Pages

Saturday, October 02, 2010

இசையமைப்பாளர் சந்திரபோஸ் – சில நினைவலைகள்..!


01-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உயிரோடு இருப்பவரையே இறந்துவிட்டார் என்று சொல்லி தகவல் பரப்ப வேண்டிய துர்ப்பாக்கியத்தை எனக்குக் கொடுத்துத் தொலைத்தது மீடியாக்களின் அவசரத்தனமான பேராசை. பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம் என்ற செய்தியை நள்ளிரவில் நக்கீரன்.காம் தகவலை முன் வைத்து பேஸ்புக், டிவிட்டரில் செய்தியை வெளியிட்டு நானும் ஒரு பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டேன்.

 

அடுத்த நாள் காலையில் அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டு நானே செத்துப் போனதைப் போன்ற உணர்வைத்தான் அடைந்தேன். மீடியாக்களின் விளம்பர பரபரப்பு இந்த அளவுக்கா போக வேண்டும் என்கிற குமுறலுடன் முந்தைய நாள் துக்கச் செய்திக்கு மறுப்புத் தெரிவித்து மன்னிப்பு கேட்டு செய்தியைப் போட வேண்டியதாகியிருந்தது.

அந்தச் செய்தி அப்படியே உயிருடன் இருக்கக் கூடாதா என்ற எனது நம்பிக்கையை உடைத்தெறிந்து இரண்டு நாட்கள் கூடுதல் தவணை கொடுத்திருக்கிறேன் என்பதைப் போல அவரது உயிரைப் பறித்துக் கொண்டான் முருகன்.

அண்ணன் சந்திரபோஸுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலிகள்..!

 

சந்திரபோஸ் என்கிற பெயரை நான் மறக்க முடியாத அளவுக்கான ஒரு சம்பவம் 'ராஜா சின்ன ரோஜா' படம் வெளிவந்தபோது நடந்திருந்தது.

அதற்கு முன்பாகவே அவர் 'விடுதலை,' 'மனிதன்' திரைப்படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும், 'ராஜா சின்ன ரோஜா'வில் இருந்த 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்' பாடல்தான் எங்களை சற்று பிரமிக்க வைத்திருந்தது. "என்னய்யா.. விட்டா இளையராஜாவுக்கு போட்டியா வந்திருவாரு போலிருக்கு.. யாருய்யா இந்த மியூஸிக் டைரக்டரு..?" என்று ஒரு ஆச்சரியக் கேள்வியை என்னைப் போன்ற ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

திண்டுக்கல் 'ஆர்த்தி' தியேட்டரில்தான் இந்தப் படத்தைத் திரையிட்டிருந்தார்கள். படத்தின் ரிலீஸ் தினத்தன்று காலையிலேயே கட்டுக்கடங்காத கூட்டம். அப்போதெல்லாம் எந்த ரஜினி படமாக இருந்தாலும் முதல் நாள் பர்ஸ்ட் ஷோ ரசிகர்களுக்கு மட்டும்தான்.

டிக்கெட் வாங்குவதற்காக ஏறிக் குதித்து சட்டையைக் கிழித்துக் கொள்ளத் தயாராக இருந்த தைரியசாலியான எனது நண்பர்கள் தியேட்டரின் உள்ளே கியூவில் நின்றிருக்க நானும், வேறு சில நண்பர்களும் ஆர்த்தி தியேட்டரின் நேர் எதிரேயிருந்த டீக்கடையின் உள்ளே அமர்ந்திருந்தோம்.  

டீக்கடையில் காலை 5 மணியில் இருந்தே 'ராஜா சின்ன ரோஜா 'படத்தின் பாடல்கள்தான் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் சலித்துப் போய் பாட்டை நிறுத்திவிட்டனர். கடைக்கு வந்த ரசிகர் மன்றத்து குஞ்சுகள், 'சூப்பர் ஸ்டாரு யாரு'ன்னு கேட்டா பாடலை தொடர்ந்து போடும்படி கடைக்காரரிடம் வற்புறுத்தினார்கள்.

கடைக்காரரோ இதுவரைக்கும் "இருபது தடவை போட்டாச்சு. போதும் இனிமேல் போட முடியாது" என்று சொல்லி மறுத்தார். ரசிகர்கள் விடாப்படியாக அனத்தினார்கள். அப்போதெல்லாம் ரஜினி ரசிகர்கள் என்ன செய்வார்களென்றால், ரஜினியின் திரைப்படம் வெளியாகும்போது அதில் இருக்கும் ரஜினியின் கெட்டப்பு போலவே தங்களை மாற்றிக் கொண்டு அதே டிரெஸ், மேக்கப்பில் வலம் வருவார்கள்.

அது போலத்தான் அன்றைக்கும் ஒரு பனியன், திறந்துவிடப்பட்ட சட்டை, உலுப்பிய தலைமுடியுடன் அத்தனை பேருமே ரஜினி போலவே காட்சியளித்து பக்தர்கள் குழமாக இருந்தார்கள். கடைக்காரர் கால நேரம் பார்க்காமல் முடியாது என்று சொல்ல ரசிகர்கள் சிலர் ஆர்வக் கோளாறில் பாட்டில்களை எடுத்துக் கீழே போட்டு உடைத்தனர்.

கடுப்பான டீ மாஸ்டர் குண்டா சட்டியில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடு்த்து அவர்கள் மீது வீசிவிட.. அவ்வளவுதான்.. சில நொடிகளில் அந்தக் கடையையே அடித்து நொறுக்கிவிட்டார்கள் ரசிகர்கள்.

நாங்கள் உள்ளேயிருந்ததால் தப்பிக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் சேருக்கு பின்னால் ஒளிந்து கொண்டு பறந்து வந்த ரொட்டிகளையும், சமோசாக்களையும் உடலில் வாங்கிக் கொண்டு தத்தளித்தோம். பின்பு போலீஸ் வந்து 'சுளுக்கெடுத்த' பின்புதான் அந்த ரசிக வெறியர்கள் ஓடி ஒளிந்தார்கள்.

இந்தக் களேபரத்தில் இந்தப் படத்தை முதல் ஷோவிலேயே படம் பார்க்க முடியாமல் சோகமாகிவிட்டது. இப்போது இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அந்தச் சம்பவம் நினைக்கு வந்து தொலைக்கும்..!

அந்தப் பாடலுக்கு இசை நிச்சயமாக இளையராஜாவாகத்தான் இருக்கும் என்று நானெல்லாம் அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். என் வீட்டில் டேப் ரிக்கார்டர் இல்லாததால் கேஸட் வாங்கும் பழக்கமில்லை. பின்பு ஒய்.எம்.ஆர். பட்டியில் இருக்கும் தாஸ் கடை ஓனரான தாஸண்ணன்தான் கேஸட்டை என்னிடம் காட்டி உறுதிப்படுத்தித் தெரிவித்தார் 'சந்திரபோஸ்'தான் என்று..!

சூப்பர் ஸ்டாரின் சரித்திரத்தையே சொல்லக் கூடிய வகையில் அமைந்திருந்த அந்த ஒரு பாடலிலேயே சந்திரபோஸ் தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களால் வெகுவாக கவர்ந்திழுக்கப்பட்டார் என்பதுதான் உண்மை.. இதன் பின்புதான் சாதாரண திரையிசை ரசிகர்களுக்கு சந்திரபோஸின் சரித்திரம் தெரிய ஆரம்பித்தது என்று நினைக்கிறேன்.

அப்போதைய ரேடியோக்களில் இசையமைத்தவரின் பெயரைச் சொல்லாமல் படத்தின் பெயரையும், பாடலைப் பாடியவர்களின் பெயரை மட்டுமே சொல்லி வந்ததால் இசையமைப்பாளரின் பெயர்கள் அத்தனை அவசியமில்லாமல் போயிருந்தது. கூடவே அதெல்லாம் இளையராஜாவி்ன் ஆதிக்கம் நிரம்பிய காலம் என்பதாலும் எந்தவொரு நல்ல பாடல் என்றாலும்கூட அது இளையராஜா இசையமைத்தாகவே நினைத்திருந்தோம்.

அவருடைய இசை என்று எனக்குத் தெரிந்திருந்தது 'விடுதலை,' 'மனிதன்', 'சங்கர்குரு', 'பாட்டி சொல்லைத் தட்டாதே' ஆகிய படங்கள்தான். அதிலும் 'சங்கர்குரு' படத்தில் 'காக்கிச்சட்டை போட்ட மச்சான்' என்ற பாடல் பட்டித் தொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டாகிவிட கேஸட் வரலாற்றில் அந்தச் சமயத்தில் சந்திரபோஸுக்கு பெரும் வரவேற்பும் கிடைத்திருந்தது.

இப்போது சந்திரபோஸ் இசையமைத்ததாக இணையத்தில் வெளிவரும் தகவல்களைப் பார்க்கின்றபோது இவ்வளவும் தெரியாமலேயே ஆறு மாதங்கள் அவரோடு பழகித் தொலைத்திருக்கேனே.. என்று வெட்கமாகவும் இருக்கிறது.

2007-ம் வருடம் அக்டோபர் மாதத் துவக்கத்தில் நான் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தபோது இயக்குநர் யார் கண்ணன் என்னிடம் ஒரு கதையைக் கொடுத்து தட்டச்சு செய்யச் சொன்னார். அதை 'ஜனனம்' என்ற பெயரில் மெகா டிவிக்காக சீரியலாக எடுக்கப் போவதாகவும் கூறினார்.

அந்த வேலை விஷயமாக யார் கண்ணனை அடிக்கடி சந்தி்ததுப் பேசி கடைசியில் அந்த சீரியலில் உதவி இயக்குநராகவும் பணியாற்றச் சென்றேன்.. இன்றைக்கு 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தைத் தயாரித்த சிவஸ்ரீ பிக்சர்ஸ்தான் இந்த மெகா சீரியலையும் தயாரித்தார்கள்.

அன்றைக்குத்தான் அவர்களது அலுவலகத்தில் பளிச்சென்ற வெள்ளை உடையில் அதே போன்ற சிரிப்போடு அண்ணன் சந்திரபோஸை சந்தித்தேன்..! அவரது அறிமுகம் கிடைத்தபோது இவர் எதற்கு நடிக்க வருகிறார் என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்து அது மறைவதற்குள் அவராகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சகஜமாக பேசத் துவங்கினார்.

அந்த சீரியலில் சீதாவுக்கு ஜோடியாக நடித்தார் 'தங்கப்பன்' என்கிற கேரக்டரில் நடித்தார் சந்திரபோஸ். அந்த ஷூட்டிங் சமயத்தில்தான் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது..!

தனக்கு நடிக்கவே பெரும் ஆசை என்றும், தான் நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன்தான் திரையுலகில் கால் வைத்ததாகக் கூறினார் சந்திரபோஸ்.

அவருடைய சொந்த ஊர் சீர்காழி. அவருடைய குடும்பத்தில் பரம்பரையாகவே கலை ஆர்மும், இசை ஆர்வமும் இருந்ததினால் சிறு வயதிலேயே தான் மேடையில் நாடகங்களில் நடிக்கத் துவங்கினேன் என்றார்.

அப்போதைய நாடக வாழ்க்கையைப் பற்றி அவர் சொன்னபோது பலரது நாடக வாழ்க்கை அனுபவங்களை ஏற்கெனவே படித்திருந்தாலும் என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவி்ல்லை..! முழு நாடக ஸ்கிரிப்ட்டையும் கொடுத்து வசனங்களை மனப்பாடம் செய்யச் சொல்வார்களாம்..! அதில் எந்தக் கேரக்டரை வேண்டுமானாலும் நடிக்க வேண்டி வரலாமாம். அதனால் அனைவருமே அத்தனை வசனங்களையும் மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டியது கடமை என்பதுதான் அப்போதைய நாடகக் கம்பெனிகளின் தலையாய மந்திரமாம்...!

 

அப்படி பல நாடகங்களில் நடித்து வந்த பின்புதான் "ஒரு கட்டத்தில் நாடகத்திற்கு இசையமைக்க வந்த தேவாவுடன் பழக்கம் ஏற்பட்டு பின்பு நெருக்கமாகி நாடக வாழ்க்கையைவிட இசை வாழ்க்கைக்குள் நுழைந்தால் இன்னும் கொஞ்சம் பிரபலமாகலாம் என்று நினைத்து அப்படியே திசை திரும்பியது எனது வாழ்க்கை.." என்றார்.

அப்படியிருந்தும் முறையாக இசையைப் பயில வேண்டும் என்ற ஆர்வத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உதவியாளராகவும் வேலை பார்த்ததாகச் சொன்னார். "அண்ணன்கிட்ட வேலை பார்க்கிறது அவ்ளோ ஈஸியில்லை.. கோபம் வந்தா கன்னா பின்னான்னு திட்டுவாரு.. எங்களைன்னுல்லாம் இல்லை.. பாட வர்றவங்களையும் சேர்த்தேதான்.. அவருக்கு பாவம்தான் முக்கியம்.. ஒரு வார்த்தையோட அர்த்தத்தை புரிஞ்சு அதை பாவமா குரல்ல கொண்டு வரணும்னு சொல்வாரு.. உண்மையா இசைன்னா அதுவும் ஒரு நடிப்புதான். பாடகனும் ஒரு நடிகன்தான். அவனும் தன் குரல்ல இழைஞ்சு நடிக்கணும்ன்றதை எம்.எஸ்.வி.கிட்டதான் கத்துக்கி்ட்டேன்.." என்றார்.

இதன் பின்னர் தேவாவுடன் இணைந்து 'போஸ்-தேவா' என்ற பெயரில் இசைக் குழுவை நடத்தியிருக்கிறார் சந்திரபோஸ். 'மனோரமா', 'சக்தி நாடக சபா', 'பாய்ஸ் நாடகக் குழு' என்று பலருக்கும் இசையமைத்து வந்தபோது பக்தி பாடல்களுக்கு தனி மவுசு இருப்பதை உணர்ந்து அதற்கே முன்னுரிமை கொடுத்து இசையமைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

வி.சி.குகநாதனின் 'மதுரகீதம்' படத்திற்கு முன்பாகவே தேவா, புதிய பக்தி பாடல்களை இசையமைக்க ஆர்வம் கொண்டு ஒதுங்கியதால் சந்திரபோஸ் அவரை விட்டுப் பிரிந்ததாகத் தெரிகிறது.

"தேவாவும் நானும் போட்ட டியூனெல்லாம் இப்ப போட்டிருக்கணும்.. அத்தனையும் ஜெகஜோதியானது.. அவர் வீட்டு வாசல்ல உக்காந்துதான் டியூன் போடுவோம்.. என்ன மாதிரி மெட்டுன்னாலும் பக்தி பாடல்ன்னா டக்குன்னு பிடிபட்டிரும்.. அதெல்லாம் ஒரு காலம்.." என்றார்.

திரையுலகப் பிரவேசத்தில் சந்திரபோஸை திரும்பிப் பார்க்க வைத்த பாடல் 1978-ல் வெளி வந்த 'மச்சானைப் பார்த்தீங்களா' படத்தின் மாம்பூவே மைனாவே என்ற பாடல்..! இந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தது இளையராஜாதான் என்று இத்தனை நாட்களாக நினைத்திருந்தேன். இப்போது இந்த இறப்புச் செய்தியோடு வந்திருந்த துக்க வெளியிட்டீல்தான் இதனைப் பார்த்து நெஞ்சடைத்துப் போனேன்.

அதேபோல் 'சரணம் ஐயப்பா' படத்தில் 'பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்' என்ற பாடலுக்கு இசையும் இந்த அண்ணன்தான் என்பது இப்போது தெரிந்து உள்ளம் நெகிழ்கிறது. எத்தனையோ தமிழர்களை சபரிமலை நோக்கி நடக்க வைத்தது இந்தப் பாடல் என்பது சரித்திரம்..!

அண்ணின் இசையில் வெளியான படங்களில் குறிப்பிடத்தக்கவையாக 'மச்சானை பார்த்தீங்களா', 'செல்வாக்கு', 'விடுதலை', 'மனிதன்', 'ராஜா சின்ன ரோஜா',  'பாட்டி சொல்லைத் தாட்டாதே', 'புதிய பாதை', 'அண்ணா நகர் முதல் தெரு', 'இதய தீபம்', 'சங்கர்குரு', 'மாங்குடி மைனர்', 'மாநகர காவல்', 'முதல் குரல்', 'மைக்கேல்ராஜ்', 'தாய் மேல் ஆணை', 'கடற்கரை தாகம்', 'கதாநாயகன்,' 'கலியுகம்', 'கைநாட்டு', 'நல்லவன்', 'பட்டிக்காட்டுத் தம்பி', 'மதுரைக்கார தம்பி,' 'மக்கள் என் பக்கம்', 'வசந்தி' போன்ற படங்கள் இடம் பெறுகின்றன. கிட்டத்தட்ட 350 படங்களுக்கும் மேலாக சந்திரபோஸ் அண்ணன் இசையமைத்திருப்பதாக பிலிம் நியூஸ் ஆனந்தன் ஐயா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 
"ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை" என்ற பாடலும், "பூஞ்சிட்டு குருவிகளா.." என்ற பாடலும் அண்ணன் சொந்த குரல்தான் என்பதைக் கேள்விப்படும்போது இன்னமும் திரையுலகில் நாம் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பது தெரிகிறது.

'மனிதன்' படத்தின் 'மனிதன், மனிதன் எவன்தான் மனிதன்' பாடலை கம்போஸிங் செய்யும்போது தற்செயலாக இதைக் கேட்டுவிட்ட ரஜினி, "இது கண்டிப்பாக படத்தில் இடம் பெற்றே தீர வேண்டும்.." என்று எஸ்.பி.முத்துராமனிடம் வேண்டிக் கேட்டு படத்தில் இடம் பெற வைத்தாராம்.

அதேபோல் "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா..?" பாடலை டேப் ரிக்கார்டரில் கேட்டுவிட்டு ரஜினி, அன்றைய இரவில் தொலைபேசியில் தன்னிடம் நீண்ட நேரம் பேசியதோடு மறுநாள் ஸ்டூடியோவுக்கு வந்து தன் அருகில் அமர்ந்து கம்போஸிங் வேலையைக் கவனித்ததையும் சொன்னார் அண்ணன்..

இளையராஜாவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக பிற்காலத்திய ஏவி.எம். திரைப்படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக ஆகிய சந்திரபோஸின் சறுக்கல் எங்கே வந்தது.. எப்படி வந்தது..?

நானும் அதைத்தான் கேட்டேன். சங்கடத்துடன் சொன்னார் தன்னுடைய அதீதமான குடிப் பழக்கமே தன்னை புறந்தள்ளியது என்று..! "நான் நினைத்திருந்தால் இன்னொரு ரவுண்டு வந்திருக்கலாம். ஏனோ பட வாய்ப்பு குறைய, குறைய நான் அந்த உலகத்துல மூழ்கிட்டேன்.. ஏதோ ஒண்ணு ஆயிருச்சு.. பட் இப்ப அதை நினைச்சு ஒரு புண்ணியமும் இல்லை.." என்று தனது சோகத்தை மறைத்து பேசினாலும், நடிப்பில் உற்சாகத்திற்கு அளவேயில்லை அவரிடம்.

அவரது நடிப்பு பிரவேசமும் அவருடைய தற்போதைய குடும்பத்தை முன்னிட்டு்த்தான் என்பதும் புரிந்தது..!

ஒரு நாள் படப்பை அருகே இரவு 7 மணி முதல் காலை 7 மணிவரையிலும் நடந்த ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு வீட்டிற்குபோய் குளித்து, சாப்பிட்டுவிட்டு மீண்டும் 10 மணிக்கு டப்பிங் கொடுக்க ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். சில சமயங்களில் காரை அவரேதான் ஓட்டி வருவார். "அரைத் தூக்கத்துல ஓட்டிட்டு வராதீங்கண்ணே.." என்று அன்போடு கடிந்தபோதிலும், சிரித்தபடியே தோளில் தட்டிக் கொடுத்து "அதெல்லாம் ரொம்ப வருஷப் பழக்கம் சரவணன்.. ஓடிப் பழகிருச்சு இந்த உடம்பு.. எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கும்" என்றார்..!

அது மந்திர தந்திரம் சார்ந்த சீரியல் என்பதால் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் ஷூட்டிங். எவ்வளவு லேட்டானாலும் காலையில் மீண்டும் ஷூட்டிங் என்றால் உடனேயே வந்து நிற்பார். ஆனால் நான் மட்டம் போட்டுவிடுவேன். மறுநாள் கிண்டலாகவே கேட்பார்.. "முந்தா நாள் நைட்டு ரொம்ப நேரம் நடிச்சீங்க போலிருக்கு.. நேத்து ஆளைக் காணோமே.." என்பார்.. அப்படியே மழுப்பலோடு சிரிக்கத்தான் முடியும் என்னால்..!

"சினிமாக்குள்ள வந்துட்டா பசி, தூக்கம் இதையெல்லாம் மறந்திரணும்.. இல்லைன்னா இங்க குப்பை கொட்டவே முடியாது.." என்பார். சிறிய ஷாட் பிரேக் என்றாலும் அவருடைய உதட்டில் சிகரெட் புகையத் துவங்கிவிடும்.. ஒரு நாளைக்கு பாக்கெட், பாக்கெட்டாக ஊதித் தள்ளினார். கேட்டால் இதற்கும் டிரேட் மார்க்காக சிரிப்பார். "பழகிருச்சு. விட முடியலை.." என்பார்..!

அந்த சீரியலில் அவர் நடித்த நடிப்பையெல்லாம் பார்த்தால் ஒருவேளை சினிமாவில் நடித்திருந்தால் ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக அவர் வந்திருக்கும் வாய்ப்பு இருந்தது என்றே நான் நினைத்தேன்.

சீரியல் ஷூட்டிங் இல்லாத நாட்களில் கதை விவாதம் நடக்கும். அதில்கூட ஆர்வத்துடன் வந்து கலந்து கொள்வார். கூடவே தன்னுடைய உடை, மேக்கப் பற்றி ஷூட்டிங்கிற்கு முன் தினமே அலுவலகம் வந்து எங்களிடம் கேட்டுவிட்டுத்தான் செல்வார்..  சாதாரண தொலைக்காட்சி சீரியல்தானே என்பதைக்கூட நினைக்காமல் அவருடைய இந்த ஆர்வம் என்னை ஆச்சரியப்பட வைத்த ஒன்று..!

சில நாட்களில் நான் அந்த சீரியலில் இருந்து விலகி பிரமிட் சாய்மீராவில் சேர முடிவெடுத்து அவரிடம் விடைபெற்றபோது, "நினைச்சேன். நீங்க ரொம்ப நாள் இங்க தாங்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்.. போயிட்டு வாங்க.. எங்கிருந்தாலும் வாழ்க.." என்று தனது கணீர் குரலில் கை கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

அவரை கடைசியாக கடந்த மே 1-ம் தேதி இசையமைப்பாளர் யூனியனில் நடைபெற்ற பெப்ஸி தொழிலாளர் தின நிகழ்ச்சியில்தான் சந்தித்தேன். "ஐயோ சரவணன்.." என்று வேகமாக கையை நீட்டி இழுத்து அணைத்துக் கொண்டார். "எங்க இருக்கீங்க? எப்படி இருக்கீங்க?" என்றெல்லாம் விசாரித்தவர் என்னுடைய தற்போதைய நிலையைச் சொன்னவுடன் கொஞ்சம் கோபப்பட்டார்.

"எங்களையெல்லாம் பார்த்து கத்துக்க வேணாமா.. எது தப்பு.. எது சரின்னு..? இத்தனை வயசாகியும் உங்களோட லைனை இன்னமும் முடிவு செய்யலைன்னா எப்படி? பேசாம நீங்க மீடியால பத்திரிகை சைட்லயே போங்க.. டிவியும், சினிமாவும் வேண்டாம். உங்களுக்கு ஒத்து வராது.. விட்ருங்க.. ஏன் உள்ள இருந்து அவதிப்படுறீங்க..?" என்றவர் பத்து நிமிடங்கள் என்னுடன் பேசி முடிப்பதற்குள் ஐந்து சிகரெட்டுகளை காலி செய்திருந்தார்.

சில சீரியல்களில் அண்ணனை பார்த்தவுடன் சரி நடிப்பிலாவது மிளிரட்டும்.. என்று நினைத்திருந்தேன். இத்தனை சின்ன வயதில் சாவு கொள்ளை கொண்டு போகும் என்று நானும் நினைக்கவில்லை..!

கடந்த சில மாதங்களாகவே அவருடைய உடல் மெலிந்தபடியே இருந்தது. ஏவி.எம். தயாரிக்கும் சீரியலில் நடித்து வந்ததால் அவருடைய உடல் நலனில் தனி அக்கறை எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியிருந்தார்கள். சீரியலில் தோன்றும்போது வாராவாரம் அவருடைய உடல் மெலியத் தொடங்க ஒரு மாதிரியாகவே இருந்ததாக டிவி வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

மிக மோசமான நிலைமைக்குச் சென்று சிகிச்சையளித்தும், மேற்கொண்டு செலவழிக்க பணமில்லாததால் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்கள். இதுதான் காலத்தின் கொடுமை. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணனின் முயற்சியால் இரவோடு இரவாக ராயப்பேட்டை அரசுப் பொது மருத்துவமனையில் சேர்ப்பிக்கட்டு அவர் புண்ணியத்தில் இன்னும் இரண்டு நாட்கள் கூடுதலாக வாழ்ந்ததாகக் கணக்குக் காட்டிவிட்டுப் போய்ச் சேர்ந்துவிட்டார்.

பல கலைஞர்களின் புகழ் அவர்கள் இறந்த பின்புதான் தெரியும் என்பார்கள்..! அதில் அண்ணன் சந்திரபோஸும் ஒன்று.. இப்போதுதான் அவர் இசையமைத்த பாடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படுகின்றன..!

அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் அவருடைய மகன் ஏதோவொரு திரைப்படத்திற்கு இசையமைக்கப் போவதாக பத்திரிகைகளில் படித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கலைஞனுக்கு பெருமை அவனது கலைத்திறமை வாழையடி வாழையாகத் தொடர்வதுதான்..! இதைத் தவிர வேறில்லை..!

இந்தப் பாக்கியமாவது அவருக்குக் கிடைத்திருக்கலாமே என்று இப்போதும் தோன்றுகிறது..!

சாவின் கொடுமையே இதுதான்..!

புகைப்பட உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

43 comments:

  1. vada enakkuththaan, kanneer varugirathu irukkumbothu yaarukku orththanin arumai therivathilla

    ReplyDelete
  2. அவர் இசையமைத்த படங்கள் குறைவென்றாலும் அவரின் பாடல்களில் ஒரு தனித்தன்மை இருக்கும். அவரின் நடிப்பையும் பார்த்து ரசித்திருக்கிறேன்!

    ReplyDelete
  3. துளியும் ஆர்வமில்லாத தமிழ்த் திரைப்பட உலக நிகழ்ச்சி என்றாலும்,பின்னூட்டம் எழுதுவது, சந்திரபோஸும் நானும் பக்கத்துத் தெருக்காரர்கள் - 70 களில், சீர்காழியில் என்பதால்.

    அவருடைய தாயார் அல்லது தாயாரின் சகோதரி “சீர்காழி ஆர். கமலம்” 40 களில் புகழ்பெற்ற பாடகர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன். பெரிய வீடு அவர்களுக்கு இருந்து பின்னர் கை நழுவியது. 70 களில் போஸின் குடும்பம் குடிசை வீட்டில் வசித்தது.

    அவருடைய அண்ணன் மகன்கள் என் நண்பர்கள். நிறைய பீடி குடிப்பார் போஸ் ஞாபகமுள்ளது.

    குடி குடியை கெடுக்கும் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் அவர் வாழ்க்கை.

    ReplyDelete
  4. உங்கள் பதிவைப் படிக்கும்வரை "மாம்பூவே" பாடல் இளையராஜா என்றுதான் நான் நினைத்திருந்தேன். எவ்வளவோ திறமைகள் இருந்தாலும் நேரம் அதிருஷ்டம் எல்லாம் துணை இல்லாமல் சாதிக்க முடியாது போலும். திரைப் பாடல்களை ரசிக்காத என் அப்பா கூட மனிதன் பாடலை விரும்பிக் கேட்பார். நான் சீரியல்கள் பார்ப்பதில்லை. அவர் நடித்தார் என்பதும் உங்கள் பதிவு பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  5. [[[பித்தன் said...
    vada enakkuththaan, kanneer varugirathu irukkumbothu yaarukku orththanin arumai therivathilla.]]]

    இறப்புக்கு அஞ்சலி செலுத்தக் கூட முக்கிய நபர்கள் வரவில்லையே என்று அவரது குடும்பத்தினர் வருந்துகிறார்களாம்..! இதுதான் சினிமாவுலகம்..!

    ReplyDelete
  6. [[[எஸ்.கே said...
    அவர் இசையமைத்த படங்கள் குறைவென்றாலும் அவரின் பாடல்களில் ஒரு தனித்தன்மை இருக்கும். அவரின் நடிப்பையும் பார்த்து ரசித்திருக்கிறேன்!]]]

    நிச்சயமாக.. மாம்பூவே மைனாவே பாடலும் காக்கிச் சட்டை போட்ட மச்சானும் தனித்தன்மை வாய்ந்தவைதான்..!

    ReplyDelete
  7. [[[Vassan said...

    துளியும் ஆர்வமில்லாத தமிழ்த் திரைப்பட உலக நிகழ்ச்சி என்றாலும், பின்னூட்டம் எழுதுவது, சந்திரபோஸும் நானும் பக்கத்துத் தெருக்காரர்கள் - 70 களில், சீர்காழியில் என்பதால்.

    அவருடைய தாயார் அல்லது தாயாரின் சகோதரி “சீர்காழி ஆர். கமலம்” 40-களில் புகழ் பெற்ற பாடகர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன். பெரிய வீடு அவர்களுக்கு இருந்து பின்னர் கை நழுவியது. 70-களில் போஸின் குடும்பம் குடிசை வீட்டில் வசித்தது.

    அவருடைய அண்ணன் மகன்கள் என் நண்பர்கள். நிறைய பீடி குடிப்பார் போஸ் ஞாபகமுள்ளது.

    குடி குடியை கெடுக்கும் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் அவர் வாழ்க்கை.]]]

    ச்சே.. வருத்தமாக உள்ளது..! கஷ்டப்பட்ட நிலையில் இருந்து முன்னேறியவர்களும் சில நேரங்களில் பழைய நிலைமைக்குச் செல்ல வேண்டிய சூழலுக்குத் தங்களைத் தாங்களே செலுத்திக் கொள்கிறார்களே..

    இதுதான் ரொம்பவே வருத்தமடைய வைக்கிறது வாஸன் ஸார்..!

    ReplyDelete
  8. [[[ஸ்ரீராம். said...

    உங்கள் பதிவைப் படிக்கும்வரை "மாம்பூவே" பாடல் இளையராஜா என்றுதான் நான் நினைத்திருந்தேன். எவ்வளவோ திறமைகள் இருந்தாலும் நேரம் அதிருஷ்டம் எல்லாம் துணை இல்லாமல் சாதிக்க முடியாது போலும். திரைப் பாடல்களை ரசிக்காத என் அப்பா கூட மனிதன் பாடலை விரும்பிக் கேட்பார். நான் சீரியல்கள் பார்ப்பதில்லை. அவர் நடித்தார் என்பதும் உங்கள் பதிவு பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.]]]

    இப்படித்தான் எல்லாரும் நினைத்துக் கொள்கிறார்கள்..!

    இப்பவும் சங்கர்கணேஷின் பல பாடல்களைக் கேட்கும்போது அது இளையராஜா என்பார்கள்..!

    ஆனால் இளையராஜாவின் பாடல்களை வேறொரு இசையமைப்பாளர் இசையமைத்தது என்று மட்டும் சொல்ல மனசு முன் வராது.. இதுதான் இசைஞானியின் பலம்..!

    ReplyDelete
  9. ”மனதோடு மனோ”ஜெயா டிவியில் அவரின் எளிமையான பேச்சு என்னைக் கவர்ந்தது. அதில்தான் 'பொய்யின்றி மெய்யோடு” பாட்டு தன் கம்போசிங் என்று சொன்னார்.இன்ப அதிர்ச்சி.


    இவரின் ஸ்பெஷல் சிம்பிள் டியூன்.எனக்குப்பிடித்த இசையமைப்பாளர்.

    ReplyDelete
  10. வணிகமயமாகிவிட்ட தொலைக்காட்சிகளும்,பண்பலை வானொலிகளும்,சந்திரபோசுக்கு சரியான அளவுக்கு அஞ்சலி செலுத்தவில்லை;அந்தக் குறையைப் போக்கிவிட்டீர்கள்.சந்திரபோசைப்பற்றிய ஏராளமான தகவல்களைத் தந்துள்ளது பாராட்டுக்குரியது.`ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை`யில்தான் அவரது பெயர் அறிமுகமானது.பழைய ரிக்கார்டுகளிலும்,இலங்கை வானொலியிலும் அந்தப் பாடலைக் கேட்ட நினைவு இன்னும் அப்படியே இருக்கிறது.சந்திரபோசும் மனதிற்குள்ளே இருப்பார்.

    ReplyDelete
  11. சந்திரபோஸ் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன்,குடிப்பழக்கம்,சிகரெட் பழக்கம் ஒரு நல்ல கலைஞனை அழித்து விட்டது கண்டு மிக வருத்தம்.

    ReplyDelete
  12. //
    குடி குடியை கெடுக்கும் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் அவர் வாழ்க்கை.

    Read more: http://truetamilans.blogspot.com/2010/10/blog-post_02.html#ixzz11CbxtEZJ//

    :( :(

    ReplyDelete
  13. சந்திரபோஸ் அவர்களின் இசையில் எனக்கு மிக பிடித்த பாடல் தாய் மேல் ஆணை படத்தில் இடம் பெற்ற "மல்லிகைப்பூ பூத்திருக்கு. அது மழையில நனைஞ்சிருக்கு"
    பாடல். அவருடைய குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.

    ReplyDelete
  14. Hi TT,
    my heart felt condolences to chandra bose family.
    The way you narrated in the first para took me to nostalgia.I studied in St.Mary's till 10th then later on shifted to MSP Solai Nadar for +2.You brought back my old memories!

    ReplyDelete
  15. [[[கே.ரவிஷங்கர் said...

    ”மனதோடு மனோ” ஜெயா டிவியில் அவரின் எளிமையான பேச்சு என்னைக் கவர்ந்தது. அதில்தான் 'பொய்யின்றி மெய்யோடு” பாட்டு தன் கம்போசிங் என்று சொன்னார். இன்ப அதிர்ச்சி.]]]

    எனக்கும்தான் ஸார்..! அது இயக்குநர் தசரதன் எழுதிய பாடல்..! அது மட்டும்தான் எனக்குத் தெரியும்..!

    ReplyDelete
  16. [[[மணிமகன் said...
    வணிகமயமாகிவிட்ட தொலைக்காட்சிகளும், பண்பலை வானொலிகளும், சந்திரபோசுக்கு சரியான அளவுக்கு அஞ்சலி செலுத்தவில்லை; அந்தக் குறையைப் போக்கி விட்டீர்கள். சந்திரபோசைப் பற்றிய ஏராளமான தகவல்களைத் தந்துள்ளது பாராட்டுக்குரியது. `ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை`யில்தான் அவரது பெயர் அறிமுகமானது. பழைய ரிக்கார்டுகளிலும், இலங்கை வானொலியிலும் அந்தப் பாடலைக் கேட்ட நினைவு இன்னும் அப்படியே இருக்கிறது. சந்திரபோசும் மனதிற்குள்ளே இருப்பார்.]]]

    ஆமாம்.. எனக்கும் ஞாபகமிருக்கிறது..! ஏண்டி முத்தம்மா பாடல் தினமும் மாலை நேரங்களில் இலங்கை வானொலியில் ஒலிக்கும். ஆனால் சமீப காலத்தில் அந்தப் பாடலை நான் கேட்காததால் நினைவுக்கு வராமல் இருந்தது.. இந்த இறப்பின்போதுதான் நினைவுக்கு வருகிறது.. இன்னுமொரு சோகம்..!

    ReplyDelete
  17. [[[ஸ்ரீநாராயணன் said...

    See this, http://www.youtube.com/watch?v=YuD6rPlw2ds]]]

    தகவலுக்கு மிக்க நன்றி ஸார்..!

    ReplyDelete
  18. [[[asiya omar said...
    சந்திரபோஸ் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன், குடிப் பழக்கம், சிகரெட் பழக்கம் ஒரு நல்ல கலைஞனை அழித்துவிட்டது கண்டு மிக வருத்தம்.]]]

    எனக்கும்தான்.. எத்தனையோ உதாரணங்களை தினம், தினம் இந்த உலகம் கண்டு கொண்டுதான் வருகிறது. ஆனாலும் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே.. என்ன செய்வது..?

    ReplyDelete
  19. ரமேஷ் ரொம்ப நல்லவன்...

    டாக்டர் புருனோ..

    வருத்தங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  20. [[[ரஹீம் கஸாலி said...
    சந்திரபோஸ் அவர்களின் இசையில் எனக்கு மிக பிடித்த பாடல் தாய் மேல் ஆணை படத்தில் இடம் பெற்ற "மல்லிகைப் பூ பூத்திருக்கு. அது மழையில நனைஞ்சிருக்கு" பாடல். அவருடைய குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.]]]

    நான் இதுவரையில் கேட்டதில்லை நண்பரே.. இனிமேல் கேட்கிறேன்.. தகவலுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  21. [[[San said...

    Hi TT,

    my heart felt condolences to chandrabose family.

    The way you narrated in the first para took me to nostalgia. I studied in St.Mary's till 10th then later on shifted to MSP Solai Nadar for +2.You brought back my old memories!]]]

    நன்றி சன்..

    நானும் உங்களை மாதிரியேதான்.. பத்தாம் வகுப்பு வரையிலும் செயிண்ட் மேரீஸ்தான்.. பிளஸ் ஒன் வகுப்பிற்கு எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில் சேர்த்தார்கள்..!

    எந்த வருடம் என்பதைத் தெரிவிக்க முடியுமா..? நான் செயிண்ட் மேரீஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த வருடம் 1985.

    ReplyDelete
  22. உங்க மேல அவரு காட்டிய அன்பு நெகிழ வைத்த்து..
    இளையராஜாவுக்கு மாற்றாக ஒரு காலத்தில் இருந்த அவரை திரையுலகும் , மக்களும் மறந்த்த்து , நம் கண் முன் நிகழ்ந்த வரலாற்று கொடுமை..
    இளையராஜவால் ஒதுக்கப்பட்ட வைரமுத்து, சந்திரபோஸ் மூலம்தான் பல நல்ல பாடல்கள் தர முடிந்த்து என்பது வர்லாறு..

    ReplyDelete
  23. [[[பார்வையாளன் said...
    உங்க மேல அவரு காட்டிய அன்பு நெகிழ வைத்த்து. இளையராஜாவுக்கு மாற்றாக ஒரு காலத்தில் இருந்த அவரை திரையுலகும், மக்களும் மறந்த்த்து, நம் கண் முன் நிகழ்ந்த வரலாற்று கொடுமை. இளையராஜவால் ஒதுக்கப்பட்ட வைரமுத்து, சந்திரபோஸ் மூலம்தான் பல நல்ல பாடல்கள் தர முடிந்த்து என்பது வர்லாறு.]]]

    இதற்கு ஒரு வகையில் சந்திரபோஸே காரணம் என்றும் சொல்லலாம்..! யாரையும் தேடிப் போய் வாய்ப்பு கேட்காதவராக இருந்துவிட்டதும் இதற்கு ஒரு காரணம்..!

    ReplyDelete
  24. [[[SurveySan said...
    hm :(]]]

    ஓ.. சர்வேசன் ஸாரோ..? ஸாரு செளக்கியமோ..? நன்றி வந்ததுக்கு..!

    ReplyDelete
  25. சந்திரபோஸ் அவர்களை பற்றி விரிவாக நிறைய தகவல்களுடன் எழுதி உள்ளீர்கள்...

    திரைத்துறையில் ஏதாவதொரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி சிறிய வயதிலேயே வாழ்வை தொலைத்தவர்கள் பட்டியலில் இவரும் ஒருவராகி விட்டார்..

    இளையராஜா கொடி கட்டி பறந்த காலத்தில், இவர் ஏராளமான ஹிட் பாடல்கள் தந்துள்ளார்...

    ReplyDelete
  26. Hi TT,
    I finished my 10th in 1982 in St.Marys and my class teacher was Mr.Robert who took both English and Maths.
    Fr.Michael Raj was the Headmaster then.
    I can still remember few teachers like germanappan,Saxraj.
    Hope you remember them.

    ReplyDelete
  27. [[[R.Gopi said...

    சந்திரபோஸ் அவர்களை பற்றி விரிவாக நிறைய தகவல்களுடன் எழுதி உள்ளீர்கள்...

    திரைத்துறையில் ஏதாவதொரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி சிறிய வயதிலேயே வாழ்வை தொலைத்தவர்கள் பட்டியலில் இவரும் ஒருவராகிவிட்டார்.

    இளையராஜா கொடி கட்டி பறந்த காலத்தில், இவர் ஏராளமான ஹிட் பாடல்கள் தந்துள்ளார்.]]]

    சிறந்த நடிகராகவும் தனது இரண்டாவது இன்னிங்ஸை கலையுலகத்தில் துவக்கிய வேகத்தில் வாழ்க்கையை முடித்து வைத்த முருகனை வையத்தான் தோன்றுகிறது கோபி..!

    ReplyDelete
  28. [[[San said...

    Hi TT, I finished my 10th in 1982 in St.Marys and my class teacher was Mr.Robert who took both English and Maths. Fr.Michael Raj was the Headmaster then. I can still remember few teachers like germanappan, Saxraj. Hope you remember them.]]]

    ஸார்.. நமக்குள் ஒரு ஒற்றுமை.. எனக்கும் ராபர்ட் ஸார்தான் வகுப்பாசிரியர்..!

    பாதர் மைக்கேல்ராஜ் நினைவு கூர்கிறேன்..!

    நன்றி..!

    ReplyDelete
  29. நெகிழ்ச்சியான கட்டுரை சரவணன்.ராஜா சின்ன ரோஜா பாட்டு வெளிவந்த காலத்தில் எங்களுக்கு அவர்தான் ஏ.ஆர்.ரகுமான்.குடி என்பது எப்படி பட்டவரையும் சாய்த்து விடும் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம்.

    ReplyDelete
  30. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் என்ற சூப்பர் ஸ்டாரைப் பற்றிய மிகப் பிரபலமான பாடலுக்கு இசையமைத்த சந்திரபோஸ் அவர்களுக்கு அந்த சூப்பர் நட்சத்திரம் அஞ்சலி செலுத்தியதாக ஏதேனும் தகவல் உண்டா ?

    ReplyDelete
  31. இப்போதும் F.M ல் இரவில் தவறாது ஒலிக்கும் பாடல் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’ - அண்ணா நகர் முதல் தெரு, பலர் இதை இசைஞானியின் பாடல் என்று நினைக்கிறார்கள்.

    அன்னாருக்கு எனது அஞ்சலி

    ReplyDelete
  32. [[[Rafeek said...
    நெகிழ்ச்சியான கட்டுரை சரவணன். ராஜா சின்ன ரோஜா பாட்டு வெளிவந்த காலத்தில் எங்களுக்கு அவர்தான் ஏ.ஆர்.ரகுமான்.]]]

    உண்மைதான்.. அந்த ஒரு பாட்டிலேயே அவர் மீது மிகுந்த மரியாதையும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது..!

    பின்பும் பாட்டி சொல்லைத் தட்டாதே வரையிலும் நல்ல பாடல்களைத்தான் கொடுத்திருக்கிறார். அதன் பின்புதான் என்ன ஆனதோ..?

    ReplyDelete
  33. [[[kavi said...
    சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் என்ற சூப்பர் ஸ்டாரைப் பற்றிய மிகப் பிரபலமான பாடலுக்கு இசையமைத்த சந்திரபோஸ் அவர்களுக்கு அந்த சூப்பர் நட்சத்திரம் அஞ்சலி செலுத்தியதாக ஏதேனும் தகவல் உண்டா ?]]]

    ரஜினி வரவில்லை. இது இப்போது சினிமாவுலகத்தில் பரபரப்பான பேச்சாகவும் இருக்கிறது. முரளியின் மரணத்திற்குச் சென்றவர், இங்கே வந்திருக்க வேண்டாமா என்பது சினிமாவுலகத்தினரின் அங்கலாய்ப்பு..!

    ReplyDelete
  34. [[[பரிதி நிலவன் said...
    இப்போதும் F.M ல் இரவில் தவறாது ஒலிக்கும் பாடல் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’ - அண்ணா நகர் முதல் தெரு, பலர் இதை இசைஞானியின் பாடல் என்று நினைக்கிறார்கள்.]]]

    நானும்தான் பரிதி..! இப்போதுதான் கேள்விப்பட்டேன்..! ரொம்பவே வருத்தமாக உள்ளது..!

    ReplyDelete
  35. சொல்ல மறந்துட்டேன். ரொம்ப உபயோகமான தகவல்கள். உங்க பதிவை பார்த்ததும் நான் போட்டது இங்கே:
    http://surveysan.blogspot.com/2010/10/blog-post_03.html

    ReplyDelete
  36. சாவின் கொடுமையே இதுதான்..!
    mrknaughty

    ReplyDelete
  37. [[[SurveySan said...

    சொல்ல மறந்துட்டேன். ரொம்ப உபயோகமான தகவல்கள். உங்க பதிவை பார்த்ததும் நான் போட்டது இங்கே:

    http://surveysan.blogspot.com/2010/10/blog-post_03.html]]]

    பார்த்தேன் சர்வேசன் ஸார்.. லின்க் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள்..!

    ReplyDelete
  38. [[[mrknaughty said...
    சாவின் கொடுமையே இதுதான்..!
    mrknaughty]]]

    இந்தச் சாவிற்கும் ஒரு நாள் சாவு வந்திடாதா..?!!!

    ReplyDelete
  39. 'ரவிவர்மன் எழுதாத கலையோ ' என்று ஒரு பாடல் திரு ஜேசுதாஸ் அவர்கள் பாடியது இதற்கு இசை திரு சந்திரபோஸ் என்று நினேகிரன் திரு உண்மை தமிழான் அவர்களுக்கு
    உண்மையிலே உங்கள் கட்டுரை மிகவும் அருமை . ச.ச.சந்திரன் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையும் அருமை. நானும் சிறுது காலம் திரை துறையில் பணியாற்றிவிட்டு அதில் இருந்து வெளி வந்து விட்டேன் உங்கள் தொடர்பு எண் தெரிய படித்தினால் தொடர்பு கொள்வேன்

    என்றும் அன்புடன்

    கிருஷ்ணா

    ReplyDelete
  40. [[[gkrishna said...

    'ரவிவர்மன் எழுதாத கலையோ ' என்று ஒரு பாடல் திரு ஜேசுதாஸ் அவர்கள் பாடியது இதற்கு இசை திரு சந்திரபோஸ் என்று நினேகிரன் திரு உண்மை தமிழான் அவர்களுக்கு
    உண்மையிலே உங்கள் கட்டுரை மிகவும் அருமை . ச.ச.சந்திரன் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையும் அருமை. நானும் சிறுது காலம் திரை துறையில் பணியாற்றிவிட்டு அதில் இருந்து வெளி வந்து விட்டேன் உங்கள் தொடர்பு எண் தெரிய படித்தினால் தொடர்பு கொள்வேன்

    என்றும் அன்புடன்

    கிருஷ்ணா]]]

    நன்றிகள் கிருஷ்ணா.. எந்தத் துறையில் இருந்தீர்கள்..? அதையும் தெரிவித்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்..!

    ReplyDelete