Pages

Thursday, July 22, 2010

பதிவுலகத் தோழர் சவுக்கு கைது..! எனது கண்டனங்கள்..!

22-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று மாலைதான் அந்தக் கொடுமையான செய்தியைக் கேள்விப்பட்டேன்..

நானும் ஒரு எழுத்தாளன்.. நானும் ஒரு பத்திரிகையாளன்.. நானும் ஒரு படைப்பாளி என்று மேடைக்கு மேடை ஒப்பாரி வைக்கும் உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவனின் ஆட்சியின் இன்னொரு லட்சணம் இன்றைக்கு அரங்கேறியிருக்கிறது.


http://savukku.net என்கிற தளத்தை நான் துவக்க நாளில் இருந்தே படித்து வருகிறேன். அதில் வருகின்ற, வந்திருக்கின்ற கட்டுரைகளையெல்லாம் வாசித்தபோது நிச்சயம் மிகப் பெரும் சோர்ஸ்ஸை வைத்துத்தான் இதனை எழுதுகிறார்கள். துறை சம்பந்தப்பட்ட நபர்கள், உண்மையான செய்தியைத்தான் நமக்கு விவரமாக அளிக்கிறார்கள் என்பது புரிந்தது..!

மிகப் பிரபலமான பத்திரிகைகளே எழுதத் தயங்கும் விஷயங்களையெல்லாம் மிகச் சாதாரணமாக எழுதித் தள்ளியதைக் கண்டு இன்னமும் எனக்கு ஆச்சரியம்தான்..!

மிகச் சமீபத்தில் நக்கீரன் இதழின் இணையாசிரியர் காமராஜை சம்பந்தப்படுத்தி சவுக்கு எழுதியிருந்த கட்டுரையும், அதனைத் தொடர்ந்து தான் எந்த நேரத்திலும் இதற்காகக் கைது செய்யப்படலாம் என்று எழுதியிருந்த கட்டுரையும் நக்கீரனில் இப்போது கோபாலண்ணே எழுதி வரும் வீரப்பன் வேட்டை கதைக்கு நிகரானதாக இருந்தது..

அப்போதும் நான் நினைக்கவில்லை. இப்படி கைது அளவுக்குச் செல்வார்கள் என்று..!

இப்போது இந்தக் கைதுக்குப் பின்புதான் மறுபடியும் சவுக்கிற்குள் நுழைந்து பார்த்தால் வெளி வந்திருக்கும் கட்டுரை நிச்சயம் போலீஸ் கிளப்பையே ஆட்டம் காண வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை..!

சக்தி வாய்ந்த போலீஸ் புள்ளிகளான சங்கர் ஜிவால், ஜாபர் சேட் இவர்களுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் இந்த மூவரைப் பற்றியுமான அந்தக் கட்டுரை மிக ஆச்சரியமும், அதிர்ச்சியமானதாகும்..!

நெருக்கடி நிலை காலத்தில்கூட பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அவர்களது கட்சித் தொண்டர்களைவிடவும் அதிகம் கை கொடுத்தவர்கள் இந்திய பத்திரிகையாளர்கள்தான். அதிலும் தமிழக பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும் எந்த அளவுக்கு இந்திராவையும், நெருக்கடி நிலை கொடுமைகளையும் எதிர்த்து அஞ்சாமல் போராடின என்பது வரலாறு..

இப்போது அதுவெல்லாம் வெற்று பேப்பர்களாகிவிட்டது. பணம், புகழ், அந்தஸ்து இவற்றுக்காக பத்திரிகையாளர்களும், போலீஸும், அரசியல்வாதிகளும் மும்முனைக் கூட்டணி அமைத்து எந்த அளவுக்கு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதற்கு சவுக்கின் அந்தக் கட்டுரையே சான்று..!

சில மாதங்களுக்கு முன்புதான் வீட்டு வசதி வாரிய வீடுகளை தனது சொந்தக்காரர்களுக்கு வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் சிக்கி பொதுப்பணித்துறையை இழந்தார் துரைமுருகன். அப்போதே வீட்டு வசதி வாரிய வீடுகளையும், நிலங்களையும் யார், யாருக்கெல்லாம் பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்கள் என்று பத்திரிகைகள் தோண்டித் துருவிக் கொண்டிருந்தன.

அவர்களுடைய பத்திரிகையில் வேலை செய்பவர்கள், சேனலில் வேலை செய்பவர்கள், சேனலில் நியூஸ் வாசிப்பவர்கள், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து கலைஞருக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவர்கள் என்று பலரும் சமூக சேவகர்கள் என்கிற போர்வையில் பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை சகாய விலையில், கூடுதல் தவணையில் அள்ளிக் கொண்டதாக இதே நக்கீரன்தான் எழுதியிருந்தது.

இப்போது இதன் இணை ஆசிரியரே இப்படியொரு கோல்மால் வேலையில் சிக்கியிருக்கிறார் என்பது அதிர்ச்சியானதுதான். ஆனால் இது அவர்களே விரும்பி ஏற்றுக் கொண்டது என்பதால் நீங்களும், நானும் கேள்வி கேட்காமல் பத்திரிகா தர்மத்தின் சார்பில் வாயை மூடிக் கொள்ள வேண்டுமா..!?

ஒரு கோடி ரூபாய் பணம் என்பது போலீஸ் அதிகாரிகளுக்குக்கூட பரவாயில்லை. ஏதோ ஒரு வகையில் வந்திருக்கும் என்று எண்ணலாம்.. ஆனால் ஒரு பத்திரிகையின் இணை ஆசிரியரே கோடீஸ்வரர் என்றால் எப்படி..?

இதோடு சவுக்கு தளத்துடன் தொடர்புடைய  http://padaipu.blogspot.com/ என்ற தளத்தில் இருக்கின்ற கட்டுரைகளையும் ஒரு சேர வாசிக்கின்றபோது இது நிச்சயம் காவல்துறையைச் சேர்ந்தவரால்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.. அது இந்த சங்கராக இருக்குமென்று நான் நினைக்கவில்லை..!

சங்கர்,  தமிழகக் காவல்துறையில் மிகச் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் குற்றவாளி என்று இன்னமும் எந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்கவில்லை. கட்டற்ற சுதந்திரமான இணையவெளியில் தனக்கென ஒரு வலைத்தளத்தை நிர்மாணித்துக் கொண்டு மக்கள் நலப் பணியின் முதலிடமான காவல்துறையைப் பற்றிய தனது கருத்துக்களை முன் வைக்கிறார்.

இது தவறெனில் காவல்துறை அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கலாம். யாரும் எதுவும் சொல்ல முடியாது..! வழக்குத் தொடரலாம்.. கைது செய்யலாம்.. ஆனால் கைதுக்கான காரணத்தை மிகச் சரியாகச் சொல்ல வேண்டும்..!

அவதூறு வழக்கு எனில் எவ்வாறு அவதூறு நேர்ந்தது? அதில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் உண்மையா? பொய்யா..? என்பதையெல்லாம் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் நடந்திருப்பது என்ன..? நேற்று காலையில் சங்கரின் வீடு இருக்கின்ற ஏரியாவான மதுரவாயலில் ஒரு வழிப்பறியில் ஈடுபட்டதாகச் சொல்லி இதற்காக ஜாமீனின் வெளிவர முடியாத பிரிவில் அவர் மீது வழக்கைப் பதிவு செய்து உடனடியாக பத்திரிகையாளர்களிடம்கூட காட்டாமல் அவரை ரிமாண்ட் செய்திருக்கிறது காவல்துறை.

இந்த போலியான குற்றச்சாட்டும், அவசரமான கைதுமே காவல்துறையின் நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது..!

சங்கர் எழுதியதில் தவறு இருக்குமெனில் காவல்துறை சம்பந்தப்பட்ட மூவரிடம் இருந்தும் புகார்களை பெற்று அவதூறு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு அப்பாவிகளை அவ்வப்போது கைது செய்து கணக்குக் காண்பிப்பதைப் போல சங்கர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவல்துறையினருக்கு சங்கரின் குற்றச்சாட்டை ஏற்பதில் என்ன தயக்கம்..? அந்த இடங்களை அவர்கள் நிஜமாகவே வாங்கியிருந்தால் வாங்கியதற்கான ஆதாரங்களையும், வாங்குவதற்காக தாங்கள் கொடுத்த பணம் வந்த வழியையும் காட்டினாலே போதுமே.. சங்கர் மீது அவதூறு வழக்கு உறுதியாகுமே..?

ஏன் செய்யவில்லை காவல்துறை..? இது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றும் நோக்கிலும், இனி அவர்களைப் பற்றி சங்கர் எழுதவே கூடாது என்கிற பயமுறுத்தலாகவும்தான் எனக்குத் தெரிகிறது..!

எழுத்துரிமை, பேச்சுரிமை இந்த இரண்டையும் வைத்துத்தான் பத்திரிகையுலகமே இருக்கிறது..! இந்த இரண்டுக்குமே வாய்ப்பூட்டு போடும்வகையில் காவல்துறையினர் நடந்து கொண்டிருக்கும்விதத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

உடனேயே சந்திக்க முடிகிறது.. பேச முடிகிறது.. உடனுக்குடன் சலுகைகளை பெற முடிகிறது என்கிற ஒரே காரணத்துக்காக  பலம் வாய்ந்த பத்திரிகைகளும், புகழ் வாய்ந்த பத்திரிகையாளர்களும்  இன்றைய ஆட்சிக்கு கூஜா தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். இதுவே அவர்களுக்கு என்று வந்திருந்தால் உடனேயே ஐயையோ என்றிருப்பார்கள்.

இந்தச் செய்தி இன்றைய நம் தினமதி என்கிற ஒரேயொரு செய்தித்தாளில் ம்டடுமே வெளி வந்திருக்கிறது என்பது மகா கொடுமை..

இதே நேரத்தில் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில் விலை உயர்ந்த கிராணைட் கற்கள் விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்டு வருவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று தினபூமி செய்தித்தாளில் செய்தி வெளியிட்டதற்காக கடந்த 20-ந் தேதி அன்று நள்ளிரவில் மதுரை போலீஸார் அந்த நாளிதழின் ஆசிரியர் மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது எப்படி இருக்கு..? உண்மையைச் சொனனால் கைதாம்..! ஏன் இது போல மற்ற ஆசிரியர்களையும் கைது செய்து மொத்தமாக உள்ளே தள்ளிவிட்டு ஜாம், ஜாம்மென்று இருக்க வேண்டியதுதானே.. அதென்ன? இதில்கூட ஆள் பார்த்து, தராதரம் பார்த்து, செல்வாக்கை பார்த்து கைது செய்வது..?

வாரந்தோறும்தான் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், தமிழக அரசியலில் குற்றச்சாட்டுகளும் ஊழல் பிரச்சனைகளும் எழுப்பட்டு வருகிறது. போய் பிடிக்க வேண்டியதுதானே..? சென்னை என்று வந்தால் பிரச்சினை.. ஆங்கில சேனல்கள் இதனை அகில இந்திய அளவுக்கு கொண்டு போய் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிவிடுவார்கள் என்பதால் மதுரையில் மட்டும் கைது செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது..!

இந்தப் பத்திரிகையுலகமும் இப்போது இரண்டுபட்டுக் கிடக்கிறது. சினிமாவுலகம் மாதிரியே கொடுக்கின்ற சலுகைகளுக்காக கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்று சில பத்திரிகை சங்கங்கள் மவுனம் சாதிப்பது அரசின் இந்தச் செயலைவிட மிகக் கொடூரமானது..!

ஆக மொத்தத்தில்.. அரசியல் என்கிற ஐந்தெழுத்து வார்த்தையை அத்தனை நிர்வாகிகளும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் உண்மை..! 

மிகச் சமீபத்தில் சீமானை கைது செய்தபோது நடந்த களேபரத்தில்  பத்திரிகையாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டார்கள். ஆனால் இந்தச் செய்தியை தமிழின் முதன்மையான சேனலான சன் டிவியும், கலைஞர் டிவியும் ஒளிபரப்பவே இல்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சன் டிவியின் நிருபரை கைது செய்த போது முதல்வரையே மறிக்கின்ற அளவுக்கு பத்திரிகையாளர்களை உசுப்பிவிட்டவர்கள் இவர்கள்தானே..! அடுத்த நாள் சன் டிவி ஊழியர்கள் தாக்கப்பட்டபோது என்னமாய் மேலேயும், கீழேயுமாய் குதித்தார்கள் இந்தப் பத்திரிகை பகலவன்கள்.. இப்போது..? எங்கே இருக்கிறது பத்திரிகை தர்மம்..? பத்திரிகா சுதந்திரம்..? இவர்கள் நிச்சயம் பத்திரிகையாளர்கள் அல்ல.. கார்ப்பரேட் முதலாளிகள்..!

இவர்களின் கையில் பத்திரிகையுலகமும், தொலைக்காட்சி ஊடகங்களும் போய்ச் சேர்ந்தது காலத்தின் கொடுமை.. இது இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை ஜனநாயகம் என்ற பெயரில் காட்டப் போகிறதே தெரியவில்லை..!

“பதிவுலகில் யாரோ ஒருவர்.. எதுக்கோ ஒண்ணுக்கு.. எதுக்கு அந்தாளுக்கு..? கொழுப்புதான..?” என்றெல்லாம் அரசியல் ரீதியாகக் கருதாமல் தயவு செய்து அனைத்துப் பதிவர்களும்  இதனை தங்களுக்கு வருங்காலத்தில் நேரப் போகும் அபாய எச்சரிக்கையாக உணர்ந்து ஒருமித்தக் குரலில் தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்..!

இணைப்பு பதிவுகள் : http://www.vinavu.com/2010/07/22/umashankar-savukku/



http://pongutamilar.blogspot.com/2010/07/blog-post.html


http://vennirairavugal.blogspot.com/2010/07/blog-post_23.html


http://tvpravi.blogspot.com/2010/07/blog-post_23.html

http://kuzhali.blogspot.com/2010/07/blog-post_23.html 

http://www.savukku.net/2010/07/blog-post_26.html#comment-form

40 comments:

  1. இந்த விசயத்தில் தமிழககாவல்துறையை வன்மையாககண்டிக்கிறேன்.

    சவுக்கு சொல்வது சரியென்றால் சம்மந்தப்பட்டவர்களை உள்ளே தள்ளு
    பொய் என்றால் நேர்மையாக அவதூர்வழக்குப்போடு
    இல்லாமல் எப்போதும் போல் பொய் வழக்குப்போடாதே.

    ReplyDelete
  2. பத்திரிக்கையாளர் சங்கம் ஒண்ணுயிருந்ததே அவர்கள் இந்த கொடுமையை கேட்கவில்லையா??

    ReplyDelete
  3. :( :(

    Unmaya ezhuthunathuku namma naatula irukkura mariyadhai :(

    ReplyDelete
  4. காவல் துறைக்கு எனது கண்டனங்கள்...

    ReplyDelete
  5. கைதுக்கு எனது கண்டனங்கள் மற்றும் வருத்தங்கள்.

    அதைப் பற்றி எழுதிய உங்களுக்கு, வினவு தோழருக்கு, பொதிகைச் செல்வன் மற்றும் பலரின் தயிரியத்திற்குப் பாராட்டுக்கள்.

    http://www.savukku.net/2010/07/blog-post_22.html

    ReplyDelete
  6. கண்டனத்துக்குரியது. அரசியல், அதிகார மிரட்டல்கள் நியாயத்தின் குரல்வளையை நெறிபப்து தொடர்கதையாகி வருவது வேதனைக்குரியது.

    ReplyDelete
  7. எனது கண்டனங்களும்! உண்மை சுடும்! எந்த மறுதலிப்பும் இல்லாததால் சவுக்கு தளத்தில் சவுக்கு எழுதியெல்லாம் உண்மை என்று கொள்ளவேண்டியிருக்கிறது!

    +1
    +1

    ReplyDelete
  8. சவுக்கு சங்கரை கைது செய்தது அரசாங்கத்தின் நேர்மையற்ற தன்மையையே காட்டுகிறது.. இந்த அரசுக்கு என் கண்டனங்களை தெரிவிக்கிறேன்...

    ReplyDelete
  9. அரசுக்கும் காவல்துறைக்கும் எனது கடும் கண்டனங்கள்.

    எந்த நாளிதழ்களும் இதைப்பற்றி செய்தி இடாதது மிக கேவலமானது. எச்சை பொறுக்கிங்க என்று மரியாதையாக அவர்களை திட்டுகிறேன்.

    ReplyDelete
  10. அரசுக்கும் காவல்துறைக்கும் எனது கடும் கண்டனங்கள்.

    ReplyDelete
  11. பொறுக்கித்தனமான காவல்துறைக்கும் ... கோழை அரசுக்கும் கண்டனங்கள்....

    ReplyDelete
  12. //அந்த இடங்களை அவர்கள் நிஜமாகவே வாங்கியிருந்தால் வாங்கியதற்கான ஆதாரங்களையும்...//

    நிஜமாகவே = நியாயமாகவே

    என் கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்:(

    ReplyDelete
  13. எழுத்தின் வலிமையைக் கண்டு இவர்கள் அஞ்சுவது தெரிகிறது. கைதுக்கு எனது வன்மையான கண்டனங்கள்.

    jigopi

    ReplyDelete
  14. “பத்திரிக்கை தர்மம்” என்பது அழிந்து பலகாலம் ஆகிறது. “பத்திரிக்கை விபச்சாரமே” தற்போது சிறப்பாக நடைபெறுகிறது.

    தோழர் சவுக்கு கைத்துக் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  15. காவல்துறையின் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன். வலைதளத்தில் இயங்கி வரும் பல்வேறு இயக்கத்தவர்களும், கருத்துரிமை பேச்சுரிமையின் மீது நம்பிக்கை கொண்டவர்களும், அரசியல் வேறுபாடுகளை கடந்து காவல்த்துறையின் இந்த அராஜகத்தை கண்டிக்க வேண்டும்.

    மேலும் சொந்த விருப்பு வெறுப்பில் சில காவல்துறையினர் கொடுத்த செய்திகளை திரு. சங்கர் பதிப்பித்திருக்ககூடும் என்று அவருடைய செயலுக்கு உள்நோக்கம் கற்பித்து சிலர் எழுதுவதும் தேவையற்றது.

    அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை ஒழிக!!

    தோழமையுடன்
    பொடியன்

    ReplyDelete
  16. ஜெ.யின் சர்வாதிகார வழியில் கருணாநிதியும் செல்வது வருத்தமளிக்கிறது.

    ReplyDelete
  17. இந்தியாவில் ஒரு அறிவிக்கப்படாத எம்ர்ஜென்சி நிலவுகிறது என்று அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிற பிண்ணனியில் ஆளும் வர்க்கத்தின் இந்த அராஜகப் போக்கை நாம் புரிந்து கொள்ள வேண்டும், ஆளும்வர்க்கத்திற்கு உண்மையை பேசுகிற அல்லது சமூக உணர்வுள்ள பத்திரிக்கையாளர்களை கண்டால் எரிச்சல் ஏற்படுகிறது என்பதைதான் சமீபத்தில் இந்திய அளவில் பத்திரிக்கையாளர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் வெளிப்படுத்துகிறது.

    இந்த கைது நடவடிக்கையும், தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களும் இந்திய அளவில் கொண்டு செல்லப்படவேண்டும்.

    ReplyDelete
  18. ஆக மொத்தத்தில்.. அரசியல் என்கிற ஐந்தெழுத்து வார்த்தையை அத்தனை நிர்வாகிகளும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.//

    விளம்பர வருமான ஆசை காட்டி அனைத்து பத்திரிகையாளர் வாய்களும் மூடப்படுகின்றன.தினமலரும் தற்போதும் மவுனி ஆவிவிட்டது வட நாட்டு பத்திரிகையாளர்கள் எழுதினால்தால் உண்டு,தமிழக மீடியாவை கரு மேகம் சூழ்ந்து விட்டது.பதிவர் சவுக்கு கைதுக்கு என் கண்டனங்கள்.பிரபல பதிவர்கள் அனைவரும் இதை கண்டித்து பதிவிட வேண்டும்.உண்மைத்தமிழன் என்பதை நிரூபித்து விட்டீர்கள்

    ReplyDelete
  19. இந்த ஆட்சியில் மலிந்துவிட்ட அரசியல் கொள்ளைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும். ஆனால் நம் மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய ஊடகம் எதுவும் கருணாநிதியின் வட்டத்திற்கு வெளியே இல்லாதது துரதிஷ்டவசமானது.

    ReplyDelete
  20. //இது எப்படி இருக்கு..? உண்மையைச் சொனனால் கைதாம்..! ஏன் இது போல மற்ற ஆசிரியர்களையும் கைது செய்து மொத்தமாக உள்ளே தள்ளிவிட்டு ஜாம், ஜாம்மென்று இருக்க வேண்டியதுதானே.. அதென்ன? இதில்கூட ஆள் பார்த்து, தராதரம் பார்த்து, செல்வாக்கை பார்த்து கைது செய்வது..?
    //

    உண்மைத் தமிழன அண்ணாச்சி நீங்க இன்னும் அப்பாவியாத்தான் இருக்கீங்க.

    பாராளுமன்றத்தில் எம்பிக்கள் லஞ்சம் வாங்கியதை அம்பலப்படுத்திய பத்திரிகை, நீதிபதிகள் லஞ்சம் வாங்குவதை அம்பலப்படுத்திய பத்திரிகை இவை இரண்டிலும் இதனை செய்த பத்திரிகைகள்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டனர்.

    மாட்டிக் கொண்ட நீதிபதிகளும், எம்பிக்களும் தத்தமது வளாகங்களில் அவசரக் கூட்டம் போட்டு அது எப்படி நம்மள மாட்டிவிடப் போச்சினு, மாட்டிவிட்டவங்களுக்கு ஆப்பு அடிக்க புதிய சட்டம் கொண்டு வரலாம் என்று விவாதித்தனர்.

    இதுதான் இந்திய ஜனநாயகத்தின் லட்சணம்.

    ReplyDelete
  21. I Strongly condemn Tamilnadu Police.


    -tsekar

    ReplyDelete
  22. காவல்துறைக்கு கண்டனங்கள்..

    தலை போகும் விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நீல படன்ஹ்ளுக்கு நீள விமர்சனம் எழுதும் உண்மை தமிழனக்கும் கண்டனங்கள்

    ReplyDelete
  23. ச‌ரியான‌ ப‌திவு.
    எழுத்து சுத‌ந்திர‌த்தை ம‌திக்கும் ம‌க்க‌ள்,
    குறிப்பாக‌ ப‌திவ‌ர்க‌ள் அன‌வ‌ரும், இத்த‌கு
    நியாய‌ ம‌ற்ற‌ கைதுக‌ளைக் க‌ண்ட‌ன‌ம் செய்ய‌
    வேண்டும். அவ‌தூறு செய்த‌தாய் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்
    உண‌ர்ந்தால், மான‌ ந‌ஷ்ட‌ வ‌ழ‌க்கு தொட‌ருட்டுமே?
    ஜ‌ன‌நாய‌க‌ நாட்டில், ச‌ட்ட‌ம் ஆள‌ட்டும்.

    ReplyDelete
  24. மொதல்ல இந்த தி.மு.க ஆட்சிய தூக்கி எறியணும், இவங்களால் யாருக்கும் உபயோகமில்ல ....... சுத்த காட்டுமிராண்டி செயல்...... சவுக்கின் வாசகர் என்ற முறையில் இதை கண்டிக்கிறேன்...

    ReplyDelete
  25. சவுக்கு சங்கரின் கைது மூலம் சவுக்கு தளத்தின் வரிகள் அத்தனையும் உண்மையென்ற நிலையை காவல்துறை ஏற்படுத்தியிருக்கிறது.

    சங்கரின் கைதை வெளிக்கொண்டு வராத பத்திரிகை,தொலைக்காட்சி ஊடகங்களுக்கு கண்டனங்கள்.பதிவுலகம் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  26. தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகளும், காவல்துறையின் அத்துமீறல்களும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

    ReplyDelete
  27. பின்னூட்டமிட்டு கண்டனங்களைத் தெரிவி்த்த அத்தனை பதிவர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

    தோழர் சவுக்கு அவர்களுக்கெதிராக நடந்திருக்கும் சட்ட விரோத கைது சம்பவத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் துணை கொண்டு இந்த அராஜகத்தை வெளிப்படுத்தும் முயற்சிகள் பல நடந்து வருகிறது..!

    உங்களுடைய ஆதரவில் தோழர் சவுக்கு விரைவில் வெளியே வருவார் என்கிற நம்பிக்கை எனக்குண்டு..!

    காத்திருப்போம்..!

    ReplyDelete
  28. எங்கள் கடும் கண்டனத்தயும் பதிவு செய்கிறோம்....

    ReplyDelete
  29. வnன்மையாக கண்டிக்கத்தக்க நிகழ்வு

    ReplyDelete
  30. எனது கண்டனங்களை என் வலைப்பூவில் தெரிவித்து விட்டேன். அனைவரும் தெரிவியுங்கள்

    ReplyDelete
  31. இன்றைய காலகட்டத்தில் அனைத்து அரசுகளும் அதிகார மையங்களும் இத்தகைய அடக்குமுறைப் போக்கினை எடுத்தாண்டு வந்தபோதும் ஒவ்வொரு நிகழ்வினையும் வன்மையாக கண்டித்தலே மக்கள் மடையர்கள் அல்ல என்பதை வெளிப்படுத்தும்.

    மாற்றுஅரசு அல்லது வழி அமைய இயலாது என்ற நிலை அதிகார மையங்களுக்கு இன்னும் வலிமை சேர்த்திருப்பதாகத் தெரிகிறது.

    இன்றைய அரசியல்நிலை மிகுந்த கவலை அளிக்கிறது. நிகழ்வினை கடுமையாக கண்டிக்கிறேன்.

    "இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்." என்று சொன்னவரின் ஆட்சியிலா இப்படி ?

    ReplyDelete
  32. //“பதிவுலகில் யாரோ ஒருவர்.. எதுக்கோ ஒண்ணுக்கு.. எதுக்கு அந்தாளுக்கு..? கொழுப்புதான..?” என்றெல்லாம் அரசியல் ரீதியாகக் கருதாமல்"//
    தமிழகத்தில் பெரும்பாலோனோர் இப்படித்தான் இருக்கிறார்கள். அதனால தான் இது போன்ற அரசுகள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன.

    தமிழக மீனவர்களுக்காக போராடி சிறை சென்ற சீமானுக்காக ஒரு மீனவனாவது களத்தில் இறங்கி போராடினானா?

    தான் வீட்டில் இழவு விழாதவரை தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றுதான் தமிழன் இப்போது உள்ளான்.
    இதே நிலை தொடருமானால், நாளை ஒரே குடும்பத்தில் அண்ணன் இறந்ததால் கூட, "அண்ணன் தானே இறந்தான் தனக்கு ஒரு பிரச்னையும் இல்லையே" என்று நினைக்கும் காலம்வரலாம்.

    தமிழகத்தில் பணத்தின் தேவையை அதிகப்படுத்தி அந்த பணத்தை வைத்தே மக்களின் ஓட்டை பெரும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை நம் தமிழகம் உருப்படாது.

    ReplyDelete
  33. அன்பு பதிவர்களே..!

    தோழர் சவுக்கு என்னும் சங்கர் கைது செய்யப்பட்ட வழக்கில் கண்ணுக்குத் தெரிந்த சட்ட விரோத வழிமுறைகளினால் முதன்மை நீதிமன்றத்திலேயே அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது.

    தோழர் சங்கருடன் நான் இன்று தொலைபேசியில் பேசினேன்.. சக பதிவர்களான நம்முடைய அனைத்துவித முயற்சிகளுக்கும், ஆதரவிற்கும், அன்பிற்கும், பாசத்திற்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்..!

    ReplyDelete
  34. தோழர் சவுக்கு தான் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன என்பது பற்றியும், தனது இரண்டு நாட்கள் சிறை அனுபவங்களையும் தனது தளத்தில் எழுதியிருக்கிறார்.. சென்று படித்துப் பாருங்கள்..!

    http://www.savukku.net/2010/07/blog-post_26.html#comment-form

    ReplyDelete