Pages

Monday, December 27, 2010

தென்மேற்குப் பருவக் காற்று - திரைப்பட விமர்சனம்

26-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த வருடத்திய இறுதிக் கணத்தில் வெளியாகியிருக்கும் மிகச் சிறந்த திரைப்படம் இது. நினைக்கவே இல்லை இப்படியிருக்கும் என்று.. படத்தின் பாடல்களை இணையத்தில் கேட்டபோது தமிழ் மணத்தது. படத்திலோ தமிழ் மண்ணின் மணம் மணக்கிறது. 'கூடல் நகர்' படத்தை இயக்கிய சீனு ராமசாமியின் இரண்டாவது திரைப்படம் இது.!

ஆட்டுக் கொட்டாயை மேய்த்துவரும் வாலிபனுக்கும், ஆட்டுக்கிடாக்களை ராவோடு ராவாக திருடும் குடும்பத்துப் பெண்ணுக்குமான காதலைச் சுவையோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர்.. இதற்குப் பின்புலமாக  வெள்ளந்தியான கிராமத்துத் தாய்களில் ஒருத்தியான வீராயியையும்  நமக்கு அடையாளம் காட்டுகிறார்.


வீராயி என்னும் சரண்யா கைக்குழந்தை இருக்கையிலேயே விதவையானவர். தான் வாழப் போன ஊரைவிட்டு வந்து வயல்பட்டியில் குடியேறி தன் மகனுக்காகவே இன்னமும் உழைத்துக் கொண்டிருப்பவள்.

ஆடுகளை வளர்த்து விற்கும் தொழிலைச் செய்து வரும் மகன் முருகையன், தனது ஆட்டுக் கொட்டாயில் நள்ளிரவில் ஆடுகளை ஆட்டையைப் போட வரும்போது களவாணிக் கும்பலில் இருக்கும் பேச்சியைப் பார்த்து மூச்சுப் பேச்சின்று போய்விடுகிறான்.

ஆத்தா வீராயி மகனுக்கு ஒரு கால்கட்டுப் போட்டுவிட்டால் பையன் வீட்டுக்கு அடங்கி குடியை மறந்திருப்பான் என்று நினைத்து தனது உறவிலேயே கலைச்செல்வியை பார்த்து வெத்தலை மாத்தி பரிசம் போட்டு வைத்திருக்கிறாள்.

முருகையன் ஆடுகளை மீட்க போலீஸின் உதவியைத் தேட.. இதனால் கோபமான பேச்சியின் அண்ணன் முருகையனை தேடி வந்து அடித்துவிடுகிறான். இந்தக் கோபத்தில் முருகையன் பேச்சியின் குடும்பத்தைக் கை காட்டிவிட பேச்சியின் குடும்பத்தில் ஆண்கள் அனைவரும் சிறைக்குள் போகிறார்கள்.


“களவாணிக் குடும்பத்தில் பெண்ணெடுக்கவா நான் இத்தனை வருஷமா இந்த புழுதிக் காட்டுல ஆடா, மாடா உழைச்சிருக்கேன்..” என்று மறுக்கிறாள் ஆத்தா வீராயி. முருகையனோ “உன்னைத் தவிர வேறு எவளும் எனக்குப் பொண்டாட்டியா வர முடியாது..” என்று பேச்சியிடம் வாக்குக் கொடுக்க.. இது நடந்ததா இல்லையா என்பதுதான் கதை..

இயக்குநருக்கு முதல் பாராட்டு. இப்படியொரு மண்ணும், மண் சார்ந்த கதையையும் தேர்ந்தெடுத்ததற்கு.. காதலை வைத்திருந்தும் காமத்தைத் துளிக்கூட காட்டாமலும், தாய்ப்பாசத்தை வைத்திருந்தும் அது முட்டாள்தனமாக இல்லாமல் தாயின் பரிதவிப்பையும் ஒரு சேர உணர்த்தியிருக்கும் அந்த நேர்மைக்கு எனது சல்யூட்..

புழுதி பறக்கும் இந்தக் காட்டில் ஒத்தைப் பொம்பளை தானே ஏர் பூட்டி உழுது கொண்டிருக்கும் காட்சியில் நடிகை சரண்யாவை மறக்க வேண்டியிருக்கிறது.. சரண்யாவின் நடிப்பு கேரியரில் மிகச் சிறந்த படம் இது..

மகன் குடிக்கிறானே என்ற கவலையுடன் அவனை விரட்டி விரட்டி அடிப்பது.. குடித்துவிட்டு வயலில் வந்து விழுந்து “பசிக்குதும்மா..” என்று கேட்பவனிடம் தூக்குவாளியைக் கொண்டாந்து வைத்துவிட்டு கடுகடுப்போடு செல்லும் அந்தக் கிராமத்துத் தாய்போல் பலர் எத்தனையோ ஊர்களில் இன்னமும் இருக்கிறார்கள்.. பையனுக்கு பேசி முடிக்க மிக எளிமையாக சுருக்குப் பையில் இருந்து காசை எடுத்து வெத்தலையை தம்பியிடமே வாங்கி பரிசம் போடும் அந்தக் காட்சியில் எந்த ஆடம்பரமும் இல்லை.


ஆடு காணாமல் போன கதையை விசாரிக்க வரும் போலீஸிடம் “ஏய் போலீஸு.. களவாண்டவங்களை பார்த்த ஆளு இருக்கு” என்று எகத்தாளமாக சொல்கின்ற அழகு.. மகன் ரத்ததானம் கொடுக்கச் சென்ற இடத்தில் “எவண்டா ஏன் புள்ளைகிட்ட ரத்தம் எடுக்குறது..?” என்று புரியாமல் சவுண்டு விடும் கோபம்.. கலைச்செல்வியின் தந்தை வீட்டு வாசலில் வந்து நின்று மண்ணை வாரி இறைத்துவிட்டுப் போகும்போது காட்டுகின்ற அந்த பரிதவிப்பு. பேச்சியின் வீட்டிற்கே சென்று அவர்களுடன் சண்டையிடுவது.. என்று சரண்யா அசத்தல் ஸ்கோர் செய்திருக்கிறார். இது அவருக்கு 100-வது படம் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள் மேடம்.. இன்னும் அசத்துங்கள்..

கலைச்செல்வியாக நடித்த அந்தப் பெண்ணைத் தேர்வு செய்த இயக்குநருக்கு தனி ஷொட்டு.. கருமை என்றாலும் பளிச்.. தன்னை நிராகரித்த ஹீரோவிடம் திரும்பி வந்து அவருடைய புகைப்படத்தைக் கொடுத்து “இனிமே இது என்கிட்ட இருக்கக் கூடாது மாமா..”  என்று சொல்லி நீட்டுகின்ற இடத்தில் தியேட்டரில் அப்ளாஸ் பறந்தது. இது மட்டுமல்ல.. உதயம் தியேட்டரில் 5 இடங்களில் வசனத்திற்காகவே மக்கள் கை தட்டினார்கள். ஆச்சரியம் பிளஸ் இன்ப அதிர்ச்சி.

“களவாணிக் குடும்பத்துல பொண்ணெடுக்க உங்கம்மா சம்மதிப்பாங்களா?” என்று பேச்சி கேட்டவுடன் ஹீரோ நிற்க.. “பார்த்தீங்களா நின்னுட்டீங்க..?” என்று திரும்பவும் பேச்சி சொல்கிற காட்சி டாப் கிளாஸ்.. அதேபோல் பேச்சியை ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஹீரோ அழைத்துவிட்டுப் போனவுடன் பேச்சியின் குடும்பத்தினர் ஆளாளுக்கு அவளுக்கு அட்வைஸ் செய்கின்ற சீனையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்..

கிராமத்து வாசனைத் தெறிக்கும் அத்தனையையும் பிரேம் டூ பிரேம் வைத்துச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்கு கை கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனையும் பாராட்டத்தான் வேண்டும்.

ஆட்டுக் கொட்டடியை விடியலில் பார்க்கின்றபோது தெரிகின்ற இடங்களெல்லாம் ஆண்டிபட்டியைச் சுற்றியிருக்கும் இடங்களாம்.. நம்ம ஊர்ப் பக்கம்தான் இத்தனை அழகா என்று சிலிர்க்க வைக்கிறது.. இதேபோல் சரண்யா ஆஸ்பத்திரிக்கு பேருந்தில் செல்லும்போது பேருந்தை காட்டும் லாங் ஷாட்டில் ஊரே அழகுடன் தெரிகிறது.

பாடல் காட்சிகளிலும், ஹீரோ ஹீரோயினை விரட்டிச் செல்லும் களிமண் பூமியை அழகுற காட்டி அசத்தியிருக்கிறார் செழியன். இன்னமும் நாம் பார்க்க வேண்டிய நமது மண்ணின் வாசனை நிறையவே இருக்கிறது..


சேவல் சண்டையில் நடக்கும் சாராயப் பிரச்சினையைப் பெரிதாக்கி சண்டையை மூட்டிவிட.. சரண்யா விஷயம் தெரிந்து சண்டையிட்டவனின் வீட்டுக்கே போய் வாய்ச்சண்டை போட்டு அந்தக் கோப்பையைக் கொண்டு வந்து தன் வீட்டுக்குள் எறிந்துவிட்டு அலட்சியமாக செல்கின்ற காட்சி ஒரு அழகான சிறுகதை.. அந்தக் கோப்பையின் மதிப்பு தெரியாத அம்மா.. ஆனால் மகனின் வருத்தம் தெரிந்த அம்மா.. எவ்ளோவ் பெரிய முரண்பாடு பாருங்கள்..?

பேராண்மை படத்தில் நடந்த வசுந்தராதான் இதில் பேச்சியாக உருமாறியிருக்கிறார். இயக்குநர்களிடத்தில் தங்களை நம்பி ஒப்படைத்துவிட்டால் இது போன்ற அருமையான கேரக்டர்கள் சிறந்த நடிப்பிற்காகக் கிடைக்கும். வசுந்தராவுக்கு உறுத்தாத மேக்கப்பும், அலட்டாத, மிகையில்லாத நடிப்பும் மிகச் சரளமாக இதில் வந்திருக்கிறது..

ஹீரோவைப் பார்த்து பயந்து போய் ஓடும் வேகமும், கண்டுபிடித்தவுடன் முகத்திலேயே ஏதோ தெரியாத ஆளிடம் பேசுவது போல பேசுகின்ற தொனியும் இயக்குநரின் திறமையையும் தாண்டி வசுந்தராவின் நடிப்பைக் காட்டுகிறது.. அவருடைய முகத்தைக் காட்டியே காட்சிகளை சிற்சில இடங்களில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

இறுதிக் காட்சியில் வைத்திருக்கும் அந்த ட்விஸ்ட்டை ஆடியன்ஸே எதிர்பார்க்கவில்லை. அந்த நேரத்தில் சரண்யாவின் திடீர் மனமாற்றமும் ஏற்புடையதே.. எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் அவருடைய முடிவை ஏற்றுக் கொள்ளும் பேச்சியின் செயலும் சபாஷ் போட வைத்தன. தியேட்டரில் இந்த ஷாட்டிலும் கைதட்டல்கள் தூள் பறந்தன..

மருத்துவமனையில் சரண்யா சொல்கின்ற “பொண்டாட்டியை பரிதவிக்க விட்டுட்டுப் போயிராதடா..” என்ற வார்த்தைகளில் தனது 35 வருட கரிசல் காட்டு வாழ்க்கையை எழுதிக் காண்பிக்கும் யுக்தி அபாரம்.. சீனு ஸார்.. உங்களுடைய எழுத்து உங்களை நல்லதொரு இலக்கியவாதியாக காட்டியிருக்கிறது இத்திரைப்படத்தில்.. வாழ்க..

குறிப்பிட்டு பாராட்டுக் கூடிய இன்னொரு நபர் தீப்பெட்டி கணேசன். ரேணுகுண்டாவில் கலகலக்க வைத்தவர் இதிலும் அப்படியே.. ஆயிரம் ரூபாயை சுருக்குப் பையில் வைச்சிருந்தனே.. காணோமே? என்ற சரண்யாவின் பரிதவிப்பைக் கேட்டு 16 குவார்ட்டர் வாங்கிருக்கலாமே என்ற நக்கல் அங்கலாய்ப்பு செம கலகலப்பு.. படத்தின் துவக்கத்தில் இருந்தே இவரது கேரக்டர் ஸ்கெட்ச் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் துணையாய் இருக்கிறது.

கலைச்செல்வியின் தந்தையை தனியே அழைத்து தான் பேச்சியைக் காதலிக்கும் விஷயத்தை அவரிடம் சொல்ல.. குடித்துக் கொண்டிருந்த போதையில் கோபத்தை அடக்கிக் கொண்டு விலகிப் போகும் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது. இயக்குநர் அனைத்து வழிகளிலும் மிகைப்படுத்துதலை தொடாமல் சென்றிருக்கிறார்..


பாடல்கள் அனைத்தும் இன்னொரு பக்கம் களை கட்டியிருக்கின்றன. ஏற்கெனவே இணையத்தில் கேட்டிருக்கிறேன். வைரமுத்துவின் கைவண்ணத்தில் கரிசல்காட்டு பாடலும், கள்ளச் சிறுக்கி பாடலும் திரும்பத் திரும்ப முணுமுணுக்க வைக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு படத்தின் திரைக்கதையையே பாடல்களில் கொண்டு வந்திருப்பது இத்திரைப்படத்தில்தான் என்று நினைக்கிறேன். அத்தனை பாடல்களிலும் தமிழ் விளையாடியிருக்கிறது.. புதிய இசையமைப்பாளர் ரகுநந்தனுக்கு எனது பாராட்டுக்கள்..


ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத கேப்டன் ஐசக் என்பவர் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். வெறும் 36 நாட்களில் ஷூட்டிங்கை முடித்திருக்கிறாராம் இயக்குநர். ஆச்சரியம்தான்.. எத்தனை தெளிவாக திரைக்கதை எழுதி, எத்தனை வேகமாக எடுத்திருப்பார் என்று யோசிக்க வைக்கிறது. பாலுமகேந்திரா மற்றும் சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பயிற்சி பெற்றிருக்கும் சீனு ராமசாமியின் இத்திரைப்படம் நிச்சயமாக அவரது குருநாதர்களைப் பெருமைப்படுத்தும்..!

மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்திருந்தாலும் நீண்ட காத்திருப்புக்குப் பின்பு ஆண்டு கடைசியில் வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயம் இது போன்ற திரைப்படங்களை ஆதரிக்க வேண்டியது நல்ல சினிமாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நம்முடைய கடமை..

அவசியம் குடும்பத்துடன் சென்று பாருங்கள்..!

43 comments:

  1. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு பின் சொதப்பும் குப்பை படங்களுக்கு மத்தியில்.... எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் இது போன்ற யதார்த்த படைப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது ஒரு நல்ல ரசிகனின் கடமை.... நிச்சயம் திரையரங்கில் சென்று பார்க்கிறேன்....!!!தெளிவான விமர்சனம் அண்ணா....!!!!

    ReplyDelete
  2. நிச்சயம் இது போன்ற திரைப்படங்களை ஆதரிக்க வேண்டியது நல்ல சினிமாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நம்முடைய கடமை..

    அவசியம் குடும்பத்துடன் சென்று பாருங்கள்..!

    /////

    ரிப்பிட்டு .......

    ReplyDelete
  3. இன்னொரு ‘தா’-னு நினைக்கிறேன்... கண்டிப்பாக பார்ப்பேன் :)

    தியேட்டரில் அடுத்த வாரம் வரை ஓட வேண்டும் :)

    ‘நெல்லு’ எப்ப்டிண்ணா இருக்கு???

    ReplyDelete
  4. இன்னும் முடிஞ்சா நல்லா கொட்டடிங்க தோழரே...

    ReplyDelete
  5. அண்ணே படம் எப்பிடியோ தெரியல ஆனா உங்க விமர்சனத்தில் இது பெஸ்ட்

    ReplyDelete
  6. நீங்கள் ரொம்பவே சிலாகித்து எழுதியிருப்பதை படிக்கும்போதே படம் எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கும் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது... நிச்சயம் பார்க்கிறேன்...

    ReplyDelete
  7. ////மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்திருந்தாலும் நீண்ட காத்திருப்புக்குப் பின்பு ஆண்டு கடைசியில் வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயம் இது போன்ற திரைப்படங்களை ஆதரிக்க வேண்டியது நல்ல சினிமாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நம்முடைய கடமை..////

    உத்தரவு போட்டதாக நினைத்துச் செய்துவிடுகிறோம் ஊனா தானா!

    ReplyDelete
  8. படம் பார்த்துர வேண்டியதுதான் தல... விமர்சனம் சூப்பர்..........

    ReplyDelete
  9. அப்பாடி..இப்போவாவது ஒரு நல்ல படம் வந்ததே.

    -----செங்கோவி
    வைகோவும் மதிமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)

    ReplyDelete
  10. யானை காதில் புகுந்த எறும்பு....

    மன்னாருவின் காதில் புகுந்த காற்று............

    ReplyDelete
  11. யானை காதில் புகுந்த எறும்பு....

    மன்னாருவின் காதில் புகுந்த காற்று............

    ReplyDelete
  12. சுட்டி சாத்தான் பாக்கலையா?.... உங்கள மாதிரி குழந்த (??;;;@@@) மனசுக்காரங்களுக்கு எடுத்த படமாமே

    ReplyDelete
  13. நான் சொல்லலை...எதிர்பார்ப்பு இல்லாம இருந்தா படம் நல்லாயிருக்கும்னு..! எப்படி சார் எல்லா படமும் பார்த்துடறீங்க..

    ReplyDelete
  14. நல்ல விமர்சனம்.
    படம் பார்க்கத் தூண்டுகிறது.
    பார்த்திட வேண்டியதுதான்.
    நன்றி.

    ReplyDelete
  15. இதைப்போன்ற மண்மணம் மாறாத படத்தை தயாரித்தவருக்கும் இயக்குனருக்கும் நடிகர் நடிகைகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
  16. உங்கள் உணர்வுகளை உசுப்பி விட்டது போல இருக்கே!... நீண்ட நாளுக்கு பிறகு ஒரு நல்ல திரை விமர்சனம் :)

    ReplyDelete
  17. திருவாருரிலிருந்து சுதர்சன் said...
    மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு பின் சொதப்பும் குப்பை படங்களுக்கு மத்தியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் இது போன்ற யதார்த்த படைப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது ஒரு நல்ல ரசிகனின் கடமை. நிச்சயம் திரையரங்கில் சென்று பார்க்கிறேன்!!! தெளிவான விமர்சனம் அண்ணா!!!!]]]

    நன்றி தம்பி.. பார்க்கின்ற நபர்களிடத்திலும் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லவும்..

    ReplyDelete
  18. [[[உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

    நிச்சயம் இது போன்ற திரைப்படங்களை ஆதரிக்க வேண்டியது நல்ல சினிமாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நம்முடைய கடமை. அவசியம் குடும்பத்துடன் சென்று பாருங்கள்..!/////

    ரிப்பிட்டு .......]]]

    வருகைக்கு நன்றி உலவு.காம்.

    ReplyDelete
  19. [[[kanagu said...

    இன்னொரு ‘தா’-னு நினைக்கிறேன்... கண்டிப்பாக பார்ப்பேன் :)

    தியேட்டரில் அடுத்த வாரம்வரை ஓட வேண்டும்:)]]]

    அதற்குள்ளாக பார்த்து விடுங்கள்..!

    [[[‘நெல்லு’ எப்ப்டிண்ணா இருக்கு???]]]

    பார்க்குற நிலைமைலேயே இல்லைன்னு சொன்னாங்க..!

    ReplyDelete
  20. [[[karumai said...
    இன்னும் முடிஞ்சா நல்லா கொட்டடிங்க தோழரே.]]]

    அடிச்சிட்டாப் போவுது..!

    ReplyDelete
  21. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    i liked all the songs in this film.]]]

    பாடல்களும் அருமைதான்..!

    ReplyDelete
  22. [[[நேசமித்ரன் said...
    அண்ணே படம் எப்பிடியோ தெரியல ஆனா உங்க விமர்சனத்தில் இது பெஸ்ட்.]]]

    கவிஞர்கள் தளபதியே.. இப்படி என்னுடைய விமர்சனத்தையும், படத்தையும் பிரிச்சுப் பார்க்காதீங்க..!

    அவசியம் படத்தைப் பாருங்க..!

    ReplyDelete
  23. [[[philosophy prabhakaran said...
    நீங்கள் ரொம்பவே சிலாகித்து எழுதியிருப்பதை படிக்கும்போதே படம் எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் பார்க்கிறேன்.]]

    நன்றி பிரபாகரன்..!

    ReplyDelete
  24. [[[SP.VR. SUBBAIYA said...

    //மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்திருந்தாலும் நீண்ட காத்திருப்புக்குப் பின்பு ஆண்டு கடைசியில் வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயம் இது போன்ற திரைப்படங்களை ஆதரிக்க வேண்டியது நல்ல சினிமாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நம்முடைய கடமை..////

    உத்தரவு போட்டதாக நினைத்துச் செய்து விடுகிறோம் ஊனா தானா!]]]

    ஆஹா.. வாத்தியாரே.. வந்துட்டீங்களா.. ரொம்ப நாளாச்சு நீங்க நம்ம வூட்டுப் பக்கம் வந்து.. இப்பயாச்சும் வந்தீங்களே..

    நன்றி வாத்தியாரே..!

    ReplyDelete
  25. [[[Indian Share Market said...
    படம் பார்த்துர வேண்டியதுதான் தல. விமர்சனம் சூப்பர்.]]]

    பார்க்கிறேன் என்று சொன்னதற்கு நன்றி..!

    ReplyDelete
  26. [[[செங்கோவி said...
    அப்பாடி. இப்போவாவது ஒரு நல்ல படம் வந்ததே.

    -----செங்கோவி
    வைகோவும் மதிமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)]]]

    2 மாதங்களுக்கு ஒரு முறை குறிப்பிடத்தக்க ஒரு படம் வெளியாகிறது செங்கோவி.. முன்பு தா. இப்போது தென்மேற்குப் பருவக் காற்று..!

    ReplyDelete
  27. [[[sivakasi maappillai said...

    யானை காதில் புகுந்த எறும்பு.]]]

    இந்த ஒப்பீடு எதுக்காக..? இப்போ யானையோட நிலைமை என்ன தெரியுமா..?

    [[[மன்னாருவின் காதில் புகுந்த காற்று.]]]

    அசுத்தக் காற்றையெல்லாம் காதுல வாங்கக் கூடாது.. பஞ்சை வைச்சு அடைச்சுக்கணும் ராசா..!

    ReplyDelete
  28. [[[sivakasi maappillai said...
    சுட்டி சாத்தான் பாக்கலையா?.... உங்கள மாதிரி குழந்த (??;;;@@@) மனசுக்காரங்களுக்கு எடுத்த படமாமே.]]]

    யார் குழந்தை மனசுக்காரன்..? நானா..? சிவகாசி மாப்ளை.. என்னோட இன்னொரு முகம் உங்களுக்குத் தெரியாதே..?

    ReplyDelete
  29. [[[ஸ்ரீராம். said...
    நான் சொல்லலை. எதிர்பார்ப்பு இல்லாம இருந்தா படம் நல்லாயிருக்கும்னு..!]]]

    அதேதான்.. இனிமே இந்த மனசோடயே எல்லா படத்துக்கும் போறேன்..!

    [[[எப்படி சார் எல்லா படமும் பார்த்துடறீங்க..]]]

    வேற வேலை வெட்டி இல்லீல்ல.. அதுனாலதான்..!

    ReplyDelete
  30. [[[மாதேவி said...

    நல்ல விமர்சனம்.
    படம் பார்க்கத் தூண்டுகிறது.
    பார்த்திட வேண்டியதுதான்.
    நன்றி.]]]

    பாருங்க.. பாருங்க..! நன்றி மாதேவி..!

    ReplyDelete
  31. [[[kolanchiyappan said...
    இதைப் போன்ற மண் மணம் மாறாத படத்தை தயாரித்தவருக்கும் இயக்குனருக்கும் நடிகர் நடிகைகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.]]]

    வருகைக்கு நன்றி நண்பரே..!

    ReplyDelete
  32. [[[Sugumarje said...
    உங்கள் உணர்வுகளை உசுப்பி விட்டது போல இருக்கே!... நீண்ட நாளுக்கு பிறகு ஒரு நல்ல திரை விமர்சனம் :)]]]

    "தா" படத்துக்கும் இதேபோல் எழுதியிருந்தேனே சுகுமார்ஜி..?!

    ReplyDelete
  33. உங்க விமர்சனமே பார்க்கத் தூண்டுதுங்க.. அதுவும் இல்லாம.. மோசமான படத்துல கூட சரண்யா ரோல் கண்டிப்பா பாக்கற மாதிரிதான் இருக்கும்.. இதுல இவ்லோ பாராட்டியிருக்கீங்க வேற.. கண்டிப்பா பாத்துடறேனுங்க.. குடும்பத்தோட..

    ReplyDelete
  34. படம் நல்லா இருக்குதோ இல்லையோ... உங்களோட விமர்சனம் சூப்பர் மற்றும் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது...

    I Like that...!!!

    ReplyDelete
  35. நிச்சயம் பார்க்கணும் என்று தோன்றுகிறது ,நேரத்தே இந்த மாறி படத்துக்கு விமரிசனம் எழுதுவது மூலம் பலருக்கு இதை கொன்று சேர்க்க முடியும் ,அதற்க்கு நன்றி

    ReplyDelete
  36. [[[பிரியமுடன் ரமேஷ் said...
    உங்க விமர்சனமே பார்க்கத் தூண்டுதுங்க.. அதுவும் இல்லாம.. மோசமான படத்துல கூட சரண்யா ரோல் கண்டிப்பா பாக்கற மாதிரிதான் இருக்கும்.. இதுல இவ்லோ பாராட்டியிருக்கீங்க வேற.. கண்டிப்பா பாத்துடறேனுங்க.. குடும்பத்தோட..]]]

    மிக்க நன்றி.. பார்த்திட்டுச் சொல்லுங்க ஸார்..!

    ReplyDelete
  37. [[[Dinesh said...
    படம் நல்லா இருக்குதோ இல்லையோ. உங்களோட விமர்சனம் சூப்பர் மற்றும் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

    I Like that...!!!]]]

    நன்றி தினேஷ். அவசியம் பாருங்கள்.

    ReplyDelete
  38. [[[dr suneel krishnan said...
    நிச்சயம் பார்க்கணும் என்று தோன்றுகிறது, நேரத்தே இந்த மாறி படத்துக்கு விமரிசனம் எழுதுவது மூலம் பலருக்கு இதை கொன்று சேர்க்க முடியும், அதற்க்கு நன்றி]]]

    அதனால்தான் அவசியமாக எழுத வேண்டியிருக்கிறது ஸார்.. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி..!

    ReplyDelete
  39. எல்லாரையும் பாராட்டியிருக்கீங்க....அப்படியே இந்த பதிவை படிச்சி நட்ட நடு ராத்திரியானாலும் கமெண்ட் போட்ற எங்களையும்...அத்தனை கமெண்டுக்கும் பதில் போடற உங்க கடமை உணர்ச்சியையும் பாராட்டி கடைசில ஒரு வரி எழுதியிருக்கலாம்.:)

    ReplyDelete
  40. [[[டுபாக்கூர் பதிவர் said...
    எல்லாரையும் பாராட்டியிருக்கீங்க. அப்படியே இந்த பதிவை படிச்சி நட்ட நடுராத்திரியானாலும் கமெண்ட் போட்ற எங்களையும், அத்தனை கமெண்டுக்கும் பதில் போடற உங்க கடமை உணர்ச்சியையும் பாராட்டி கடைசில ஒரு வரி எழுதியிருக்கலாம்.:)]]]

    பின்னூட்டமிட்டவர்களை பாராட்டிவிட்டேன்.. என்னை நானே பாராட்டிக் கொள்வது கலைஞர் கருணாநிதி செய்வது போலல்லவா இருக்கும்..!

    ReplyDelete