லாம் கைக்கு வந்த வெல்லக்கட்டிகளை சுவைக்க விரும்பாமல் எல்லோருக்கும் எப்போதும் அருகிலேயே கிடைக்கும் புளியங்கொட்டையையே சப்பிக் கொண்டிருந்தால் எத்தனை நாட்கள்தான் வாய் தாங்கும்..? புளிக்காது.. சமீப காலமாக அவருக்கு அதேதான் நடந்தது.

சிறு குழந்தைகளுக்கு விஜய் பிடித்ததில் ஆச்சரியமில்லை. அவருடைய முகமே அழகு. அந்த அழகு முகம் நிச்சயம் அனைவருக்குமே பிடிக்கும். அந்த அழகை முன் வைத்து குழந்தைகளுக்காக பெற்றோர்களையும் தியேட்டர்களுக்கு இழுத்தார்கள். அவருக்கென்றே தனியாக இருக்கும் ரசிகர்களையும் இழுத்தார்கள். வந்தவரைக்கும் படத்தைப் பார்த்தார்கள். வசூலும் கிடைத்தது.

ஆனால் இந்த வசூல் தொகையைவிட நான்கு மடங்கு அதிக விலை வைத்து பெட்டியை விற்றிருந்தார்கள். வாங்கியிருந்தார்கள். இதுதான் அவர்கள் செய்த தவறு.. சுறாவை விஜய் ரசிகர்களே அதிகம் பேர் பார்க்கவில்லை. அழகிய தமிழ் மகன், வில்லு படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் அனைவராலும் விரும்பப்பட்டு ஓரளவுக்கு கூட்டம் கூடியிருந்தாலும் வரவைவிட அதிக விலைக்கு வாங்கிய குற்றத்தினால் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும்தான் அல்லல்பட்டார்கள்.

இது சூதாட்டம் மாதிரிதானே.. கிடைத்தால் கிடைக்கும்.. கிடைக்காவிட்டால் இல்லை.. இதில் யாரும், யாரையும் குற்றம் சொல்ல முடியாதுதான்.. சில  சமயங்களில் ஒரு படம் எதனால் ஜெயிக்கிறது..? ஒரு படம் எதனால் தோற்கிறது என்பதையும் சொல்ல முடியாமல் போகிறது.. இந்த லட்சணத்தில் அகோரப் பசி கொண்டு.. அத்தனையையும் அள்ளிவிட வேண்டும் என்ற நினைப்பில் பணம் இருக்கிறதே என்பதற்காக கொண்டு வந்து கொட்டும் விநியோகஸ்தர்களால்தான் இந்த நிலைமை என்கிறார்கள் திரையுலகப் புள்ளிகள்.

இந்தப் படம் இவ்வளவுதான் வசூலிக்கும் என்று குத்துமதிப்பாகச் சொல்லி கேட்டுக் கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ இறக்கப்படும் பணம் அதிக விலைக்குப் பேசி முடிக்க ஏதுவாகிறது.. இது தோல்வியடைந்தாலும், வெற்றியடைந்தாலும் அடுத்தப் படத்திற்கு முந்தைய இந்தப் படத்தின் விலையையே அடிப்படை விலையாக வைத்து இதற்கதிமான விலையைத்தான் சொல்கிறார்கள். தற்போது எடுக்கப்பட்ட படத்தின் தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் பிஸினஸ் பேசுகிறார்கள் என்கிறார் ஒரு விநியோகஸ்தர். இப்படித்தான் பல படங்கள் அதிக விலைக்கு வாங்கியவர்களுக்கு நஷ்டத்தைக் காட்டுகின்றன என்பதுதான் உண்மை.

தோல்விப் படம் என்று எப்படிச் சொல்கிறார்கள். போட்ட காசுகூட தேறலை என்பதுதான் முக்கியமான ஆதாரம். விஜய்யின் படங்களில் மிகப் பெரும் முதலீடே அவருடைய சம்பளம்தான். இப்போது 25 முதல் 30 கோடிவரையிலும் சம்பளமாகப் பெறுகிறாராம் விஜய்.. இந்தச் சம்பளத்தைவிட்டுவிட்டு மற்றத் தயாரிப்புச் செலவுகளை வைத்துப் பார்த்தால் விஜய்யின் ஒரு படத்தினை 8 கோடிக்குள் அடக்கிவிடலாம். விஜய்யின் சம்பளத்தையும் சேர்த்து 38 கோடி. ஆனால், தனித்தனியாகவோ, ஒரு பெட்டியாகவோ விற்கும்போது மொத்தமாக 75 கோடிக்கு என்று கணக்கிட்டு விற்கிறார்கள். இங்கேதான் வாங்கியவர்களுக்கு அடி விழுகிறது.

படத்தின் ஒட்டு மொத்த வசூல் 40 கோடி என்று வைத்துக் கொள்ளுங்கள். விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் 35 அல்லது 40 கோடி ரூபாய். தனித்தனிப் பெட்டியாக விற்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தியேட்டர்களுக்கும் தோராயமாக 10 முதல் 15 லட்சங்கள்வரையில் நஷ்டம். ஆனால் உண்மையில் தயாரிப்பாளருக்கு இதனால் என்ன நஷ்டம்..? ஒன்றுமில்லை. அவர்தான் மொத்தமாக 75  கோடிகளுக்கு விற்று 47 கோடிகள் அளவுக்கு லாபம் பார்த்துவிட்டாரே..?

இந்த 35 முதல் 40 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட கொஞ்சம் பண உதவி கேட்டு வந்தால், “கொஞ்சம் பொறுங்க.. அடுத்தப் படத்தோட விநியோக உரிமை உங்களுக்குத்தான்.. அதையும் வாங்கிக்குங்க. அடுத்ததுல அள்ளிரலாம்..” என்று ஆசை வார்த்தை காட்டுகிறார்கள்.

நஷ்டம் லட்சங்களில் அல்லது கோடிகளில் இருப்பதால் விநியோகஸ்தர்களும் ஆசைப்பட்டு அடுத்தப் படத்தையும் வாங்கித் தொலைக்கிறார்கள். இப்போதும் தயாரிப்புக்கு மேல் சில கோடிகளை விலையேற்றம் செய்துதான் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் தலையில் கட்டுகிறார்கள்.

இந்தப் படமும் வாங்கிய அளவுக்கு வசூலாகவில்லை என்றால் என்ன செய்வார்கள்..? மீண்டும் ஓடி வருவார்கள். மீண்டும் ஒரு சமாதானம். அடுத்தப் படம்.. ஆசை வார்த்தை.. இதே கதைதான் சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து நடந்து வருகிறது.. வந்திருக்கிறது.

இந்த விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் ஒரே தயாரிப்பாளரிடம் கொடுத்தப் பணம்தான் அவர்கள் அடுத்து திரையுலகத்திற்குள் இறக்குவதற்காக, புழக்கத்தில் விடக் காத்திருக்கும் பணம். அந்தப் பணம் வரவில்லையென்றால் அவர்களால் அடுத்தப் படத்திற்கு முதல் போட முடியாது. பொட்டி மீது பணத்தை வைத்து அவர்களால் வாங்க முடியாது. அடிபட்ட விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் ஒதுங்கினால் அவர்களிடம் கடன் வாங்கியோ, உதவி செய்தோ படம் தயாரிக்கக் காத்திருக்கும் அடுத்தத் தயாரிப்பாளரும் பாதிக்கப்படுவார். இது போன்று திரையுலகத்திற்குள்ளேயே இந்தப் பணச் சுற்று நிறுத்தப்பட்டிருக்கிறது.

கொடுக்க வேண்டாம் என்பதை அவுட்ரேட்டின் விதிமுறையாக வைத்திருப்பதே கொடுமைதான். சூதாட்டத்தில் விழுந்தால் மரணம்.. எழுந்தால் நடனமாடலாம் என்றால் மனிதர்கள் தவறுவது இயல்புதானே.. இந்த விதிமுறையை நீக்கிவிட்டு நஷ்டமடைந்தால் அதில் திரையுலகின் அனைவரும் பங்கு பெற வேண்டும். அதேபோல் லாபமடைந்தால் அதிலும் அனைவருக்கும் பங்கு கிடைக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் இருந்தால்தான் இப்போது கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாவுலகம் கொஞ்சமாவது பிழைக்க முடியும்..

பெரிய நடிகர்கள் தங்களது படங்கள் விற்பனையாகும் அளவுக்கு ஏற்றாற்போல் தங்களது சம்பளத்தையும் வகுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் பெரிய தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நினைத்து அமைதி காக்கிறார்கள். நடிகர் சங்கம் இதனை ஏற்க மறுக்கிறது. “எங்களுக்கு மார்க்கெட் இருக்கும்போது நாங்கள் சம்பாதித்தால்தான் உண்டு..” என்கிறார்கள். விஜய் விவகாரத்தில்கூட நடிகர் சங்கம் இப்போதும் அவர் பக்கம்தான் பேசுகிறது. பணம் கொடுக்கத் தேவையில்லை என்கிறது சங்கம்.

“நீங்க கொடுத்தீங்கன்னா நாளைக்கு எங்ககிட்டேயும் கேப்பாங்க..” என்கிறார்களாம் பெரிய நடிகர்கள். பசையுள்ள புதிய, பெரிய தயாரிப்பாளர்களோ பெரிய நடிகர்களை வைத்துப் படமெடுக்க பெட்டியோடு காத்திருப்பதால் வந்தவரையிலும் அள்ளுவோம் என்று நினைக்கிறார்கள் அவர்கள்.

இப்படி தொலை நோக்குப் பார்வையில்லாமல் வியாபார ஒப்பந்தங்களையும், விதிமுறைகளையும் வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாட்கள் தமிழ்ச் சினிமாவுலகத்தைத் தள்ளிக் கொண்டு போக முடியும் என்று தெரியவில்லை.

இப்போது ஒரு திரைப்படம் எத்தனை நாட்கள் ஓடியது என்பதெல்லாம் தேவையே இல்லை என்றாகிவிட்டது.. எத்தனை கோடிகளை வசூல் செய்தது என்பதே முக்கியமாகப் போய்விட்டதினால், இங்கே யாருக்கும் இதனைப் பற்றிக் கவலையில்லை. நஷ்டமானவர்களைத் தவிர..!



காவலன் திரைப்படத்தின் விமர்சனம் இங்கே :

41 comments:

  1. rentavathu naala unga blogla vadai vaangiten.

    ReplyDelete
  2. விஜயின் தோல்வி அடைந்த படங்களுக்கு இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை.....சரியான விளம்பரம் இல்லை. இருந்தால் தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் லாபம் பார்க்கலாம்.

    8:18 AM

    ReplyDelete
  3. படித்து முடிப்பதற்குள் ஃபர்ஸ்ட் போச்சே

    ReplyDelete
  4. படம் சிறப்பாகவும் மக்களுக்குப் பிடித்தும் இருந்தால், இந்த தடைகள் , நாடகங்கள் எல்லாம் சும்மா.

    புது வசந்தம் , புதிய பார்வை போன்ற படங்கள் வெளியான பொழுதும் பெரிய பட்ஜெட் படங்கள் வந்தன. சுமாரான திரை அரங்குகளில் மட்டுமே வெளியிடப் பட்டன முதலில். ஆனால் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாவற்றையும் பின் தள்ளின, புதிய பார்வை, புது வசந்தம்.

    ReplyDelete
  5. எந்திரன், ராவணன், நகுலன் நடித்த படம் (சண் பிலிம்ஸ்) பல்வேறு திரை அரங்குகளில் வெளியடப் பட்டன. ரசிகர்களுக்கு பிடிக்காததால் தாக்கு பிடிக்க முடிய வில்லை.

    ReplyDelete
  6. அந்தக் காலத்தில் உ.சு.வா. வுக்கு வராத சோதனையா...அது எப்படி சாதனை படைத்தது...? படம் நன்றாக இருந்தால் எல்லாவற்றையும் மீறி ஜெயிக்கும். நீங்கள் சொல்வது போல விஜய்க்கும் இது ஒரு பாடம்.

    ReplyDelete
  7. //சிறு குழந்தைகளுக்கு விஜய் பிடித்ததில் ஆச்சரியமில்லை. அவருடைய முகமே அழகு. அந்த அழகு முகம் நிச்சயம் அனைவருக்குமே பிடிக்கும். அந்த அழகை முன் வைத்து//

    சே...உண்மைத் தமிழன் மீதிருந்த மதிப்பே போய்விட்டது... ;)

    இப்படியா பொய் பேசுவது? நீங்க ரசிகன், தேவா படங்கள் பார்ப்பதில்லையா?

    ReplyDelete
  8. ரொம்பவுமே மெனக்கெட்டு இவ்வளவு விவரங்களைத் தேடி எழுதியிருக்கீங்க, பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. ஐத்ரூஸ்..

    அதெப்படி கரெக்ட்டா முதல் ஆளா வர்றீங்க..? சரி.. வந்ததுக்கு நன்றி..

    படிச்சிட்டு வர்றேன்னு சொல்லிட்டு அப்படியே எஸ்கேப்பாயிட்டீங்களே..?

    ReplyDelete
  10. [[[Indian Share Market said...
    விஜயின் தோல்வி அடைந்த படங்களுக்கு இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை. சரியான விளம்பரம் இல்லை. இருந்தால் தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் லாபம் பார்க்கலாம்.]]]

    சேனல்களில் சரிவர விளம்பரமில்லை. மற்றபடி லோக்கல் விளம்பரங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்..!

    ReplyDelete
  11. [[[பார்வையாளன் said...
    படித்து முடிப்பதற்குள் ஃபர்ஸ்ட் போச்சே..]]]

    இப்போ இதுதான் உங்கள் கவலையா..?

    ReplyDelete
  12. [ராம்ஜி_யாஹூ said...
    படம் சிறப்பாகவும் மக்களுக்குப் பிடித்தும் இருந்தால், இந்த தடைகள், நாடகங்கள் எல்லாம் சும்மா.
    புது வசந்தம், புதிய பார்வை போன்ற படங்கள் வெளியான பொழுதும் பெரிய பட்ஜெட் படங்கள் வந்தன. சுமாரான திரை அரங்குகளில் மட்டுமே வெளியிடப் பட்டன முதலில். ஆனால் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாவற்றையும் பின் தள்ளின, புதிய பார்வை, புது வசந்தம்.]]]

    ஆமாம் ஸார்.. அதே மாதிரிதானே மைனாவும் ரிலீஸ் ஆனது.. படமும் நன்றாகத்தான் உள்ளது. பார்க்க வேண்டிய படம்தான்..!

    ReplyDelete
  13. [[[ராம்ஜி_யாஹூ said...
    எந்திரன், ராவணன், நகுலன் நடித்த படம் (சண் பிலிம்ஸ்) பல்வேறு திரை அரங்குகளில் வெளியடப்பட்டன. ரசிகர்களுக்கு பிடிக்காததால் தாக்கு பிடிக்க முடியவில்லை.]]]

    எந்திரன் நன்றாகத்தான் ஓடியது..

    ராவணன் சன் பிக்சர்ஸ் வெளியீடோ, தயாரிப்போ இல்லை.. இந்தப் படம் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை.

    நகுலன் நடித்த மாசிலாமணியை சன் டிவியில் மட்டும்தான் ஓட்டினார்கள். தியேட்டர்களில் ஓடவில்லை.. படம் நன்றாக இல்லையெனில் ரசிகர்கள் நிச்சயம் வர மாட்டார்கள்..!

    ReplyDelete
  14. [[[ஸ்ரீராம். said...
    அந்தக் காலத்தில் உ.சு.வா.வுக்கு வராத சோதனையா? அது எப்படி சாதனை படைத்தது? படம் நன்றாக இருந்தால் எல்லாவற்றையும் மீறி ஜெயிக்கும். நீங்கள் சொல்வது போல விஜய்க்கும் இது ஒரு பாடம்.]]]

    நிச்சயமாக.. விஜய்யின் கலையுலகப் பாதையிலும், அரசியல் பாதையிலும் இந்தப் படம் ஒரு திருப்பு முனைதான். விஜய்யும் இதேபோல் கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் அவருடைய எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும்..!

    ReplyDelete
  15. [[சீனு said...

    //சிறு குழந்தைகளுக்கு விஜய் பிடித்ததில் ஆச்சரியமில்லை. அவருடைய முகமே அழகு. அந்த அழகு முகம் நிச்சயம் அனைவருக்குமே பிடிக்கும். அந்த அழகை முன் வைத்து//

    சே. உண்மைத் தமிழன் மீதிருந்த மதிப்பே போய்விட்டது... ;)
    இப்படியா பொய் பேசுவது? நீங்க ரசிகன், தேவா படங்கள் பார்ப்பதில்லையா?]]]

    அதெல்லாம் பார்த்து சலிச்சுப் போன படங்கள்.. விடுங்க.. அது எதுக்கு இப்போ..?

    ReplyDelete
  16. [[[DrPKandaswamyPhD said...
    ரொம்பவுமே மெனக்கெட்டு இவ்வளவு விவரங்களைத் தேடி எழுதியிருக்கீங்க, பாராட்டுக்கள்.]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  17. என்னைக்கேட்டால் படம் விழுந்தாலும் எஸ் ஏ சந்திரசேகரா எதாவது லூசுத்தனம் பண்ணி விஜயை இன்னும் கிடங்கில் தள்ளப்போகுது!

    விஜய், ஒரு பெரிய நடிகர்தான். ஆனால், ஆளுங்கட்சியையும், தியேட்டர் ஓனர்களையும், மீடியாக்களையும் எதிர்த்து இவர் வியாபாரியாக வாழமுடியாது.

    என்னவோ விஜய் படம் பண்றது பொதுநலத்தொண்டுனு நெனச்சுக்கிட்டுத் திரிகிறார்கள் , விஜயும் அவங்க அப்பாவும்.

    பண்றது வியாபாரம். வியாபாரி, அரசியல் வாதிகளையும், சக வியாபாரிகளையும் மக்களையும் அனுசரிச்சுப் போகிற கோழைகள்தான்.

    இது என்ன எழவுக்கு வீரம் பேசுறான் வியாபாரி??? எதோ பொதுநலத்தொண்டு செய்ற மாதிரி???

    ReplyDelete
  18. //தொலை நோக்குப் பார்வையில்லாமல் வியாபார ஒப்பந்தங்களையும், விதிமுறைகளையும் வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாட்கள் தமிழ்ச் சினிமாவுலகத்தைத் தள்ளிக் கொண்டு போக முடியும் என்று தெரியவில்லை.
    //

    மாற்றம் எதிர்ப்பார்ப்போம்... நல்ல பதிவு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. விஜய்க்கு இந்தப்பாடம் தேவையான ஒன்றுதான் ...

    ReplyDelete
  20. ***இப்போது 25 முதல் 30 கோடிவரையிலும் சம்பளமாகப் பெறுகிறாராம் விஜய்..***

    அப்போ சாக்கி சானுக்கு அடுத்து இவர்தானா?

    ReplyDelete
  21. [[[வருண் said...

    என்னைக் கேட்டால் படம் விழுந்தாலும் எஸ் ஏ சந்திரசேகரா எதாவது லூசுத்தனம் பண்ணி விஜயை இன்னும் கிடங்கில் தள்ளப் போகுது!

    விஜய், ஒரு பெரிய நடிகர்தான். ஆனால், ஆளுங்கட்சியையும், தியேட்டர் ஓனர்களையும், மீடியாக்களையும் எதிர்த்து இவர் வியாபாரியாக வாழ முடியாது.

    என்னவோ விஜய் படம் பண்றது பொது நலத் தொண்டுனு நெனச்சுக்கிட்டுத் திரிகிறார்கள் , விஜயும் அவங்க அப்பாவும்.

    பண்றது வியாபாரம். வியாபாரி, அரசியல்வாதிகளையும், சக வியாபாரிகளையும் மக்களையும் அனுசரிச்சுப் போகிற கோழைகள்தான்.

    இது என்ன எழவுக்கு வீரம் பேசுறான் வியாபாரி??? எதோ பொது நலத் தொண்டு செய்ற மாதிரி???]]]

    அப்போ நாம பிளாக்ல வீராவேசமா இப்படி எழுதறதுக்குப் பேரு என்ன வருண்..!?

    ReplyDelete
  22. [[[மதுரை சரவணன் said...

    //தொலை நோக்குப் பார்வையில்லாமல் வியாபார ஒப்பந்தங்களையும், விதிமுறைகளையும் வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாட்கள் தமிழ்ச் சினிமாவுலகத்தைத் தள்ளிக் கொண்டு போக முடியும் என்று தெரியவில்லை.//

    மாற்றம் எதிர்ப்பார்ப்போம். நல்ல பதிவு பாராட்டுக்கள்.]]]

    மாறவில்லையெனில் நஷ்டம் அவர்களுக்குத்தான்..!

    பகிர்ந்துண்பது வீட்டுக்கும், நாட்டுக்கும், தொழிலுக்கும் நல்லது சரவணன்..!

    ReplyDelete
  23. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    Present sir]]]

    நானென்ன கிளாஸா நடத்துறேன்..? கொன்னுபுடுவேன் கொன்னு.. அடுத்தப் பதிவுலயாச்சும் ஒழுங்கா பின்னூட்டத்தைப் போடு.!

    ReplyDelete
  24. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    விஜய்க்கு இந்தப் பாடம் தேவையான ஒன்றுதான் ...]]]

    இனி புரிந்து கொண்டு நடப்பார் என்று நானும் நம்புகிறேன் செந்தில்..!

    ReplyDelete
  25. [[[வருண் said...

    ***இப்போது 25 முதல் 30 கோடிவரையிலும் சம்பளமாகப் பெறுகிறாராம் விஜய்..***

    அப்போ சாக்கி சானுக்கு அடுத்து இவர்தானா?]]]

    இல்லை.. இடையில் ரஜினி, கமல் இருக்கிறார்களே..!

    ReplyDelete
  26. ***அப்போ நாம பிளாக்ல வீராவேசமா இப்படி எழுதறதுக்குப் பேரு என்ன வருண்..!?**

    நடிப்பு அவருக்கு தொழில். உங்களைப் பத்தித் தெரியலை. எனக்கு ப்ளாகிங் தொழில் இல்லைங்க! முதலும் போடலை, வருமானமும் இல்லை! :)
    நிச்சயம் ப்ளாக் தொழிலா இருந்தால், வீரம் பேசுவதால் என் வருமானம் பாதிக்கப்படுமென்பதால், நான் வீரம்லாம் பேசமாட்டேன். எப்படி மக்களை ஏச்சு, திருப்திப்படுத்தி, எல்லாருக்கும் ஆயிலடிச்சு, முன்னேறலாம்னு பார்ப்பேன்! :)

    நெசம்மாதாங்க சொல்லுறேன். :)

    ReplyDelete
  27. [[[Arun Ambie said...

    உள்ளேன் ஐயா!]]]

    இதுக்கெல்லாமா..? முறைப்படியான பின்னூட்டம் இல்லாததால் நான் ஆப்செண்ட் போடுறேன்..!

    ReplyDelete
  28. [[[வருண் said...
    ***அப்போ நாம பிளாக்ல வீராவேசமா இப்படி எழுதறதுக்குப் பேரு என்ன வருண்..!?**

    நடிப்பு அவருக்கு தொழில். உங்களைப் பத்தித் தெரியலை. எனக்கு ப்ளாகிங் தொழில் இல்லைங்க! முதலும் போடலை, வருமானமும் இல்லை! :)

    நிச்சயம் ப்ளாக் தொழிலா இருந்தால், வீரம் பேசுவதால் என் வருமானம் பாதிக்கப்படுமென்பதால், நான் வீரம்லாம் பேச மாட்டேன். எப்படி மக்களை ஏச்சு, திருப்திப்படுத்தி, எல்லாருக்கும் ஆயிலடிச்சு, முன்னேறலாம்னு பார்ப்பேன்! :)

    நெசம்மாதாங்க சொல்லுறேன்:)]]]

    அவர் தொழில் அவர் பண்றாரு. அதுக்கு இடைஞ்சல்ன்னா அவர் வெளில சொல்லத்தான் செய்வாரு. இல்லாட்டி சொல்லாமலும் செய்யலாம். அது அவரோட இஷ்டம்..! மக்களுக்குப் பிடித்தமான, நெருக்கமான துறைல இருக்கிறதாலதான் சினிமாக்காரங்க கல்லடி படுறாங்க.. அவ்வளவுதான்..!

    ReplyDelete
  29. //சிறு குழந்தைகளுக்கு விஜய் பிடித்ததில் ஆச்சரியமில்லை. அவருடைய முகமே அழகு. அந்த அழகு முகம் நிச்சயம் அனைவருக்குமே பிடிக்கும். அந்த அழகை முன் வைத்து குழந்தைகளுக்காக பெற்றோர்களையும் தியேட்டர்களுக்கு இழுத்தார்கள்.//

    ******

    ஹா...ஹா...ஹா...

    தலைவா... நீங்க இன்னிக்கு தான் உண்மை தமிழன் மாதிரி உண்மைய சொல்லி இருக்கீங்க...

    அவர் மேல கோவம்னா கூட அவர வச்சி இந்தளவுக்கு காமெடி பண்ண உங்க ஒருத்தரால தான் முடிஞ்சிருக்கு.

    அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கறாராம்.. பேர் கூட வச்சாச்சு... இங்க வந்து பாருங்க ஜி..

    தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்”
    http://jokkiri.blogspot.com/2010/04/blog-post.html

    ReplyDelete
  30. ///[[[வருண் said...

    ***இப்போது 25 முதல் 30 கோடிவரையிலும் சம்பளமாகப் பெறுகிறாராம் விஜய்..***

    அப்போ சாக்கி சானுக்கு அடுத்து இவர்தானா?]]]

    இல்லை.. இடையில் ரஜினி, கமல் இருக்கிறார்களே..!///
    Boss,
    I agree with Varun.
    Bcoz, i came to know from newspaper that Jackie Chan was paid around 50 crores for his last project, which is the highest in Asia. Also, i heard that Vijay's one of the Mega hit "Pokkiri" sold at/around 33 crores, 3 years back.But, now you are telling that Vijay's salary is ranging from 25 to 30 crores, then what about Rajini for his latest Blockbuster flick - ENDHIRAN?. Is Vijay treated (interms of pay) as same as Rajini? I still cant believe it :-((
    Any awy it's a nice post.
    Cheers,
    Bala

    ReplyDelete
  31. அண்ணே இவரோட முந்தைய படம் ஒன்றை [பேரு..... தெரியல!] சன் பிக்சர்ஸ் காரனுங்க AVM கிட்ட இருந்து வாங்கி அதிலுள்ள ரசிகர்களைத் திருத்திப் படுத்தும் சில காட்சிகளை நீக்கி விட்டு, அதோ இதோ என்று ரிலீஸ் தேதியை இழுத்தடித்து பின்னர் நல்ல ரேட்டுக்கு [ஓவர் ரேட்டுக்கு] வேறு எவன் தலையிலோ கட்டிவிட்டு, வாங்கியவர்களும் விஜயும் தலைமேல் துண்டு போட்டு கொண்டு அழுமாறு செய்து விட்டார்களாமே!! மொத்தத்தில் விசையை உருப்படாமல் செய்ய வேண்டுமென்பது மஞ்சள் துண்டார் குடும்பத்தின் நோக்கம் அதனால் இவர் அவர்களைப் பகைத்துக் கொண்டுள்ளார்! எனக்கு ரெண்டு விஷயம் ஜீரணிக்கவே முடியலே. ஒன்னு மஞ்சள் துண்டு குடும்பம் மொத்த தமிழகத்தையுமே கபளீகாரம் செய்யத் துணிந்து விட்டது, இன்னொன்னு விஜய் மாதிரி தன்னுடைய சினிமா ஓட பெண்களை அப்படியும் இப்படியுமா காட்டிய ஒருத்தன் மக்களுக்குச் சேவை செய்து ஓடாய் தேய்ந்து போக நினைப்பது. இவனுங்க வந்து மக்களைக் காப்பாத்தப் போறானுங்க. சிரிப்பும் வேதனையும் சேர்ந்து வருது.

    ReplyDelete
  32. //லோ பட்ஜெட் படங்களையும், டப்பிங் ஆங்கிலப் படங்களையும் மட்டுமே திரையிட்டு வரும் சென்னை, ஜாபர்கான்பேட்டை விஜயா தியேட்டரில் 'காவலன்' ரிலீஸ் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.//



    பேரறிஞர் கமல் அவர்களில்
    “ஆளவந்தான்” கூட அங்க ரிலீஸ் ஆச்சி சார்.

    ReplyDelete
  33. [[[R.Gopi said...

    ஹா...ஹா...ஹா... தலைவா... நீங்க இன்னிக்குதான் உண்மை தமிழன் மாதிரி உண்மைய சொல்லி இருக்கீங்க...

    அவர் மேல கோவம்னாகூட அவர வச்சி இந்தளவுக்கு காமெடி பண்ண உங்க ஒருத்தராலதான் முடிஞ்சிருக்கு.

    அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கறாராம்.. பேர் கூட வச்சாச்சு... இங்க வந்து பாருங்கஜி..

    தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்”
    http://jokkiri.blogspot.com/2010/04/blog-post.html]]]

    அடப்பாவிகளா.. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு உசிரைக் கொடுத்து உண்மையைச் சொல்லியிருக்கேன்.. என்னைய போயி கலாய்க்குறீங்களே..?

    ReplyDelete
  34. [[[balasubramanian said...

    //[[[வருண் said...

    ***இப்போது 25 முதல் 30 கோடிவரையிலும் சம்பளமாகப் பெறுகிறாராம் விஜய்..***
    அப்போ சாக்கி சானுக்கு அடுத்து இவர்தானா?]]]

    இல்லை.. இடையில் ரஜினி, கமல் இருக்கிறார்களே..!///
    Boss,
    I agree with Varun. Bcoz, i came to know from newspaper that Jackie Chan was paid around 50 crores for his last project, which is the highest in Asia. Also, i heard that Vijay's one of the Mega hit "Pokkiri" sold at/around 33 crores, 3 years back.But, now you are telling that Vijay's salary is ranging from 25 to 30 crores, then what about Rajini for his latest Blockbuster flick - ENDHIRAN?. Is Vijay treated (interms of pay) as same as Rajini? I still cant believe it :-((
    Any awy it's a nice post.
    Cheers,
    Bala]]]

    தமிழில் விஜய் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.. உலக அளவில் பார்த்தால் இவரையும் தாண்டி ஹிந்தியில் தற்போது அக்ஷய்குமாரும், ஷாருக்கானும், சல்மான்கானும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்..!

    ReplyDelete
  35. [[[Jayadev Das said...

    அண்ணே இவரோட முந்தைய படம் ஒன்றை [பேரு..... தெரியல!] சன் பிக்சர்ஸ்காரனுங்க AVMகிட்ட இருந்து வாங்கி அதிலுள்ள ரசிகர்களைத் திருத்திப்படுத்தும் சில காட்சிகளை நீக்கிவிட்டு, அதோ இதோ என்று ரிலீஸ் தேதியை இழுத்தடித்து பின்னர் நல்ல ரேட்டுக்கு [ஓவர் ரேட்டுக்கு] வேறு எவன் தலையிலோ கட்டிவிட்டு, வாங்கியவர்களும் விஜயும் தலைமேல் துண்டு போட்டு கொண்டு அழுமாறு செய்து விட்டார்களாமே!! மொத்தத்தில் விசையை உருப்படாமல் செய்ய வேண்டுமென்பது மஞ்சள் துண்டார் குடும்பத்தின் நோக்கம் அதனால் இவர் அவர்களைப் பகைத்துக் கொண்டுள்ளார்! எனக்கு ரெண்டு விஷயம் ஜீரணிக்கவே முடியலே. ஒன்னு மஞ்சள் துண்டு குடும்பம் மொத்த தமிழகத்தையுமே கபளீகாரம் செய்யத் துணிந்து விட்டது, இன்னொன்னு விஜய் மாதிரி தன்னுடைய சினிமா ஓட பெண்களை அப்படியும் இப்படியுமா காட்டிய ஒருத்தன் மக்களுக்குச் சேவை செய்து ஓடாய் தேய்ந்து போக நினைப்பது. இவனுங்க வந்து மக்களைக் காப்பாத்தப் போறானுங்க. சிரிப்பும் வேதனையும் சேர்ந்து வருது.]]]

    ம்ஹூம்... ஒண்ணு அராஜகம்.. இன்னொன்னு சினிமா.. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கிறீங்க..? நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல..!

    ReplyDelete
  36. [[[krubha said...

    //லோ பட்ஜெட் படங்களையும், டப்பிங் ஆங்கிலப் படங்களையும் மட்டுமே திரையிட்டு வரும் சென்னை, ஜாபர்கான்பேட்டை விஜயா தியேட்டரில் 'காவலன்' ரிலீஸ் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.//

    பேரறிஞர் கமல் அவர்களில்
    “ஆளவந்தான்” கூட அங்க ரிலீஸ் ஆச்சி சார்.]]]

    தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  37. ***அவர் தொழில் அவர் பண்றாரு. அதுக்கு இடைஞ்சல்ன்னா அவர் வெளில சொல்லத்தான் செய்வாரு.* இல்லாட்டி சொல்லாமலும் செய்யலாம். அது அவரோட இஷ்டம்..! மக்களுக்குப் பிடித்தமான, நெருக்கமான துறைல இருக்கிறதாலதான் சினிமாக்காரங்க கல்லடி படுறாங்க.. அவ்வளவுதான்..!***

    கடந்த கேள்வியில் நீங்க என்னவோ பதிவர் நிலையை விளக்கச் சொன்னீங்கனு நெனச்சேன். இல்லை போல இருக்கு! விஜய்க்கு வக்காலத்து வாங்குறீங்கனு இப்பொத்தான் புரியுது! தொடருங்கள் உங்க பணியை!

    ஆமா நீங்க ஒரு "அழகுசான்றிதழ்" அவருக்கு கொடுத்து இருக்கீங்களே! யப்பா!!!உங்க அப்பன் முருகன்கூட "ஜெலஸ்" ஆயி உங்களை ஏதாவது செய்தாலும் செய்வார். பார்த்துங்க!

    ReplyDelete
  38. [[[வருண் said...

    ***அவர் தொழில் அவர் பண்றாரு. அதுக்கு இடைஞ்சல்ன்னா அவர் வெளில சொல்லத்தான் செய்வாரு.* இல்லாட்டி சொல்லாமலும் செய்யலாம். அது அவரோட இஷ்டம்..! மக்களுக்குப் பிடித்தமான, நெருக்கமான துறைல இருக்கிறதாலதான் சினிமாக்காரங்க கல்லடி படுறாங்க.. அவ்வளவுதான்..!***

    கடந்த கேள்வியில் நீங்க என்னவோ பதிவர் நிலையை விளக்கச் சொன்னீங்கனு நெனச்சேன். இல்லை போல இருக்கு! விஜய்க்கு வக்காலத்து வாங்குறீங்கனு இப்பொத்தான் புரியுது! தொடருங்கள் உங்க பணியை!]]]

    சினிமாத் துறையிலேயே இருப்பதால் உண்மையைத்தான் பேச முடியும். வெளியில் இருந்தால் எதையும் பேசலாம் வருண்..!

    [[[ஆமா நீங்க ஒரு "அழகு சான்றிதழ்" அவருக்கு கொடுத்து இருக்கீங்களே! யப்பா!!! உங்க அப்பன் முருகன்கூட "ஜெலஸ்" ஆயி உங்களை ஏதாவது செய்தாலும் செய்வார். பார்த்துங்க!]]]

    ஒவ்வொருவரின் பார்வையும் வேறு வேறுதானே..?

    ReplyDelete