Pages

Thursday, October 14, 2010

தயவு செய்து எங்களைக் கருணைக் கொலை செய்யுங்கள் - சிறையில் வாடும் அப்பாவி கைதிகளின் கோரிக்கை

13-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

24 மணி நேரமாகிய ஒரு நாளில் 20 மணி நேரம் இணையத்தின் முன்பாக அமர்ந்திருக்கும், என்னால் ஒரு நாளைய ஜெயில் வாழ்க்கையை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

ஆனால் சிறைக்கைதிகளாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வரும் ஜெயில்வாசிகளை ஒரு கணம் நினைத்தாலும் நமக்குள் சோகப் படலம் பரவுகிறது.

உண்மையில் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருபவர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம்  விசாரணைக் கைதியாகவே 15, 20 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் அப்பாவிகளை(குற்றம் நிரூபிக்கப்படும்வரையில் அவர்கள் அப்பாவிகள்தானே) பார்த்து என்னவென்று பரிதாபப்படுவது.

இந்தத் துயரக் கதைகளைப் பற்றி இந்த வார நக்கீரன் இதழில் பத்திரிகையாளர் சோலை ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இருந்து சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இனி சோலை அவர்களின் எழுத்து :

“எங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள். நாங்கள் மகிழ்ச்சியாக மரணத்தை ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் சிந்துவதும் நின்று போகும்..” -  இப்படிச் சொன்ன புழல் சிறையிலும், இதர சிறைகளிலும் உள்ள கைதிகள் 45 பேர் முதல்வர் முதல் பிரதமர், குடியரசுத் தலைவர்வரை அனைவருக்கும் துயரம் தோய்ந்த கடிதம் எழுதியனுப்பியிருக்கிறார்கள்.

இவர்கள் பயங்கரவாதிகளா இல்லை.. அவர்கள் வெடிகுண்டு வீசியவர்களா இல்லை.. வங்கியைக் கொள்ளையடித்தவர்களா இல்லை. ரயிலைக் கவிழ்த்தவர்களா? கள்ள நோட்டு அடித்தவர்களா? இல்லவே இல்லை.

அவர்கள் சூழ்நிலையில் காரணமாக குற்றம் புரிந்தவர்கள். தவறு என்று தெரிந்து அவர்கள் தவறு செய்யவில்லை.

வேலூர் சிறையில் தமிழ்மாறன் என்பவர் 22 ஆண்டுகளாக அடைபட்டிருக்கிறார். அதே சிறையில் மாடசாமி என்பவர் 19 ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். சென்னை புழல் சிறையில் முத்து, புஷ்பராஜ் என்பவர்கள் 18 வருடங்களாக சிறைவாசம் இருக்கிறாகள். குமார், சரவணன் என்பவர்கள் 19 ஆண்டு கால கைதிகள். ஜெயபால், திருப்பத்தூர் ஏழுமலை என்பவர்களும் 18 ஆண்டு காலமாக சிறையில் குடியிருக்கிறார்கள்.  சத்தீஷ், நரேந்திரன், ரமேஷ், அய்யப்பன் என்பவர்கள் 13 ஆண்டு கால சிறைவாசம் முடித்து 14-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள்.

இப்படி தமிழகத்துச் சிறைகளில் மட்டும் ஏறத்தாழ 230 பேர் கூண்டுப் பறவைகளாக அடைபட்டிருக்கிறார்கள். அரசுக்கு மனு போட்டு மனு போட்டு ஓய்ந்து விட்டார்கள். இன்றைக்கு மவுனம்தான் அவர்களின் மொழி. ஒவ்வொரு நாளும் பொழுது புலரத்தான் செய்கிறது. ஆனால் இவர்களைப் பொறுத்தவரையில் தண்டனைக் காலம் முடிந்தும் அடிவானம் சிவக்கவே இல்லை.

ஆதாயத்திற்காக கொலை செய்தவர்கள். பரோலில் சென்று திரும்பி வராதவர்கள், வரதட்சணை, ஆள் கடத்தல் போன்ற வழக்குகளில் இவர்கள் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டார்கள். விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தையும் அனுபவித்துவிட்டார்கள். ஆனாலும் இவர்களுக்கு மட்டும் ஏன் சிறைக்கதவு திறக்க மறுக்கிறது என்று சிந்தித்து சிந்தித்து உயிரோடு மாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் அடிக்கடி குற்றம் புரிந்து சிறைப் பறவையானவர்கள் இல்லை. இவர்கள் முதன்முதலாக ஒரே ஒரு முறைதான் குற்றம் புரிந்தவர்கள். ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது சட்டத்தின் ஒரு பிரிவை மாற்றிக் குறிப்பிட்டுவிட்டார்கள்.

அதனால் அவருக்கு ஆயுள் தண்டனை. பதினான்கு ஆண்டுகள் சிறைவாசத்தை அவர் முடித்துவிட்டார். இதன் பின்னர் ஆண்டுகள் பல கடந்தும் அவர் கைதியாகவே இருக்கிறார். மனித குமாரனாக முடியவில்லை.

ஐம்பது ரூபாய் ஆதாயத்திற்காக ஒருவரை கொலை செய்தததாக சுப்ரமணி என்பவர் மீதும், அவரது மனைவி மீதும் வழக்கு வந்தது. தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் வேலூர் சிறையில் அவர்கள் பதினைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டார்கள். இதைப் போன்ற குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்ற திருவல்லிக்கேணி சாகின்சா ராஜா என்பவர் 22 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.

காலத்தின் கடைசி நாள்வரை இவர்கள் இருள் சிறையில் வெந்து கொண்டுதான் இருக்க வேண்டுமா? வெளியுலகை எட்டிப் பார்த்து சுதந்திரக் காற்றை இவர்கள் சுவாசிக்கவே முடியதா..?

அண்மையில் சென்னை புழல் சிறையில் ஒரு கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு தாக்கினார். அதனால் அந்தப் பெண் மரணமடைந்தார் என்பது வழக்கு. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பத்தாண்டுகளை அவர் சிறையில் கழித்துவிட்டார். விடுதலைக்கான வெடிவெள்ளி இனி பூக்கவே பூக்காதா என்ற கவலை அவரை உருக்கியிருக்கும்.

முன்னர் இருபதாண்டுகள் சிறையில் இருநதவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் 15 ஆண்டுகள், 10 ஆண்டுகள் சிறைவாசம் கண்டவர்களுக்கு சிறைக்கதவுகள் திறந்தன.

முன்னர் அறிவுரைக் குழு கூடியது. காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகளுக்கும் கைதிகளின் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அந்தக் குழுவில் அங்கம் பெற்றனர். நீண்ட நாள் சிறைத்தண்டனை பெற்றவர்கள் நன்னடத்தை, இதர அம்சங்களை அந்தக் குழு ஆராய்ந்தது. அந்தக் குழு அளித்த தீர்ப்பின்படி 14 ஆண்டு சிறைத்தண்டனையோடு பலர் விடுதலையானார்கள்.

அந்தக் குழுவின் பரிந்துரையில்லாது எந்தக் கைதியையும் விடுதலை செய்ய முடியாது. ஆயுள் தண்டனையை அனுபவித்துவிட்ட கைதிகள் விடுதலையாவதற்குக்கூட அந்தக் குழுவின் பரிந்துரை தேவை. ஆனால் அந்தக் குழு அண்மைக் காலமாகக் கூடுவதில்லை என்கிறார்கள். எனவே 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அனுபவித்தவர்களுக்குக்கூட கதவு திறக்கப்படுவதில்லை.

இவர்கள் தேச விரோதிகள், தீவிரவாதிகள் என்றால் வெளியே வந்தால் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்றால், இவர்கள் பழைய தாதாக்கள் என்றால் அவர்கள் இறுதிநாள்வரை சிறையில் இருக்க வேண்டியவர்கள்தான்.

ஆனால் இவர்கள் விளைவுகளை அறியாது கோபத்தில் அறிவு மழுங்கிப் போய் குற்றம் செய்தவர்கள். இதயமும், ஆன்மாவும் மரத்துப் போய் இவர்கள் குற்றம் புரிந்தவர்கள் அல்ல. ஒரு விநாடி சிந்தனை சிதறியதால் செய்வது அறியாது குற்றங்களைச் செய்தவர்கள்.

அண்ணா முதல்வராக இருந்தபோது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் ஒரு ஆண்டு முதல்வராக இருந்தபோது 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் இருந்த 400 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அடுத்த நான்காண்டுகள் செல்வி.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எவரும் விடுதலை செய்யப்படவில்லை. அறிவுரைக் கழகமும் கூட்டப்படவில்லை.

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 1405 பேர்களை விடுதலை செய்தார் கலைஞர். அதில் மதுரையில் விடுதலை செய்யப்பட்டவர்களை எதிர்த்து சுப்பிரமணியசுவாமி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. எனவே தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.

70 வயதுக் கடந்தவர்களை விடுதலை செய்ய கலைஞர் ஆணையிட்டார். அதன் மூலம் 13 பேர் விடுதலையானார்கள். ஆனால் 85 வயதைக் கடந்தவர்கள்கூட இன்னும் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் ஆதாயத்திற்காகக் கொலை குற்றம் செய்தவர்கள், பரோலில் சென்று திரும்பாது மீண்டும் கைது செய்யப்பட்டவர்கள் என்று பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே அவர்களை விடுதலை செய்ய இயலாது என்று சட்டமும், அரசு ஆணையும் சொல்கின்றன. சட்டத்திற்காக மனிதர்களா? மனிதர்களுக்காக சட்டமா?

ஒரே ஒரு முறை குற்றம் செய்துவிட்டு தண்டனைக்கு மேல் தண்டனையையும் நிறைவு செய்துவிட்டு எழுபது வயதை எட்டியவர்கள் இன்னும் சிறைகளில் இருக்கிறார்கள். அவர்களை நம்முடைய தந்தையராகவோ, அன்னையராகவோ கற்பனை செய்து பாருங்கள். அனல்பட்ட மெழுகாய் இதயம் அழுதுவிடும். அவர்கள் பழுத்த பழங்கள். இறுதிக் காலத்திலாவது உற்றார், உறவினர்கள் மடியில் இருக்கக் கூடாதா?

தண்டிக்கப்பட்ட அவர்கள் மேல்முறையீடு செய்யத் தெரியாதவர்கள். அதற்கான வசதியும் இல்லாதவர்கள். அவர்களுக்கு வழிகாட்ட நாதியும் இல்லாதவர்கள். எனவேதான் தினம், தினம் சிறைக்கொட்டடியின் நான்கு சுவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உதவிக்காக மனித இதயங்கள் கண்ணீர் சிந்துகின்றன. ஆனால் அதன் அவலக் குரல் சட்டத்தின் காதுகளுக்கு எட்டுவதில்லை.

பீகார் சட்டமன்றத்தைப் பாருங்கள். ஏற்கெனவே அந்த மன்றத்தில் இருந்த அனைத்துக் கட்சியினரில் 60 சதவிகிதம் பேர் கிரிமினல்கள். தண்டனை பெற்றவர்கள். இனியும் தண்டனையை எதிர்பார்க்க வேண்டியவர்கள். அங்கே தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களில் பலரும் போட்டியிடுகிறார்கள். பல புதிய கிரிமினல்களும் தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இதே அரசியல் சட்ட விதிகள் வளைந்து கொடுக்கின்றன. அவர்களோடு ஒப்பிடும்போது தமிழகச் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் வாடுகிறவர்கள் மிக மிகச் சாமானியர்கள். கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு உத்திரப்பிரதேசம், பீகாரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக டெல்லிக்கு வந்தவர்களையும் பார்த்துவிட்டோம்.

சிறைக்கு வந்த பின்னர் படித்து எம்.சி.ஏ., எம்.காம், எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். கணினிக் கல்வி, தட்டச்சில் தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் கல்விக்கு தமிழக அரசு ஆண்டிற்கு சராசரியாக 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறது. ஆனால் அவர்கள் பட்டம் பெற்று பயன் என்ன? அவர்கள் பெற்ற பட்டங்கள் நூலறுந்த பட்டங்கள்தானா? பத்தாண்டுகளுக்கு மேலாகியும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்று சட்டத்தின் சந்து பொந்துகள் சத்தம் போடுகின்றன. அவர்கள் பட்டம் பெற்றது பாலையில் பெய்த நிலவொளிதானா?

பொதுவாக அறிவுரைக் குழுதான் சிறைவாசிகளுக்கு மலை முகட்டில் மின்னும் சுடராகத் தெரிந்தது. அந்தச் சுடரும் சூறைக் காற்றில் அலை மோதிக் கொண்டிருக்கிறது. எனவே அந்தக் குழு மீண்டும் குறிப்பிட்ட காலங்களில் கூட வேண்டும். குற்றம் புரிந்தவர்களின் தண்டனைக் காலம் முடிந்திருந்தால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஏழரை ஆண்டு கால தண்டனை முடித்தவர்களுக்கு சிறைக்கதவுகள் திறக்கக் கூடாதா? அவர்களும் மனிதர்கள்தானே?

நன்றி : நக்கீரன் வார இதழ்

இனி நான்..

இந்தக் கைதிகளெல்லாம் சாதாரண குற்றப் பிரிவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தாலும், இவர்கள் செய்த ஒரேயொரு தவறால் சிறையில் இருந்து அனுப்பப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். இதற்கு அடிப்படையான காரணம் இவர்களுக்கு கல்வியறிவோ, செல்வாக்கோ இல்லை என்பதுதான்.

ஊரை அடித்து உலையில் போட்ட மாயா வெங்கடேசன் என்னும் புரோக்கருக்கு ஒரே நாளில் 24-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஜாமீன் கிடைத்து அன்று முதல் ஜாலியாக வீட்டில்தான் இருக்கிறார். நினைத்துப் பாருங்கள். கலைஞர் ஆட்சிக்கு வந்து அடுத்த மாதத்தில் என்று நினைக்கிறேன். ஒரே நாளில் இத்தனை வழக்குகளில். அதுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில்.. எப்பேர்ப்பட்ட சாதனை இது..? பணம் பத்தும் செய்யும் என்பதற்கு இதையும் ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆனால் இந்த அப்பாவிகளுக்கு பணமும் இல்லை. சரியான சட்ட உதவிகள் செய்ய ஆட்களும் இல்லை. ஒரு முறை சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்தாலோ அல்லது பரோலில் சென்று திரும்பி வராமல் இருந்து பிடிபட்டாலோ அவருக்கு வழக்கு முடியும்வரையில் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவாம். அதனை இவர்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்.

சரி.. தண்டனைதான் அடைந்துவிட்டார்களே.. விடுவிக்கலாமே என்றால்.. இப்போதுதான் நன்னடத்தை விதியைக் கொண்டு வந்து காட்டி தடைக்கல் போடுகிறார்கள்.

வழக்கு விசாரணைக்கே வராமல் பல கைதிகள் வருடக்கணக்கில் சிறையில் உள்ளார்கள். இதோ இப்போது மிகச் சமீபத்தில் குணங்குடி ஹனீபா என்பவர் பத்தாண்டுகளாக சிறையில் இருந்தார். பல மட்டங்களில் ஜாமீன் கேட்டும் அவரை விடுவிக்க அரசுத் தரப்பு எதிர்த்தே வந்தது. கடைசியில் தீர்ப்பும் வந்தேவிட்டது. அவர் நிரபாரதி என்று. இப்போது இவர் அனுபவித்த அந்த பத்தாண்டு காலத்தை அரசால் திருப்பித் தர முடியுமா? முடியாதல்லவா..?

தா.கிருஷ்ணன் கொலை வழக்கும் ஒரு படு பயங்கரமான கொலை வழக்குதான். குற்றவாளிகள் 5 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டார்களே எப்படிங்க..? அப்போது இந்த மனிதர்கள் செய்தது அவர்களைவிடவும் கொடுஞ் செயலா? கொலையில் திட்டமிட்ட கொலையும், பணத்துக்காக செய்கின்ற கொலைகளும்தான் படு பயங்கரமானவை. ஆனால் உணர்ச்சி வேகத்தில், கோபத்தில் செய்வதையெல்லாம் இந்த வகுப்பில் சேர்க்க முடியாது.

தினகரன் பத்திரிகை தாக்கப்பட்ட வழக்கு என்ன ஆனது..? குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து கொண்டிருந்தபோதே ஜாமீனில்  வெளியில்தான் இருந்தார்கள். இதோ நிரபராதி என்றும் அறிவிக்கப்பட்டுவிட.. அந்தக் கொலையை யார் செய்தது என்று இன்னமும் நமது ஸ்காட்லாண்டு போலீஸாராலும், சிபிஐயினராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தினகரன் அலுவலகத்தில் உயிரோடு கொளுத்தப்பட்ட இரண்டு பேரும் தங்களுக்குத் தாங்களே தீ வைத்து செத்துவிட்டதால் அப்பீல் செய்யவும் மாட்டோம் என்று மனுநீதிச் சோழன் சூளுரைத்துவிட்டார். அவர் குடும்பத்தில் ஒருவர் செத்திருந்தால் இதுபோல் சொல்லியிருப்பாரோ.. சொல்ல மாட்டார். ஏனெனில் அவருக்கு அவரது குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களெல்லாம் சோற்றால் அடித்த பிண்டங்கள்தான்.

நடு இரவில் வீட்டுக்கு எதிரே மரத்தில் கட்டிப் போடப்பட்டு உடம்பு முழுவதும் வரி, வரியாக தழும்புகள் பதியும் அளவுக்கு ஒரு முன்னாள் அமைச்சரும், அவரது செல்லக் கிழத்தியும் மாறி மாறி அடித்துத் துவைத்திருக்கிறார்கள் சிவபாலன் என்ற தமிழரை.. இதோ வழக்கு ஜெட் வேகத்தில் நடந்து முடிந்து தீர்ப்பே வந்துவிட்டது. நிரபராதிகள் என்று.. எப்படிங்க..? 20 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டேயிருக்கும் வழக்குகள் எல்லாம் நீதிமன்றங்களில் நீடித்திருக்க.. ஆளும் கட்சியினர், முன்னாள் அமைச்சர்கள், செல்வாக்கானவர்கள் என்று பலரது வழக்குகள் மட்டும் ஒன்றுமில்லாமல் போகும் மர்மம்தான் என்ன..?

ஏதோ தேவதூதனே ஆட்சி செய்வதைப் போல் தங்களது கசடுகளையும், அசிங்கங்களையும், மக்களின் ஒப்பாரியையும், ஓலங்களையும் மறைத்துவிட்டு காசு கொடுத்து சந்தோஷக் கூச்சல்களை மட்டுமே ஒலிபரப்பி வரும் இந்த ஆட்சியாளர்களின் செவிட்டுக் காதுகளுக்கு இந்த அப்பாவிகளின் குரல் என்றைக்கு கேட்கப் போகிறது..?

54 comments:

  1. Pls send 2 Autos on behalf of gopalapuram to annan Saravanan's residence!

    ReplyDelete
  2. அட டா,, டைப் செய்றதுக்குள்ள ஃபர்ஸ்ட் மிஸ் ஆகி போச்சே

    ReplyDelete
  3. //ஆளும் கட்சியினர், முன்னாள் அமைச்சர்கள், செல்வாக்கானவர்கள் என்று பலரது வழக்குகள் மட்டும் ஒன்றுமில்லாமல் போகும் மர்மம்தான் என்ன..?//
    இப் பட்டியலில் முன்னாள் முதல்வரும் அடங்குவார்.
    பணம் பாதாளம்வரை பாயும்......

    ReplyDelete
  4. பார்வையாளன் said...
    //அட டா,, டைப் செய்றதுக்குள்ள ஃபர்ஸ்ட் மிஸ் ஆகி போச்சே//
    Reader வச்சிகிடுங்க! சொல்ல சொல்ல type ஆயிறும்

    ReplyDelete
  5. " Reader வச்சிகிடுங்க! சொல்ல சொல்ல type ஆயிறும் "


    ஹா ஹா,,, இனிமே அப்படித்தான் செய்யனும்.. உ. த அண்ணன் இந்த டெக்னிக்கை பயன்படுத்திதான் பதிவு போடுறாரோ? !!
    சரி.. நிதானமா படிச்சுட்டு, உண்மையான பின்னூட்டம் போடுறேன்

    ReplyDelete
  6. மிக காத்திரமான சமுக கட்டுரையை எழுதியுள்ளீர்கள் எல்லாவற்றையும் விட மனிதாபிமானத்தில் உச்சமாக தங்கள் கட்டுரை உள்ளது.. தொடர்ந்து எழுதுங்கள் நீங்கள் உங்களால் முடிந்த ஒரு முக்கிய காரியத்தை செய்து இருக்கிறீர்கள்.. அவர்கள் சார்பாக எனது நன்றிகள்.. எனினும் உரைக்கவேண்டிய சமுகத்துக்கும், உரைக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

    ReplyDelete
  7. சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை.... இந்த கட்டுரையை நீங்கள் எழுதியதே நீங்கள் இந்த சமுகத்துக்கு செய்த பெருஞ்சாதனைதான் ;

    ReplyDelete
  8. சரவணன்,,

    அழுத்தமாய் எழுதியுள்ளீர்கள். மக்களின் வலியை உணர்ந்தவர்கள் மிகக் குறைவு. மானாட மயிலாட பார்க்கும் நேரத்தில் சற்றேனும் மக்களைப் பற்றிச் சிந்திப்பின் நலம் பயக்கும்.

    ReplyDelete
  9. காவல் துறையின் மீது மக்களுக்கு என்றைக்காவது முழு நம்பிக்கை இருந்திருக்குமா தெரியாது..ஆனால் இப்போது நீதித் துறையின் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் ஆட்டம் கண்டு விடும் போலும்

    ReplyDelete
  10. அண்ணே நல்லா தான் கேட்டிருக்கீங்க கேள்வி. ஆனா இந்த அப்பாவியின் குரல் கேட்கிறது ஆட்டுகுட்டி குரல் கேட்கிறதெல்லாம் ஜனநாயக நாட்டில் சாத்தியமா சொல்லுங்கள். இங்கே முதல்ல பணம். அப்புறம் செல்வாக்கு. இது இரண்டும் இருந்தா போதும். வழக்கு நீதி சட்டம் நீதியை நிலைநாட்டுவது சட்டம் தன் கடைமையை செய்யும் அதுக்கு எல்லாம் அப்பாவிங்க நிறைய பேரு இருக்காங்க. அவங்கள வச்சு சூப்பர் வழக்கு எல்லாம் நடத்தி ஜகஜோதியா தீர்ப்பு சொல்லி தினத்தந்தியில போடுவாங்க. நாமளும் அடடே சட்டம் தன் கடமையை செய்கிறதே என்று கை தட்டி பாராட்டி நெகிழவேண்டியது தான்.

    ReplyDelete
  11. சந்திரன் மாமா(ரொம்ப ரொம்ப அற்புதம் சரவணன்) பற்றி படித்து விட்டு இந்த கட்டுரையை படிக்கும் போது மனதில் துயரம் தான் உருவாகின்றது.

    ReplyDelete
  12. [[[PARAYAN said...
    Pls send 2 Autos on behalf of gopalapuram to annan Saravanan's residence!]]]

    என்றோ ஒரு நாள் நிச்சயம் அது நடந்தே தீரும் ஸார்..! எதிர்பார்க்கிறேன்..!

    ReplyDelete
  13. [[[பார்வையாளன் said...
    அடடா,, டைப் செய்றதுக்குள்ள ஃபர்ஸ்ட் மிஸ் ஆகி போச்சே.]]]

    இதுக்கெதுக்குண்ணே போட்டி..? தலையைக் காட்டினாலே போதாதா?

    ReplyDelete
  14. [[[தமிழன்பன் said...

    //ஆளும் கட்சியினர், முன்னாள் அமைச்சர்கள், செல்வாக்கானவர்கள் என்று பலரது வழக்குகள் மட்டும் ஒன்றுமில்லாமல் போகும் மர்மம்தான் என்ன..?//

    இப்பட்டியலில் முன்னாள் முதல்வரும் அடங்குவார். பணம் பாதாளம்வரை பாயும்.]]]

    மு.முதல்வர் விஷயத்தில் பணம், செல்வாக்கு மட்டுமல்ல.. அரசியலும் கலந்துள்ளது..! இதுதான் கூட்டுக் களவாணித்தனம்..!

    ReplyDelete
  15. [[[PARAYAN said...

    பார்வையாளன் said...

    //அட டா,, டைப் செய்றதுக்குள்ள ஃபர்ஸ்ட் மிஸ் ஆகி போச்சே//

    Reader வச்சிகிடுங்க! சொல்ல சொல்ல type ஆயிறும்]]]

    அப்படியா? நான் கேள்விப்படாத விஷயமா இருக்கே..? இதெப்படிங்கண்ணா..! நாம சொல்லச் சொல்ல டைப்பிங்கன்னா நான் இன்னும் ஒரு 40 பக்கத்துக்கு எழுதித் தள்ளிருவனே..!?

    ReplyDelete
  16. [[[பார்வையாளன் said...

    "Reader வச்சிகிடுங்க! சொல்ல சொல்ல type ஆயிறும்"

    ஹா ஹா.. இனிமே அப்படித்தான் செய்யனும்.. உ. த அண்ணன் இந்த டெக்னிக்கை பயன்படுத்திதான் பதிவு போடுறாரோ? !! சரி.. நிதானமா படிச்சுட்டு, உண்மையான பின்னூட்டம் போடுறேன்]]]

    நடுராத்திரில எப்படிங்கய்யா இப்படி நிதானமா ரெண்டு பேரும் ஆடியிருக்கீங்க..?

    ReplyDelete
  17. [[[raja said...
    மிக காத்திரமான சமுக கட்டுரையை எழுதியுள்ளீர்கள் எல்லாவற்றையும்விட மனிதாபிமானத்தில் உச்சமாக தங்கள் கட்டுரை உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் உங்களால் முடிந்த ஒரு முக்கிய காரியத்தை செய்து இருக்கிறீர்கள். அவர்கள் சார்பாக எனது நன்றிகள். எனினும் உரைக்க வேண்டிய சமுகத்துக்கும், உரைக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.]]]

    நன்றி ராஜா.. அரசின் காதுகளுக்கு இது எட்டப்பட வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் எண்ணமும்..!

    ReplyDelete
  18. [[[raja said...
    சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை. இந்த கட்டுரையை நீங்கள் எழுதியதே நீங்கள் இந்த சமுகத்துக்கு செய்த பெருஞ்சாதனைதான்.]]]

    ஆஹா.. ஆஹா.. இந்த டயலாக் நல்லாயிருக்கே..!

    நம்ம பதிவுல பெரும்பாலானது இந்த வகைதாண்ணா..!

    ReplyDelete
  19. [[[senthil said...
    சரவணன், அழுத்தமாய் எழுதியுள்ளீர்கள். மக்களின் வலியை உணர்ந்தவர்கள் மிகக் குறைவு. மானாட மயிலாட பார்க்கும் நேரத்தில் சற்றேனும் மக்களைப் பற்றிச் சிந்திப்பின் நலம் பயக்கும்.]]]

    இதனை உணர வேண்டியது அரசுகள்தான். சிறைக்கம்பிகளுக்குள் இருப்பவர்களை கொஞ்சமாவது மனிதர்களாக நினைத்து அவர்களது குறைகளைக் கேட்க நேரம் ஒதுக்கிச் செயல்பட்டால் நல்லது..!

    ReplyDelete
  20. [[[ஸ்ரீராம். said...
    காவல் துறையின் மீது மக்களுக்கு என்றைக்காவது முழு நம்பிக்கை இருந்திருக்குமா தெரியாது. ஆனால் இப்போது நீதித்துறையின் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் ஆட்டம் கண்டுவிடும் போலும்.]]]

    எனக்கும் அப்படித்தான் இருக்கிறது தோழர்.. பணமும், செல்வாக்கும் பிரதானமாகி நீதியையும், நேர்மையையும் பின் தள்ளியிருக்கிறது..!

    ReplyDelete
  21. [[[VISA said...
    அண்ணே நல்லா தான் கேட்டிருக்கீங்க கேள்வி. ஆனா இந்த அப்பாவியின் குரல் கேட்கிறது ஆட்டு குட்டி குரல் கேட்கிறதெல்லாம் ஜனநாயக நாட்டில் சாத்தியமா சொல்லுங்கள். இங்கே முதல்ல பணம். அப்புறம் செல்வாக்கு. இது இரண்டும் இருந்தா போதும். வழக்கு நீதி சட்டம் நீதியை நிலைநாட்டுவது சட்டம் தன் கடைமையை செய்யும். அதுக்கு எல்லாம் அப்பாவிங்க நிறைய பேரு இருக்காங்க. அவங்கள வச்சு சூப்பர் வழக்கு எல்லாம் நடத்தி ஜகஜோதியா தீர்ப்பு சொல்லி தினத்தந்தியில போடுவாங்க. நாமளும் அடடே சட்டம் தன் கடமையை செய்கிறதே என்று கை தட்டி பாராட்டி நெகிழ வேண்டியதுதான்.]]]

    தம்பி விஸா.. இப்படித்தான் மதுரை தினகரன் கேஸை நடத்தியிருக்காங்க.. சாட்சிகளா இருந்தவர்களெல்லாம் பல்டியடிக்க.. அவர்களை பிறழ் சாட்சிகளாக கணக்கில் எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்றுகூட சிபிஐ வழக்கறிஞர் வாதாடவில்லையாம்.. நீதித் துறை எப்படி போகிறது பாருங்கள்..?

    ReplyDelete
  22. [[[ஜோதிஜி said...
    சந்திரன் மாமா(ரொம்ப ரொம்ப அற்புதம் சரவணன்) பற்றி படித்து விட்டு இந்த கட்டுரையை படிக்கும்போது மனதில் துயரம்தான் உருவாகின்றது.]]]

    நமக்கு வர்ற நியூஸெல்லாம் இது மாதிரிதான் வருது ஜோதிஜி ஸார்..! ஒண்ணும் முடியலை..!

    ReplyDelete
  23. // இந்த ஆட்சியாளர்களின் செவிட்டுக் காதுகளுக்கு இந்த அப்பாவிகளின் குரல் என்றைக்கு கேட்கப் போகிறது..? //

    நிச்யமாக கேட்கபோவதில்லை இந்த ஆட்சியாளர்களுக்கு.மனுநீதி சோழன் ஆண்டால் நீதி கேட்டு போரடலாம். மனுக்கு நிதி வாங்கும் மாண்புமிகுகளின் ஆட்சியில் இது சாத்தியமில்லை,காத்திருப்பதை தவிர வேறு வழியும் இல்லை நம்மை போன்ற சாமனியர்களுக்கு. நல்ல பதிவு

    ReplyDelete
  24. [[[விஷ்ணு said...

    //இந்த ஆட்சியாளர்களின் செவிட்டுக் காதுகளுக்கு இந்த அப்பாவிகளின் குரல் என்றைக்கு கேட்கப் போகிறது..? //

    நிச்யமாக கேட்க போவதில்லை இந்த ஆட்சியாளர்களுக்கு. மனுநீதி சோழன் ஆண்டால் நீதி கேட்டு போரடலாம். மனுக்கு நிதி வாங்கும் மாண்புமிகுகளின் ஆட்சியில் இது சாத்தியமில்லை, காத்திருப்பதை தவிர வேறு வழியும் இல்லை நம்மை போன்ற சாமனியர்களுக்கு. நல்ல பதிவு]]]

    இவர்களுடைய சீமந்தப் புத்திரர்கள், தொண்டர்கள் பற்றிய விஷயங்கள் என்றால் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து முடிகின்றனவே..!

    கேட்டால் அதற்கு ஒரு வியாக்கியானம் பேசுகிறார்கள்..!

    ReplyDelete
  25. [[[தியாவின் பேனா said...
    அற்புதம்]]]

    நன்றிகள்..

    ReplyDelete
  26. நீங்க சொன்னது போல் பணம், கல்வியறிவு, செல்வாக்கு எதுவும் இல்லன்னா ரொம்ப சின்ன குற்றம் செஞ்சாக் கூட வெளியில் வருவது கடினம்தான். அப்படி வந்தாலும் மீண்டும் வேறு குற்றங்களுக்கு பிடித்து போவதும் நடக்கிறது!

    ReplyDelete
  27. அருமையான கட்டுரை,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. தண்டனைகள் தரப்படுவது தவறிழைத்தவர்கள் திருந்தத்தான், அந்த தண்டனைகள் அவர்கள் வாழ்கையை வெறுக்கும் அளவிற்குச் செய்திருப்பது கொடுமை. உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
    ஆனால் நீங்கள் எங்கள் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா அவர்களைப் பற்றி குறை கூறுவது எனக்கு சற்றும் பிடிக்கவில்லை. முதலில் ஐயா அவர்களிடம் மன்னிப்பு கோரி ஒரு பதிவிடுங்கள். அவருக்கு இருக்கும் 24 மணி நேரத்தில் அவர் எத்தனை பணிகளை செய்வார்? பாராட்டு விழாக்களில் கலந்து கொள்வாரா? உடன் பிறப்புக்களுக்கு கடிதம் எழுதுவாரா? எதிர்ப்பறிகை விடுவாரா? மானாட மயிலாட பார்ப்பாரா? இல்லாவிட்டால் புதிய படங்களுக்கு எங்கள் குல விளக்கு நமீதாவை சிபாரிசு செய்வாரா?. தயவு செய்து ஐயா அவர்கள் பற்றி இனியும் தவறாக பதிவிட வேண்டாம்.
    தன் உண்ணாவிரதத்தால் எங்கள் மக்களைக் காத்த ஐயா அவர்களின் தொண்டன், ரசிகன்,
    kumareshan.

    ReplyDelete
  29. [[[எஸ்.கே said...
    நீங்க சொன்னது போல் பணம், கல்வியறிவு, செல்வாக்கு எதுவும் இல்லன்னா ரொம்ப சின்ன குற்றம் செஞ்சாக்கூட வெளியில் வருவது கடினம்தான். அப்படி வந்தாலும் மீண்டும் வேறு குற்றங்களுக்கு பிடித்து போவதும் நடக்கிறது!]]]

    பணம் பத்தும் செய்யும் எஸ்.கே. பணமிருந்தால் எந்தத் தண்டனையில் இருந்தும் தப்பித்துவிடலாம் என்ற அரசியல் பாதுகாப்புதான் நமது ஆட்சியாளர்கள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது..!

    ReplyDelete
  30. [[[raghava said...
    அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.]]]

    நன்றி ராகவா ஸார்..!

    ReplyDelete
  31. [[[KUMS said...
    தண்டனைகள் தரப்படுவது தவறிழைத்தவர்கள் திருந்தத்தான், அந்த தண்டனைகள் அவர்கள் வாழ்கையை வெறுக்கும் அளவிற்குச் செய்திருப்பது கொடுமை. உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

    ஆனால் நீங்கள் எங்கள் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா அவர்களைப் பற்றி குறை கூறுவது எனக்கு சற்றும் பிடிக்கவில்லை.

    முதலில் ஐயா அவர்களிடம் மன்னிப்பு கோரி ஒரு பதிவிடுங்கள். அவருக்கு இருக்கும் 24 மணி நேரத்தில் அவர் எத்தனை பணிகளை செய்வார்?

    பாராட்டு விழாக்களில் கலந்து கொள்வாரா? உடன் பிறப்புக்களுக்கு கடிதம் எழுதுவாரா? எதிர்ப்பறிகை விடுவாரா? மானாட மயிலாட பார்ப்பாரா? இல்லாவிட்டால் புதிய படங்களுக்கு எங்கள் குல விளக்கு நமீதாவை சிபாரிசு செய்வாரா?.

    தயவு செய்து ஐயா அவர்கள் பற்றி இனியும் தவறாக பதிவிட வேண்டாம்.
    தன் உண்ணாவிரதத்தால் எங்கள் மக்களைக் காத்த ஐயா அவர்களின் தொண்டன், ரசிகன்..]]

    குமரேசன்.. உங்களுடைய வஞ்சப் புகழ்ச்சியை மிகவும் ரசித்தேன். நன்றி.. பாவம் அவரும்தான் எத்தனை வேலையைத்தான் செய்வாரு..?

    ReplyDelete
  32. [[[தீப்பெட்டி said...
    நன்றி பாஸ்..]]]

    மிக்க நன்றி பாஸ்..!

    ReplyDelete
  33. [[[ILA(@)இளா said...
    போன வாரம் சிறந்த பதிவு என் பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன், நன்றி!]]]

    ஆஹா.. தன்யனானேன் இளா.. நன்றி..!

    ReplyDelete
  34. புதுசா இவ்வளவு செலவு பண்ணி சிறை கட்டி அதுல ஆள் இல்லன்னா எப்படி ?
    இவங்க எல்லோரும் எதிர் கட்சி குடும்பமா இருக்குமோ என்னவோ ?

    நல்ல நோக்குள்ள பதிவு ..வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  35. [[[தமிழ் திரு said...
    புதுசா இவ்வளவு செலவு பண்ணி சிறை கட்டி அதுல ஆள் இல்லன்னா எப்படி? இவங்க எல்லோரும் எதிர் கட்சி குடும்பமா இருக்குமோ என்னவோ ?
    நல்ல நோக்குள்ள பதிவு. வாழ்த்துகள்!!!]]]

    எதிர்க்கட்சியினர் அல்ல. எதற்கும் பயன்படாத அன்றாடங்காய்ச்சிகள்..! அதனால்தான் கண்டு கொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்.!

    ReplyDelete
  36. நீங்க ராஜீவ் காந்தி கொலையாளிகளை மனதில் வைத்து எழுதியிருப்பது நல்லாவே புரியுது.

    ReplyDelete
  37. இங்கு எளியவர்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டால் அவர்கள் வெளியே வருவது மிகவும் சிரமம்.. மனித உரிமை கழகம் ஏசி அறைக்குள் சுகமாக தூங்குகிறது .. அல்லது லெட்டர் பேட் ரெடி பண்ணிக்கொண்டு கட்டை பஞ்சாயத்து செய்கிறது ...

    இந்தியாவை புனிதமான தேசம் என சொல்பவர்கள் இதனை கொஞ்சம் கவனித்தால் தேவலை ...

    ReplyDelete
  38. சமூக சிந்தனைகளை பதிவேற்றுவது மட்டுமே நமது கடமை.பார்வையுள்ளவர் பார்க்க கடவர்.

    ReplyDelete
  39. [[[நாஞ்சில் மனோ said...
    நீங்க ராஜீவ் காந்தி கொலையாளிகளை மனதில் வைத்து எழுதியிருப்பது நல்லாவே புரியுது.]]]

    நாஞ்சில் ஸார்..!

    நிச்சயம் இது உண்மையில்லை. ஆனால் அவர்களையு்ம் விடுவிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை..!

    ReplyDelete
  40. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    Karasara Katturai.]]]

    காரம் கொஞ்சம்தான் யோகேஷ்..!

    ReplyDelete
  41. [[[ராஜ நடராஜன் said...
    சமூக சிந்தனைகளை பதிவேற்றுவது மட்டுமே நமது கடமை. பார்வையுள்ளவர் பார்க்க கடவர்.]]]

    பார்க்க வேண்டுமே ஸார்..! இன்னும் எத்தனை வருடங்கள்தான் அவர்கள் ஜெயிலில் கிடந்து வாட வேண்டும்..? இதற்குக் கொன்று போட்டால்கூட அவர்களுக்கு நிம்மதிதான்..!

    ReplyDelete
  42. ur thoughts are very correct . but in partical it is very tough to follow. it is very difficult to find the paid murder and murderers done due to second decision.

    Even we think about the paid murderers,most of them are doing it for politicians and bussiness men. only for the sake of little amount of money.

    Even so many people have the psychological problems to do this murder.

    Even some people dont know it is wrong.

    We have issues in the fundamental. it needs to be changes start from politics , education, behiovour habits thought process etc.
    i dont know when it will happen. but i like to.

    sorry for typing in english.

    ReplyDelete
  43. [[[muthukumar said...

    ur thoughts are very correct. but in partical it is very tough to follow. it is very difficult to find the paid murder and murderers done due to second decision.

    Even we think about the paid murderers,most of them are doing it for politicians and bussiness men. only for the sake of little amount of money.

    Even so many people have the psychological problems to do this murder. Even some people dont know it is wrong.

    We have issues in the fundamental. it needs to be changes start from politics, education, behiovour habits thought process etc. i dont know when it will happen. but i like to. sorry for typing in english.]]]

    இளைய தலைமுறையினர் இது போன்ற சிறு, சிறு குற்றங்களில் ஈடுபடுவதற்கு முதற் காரணம் திரைப்படங்களின் வீச்சும், கவனிப்பில்லாத தன்மையும்தான்..!

    பெரும்பாலான வழக்குகளில் குற்றமே செய்யாவிட்டாலும்கூட காவல்துறையினர் அராஜகத்தால் கேஸ் முடிக்க ஆள் வேண்டுமே என்பதால் பொய்யாக வழக்கைப் பதிவு செய்து உள்ளே தள்ளுவதும் உண்டு.

    இப்படி பொய்க் குற்றவாளிகளும் குறிப்பிட்ட சதவிகிதம்பேர் சிறையில் இன்னமும் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டுமெனில் உண்மையில் மக்களுக்காக உழைக்கின்ற உத்தமர் ஒருவர்தான் ஆட்சிக்கு வர வேண்டும். அப்போதுதான் அது நடக்கும்..!

    ReplyDelete
  44. [[[கே.ஆர்.பி.செந்தில் said...

    இங்கு எளியவர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டால் அவர்கள் வெளியே வருவது மிகவும் சிரமம். மனித உரிமை கழகம் ஏசி அறைக்குள் சுகமாக தூங்குகிறது. அல்லது லெட்டர் பேட் ரெடி பண்ணிக்கொண்டு கட்டை பஞ்சாயத்து செய்கிறது. இந்தியாவை புனிதமான தேசம் என சொல்பவர்கள் இதனை கொஞ்சம் கவனித்தால் தேவலை.]]]

    அவர்களுக்கு இதையெல்லாம் கவனிக்க எங்கே நேரமிருக்கிறது செந்தில்..?

    தங்களது ஆட்சியை ஐந்தாண்டுகளுக்கு நீடிக்க வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யவே அவர்களுக்கு நேரமில்லை. இதற்கா நேரம் இருக்கப் போகிறது..?

    ReplyDelete
  45. இந்த பிரச்சனையை அரசியல் வியாதிகளிடம் ஒப்படைத்தால் அவ்வள்வுதான்.... பிணம் தின்னும் நாய்களுக்கு எங்கே புத்தி வர போகிறது.

    ReplyDelete
  46. //அவர்களை நம்முடைய தந்தையராகவோ, அன்னையராகவோ கற்பனை செய்து பாருங்கள். அனல்பட்ட மெழுகாய் இதயம் அழுதுவிடும். அவர்கள் பழுத்த பழங்கள். இறுதிக் காலத்திலாவது உற்றார், உறவினர்கள் மடியில் இருக்கக் கூடாதா?//

    மிகவும் கொடுமை! எனது தாயார், தம்பி மற்றும் எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பரின் தாயார் ஆகியோர் சிறையில் அடைப்பட்ட பொழுது அதன் வலியை உணர்ந்தேன்...

    நம் நாட்டில் காசு உள்ளவனுக்குத்தான் நீதி எல்லாம்...
    அப்பாவி மக்களுக்கும், ஏழைக்கூட்டத்திற்கும் ஒரு நாதியுமில்லை..
    இந்த நாட்டில் பிறந்த பாவத்திற்காக செத்து மடிய வேண்டியதுதான்..

    ReplyDelete
  47. உண்மைத்தமிழனே உண்மையாண கட்டுரை!

    இது போல் வலிகள் பட்டபவனுக்குத்தான் புரியும்.. வரதட்சணை வாங்கமல் புரட்சி செய்கின்றேன் என்று ஒரு பெண் உருவில் உள்ள மிருகத்தை ஏமாந்து திருமணம் செய்து 3ன்றே மாத்தில் போலீஸ் ஸ்டேசன் கோர்ட்டு என்று அலைந்து நான் செய்த பாவத்திற்கு எனது உறவுகளை சிறையில் அடைத்தது "மனித நேயம்" மிக்க மகளிர் (????) காவல்நிலைய" கூட்டம்...

    இதுபோல் வலிகள் கொடுமையானது...

    வீதிக்கொரு கட்சி உண்டு!
    சாதிக்கொரு சங்கமுண்டு!
    நீதி சொல்ல மட்டும் இங்கு ஒரு நாதியில்ல....

    இது நாடா இல்ல சுடுகாடா இத கேட்ட நாதியில்லை போடா!

    என்ற பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது

    ReplyDelete
  48. [[[தமிழ் உதயன் said...
    இந்த பிரச்சனையை அரசியல் வியாதிகளிடம் ஒப்படைத்தால் அவ்வள்வுதான். பிணம் தின்னும் நாய்களுக்கு எங்கே புத்தி வர போகிறது.]]]

    வேறு என்ன செய்வது தமிழ் உதயன்.. பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய இடத்தில் அந்த நாய்கள்தானே உட்கார்ந்திருக்கின்றன..!

    ReplyDelete
  49. [[[498ஏ அப்பாவி said...

    //அவர்களை நம்முடைய தந்தையராகவோ, அன்னையராகவோ கற்பனை செய்து பாருங்கள். அனல்பட்ட மெழுகாய் இதயம் அழுதுவிடும். அவர்கள் பழுத்த பழங்கள். இறுதிக் காலத்திலாவது உற்றார், உறவினர்கள் மடியில் இருக்கக் கூடாதா?//

    மிகவும் கொடுமை! எனது தாயார், தம்பி மற்றும் எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பரின் தாயார் ஆகியோர் சிறையில் அடைப்பட்ட பொழுது அதன் வலியை உணர்ந்தேன்.

    நம் நாட்டில் காசு உள்ளவனுக்குத்தான் நீதி எல்லாம். அப்பாவி மக்களுக்கும், ஏழைக் கூட்டத்திற்கும் ஒரு நாதியுமில்லை. இந்த நாட்டில் பிறந்த பாவத்திற்காக செத்து மடிய வேண்டியதுதான்.]]]

    ஐயையோ.. வருந்துகிறேன் ஸார்..! பணத்திற்காக சட்டத்தை அடகு வைக்கும் அதிகாரிகள்தான் இங்கு நிறைய உள்ளனர். அதுதான் கொடுமை..!

    ReplyDelete
  50. [[[498ஏ அப்பாவி said...

    உண்மைத்தமிழனே உண்மையாண கட்டுரை!

    இது போல் வலிகள் பட்டவனுக்குத்தான் புரியும்.. வரதட்சணை வாங்கமல் புரட்சி செய்கின்றேன் என்று ஒரு பெண் உருவில் உள்ள மிருகத்தை ஏமாந்து திருமணம் செய்து 3ன்றே மாத்தில் போலீஸ் ஸ்டேசன் கோர்ட்டு என்று அலைந்து நான் செய்த பாவத்திற்கு எனது உறவுகளை சிறையில் அடைத்தது "மனித நேயம்" மிக்க மகளிர் (????) காவல்நிலைய" கூட்டம்...

    இதுபோல் வலிகள் கொடுமையானது...

    வீதிக்கொரு கட்சி உண்டு!
    சாதிக்கொரு சங்கமுண்டு!
    நீதி சொல்ல மட்டும் இங்கு ஒரு நாதியில்ல....
    இது நாடா இல்ல சுடுகாடா
    இத கேட்ட நாதியில்லை போடா!

    என்ற பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றது]]]

    -))))))))))))

    ReplyDelete