Pages

Monday, December 06, 2010

ரத்தச் சரித்திரம் - ரத்தம் தெறிக்கும் உண்மைக் கதை..!

05-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமீபத்தில் வெளியாகியுள்ள 'ரத்தச் சரித்திரம்' என்னும் தமிழ் டப்பிங் திரைப்படம் உண்மையாகவே ஆந்திர தேசத்தில் நடந்த கதைதான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அந்தக் கதையை முழுமையாகத் தெரிந்து கொள்ள கூகிளாண்டவர் துணையை நாடியபோது எனது ரத்தமே உறைந்து போனதைப் போன்றுதான் தோன்றியது.  இதுவரையில் நான் பார்த்த அத்தனை தெலுங்கு திரைப்படங்களின் ரத்தம் தெறித்த கதைகளைப் பற்றியெல்லாம் ஏதோ ரசிகர்களின் ரசனைக்காகத் தெலுங்கு திரைக்கதையாசிரியர்கள் தீனி போட்டிருக்கிறார்கள் என்று நினைத்திருந்த எனது எண்ணத்தின் மீது, நாலு லாரி மண்ணையள்ளிப் போட்டு மூடிவிட்டது.

கிட்டத்தட்ட 10 மணி நேரங்கள் முழுமையாக இணையத்தின் முன் அமர்ந்து இது தொடர்பான அனைத்துச் செய்திகளையும் தேடிப் பிடித்துப் படித்து, தொகுத்து அவற்றை ஏதோ, என்னால் முடிந்த அளவுக்கு, எனக்கிருக்கின்ற கொஞ்சூண்டு பத்தாம் கிளாஸ் அறிவுக்கேற்றாற்போல் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறேன்.

நீண்ட நெடும் கதை என்பதால்தான் அத்திரைப்படமே இரண்டு பாகங்களாக வந்திருக்கிறது.. நான் ஒரு பாகமாக முழுமையாகவே கொடுத்துவிட்டதால் பக்கங்கள் நீண்டுவிட்டன. பதிவுலகத் திலகங்கள் கொஞ்சம் சோம்பேறித்தனப்படாமல் இதனை முழுமையாகப் படித்து உண்மையைத் தெரிந்து கொண்டு, என்னைத் திட்டியாவது ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டுப் போனால் உண்மையாகவே செல்லங்களான எனது கைகளும், விரல்களும் மகிழ்ச்சியடைவார்கள்.. நன்றி..

ரத்தசரித்திரம்..! ஆம்..!! ரத்தம் தெறிக்க வைத்திருக்கும் இந்தக் கதையின் பல்வேறு முடிச்சுக்களும், திருப்பங்களும் பயங்கரமானவை. அதிகாரமும், அரசியலும் இணைந்து, பிணைந்து ஜனநாயகம் என்ற போர்வையில் நாட்டில் எப்படியொரு சர்வாதிகாரத்தை நிலை நாட்டியிருக்கின்றன என்பதற்கு இந்த பரிதலா ரவியின் சொந்தக் கதையும் ஒரு சான்று..

இந்தக் கதையில் தற்போதைக்கு ஒரு முடிவுதான் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. இன்னொரு முடிவை காலம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதன் ஆதிமூலத்தை அறிய வேண்டுமெனில் நாம் பல காலம் பின்னோக்கி போக வேண்டியிருக்கிறது.. 

2005-ம் ஆண்டு ஜனவரி 24. மதியம் 2.55 மணி. ஆந்திராவின் ரத்த அரசியலுக்கு புகழ் பெற்ற அனந்தப்பூர் மாவட்டத் தலைநகரமான அனந்தப்பூரில் உள்ள தெலுங்கு தேசக் கட்சியின் தலைமையகம். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தல்கள் குறித்து கட்சி ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து வாசலுக்கு வந்து கொண்டிருந்தார் பரிதலா ரவி..


கட்சியினரின் கை கூப்பல்களையும், வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டே வந்தவரை எதிர்கொண்டவர்கள் ஐவர்.. அதில் இருவரின் கைகளில் இருந்த துப்பாக்கியில் இருந்து சீறிப் பாய்ந்த தோட்டாக்கள் பரிதலா ரவியின் உடலையும், தலையையும் ஊடுறுவித் தாக்க.. சம்பவ இடத்திலேயே பிணமாகவே சரிந்தார் ரவி.



கொல்லப்பட்ட பரிதலா ரவி சாதாரணமானவர் அல்ல. அப்போதைய அனந்தப்பூர் மாவட்டத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்.. பெனுகுண்டா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். ஒரு முறை தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர். அனந்தப்பூர் மாவட்டத்தின் காட்பாதரே இவர்தான்.

இவ்வளவு ஏன்..? 56 கொலை வழக்குகள், பல கொலை முயற்சி வழக்குகள், தேர்தல் முறைகேடுகள் சம்பந்தமான வழக்குகள் பல வகையிலும் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானவராக சம்பந்தப்பட்டவர்.. ஆனால் எந்த வழக்கிலும் சட்டப்படியாக இதுவரையிலும் தண்டிக்கப்படாதவர்.. இவரைத்தான் அன்றைய மதிய நேரத்தில் சில துப்பாக்கித் தோட்டாக்கள் சட்டவிரோதமாகத் துளைத்தெடுத்து படுகொலை செய்தன.

விஷயம் கேள்விப்பட்டு ஆந்திராவே தகதகத்தது.. அனந்தப்பூர் என்றில்லை.. ஹைதராபாத்வரையிலுமாக தெலுங்கு தேசம் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்து பட்டையைக் கிளப்ப... பரிதலா ரவியின் உடல் அடக்கம் செய்யப்படும்வரையிலும் வன்முறைக் காட்சிகள் தொடர்ந்தன.

ஆந்திர வரலாற்றிலேயே வன்முறையால் அதிக அளவுக்குப் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதில் இரண்டாமிடம் இந்த  நிகழ்ச்சிக்குதான். சுமார் 60 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தீக்கிரையானதாகச் சொல்கின்றன ஆந்திர மீடியாக்கள்..



 

கொந்தளித்துப் போயிருந்த பரிதலா ரவியின் ஆதரவாளர்கள் அனைவரும் ஒரே குரலில் சொன்னது, “அவனைத் தூக்குல போடு.. இல்லைன்னா ஒரு நாள் அவனை பெயில்ல விடு. அவன் கதையை நாங்க முடிச்சர்றோம்..” என்பதுதான்.. அந்த “அவன்” யார் என்பதை பத்திரிகைகளில் இருந்து, தொலைக்காட்சி செய்திகளில் இருந்து வெளிப்படையாகவே சொல்லித் தீர்த்தன மீடியாக்கள்.

“அந்த 'அவனி'ன் துணையோடு ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிதான் திட்டமிட்டு பரிதலா ரவியைப் படுகொலை செய்திருக்கிறார்..” என்று திட்டவட்டமாகவே, நேரிடையாகவே குற்றம்சாட்டினார்கள் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடுவும், அவருடைய கட்சித் தலைவர்களும்.

“இல்லை..” என்று மறுத்த அப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டி.. “இதற்காக எந்த தீக்குளிப்பையும் செய்யத் தயாராக இருக்கிறேன். எனது மகன் ஜெகன்மோகன் ரெட்டி அப்படிப்பட்டவன் இல்லை..” என்று மறுத்தார். டெல்லிவரையிலும் இந்தப் படுகொலையின் தாக்கம் எதிரொலித்தது.

சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி ஒரு ஆண்டுகூட ஆகவில்லை. அதற்குள் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வேண்டாம் என்று டெல்லி மேலிடம் எச்சரித்ததினாலும், கொந்தளித்துப் போயிருந்த எதிர்க்கட்சியினரைச் சமாளிக்க வேண்டியும் இந்தக் கொலை வழக்கை உடனேயே சி.பி.ஐ.க்கு மாற்றுவதாகக் கூறினார் ராஜசேகர ரெட்டி.

அடுத்து அவர் உடனடியாகச் செய்த வேலை.. கர்நாடக அரசுக்கு போன் செய்ததுதான். அப்போது உயிருக்குப் பயந்து பெங்களூரில் தங்க வைக்கப்பட்டிருந்த தனது மகன் ஜெகன்மோகன்ரெட்டிக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் பாதுகாப்பைத் தரும்படி கேட்டுக் கொண்டார் ராஜசேகர ரெட்டி.

இப்படி மாநிலத்தின் ஆட்சியையே ஆட்டம் காண வைக்குமளவுக்கு நடத்தப்பட்ட இந்தப் படுகொலையின் சூத்திரதாரியான அந்த அவனின் பெயர் “மட்டலச்செருவு சூர்ய நாராயண ரெட்டி” என்னும் “சூரி..” அதுதான் ஆள் தெரிந்துவிட்டதே.. “தூக்கி உள்ளே போட வேண்டியதுதானே..?” என்பீர்கள்.. ஆனால் இந்த சூரி அப்போது இருந்ததே ஹைதராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறைச்சாலையின் அதியுயர் பாதுகாப்பு செல்லில்.. பின்பு எப்படி இந்தக் கொலை..? மில்லியன் டாலர் கேள்வி இது..?


ஆந்திர மாநிலத்தின் அரசியலில் மிகத் தீவிரமான வன்முறைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டங்கள் அனந்தப்பூர், கடப்பா, கர்னூல், சித்தூர் ஆகியவை. இவை ராயலசீமா பகுதிகள் என்றழைக்கப்படுபவை. இந்த நான்கு மாவட்டங்களுமே ஒன்றுடன் ஒன்று நிலத் தொடர்புடையவை.. இதில் அனந்தப்பூரும், சித்தூரும் கர்நாடக மாநிலத்தின் எல்லைப் பகுதியாகவும் அமைந்துள்ளன.

காலம், காலமாக ஆந்திராவின் அரசியலில் நிலவி வந்த நிலச்சுவான்தாரர், குடிமக்கள் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது.. பண்ணையார்கள் குடியானவர்களை அடிமைகளாக நடத்துவதையும், ஏழைகளின் நிலத்தை பறித்து தங்கள் சொத்தாக்கி அவர்களை கொடுமைப்படுத்துவதையும் எதிர்த்துதான் மார்க்சிய இயக்கத்தின் மீது தாக்கம் கொண்ட சிலர் தீவிரவாதம் பேசி நக்ஸலைட்டுகளாக உருமாறி பதில் தாக்குதல்களை ஆதிக்க சாதிகளின் மீது தொடுத்துக் கொண்டிருந்த சூழலும் இருந்தது.

நக்ஸலைட்டுகள் என்றழைக்கப்பட்ட தீவிர மார்க்சியவாதிகளின் ஆதிக்கம் இந்த நான்கு மாவட்டங்களிலும் உச்சத்தில் இருந்ததற்குக் காரணம் இங்கு நிலவிய வர்க்க வித்தியாசமும், ஆண்டான், அடிமை கலாச்சாரமும்தான். சுதந்திரம் அடைந்ததாக உண்மையாகச் சொல்லிக் கொண்டாலும், ஏழைகளுக்கு அது கிடைக்கவிடாமல் செய்யத்தான் அரசியல் துணையோடு இந்தப் பகுதி நிலச்சுவான்தாரர்கள் கூட்டணி வைத்திருந்தார்கள்.

நமது கதாநாயகன் பரிதலா ரவி இந்த வெப்பக் காடான அனந்தப்பூர் மாவட்டத்தின் பெனுகுண்டா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கடபுரம் என்னும் கிராமத்தில் 28-05-1957-ல் பிறந்தவர். இவருடைய அப்பா ஸ்ரீராமுலு அப்போதே 300 ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர். ஆனாலும் மார்க்சிய சிந்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். பரிவு கொண்டவர்.  இதனாலேயே தனது நிலங்களின் பெரும் பகுதியை ஏழை, எளிய மக்களுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். அத்தோடு அந்தப் பகுதி ஏழை மக்களுக்குத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

இந்த மாவட்டத்தின் பெரும்பாலான நிலங்கள் கனகன்பள்ளி பண்ணையாரான கங்குல நாராயண ரெட்டி என்பவரிடமும், சென்னகொத்தபள்ளி  பண்ணையார் சேனா சென்னா ரெட்டி என்பவரிடமும்தான் இருந்திருக்கின்றன.  இந்த இரண்டு பண்ணையார்களிடமும் இருந்த 600 ஏக்கர் நிலங்களை பராமரித்தல் மற்றும் அவற்றை ஏழை, எளிய உழைக்கும் மக்களிடம் கொடுத்து பாடுபட வைப்பது என்ற வேலைகளைச் செய்து வந்தது பரிதலா ரவியின் அப்பா ஸ்ரீராமுலுதான்.

1971-ம் ஆண்டில் ஸ்ரீராமுலு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சேர்ந்த வேகத்திலேயே ஏற்கெனவே அவருக்கு இருந்த நல்ல பெயரால், அந்த இயக்கத்தின் மிக முக்கியத் தலைவராகவும் ஆகிவிட்டார். நக்ஸல் இயக்கத்தில் இருந்தாலும் அவர் உயிருடன் இருந்தவரையிலும் யாரையும் கொலை செய்தததில்லை என்று நக்ஸல் இயக்கம் இன்றுவரையிலும் சொல்லி வருகிறது.

கங்குல நாராயண ரெட்டியின் நிலங்களை ஸ்ரீராமுலு ஏழைகளுக்கு வாரிக் கொடுப்பதையும், அதன் மூலம் கிடைக்கின்ற புகழ் அவருக்கே கிடைப்பதையும் கண்டு பொறாமைப்பட்ட சென்னா ரெட்டி, கங்குல ரெட்டிக்கு தூபம் போட்டு அவர் மனதை திசை திருப்பிவிட்டார். இந்தத் திடீர் வில்லங்கத்தினால் ஸ்ரீராமுலு, கங்குல ரெட்டி மற்றும் சென்னா ரெட்டி இருவருக்கும் ஒரே நேரத்தில் எதிரியானார்.

நக்ஸல் இயக்கத்தினரிடம் இந்த ரெட்டிகள் இருவரின் திடீர் மனமாற்றத்தையும், நிலங்களை தர மறுப்பதையும் ராமுலு எடுத்துச் சொல்லி போராட்டத்துக்குத் தயார்படுத்திய நிலையில் ராமுலுவை விட்டுவைத்தால் இனி தாங்கள்  நிம்மதியாக இருக்க முடியாது என்பதால் அவரைப் போட்டுத் தள்ள அவரது உதவியாளர்களில் ஒருவனையே சென்னா ரெட்டி தயார் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்.

1975-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி, பக்ஸம்பள்ளி என்னும் ஊரில் நடந்த ஒரு கல்யாணத்துக்காக பேருந்தில் சென்ற ராமுலுவை பின் தொடர்ந்த அந்த உதவியாளர் பக்ஸம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகேயே பேருந்தில் இருந்து இறங்கி நிமிடத்தில் ராமுலுவை படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார். இதுதான் இன்றுவரையிலான பரிதலா ரவி-சூரி பரம்பரையினர் இரு தரப்பிலும் போட்டுத் தாக்கும் படுகொலைகளின் துவக்கப் புள்ளி..!

இந்த நேரத்தில் 20 வயதே நிரம்பியிருந்த பரிதலா ரவி நக்ஸல் இயக்கத்திலும் இல்லை. எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவும் இல்லை. ரவியின் தந்தை ஸ்ரீராமுலு போலவே ரவியின் அண்ணன் ஹரியும் நிலச்சுவான்தார் ஒழிப்பு விவகாரத்தில் மிகத் தீவிரமான ஈடுபாடுடையவர். ஆனால் தந்தை ஸ்ரீராமுலுவால் அடக்கி வைக்கப்பட்டிருந்தவர் ஸ்ரீராமுலுவின் இறப்புக்குப் பின்பு 1979-ல் நக்ஸல் இயக்கத்தில் இணைந்தார்.

இயக்கத்தில் இணைந்த நிலையில் பல கொலைகளுக்கு சாட்சியாகவும், சில கொலைகளுடன் நேரடித் தொடர்பிலும் செயல்பட்டிருக்கிறார் ஹரி. இவரது செயல்பாட்டால் அப்போதைய அரசு இவரையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தது. 


இந்த நிலையில் 1982-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதியன்று தனது சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறார் ஹரி. அவரது வருகையை மோப்பம் பிடித்த வெங்கடபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர், பெரும் போலீஸ் படையுடன் வந்து ஹரியைச் சுற்றி வளைத்திருக்கிறார்.

போலீஸ் வந்துள்ளதைப் பார்த்து ஹரி வீட்டுக் கதவுகளைச் சாத்திக் கொண்டு உள்ளேயே மறைந்து கொள்ள.. ஹரியின் தங்கையைப் பிடித்துக் கொண்ட போலீஸ், ஹரி வெளியே வராவிட்டால் தங்கையை கற்பழித்துவிடுவோம் என்று மிரட்டிய காரணத்தால் போலீஸிடம் சரணடைந்தார் ஹரி.

அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நசனகொட்டா கிராமத்திற்கு ஹரியை கொண்டு சென்ற போலீஸ் அங்கே 2000 கிராம மக்கள் கூடியிருந்த நிலையில், அவர்களது கண் முன்பாகவே ஹரியை சுட்டுக் கொன்றுள்ளது. இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருந்ததும் அதே கங்குல நாராயண ரெட்டி, கங்குல நரசன்னா மற்றும் சேனே சென்னா ரெட்டியும்தான்..

ஸ்ரீராமுலுவின் குடும்பத்தை விட்டு வைத்தால் நமக்கு ஆபத்துதான் என்பதால் அடுத்து ரவியையும் இந்தக் கூட்டம் தேட ஆரம்பித்தது. இந்த நேரத்தில்தான் பரிதலா ரவி உருவகொண்டா நகரத்தின் அருகேயுள்ள சீர்பிகொட்டாளா என்னும் தனது தாய் பிறந்த ஊருக்குச் சென்று மறைந்து வாழ்ந்துள்ளார். அங்கே அவரது மாமா கொண்டையாவின் தயவினாலும், சிறிது காலம் இருக்கலாம் என்றுதான் சென்றிருக்கிறார். அங்கே வாழ்ந்து வந்த நேரத்தில்தான் 1986-ல் கொண்டையாவின் மகள் சுனிதாவை திருமணம் செய்திருக்கிறார் ரவி.

தனது பாதுகாப்பிற்காகவும், எதிர்கால வாழ்க்கைக்காகவும் இந்தச் சமயத்தில்தான் நக்ஸல் இயக்கத்தில் ரவி இணைந்திருக்கிறார். ஆனால் இதில் இருந்த சமயத்தில் அவர் எந்தவொரு கொலைகளையும் செய்ததில்லை என்று நக்ஸல் அமைப்பினரும், கத்தார் போன்ற மூத்தத் தலைவர்களும் இன்றுவரையிலும் சொல்லி வருகிறார்கள்.

ரவி இப்படி தனது மாமா ஊரில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் அவருடைய அப்பா மற்றும் அண்ணனின் மரணத்திற்குகாக நக்ஸல் இயக்கமே பழிக்குப் பழி ஆட்டத்தைத் துவக்கியிருக்கிறது.

முதலில் கங்குல நாராயண ரெட்டியின் கூட்டாளிகளான நரசன்னா மற்றும் யாடி ரெட்டியை சுட்டுக் கொன்றது நக்ஸல் இயக்கம். 1983-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி அனந்தப்பூரில் இருந்த ஒரு விடுதியில் தங்கியிருந்த பெனுகுண்டா சட்டமன்ற உறுப்பினர் கங்குல நாராயண ரெட்டியை வெட்டிக் கொன்றார்கள் நக்ஸல்கள்.

இந்தப் படுகொலைச் செய்தி பரவியபோது இதனை செய்தது பரிதலா ரவிதான் என்றே ஆந்திரா முழுவதும் செய்திகள் பரவின. ஆனால் இதனைச் செய்தது நாங்கள்தான் என்று நக்ஸல் அமைப்பினர் இன்றைக்கும் சொல்கிறார்கள்.

அதுவரையில் பெனுகுண்டா தொகுதியின் அசைக்க முடியாத சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த நாராயண ரெட்டி கொல்லப்பட்ட பின்பு, ராமச்சந்திர ரெட்டி என்பவர் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ரெட்டிகாரு வந்த பின்புதான் அனந்தப்பூர் தொகுதி அமைதி முற்றிலுமாக சிதைந்து போனது என்கிறார்கள்.

நாராயண ரெட்டி மேலே போய்ச் சேர்ந்தாலும் இன்னொரு பண்ணையாரான சென்னா ரெட்டியும், அவரது மகன்களான ரமணா ரெட்டி, ஓபுல் ரெட்டி, இவர்களோடு கொல்லப்பட்ட நாராயண ரெட்டியின் மகனான கங்குல சூர்ய நாராயண ரெட்டி இவர்களுடைய கூட்டணி கொடுமைகள் அனந்தப்பூர் மாவட்டத்தில் அனலைக் கக்கியுள்ளது.

இதில் சூர்ய நாராயண ரெட்டி மற்றும் ஓபுல் ரெட்டி மீது வண்டி, வண்டியாக புகார்கள். அத்தனையும் கற்பழிப்புச் செய்திகள்தான். ஊரில் எந்த ஒரு அழகான பெண்ணையும் விட்டுவைத்ததில்லையாம் இந்தக் கூட்டணி.

ஓபுல் ரெட்டி ஒரு மோசமான சேடிஸ்ட்டாக வாழ்ந்திருக்கிறார் என்கின்றன ஆந்திர மீடியாக்கள். பெண்கள் என்றாலும், 45 வயதுக்குள், திருமணமான பெண்களையே குறி வைத்து குதறி எடுப்பதுதான் ஓபுல் ரெட்டியின் மகத்தான மக்கள் சேவையாம்.

அதிலும் சில சமயங்களில் அந்தப் பெண்களின் வீடுகளுக்குள்ளேயே நுழைந்து கணவன்மார்கள் முன்னிலையிலேயே அவர்களைக் கற்பழிப்பதுதான் இவனது ஸ்டைலாம்.. அதே சமயம் இந்தச் சமயத்தில் அந்தப் பகுதியில் பொறுப்பில் இருந்த பல தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர்களை பரலோகத்திற்கு அனுப்பி வைத்த பெருமையும் இந்த ரெட்டிக்காரப் புள்ளைகளுக்கு உண்டு.

1989-ல் காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சியமைத்தபோது பெனுகுண்டா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் சென்னா ரெட்டிதான். ஏற்கெனவே அவிழ்த்துவிட்ட காளைகளாக பவனி வந்த பிள்ளை ரெட்டிகள் கூட்டணி, இதன் பின்பு அசுர பலத்துடன் அப்பாவிகள் மீது பாய்ந்துள்ளன.

சென்னா ரெட்டியின் வீட்டின் அருகேதான் பெண்கள் கல்லூரி இருந்ததாம். 1989 முதல் 1993 வரையிலான காலக்கட்டத்தில் அந்தக் கல்லூரியில் படித்த பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கி வகுப்புக்கு இரண்டு பேர், மூன்று பேர் மட்டுமே படிப்பதற்காக வந்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த ஓபுல் ரெட்டியும், சூர்ய நாராயண ரெட்டியும் தங்களது மன்மத விளையாட்டை அந்த ஊரில் விளையாடித் தீர்த்திருக்கிறார்கள்.  

கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் தனது பள்ளியறைக்குத் தூக்கிச் சென்றிருக்கும் இந்த ரெட்டிகளைப் பார்த்து அன்றைய அனந்தப்பூர் மாவட்டமே கிலியடித்துப் போயிருந்ததாக இப்போதுதான் எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். சொல்கிறார்கள்.

தர்மாவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மனைவியை வீடு புகுந்து கற்பழித்த செய்திதான் முதன் முதலில் ஓபுல் ரெட்டி மீதான பார்வையை உலகத்திற்குக் கொண்டு சென்றது என்கிறார்கள். ஆனால் நேரடி சாட்சியங்கள் எதுவுமில்லாததால் பேச்சோடு அது நின்று போனதாம். தமிழ்நாட்டில் இருந்து தர்மாவரத்திற்கு குடியேறிய இரண்டு பெண்களை ஓபுல் ரெட்டி கற்பழித்ததும் தொடர்ந்திருக்கிறது.  


தெரியாத பெண்கள் என்றில்லை. ஓபுல் ரெட்டி தன்னிடம் வேலை செய்யும் ஆட்களின் வீடுகளிலும் கை வைத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் டாக்டர் குள்ளயப்பா என்பவரின் மகளையும் கற்பழித்த புகார் இவர் மீது அப்போது எழுந்துள்ளது.

இவர் ஒரு சேடிஸ்ட் மனப்பான்மை கொண்டவர் என்பதையும் இவருடைய மரணத்திற்குப் பின்புதான் அங்கேயிருந்தவர்கள் வெளியில் சொல்லியிருக்கிறார்கள். ரயில் வந்து கொண்டிருக்கும்போது ஒருவரை உயிருடன் ரயில் முன் எறிந்து அதைப் பார்த்து சிரிக்கும் அளவுக்கு கொடூரமானவர் என்கிறார்கள். இன்னும் எழுதியிருப்பதையெல்லாம் படித்தால் வாந்தி வருகிறது.

ஒரு தெலுங்கு தேசம் கட்சித் தொண்டரின் உடலில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு கிலோவாக கொஞ்சம், கொஞ்சமாக வெட்டியெடுத்து வீசியெறிந்து  சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார். ஒருவரின் வயிற்றில் டிரில்லிங் மெஷினை வைத்து ஓட்டை போட்டு கொலை செய்துள்ளார்.

இவருக்குச் சற்றும் சளைக்காதவராக இருந்திருக்கிறார் இவருடைய தோஸ்த்தான மட்டலச்செருவூ சூர்ய நாராயண ரெட்டி. வீடு புகுந்து பெற்றோர்கள் முன்னிலையிலேயே ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்திருக்கிறார். இந்தப் புகார்தான் முதன்முதலாக இவரைப் பற்றி வெளியில் பேச வைத்துள்ளது. ஒரு அரசு ஊழியையும் கற்பழித்த புகாரும் இவர் மேல் உள்ளது.

இவர்களுடைய அட்டூழியங்களைப் பொறுக்க முடியாத மக்கள் நக்ஸலைட்டுகளின் துணையை நாடத் துவங்க.. நக்ஸலைட்டுகள் இவர்களை அதிகம் நெருங்க முடியாமல் கைத்தடிகளை முதலில் போடடுத் தள்ளத் துவங்கியிருக்கிறார்கள். இதனால் கோபம் கொண்ட ரெட்டிகளும் தங்கள் பங்குக்கு துப்பாக்கிகளுக்கு வேலை கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். இரு புறமும் போட்டுத் தள்ளுவது இதன் பின்பு மிக அதிகமாயிருக்கிறது.

1990-ல் சென்னா ரெட்டி மற்றும் சூரிய நாராயண ரெட்டியின் ஆட்கள் பத்தாபாளையம் கிராம தலைவரான போயா வெங்கட ராமுடு என்பவரை படுகொலை செய்திருக்கிறார்கள். இவர் பரிதலா ரவியின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அத்தோடு கூடவே வேப்பகுண்டா கிராம சங்கத்தின் செயலாளர் வரதப்பாவையும் கொலை செய்து இருவரின் சடலத்தையும் டீஸல் ஊற்றி எரித்துள்ளனர்.

சென்னா ரெட்டி, சூர்யநாராயண ரெட்டி இருவருமே இணைந்தும் பல கொலை காரியங்களைச் செய்திருக்கிறார்கள். நேமிலிவரம் கிராம முன்சீப் சுப்பராயுடுவை கங்கணப்பள்ளிக்கு கடத்திச் சென்று அங்கேயே அவரை கொலை செய்திருக்கிறார்கள். 1994-ல் ராயுடுரகம் என்ற ஊரில் நாராயணப்பா என்பவரை கொலை செய்திருக்கிறார்கள். இவர் பரிதலா ரவிக்கு மிக நெருக்கமானவர்.

குடியரசு தினத்தன்று கொடியேற்றுவதற்காகச் சென்ற தகரகுண்டா கிராமத்தின் தலைவரான போயா நாகராஜூவை சூர்ய நாராயண ரெட்டியும் அவரது ஆட்களும் குண்டு வீசி கொலை செய்துள்ளனர். இவரும் பரிதலா ரவியின் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்.


இப்படி தனக்கு நெருக்கமானவர்களையெல்லாம் சென்னா ரெட்டியும், சூர்யநாராயண ரெட்டியும் அவர்தம் கூட்டாளிகளும் பொலி போட்டுவிட்டதை அறிந்த பரிதலா ரவி பதிலடி கொடுக்க நேரம் பார்த்துக் காத்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்.

அதற்கான சரியான தருணத்தை நக்ஸல் அமைப்பினரே அவருக்குக் கொடுத்திருக்கின்றனர். 1991-ல் இந்த அழித்தொழிப்பு பிராஜெக்ட்டில் நக்ஸல்களுடன் கை கோர்த்திருக்கிறார் ரவி.

இத்தனை நாட்கள் இவர்களுடைய அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டவர்கள் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்தது இந்த ஆண்டில்தான் என்று ஆந்திர அரசியல் வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது.

முதல் பலி பெனுகுண்டா எம்.எல்.ஏ.வான சேனா சென்னா ரெட்டிதான். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனது வீட்டில் சேரில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சென்னா ரெட்டியை அணுகிய போலீஸ் உடையணிந்த நக்ஸல்கள் முதலில் ஒரு சல்யூட்டை அவருக்கு வைத்துவிட்டு பின்பு சராமரியாக அவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இந்தக் களேபரத்தில் சென்னாவின் அடியாட்கள் சிலரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

எம்.எல்.ஏ.வான சென்னா ரெட்டியின் மரணத்தால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் பி.டெக். மூன்றாமாண்டு மாணவராக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னா ரெட்டியின் மூத்த மகன் ரமணா ரெட்டி தனது படிப்பை நிறுத்திவிட்டு தேர்தல் களத்தில் குதித்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் காடே லிங்கப்பா என்பவர் போட்டியிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திலேயே தங்களது கை வரிசையைக் காட்டியுள்ளது ரெட்டி தரப்பு. தெலுங்கு தேச கட்சித் தொண்டர்கள் சிலர் இந்தத் தேர்தலின்போது கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடுமையான எதிர்ப்பிலும் ரமணா ரெட்டியே வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகியிருக்கிறார். இதன் பின்பு இந்தக் கொடூர கூட்டாளிகளின் அட்டகாசம் அனந்தப்பூரையே அதகளமாக்கியிருக்கிறது.

இந்த நேரத்தில்தான் ஆந்திர அரசியலையே புரட்டிப் போடக் கூடிய ஒரு நிகழ்வு நக்ஸல்கள் இயக்கத்தில் தோன்றியது. அதுவரையில் ஏழை, எளிய மக்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்கிற ஒற்றைக் குறிக்கோளோடு போராடி வந்த நக்ஸலைட்டுகள் அமைப்பு  என்றழைக்கப்பட்ட மக்கள் யுத்தக் குழு இரண்டாகப் பிரிந்தது.

புகழ் பெற்ற போராளியான கொண்டப்பள்ளி சீதாராமையா மக்கள் யுத்தக் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார். மக்கள் யுத்தக் குழு சீதாராமையா குரூப் என்றே ஒரு தனிப் பிரிவு ஏற்பட்டது. சென்னா ரெட்டியை சுட்டுக் கொன்ற புகழ் பெற்ற இன்னொரு போராளி பொட்டுல்ல சுரேஷ் இந்த குரூப்பைச் சேர்ந்தவர்தானாம்..

இந்த நேரத்தில் ரவி எடுத்த ஒரு பகீர் முடிவுதான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மரணத்திற்கே காரணமாக அமைந்திருக்கிறது. சூர்ய நாராயண ரெட்டியைப் பழி வாங்க வேண்டி என்ன செய்யலாம் என்று மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொண்டிருக்கிறது ரவியின் டீம்.

இந்தச் சமயத்தில் சூர்ய நாராயண ரெட்டியின் குடும்பத்தின் மீது அந்த ஊர் மக்கள் சிறிதளவு அனுதாபம் காட்டியிருந்ததாலும், சூர்ய நாராயண ரெட்டி அதிக நாட்கள் கர்நாடகாவிலேயே இருந்ததினாலும் அவரையும் நெருங்க முடியாமல் தவித்தது ரவியின் டீம். உண்மையில் தனது வலது, இடது கைகளைப் போன்றவர்கள் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்படுவதை உணர்ந்து கொஞ்சம் பயந்து போன நிலையில்தான் சூர்ய நாராயண ரெட்டி கர்நாடகாவுக்குத் தப்பிச் சென்று பதுங்கியிருந்திருக்கிறார்.

அவரைக் கொலை செய்ய முடியாமல் தவித்தவர்கள் சூர்யநாராயண ரெட்டியின் வீட்டில் நடக்கவிருக்கும் விஜயதசமி கொண்டாட்டங்கள்  பற்றிய செய்தி கிடைத்ததும் பரபரப்பாகியுள்ளார். ஒரு சினிமாவின் திரைக்கதையைப் போல இந்த படுகொலையை கனகச்சிதமாகச் செய்திருக்கிறது ரவியின் டீம்.

1993-ம் ஆண்டு இந்தக் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. சூர்யநாராயண ரெட்டியின் அம்மா தனது வீட்டு டிவி ரிப்பேராகிவிட்டதாக டிவி ரிப்பேர் கடையில் டிவியை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். இதை துப்பறிந்த பரிதலா ரவியின் டீம் மெம்பர்கள் இதனை வைத்தே அந்தக் குடும்பத்தை கூண்டோடு அழிப்பதற்கு முடிவு செய்திருக்கிறார்கள்.

டிவியை ஆன் செய்தாலே வெடித்துவிடும் வகையில் ஒரு வெடிகுண்டை செட்டப் செய்து டிவிக்குள் வைத்து அதனை அந்த நிகழ்ச்சி நடந்த நேரத்தில் சூர்யநாராயண ரெட்டியின் வீட்டுக்குக் கொண்டு போய் வைத்துவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார்கள்.

அவர்கள் வீட்டு வாசலைத் தாண்டவும், இங்கே டிவி வெடிக்கவும் மிகச் சரியாக இருந்திருக்கிறது. இந்தப் படுகொலைத் தாக்குதலில் சூர்ய நாராயண ரெட்டியின் அம்மா, தங்கை, அண்ணன், அண்ணன் மனைவி, வேலையாளர் என்று சிலர் இறந்து போய்விட்டார்கள். இந்தச் சமயத்தில் சூர்யநாராயண ரெட்டி, தனது மனைவி பானுமதியுடன் வீட்டுக்கு வெளியில் இருந்ததால் தப்பித்துவிட்டார். இந்தச் சம்பவம்தான் இன்றைக்கு ரவியை பரலோகத்துக்கு பார்சல் கட்டி அனுப்ப கடைசியான காரணமாக திகழ்ந்திருக்கிறது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பரிதலா ரவிதான் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவரை கொலையாளியாக உலகத்திற்கு அடையாளம் காட்டிய முதல் வழக்கும் இதுதான்.

இந்த நேரத்தில் மக்கள் யுத்தக் குழு மேலும் இரண்டாக உடைந்தது. ஒன்று ரெட் ஸ்டார் என்றும் மற்றொரு ரீ-ஆர்கனைஸிங் கமிட்டி என்றும் அழைக்கப்பட்டது. பொட்டுல்ல சுரேஷ் ரீ ஆர்கனைஸிங் கமிட்டிக்குத் தலைமை தாங்கினார். சுதர்சன் என்னும் நக்ஸல் தலைவர் ரெட் ஸ்டார் குழுவுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார்.

இதில் ரெட் ஸ்டாரை பிரமோட் செய்து ஆதரவளிக்க முன் வந்தவர்கள் சென்னா ரெட்டியின் மகன்களும், சூர்ய நாராயண ரெட்டியும். இந்தப் பக்கம் இவர்கள் இருந்தால் எதிர்த் தரப்பில் நிச்சயமாக பரிதலா ரவி இடம் பெறுவார் அல்லவா.? ஆமாம்.. ரீ ஆர்கனைஸிங் கமிட்டியின் பின்னணியில்.. ஆனால் முன்னணி பிரமுகராகத் திகழ்ந்தவர் பரிதலா ரவிதான்.

தனக்குப் பின்னேயிருந்த நக்ஸலைட் தோழர்களை வைத்துக் கொண்டு துவக்கப்பட்ட ரவியின் துப்பாக்கி தீர்ப்புகள் இனிமேல்தான் நிஜமாகவே ஆரம்பித்துள்ளன. ரவியின் குழு 16 பேரை நேரடியாக படுகொலை செய்துள்ளார்கள். ஓபுல் ரெட்டி மற்றும் சூர்ய நாராயண ரெட்டியின் ஆதரவாளர்களான 13 பேரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளார்கள்.

அப்போதைய காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் ரவியின் மீது அடுக்கடுக்காக பல வழக்குகள் சுமத்தப்பட்டன. மொத்தம் 57 வழக்குகள் என்றாலும் அதில்  நேரடி சாட்சிகள் இல்லை. ஆனால் 5 வழக்குகளில் மட்டுமே ரவியே நேரடியாக பங்கேற்று படுகொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

ரவியின் பின்புலத்தில் இருந்த நக்ஸலைட்டுகளை ரவி தனக்காகவும், பழி தீர்க்கவும் பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள். ஆனால் நக்ஸல்கள் இப்போதுவரையிலும் அதனை மறுக்கிறார்கள். நக்ஸல்கள் இல்லாமல் ரவி தனக்கென்று தனியாக ஒரு படையைத் திரட்டி வைத்திருந்தார். அந்தக் கூலிப்படைதான் அவர் கை காட்டியவர்களையெல்லாம் படுகொலை செய்தது என்கிறார்கள். ரவிக்கு முக்கியத் தளபதியாக இருந்தவர் பொட்டுல சுரேஷ், சமான், பிரபாகர், மதுசூதனன் ரெட்டி இன்னும் பலர்..

சென்னா ரெட்டி குரூப் மற்றும் சூர்ய நாராயண ரெட்டியின் குரூப்பைச் சேர்ந்தவர்கள் வகை, தொகையில்லாமல் இந்தச் சமயத்தில்தான் ரவியினால் அழித்தொழிக்கப்பட்டுள்ளார்கள். இந்த அனந்தப்பூர் வட்டாரத்தில் தன்னை எதிர்ப்பவர்கள் இருக்கவேகூடாது என்ற ரவியின் கட்டளைக்குப் பணிந்த அவரது கூலிப்படை செய்த படுகொலைகளினால் எதிர்ப் படுகொலைகளும் நடத்தப்பட்டுதான் வந்திருக்கின்றன. ஆனாலும் ரவிக்கு இதில் எந்தப் பாதிப்பும் இல்லாமல்தான் இருந்திருக்கிறது.

இப்படி அனந்தப்பூர் மாவட்டமே இந்த பழி வாங்கல் கதையில் கலகலத்துப் போயிருந்த சூழலில் கட்சிக் கூட்டத்துக்காக வந்த ஒரு தலைவரே இந்த இரண்டு குழுக்களின் வலிமையைக் கண்டு ஒரு கணம் அசந்துபோய் திகைத்துவிட்டார். அவர் கலியுகக் கண்ணனான திரு.என்.டி.ராமாராவ்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத்தையே தன் கைக்குள் வைத்திருந்த ரமணா ரெட்டியை எதிர்க்கவும், அந்த மாவட்டத்தில் மட்டும் தனது கட்சியின் சார்பில் எதிர்த்து நிற்கும் தைரியமுள்ள ஒருவரும் இல்லாமல் தவித்தும் கொண்டிருந்த என்.டி.ராமாராவிடம் பரிதலா ரவி பற்றி எடுத்துரைத்தார்கள் கட்சிக்காரர்கள்.  "சிக்கினான்டா ஒரு அர்ஜூனன்.. இழுத்துட்டு வாங்கடா..." என்ற ராமாராவின் உத்தரவின்பேரில் முதல் முறையாக மீடியாக்களின் லைம்லைட்டுக்கு, அரசியல் வெளிச்சத்துக்கு வந்தார் பரிதலா ரவி.

அரசியல் துணையோடு, ஆட்சி, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு போலீஸ் துணையோடு ஆடி வரும் ரமணா ரெட்டியின் ஆட்டத்தை அடக்க வேண்டுமெனில் அரசியலில் நுழைவது சாலச் சிறந்தது என்ற ரவியின் அப்போதைய முடிவு சரியானதுதான்.

1993-ல் நடந்த மாநில சட்ட சபைக்கான தேர்தலில் பெனுகுண்டா தொகுதியின் தெலுங்கு தேசக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் பரிதலா ரவி. ரமணா ரெட்டியின் கடுமையான எதிர்ப்பு. சில தொண்டர்களின் படுகொலைகள்.. இத்தனையையும் தாண்டி முதல் முறையாக எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று  62 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் ரவி. கூடுதலாக ராமாராவின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் ஆனார்.
இதன் பின்பு அனந்தப்பூர் மாவட்டத்தின் நிலைமை தலைகீழானது. மாவட்ட நிர்வாகமே பரிதலா ரவியின் கீழ் மண்டியிட்டுவிட்டது. அண்ணன் கண் அசைவில்லாமல் தொகுதியில் எதுவும் நடக்காது என்ற நிலைமையானது. இந்தச் சமயத்தில்தான் பரிதலா ரவியின் துப்பாக்கிச் சத்தம் இன்னும் அதிகமாகக் கேட்கத் துவங்கியது என்கிறது மீடியா.

சூர்ய நாராயண ரெட்டியின் ஆதரவாளர்களும், ரமணா ரெட்டி மற்றும் ஓபுல் ரெட்டியின் அல்லக்கைகளும் தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். பலரும் கர்நாடகாவுக்குத் தப்பியோடினார்கள். உள்ளூரில் தனக்கு எதிரிகளே இருக்கக் கூடாது என்ற பரிதலா ரவியின் உத்தரவை அவருடைய அடிப்பொடிகள் சிரமமேற்கொண்டு செய்து வந்த தருணத்தில் எதிர்பாராத ஒரு சிக்கல் முளைத்தது. இது அவரது சொந்தக் கட்சியிலேயே..

பொதுவாகவே ஆந்திர அரசியலை நிர்மாணிப்பது ரெட்டிகளும், நாயுடுக்களும்தான். பண முதலைகளான இவர்கள்தான் ஆந்திராவின் ஆட்சியையே தீர்மானிக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்கள். இப்படியொரு ரெட்டியாக அனந்தப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் திகழ்ந்து வந்த ஜே.சி.பிரபாகர் ரெட்டி என்பவர் தெலுங்கு தேசக் கட்சியில் இணைய முன் வந்தார். (இப்போது இந்த பிரபாகர் ரெட்டிதான் காங்கிரஸ் அரசில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருக்கிறார்)

ஆனால் இவரது வருகையை பரிதலா ரவி விரும்பவில்லை. இவரைக் கட்சியில் சேர்க்கக் கூடாது என்று எதிர்த்தார். இந்த எதிர்ப்பை அவர் என்.டி.ராமாராவிடமும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்போது ராமாராவ் அவரது புதிய மனைவி லட்சுமி சிவபார்வதியின் கட்டுப்பாட்டில் இருந்ததால் எதுவும் சொல்ல முடியாத நிலைமை. ஹைதராபாத்தில் என்.டி.ஆரை பார்த்து காலில் விழுந்து கட்சியில் சேர்ந்தார் பிரபாகர் ரெட்டி.

இதனைக் கேள்விப்பட்ட உடனேயே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ரவி. ஆனால் அப்போதும் அனந்தப்பூர் மாவட்டம் அவரது முழு கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கிறது. இதன் பின்பான சமரசப் பேச்சில் ரவியின் மீதான பாசத்தில் கட்டுப்பட்ட ராமாராவ், மீண்டும் ரவியை அழைத்து பேசி, சமாதானம் செய்து அவரையே  தேர்தலில் நிற்க வைத்து எம்.எல்.ஏ.வாக்கிவிட்டார்.


இந்த நேரத்தில்தான் சந்திரபாபு நாயுடு, லட்சுமி சிவபார்வதிக்கு எதிராக உட்கட்சிக் கலகம் செய்து முக்கால்வாசி எம்.எல்.ஏ.க்களைக் கடத்திக் கொண்டு போய் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். இந்த நேரத்தில் தனக்கு அரசியல் அறிமுகம் கொடுத்த ராமாராவுக்கு தனது முழு ஆதரவையும் நீட்டினார் ரவி.

தனது அனந்தப்பூர் மாவட்டத்தின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கிருஷ்ணன் பக்கம்தான் என்று பகிரங்கமாக அறிவித்து என்.டி.ஆருக்கு தனது நன்றிக் கடனைத் தெரிவித்துக் கொண்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக என்.டி.ஆர். திடீரென்று மரணமடைந்துவிட.. கட்சியின் கடிவாளம் லட்சுமி சிவபார்வதியின் கைகளுக்குச் சென்றது..

ஏற்கெனவே சிவபார்வதியுடன் சண்டையில் இருந்த ரவி அனந்தப்பூர் மாவட்டத்தில் மட்டும் கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மாநிலத் தலைமைக்கு சவால் விட்டபடியே இருந்திருக்கிறார். அவருடைய அதிருப்தி சிவபார்வதியைவிடவும் சந்திரபாபு நாயுடுவுக்கு நன்கு தெரிய வர.. அன்போடு அழைப்பு வந்தது ரவிக்கு..

“அனந்தப்பூர் மாவட்டத்தில் வேறு எந்த நபரும் உங்களுக்கெதிராக கொம்பு சீவி விடப்பட மாட்டார்கள்..” என்று சந்திரபாபு நாயுடு உறுதிமொழியளிக்க அணி மாறினார் பரிதலா ரவி.

1996-ல் நடந்த ஆந்திர தேர்தலில் அதே பெனுகுண்டா தொகுதியில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதே ரமணா ரெட்டியைத் தோற்கடித்தார் பரிதலா ரவி. இதன் பின்பு அடுத்தச் சுற்று பழி வாங்குதல் பணி துவங்கியது..

ரவியின் கூலிப்படை டீம் இப்போது உயிரோடியிருக்கும் தலைவர்களைக் குறி வைத்தது. முதல் பலி ஓபுல் ரெட்டி. 1996-ம் ஆண்டு ஒரு நாள். ஓபுல் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஹைதராபாத்திற்கு வந்தவர் ஹோட்டலுக்கு விலைமாதுவை வரவழைத்து குஷியாக இருந்துள்ளார். இவரது வருகையை மோப்பம் பிடித்த ரவியின் டீம் பக்கா பிளானோடு ஹோட்டலுக்குள் நுழைந்துள்ளது.

ஓபுல் ரெட்டி 'வேலை'யை முடித்துவிட்டு ஹாயாக குளியல் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அறைக்குள் நுழைந்த டீம், விலைமாதுவை வெளியேற்றிவிட்டு ஓபுல் ரெட்டிக்காக காத்திருக்கிறது. வெளியில் வந்த ஓபுல் ரெட்டியின் தொண்டையை அறுத்ததுடன் இல்லாமல் அவரது ஆணுறுப்பையும், விதைப்பையையும் அறுத்து காக்காய்க்கு வீசிவிட்டு பறந்தோடி விட்டது. இந்தக் கொலையை நக்ஸல் இயக்கம்தான் செய்தது என்றாலும் முதல் குற்றவாளியாக பரிதலா ரவிதான் சேர்க்கப்பட்டார்.

இவரது கொலையில் இரண்டுவிதமான செய்திகள் கிடைத்துள்ளன. இவரது வீட்டில்தான் இந்தக் கொலை நடந்ததாகவும் சொல்கிறார்கள். உண்மை எது என்று தெரியவில்லை.

இப்போது சூரியின் டர்ன்.. தனது ஆதரவாளர்களையும், தனக்கு நெருக்கமான உறவுக்காரருமாக இருந்த ஓபுல் ரெட்டியின் மரணத்திற்கு அடுத்து ரவி தன்னைத்தான் குறி வைத்திருக்கிறார் என்பது உணர்ந்து ரவிக்கு முன்பாக தான் முந்திக் கொள்ள நினைத்திருக்கிறார். ஆனால் அதனைச் செயல்படுத்தியவிதம் இந்த இரண்டு குடும்பங்களின் வம்ச சண்டையை அகில இந்தியாவுக்கும் எடுத்துச் சென்றது..

19.11.1997 அன்று காலை 11.50 மணி. ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ராமாநாயுடுவின் சினி ஸ்டூடியோவில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தன கார்களின் அணிவகுப்பு. அதில் நடுநாயகமாக வந்த காரில் நடிகர் மோகன்பாபுவுடன், பரிதலா ரவியும் இருந்தார். 


தான் தயாரித்த தனது தந்தை ராமுலுவின் வாழ்க்கை சரித திரைப்படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டுவிட்டு அதில் தனது தந்தையாக நடிக்க ஒப்பந்தமாயிருக்கும் மோகன்பாபுவுடன் பேசியபடியே ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் ரவி.

ரவியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து ஸ்டூடியோவில் இருந்து 25 அடி தூரத்தில் ஒரு பழைய பியட் கார் நின்று கொண்டிருந்தது.. எமனாக நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் அது வெடிக்கப்படும் சூழலில் தயாராய் இருந்தது.

எல்லாம் சரியாக இருந்திருந்தால் பரிதலா ரவியுடன் அன்றைக்கு மோகன்பாபுவும் சேர்ந்தே இறந்து போயிருப்பார். ஆனால் எங்கும், எதிலும் முந்திக் கொள்ளும் மன நிலையை உடைய பத்திரிகையாளர்கள் செய்த ஒரு சின்ன செயலால்தான் அன்றைக்கு ரவி லேசான காயங்களோடு தப்பித்துக் கொண்டார்.

ரவியின் வாகனத்திற்கு பின்னால் வந்து கொண்டிருந்த தெலுங்கு E டிவியின் குழு வந்த வாகனம் திடீரென்று ரவியின் வாகனத்தை முந்திக் கொண்டு முன்னால் சென்றது.. இந்த பத்து செகண்ட்டுகள் வித்தியாசத்தில் ரிமோட் கண்ட்ரோல் அழுத்தப்பட பியட் கார் வெடித்த வெடிப்பில் E டிவியின் கார் சுக்கு நூறானது.. அதில் இருந்த 6 பணியாளர்களும் இறந்து போனார்கள். அப்பாவி மக்களையும் சேர்த்து மொத்தம் 26 பேர் மரணம். 32 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.



மோகன்பாபுவும், பரிதலா ரவியும் சிறிதளவு காயங்களுடன் தப்பித்தது கடவுள் புண்ணியம்தான்.. ஆந்திராவே பதைபதைத்தது.. இப்போதும் அனந்தப்பூர் மாவட்ட போலீஸ் மட்டும் இது சூரியின் வேலையாகத்தான் இருக்கும் என்று உடனுக்குடன் போலீஸ் தலைமையகத்துக்கு செய்தி அனுப்பியதுடன் சூரியுடன் கடைசியாக அனந்தப்பூரில் தென்பட்ட தர்மாவரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்லரு வாசுதேவ ரெட்டி என்ற 20 வயது வாலிபனைப் பற்றியத் துப்பையும் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த சிஐடி போலீஸார் வசம் சேர்ப்பித்தனர்.

இங்கேயிருந்து நூல் பிடித்த போலீஸின் தேடுதல் வேட்டையில் பானுகோடா கிஷ்டப்பா, பி.லஷ்மண ரெட்டி, ஜூனால கூத்தப்பள்ளி, குண்டிமடி ராமுலு, கொண்டா ரெட்டி, பெருகு வெங்கடேச்சலூ 
  என்று எல்லாவிதமான ரெட்டிகளும் சிக்கிக் கொண்டார்கள். போலீஸின் தேடுதல் வேட்டையில் சூரியின் மனைவி பானுமதி போலீஸில் பிடிபட்டார். அவரை வைத்து போனில் மிரட்டியதையடுத்து கர்நாடகாவில் சித்ரதுர்கா என்னுமிடத்தில் பதுங்கியிருந்த சூரி நாராயண ரெட்டி அதே ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி பெங்களூரில் யஷ்வந்த்புரம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

இந்த வழக்கில் மொத்தம் 21 பேர் குற்றம்சாட்டப்பட்டு அதில் 14 பேர் மட்டுமே பிடிபட்டார்கள். மீதியிருக்கும் 7 பேர் இன்றுவரையிலும் தேடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதில் சூரிய நாராயண ரெட்டிதான் முதல் குற்றவாளி.

குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேர்களில் 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், மீதி 8 பேரை விடுவித்தது. ஏ-1 குற்றவாளியான சூரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம். இதனை எதிர்த்து சூரி அப்பீல் செய்தபோது, ஆந்திர உயர்நீதிமன்றம் இதனை வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று மாற்றித் தீர்ப்பளித்து பரபரப்பாக்கியது.

ஆனாலும் இதற்காகவெல்லாம் சூரி தரப்பு பயந்துவிடவில்லை. இதற்குப் பின்னும் படுகொலைகள் தொடர்ந்தன. கோர்ட் குற்றவாளியில்லை என்று விடுவித்தாலும் நாங்கள் விடுவதில்லை என்று துப்பாக்கிகள் ராயலசீமா மாவட்டங்கள் முழுவதும் முழங்கின. இந்த முறையும் நக்ஸல் இயக்கம் ரவியின் முன்னே நின்று கொள்ள கொலைகள் விழத் தொடங்கின.

ஹைதராபாத்தில் கொத்தபள்ளி என்னுமிடத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த இருவரை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர். பானுகோட்டா கிஷ்டப்பா, குண்டிமாடி ராமுலு, வெங்கடேசலு, கொண்டா ரெட்டி என்ற சூரியின் ஆதரவாளர்களை அடுத்தடுத்துப் போட்டுத் தள்ளியது ரவியின் தரப்பு.. இதில் போயா நாகராஜூ என்பவர் மட்டும் இரண்டு முறை நடத்திய தாக்குதலின்போதும் தப்பித்துக் கொண்டார். ஆயுசு கெட்டி போல..

சிறுசுகளையெல்லாம் போட்டாச்சு என்றாலும் ஒரேயொரு பெரிசு மட்டும் ஊர்ப் பக்கமே வராமல் ஹைதராபாத்திலேயே பலத்த போலீஸ் பாதுகாப்போட உக்காந்திருக்கே.. விடலாமா? அதுலேயும் எலெக்ஷன் வேற நெருங்கிருச்சு. இப்பவே போட்டாத்தான அடுத்த தேர்தல்ல ஈஸியா ஜெயிக்கலாம் என்று யோசித்த ரவி தரப்பு, இப்போது குறி வைத்தது ஓபுல் ரெட்டியின் அண்ணனும், பெனுகுண்டாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரமணா ரெட்டியை..

1999-ல் ஹைதராபாத்தில் இருந்த ரமணா ரெட்டியின் வீட்டுக்குள் பர்தா அணிந்த இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். கட்சி விஷயமாக பேசுவதற்காக அவர்தான் வரச் சொன்னார் என்றார்கள். நானா? லேடீஸையா? என்றபடியே சந்தேகத்தோடு எழுந்து வந்த ரமணா ரெட்டியை பார்த்த மாத்திரத்தில் பர்தாவை விலக்கி கைகளில் இருந்த துப்பாக்கியால் சராமரியாகச் சுட்டுத் துளைத்ததில் ரவியின் பெரிய எதிரியின் உயிரும் உதிர்ந்து போனது.

1999 தேர்தலும் வந்தது. பரிதலா ரவி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். சிறையில் இருந்தபடியே சூரி நாராயண ரெட்டி தனித்துப் போட்டியிட்டார். உயிர் மேல் இருந்த பயம் காரணமாக காங்கிரஸின் முக்கியத் தலைகள் போட்டியிட முன் வராததால் ஒப்புக்குச் சப்பாணியாக பெல்லாம் சுப்ரமணியம் என்பவரை நிறுத்தி வைத்தது காங்கிரஸ். பரிதலா ரவி  70.82 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார். சூரிக்கு டெபாஸிட்டே காலியானது.

அனந்தப்பூர் மாவட்டம் கனிம வளம் நிறைந்தது.. சுரங்கங்கள் நிறையவும் உள்ளன. குவாரிகள் துவங்கி காசு பார்க்க ஆரம்பித்த நேரத்தில் பரிதலா ரவியின் சொத்துக்களும் கூடத் துவங்கின. ரவிக்குத் தெரியாமல் எந்த அரசு கான்ட்ராக்டும் மாவட்டத்தில் யாருக்குமே கிடைக்காது. அவர் கண் ஜாடை காட்டினால்தான் மாவட்ட நிர்வாகமே நடக்கும் என்ற நிலைமையில் இதெல்லாம் சகஜம்தானே..

கர்நாடகாவிலும் அனந்தப்பூரை ஒட்டிய மாவட்டங்களிலும், ஊர்களிலும் நக்ஸல்கள் குரூப்பை வைத்து தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நிறுவிக் கொண்டார் ரவி. இந்த நேரத்தில் அவர் சம்பாதித்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு 300 கோடி இருக்கும் என்கிறார்கள்.
 

அதே சமயம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணையும், பரிதலா ரவியையும் இணைத்து ஒரு செய்தி  ஆந்திராவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது..! 

அனந்தப்பூர் மாவட்டத்தில் பவன் கல்யாண் நிலம் ஒன்றை வாங்கியிருந்தாராம். ஆனால் அதற்கான பணத்தை நிலத்தின் உரிமையாளரிடம் முழுதாகத் தருவதற்கு முன்பாகவே நிலத்தை வேறொருவருக்கு விற்று லாபம் பார்த்திருக்கிறார் பவன் கல்யாணம். பாதிக்கப்பட்டவர் பரிதலா ரவியிடம் சென்று முறையிட்டிருக்கிறார். பல முறை சொல்லியனுப்பியும், தூது அனுப்பியும் பவன் கல்யாண், பரிதலா ரவியின் பேச்சைக் கண்டு கொள்ளவே இல்லையாம்.. 

பொறுமையாக இருந்து வந்த ரவி, கடப்பா மாவட்டத்திற்கு ஏதோ ஒரு ஷூட்டிங்கிற்காக வந்திருந்த பவன் கல்யாணை ஹோட்டலில் இருந்து குண்டுக்கட்டாகத் தூக்கி வந்திருக்கிறார். தன் இடத்தில் வைத்து பவன் கல்யாணிடம் பணத்தைக் கேட்க அவர் கொடுக்க மறுத்து தெனாவெட்டாகப் பேசினாராம். கடுப்பான ரவி.. அப்போதே பவன் கல்யாணின் தலையை மொட்டையடித்து திருப்பியனுப்பினாராம்..

பத்து மணி நேர இடைவெளியில் மொட்டைத் தலையுடன் வெளியில் காட்சியளிக்க முடியாததால் பவன் கல்யாண் இரவோடு இரவாக ஹைதராபாத்திற்குத் தப்பியோடிவிட்டதாக பரிதலா ரவியின் சில அல்லக்கைகள் இப்போது மேடை போட்டு சொல்லியிருக்கிறார்கள்..! இதை வழக்கம்போல பவன் கல்யாண் மறுத்திருக்கிறார். இப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் இது உண்மையாகவே நடந்தது என்று தெரிந்துதான் ராம்கோபால்வர்மா ரத்தச்சரித்திரம் முதல் பாகத்தில் இப்படியொரு காட்சியை வைத்திருந்தாராம். அந்தக் காட்சியின் ஸ்டில்கள்கூட டிரெயிலரில் வந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் விஷயம் தெலுங்கு திரையுலகத்துக்குள்ளேயே புகைச்சலைக் கொடுத்ததால் கடைசி நிமிடத்தில் அந்தக் காட்சியை வர்மாவே நீக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். 


சிறைக்குள் இருந்தாலும் ரவியைப் போட்டுத் தள்ளும் முடிவில் மாற்றமில்லை சூரியிடம். ரவியின் வீட்டின் மீது குண்டு வீசித் தாக்குதல் தொடுக்கும் விதமாக ஒரு நடவடிக்கையையும் அப்போது சூரி செய்திருக்கிறார். இதுவும் காவல்துறையில் வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதில் இரண்டாவது குற்றவாளி யார் தெரியுமா? ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி.

ரவியைத்தான் போட முடியவில்லை. அவரது ஆட்களையாவது துப்பரவு செய்து அகற்றுவோம் என்ற நினைப்பில் ரவியின் ஆட்கள் மூவரை வெங்கடபுரம் அருகே வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள் சூரியின் ஆட்கள். இப்போதும் தெலுங்கு தேசம் ஆட்சிதான்.

அதேபோல் ரவியும் சூரியை சிறையிலேயே போட்டுத் தள்ளவும் செட்டப் ஆட்களை அனுப்பி வைத்து ஆழம் பார்த்திருக்கிறது. இதை போலீஸும், உளவுத்துறையும், சிறை நிர்வாகமும் கண்டறிந்து சூரியை மிகப் பாதுகாப்பான பகுதியில் வைத்து அடைத்து காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஒருவேளை சூரியை கோர்ட்டுக்கு கொண்டு வரும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நினைத்து மிகப் பெரும் செக்யூரிட்டியோடுதான் சூரியை கோர்ட்டுக்கு கொண்டு வந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.



ஒரு பக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. சென்னா ரெட்டியின் குடும்பம், இன்னொரு பக்கம் பாரம்பரியமான சூரிய நாராயண ரெட்டியின் குடும்பம் என்று இரண்டு பேரையும் பகைத்துக் கொண்டு ரவி தில்லாக ஆடியதால் இவர்களுடைய ஆதரவாளர்கள் குடும்பம், குடும்பமாக ஆனந்தப்புரம் மாவட்டத்தைவிட்டே காலி செய்தார்கள்.

மாவட்ட அமைச்சராக இல்லாவிட்டாலும் மாவட்டமே தானாக இருப்பதால் ரவியை சந்திரபாபு நாயுடுவால் அகற்ற முடியவில்லை. தட்டிக் கேட்கவும் முடியவில்லை. மனிதருக்கு அடுத்த தேர்தலில் தான் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெரிந்த பின்பு மக்களுக்கு நெருக்கமான வழிகளையும், திட்டங்களையும் சொல்லியும், செய்தும் எதுவும் தேறவில்லை.

போதாக்குறைக்கு ரவியின் எதிரணி நக்ஸல்களிடமிருந்து ரவிக்கே மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. “உங்களுடைய படுகொலைகள் எல்லை மீறிவிட்டன. நீங்கள் தேர்தலில் நின்றால் நிச்சயம் நாங்கள் உங்களை எதிர்ப்போம்” என்றார்கள். அத்தோடு சந்திரபாபு நாயுடுவையும் படுகொலை செய்ய அவர் திருப்பதி செல்லும் வழியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து இந்தியாவையே பதைபதைப்புக்குள்ளாக்கினார்கள்.

இந்த இடியாப்பச் சிக்கலில் 2004 தேர்தலும் வந்தது. இந்த முறை எப்படியும் ரவியை வீட்டுக்கு அனுப்பியே தீருவது என்கிற கொள்கையோடு களமிறங்கிய ஜெகன்மோகன்ரெட்டி தனது செல்வாக்கின் மூலம் சிறையின் உயரதிகாரிகளின் துணையோடு சூரியை வளைத்தார். அவரது மனைவி பானுமதியை தேர்தலில் பெனுகொண்டா தொகுதியில் நிற்க வைத்தால் காங்கிரஸ் கட்சி அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்று உறுதிமொழியையும் வழங்கினார்கள்.

சூரி சம்மதிக்க பானுமதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரானார். வழக்கம்போல எதிரணியில் ரவிதான்.  ஆனால் நக்ஸல்களின் திடீர் மிரட்டலால் ஆடிப் போன ரவியை அமைதியாக வீட்டிலேயே இருக்கச் சொன்னது கட்சித் தலைமை. தனது வெங்கடபுரம் கிராமத்தைவிட்டு வெளியில் வராமலேயே இருந்தார் ரவி.

கட்சித் தேர்தல் பிரச்சாரத்தை அவரது மனைவி சுனிதாவும், கட்சித் தொண்டர்களும் பார்த்துக் கொண்டார்கள். ஆனாலும் வாக்குப் பதிவுக்கு  சில நாட்களுக்கு முன்பு  தேர்தல் கமிஷனின் தீவிர எச்சரிக்கையால் ரவியின் தளபதிகளாகத் திகழ்ந்த சமான் என்பவரும், சுரேஷ் என்பவரும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இது தனக்கு வைக்கப்பட்ட குறியாக நினைத்த ரவி கடும் கோபமடைந்தார்.

இந்தக் கோபத்துடன் வாக்குப்பதிவு நடந்த நாளன்று ஒரு காங்கிரஸ் தொண்டர் துப்பாக்கியால் சுடப்பட.. அனந்தப்பூர் மாவட்டத்தில் பெரும் பிரச்சினையானது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரவியை வீட்டுக் காவலில் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இத்தனை களேபரத்துக்கு இடையிலும் 24,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ரவி.

தேர்தலில் தெலுங்கு தேசம் தோற்று காங்கிரஸ் வெற்றி பெற்றது. ரவியின் வாழ்க்கையின் கிராப் இங்குதான் சரியத் துவங்கியது. காங்கிரஸ் அமைச்சரவை பொறுப்பேற்று சரியாக மூன்றாவது நாளில் இருந்து அனந்தப்பூர் மாவட்டத்தில் பழிக்குப் பழியான கொலைச் சம்பவங்கள் தொடர ஆரம்பித்தன. இந்த முறை மாட்டிக் கொண்டவர்கள் பெரும்பாலானோர் தெலுங்கு தேசம் தொண்டர்கள்தான்.

இந்தப் பிரச்சினைகளுக்கிடையில் ரவிக்கு கொடுத்திருந்த பலமான பாதுகாப்பை விலக்கிக் கொண்ட மாநில அரசு 2 மெய்க்காவலர்களையும் 2 துப்பாக்கி ஏந்திய மெய்க்காவலர்களையும் மட்டுமே அளித்தது. அதிலும் வந்திருந்த புதிய பாதுகாவலர்களும் 40 வயதைத் தாண்டிய அரைக் கிழவர்களாகவும் இருந்தார்கள். இது தன்னை கல்லறைக்கு அனுப்ப அரசு செய்யும் சதி என்று நினைத்து ரவி கதறத் தொடங்கினார்.

மாநில அரசிடம் தனது நிலையை எடுத்துச் சொல்லி தனக்குக் கூடுதல் பாதுகாப்பு கோரினார். ஆனால் தரப்படவில்லை. ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இது குறித்து மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் 5 காவலர்களையும், 5 துப்பாக்கி ஏந்திய காவலர்களையும் ரவிக்கு வழங்கும்படி பரிந்துரைத்தது. வேறு வழியில்லாமல் அரசு இதனை வழங்கியது.

ஆனாலும் ரவி தன்னைக் கொல்ல சூரி சிறையில் இருந்தபடியே முயற்சிகளை செய்து வருகிறார் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்றாற்போல் தன்னையும் மாற்றிக் கொண்டிருக்கிறார். எப்போதும் 40 வாகனங்கள் படை சூழ சென்று கொண்டிருந்தவர் 2 வாகன வரிசைக்கு மாறினார். அப்போதுதான் தன்னை அடையாளம் காண முடியாது என்று நினைத்துக் கொண்டார்.

அப்போதைக்கு அவரை விட்டுவிட்டு சுற்றத்தைக் கவனிப்போம் என்று நினைத்த ரவியின் எதிர்க் கோஷ்டியினர் தங்களது அழித்தொழிப்பை தொடங்கினர்.

ரவிக்கு மிகச் சிறந்த ஆலோசகராகத் திகழ்ந்த பாட்சா 2004-ம் ஆண்டு தர்மாவரம் அருகே சூரியின் ஆதரவாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரவியின் ஆதரவாளர்களில் ஒருவரான ஆதி நாராயணன் சோமந்தபள்ளி அருகே சுட்டுக் கொல்லப்பட்டார்.

தகரகுண்டா பிரபாகர், ஜலகண்டி சீனிவாச ரெட்டி, தாமோதர் ரெட்டி, பாஸ்கர் ரெட்டி என்று போட்டுத் தள்ளியது தொடர்ந்தது.

தனது வீட்டின் அருகே வாக்கிங் சென்று கொண்டிருந்த ஆர்.கே. என்னும் ரவியின் ஆலோசகரும் அங்கேயே வெட்டிச் சாய்க்கப்பட்டார்.

சோமந்தபள்ளியில் நடந்த இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்காக ரவி வந்தால் அவரைப் படுகொலை செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது சூரி தரப்பு. ஆனால் இதனை அப்போதே ஸ்மெல் செய்துவிட்ட ரவி தனது பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டாராம்.

சூரி தரப்பு என்றில்லை.. அரசுத் தரப்பும் ரவியின் சிறகுகளை உடைக்கும் வேலையில் மும்முரமாக இருந்திருக்கிறது. ரவியின் கொடுக்கல், வாங்கல்களை கவனித்துக் கொண்டிருந்த பவுரலா கிருஷ்ணன் மற்றும் அவரது தம்பியை “ஸ்டேஷனுக்கு வாங்க.. கொஞ்சம் விசாரிக்கணும்” என்று அனந்தப்பூர் டி.எஸ்.பி. நரசிம்ம ரெட்டியே போன் செய்து அழைத்திருக்கிறார். மரியாதைக்கு போய் வருவோம் என்று நினைத்து கிளம்பிய அவர்களை வழியிலேயே சூரி தரப்பு மடக்கி சொர்க்கத்துக்கு அனுப்பியிருக்கிறது.

பெயருக்குச் சிறையில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் அதி தீவிரத் தொண்டர், தலைவர் என்கிற முறையில் சிறையில் ராஜமரியாதை கிடைத்திருக்கிறது சூரிக்கு. சிறையில் அவரால் சுதந்திரமாக செல்போனில் பேச முடியுமாம். அதில்தான் தனது ஆதரவாளர்களுக்கு பல கொலைகளுக்கு இன்ஸ்ட்ரக்ஷனும், ஸ்கெட்ச்சும் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஜெகன்மோகன்ரெட்டி கர்நாடகாவில் சுரங்கத் தொழிழில் ஈடுபட்டபோது அங்கும் ரவியால் அவருக்குத் தொல்லைகள் துவங்கின. ரவியை ஒழித்துக் கட்டினால்தான் நாம் தற்போதைக்கு நிம்மதியாகத் தொழிலை நடத்த முடியும் என்று நினைத்த ஜெகன்மோகன்ரெட்டி சிறையில் பல முறை சூரியைச் சந்தித்து ரவியைப் போட்டுத் தள்ள வேண்டி கிசுகிசு பேசியிருக்கிறார். இதற்கு செர்லாபள்ளி ஜெயில் கண்காணிப்பாளர் மிலிகாந்தும் துணை போயிருக்கிறார் என்று ரவியின் கொலைக்குப் பின்பு தெலுங்கு தேசம் கட்சிக்காரர்கள் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள்.

தன்னை கொலை செய்ய ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிக்கிறார் என்று ரவி பகிரங்கமாகப் புகார் செய்ய.. இதனை மறுத்து ஜெகன்மோகன்ரெட்டி புலிவெந்துலா கோர்ட்டில் ரவியின் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். சம்மனைப் பெற்றுக் கொண்ட ரவி, கோர்ட்டுக்குப் போகும் வழியில் தன்னைக் கொல்ல சதி நடப்பதாக  புகார் செய்தார். போலீஸ் பலத்த பாதுகாப்பு தரும் என்று சொல்லியும் தன்னுடைய ஆதரவாளர்களும் உடன் செல்ல அனுமதி வேண்டும் என்று கோரினார் ரவி. அது நிராகரிக்கப்பட்டது என்றாலும் 2 வாகனங்களுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு வந்து சென்றார் ரவி.


இந்த நேரத்தில்தான் எத்தனை நாட்கள்தான் எதிர்ப்பது..? எத்தனை கொலைகளைத்தான் செய்வது.. பேசாமல் சமாதானம் பேசி விடலாமே என்ற எண்ணத்தில் சூரியைச் சிறையிலேயே நேரில் சென்று சந்தித்திருக்கிறார் ரவி. ஆனால், "நீ செத்தால்தான் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியும்.." என்று சூரி நேருக்கு நேராகத் திட்டவட்டமாகச் சொல்லிவிட சமாதானக் கொடி பாதியிலேயே உடைந்து போனது..

2004-2005 ஆண்டுகளில் ரவி தனது அடிதடி, கொலை சம்பவங்களைச் சுருக்கிக் கொண்டாலும் கர்நாடக எல்லையில் இருக்கும் சுரங்கங்களில் மாமூல் வசூலிப்பது.. அனந்தப்பூர் மாவட்டத்தின் வழியாக சரக்கை ஏற்றிச் செல்லும் லாரிகளிடம் கப்பம் வசூலிப்பது என்று தனது அளப்பறையைத் தொடர்ந்துதான் இருக்கிறார். ஆனாலும் எச்சரிக்கையாக தனது வீட்டைவீட்டு அதிகம் வெளியில் வராமல் இருந்திருக்கிறார்.

சினிமாக்களில் வரும் டாடா சுமோக்கள் அணிவகுப்பைப் போலவே வரிசையில் செல்ல விரும்பும் ரவி இதற்காகவே ஒரே கலரில் பல வண்டிகளை வாங்கி வைத்திருக்கிறார். அத்தோடு எதிரிகளின் துப்பாக்கிக் குண்டில் இருந்து தப்பிக்க வேண்டி மூன்று புல்லட் புரூப் ஆடைகளையும் வாங்கி வைத்திருந்திருக்கிறார். ஒரே எண் கொண்ட காரில் அதிகமாக பயணம் செய்யாமல் தவிர்த்தும் வந்திருக்கிறார். வண்டிகளை மாற்றிக் கொண்டேயிருந்திருக்கிறார்.

இந்த நிலையில் சிறையில் ரவியைப் போட்டுத் தள்ளாமல் தூக்கம் வராமல் சூரி அல்லாடிக் கொண்டிருந்திருக்கிறார். சிறையில் தனக்குக் கிடைத்த புதிய நண்பரான ஜூலகண்டி சீனிவாச ரெட்டியுடன் கலந்தாலோசித்து தனது இறுதி திட்டத்தை வகுத்திருக்கிறார். 


இந்த நேரத்தில்தான் அல்வா மாதிரியான மேட்டர் ஒன்று சூரிக்குக் கிடைத்திருக்கிறது. ஜில்லா பரிஷத் தேர்தல்கள் பற்றிய கலந்துரையாடலுக்காக பரிதலா ரவி அனந்தப்பூர் கட்சி அலுவலகத்திற்கு வரப் போகும் செய்திதான் அது.

அன்றைக்கு ரவியைப் போட்டுத் தள்ளுவதுதான் இப்போதைக்கு சிறந்த வழி. கட்சியின் தொண்டனாக அவரை அப்போதுதான் நெருங்க முடியும். இதைவிட்டால் நமக்கு வேறு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அன்றைக்குத்தான் முகூர்த்தத்தைக் குறித்துக் கொடுத்திருக்கிறார் சூரி.

ஜூலகண்டா சீனிவாச ரெட்டி தன்னுடன் நாராயண ரெட்டி, ரெகமய்யா என்று ஒரு டீமையே இணைத்துக் கொண்டு ஜனவரி 23, 2005-ல் அனந்தப்பூர் கிளம்பினார்.. அங்கே ஏற்கெனவே அவர்களுக்காகக் காத்திருந்த ராம்மோகன் ரெட்டி என்ற வங்கி ஊழியரின் இல்லத்தில் தங்கியிருந்தார்கள். தாமோதர் ரெட்டி, நாராயண ரெட்டி, ஓபி ரெட்டி, வடே சீனா, ரங்க நாயகலு, கொண்டா என்ற கூட்டணி பெரிதாகியது.

ஜனவரி 24, மதியம் 1 மணிக்கு தனது மனைவி சுனிதாவுடன் கட்சி அலுவலகத்திற்கு வந்தார் ரவி. மனைவி ஒரு பக்கம் போய் பெண் உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்க.. தனது கட்சியின் பிரமுகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் ரவி. இந்த நேரத்தில்தான் சூரியின் ஆட்கள் அங்கே வந்திருக்கிறார்கள். உள்ளே சிலர் நுழைய, சிலர் வெளியில் நின்றிருக்கிறார்கள். அங்கே யாரையும் சோதிக்க வசதியில்லை என்பது இந்தக் கொலையாளிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.

கட்சியினரிடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போவதற்காக நடந்து   வந்திருக்கிறார்.  அந்த நேரத்தில்தான் ஜூலகண்டா சீனிவாச ரெட்டி அவரைச் சுட்டிருக்கிறார். அருகில் இருந்த நாராயண ரெட்டியின் துப்பாக்கிக் குண்டும் இணைந்து கொள்ள ரவியின் உடலை குண்டுகள் துளைத்திருக்கின்றன என்று போலீஸ் கூறுகிறது.



ஆனால் உண்மையில் முதல் குண்டு சூரியின் துப்பாக்கியில் இருந்துதான் வந்திருக்கிறது என்று ரவியின் ஆதரவாளர்கள் இப்பவும் நம்புகிறார்கள். சூரி, அரசுத் தரப்பின் உதவியுடன் சிறையில் இருந்து இரண்டு நாட்கள் கேஷுவல் லீவில் புறப்பட்டு வந்து இந்தக் கொலையைச் செய்துவிட்டு மீண்டும் ஜெயிலுக்கே போய் பதுங்கிவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள் ரவியின் குடும்பத்தினர். ஆனால் இதனை வழக்கம்போல மறுக்கிறது அரசுத் தரப்பு.

அந்த நேரத்தில் சுட்டவர்கள் எப்படித் தப்பித்தார்கள் என்பதை ஊகிக்க முடியவில்லை என்றாலும் தொண்டர்கள் பலரும் சிதறி ஓடியிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் தப்பிக்கவும் முடிந்திருக்கிறது என்கிறது சி.பி.ஐ. ஆனால் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால்தான் பாதுகாவலர்களும் தங்களது ஏ.கே.47 துப்பாக்கியைக் கீழே போட்டார்கள் என்பதை சி.பி.ஐ.யின் விசாரணையில் கொலையாளிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்தக் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ., கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த வகையில் சூரியை முதல் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது. சி.பி.ஐ.க்கு வேலையே வைக்காமல் குற்றவாளிகள் அனைவரும் தினத்துக்கு ஒருவராக அவர்களாகவே நேரில் வந்து சரண்டைந்திருக்கிறார்கள். வழக்கு இப்போதும் அனந்தப்பூர் மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

கொலைக் குற்றவாளியான ஜூலகண்டா சீனிவாச ரெட்டி தான்தான் ரவியைக் கொலை செய்ததாக டிவிக்களுக்கு பேட்டி கொடுத்திருப்பது மிகச் சுவையான விஷயம். மேலும் சி.பி.ஐ.யும், போலீஸும் விசாரித்ததில் இந்தத் திட்டம் தோல்வியடைந்தால் தேர்தல் தினத்தன்று ஜில்லா பரிஷத் அலுவலகம் அருகில் ஸ்கூட்டர் குண்டு வைத்து ரவியைக் கொலை செய்யவும் பிளான் செய்திருந்ததும் தெரிய வந்துள்ளது. அந்த ஸ்கூட்டரையும் குண்டையும், மேலும் சில ஆயுதங்களையும் சி.பி.ஐ.யும், போலீஸும் கைப்பற்றியுள்ளன.

இந்தப் படுகொலையைப் பற்றி சந்திரபாபு நாயுடு  சொன்ன முதல் வார்த்தையே “இந்தக் கொலையைச் செய்ய வைத்திருப்பது முதல்வர் ராஜசேகர ரெட்டி..” என்பதுதான். “ரவி இதற்கு முன் பல முறை குறி வைக்கப்பட்டிருக்கிறார். இப்போதுதான் முடிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடலில் இருந்து ஒரேயொரு புல்லட்தான் மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. ஆந்திரப் பிரதேச சிறப்பு போலீஸ் பட்டாலியனை கொண்டுதான் ராஜசேகர ரெட்டி திட்டமிட்டு இந்தப் படுகொலையைச் செய்திருக்கிறார்..” என்று நேரடியாகவே தாக்கினார் நாயுடு.

ரவி இறந்து போனதால் காலியான பெனுகுண்டா தொகுதிக்கு மறுதேர்தல் அறிவிக்கப்பட்டது. தெலுங்கு தேசத்தின் சார்பில் கொலையான பரிதலா ரவியின் மனைவி சுனிதாவே நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் தரப்பில் பானுமதி நிறுத்தப்படவில்லை. இனியும் அந்த மாவட்டத்தில் குடும்பப் பூசலால் ரத்தக்களறி ஏற்படுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்த முதல்வர் ராஜசேகர ரெட்டி, பானுமதிக்குப் பதிலாக போயா ஸ்ரீராமுலு என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.

ஆனாலும் தெலுங்கு தேசம் கட்சி வலுவாக இருக்கும் அனந்தப்புரம் மாவட்டத்தை காங்கிரஸ் கோட்டையாக மாற்ற வேண்டி தெலுங்கு தேசத் தொண்டர்கள் மீதான கொலை வெறி மட்டும் நிறுத்தப்படவில்லை.

சுனிதா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த அன்றே பெரும் கலவரமாகி ஆறு தொண்டர்கள் போலீஸின் துப்பாக்கிச் சூட்டில் பலினாயானார்கள். இந்தக் கலவரத்திறக்காக 2000 தெலுங்கு தேசத் தொண்டர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் நின்ற ஸ்ரீராமுலு எப்பாடுபட்டாவது சுனிதாவைத் தோற்கடித்து ரவியின் குடும்ப ஆதிக்கத்தை தடுக்க நினைத்தார். தெலுங்கு தேசத் தொண்டர்களை தன் பக்கம் திசை திருப்ப சாம, பேத, தான தண்ட வழிகள் அத்தனையையும் பயன்படுத்தியிருக்கிறார் ஸ்ரீராமுலு.

பணம் கொடுப்பது.. அவர்கள் மீதுள்ள வழக்குகளைக் காட்டி கைது பயத்தை ஏற்படுத்துவது, கைது செய்தது.. சிறையில் அடைத்தது என்று அத்தனை அட்டூழியத்தையும் காங்கிரஸ் அரசு இந்த இடைத்தேர்தலில் செய்திருக்கிறது. இவைகள் அனைத்தும் பல தொலைக்காட்சிகளில் கேண்டிட் கேமிராவில் பிடிபட்டு ஒளிபரப்பட்டுள்ளன.

இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் பரிதலா ரவியின் மீதிருந்த அபிமானத்தால் அவரது மனைவி சுனிதா 19,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த ஓட்டுக்களுக்குக் காரணம் ரவியின் மீதான பயம் அல்ல.. ரவி கொஞ்சம் தொகுதி மக்களுக்காகச் செய்திருக்கும் நல்ல விஷயங்களுக்காகவும்தான் என்கின்றன மீடியாக்கள்.

மிகுந்த பஞ்சத்தில் தாக்கப்பட்ட நாசனகோட்டா பஞ்சாயத்துக்குட்பட்ட ஒன்பது கிராமங்களுக்கு அந்த நேரத்தில் ரவியின் குடும்பத்தினரே அரிசி, கோதுமை, மற்றும் உணவுகளை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

அனந்தப்புரம் மாவட்டத்தில் வரதட்சணை விஷயம் மிக அதிகமாம். அங்கே அது கெளரவப் பிரச்சினையாம். இதனை முற்றிலுமாக நிறுத்துங்கள் என்று தனது பதவிக் காலம் முழுவதும் ரவி ஊர், ஊருக்குச் சொல்லி வந்திருக்கிறார். தானே வருடந்தோறும் 360 இலவசத் திருமணங்களை நடத்தி வந்திருக்கிறார்.

நாசன்கோட்டா கிராமத்தில் இருந்த புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா ஆலயத்தை 4 கோடி செலவில் ரவியே புனரமைப்பு செய்து கொடுத்திருக்கிறார். சமுதாய நலக் கூடங்களை ஊர், ஊருக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார். சாலை வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு தனது சொந்த செலவிலேயே சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

பெனுகொண்டா தொகுதிக்குட்பட்ட 44 கிராமங்களுக்கு குடிநீர் வசதியை முதன்முதலாக ரவிதான் செய்து கொடுத்திருக்கிறாராம். இத்திட்டத்திற்கு செலவானத் தொகையான 14 கோடியில் 3 கோடி ரூபாயை தனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கியிருக்கிறார் ரவி.

அனந்தப்பூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய சோமேஷ்குமாரே பரிதலா ரவியின் ஆட்சிக் காலத்தில்தான் பெனுகொண்டா தொகுதி பல நல்ல முன்னேற்றங்களை அடைந்தது என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

தொகுதிக்குள் அரசு கல்லூரியை ரவிதான் தனது காலத்தில் கொண்டு வந்திருக்கிறார். 3 கிராமங்களுக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்று சில சுகாதார நிலையங்களை உருவாக்கியிருக்கிறார். தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் பலவற்றுக்கு சாலை வசதிகள் முழுவதும் முதல் முறையாக ரவியின் காலத்தில்தான் போடப்பட்டனவாம்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு ரவியின் கொலைவரையிலும் 41 தெலுங்கு தேசம் தொண்டர்கள் அனந்தபுரம் மாவட்டத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எந்தக் கொலையிலும் குற்றவாளிகள் பிடிபடவே இல்லையாம். எல்லாம் அடையாளம் தெரியாதவர்களால் செய்யப்பட்டது என்றே முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

ரவி மீதிருந்த 54 கிரிமினல் வழக்குகள், 16 கொலை வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கோர்ட்டில் தூங்கிக் கொண்டிருந்தன. எந்த வழக்கையும் எடுத்து நடத்தவும் அரசுத் தரப்புக்கு விருப்பமில்லை.. இதுவே அவரது வளர்ச்சிக்கும் ஒரு காரணமாகிவிட்டது.

என்.டி.ஆர். செய்த தவறால் பெரிதும் பாதிக்கப்பட்டது இந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்த அப்பாவி இளைஞர்கள்தான்.. எத்தனை, எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்துவிட்டன.

1994-2004 வரையிலான பத்தாண்டுகளில் ரவியின் தனிப்பட்ட துப்பாக்கிப் படையின் மூலம் 120-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று போலீஸார் கூறுகிறார்கள். அதே சமயத்தில் 2000-2004 ஆகிய காலக்கட்டத்தில் அனந்தப்பூர் மாவட்டக் காவல்துறையே 40-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை என்கவுண்ட்டர் என்ற பெயரில் கொலை செய்ததாக மனித உரிமை இயக்கங்கள் கூறுகின்றன.

இப்போது ரவியின் மரணத்திற்குப் பின்பு இந்த 4 ஆண்டுகளில்தான் அனந்தப்பூர் மாவட்டத்தைவிட்டு வெளியேறிய  மக்கள் திரும்பத் தொடங்கினார்கள். இப்போது ரவியின் ஆட்கள் அமைதியாக இருந்தாலும் சுனிதாவுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரவியின் உடல் அனந்தப்பூரில் அடக்கம் செய்யப்பட்டு அந்த இடத்தில் மிக அழகான சமாதி எழுப்பப்பட்டுள்ளது. அவரது நினைவு தினத்தன்று அவரது ஆதரவாளர்களும், தெலுங்கு தேசத் தொண்டர்களும் பெருந்திரளாக வந்திருந்து தங்களது அஞ்சலியை செலுத்தியபடியேதான் இருக்கிறார்கள். இப்போது  சுனிதாவும் கணவரின் வழியில் மக்களுக்கான செயல் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறார்.

ரவி மறைந்த பின்பு நடந்த தேர்தலில் சுனிதா நின்று ஜெயித்தாலும்,  சென்ற 2009-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இரு குடும்பத்திற்கும் இடையில் சண்டை வேண்டாம் என்ற பரஸ்பரம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காங்கிரஸ் பானுமதிக்கும், தெலுங்கு தேசம் கட்சி சுனிதாவுக்கும் சீட் கொடுக்காமல் தவிர்த்துவிட்டனவாம்.

இந்த சமாதான ஒப்பந்தத்தில் முழு மூச்சாக களமிறங்கிச் செயல்பட்டவர் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டிதானாம். ரவியின் மரணத்தில் தனது குடும்பத்தையும், தனது மகனையும் சேர்த்து வைத்துப் பேசி வரும் சூழலில் அந்த அவப் பெயரைத் துடைக்க வேண்டி இப்படியொரு சமாதானத்துக்கு நாயுடுவிடம் தூதுவிட.. நாயுடுவும் சுனிதாவின் குடும்பத்தின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். 


ஆனாலும் சுனிதாவுக்குப் பதில் இப்போது பார்த்தசாரதி என்னும் தெலுங்கு தேச வேட்பாளர்தான் அங்கே நிறுத்தப்பட்டு ஜெயிக்க வைக்கப்பட்டிருக்கிறார். எல்லாம் ரவியின் பெயர் சொல்லும் மகிமையினால்தானாம்.


சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இல்லாமல் இருந்தாலும் சுனிதாவுக்குத் தற்போது ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு வழங்கப்படுத்தான் இருக்கிறது. தனது 2 பையன்கள் மற்றும் 1 பெண் குழந்தைகளின் பாதுகாப்பே தனக்குத் தேவை என்பதை இப்போது சுனிதா உணர்ந்திருப்பதால் அதிகமான சச்சரவுகளில் ஈடுபடாமல் கட்சி வேலைகளை மட்டுமே செய்து வருகிறாராம்..


பரிதலா ரவியின் புகழை இணையத்தளம் மூலமும் பரப்பி வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். பரிதலா ரவி பற்றிய இணையத்தளம் இது. சென்று படித்துப் பாருங்கள்..!

ரவியுடன் கொலைகள் சம்பந்தமாக தொடர்புடையவர்களெல்லாம் தற்போதும் வெளிச்சத்துக்கு வராமல் மறைமுகமாகத்தான் இருந்து வருகிறார்கள். அரசும், சூரியின் தரப்பும் இப்போதும் அவர்களைக் குறி வைத்து வருவதை அவர்களும் உணர்ந்துதான் இருக்கிறார்கள்.


இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் மூன்றாண்டுகள் கழித்து 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அனந்தப்பூர் மத்திய சிறையில் ஒரு கொலைச் சம்பவம் நடந்துள்ளது. "பரிதலா ரவியை நான்தான் சுட்டுக் கொன்றேன்.." என்று டிவிக்களில் பேட்டியளித்த ஜூலகண்டா சீனிவாச ரெட்டி என்ற மொட்டு சீனு தனது சக கைதி ஒருவரால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் செய்தியறிந்து இந்தக் கொலை வழக்கை ஊத்தி முடிக்க அரசு முடிவெடுத்துவிட்டதாகப் புகார் கூறியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு. "மொட்டு சீனு தான் அப்ரூவர் ஆகப் போகிறேன் என்று மிரட்டிய காரணத்தால் சூரிதான் ஆள் வைத்து இந்தக் கொலையைச் செய்திருப்பதாக" சீனுவின் குடும்பத்தினரே இப்போது சொல்கிறார்கள்.  ஆனால் அரசுத் தரப்போ, "இதை பழிக்குப் பழி வாங்கும் படலத்தின் முதல் பலியாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது..?" என்று பிளேட்டை அப்படியே திருப்பிப் போடுகிறார்கள்.

இந்த நேரத்திலேயே ரவியின் ஆதரவாளர்களையும், தெலுங்கு தேசம் கட்சியினரையும் ஒரு சேர அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் ஒன்றை காங்கிரஸ் அரசு செய்தது.

கடந்தாண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆயுள் தண்டனை பெற்று பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையை அனுபவித்த 940 சிறைக் கைதிகளை விடுதலை செய்யும்படி ஆந்திர மாநில அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்தது. அந்த லிஸ்ட்டில் சூரி மட்டுமன்றி ஜூப்லிஹில்ஸ் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தண்டனை பெற்ற அத்தனை பேருமே இருந்தார்கள். தெலுங்கு தேசக் கட்சி மட்டுமே இதனை கடுமையாக எதிர்த்தது. ஆனாலும் பலனில்லை. முதல்வர் ரோசையா இதில் உறுதியுடன் இருந்தார்.

ஆனால் சூரியால் அக்டோபர் 2-ம் தேதியன்று வெளியில் வர முடியவில்லை. காரணம் பரிதலா ரவியின் படுகொலை தொடர்பாக அவர் மீதிருந்த வழக்குதான். கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அந்த வழக்கிலும் முறைப்படி ஜாமீன் பெற்றுதான் தற்போது சூரி வெளியில் வந்திருக்கிறார்.

சூரி வெளியில் வந்திருப்பது குறித்து “எனது குடும்பத்தினருக்கெதிராக ரோசையா தலைமையிலான காங்கிரஸ் அரசு செய்யும் சதி வேலைதான் இது. இனி என் குடும்பத்திற்கு எது நடந்தாலும் அதற்கு தற்போதைய காங்கிரஸ் அரசே முழுப் பொறுப்பு...” என்று சுனிதா சொல்லியிருக்கிறார்.

சூரியும் இப்போது சும்மா இல்லை. பலத்த இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அம்சமாகத்தான் இருக்கிறார்.. தனது மனைவியுடன் தனது வாழ்க்கை சரிதத்தை மிகச் சமீபத்தில் தியேட்டருக்கு வந்து பிரிவியூ ஷோ பார்த்திருக்கிறார். அதேபோல் சுனிதாவும் தனது கணவரின் வாழ்க்கைக் கதையை பார்த்திருக்கிறார்.

வருடந்தோறும் ரவியின் சமாதிக்கு வரும் கூட்டம் கூடிக் கொண்டே போகிறதாம்.. எப்பாடுபட்டாவது ரவியின் மரணத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று வெறியில் இருக்கும் ரவியின் பக்தர்களுக்கு சுனிதாவிடம் இருந்து இன்னமும் அனுமதி கிடைக்காததால் அமைதி காக்கிறார்கள் என்கிறது ஆந்திர மீடியாக்கள்.

இதே போல் சூரி தரப்பும் ஒருவிதக் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் நீறு பூத்த நெருப்பாக இரு தரப்பினருக்குள்ளும் கனன்று கொண்டுதான் இருக்கிறது. இந்த கனலுக்கு யாராவது எண்ணெய் ஊற்றி வார்த்து விடுவார்களா அல்லது தண்ணீர் ஊற்றி அணைப்பார்களா என்பதுதான் இப்போதைக்கு மீடியாக்களின் கேள்வி..

எனக்கு இதில் ஒரேயொரு சந்தேகம்..!

சூரி வைத்த ரிமோட் கன்ட்ரோல் வெடிகுண்டால் அன்றைக்கு இறந்து போன 26 அப்பாவிகளின் உயிருக்கு என்ன பதில் என்பதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சியிடம் தற்போது பதில் இல்லை. “பத்து வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்தாகிவிட்டது. இதுவே, இவர்கள் செய்த தவறுக்கு போதும்” என்று சொல்லி வெளியில் அனுப்பி வைத்துவிட்டார்கள்.

ஆனால் இங்கே.. தமிழ்நாட்டில்.. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தியுடன் இணைந்து இறந்து போனவர்களின் அதே எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டி குற்றஞ்சாட்டப்பட்ட நளினியையும், மற்றவர்களையும் 20 ஆண்டுகளாக சிறையிலேயே வைத்திருக்கச் சொல்வதும், செய்திருப்பதும் இதே காங்கிரஸ் கட்சிதான்..!

என்ன ஒரு விந்தை பாருங்கள்..? ஒரு கண்ணில் சுண்ணாம்பு..! மறுகண்ணில் வெண்ணெய்..!!!

செய்திகள் உதவி : பல்வேறு இணையத்தளங்கள், கூகிளாண்டவர்..! http://www.paritalaravi.com

162 comments:

  1. முழுக்க படிச்சாச்சு. விறு விறுப்பா இருக்கே, படம் எப்படி இருக்கு?

    ReplyDelete
  2. //இன்னும் எழுதியிருப்பதையெல்லாம் படித்தால் நமக்கே வாந்தி வருகிறது.//
    உங்களுக்கே வாந்தி வருகிறதென்றால், நீங்களும் அப்போர்ப்பட்ட ஆசாமியா???

    ReplyDelete
  3. அய்யா... போதும்ப்பா சாமி... நம்ம கதையே தேவலைபோல இருக்கே :)
    ஆனாலும் ரொம்ப பொறுமை... உங்களுக்கு இல்லய்யா... படிச்ச எனக்குத்தான்... :)
    (சரி எனக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிடுங்க... மணி இப்ப 2.46am. எவ்வளோ பொறுப்பா படிச்சிருக்கேன்)

    ReplyDelete
  4. //சிறுசுகளையெல்லாம் போட்டாச்சு என்றாலும் ஒரேயொரு பெரிசு மட்டும் ஊர்ப் பக்கமே வராம ஹைதராபாத்திலேயே பலத்த போலீஸ் பாதுகாப்போட உக்காந்திருக்கே.. விடலாமா? அதுலேயும் எலெக்ஷன் வேற நெருங்கிருச்சு. இப்பவே போட்டாத்தான அடுத்த தேர்தல்ல ஈஸியா ஜெயிக்கலாம் என்று யோசித்த சூரி தரப்பு இப்போது குறி வைத்தது ஓபுல் ரெட்டியின் அண்ணனும், பெனுகுண்டாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரமணா ரெட்டியை..


    Read more: http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_06.html#ixzz17HicqBQJ//

    அல்லது

    இப்பவே போட்டாத்தான அடுத்த தேர்தல்ல ஈஸியா ஜெயிக்கலாம் என்று யோசித்த ரவி தரப்பு இப்போது குறி வைத்தது

    எது சரி

    ReplyDelete
  5. //நான் ஒரு பாகமாக முழுமையாகவே கொடுத்துவிட்டதால் பக்கங்கள் நீண்டுவிட்டன.

    Even before reading the entire i.e. stopped at the above line commenting this - "யோவ்! கதவிடாதய்யா..."

    ReplyDelete
  6. ”உங்களுக்கே வாந்தி வருகிறதென்றால், நீங்களும் அப்போர்ப்பட்ட ஆசாமியா?? "

    இருந்தாலும் இருக்கும்...

    அண்ணே ..எதுவாக இருந்தாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ..

    ReplyDelete
  7. உங்களைப் பத்தி ரொம்பப் பெருமையா எழுதி இருக்கேன். வந்து ஒரு எட்டு பாத்துட்டுப் போயிடுங்க

    http://vavaasangam.blogspot.com/2010/12/blog-post_06.html

    ReplyDelete
  8. அண்ணே, தூள் கிளப்பிட்டீங்க..சுவாரஸ்யம் குறையாமல் தொகுத்துச் சொல்லியிருக்கீங்க..நன்றிகள் பல!

    ---செங்கோவி

    ReplyDelete
  9. அண்ணே : நல்ல விறுவிறுப்பான தொகுப்பு..........
    //
    என்னைத் திட்டியாவது ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டுப் போனால் உண்மையாகவே செல்லங்களான எனது கைகளும், விரல்களும் மகிழ்ச்சியடைவார்கள்.. நன்றி..
    //
    நேரம் செலவு செய்து தொகுத்த உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்........

    ReplyDelete
  10. பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சார்
    உங்களின் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும். நன்றி...................................

    ReplyDelete
  11. பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சார்
    உங்களின் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும். நன்றி...................................

    ReplyDelete
  12. வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  13. உங்கள் உழைப்புக்கு என் வணக்கங்கள்.பிரதாப முதலியார்கள் நிறைந்த இந்த பதியுலகில் இப்படி தேடி தேடி எங்களுக்கு நீங்கள் தரும் தகவல்களுக்கு மிக்க நன்றி!நன்றி!!நன்றி!!!

    ReplyDelete
  14. [[[குறும்பன் said...
    முழுக்க படிச்சாச்சு. விறுவிறுப்பா இருக்கே, படம் எப்படி இருக்கு?]]]

    முழுக்கப் படிச்சாச்சா..? குறும்பா வாழ்க.. முதல் பின்னூட்டமே இப்படியா.. ரொம்ப சந்தோஷம்..!

    ReplyDelete
  15. [[[தமிழன்பன் said...

    //இன்னும் எழுதியிருப்பதையெல்லாம் படித்தால் நமக்கே வாந்தி வருகிறது.//

    உங்களுக்கே வாந்தி வருகிறதென்றால், நீங்களும் அப்போர்ப்பட்ட ஆசாமியா???]]]

    நமக்கு என்று உங்களையும் சேர்த்துதான் சொல்லியிருக்கிறேன் தமிழன்பன்..!

    ReplyDelete
  16. [[[Sugumarje said...
    அய்யா... போதும்ப்பா சாமி... நம்ம கதையே தேவலைபோல இருக்கே :)
    ஆனாலும் ரொம்ப பொறுமை... உங்களுக்கு இல்லய்யா... படிச்ச எனக்குத்தான்... :)

    (சரி எனக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிடுங்க... மணி இப்ப 2.46am. எவ்வளோ பொறுப்பா படிச்சிருக்கேன்)]]]

    சுகுமார்ஜிக்கு ஒரு கும்பிடு.. மிக்க மிக்க நன்றி..!

    ReplyDelete
  17. [[[புருனோ Bruno said...

    //சிறுசுகளையெல்லாம் போட்டாச்சு என்றாலும் ஒரேயொரு பெரிசு மட்டும் ஊர்ப் பக்கமே வராம ஹைதராபாத்திலேயே பலத்த போலீஸ் பாதுகாப்போட உக்காந்திருக்கே.. விடலாமா? அதுலேயும் எலெக்ஷன் வேற நெருங்கிருச்சு. இப்பவே போட்டாத்தான அடுத்த தேர்தல்ல ஈஸியா ஜெயிக்கலாம் என்று யோசித்த சூரி தரப்பு இப்போது குறி வைத்தது ஓபுல் ரெட்டியின் அண்ணனும், பெனுகுண்டாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரமணா ரெட்டியை..

    அல்லது

    இப்பவே போட்டாத்தான அடுத்த தேர்தல்ல ஈஸியா ஜெயிக்கலாம் என்று யோசித்த ரவி தரப்பு இப்போது குறி வைத்தது

    எது சரி]]]

    மாத்திட்டேன் டாக்டரு..! தப்பு மட்டும் கண்ணுல படவே கூடாது..! வரிஞ்சு கட்டிக்கின்னு வந்திருவாரு டொக்டரு..!

    ReplyDelete
  18. [[[Indian said...

    good job.
    keep it up.]]]

    நன்றி இந்தியன்...!

    ReplyDelete
  19. [[[ConverZ stupidity said...

    //நான் ஒரு பாகமாக முழுமையாகவே கொடுத்துவிட்டதால் பக்கங்கள் நீண்டுவிட்டன.

    Even before reading the entire i.e. stopped at the above line commenting this - "யோவ்! கத விடாதய்யா..."]]]

    ச்சும்மா.. எம்.எஸ்.வேர்ட்ல 32 பக்கங்கள்தான் வந்திருந்தன. அதுனாலதான் எழுதினேன்..!

    வருகைக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  20. [[[பார்வையாளன் said...

    ”உங்களுக்கே வாந்தி வருகிறதென்றால், நீங்களும் அப்போர்ப்பட்ட ஆசாமியா?? "

    இருந்தாலும் இருக்கும்... அண்ணே. எதுவாக இருந்தாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.]]]

    ம்.. ஓகே.. ஓகே..

    ReplyDelete
  21. அட்டகாசம் தலைவா.... எப்புடி இவ்வளவு தகவல்கள் திரட்டுனீங்க? தொடர்ச்சியா, சினிமா மாதிரி இருக்கு. எழுதுன கைகளுக்கும் விரல்களுக்கும், தேடித்துவண்ட கண்ணாடி போட்ட கண்களுக்கும் நன்றி.... நன்றி.... நன்றி.... தொடரட்டும் உங்கள் பணி....

    ReplyDelete
  22. [[[Gopi Ramamoorthy said...
    உங்களைப் பத்தி ரொம்பப் பெருமையா எழுதி இருக்கேன். வந்து ஒரு எட்டு பாத்துட்டுப் போயிடுங்க

    http://vavaasangam.blogspot.com/2010/12/blog-post_06.html]]]

    ஆஹா.. என்னைப் பத்தியா..? நண்பர்கள் எட்டுத் திக்கிலும் இருக்கிறார்களப்பா எனக்கு..

    கோபி மிக்க நன்றி.. வருகிறேன்..!

    ReplyDelete
  23. [[[செங்கோவி said...
    அண்ணே, தூள் கிளப்பிட்டீங்க. சுவாரஸ்யம் குறையாமல் தொகுத்துச் சொல்லியிருக்கீங்க..நன்றிகள் பல!

    ---செங்கோவி]]]

    நன்றி செங்கோவி ஸார்..!

    ReplyDelete
  24. [[[பார்வையாளன் said...
    நந்தலாலா சர்ச்சை, நர்சிம் "நச்" விளக்கம் - தாக்கம் இன்றி படைப்பு இல்லை.]]]

    விட மாட்டீங்களா இதை..?

    ReplyDelete
  25. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    அண்ணே : நல்ல விறுவிறுப்பான தொகுப்பு.

    //என்னைத் திட்டியாவது ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டுப் போனால் உண்மையாகவே செல்லங்களான எனது கைகளும், விரல்களும் மகிழ்ச்சியடைவார்கள்.. நன்றி..//

    நேரம் செலவு செய்து தொகுத்த உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.]]]

    நன்றி யோகேஷ்.. எல்லாம் ஒரு ஆர்வத்தினால்தான்..!

    ReplyDelete
  26. [[[Indian Share Market said...

    பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சார்
    உங்களின் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும். நன்றி.]]]

    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  27. [[[VISA said...
    வாழ்க பல்லாண்டு]]]

    வாழிய பல்லாண்டு விஸா தம்பி..!

    ReplyDelete
  28. [[[jayaramprakash said...
    உங்கள் உழைப்புக்கு என் வணக்கங்கள்.பிரதாப முதலியார்கள் நிறைந்த இந்த பதியுலகில் இப்படி தேடி தேடி எங்களுக்கு நீங்கள் தரும் தகவல்களுக்கு மிக்க நன்றி! நன்றி!! நன்றி!!!]]]

    எல்லாம் உங்களுக்காகத்தான் பிரகாஷ்..! வருகைக்கு நன்றி..!

    ReplyDelete
  29. [[[வின்சென்ட் said...
    அட்டகாசம் தலைவா.... எப்புடி இவ்வளவு தகவல்கள் திரட்டுனீங்க? தொடர்ச்சியா, சினிமா மாதிரி இருக்கு. எழுதுன கைகளுக்கும் விரல்களுக்கும், தேடித்துவண்ட கண்ணாடி போட்ட கண்களுக்கும் நன்றி.... நன்றி.... நன்றி.... தொடரட்டும் உங்கள் பணி....]]]

    கூகிளாண்டவர் துணையிருக்க என்ன கஷ்டம்..?

    உங்களுடைய பாராட்டு களைத்துப் போன எனது கைகளுக்கு உரமூட்டியுள்ளது.

    நன்றி வின்சென்ட்..!

    ReplyDelete
  30. அம்பேத்கார் விமர்சனம் எங்கே?

    எனக்கு படம் பிடித்து இருந்தது...

    ஆனால் ஆரம்பத்தில் வரும் வெளி நாட்டு காட்சிகளை குறைத்து , வேறு சில விறுவிறுப்பான சரித்திர சம்பவங்களை இணைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் நினைக்கிறேன்.

    இதை பற்றிய உங்கள் பார்வையை சொல்லவும்..

    அதே போல காந்தி கேரக்டரை படத்தில் பயன்படுத்தியுள்ள முறை பற்றியும் விளக்கமாக, உங்கள் பாணியில் ஒரு ஐம்பது பக்கத்துக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  31. அண்ணே

    நல்ல பதிவு.

    ReplyDelete
  32. விறுவிறுப்பான தொகுப்பு

    ReplyDelete
  33. சென்ற முறை தேர்தல் சமயத்தில் கடப்பா பக்கம் சென்ற போது அங்கு கேள்விப்பட்ட வகையில் பழிவாங்கலை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஒய். எஸ் ஆர் பகீரத பிரயாணங்கள் எடுத்து அவர் அதில் கிட்டத்தட்ட ஒப்பந்தமும் எட்டி விட்டதாகவே மக்கள் பேசிக்கொண்டார்கள்.

    ஒய் எஸ் ஆரின் தந்தையும் இவ்வித பழிவாங்கல் நடவடிக்கைகளினாலேயே கொல்லப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  34. படிச்சு முடிச்சுட்டேன். Thanks for gathering so much information.

    ReplyDelete
  35. இதே சூட்டோடு வங்கவீடி மோகன ரங்கா (Vangaveeti Mohana Ranga Rao) அவர்களை பற்றியும் படித்து விடுங்கள். அவர் சம்பந்த பட்ட சம்பவங்கள் இதே ராம் கோபால் வர்மாவின் முதல் படமான ஷிவா (தமிழில் உதயம்) வந்திருந்தது. முக்யமாக ஷிவாவின் நண்பர்களை வெட்டவெளியில் துரத்தி ஒவ்வொருவராக கொள்வார்களே. அது விஜயவாடா அருகில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் காபியே!

    ReplyDelete
  36. //நன்றி செங்கோவி ஸார்..!//

    அண்ணே..உங்கள் பதிவைப் பலநாட்களாகப் படிக்கும் அன்புத்தம்பிகளுள் ஒருவன் தான் நான்..தயவு செய்து தம்பியென்றே அழையுங்கள்..சார் வேண்டாம்..

    --செங்கோவி

    ReplyDelete
  37. //மாத்திட்டேன் டாக்டரு..! தப்பு மட்டும் கண்ணுல படவே கூடாது..! வரிஞ்சு கட்டிக்கின்னு வந்திருவாரு டொக்டரு..!//

    அப்ப

    இனி

    சூப்பர்

    என்று மட்டும் தான் மறுமொழி எழுதவேண்டுமா

    ReplyDelete
  38. சூப்பர்
    அசத்திட்டீங்க

    போதுமா

    ReplyDelete
  39. அண்ணே

    ஒருவர் உங்கள் எழுத்தில் தப்பு கண்டுபிடிக்கிறார் என்றால் எவ்வளவு ஆழமாக உங்களை வாசிக்க வேண்டும்

    அப்படி என்றால் அவர் எவ்வளவு தீவிர ரசிகராக இருக்க வேண்டும்

    ReplyDelete
  40. //இன்னும் எழுதியிருப்பதையெல்லாம் படித்தால் நமக்கே வாந்தி வருகிறது.//

    உங்களுக்கே வாந்தி வருகிறதென்றால், நீங்களும் அப்போர்ப்பட்ட ஆசாமியா???]]]

    //நமக்கு என்று உங்களையும் சேர்த்துதான் சொல்லியிருக்கிறேன் தமிழன்பன்..!//

    என்னையும் உங்கள் பட்டியில் அடைத்ததற்கு மிக்க நன்றி.....

    ReplyDelete
  41. //அண்ணே

    ஒருவர் உங்கள் எழுத்தில் தப்பு கண்டுபிடிக்கிறார் என்றால் எவ்வளவு ஆழமாக உங்களை வாசிக்க வேண்டும்

    அப்படி என்றால் அவர் எவ்வளவு தீவிர ரசிகராக இருக்க வேண்டும்//

    நானும் வழிமொழிகின்றேன்

    ReplyDelete
  42. உ.த

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  43. படிச்சாச்சு படிச்சாச்சு.....

    போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க....

    ReplyDelete
  44. [[[பார்வையாளன் said...
    அம்பேத்கார் விமர்சனம் எங்கே?
    எனக்கு படம் பிடித்து இருந்தது...
    ஆனால் ஆரம்பத்தில் வரும் வெளிநாட்டு காட்சிகளை குறைத்து, வேறு சில விறுவிறுப்பான சரித்திர சம்பவங்களை இணைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் பார்வையை சொல்லவும்..

    அதே போல காந்தி கேரக்டரை படத்தில் பயன்படுத்தியுள்ள முறை பற்றியும் விளக்கமாக, உங்கள் பாணியில் ஒரு ஐம்பது பக்கத்துக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.]]]

    இன்று அல்லது நாளை எழுதுகிறேன் பார்வையாளன். 50 பக்கங்கள் என்பதெல்லாம் ஓவர்..!

    ReplyDelete
  45. [[[karthi said...
    அண்ணே.. நல்ல பதிவு.]]]

    நன்றி கார்த்தி..!

    ReplyDelete
  46. [[[sivakasi maappillai said...
    விறுவிறுப்பான தொகுப்பு.]]]

    நன்றி மாப்பிள்ளை..!

    ReplyDelete
  47. [[[அரைகிறுக்கன் said...

    சென்ற முறை தேர்தல் சமயத்தில் கடப்பா பக்கம் சென்றபோது அங்கு கேள்விப்பட்ட வகையில் பழிவாங்கலை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஒய். எஸ் ஆர் பகீரத பிரயாணங்கள் எடுத்து அவர் அதில் கிட்டத்தட்ட ஒப்பந்தமும் எட்டி விட்டதாகவே மக்கள் பேசிக் கொண்டார்கள்.]]]

    உண்மைதான். குடும்ப அளவில் இனியும் மோதல் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்..!

    [[[ஒய்.எஸ்.ஆரின் தந்தையும் இவ்வித பழிவாங்கல் நடவடிக்கைகளினாலேயே கொல்லப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன்.]]]

    ஆமாம்.. உண்மைதான். ராஜசேகரரெட்டியின் தந்தையும் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டவர்தான்..!

    ReplyDelete
  48. [[[romba thimuru said...
    படிச்சு முடிச்சுட்டேன். Thanks for gathering so much information.]]]

    தங்களுடைய முதல் வருகைக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  49. [[[செங்கோவி said...

    //நன்றி செங்கோவி ஸார்..!//

    அண்ணே. உங்கள் பதிவைப் பல நாட்களாகப் படிக்கும் அன்புத் தம்பிகளுள் ஒருவன்தான் நான். தயவு செய்து தம்பியென்றே அழையுங்கள். சார் வேண்டாம்..

    -- செங்கோவி]]]

    சரிங்கோ தம்பி.. இனி்யும் இப்படியே கூப்பிடுறேன்..!

    ReplyDelete
  50. [[[புருனோ Bruno said...

    //மாத்திட்டேன் டாக்டரு..! தப்பு மட்டும் கண்ணுல படவே கூடாது..! வரிஞ்சு கட்டிக்கின்னு வந்திருவாரு டொக்டரு..!//

    அப்ப

    இனி

    சூப்பர்

    என்று மட்டும்தான் மறுமொழி எழுத வேண்டுமா]]]

    இதெல்லாம் பாராட்டி எழுதறது ஸார்..! உரிமையும் இருக்குல்ல.. அதுனாலதான் இப்படி..?

    ReplyDelete
  51. [[[புருனோ Bruno said...

    சூப்பர் அசத்திட்டீங்க

    போதுமா]]]

    போறும்.. போறும்.. போறும்..!

    ReplyDelete
  52. [[[புருனோ Bruno said...
    அண்ணே.. ஒருவர் உங்கள் எழுத்தில் தப்பு கண்டு பிடிக்கிறார் என்றால் எவ்வளவு ஆழமாக உங்களை வாசிக்க வேண்டும். அப்படி என்றால் அவர் எவ்வளவு தீவிர ரசிகராக இருக்க வேண்டும்.]]]

    புரிஞ்சுக்கிட்டேன் டாக்டர் ஸார்.. மிக்க நன்றி.. வருந்துகிறேன்.. மன்னிச்சுக்குங்க..!

    ReplyDelete
  53. [[[தமிழன்பன் said...

    //இன்னும் எழுதியிருப்பதையெல்லாம் படித்தால் நமக்கே வாந்தி வருகிறது.//

    உங்களுக்கே வாந்தி வருகிறதென்றால், நீங்களும் அப்போர்ப்பட்ட ஆசாமியா???]]]

    //நமக்கு என்று உங்களையும் சேர்த்துதான் சொல்லியிருக்கிறேன் தமிழன்பன்..!//

    என்னையும் உங்கள் பட்டியில் அடைத்ததற்கு மிக்க நன்றி.]]]

    இப்போது தூக்கிட்டேன். எதுக்கு வம்பு..?

    ReplyDelete
  54. [[[தமிழன்பன் said...

    //அண்ணே ஒருவர் உங்கள் எழுத்தில் தப்பு கண்டுபிடிக்கிறார் என்றால் எவ்வளவு ஆழமாக உங்களை வாசிக்க வேண்டும். அப்படி என்றால் அவர் எவ்வளவு தீவிர ரசிகராக இருக்க வேண்டும்//

    நானும் வழிமொழிகின்றேன்.]]]

    சரிங்கண்ணே.. நீங்களும் என்னை மன்னிச்சிருங்க..!

    ReplyDelete
  55. [[[காவேரி கணேஷ் said...

    உ.த

    வாழ்த்துக்கள்..]]]

    நன்றி காவேரி..!

    ReplyDelete
  56. [[[sivakasi maappillai said...
    படிச்சாச்சு படிச்சாச்சு. போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க.]]]

    சரிங்க ஸார்.. தங்கள் உத்தரவு..!

    ReplyDelete
  57. [[[valarmathi said...

    good post! congrats u t!]]]

    நன்றி வளர்மதி..!

    ReplyDelete
  58. யம்மாடியோவ்... படிக்கவே பயங்கரமா இருக்கு!

    //என்ன ஒரு விந்தை பாருங்கள்..? ஒரு கண்ணில் சுண்ணாம்பு..! மறுகண்ணில் வெண்ணெய்..!!!//

    தமிழனுக்கு, கண்ணில் சுண்ணாம்பும் வாயில் அல்வாவும் என்பது காங்கிரஸின் எழுதப்படா விதி.

    ReplyDelete
  59. வாசகர்களுக்கு இத்தனை தகவல்களைத் தர நிங்கள் உழைத்த உழைப்பு போற்றுதற்குரியது.

    ரவியின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி சொல்லவேயில்லை

    ReplyDelete
  60. படம் பார்த்து விட்டேன்.. உங்க பதிவை படித்த பிறகு கொஞ்சம் புரிந்தது.. ரெட்டி ரெட்டி என்று படித்தே தலை சுற்றுகிறது.

    எப்படி இவ்வளோ விரிவாக எழுதினீர்கள்.. உண்மையாகவே உங்கள் பொறுமை என்ன ஆச்சர்யப்படுத்துகிறது.

    ReplyDelete
  61. அன்புள்ள சரவணன்,

    மிகவும் அருமையான தொகுப்பு.வழக்கம் போல நிரம்ப உழைத்துள்ளீர்கள்.(பிரதிபலன் எதிர் பாராமல்)மிக்க நன்றி.

    படித்து முடிந்தவுடன் முதலில் தோன்றியது..தமிழ் நாடு எவ்வளவோ தேவலை என்று.என்ன! நாம் கொள்ளை அடிப்பதில் Ph.D. அவர்கள் (ஆந்திரா))கொலை செய்வதில் Ph.D..

    இதுக்கெல்லாம் முடிவு எப்போ?

    வாழ்க வளர்க

    ReplyDelete
  62. ரொம்ப நாளாகவே ரவி - சூரி கதையை முழுவதுமாக தெரிந்து கொள்ள நினைத்து இருந்தேன். அது உங்களால் மட்டுமே நிறைவேறியது. உங்களுக்கும், உங்கள் விரல்களுக்கும், உங்கள் கூகுல் ஆண்டவருக்கும் மற்றும் அந்த முருக பெருமானுக்கும் நன்றி. நன்றி. நன்றி. PDF format -ல் சேமித்து கொண்டேன். பொறுமையாக மறுபடியும் படிக்க வேண்டி.

    ReplyDelete
  63. //திருமணமான பெண்களையே குறி வைத்து குதறி எடுப்பதுதான் ஓபுல்ரெட்டியின் மகத்தான மக்கள் சேவையாம்//

    ரெட்டி பேரை வாஸ்து படி மாத்தி வெச்சா எல்லாம் ஒழுங்கா இருந்திருக்கும்:)) பேரே வில்லங்கமா இருக்கு அதான் அப்படியிருந்திருக்கிறான்:)))

    ReplyDelete
  64. உங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. நல்ல விரிவான அலசல்.

    ReplyDelete
  65. ரத்தசரித்திரம் பற்றி எழுதும் போது நானும் பாட்டாலா ரவி பற்றின தகவல்களைத் தேடி வாசித்தேன். ஆனால் நீங்கள் எல்லாதகவல்களையும் தேடி மிகச் பொறுமையாக சுவாரசியமாக தொகுத்து தந்திருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  66. எவ்ளோ பெரிய நிஜகதை. நன்றி

    ReplyDelete
  67. [[[தஞ்சாவூரான் said...

    யம்மாடியோவ்... படிக்கவே பயங்கரமா இருக்கு!

    //என்ன ஒரு விந்தை பாருங்கள்..? ஒரு கண்ணில் சுண்ணாம்பு..! மறுகண்ணில் வெண்ணெய்..!!!//

    தமிழனுக்கு, கண்ணில் சுண்ணாம்பும் வாயில் அல்வாவும் என்பது காங்கிரஸின் எழுதப்படா விதி.]]]

    இன்னும் எத்தனை நாளைக்கு நாம் இப்படியே ஏமாறுவது..? வெட்கமாக இருக்கிறது..!

    ReplyDelete
  68. [[[சதீஷ் said...
    வாசகர்களுக்கு இத்தனை தகவல்களைத் தர நிங்கள் உழைத்த உழைப்பு போற்றுதற்குரியது.
    ரவியின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி சொல்லவேயில்லை]]]

    ரவிக்கு இரண்டு பையன்கள். ஒரு பொண்ணு. பெண் கல்லூரியில் படிக்கிறார். பையனில் ஒருவர் கல்லூரியிலும், மற்றொருவர் பள்ளியிலும் படிக்கிறார்கள்..!

    ReplyDelete
  69. [[[கிரி said...

    படம் பார்த்து விட்டேன்.. உங்க பதிவை படித்த பிறகு கொஞ்சம் புரிந்தது.. ரெட்டி ரெட்டி என்று படித்தே தலை சுற்றுகிறது.

    எப்படி இவ்வளோ விரிவாக எழுதினீர்கள்.. உண்மையாகவே உங்கள் பொறுமை என்ன ஆச்சர்யப்படுத்துகிறது.]]]

    வீட்ல வெட்டி ஆபீஸர் கிரி. அதுனாலதான் என்னால இவ்ளோவ் எழுத முடியுது.. வேறொண்ணும் காரணமில்லை..!

    ReplyDelete
  70. தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கட்டுரை பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  71. அப்படி என்றால் அவர் எவ்வளவு தீவிர ரசிகராக இருக்க வேண்டும்

    முற்றிலும் உண்மை.

    இந்த இடுகைக்கு நீங்கள் உழைத்த உழைப்பு வியப்பின் உச்சம்.

    ReplyDelete
  72. Thank you so much for you blog, Please keep it up !!!

    ReplyDelete
  73. [[[சதீஷ் said...

    வாசகர்களுக்கு இத்தனை தகவல்களைத் தர நிங்கள் உழைத்த உழைப்பு போற்றுதற்குரியது.

    ரவியின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி சொல்லவேயில்லை]]]

    ரவிக்கு இரண்டு பையன்கள். ஒரு பெண். கல்லூரியிலும், பள்ளியிலும் படித்து வருகிறார்கள்..!

    ReplyDelete
  74. [[[Ganpat said...

    அன்புள்ள சரவணன்,

    மிகவும் அருமையான தொகுப்பு. வழக்கம் போல நிரம்ப உழைத்துள்ளீர்கள்.(பிரதிபலன் எதிர் பாராமல்) மிக்க நன்றி.

    படித்து முடிந்தவுடன் முதலில் தோன்றியது. தமிழ்நாடு எவ்வளவோ தேவலை என்று.

    என்ன! நாம் கொள்ளை அடிப்பதில் Ph.D. அவர்கள் (ஆந்திரா))கொலை செய்வதில் Ph.D..

    இதுக்கெல்லாம் முடிவு எப்போ?

    வாழ்க வளர்க]]]

    அப்படியில்லை கண்பத் ஸார்..!

    ஊழலிலும் அவர்கள் முந்திக் கொண்டிருக்கிறார்கள்..!

    ரவியின் சொத்து மதிப்பே 300 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றைக்கு ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பும் 600 கோடி. இந்தாண்டுக்கான வருவாய்க்கான வரியாக 84 கோடியை வருமான வரித்துறையிடம் கட்டியிருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி..

    2004-ம் ஆண்டில் ஜெகனின் சொத்து மதிப்பாக சில லட்சங்கள் மட்டுமே இருக்கிறது என்று அவரது அப்பா தேர்தல் கமிஷனுக்கு கொடுத்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

    எப்படின்னு பாருங்க..? நாமதான் முட்டாளுங்க..!

    ReplyDelete
  75. [[[musictoday said...
    ரொம்ப நாளாகவே ரவி - சூரி கதையை முழுவதுமாக தெரிந்து கொள்ள நினைத்து இருந்தேன். அது உங்களால் மட்டுமே நிறைவேறியது. உங்களுக்கும், உங்கள் விரல்களுக்கும், உங்கள் கூகுல் ஆண்டவருக்கும் மற்றும் அந்த முருக பெருமானுக்கும் நன்றி. நன்றி. நன்றி. PDF format -ல் சேமித்து கொண்டேன். பொறுமையாக மறுபடியும் படிக்க வேண்டி.]]]

    உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் ஸார்..! நிறைய பேரிடம் இது பற்றிப் பகிர்ந்து கொண்டால் நலமாக இருக்கும்..!

    ReplyDelete
  76. [[[குசும்பன் said...

    //திருமணமான பெண்களையே குறி வைத்து குதறி எடுப்பதுதான் ஓபுல்ரெட்டியின் மகத்தான மக்கள் சேவையாம்//

    ரெட்டி பேரை வாஸ்துபடி மாத்தி வெச்சா எல்லாம் ஒழுங்கா இருந்திருக்கும்:)) பேரே வில்லங்கமா இருக்கு அதான் அப்படியிருந்திருக்கிறான்:)))]]]

    ஹி.. ஹி.. குசும்புதான்டா ராசா.. எவ்வளவோ எழுதியிருக்கேன். இது மட்டும்தான் உனக்கு மட்டும்தான் தோணிருக்கு பாரு.. நீ குசும்பன்தான்..!

    ReplyDelete
  77. [[[வள்ளி நாயகம் said...
    உங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. நல்ல விரிவான அலசல்.]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  78. [[[சுரேஷ் கண்ணன் said...
    ரத்தசரித்திரம் பற்றி எழுதும் போது நானும் பாட்டாலா ரவி பற்றின தகவல்களைத் தேடி வாசித்தேன். ஆனால் நீங்கள் எல்லா தகவல்களையும் தேடி மிகச் பொறுமையாக சுவாரசியமாக தொகுத்து தந்திருக்கிறீர்கள். நன்றி.]]]

    நன்றி சு.க.

    சில சமயங்களில் மட்டும்தான் என் வீட்டுப் பக்கம் வர்றீங்கன்னு உங்க மேல எனக்கு சின்ன கோபம் இருக்கு..!

    ReplyDelete
  79. [[[jaisankar jaganathan said...
    எவ்ளோ பெரிய நிஜக் கதை. நன்றி]]]

    வருகைக்கு நன்றி ஜெய் ஸார்..

    ReplyDelete
  80. [[[தமிழ்குறிஞ்சி said...
    தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில் கட்டுரை பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.]]]

    நன்றிகள் ஸார்..! பெருமைப்படுகிறேன்..!

    ReplyDelete
  81. [[[ஜோதிஜி said...

    அப்படி என்றால் அவர் எவ்வளவு தீவிர ரசிகராக இருக்க வேண்டும்

    முற்றிலும் உண்மை.

    இந்த இடுகைக்கு நீங்கள் உழைத்த உழைப்பு வியப்பின் உச்சம்.]]]

    நன்றி ஜோதிஜி ஸார்..! எல்லாம் ஒரு ஆர்வம்தான்.. இரண்டாவது வேலை, வெட்டியில்லாம வீட்ல இருக்கிறது.. இல்லைன்னா நீங்ககூட எழுதியிருப்பீங்க..!

    ReplyDelete
  82. [[[Saravanakumar Karunanithi said...
    Thank you so much for you blog, Please keep it up !!!]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  83. unmai tamilam ulaippu tamilam matrum porumai tamilan

    Thanks for sharing

    regards,

    Amarnath santh

    ReplyDelete
  84. அருமையான தொகுப்பு அண்ணே. இது போன்ற பொது விடயங்களைத் தொகுத்தளிப்பதில் உங்களுக்கு ஈடு இணை இல்லை. இந்த ஆந்திரக் கதையைப் பார்க்கும்போது தமிழ்நாடு அரசியல் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  85. வணக்கம் உண்மைத்தமிழன், உங்கள் அயராத முயற்சியின் பலனாக ஒரு உண்மைக் கதையை அறிய முடிந்தது. நன்றிகள். ‘ரத்த சரித்திரம்’ படத்தைப் பார்த்திருந்தாலும் அதன் முழுமையான கதையை வாசித்த திருப்தி. சில சில திரையமைப்புக் காட்சிகளில் தொய்வு இருந்தாலும் உங்கள் கதையும்(கதையல்ல நிசம்) திரைக்கதையோடு பயணம் செய்கிறது. தொடரட்டும் உங்கள் தேடலும் எங்களுக்கான பணியும். நன்றியும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  86. பரிதாலா ரவி மீது எனக்கு அனுதாபம்தான் ஏற்படுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ராபின் ஹூட் ஆன ஒருவர் போல தெரிகிறார்.

    ReplyDelete
  87. Dear TrueTamilan,

    Hats off.. Are we living in modern world? Politicians always play back their role behind the screen. Sorry to Ravi & Family.

    ReplyDelete
  88. யப்பா, எத்தனை கொலை..

    இலவசமாக டிக்கெட் கிடைத்தாலும் கண்டிப்பாக ரத்த சரித்திரம் பார்க்க போவதில்லை.. டரியலா இருக்கு.. :(

    உங்க உழைப்புக்கு ஈடு இணையே இல்லை..

    ReplyDelete
  89. அன்புள்ள நண்பரே,

    உங்கள் உழைப்பு அசாதாரணமானது. பாராட்டுக்கள்.

    gopi g

    ReplyDelete
  90. அண்ணே வணக்கம்.

    மிக நீண்ட கதை. அதை சுவாரஸ்யம் குன்றாமல் தாங்கள் தந்த விதம் அதைவிட அழகு.

    உண்மையிலேயே உங்களின் உழைப்பு பெரியது. இதற்குரிய பலனை அந்த முருகன் நிச்சயம் வழங்குவான்.

    படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்.

    தலைவணங்கும் தம்பி,
    அன்பு நித்யன்.

    ReplyDelete
  91. [[[amarmuamar said...
    unmai tamilam ulaippu tamilam matrum porumai tamilan

    Thanks for sharing

    regards,

    Amarnath santh]]]]

    நன்றி அமர்நாத்.. எல்லாம் உங்களை மாதிரியான நண்பர்களின் ஆசீர்வாதத்தினால்தான்..!

    ReplyDelete
  92. [[[Jagannath said...
    அருமையான தொகுப்பு அண்ணே. இது போன்ற பொது விடயங்களைத் தொகுத்தளிப்பதில் உங்களுக்கு ஈடு இணை இல்லை. இந்த ஆந்திரக் கதையைப் பார்க்கும்போது தமிழ்நாடு அரசியல் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது.]]]

    ம்.. கொலைகளைப் பொறுத்தளவில் தமிழ்நாடு பரவாயில்லைதான். ஆனால் ஊழலிலும் அவர்களையும் மிஞ்சிவிட்டோம்..!

    ReplyDelete
  93. [[[கதியால் said...
    வணக்கம் உண்மைத்தமிழன், உங்கள் அயராத முயற்சியின் பலனாக ஒரு உண்மைக் கதையை அறிய முடிந்தது. நன்றிகள். ‘ரத்த சரித்திரம்’ படத்தைப் பார்த்திருந்தாலும் அதன் முழுமையான கதையை வாசித்த திருப்தி. சில சில திரையமைப்புக் காட்சிகளில் தொய்வு இருந்தாலும் உங்கள் கதையும் (கதையல்ல நிசம்) திரைக்கதையோடு பயணம் செய்கிறது. தொடரட்டும் உங்கள் தேடலும் எங்களுக்கான பணியும். நன்றியும் வாழ்த்துகளும்.]]]

    நன்றி கதியால் அவர்களே..! நான் படம் பார்க்கவில்லை..!

    ReplyDelete
  94. [[[Jagannath said...
    பரிதாலா ரவி மீது எனக்கு அனுதாபம்தான் ஏற்படுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ராபின் ஹூட் ஆன ஒருவர் போல தெரிகிறார்.]]]

    எனக்கும் அதுபோலத்தான் தோன்றுகிறது..! அதனால்தான் சூரியுடன் நட்பு வைத்துக் கொள்ளவும், பகையை மறைக்கவும் முனைந்துள்ளார்..!

    ReplyDelete
  95. [[[ராமுடு said...
    Dear TrueTamilan, Hats off.. Are we living in modern world? Politicians always play back their role behind the screen. Sorry to Ravi & Family.]]]

    அரசியல்வியாதிகள் எப்பாடுபட்டாவது ஆட்சி, அதிகாரம், பணம் இவற்றை கையில் வைத்துக் கொள்ளத்தான் நினைப்பார்கள். இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்..!

    ReplyDelete
  96. [[[butterfly Surya said...
    யப்பா, எத்தனை கொலை.. இலவசமாக டிக்கெட் கிடைத்தாலும் கண்டிப்பாக ரத்த சரித்திரம் பார்க்க போவதில்லை.. டரியலா இருக்கு.. :(
    உங்க உழைப்புக்கு ஈடு இணையே இல்லை..]]]

    ஹி.. ஹி.. வேலையத்த நாய் இதைக் கூட செய்யலைன்னா எப்படிங்கண்ணா.. அதான்..!

    ReplyDelete
  97. [[[gopi g said...

    அன்புள்ள நண்பரே,

    உங்கள் உழைப்பு அசாதாரணமானது. பாராட்டுக்கள்.

    gopi g]]]

    நன்றிகள் கோபிக்கு..!

    ReplyDelete
  98. [[[பிரியமுடன் பிரபு said...
    movie is better then this.]]]

    திரைப்படத்தில் கொஞ்சம் காரத்தைக் குறைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதனால் இருக்கலாம்..!

    ReplyDelete
  99. [[[நித்யகுமாரன் said...
    அண்ணே வணக்கம். மிக நீண்ட கதை. அதை சுவாரஸ்யம் குன்றாமல் தாங்கள் தந்த விதம் அதைவிட அழகு.
    உண்மையிலேயே உங்களின் உழைப்பு பெரியது. இதற்குரிய பலனை அந்த முருகன் நிச்சயம் வழங்குவான். படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்.
    தலைவணங்கும் தம்பி,
    அன்பு நித்யன்.]]]

    நல்லது தம்பி.. ஆனால் ஒரு சின்ன அட்வைஸ்.. படத்தைப் பார்க்காதே.. நானும் பார்க்கவில்லை. பார்க்கவும் மாட்டேன்..!

    ReplyDelete
  100. Fantastic write up. Brings the complete story in front of us. Thanks for the effort and time

    ReplyDelete
  101. Nice BG. No need to watch the first part after reading your post. Thanks for making me to save 1 tkt charge.

    ReplyDelete
  102. நல்ல கட்டுரை வாழ்த்துகள்.இதை நான் முழுவதுமாக இரண்டு முறை படித்து விட்டேன். தொடரட்டும். உங்கள் பணி. உங்கள் எல்லா பதிவையும் நான் படித்துவிடுவேன். கருணாநிதி (சாதணை) சம்பந்தமான பதிவுகள் தவிர

    ReplyDelete
  103. நான் கூகுள் செய்து சில லிங்குகளை பிடித்து படிக்க ஆரம்பித்தவுடன் தலை சுற்றி முயற்சியை கைவிட்டுவிட்டேன்..
    உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.. முழுவதும் படித்தேன்..சமீபத்தில் படித்த சிறந்த கட்டுரைகளில் ஒன்று உங்கள் கட்டுரை..நன்றிகள் பல..

    ReplyDelete
  104. [[[Sudhar said...
    Fantastic write up. Brings the complete story in front of us. Thanks for the effort and time.]]]

    மிக்க நன்றி சுந்தர்..! உங்களுடைய பாராட்டுக்கள் என்னை மென்மேலும் உரமூட்டுகின்றன..!

    ReplyDelete
  105. [[[Yuva said...
    Nice BG. No need to watch the first part after reading your post. Thanks for making me to save 1 tkt charge.]]]

    ஹா.. ஹா.. ஹா.. இப்படியுமா..? நான் அந்தப் படத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன். நான் அந்தப் படத்தைப் பார்க்கவே மாட்டேன்..!

    ReplyDelete
  106. [[[ராஜரத்தினம் said...
    நல்ல கட்டுரை வாழ்த்துகள். இதை நான் முழுவதுமாக இரண்டு முறை படித்து விட்டேன். தொடரட்டும். உங்கள் பணி. உங்கள் எல்லா பதிவையும் நான் படித்துவிடுவேன். கருணாநிதி (சாதணை) சம்பந்தமான பதிவுகள் தவிர..]]]

    ஏன் ஸார்.. கருணாநிதியை நல்லாத்தானே திட்டுறேன்..!!!

    ஆனாலும் மிக்க நன்றிகள் உங்களுக்கு..!

    ReplyDelete
  107. [[[swathi said...
    good post.thanks..]]]

    நன்றி ஸ்வாதி..!

    ReplyDelete
  108. [[[ராகின் said...
    நான் கூகுள் செய்து சில லிங்குகளை பிடித்து படிக்க ஆரம்பித்தவுடன் தலைசுற்றி முயற்சியை கைவிட்டுவிட்டேன்..
    உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.. முழுவதும் படித்தேன்.. சமீபத்தில் படித்த சிறந்த கட்டுரைகளில் ஒன்று உங்கள் கட்டுரை.. நன்றிகள் பல..]]]

    வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றிகள்..!

    ReplyDelete
  109. அண்ணே..அசரடிச்சிட்டீங்க..சல்யூட்..

    ReplyDelete
  110. தலைவரே,
    நம்ம சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாண், பரிதாலா ரவி கூட முட்டிகிட்டு வாங்கி கட்டிகிட்டது பத்தி ஏன் எழுதல? அது ரொம்பவே சுவாரசியமான கதை..
    அந்த பிரச்சனையில கடுப்பான நம்ம ரவி, பவன் கல்யாண கட்டி தூக்கிட்டு போய் சிறை வச்சுட்டாரு.. சிரஞ்சீவி முதல்வர் வரைக்கும் போயும் பவன் கல்யாண மீட்க முடியாம பரிதவிச்ச கதை அது..
    முடிஞ்சா அதபத்தி தனி பதிவு போடுங்க..
    நன்றி!!

    ReplyDelete
  111. [[[மணிஜீ...... said...
    அண்ணே. அசரடிச்சிட்டீங்க. சல்யூட்..]]]

    வாங்க மணிஜீ.. ரொம்ப லேட்டு..! வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

    ReplyDelete
  112. [[[பிரசன்னா said...

    தலைவரே, நம்ம சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாண், பரிதாலா ரவி கூட முட்டிகிட்டு வாங்கி கட்டிகிட்டது பத்தி ஏன் எழுதல? அது ரொம்பவே சுவாரசியமான கதை..

    அந்த பிரச்சனையில கடுப்பான நம்ம ரவி, பவன் கல்யாண கட்டி தூக்கிட்டு போய் சிறை வச்சுட்டாரு.. சிரஞ்சீவி முதல்வர் வரைக்கும் போயும் பவன் கல்யாண மீட்க முடியாம பரிதவிச்ச கதை அது..

    முடிஞ்சா அத பத்தி தனி பதிவு போடுங்க..

    நன்றி!!]]]

    போடுறேன்.. தகவலுக்கு நன்றி பிரசன்னா..!

    ReplyDelete
  113. very good post ....will be helpful to see and understand the movie.but the movie is as usual commercial masala...not a must watch

    ReplyDelete
  114. ஸ்ஸப்பா.. மூச்சு முட்டிடுச்சு. மிக்க நன்றி அண்ணே!

    ReplyDelete
  115. [[[srividya said...
    very good post. will be helpful to see and understand the movie. but the movie is as usual commercial masala. not a must watch]]]

    இந்தக் கதையை இப்படித்தான் எடுக்க முடியும்.. வேறு வழியில்லை..!

    ReplyDelete
  116. [[[சென்ஷி said...
    ஸ்ஸப்பா.. மூச்சு முட்டிடுச்சு. மிக்க நன்றி அண்ணே!]]]

    டூ லேட்டு தம்பி.. இப்படி கடைசி ஆளா வந்து பின்னூட்டம் போட்டா எப்படி..?

    ReplyDelete
  117. ஸ்...முடியலா..உங்களின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்...மிக்க நன்றி (தாமதமான பின்னூட்டத்திருக்கு மன்னிக்கவும்).

    ReplyDelete
  118. [[[Thomas Ruban said...
    ஸ். முடியலா. உங்களின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட். மிக்க நன்றி. (தாமதமான பின்னூட்டத்திருக்கு மன்னிக்கவும்).]]]

    வாங்க தாமஸ்.. முன்பே உங்களை எதிர்பார்த்தேன்.. பரவாயில்லை..! இப்போதாவது வந்தீர்கள்.. மிக்க நன்றி..!

    ReplyDelete
  119. [[[சிங்கை நாதன்/SingaiNathan said...
    Took one Hr :) shappa ippave kanna kattuthe]]]

    அவ்ளோ நேரம்தான..? பரவாயில்லை.. வருகைக்கு நன்றி சிங்கைநாதன் ஸார்..!

    ReplyDelete
  120. படம் இன்னிக்குதான் பார்த்தேன். சூரிய நாராயண ரெட்டியை (சூர்யா) கண்ணியமான ஆளாகக் காட்டியிருப்பது உண்மைக் கதையின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. கற்பழிப்பு புகார்கள் உள்ள இவரைக் கண்ணியமாகக் காட்டவேண்டிய அவசியம் ராம் கோபால் வர்மாவுக்கு ஏன் என்று புரியவில்லை.

    ReplyDelete
  121. [[[Jagannath said...
    படம் இன்னிக்குதான் பார்த்தேன். சூரிய நாராயண ரெட்டியை(சூர்யா) கண்ணியமான ஆளாகக் காட்டியிருப்பது உண்மைக் கதையின் நம்பகத் தன்மையைக் குறைக்கிறது. கற்பழிப்பு புகார்கள் உள்ள இவரைக் கண்ணியமாகக் காட்ட வேண்டிய அவசியம் ராம் கோபால் வர்மாவுக்கு ஏன் என்று புரியவில்லை.]]]

    சினிமாவுக்காகவும், ஹீரோயிஸத்திற்காகவும் அப்படிச் செய்திருக்கிறார் என்று இரு தரப்புமே ராம்கோபால்வர்மா மீது புகார்ப் பட்டியல் வாசிக்கின்றன..

    எனக்கும் ஏமாற்றம்தான்..!

    ReplyDelete
  122. Super writeup. Yesterday, I saw the movie, it was total waste movie from RGV. Waiting for your Easan movie review.

    ReplyDelete
  123. [[[raj said...
    Super writeup. Yesterday, I saw the movie, it was total waste movie from RGV. Waiting for your Easan movie review.]]]

    நன்றி ராஜ்..!

    ReplyDelete
  124. Breaking news: சூரி படுகொலை...

    ReplyDelete
  125. [[[சீனு said...
    Breaking news: சூரி படுகொலை...]]]

    அதிர்ச்சியான நி்யூஸ்..

    தகவலுக்கு நன்றி.. இது பற்றியும் பதிவு இட்டிருக்கிறேன்..!

    http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_04.html

    ReplyDelete
  126. அண்ணே!
    வழக்கம் போல படிச்சிட்டு கமெண்ட் போடாம இருக்க முடியலை...நீங்க இந்தப் பதிவை எழுதியிருக்கற விதம் அவ்வளவு சுவாரசியம். இதை தொகுக்கறதுக்காக நீங்க எவ்வளவு தேடியிருப்பீங்க, எவ்வளவு படிச்சிருப்பீங்கன்னு யூகிக்க முடியுது.

    ஒன்னே ஒன்னு...இப்போ சூரியோட கொலைக்கும் பழி வாங்கனும்னு மறுபடியும் யாரும் வன்முறையைக் கையில எடுக்காம இருக்கனும். பதிவைப் படிச்சாலே ரத்தம் முகத்துல தெறிக்குது...இதுக்கப்புறமும் ராம்கோபால் வர்மாவோட படத்தைப் பாக்கற தைரியம் வருமான்னு தெரியலை.

    ReplyDelete
  127. அருமையான பதிவு அண்ணாச்சி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது..

    ReplyDelete
  128. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...

    கடைசி கேள்வி முத்தாய்ப்பு

    ReplyDelete
  129. ஒரு துப்ப‌றியும் ஆங்கிலத்த‌ழுவ‌ல் தெலுங்குப்ப‌ட‌ம் பார்த்த‌ பீலிங் ஏற்ப‌டுத்திவிட்டீர்க‌ள்.
    உங்க‌ளின் அதீத உழைப்பு ப‌ளிச்சிடிகிற‌து. எழுத்தும் நிகழ்வுக‌ளின் தெட‌ர்ச்சிக் குழ‌‌ப்ப‌மில்லாம‌ல், நல்ல‌ எடிட் செய்திருக்கிறீர்க‌ள். சூரியின் நேற்றைய‌ கொலைக்குப் பின்னால் இவ்வ‌ள‌வு அர‌சிய‌ல் இருக்கிற‌தா? அப்ப‌ இதுவ‌ரை த‌மிழ‌கம் பெட்ட‌ர் தானோ!!
    என்னது, முதுகுள‌த்தூர் க‌ல‌வ‌ர‌ம்,இம்மானுவேல்,கீழ‌ வெண்ம‌ணி, தாமிர‌ப‌ர‌ணி, த‌.கி, தின‌க‌ர‌ன்,ப‌னையூர், ஓ.. இங்க‌யும் இப்ப‌டித்தான் ந‌ட‌க்குதா அர‌சிய‌ல்?

    ReplyDelete
  130. ஒரு உண்மைக் கதையை மிக அழகாக எழுதி உள்ளீர்கள்.

    ReplyDelete
  131. ஒரு உண்மைக் கதையை மிக அழகாக எழுதி உள்ளீர்கள்.

    ReplyDelete
  132. உண்மைத் தமிழன் அண்ணே!

    உங்கள பதிவுகளை அதிக் வாசித்ததில்லை.இந்தக் கட்டுரைக்கு நீங்கள் உழைத்திருக்கும் உழைப்பு அசாதாரனமானது.

    சும்மா இருக்கேன் அதான் என்று நீங்களே குறைத்து சொல்ல வேண்டாம்.


    ரெட்டி ரெட்டியாய் ஏகப்பட்ட ரெட்டிகள் வருவதால் படிக்கும் போது எங்களுக்கே குழப்பம் வருது, ரொம்ப பொறுமையா கோர்வையாய் எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  133. [[[கைப்புள்ள said...

    அண்ணே! வழக்கம் போல படிச்சிட்டு கமெண்ட் போடாம இருக்க முடியலை. நீங்க இந்தப் பதிவை எழுதியிருக்கற விதம் அவ்வளவு சுவாரசியம். இதை தொகுக்கறதுக்காக நீங்க எவ்வளவு தேடியிருப்பீங்க, எவ்வளவு படிச்சிருப்பீங்கன்னு யூகிக்க முடியுது.
    ஒன்னே ஒன்னு. இப்போ சூரியோட கொலைக்கும் பழி வாங்கனும்னு மறுபடியும் யாரும் வன்முறையைக் கையில எடுக்காம இருக்கனும். பதிவைப் படிச்சாலே ரத்தம் முகத்துல தெறிக்குது. இதுக்கப்புறமும் ராம்கோபால் வர்மாவோட படத்தைப் பாக்கற தைரியம் வருமான்னு தெரியலை.]]]

    படத்தையும் பாருங்க தம்பி.. ஒண்ணும் மோசமில்லைதான்.. ஆனா ஓவரா சூரியை நல்லவனாக்கிட்டாரு படத்தின் ஓட்டத்திற்காக..!

    ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.. ரொம்ப சந்தோஷம் தம்பி..!

    ReplyDelete
  134. [[[D.R.Ashok said...

    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...

    கடைசி கேள்வி முத்தாய்ப்பு.]]]

    நன்றி அசோக்.. அந்தக் கேள்விக்கு யார் பதில் சொல்வது..?

    ReplyDelete
  135. [[[சந்தோஷ் = Santhosh said...
    அருமையான பதிவு அண்ணாச்சி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது..]]]

    நன்றி சந்தோஷ்.. நான் படித்ததை உங்களிடம் பகிர விரும்பினேன். அதனால்தான் இந்தப் பதிவு..!

    ReplyDelete
  136. [[[vasan said...
    ஒரு துப்ப‌றியும் ஆங்கிலத் த‌ழுவ‌ல் தெலுங்குப் ப‌ட‌ம் பார்த்த‌ பீலிங் ஏற்ப‌டுத்திவிட்டீர்க‌ள். உங்க‌ளின் அதீத உழைப்பு ப‌ளிச்சிடிகிற‌து. எழுத்தும் நிகழ்வுக‌ளின் தெட‌ர்ச்சிக் குழ‌‌ப்ப‌மில்லாம‌ல், நல்ல‌ எடிட் செய்திருக்கிறீர்க‌ள். சூரியின் நேற்றைய‌ கொலைக்குப் பின்னால் இவ்வ‌ள‌வு அர‌சிய‌ல் இருக்கிற‌தா? அப்ப‌ இதுவ‌ரை த‌மிழ‌கம் பெட்ட‌ர்தானோ!!]]

    இங்கேயும் நிறைய நடந்திருக்கின்றன.. இப்போதும் நடந்துதான் வருகின்றன..!

    ReplyDelete
  137. [[[AALUNGA said...
    ஒரு உண்மைக் கதையை மிக அழகாக எழுதி உள்ளீர்கள்.]]]

    நன்றி..!

    ReplyDelete
  138. [[[ரிஷபன்Meena said...

    உண்மைத் தமிழன் அண்ணே!
    உங்கள பதிவுகளை அதிக் வாசித்ததில்லை.]]]

    இனிமேல் தொடர்ந்து படிக்க வாருங்கள் ரிஷபன்..!

    [[[இந்தக் கட்டுரைக்கு நீங்கள் உழைத்திருக்கும் உழைப்பு அசாதாரனமானது. சும்மா இருக்கேன் அதான் என்று நீங்களே குறைத்து சொல்ல வேண்டாம்.

    ரெட்டி ரெட்டியாய் ஏகப்பட்ட ரெட்டிகள் வருவதால் படிக்கும்போது எங்களுக்கே குழப்பம் வருது. ரொம்பப் பொறுமையா கோர்வையாய் எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.]]]

    நன்றிகள் கோடி..!

    ReplyDelete
  139. நேரடியாக களஆய்வு செய்ததுபோல் மிகச்சிறப்பாக உள்ளது உங்களின் இந்த பதிவு. இதுபோன்று சில பதிவுகளை எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    தோழமையுடன் குட்டி.

    ReplyDelete
  140. Anna oru porumai vungallukku.... Vaalthukal vunga panni thoodara...

    ReplyDelete
  141. உண்மைத் தமிழனின் உண்மைக் கதை.
    உண்மைக் கதையை மிக அழகாக எழுதி உள்ளீர்கள்.நன்றி...

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.திணை விதைத்தவன் திணை அறுப்பான்,வாளெடுப்பவன் வாளாலே மடிவான்.

    ReplyDelete
  142. [[[குட்டி said...
    நேரடியாக களஆய்வு செய்ததுபோல் மிகச் சிறப்பாக உள்ளது உங்களின் இந்த பதிவு. இது போன்று சில பதிவுகளை எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    தோழமையுடன் குட்டி.]]]

    நன்றி குட்டி ஸார்..! நிச்சயம் எழுதுகிறேன்..! உங்கள் ஆசீர்வாதங்கள்..!

    ReplyDelete
  143. [[[KavinMano said...
    Anna oru porumai vungallukku.... Vaalthukal vunga panni thoodara...]]]

    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் கவின்மனோ.!

    ReplyDelete
  144. [[[Ramesh said...
    உண்மைத் தமிழனின் உண்மைக் கதை. உண்மைக் கதையை மிக அழகாக எழுதி உள்ளீர்கள். நன்றி...
    வினை விதைத்தவன் வினை அறுப்பான். திணை விதைத்தவன் திணை அறுப்பான், வாளெடுப்பவன் வாளாலே மடிவான்.]]]

    அதேதான்.. சூழல் எப்படியாயினும் உருவாகும். அதனை உருவாக்குவது இறைவனின் வேலை..! இதுதான் தொடர்ந்து நடக்கிறது..!

    ReplyDelete
  145. இத படிச்சிட்டு கமெண்ட் போடாம போன நான் மனுசனே இல்ல உண்மையிலேயே ரொம்ப நல்ல இருக்கு சார் இன்னும் அவிழ்க்கப்படாத ச்பெக்ட்ரும் முடிசுகளையும் நீங்களே அவுத்து வுட்டுருங்க சார் நல்ல இருக்கும்

    ReplyDelete
  146. [[[கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

    இத படிச்சிட்டு கமெண்ட் போடாம போன நான் மனுசனே இல்ல. உண்மையிலேயே ரொம்ப நல்ல இருக்கு சார். இன்னும் அவிழ்க்கப்படாத ச்பெக்ட்ரும் முடிசுகளையும் நீங்களே அவுத்து வுட்டுருங்க சார். நல்ல இருக்கும்.]]]

    முடிச்சவிழ்க்க இனியும் இதில் ஒன்றுமில்லை ஸார்.. தானாகவே அனைத்து மர்மங்களும் உடைந்துவிட்டன..

    ReplyDelete
  147. எழுதப்பட்ட சம்பவம் ரத்தகளறியாக இருந்தாலும் உங்களின் எழுத்து நடை இரண்டு பாகங்களையும் ஒரே முச்சில் படிக்கவைத்து விட்டது... நன்றி..

    ReplyDelete
  148. [[[2009kr said...
    எழுதப்பட்ட சம்பவம் ரத்தக்களறியாக இருந்தாலும் உங்களின் எழுத்து நடை இரண்டு பாகங்களையும் ஒரே முச்சில் படிக்க வைத்துவிட்டது... நன்றி..]]]

    தங்களுடைய ஆதரவான, உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றிகள் நண்பரே..!

    ReplyDelete
  149. Interesting read. and a great write up.
    I must appreciate your patience for diligently going through the information on the web for all the events that had happened over the last 3 decades and present it in this format. I have come across this page just now, a year after your posting, and wanted to comment on a few things I knew as I hail from the same region of Andhra Pradesh.

    ReplyDelete
  150. Another interesting thing, I guess you might have read during your research of this stuff, is that the wicked, sadistic womanizer Obul Reddy's character was inspiration to a blockbuster Tamil film. can you guess it!

    It is the Vijay starrer Ghilli. The original Telugu version of Ghilli is Okkadu,Starring Mahesh babu, PrakashRaj. Prakash Raj character was loosely based on Obul Reddy's life. Even the character name of the villain in the Telugu movie is Obul Reddy. There are few dialogs too in the movie he says which depict references to Obul Reddy.

    ReplyDelete
  151. [[Jagannath said...
    படம் இன்னிக்குதான் பார்த்தேன். சூரிய நாராயண ரெட்டியை(சூர்யா) கண்ணியமான ஆளாகக் காட்டியிருப்பது உண்மைக் கதையின் நம்பகத் தன்மையைக் குறைக்கிறது. கற்பழிப்பு புகார்கள் உள்ள இவரைக் கண்ணியமாகக் காட்ட வேண்டிய அவசியம் ராம் கோபால் வர்மாவுக்கு ஏன் என்று புரியவில்லை.]]]

    சினிமாவுக்காகவும், ஹீரோயிஸத்திற்காகவும் அப்படிச் செய்திருக்கிறார் என்று இரு தரப்புமே ராம்கோபால்வர்மா மீது புகார்ப் பட்டியல் வாசிக்கின்றன..
    -------------------------------
    Regarding some readers comments that, Surya's character (Maddelachervu suri) was changed little and shown in good light to give heroism to the character and bring in commercial value, It is not entirely true.
    It is mainly because Suri was still alive at the film's making and release. He died just recently. As soon as Ramgopal verma announced the movie, it created huge uproar among both Ravi and Suri camps. Either of them didn't want to be portrayed in bad way. Suri especially wanted to him to be portrayed in good way and moreover he threatened the film will not release if there were objectionable things related him and the film was shown more than once during its making regading his scenes and only thne the film was released. So, RGV had to distort certain things in the movie more out of his fear not to rub Suri the wrong way, but not out of commercial compulsion...

    ReplyDelete
  152. [[[Mahesh said...

    Interesting read. and a great write up.

    I must appreciate your patience for diligently going through the information on the web for all the events that had happened over the last 3 decades and present it in this format. I have come across this page just now, a year after your posting, and wanted to comment on a few things I knew as I hail from the same region of Andhra Pradesh.]]]

    நன்றி மகேஷ்.. உங்களை போன்ற நண்பர்களின் வாழ்த்துக்களால்தான் என்னால் இன்னமும் இணையத்தில் இயங்க முடிகிறது..!

    ReplyDelete
  153. [[[Mahesh said...

    Another interesting thing, I guess you might have read during your research of this stuff, is that the wicked, sadistic womanizer Obul Reddy's character was inspiration to a blockbuster Tamil film. can you guess it!

    It is the Vijay starrer Ghilli. The original Telugu version of Ghilli is Okkadu,Starring Mahesh babu, PrakashRaj. Prakash Raj character was loosely based on Obul Reddy's life. Even the character name of the villain in the Telugu movie is Obul Reddy. There are few dialogs too in the movie he says which depict references to Obul Reddy.]]]

    ஓ.. அப்படியா..? சுவையான விஷயம்தான்.. சென்னையில் ஓபுல்ரெட்டி என்ற பெயரில் மிகப் பெரும் தொழிலதிபர் ஒருவர் இருந்தார்..! இந்த ஓபுல் அவரைப் போல் இல்லை..! மற்றபடி ரத்தச்சரித்திரம் ஓபுல்ரெட்டியின் வரலாற்றை படித்தால் ஆச்சரியமும், அதிர்ச்சியுமாகத்தான் இருக்கிறது.. எப்படி தாங்கிக் கொண்டார்கள் அந்த ஊர் மக்கள்..?

    ReplyDelete
  154. [[[Mahesh said...

    [[Jagannath said...

    படம் இன்னிக்குதான் பார்த்தேன். சூரிய நாராயண ரெட்டியை(சூர்யா) கண்ணியமான ஆளாகக் காட்டியிருப்பது உண்மைக் கதையின் நம்பகத் தன்மையைக் குறைக்கிறது. கற்பழிப்பு புகார்கள் உள்ள இவரைக் கண்ணியமாகக் காட்ட வேண்டிய அவசியம் ராம் கோபால் வர்மாவுக்கு ஏன் என்று புரியவில்லை.]]]

    சினிமாவுக்காகவும், ஹீரோயிஸத்திற்காகவும் அப்படிச் செய்திருக்கிறார் என்று இரு தரப்புமே ராம்கோபால்வர்மா மீது புகார்ப் பட்டியல் வாசிக்கின்றன..

    -------------------------------

    Regarding some readers comments that, Surya's character (Maddelachervu suri) was changed little and shown in good light to give heroism to the character and bring in commercial value, It is not entirely true.

    It is mainly because Suri was still alive at the film's making and release. He died just recently. As soon as Ramgopal verma announced the movie, it created huge uproar among both Ravi and Suri camps. Either of them didn't want to be portrayed in bad way. Suri especially wanted to him to be portrayed in good way and moreover he threatened the film will not release if there were objectionable things related him and the film was shown more than once during its making regading his scenes and only thne the film was released. So, RGV had to distort certain things in the movie more out of his fear not to rub Suri the wrong way, but not out of commercial compulsion.]]]

    இருக்கலாம்.. ஆனால் இப்படியொரு கட்டாயத்திற்குட்பட்டு சிதைந்த நிலையில் படத்தை எடுக்க வர்மாவுக்கு என்ன அவசியம் வந்தது..? இதில் படைப்பாளி தோற்றுப் போய்விட்டானே மகேஷ்?

    சரி விடுங்க.. இப்பத்தான் சூரியும் போய்ச் சேர்ந்துட்டாரே..? இனிமேல் 3-ம் பாகம் வருமா என்று பார்ப்போம்..!

    ReplyDelete
  155. //இவருடைய அப்பா ஸ்ரீராமுலு அப்போதே 300 ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர். ஆனாலும் மார்க்சிய சிந்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். பரிவு கொண்டவர். இதனாலேயே தனது நிலங்களின் பெரும் பகுதியை ஏழை, எளிய மக்களுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். அத்தோடு அந்தப் பகுதி ஏழை மக்களுக்குத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

    இந்த மாவட்டத்தின் பெரும்பாலான நிலங்கள் கனகன்பள்ளி பண்ணையாரான கங்குல நாராயண ரெட்டி என்பவரிடமும், சென்னகொத்தபள்ளி பண்ணையார் சேனா சென்னா ரெட்டி என்பவரிடமும்தான் இருந்திருக்கின்றன. இந்த இரண்டு பண்ணையார்களிடமும் இருந்த 600 ஏக்கர் நிலங்களை பராமரித்தல் மற்றும் அவற்றை ஏழை, எளிய உழைக்கும் மக்களிடம் கொடுத்து பாடுபட வைப்பது என்ற வேலைகளைச் செய்து வந்தது பரிதலா ரவியின் அப்பா ஸ்ரீராமுலுதான்//
    //கங்குல நாராயண ரெட்டியின் நிலங்களை ஸ்ரீராமுலு ஏழைகளுக்கு வாரிக் கொடுப்பதையும்//
    அப்படி என்றால் ஸ்ரீராமுலு தன் நிலங்களை ஏழைகளுக்கு கொடுத்த பின் கங்குல நாராயண ரெட்டியின் நிலங்களை பாதுகாத்தாரா...? அவை கங்குல ரெட்டியின் நிலங்கள் எனில் ஸ்ரீராமுலு எப்படி மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க முடியும்...கொஞ்சம் விளக்கவும், ப்ளீஸ்....

    ReplyDelete