Pages

Tuesday, January 04, 2011

இரத்தச்சரித்திரம் - வில்லன் சூரியநாராயணரெட்டி படுகொலை..!

04-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

 

எது நடக்கக் கூடாது என்று ஆந்திராவின் முன்னாள் முதல்வர்கள் ராஜசேகர ரெட்டியும், சந்திரபாபு நாயுடுவும் நினைத்தார்களோ அது இன்றைக்கு ஹைதராபாத்தில் நடந்தேறிவிட்டது.

சாகத்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு 10.45 மணிக்குத்தான் வீடு திரும்பினேன். சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல ஜிமெயிலை திறந்தவுடன் எனது இரத்தசரித்திரம் பதிவுக்கு சீனு என்னும் தோழர் பின்னூட்டம் போட்டிருந்தார். எப்போதும் வருவது போலத்தான்  இருக்கும் என்று திறந்தால் "பிரேக்கிங் நியூஸ் : சூரி படுகொலை" என்று இருந்தது. ஒரு கணம் நெஞ்சடைத்துவிட்டது.




கொஞ்சம் ஆச்சரியம்.. நிறைய அதிர்ச்சி. ஏனெனில், ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் அரங்கத்தில் இருந்து வீடு திரும்பியவரையிலும் நான் இந்தக் கட்டுரையை நினைத்தபடியேதான் வந்தேன். காரணம், விழா முடிந்த பின்பு தோழர் அரங்கசாமியால் எழுத்தாளர் ஜெயமோகனிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டேன். அப்போது ஜெயமோகன் "உங்களுடைய இரத்தச்சரித்திரம் கட்டுரை நல்லாயிருந்தது. ரொம்ப நல்லாயிருந்தது" என்று பாராட்டினார்.

ஒரு பெரும் எழுத்தாளர் பாராட்டிவிட்டாரே என்கிற ஒருவித சந்தோஷத்தோடு வீடு வந்து சேர்ந்தவனுக்கு, இப்படியொரு தகவல் கிடைத்தால் அதிர்ச்சியாக இருக்காதா..?

இன்று மதியம் தனது வழக்கறிஞரை அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்தித்துவிட்டு சனத்நகரில் இருந்து யூசுப்குடா நோக்கிச் செல்லும் பாதையில் இருக்கும் நவோதயா காலனியருகே சிட்டி சென்டர் அருகே காரில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார் மெட்டலச்செருவூ சூரியநாராயணரெட்டி.

மதியம் 3.30 மணியளவில் நடந்த துப்பாக்கித் தாக்குதலில் படுகாயமடைந்து மயக்கமடைந்த சூழ்நிலையில் ஜூப்லி ஹிஸ்ல் பகுதியில் இருக்கும் அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் சூரி.
ஏராளமான ரத்தம் சிந்தியிருந்ததால் சிகிச்சை பலனில்லாமல்,  இரவு 7.50 மணியளவில் உயிரிழந்திருக்கிறார் சூரி.




முதலில் இந்தச் சம்பவம் பற்றியச் செய்திகள் கிடைத்ததும் இது நிச்சயம் பரிதலா ரவியின் ஆதரவாளர்கள்தான் செய்திருப்பார்கள் என்று போலீஸ் உட்பட அனைவருமே நம்பித்தான் இருந்தார்கள். ஆனால் அப்பலோ மருத்துவமனைக்கு சூரியைக் கொண்டு வந்து சேர்த்த சூரியின் கார் டிரைவர் சொன்ன தகவல்தான் போலீஸையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.



காரின் பின் சீட்டில் அமர்ந்து வந்த பானுகிரண் என்பவர்தான் சூரியைச் சுட்டார் என்று டிரைவர் சொல்ல இதென்ன புதுக் கதை என்று திகிலடித்துப் போயுள்ளன மீடியாக்கள்.

இரத்தச்சரித்திரம் உண்மைக் கதையில் சொல்லியபடியே அப்போதைய ஆந்திர முதலமைச்சர் ரோசையாவின் கருணையினால் பத்தாண்டுகளை சிறையில் கழித்துவிட்டபடியால் விடுதலைப் பட்டியலில் இடம் பெற்றார் சூரிய நாராயண ரெட்டி. ஆனாலும் பரிதலா ரவியின் படுகொலை வழக்கில் அவருக்கு நான்கு மாதங்கள் கழித்தே ஜாமீன் கிடைத்ததால் 2009, டிசம்பர் 24-ம் தேதியன்று நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து விடுதலையானார் சூரி.

சூரி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததில் இருந்து சுடப்படும் நேரம் வரையிலும் அவருடைய நிழல் போல, உதவியாளராக அவருடைய பின்னாலேயே தொடர்ந்து கொண்டிருந்தவர்தான் இந்த பானுகிரண். டிரைவர் தற்போது கொடுத்திருக்கும் வாக்குமூலத்தின்படி அந்த சிட்டி சென்டர் அருகே வந்தவுடன் பானு சூரியின் தலையின் பின்பக்கத்தில் இரண்டு முறையும், நெஞ்சில் ஒரு முறையும் பாயிண்ட் ரேஞ்ச் என்று சொல்லப்படும் மிக நெருக்கத்தில் வைத்துச் சுட்டுவிட்டு காரின் கதவைத் திறந்து கொண்டு ஓடி விட்டதாகச் சொல்லியிருக்கிறார்.

2009-ல் வெளியே வந்த சூரியும் சும்மா இல்லை. பல்வேறு டிவிக்காரர்களை அழைத்து தனது காரிலேயே ஹைதரபாத்தில் ஜாலியாக சுற்றியபடியே பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். டிவி அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் பேட்டியளித்து வந்தார்.

அதிகம் வெளியில் வர வேண்டாம் என்று அவரது ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டும் "இது அனந்தப்பூர் இல்லை.. ஹைதரபாத்.." என்று வெடிச் சிரிப்புடன் சொல்லி வந்திருக்கிறார்.

ஆனாலும் தனது ஆதரவாளர்கள் 3 அல்லது 4 பேர் சூழவோதான் எங்கே சென்றாலும் சென்று வந்திருக்கிறார். ரத்தச்சரித்திரம் திரைப்படத்தைக்கூட பெங்களூருக்குச் சென்றுதான் பார்த்து வந்திருக்கிறார்.


சூரி, தனது பாதுகாப்பில் சற்று அலட்சியமாக இருந்ததற்கு ஒரே காரணம், காங்கிரஸ் கட்சித் தலைமையும், தெலுங்கு தேசக் கட்சித் தலைமையும் இனி பழிக்குப் பழி இருக்காது என்று உத்தரவாதம் வழங்கியிருந்ததுதான்.

ஆனால் திடீரென்று 3 நாட்களுக்கு முன்பு NTV தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மட்டும், “இப்போது என்னைக் கொல்ல சதி நடப்பதாக அறிகிறேன். மாநில அரசு எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.. இது பற்றி நான் முதல்வரைச் சந்தித்து முறையிடப் போகிறேன்..” என்று கூறியுள்ளார் சூரியநாராயணரெட்டி.

2 வாரங்களுக்கு முன்புவரையிலும் இருந்த அவருடைய சுதந்திரப் போக்கில் இப்போது ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம்..? யார் அந்த சதிகாரர்கள்..? அதை உணர வைத்தது எது..? என்பதையெல்லாம் இனிமேல்தான் கண்டறிய வேண்டும்..

தற்போது ஆந்திர காவல்துறை பானுகிரணை ஹைதராபாத் முழுவதும் வலை வீசி தேடி வரும் அதே நேரத்தில், "இந்தக் கொலையைச் செய்தது பரிதலா ரவியின் ஆதரவாளர்கள் இல்லை. வேறு எந்தக் கட்சிக்காரர்களும் இல்லை" என்று திரும்பத் திரும்ப மீடியாக்கள் மூலமாகச் சொல்லி வருகிறது.



 

சூரியின் சொந்த மாவட்டமான அனந்தப்பூரில் காவல்துறை இப்போதே பலத்த போலீஸ் பாதுகாப்பை செய்து வருகிறது. பரிதலா ரவியின் வீட்டுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளதாம். பரிதலா ரவியின் மனைவி சுனிதாவிடம் சூரியின் படுகொலை பற்றி கருத்து கேட்டதற்கு அவர் எந்தவித பதிலையும் இதுவரையில் சொல்லவில்லை. விடியட்டும் என்று ஆந்திராவே காத்திருக்கிறது.

ஏற்கெனவே நாளை புதன்கிழமையன்று தெலுங்கானா பிரச்சினைக்காக அமைக்கப்பட்ட கிருஷ்ணா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதால் ஏற்படவிருக்கும் ரகளைகளை எதிர்பார்த்து துணை நிலை ராணுவத்தின் பல படைகளை ஆந்திரா முழுவதும் இறக்கி விட்டிருக்கும் ஆந்திர மாநில அரசு, இந்தக் கொலையினால் இன்னும் கொஞ்சம் அதிர்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

உண்மையாகவே இதுநாள்வரையிலும் சூரியின் தீவிர ஆதரவாளராக இருந்த பானுகிரண், ஒரே நாளில் எப்படி கொலையாளியாக மாறினார் என்பது அனைவருக்குமே சந்தேகம்தான். இன்றைய ஆந்திர அரசியல் நிலவரப்படி இந்தக் கொலையின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் பெரிய கை ஏதாவது இருக்கும் என்று நீங்களோ நானோ சந்தேகப்பட வேண்டாம். ஏற்கெனவே பட்டாச்சு..

ஜெகன்மோகன்ரெட்டிக்குச் சொந்தமான சாக்ஷி டிவி மட்டுமே “இந்தக் கொலையின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் பெரிய கைகள் இருக்கின்றன..” என்ற செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது. 


இன்றைக்கு விசாகப்பட்டிணத்தில் நடந்த கட்சிப் பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு விமான நிலையம் திரும்பிக் கொண்டிருந்த ஜெகன்மோகன்ரெட்டியிடம் சூரி கொலை செய்யப்பட்ட செய்தி சொல்லப்பட பையன் ஆடிப் போய்விட்டாராம். உடனடியாக ஜெகன்மோகன்ரெட்டிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

சூரியிடம், பரிதலா ரவியை போட்டுத் தள்ளச் சொன்னதே ஜெகன்மோகன்ரெட்டிதான் என்பது இப்போதுவரையிலும் பரிதலா ரவியின் குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்களும் சொல்லி வரும் குற்றச்சாட்டு.



அனந்தப்பூர் வழியாக கர்நாடகாவில் இருக்கும் தங்களது குடும்ப கனிமச் சுரங்கங்களை சுமந்து வரும் லாரிகளை வழிமறித்து கப்பம் கட்ட வைக்கும் எதேச்சதிகாரத்தை எதிர்த்துத்தான் பரிதலா ரவியுடன் தனது வயதுக்கேற்ற வேகத்தில் மோதினார் ஜெகன்மோகன்ரெட்டி.




ஆனால் “உன் அப்பனே என்னைப் பார்த்து பயந்தவன். உன் சேட்டையை கடப்பா மாவட்டத்தோட வைச்சுக்க.. மவனே எல்லை தாண்டீன்னா எதுவும் நடக்கும்..” என்று ஒரு பொதுக்கூட்டத்தில் எச்சரிக்கைவிடும் அளவுக்கு பரிதலா ரவியைச் சூடாக்கினார் ஜெகன்மோகன்ரெட்டி.

இதனாலேயே தனது குடும்பத்தில் படுகொலைகள் விழுகலாம் என்ற மாநில உளவுத்துறையின் எச்சரிக்கைக்குப் பயந்துதான் ஜெகன்மோகன்ரெட்டியை பத்திரமாக பெங்களூரில் வைத்திருந்து பாதுகாத்து வந்தார் ராஜசேகரரெட்டி.

எத்தனை நாட்கள்தான் அண்டை மாநிலத்தில் குப்பை கொட்டுவது என்று நினைத்த கோபத்தில்தான் ராஜசேகரரெட்டிக்கே தெரியாமல் செர்லபள்ளி சிறைச்சாலைக்கு ஒரு பகல் நேரத்தில் மாறுவேடத்தில் நேரில் வந்து சூரியைச் சந்தித்து பரிதலா ரவியைப் போட்டுத் தள்ளும் அசைன்மெண்ட்டை ஜெகன்மோகன் ரெட்டி கொடுத்தார் என்கின்றன ஆந்திர மாநில புலனாய்வு பத்திரிகைகள். உண்மையில் பரிதலா ரவியின் மரணத்திற்குப் பின்பே தைரியமாக ஆந்திராவில் கால் பதித்தார் ஜெகன்மோகன்ரெட்டி.

எப்படியும் பழிக்குப் பழி வருமே என்று பயந்துதான் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் நேரில் பேசி 2009-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பரிதலா ரவியின் மனைவிக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்றும், தன் பக்கம் சூரியின் மனைவிக்கு தானும் சீட் கொடுக்க மாட்டேன் என்றும் ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்ஷிப் போட்டு மகனைப் பாதுகாத்து வந்தார் ராஜசேகர ரெட்டி.

ராஜசேகர ரெட்டியின் மரணத்தின்போதும் அது ஏன் பரிதலா ரவியின் கொலைக்குப் பழிக்குப் பழியான கதையாக இருக்கக் கூடாது என்று ஆந்திரப் பத்திரிகைகள் எழுதின. இதனை முதலில் மறுத்து வந்த ஜெகன்மோகன்ரெட்டி, சமீபத்தில் இத்தாலி அம்மாவுடன் பிணக்கு ஏற்பட்டவுடன்தான் “எனது தந்தையின் இறப்பு திட்டமிட்ட படுகொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வருகிறது..” என்று சவுண்டுவிட துவங்கியிருக்கிறார்.

இன்றைக்கு நடந்திருக்கும் இந்தப் படுகொலையினால் புதன்கிழமையன்று வெளியாகவிருக்கும் கிருஷ்ணா அறிக்கை வெளியீடு ஒருவேளை தள்ளிப் போனாலும் போகலாம். அல்லது கிருஷ்ணா அறிக்கையின் தாக்கத்தை இந்தப் படுகொலை ஆந்திர மக்களிடமிருந்து கொஞ்சம் விலக்கி வைக்கும் என்கிற தந்திரத்தோடு நடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

அத்தோடு தனிக்கட்சி நடத்தும் முஸ்தீபுகளோடு மாநிலம் முழுவதும் ரவுண்டு வரும் ஜெகன்மோகன்ரெட்டிக்கு ஆளும் தரப்பு விடும் எச்சரிக்கையாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் சிக்னல் கொடுத்தால் போதும் என்கிற இந்த எச்சரிக்கை ஜெகன்மோகன்ரெட்டிக்குத்தான் என்கிறார்கள் இந்தப் பழிக்குப் பழி வாங்கும் ரத்தச்சரித்திரத்தின் கதையை முழுமையாகத் தெரிந்தவர்கள்.

ஏனெனில் இந்தப் பழி வாங்கும் போராட்டத்தின் உச்சக்கட்ட குறியில் தற்போது உயிருடன் இருப்பவர் ஜெகன்மோகன்ரெட்டி மட்டுமே..!!!

67 comments:

  1. அதிர்ச்சியான பழிவாங்கல்... என்று முடியுமோ

    ReplyDelete
  2. மார்னிங் நியூஸ் கேக்கும் போது உங்க பதிவு ஞாபகம் தான் வந்தது ...வினை விதைத்தவன் விதை அறுப்பான் ... இது தான ...

    ReplyDelete
  3. ஏன் தான் இப்படி ரத்தவெறிக்கொண்டு அலைகிறார்களோ..

    ReplyDelete
  4. எதுக்கு இந்த மாதிரி படத்தை எடுக்கணும்...?

    ReplyDelete
  5. இதை படமாக எடுத்தவர்கள் தார்மீக ரீதியில் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்களே...


    உண்மையான உ.தமிழன் யார்? அதிர்ச்சி சம்பவம் !!!!!!

    ReplyDelete
  6. //அல்லது கிருஷ்ணா அறிக்கையின் தாக்கத்தை இந்தப் படுகொலை ஆந்திர மக்களிடமிருந்து கொஞ்சம் விலக்கி வைக்கும் என்கிற தந்திரத்தோடு நடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

    அத்தோடு தனிக்கட்சி நடத்தும் முஸ்தீபுகளோடு மாநிலம் முழுவதும் ரவுண்டு வரும் ஜெகன்மோகன்ரெட்டிக்கு ஆளும் தரப்பு விடும் எச்சரிக்கையாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.

    //

    இதுதான் எனக்கும் தோணுது.

    ReplyDelete
  7. என்ன அண்ணே மைனஸ் ஒட்டு பறக்குது. என்னதான் பிரச்சனை. போட்டு தள்ளிடலாமா?

    ReplyDelete
  8. சூரியையும் போட்டாச்சா...ஏன்னு பாணுகிரண்ட்ட கேட்டு எழுதுங்கண்ணே.

    ReplyDelete
  9. அண்ணே,
    பானுகிரண் பரிதலாவின் ஆட்களால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கலாம் என்பதுதான் எல்லாருடைய கருத்தும்..
    ஹைதிராபாத்தில் உள்ள என் நண்பன் மூலமா கேள்விபட்டது வேறு ஒரு கதை..
    அது என்னன்னா, ஜெகன்மொகனுக்கும் சூரிக்குமே ஏதோ முட்டல் .. அதனால ஜெகன் தான் ஆள் வச்சு சூரி கதைய முடிச்சிட்டான் அப்படின்னு வேறுஒரு கோணமும் சுற்றி திரிகிறதாம் ஆந்திராவில்..
    (தற்போதைய சூழலில், பரிதலாவின் கதை முடிந்தபிறகு, சூரியின் உதவி தேவைப்படும் அளவிற்கு ஜெகனுக்கு எவ்வித தேவையும் இல்லை)..

    ReplyDelete
  10. ஒரு வழியாக ரத்த சரித்திரம் முடிவுக்கு வந்து விட்டது. ரத்த சரித்திரம் 3 க்கு இந்நேரம் பூஜை போட்டிருப்பார்கள். ஜெகன்மோகன் ரெட்டிகாருக்குத்தான் எத்தனை பிரச்னை. பாவம்.

    ReplyDelete
  11. என்னுடன் வேலை பார்க்கும் ஆந்திராக்காரர் செய்தியை சொன்னதுமே உங்கள் ப்ளாக் தான் பார்த்தேன்.
    எதிர்பார்த்ததை போலவே போஸ்ட் போட்டிருக்கிறீர்கள்..

    அவருக்கு மிக ஆச்சரியம்...

    ReplyDelete
  12. [[[அகில் பூங்குன்றன் said...
    அதிர்ச்சியான பழி வாங்கல்... என்று முடியுமோ..?]]]

    இப்போதைக்கு முடியாது அகில்..

    ReplyDelete
  13. [[[SurveySan said...

    interesting.]]]

    என்னத்த சொல்ல..?

    ReplyDelete
  14. [[[globetrotter said...
    மார்னிங் நியூஸ் கேக்கும்போது உங்க பதிவு ஞாபகம்தான் வந்தது. வினை விதைத்தவன் விதை அறுப்பான். இதுதான்.]]]

    உண்மைதான் நண்பரே..!

    ReplyDelete
  15. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    ஏன்தான் இப்படி ரத்த வெறி கொண்டு அலைகிறார்களோ..]]]

    பழிக்குப் பழி உணர்வு அனைவரது ரத்தத்திலும் ஊறிக் கிடக்கிறது யோகேஷ்.. வெளிப்படையாக்கும் சூழல் இருக்குமிடத்தில் அது வெளிப்பட்டே தீரும்..!

    ReplyDelete
  16. [[[Philosophy Prabhakaran said...
    எதுக்கு இந்த மாதிரி படத்தை எடுக்கணும்...?]]]

    வர்மா, பப்ளிசிட்டிக்காக எடுத்தார். அவ்வளவுதான்.

    ReplyDelete
  17. [[[பார்வையாளன் said...
    இதை படமாக எடுத்தவர்கள் தார்மீக ரீதியில் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்களே...]]]

    சினிமா எடுத்ததினால் இந்தக் கொலை நடைபெறவில்லை.. வர்மாவைக் குறை சொல்லி என்ன புண்ணியம்..?

    ReplyDelete
  18. [[[Indian said...

    //அல்லது கிருஷ்ணா அறிக்கையின் தாக்கத்தை இந்தப் படுகொலை ஆந்திர மக்களிடமிருந்து கொஞ்சம் விலக்கி வைக்கும் என்கிற தந்திரத்தோடு நடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

    அத்தோடு தனிக்கட்சி நடத்தும் முஸ்தீபுகளோடு மாநிலம் முழுவதும் ரவுண்டு வரும் ஜெகன்மோகன்ரெட்டிக்கு ஆளும் தரப்பு விடும் எச்சரிக்கையாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.//

    இதுதான் எனக்கும் தோணுது.]]]

    தனிப்பட்ட விரோதத்தோடு, அரசியல் காரணங்களும் இணைந்திருக்கலாம்..!

    ReplyDelete
  19. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    என்ன அண்ணே மைனஸ் ஒட்டு பறக்குது. என்னதான் பிரச்சனை. போட்டு தள்ளிடலாமா?]]]

    ம்.. ஆனால் அதுக்குப் பின்னாடி என்னைத் தேடி யாரும் வரக் கூடாது..!

    ReplyDelete
  20. [[[செங்கோவி said...
    சூரியையும் போட்டாச்சா. ஏன்னு பாணு கிரண்ட்ட கேட்டு எழுதுங்கண்ணே.]]]

    கேட்டிருவோம். மொதல்ல ஆளு சிக்கணுமே..?

    ReplyDelete
  21. இது போன்ற கதைகளைக் கேட்பதால், பார்ப்பதால், நிகழ்வுகளை அவதானிப்பதால் நமக்கென்ன பயன்??

    ReplyDelete
  22. [[[பிரசன்னா said...

    அண்ணே, பானுகிரண் பரிதலாவின் ஆட்களால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கலாம் என்பதுதான் எல்லாருடைய கருத்தும்..

    ஹைதிராபாத்தில் உள்ள என் நண்பன் மூலமா கேள்விபட்டது வேறு ஒரு கதை..

    அது என்னன்னா, ஜெகன் மொகனுக்கும் சூரிக்குமே ஏதோ முட்டல் .. அதனால ஜெகன்தான் ஆள் வச்சு சூரி கதைய முடிச்சிட்டான் அப்படின்னு வேறு ஒரு கோணமும் சுற்றி திரிகிறதாம் ஆந்திராவில்..

    (தற்போதைய சூழலில், பரிதலாவின் கதை முடிந்த பிறகு, சூரியின் உதவி தேவைப்படும் அளவிற்கு ஜெகனுக்கு எவ்வித தேவையும் இல்லை)]]]

    பானுகிரண் பிடிபட்டால் தெரிந்துவிடுமே உண்மை என்னவென்று..! பார்ப்போம்..!

    ReplyDelete
  23. [[[படகோட்டி said...
    ஒரு வழியாக ரத்த சரித்திரம் முடிவுக்கு வந்துவிட்டது. ரத்த சரித்திரம் 3-க்கு இந்நேரம் பூஜை போட்டிருப்பார்கள். ஜெகன்மோகன் ரெட்டிகாருக்குத்தான் எத்தனை பிரச்னை. பாவம்.]]]

    ச்சும்மா பிரச்சினைகள் வராதே.. தாங்களே இழுத்துக் கொண்டால்தானே தொடர்ந்து வரும்.. இது முன்னொரு காலத்தில் விதைத்த வினையின் தொடர்ச்சிதான்..!

    ReplyDelete
  24. [[[VELAN said...
    என்னுடன் வேலை பார்க்கும் ஆந்திராக்காரர் செய்தியை சொன்னதுமே உங்கள் ப்ளாக்தான் பார்த்தேன்.
    எதிர்பார்த்ததை போலவே போஸ்ட் போட்டிருக்கிறீர்கள். அவருக்கு மிக ஆச்சரியம்.]]]

    அப்டேட்ஸ் செஞ்சாகணும்ல்ல வேலன் ஸார்..!

    ReplyDelete
  25. [[[ரிஷி said...
    இது போன்ற கதைகளைக் கேட்பதால், பார்ப்பதால், நிகழ்வுகளை அவதானிப்பதால் நமக்கென்ன பயன்??]]]

    நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வது போலத்தான்.. வேறென்ன ரிஷி..?

    ReplyDelete
  26. /// ஏனெனில் இப்போது இந்தப் பழி வாங்கும் போராட்டத்தின் உச்சக்கட்ட குறியாக உயிருடன் இருப்பவர் ஜெகன்மோகன்ரெட்டி மட்டுமே.. ///

    அத்தோடு முடியும் என்ற நினைக்கிறீங்க, அவங்க அவங்க வாரிசுங்க வருவாங்களே..

    ReplyDelete
  27. அண்ணே வணக்கம்.

    மிக நீண்ட கதை. அதை சுவாரஸ்யம் குன்றாமல் தாங்கள் தந்த விதம் அதைவிட அழகு.
    உங்களின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்

    ReplyDelete
  28. ///உண்மைத்தமிழன் said...

    [[[ரிஷி said...
    இது போன்ற கதைகளைக் கேட்பதால், பார்ப்பதால், நிகழ்வுகளை அவதானிப்பதால் நமக்கென்ன பயன்??]]]

    நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வது போலத்தான்.. வேறென்ன ரிஷி..? ///

    ஹும்ம்...!

    ReplyDelete
  29. ஒன்னு மட்டும் தெரியுது. செத்தவங்கள்ல எவனும் நல்லவன் கிடையாது...

    ReplyDelete
  30. Mullai periyar prachanai kurithu ezhudinaal nandraga irukkum:))))

    ReplyDelete
  31. இந்தப் படுகொலைகளைப் பார்க்கும் போது, கம்யூனிசம் கொண்டு வருகிறேன்
    பேர்வழி என்று நக்சல்கள் கடைசியில் மாபியா அரசியல் வாதிகளின் கையில் சிக்கி எல்லா விசயத்தையும் போட்டுக் குழப்பி நாட்டை ரத்தக் களறியாக்கி
    ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாகும் பேரழிவை கொண்டு வந்துவிடுவார்களோ என்றுதான் தோன்றுகிறது.. நம் நாட்டை போன்ற ஒரு பிற்போக்குத்தனமான விசயம் அறியாத அப்பாவி மக்கள் வசிக்கும் நாட்டில் நக்சலிசம் எடுபடுமா என்பதை அறிவு ஜீவிகள் சிந்திக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. காந்திய அகிம்சையே சரியான வழி என்றும் தோன்றுகிறது.

    ReplyDelete
  32. @KANTHANAAR,

    என்னாது காந்திய வழியா? அப்ப நீங்க இந்து தீவிரவாதி தான்... ;)

    ReplyDelete
  33. [[[பன்-பட்டர்-ஜாம் said...

    ///ஏனெனில் இப்போது இந்தப் பழி வாங்கும் போராட்டத்தின் உச்சக்கட்ட குறியாக உயிருடன் இருப்பவர் ஜெகன்மோகன்ரெட்டி மட்டுமே.. ///

    அத்தோடு முடியும் என்ற நினைக்கிறீங்க, அவங்க அவங்க வாரிசுங்க வருவாங்களே..]]]

    இந்த விளையாட்டு இந்தத் தலைமுறையுடன் முடியும் என்றே நினைக்கிறேன்..!

    ReplyDelete
  34. [[[Indian Share Market said...
    அண்ணே வணக்கம். மிக நீண்ட கதை. அதை சுவாரஸ்யம் குன்றாமல் தாங்கள் தந்த விதம் அதைவிட அழகு. உங்களின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்.]]]

    நன்றிகள் நண்பரே..!

    ReplyDelete
  35. [[[ரிஷி said...

    //உண்மைத்தமிழன் said...

    [[[ரிஷி said...
    இது போன்ற கதைகளைக் கேட்பதால், பார்ப்பதால், நிகழ்வுகளை அவதானிப்பதால் நமக்கென்ன பயன்??]]]

    நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வது போலத்தான்.. வேறென்ன ரிஷி?///

    ஹும்ம்...!]]

    சலிச்சுக்காதீங்க.. இதுக்கே இப்படின்னா வரப் போற தேர்தல் கூத்துக்களை எப்படிப் படிக்கப் போறீங்க..?

    ReplyDelete
  36. [[[சீனு said...
    ஒன்னு மட்டும் தெரியுது. செத்தவங்கள்ல எவனும் நல்லவன் கிடையாது...]]]

    உண்மை. கத்தியை எடுத்தவன் கத்தியினால்தான் சாவான்..! எத்தனை, எத்தனை உதாரணங்கள் வந்தாலும் மக்கள் திருந்த மறுக்கிறார்களே..?!

    ReplyDelete
  37. [[[Sai said...
    Mullai periyar prachanai kurithu ezhudinaal nandraga irukkum:))))]]]

    அது பற்றிய முழுத் தகவல்களையும் திரட்டி வருகிறேன். கிடைத்த பின்பு எழுதுகிறேன் நண்பரே..!

    ReplyDelete
  38. [[[KANTHANAAR said...
    இந்தப் படுகொலைகளைப் பார்க்கும் போது, கம்யூனிசம் கொண்டு வருகிறேன் பேர்வழி என்று நக்சல்கள் கடைசியில் மாபியா அரசியல்வாதிகளின் கையில் சிக்கி எல்லா விசயத்தையும் போட்டுக் குழப்பி நாட்டை ரத்தக் களறியாக்கி
    ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாகும் பேரழிவை கொண்டு வந்துவிடுவார்களோ என்றுதான் தோன்றுகிறது.

    நம் நாட்டை போன்ற ஒரு பிற்போக்குத்தனமான விசயம் அறியாத அப்பாவி மக்கள் வசிக்கும் நாட்டில் நக்சலிசம் எடுபடுமா என்பதை அறிவுஜீவிகள் சிந்திக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. காந்திய அகிம்சையே சரியான வழி என்றும் தோன்றுகிறது.]]]

    அஹிம்சை எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதுதான்.. அதே சமயம் இந்தக் கொள்கையில் மக்களுக்கும் பிடிமானம் இருக்க வேண்டும். இல்லையெனில் அது வீண்தான்..!

    ReplyDelete
  39. [[[சீனு said...

    @KANTHANAAR,

    என்னாது காந்திய வழியா? அப்ப நீங்க இந்து தீவிரவாதி தான்... ;)]]]

    அப்போ காந்தியார்தான் தலைமை தீவிரவாதியா..?

    ReplyDelete
  40. சூரியின் நேற்றைய‌ கொலைக்குப் பின்னால் இவ்வ‌ள‌வு அர‌சிய‌ல் இருக்கிற‌தா? அப்ப‌ இதுவ‌ரை த‌மிழ‌கம் பெட்ட‌ர் தானோ!!
    என்னது, முதுகுள‌த்தூர் க‌ல‌வ‌ர‌ம்,இம்மானுவேல்,கீழ‌ வெண்ம‌ணி, தாமிர‌ப‌ர‌ணி, த‌.கி, தின‌க‌ர‌ன்,ப‌னையூர், ஓ.. இங்க‌யும் இப்ப‌டித்தான் ந‌ட‌க்குதா அர‌சிய‌ல்?

    ReplyDelete
  41. Padivirku samandam illadha pinnuttu alippadhal tavaraga enna vendaam.........

    Ippozhudhu Tamizhnattil irukkum arasiyal vyadhigalul Vaiko satru nallavar, nermaiyanavar endru tondrugiradhu!! Ungal karuthu enna?? Makkal avarukku aadharavu taraadadarkhu kaaranam enna?(J vudanana kottani tavirthu..)

    ReplyDelete
  42. கௌண்டமணி பாசையில் சொன்னால் அட அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா - இல்லைனா தான் அதிசயம்

    ReplyDelete
  43. பகிர்வுக்கு நன்றி!

    எல்லாம் ஒரு குசும்புதான்!!

    ReplyDelete
  44. அண்ணே உண்மையில் சினிமாவில் வருவது போல என்பாங்க, உங்களின் இரண்டு பதிவும் படிச்சதும் ஈரக்குலை பதறுது இவ்வளவு பயங்கரமான உலகமா

    ReplyDelete
  45. இன்றைய தட்ஸ் தமிழில்..."ரத்த சரித்திரம் படம் ஆரம்பிக்கும் முன், அந்த கதாபாத்திரம் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள சூரியை சிறைக்கே போய் சந்தித்தவர் சூர்யா. அவரிடம்தான் ரவுடி கெட்டப்புக்கு ட்ரெயினிங் எடுத்துக் கொண்டதாக பெருமையுடன் பிரஸ் மீட்டில் சூர்யா தெரிவித்தார்.

    இன்னொரு பக்கம், ரத்த சரித்திரம் படம்தான் சூரியின் மரணத்துக்கு காரணமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அடங்கிக் கிடந்த பகையை இந்தப் படம் விசிறிவிட்டது என்றும், சூரி சுட்டுக் கொள்ளப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என அவரது ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் கூறினர்."

    கட்டாயம் இது காரணமாக இருக்கலாம் என்றே நினைக்கிறேன். RGV, கௌதம் மேனன் போன்றவர்கள் திருந்துவார்களா?

    ReplyDelete
  46. //இதனாலேயே தனது குடும்பத்தில் படுகொலைகள் விழுகலாம்//
    விழலாம் என்பது தானே சரியான தமிழ்ச் சொல்?

    ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் தாக்கத்தை மழுங்கடிக்கவே இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது தகவலறிந்த வட்டாரங்கள் பரவலாகத் தரும் ஊகம். ஆனால் பானுகிரண் என்கிற காயை நகர்த்தியவர்கள் யார், இந்தக் கொலை மூலம் எந்த விஷயத்திலிருந்து கவனம் திசைதிருப்பப்பட முயற்சி நடக்கிறது, என்பது முக்கியமான கேள்வி!

    ReplyDelete
  47. ரத்த சரித்திரம் தொடரும்...

    ReplyDelete
  48. [[[vasan said...
    சூரியின் நேற்றைய‌ கொலைக்குப் பின்னால் இவ்வ‌ள‌வு அர‌சிய‌ல் இருக்கிற‌தா? அப்ப‌ இதுவ‌ரை த‌மிழ‌கம் பெட்ட‌ர்தானோ!!]]]

    இல்லை. இங்கேயும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அரசியல் படுகொலைகள், ரவுடிகளுக்கு இடையேயான மோதல்கள், அமைச்சர்களே ரவுடித்தனம் செய்வது.. மக்கள் பேசாமடந்தைகளாக இருப்பது என்று எல்லாமே இங்கும் நடந்துதான் வருகிறது..!

    ReplyDelete
  49. [[[Sai said...
    Padivirku samandam illadha pinnuttu alippadhal tavaraga enna vendaam.

    Ippozhudhu Tamizhnattil irukkum arasiyal vyadhigalul Vaiko satru nallavar, nermaiyanavar endru tondrugiradhu!! Ungal karuthu enna??]]]

    என் கருத்தும் இதுதான். ஆனால் பெருவாரியான மக்களை அவர் கவரவில்லை. இதுதான் அவரது குறை.

    [[[Makkal avarukku aadharavu taraadadarkhu kaaranam enna?(J vudanana kottani tavirthu..)]]]

    ஜெயலலிதாவுடனான கூட்டணி ஒரு பக்கம் இருந்தாலும், தன்னை முன்னிறுத்தி மக்களிடம் கட்சியைக் கொண்டு போய்ச் சேர்க்கத் தெரியவில்லை அவருக்கு.. ஈழமே பிரதானமாகத் தெரிகிறது.. இதுதான் அவரது பிரச்சினை..!

    ReplyDelete
  50. [[[மனசாட்சி said...
    கௌண்டமணி பாசையில் சொன்னால் அட அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா - இல்லைனாதான் அதிசயம்.]]]

    உண்மைதான். நமக்கு இதெல்லாம் சகஜமாப் போச்சு..!

    ReplyDelete
  51. [[[பழமைபேசி said...
    பகிர்வுக்கு நன்றி! எல்லாம் ஒரு குசும்புதான்!!]]]

    ஏன் முந்தின கமெண்ட்டை நீக்கினீங்க தம்பி..? நல்லாத்தான இருந்தது..!

    ReplyDelete
  52. [[[கானா பிரபா said...
    அண்ணே உண்மையில் சினிமாவில் வருவது போல என்பாங்க, உங்களின் இரண்டு பதிவும் படிச்சதும் ஈரக்குலை பதறுது இவ்வளவு பயங்கரமான உலகமா?]]]

    ஹா.. ஹா.. இதெல்லாம் ஆந்திர மண்ணுல சகஜம்ன்னு சொல்லி சிரிக்கிறாங்க..!

    ReplyDelete
  53. [[[சீனு said...

    இன்றைய தட்ஸ் தமிழில்... "ரத்தசரித்திரம் படம் ஆரம்பிக்கும் முன், அந்த கதாபாத்திரம் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள சூரியை சிறைக்கே போய் சந்தித்தவர் சூர்யா. அவரிடம்தான் ரவுடி கெட்டப்புக்கு ட்ரெயினிங் எடுத்துக் கொண்டதாக பெருமையுடன் பிரஸ் மீட்டில் சூர்யா தெரிவித்தார்.

    இன்னொரு பக்கம், ரத்த சரித்திரம் படம்தான் சூரியின் மரணத்துக்கு காரணமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அடங்கிக் கிடந்த பகையை இந்தப் படம் விசிறிவிட்டது என்றும், சூரி சுட்டுக் கொள்ளப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என அவரது ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் கூறினர்."

    கட்டாயம் இது காரணமாக இருக்கலாம் என்றே நினைக்கிறேன். RGV, கௌதம் மேனன் போன்றவர்கள் திருந்துவார்களா?]]]

    இதில் கெளதம்மேனனை எதற்கு இழுக்குறீர்கள் தோழர்..?

    சூர்யா சிறைக்கே சென்று சூரியைச் சந்தித்தது ஓகேதான்.. ஒரு நடிகருக்குரிய பணியைத்தான் அவர் செய்திருக்கிறார். சூரிக்கு அவர் நன்சான்றிதழ் தரவில்லை என்றாலும் படத்தில் அவரை ரொம்பவே நல்லவராகக் காட்டிவிட்டதும் ரவி தரப்பு ஆதரவாளர்களை உசுப்பிவிட்டது..

    ஆனால் இந்தக் கொலை அவர்களால் நடத்தப்பட்டதில்லை. கொஞ்சம் பொறுத்திருங்கள். உண்மையான காரணம் வெளியே வரும்..!

    ReplyDelete
  54. [[[Arun Ambie said...

    //இதனாலேயே தனது குடும்பத்தில் படுகொலைகள் விழுகலாம்//

    விழலாம் என்பதுதானே சரியான தமிழ்ச் சொல்?]]]

    தெரியவில்லை ஸார்..!

    [[[ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் தாக்கத்தை மழுங்கடிக்கவே இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது தகவலறிந்த வட்டாரங்கள் பரவலாகத் தரும் ஊகம். ஆனால் பானுகிரண் என்கிற காயை நகர்த்தியவர்கள் யார், இந்தக் கொலை மூலம் எந்த விஷயத்திலிருந்து கவனம் திசை திருப்பப்பட முயற்சி நடக்கிறது, என்பது முக்கியமான கேள்வி!]]]

    இதற்கான விடை சீக்கிரம் கிடைக்கும்.. எதிர்பாருங்கள்..!

    ReplyDelete
  55. [[[ஜெகதீஸ்வரன். said...

    ரத்த சரித்திரம் தொடரும்...]]]

    தொடரும் போலத்தான் எனக்கும் தெரிகிறது..!

    ReplyDelete
  56. கௌதம் மேனன் போன்றவர்கள் தான் Closed to Reality-ங்கிற நெனப்புல புதுசு புதுசா கிரிமினல் ஐடியாக்களா கொடுப்பாரு. உதா, காக்க காக்க - கடத்தி ஒருத்தர கொல்றது, அப்புறம் இன்னொரு குழந்தையையும் கடத்தறது. அப்புறம் வே.வி.

    ReplyDelete
  57. \\சாந்தநகரில் இருந்து யூசுப்குடா நோக்கிச் செல்லும் பாதையில் இருக்கும் நவோதயா காலனியருகே சிட்டி சென்டர் அருகே காரில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார்//
    அது சாந்தனகர் இல்லை- சனத்னகர்

    \\ஆனால் “உன் அப்பனே என்னைப் பார்த்து பயந்தவன். உன் சேட்டையை கடப்பா மாவட்டத்தோட வைச்சுக்க.. மவனே எல்லை தாண்டீன்னா எதுவும் நடக்கும்..” என்று ஒரு பொதுக்கூட்டத்தில் எச்சரிக்கைவிடும் அளவுக்கு பரிதலா ரவியைச் சூடாக்கினார் ஜெகன்மோகன்ரெட்டி//

    சொன்னது யார்?

    ReplyDelete
  58. [[[சீனு said...
    கௌதம் மேனன் போன்றவர்கள்தான் Closed to Reality-ங்கிற நெனப்புல புதுசு புதுசா கிரிமினல் ஐடியாக்களா கொடுப்பாரு. உதா, காக்க காக்க - கடத்தி ஒருத்தர கொல்றது, அப்புறம் இன்னொரு குழந்தையையும் கடத்தறது. அப்புறம் வே.வி.]]]

    இப்படியெல்லாம் பார்த்தா ஒரு சினிமாகூட எடுக்க முடியாது சீனு..!

    ReplyDelete
  59. [[[ஆறுமுகம் said...

    \\சாந்தநகரில் இருந்து யூசுப்குடா நோக்கிச் செல்லும் பாதையில் இருக்கும் நவோதயா காலனியருகே சிட்டி சென்டர் அருகே காரில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார்//

    அது சாந்தனகர் இல்லை- சனத்னகர்]]]

    நன்றி திருத்திக் கொள்கிறேன்.

    \\ஆனால் “உன் அப்பனே என்னைப் பார்த்து பயந்தவன். உன் சேட்டையை கடப்பா மாவட்டத்தோட வைச்சுக்க.. மவனே எல்லை தாண்டீன்னா எதுவும் நடக்கும்..” என்று ஒரு பொதுக்கூட்டத்தில் எச்சரிக்கைவிடும் அளவுக்கு பரிதலா ரவியைச் சூடாக்கினார் ஜெகன்மோகன்ரெட்டி//

    சொன்னது யார்?]]]

    பரிதலா ரவி..!

    ReplyDelete
  60. பட்டப்பகலில் நடந்திருக்கு இந்தக் கொலை. :(

    ReplyDelete
  61. //இப்படியெல்லாம் பார்த்தா ஒரு சினிமாகூட எடுக்க முடியாது சீனு..!//

    என்ன பாஸ் சொல்றீங்க. இவங்களுக்குனு ஒரு பொறுப்பு இருக்கு. அதை மீறக்கூடாது என்பது என் எண்ணம். நாம் சினிமா பார்த்து கெட்டுப்போவதில்லையா என்ன? ரஜினி சிகரெட் ஸ்டைலா தூக்கி போடுறார்னு எத்தனை பேர் சிகரெட் பிடிக்க கத்துக்கிடாங்க. இது தமிழ் சினிமா ரசிகர்கள்கிட்ட மட்டும் இல்ல. எல்லா ஊருலையும் நடப்பது தான்.

    நீங்க சொல்ற மாதிரி இருந்தா எல்லாத்தையும் காட்டிறலாம். Closed to reality அப்படீனு சொல்லி பாய்ஸ்னு ஒரு படம் எடுத்தார் ஷங்கர். ஷங்கர் படம் குடும்பத்தோட பார்க்கலாம்னு எல்லோரும் குடும்பத்தோட போனாங்க. என்னாச்சு? அது மாதிரி தான்.

    ReplyDelete
  62. தேங்ஸ் சார். நானும் திருத்திக்கிக் கொண்டேன் தவறுதலான புரிதலை

    ReplyDelete
  63. [[[புதுகைத் தென்றல் said...
    பட்டப் பகலில் நடந்திருக்கு இந்தக் கொலை. :(]]]

    மாலை 5 மணிக்கு மேடம்..!

    ReplyDelete
  64. [[[சீனு said...

    //இப்படியெல்லாம் பார்த்தா ஒரு சினிமாகூட எடுக்க முடியாது சீனு!//

    என்ன பாஸ் சொல்றீங்க. இவங்களுக்குனு ஒரு பொறுப்பு இருக்கு. அதை மீறக் கூடாது என்பது என் எண்ணம். நாம் சினிமா பார்த்து கெட்டுப் போவதில்லையா என்ன? ரஜினி சிகரெட் ஸ்டைலா தூக்கி போடுறார்னு எத்தனை பேர் சிகரெட் பிடிக்க கத்துக்கிடாங்க. இது தமிழ் சினிமா ரசிகர்கள்கிட்ட மட்டும் இல்ல. எல்லா ஊருலையும் நடப்பதுதான். நீங்க சொல்ற மாதிரி இருந்தா எல்லாத்தையும் காட்டிறலாம். Closed to reality அப்படீனு சொல்லி பாய்ஸ்னு ஒரு படம் எடுத்தார் ஷங்கர். ஷங்கர் படம் குடும்பத்தோட பார்க்கலாம்னு எல்லோரும் குடும்பத்தோட போனாங்க. என்னாச்சு? அது மாதிரிதான்.]]]

    பாய்ஸ் ஒரு மோசமான உதாரணம்தான். ஒத்துக் கொள்கிறேன்..

    ஆனால் இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பின்புதான் கொலை வெறி அதிகமானது என்பதெல்லாம் ரொம்ப ஓவர்..

    உண்மையாகவே தெலுங்கு தேச இளைஞர்களுக்கே இந்தப் படம் பார்த்துதான் அவர்களின் மோதலே தெரிந்திருக்கிறது.

    இப்போது நடந்திருக்கும் கொலை பழிக்குப் பழியானது இல்லை. கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தனிப்பட்ட மோதலின் விளைவு..!

    ReplyDelete
  65. [[[ஆறுமுகம் said...
    தேங்ஸ் சார். நானும் திருத்திக்கிக் கொண்டேன். தவறுதலான புரிதலை.]]]

    நன்றி ஆறுமுகம் ஸார்..!

    ReplyDelete
  66. ரத்த சரித்திரம் படத்தில் வரும் கிளைமாக்ஸ் பாடல்:

    கத்திகளின் சகவாசம் நித்திரையைப் பலி கேட்கும்.

    இது இவர்கள் விடயத்தில் சரியாகப் பொருந்துகிறது.

    ReplyDelete
  67. [[[Jagannath said...

    ரத்த சரித்திரம் படத்தில் வரும் கிளைமாக்ஸ் பாடல்:

    கத்திகளின் சகவாசம் நித்திரையைப் பலி கேட்கும்.

    இது இவர்கள் விடயத்தில் சரியாகப் பொருந்துகிறது.]]]

    உண்மைதான். எத்தனை எத்தனை பலியாடுகள் பலியானாலும் அடுத்த ஆடுகள் தயாராகி வந்து நிற்பதுதான் வேதனை..!

    ReplyDelete