Pages

Sunday, April 25, 2010

இமயமும், சிகரமும் ரெட்டச்சுழியும்.. - திரைப்பட விமர்சனம்

25-04-2010

 ஒரு சாதாரணத் தமிழ்த் திரைப்படம் என்பதற்கான அடையாள ஒழுங்குமுறையையும், இலக்கணங்களையும் இந்தப் படம் சுமக்கவில்லை.  ஆனால் இரண்டரை மணி நேர பொழுதுபோக்கிற்கு முழு உத்தரவாதம் அளிக்கிறது.

இமயமும், சிகரமும் இணைகிறார்கள் என்பதால் ஆர்வத்துடன் காத்திருக்க வைத்திருந்த திரைப்படம். ஆனால் அந்த ஆர்வத்திற்கு பாதி அளவே பூஸ்ட் கொடுத்திருக்கிறது.

சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள கிராமம். கிராமத்தில் இரண்டு பெரிசுகள். ஒருவர் லெனினைத் தோளில் துண்டாகவும், காரல்மார்க்ஸை நடத்தையிலுமாகக் காட்டிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட்டான சிங்காரவேலரின் பெயரைக் கொண்டிருக்கும் இயக்குநர் இமயம்.

மற்றொருவர் எதற்கெடுத்தாலும் நடுங்குகின்ற கைகளில் குண்டே இல்லாத துப்பாக்கியை வைத்துக் கொண்டு பிலிம் காட்டும் ராமசாமி என்னும் வறட்டுப் பிடிவாதக்காரரான இயக்குநர் சிகரம்.

ரொம்ப வருடப் பகை. ராமசாமியின் தங்கையை சிங்காரம் லவ்விக் கொண்டிருக்கும் சூழலில் நடைபெறும் பஞ்சாயத்துத் தேர்தலில் சிங்காரம் மச்சான் ராமசாமியைத் தோற்கடிக்க அன்றைக்கு மோதல் ஏற்படுகிறதாம். தங்கையைக் கட்டித் தர மாட்டேன் என்று ராமசாமி சொல்லிவிட.. சிங்காரத்தின் காதலியும், ராமசாமியின் தங்கையுமான பெண் தூக்கலிட்டுத் தற்கொலை செய்து கொள்ள.. சிங்காரவேலர் அன்றிலிருந்து திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

ஆனாலும் அவரது வீட்டில் வளர்ப்புப் பிள்ளைகள் நிறைய.. அந்தப் பிள்ளைகள் பெற்றெடுத்த பிள்ளைகளும் நிறைய.. இங்கே ராமசாமியின் வீட்டிலும் மகன்களும், மகள்களும் பெற்றெடுத்த பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைத் தோழர்களுமாக.. ஆளுக்கொரு பக்கம் கொடி பிடிக்கும் அளவுக்கு கூட்டம் சேர்த்திருக்கிறார்கள்.

சிங்காரவேலர் வளர்த்த ஹீரோ, சமய சந்தர்ப்பத்தில் வீட்டைவிட்டு வெளியே ஓடி வர.. அவனை ராமசாமி தனது வீட்டில் வைத்து வளர்த்து ஆளாக்குகிறார். அந்த ஹீரோ மிலிட்டரிக்காரனாக திரும்பி வந்து தான் சின்ன வயதில் லவ்விய சிங்காரவேலரின் வளர்ப்பு பேத்தியான அஞ்சலியை விட்ட இடத்தில் இருந்து காதலிக்கத் துவங்க..

இந்தக் காதல் ஜெயித்ததா.. இல்லையா.. என்பதுதான் படத்தின் கதை..

இயக்குநர் சிகரத்தைவிட இயக்குநர் இமயமே நன்கு ஸ்கோர் செய்திருக்கிறார். பால்காரனிடம் லெனில், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் என்று பாடம் எடுப்பதிலேயே கை தேர்ந்த நடிகராக வெளிப்பட்டுவிட்டார்.

ஒரு காட்சியில் மனதைத் தொட்டுவிட்டாலே போதும்.. கேரக்டர் ஜெயித்த மாதிரிதான் என்பதைப் போல அந்தச் சிறுவன் “வணக்கம் தோழரே” என்றழைத்தவுடன் காட்டுகின்ற முறைப்பும், பின்பு பேத்திக்காக அதே சிறுவனை விரட்டிப் பிடித்து குனிந்து கும்பிடு போடும் காட்சியிலும் அவரது நடிப்பு நேர்த்தியானது.


கே.பி.க்கு இதில் பெரிதாக ஒன்றுமில்லை. நடித்திருக்கிறார் அவ்வளவுதான். “செத்துப் போ தாத்தா. நீ செத்துப் போ தாத்தா..” என்கின்றபோதுதான் கொஞ்சம் அவரையும் ஒரு நடிகராகப் பார்க்க முடிந்தது. பொய்யில் நாம் பார்த்திருந்த சதுரங்க நடிகர் இதற்கும் மேல். ஆனாலும் இவருக்கும் நமீதாவை பார்த்து ஜொள்ளுவிடும் கேரக்டர் சூட்டாகியிருக்கிறது என்பதை நினைத்தால்தான் கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது. எவ்வளவுதான் நடித்திருந்தாலும் அந்த மீசைவேறு அநியாயத்துக்கு தடைக்கல்லாக இருக்கிறது.. வேறு மேக்கப் போட்டிருக்கலாம்..


திருஷ்டி சுத்திப் போட வேண்டியது வாண்டுகள் படையினரைத்தான்.. அவர்களை வைத்தே கதையைத் துவக்கி.. அவர்களுடனேயே கதையை நகர்த்தியிருக்கும் பாங்கு பாராட்டக்கூடியதுதான்.. சிங்காரவேலருடன் மல்லுக் கட்டும் அந்தச் சிறுவனின் “வணக்கம் தோழர்” என்கிற நடிப்பும், குஷ்பூ கேரக்டரை கச்சிதமாக இடையில் புகுத்தியிருந்து பயன்படுத்தியிருப்பதும் நகைச்சுவையானது.

அங்காடித் தெருவுக்கு முன்பு இந்தப் படம் வந்திருந்தால் அஞ்சலி அவ்ளோதான் என்று சொல்லியிருப்பார்கள். பின்பு  வந்திருப்பதால் அதிகம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டாரே என்று இயக்குநர் மீது வருத்தம்தான் வருகிறது.. ஆனாலும் பொண்ணிடம் ஏதோ ஒன்று இருக்கிறது.. நடிப்பில் குற்றம், குறை சொல்ல முடியவில்லைதான்.


ஹீரோ புதுமுகம். பெரிதாக ஸ்கோப் இல்லை.. வசனங்கள் பேச வேண்டிய வேலையே நிறைய இருப்பதால் நடிப்புதான் தொலைந்து போய்விட்டது என்று நினைக்கிறேன். அடுத்தப் படத்திலாவது நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கட்டும்..

பொதுவாக காதலுக்குத் தூது போகவும், காட்சியை நகர்த்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் சிறுசுகள் இந்தப் படத்தில் படம் முழுவதும் உலாவிக் கொண்டேயிருப்பதால் படம் என்னவோ அவர்களுக்கானது என்பது போலாகிவிட்டது.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது வசனங்களையும், ஒளிப்பதிவையும்.. இயக்குநர் தாமிராவே நல்ல கதை, வசனகர்த்தாதான். நல்லதொரு இலக்கியவாதி. பொய் படத்திற்கு இவர்தான் வசனம். ஆனாலும் இந்தப் படத்தில் வேறொருவருக்கு வசனம் எழுத வாய்ப்பளித்து அதனை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.

பால்காரன் லெனின் பற்றிக் கேட்கும் “யாருங்க அவரு..?” என்ற பரிதாபக் கேள்வி. கம்யூனிஸம் இன்னமும் யார், யாரிடமெல்லாம் பரவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லித் தாக்கியிருக்கிறார் வசனகர்த்தா.

“நான்தான் சொல்றனே.. நான் சொல்ற ஐடியாவைத்தான் யாருமே கேக்க மாட்டேங்குறீங்க..”

“குஷ்பூ.. நீ வாயைத் தொறந்தாலே ஏதாவது பிரச்சினையாயிரும்.. பேசாம இரு..”

“குஷ்பூ.. வாசல்லேயே செருப்பைக் கழட்டி வைச்சிட்டு வா.. அப்புறம் இதுக்கும் ஏதாவது பிரச்சினை வந்திரும்..”

“இங்கிலீஷ் டீச்சர் மனசுல என்ன இருக்கும்..? லாங் லாங் எகோ தேர் வாஸ் எ கிங்தான் இருக்கும்.. வேறென்ன..?”

இது போன்று அவ்வப்போது அவர்கள் பேசுகின்ற வசனங்கள் லூட்டியடித்தாலும், அவர்களுடைய வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியான வசனங்களும் இடையில் கலந்திருந்தது கொஞ்சம் இடிக்கத்தான் செய்கிறது.


ஒளிப்பதிவில் செழியனுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான படமாக இது இருக்குமென்று நினைக்கிறேன்.. வாய்க்கால், வரப்புகளில் இயற்கை எழிலை படமாக்குவதில்தான் ஒளிப்பதிவாளருக்கு தில்லே இருக்கிறது.. பாடல் காட்சிகளில் மட்டுமே அதை பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தாலும், அஞ்சலியை வழிமறித்து ஹீரோ பேசுகின்றபோது காண்கின்ற காட்சி ஸ்கீரினை கமகமக்க வைத்தது.

பொதுவாகத் தமிழ்ச் சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே உறவுகளை யார், யாருக்கு எந்த வகையில் சொந்தம் என்பதை வசனத்தாலாயோ, காட்சிகளாலோயே சொல்லிவிடுவார்கள். இதில் அது சுத்தம்.. யாருக்கு, யார் சொந்தம்.. மகனா..? மகளா..? யாருக்கு எத்தனை குழந்தைகள்..? என்பதெல்லாம் தெரியாமல் அப்படியே போய்க் கொண்டிருக்கிறது கதை.. படம் முடிந்த பின்புதான் இது பற்றி யோசிக்கவும் வைத்திருக்கிறது என்றால் இயக்குநருக்கு ஒரு சபாஷ் போடத்தான் வேண்டும்.

இளவரசு கேரக்டர் வீணடிக்கப்பட்டிருப்பது வருத்தமானது.. மாயாண்டி குடும்பத்தார் மாதிரி இதிலும் எதையாவது செய்வார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து வீணானதுதான் மிச்சம்.

எந்த ஒரு புதுமுக இயக்குநரும் தனது முதல் படத்தில் தேடிப் பிடித்து நடிக்க வைக்கும் சினிமா பார்முலாவின்படி இந்தப் படத்திலும் இடம் பிடித்திருக்கும் மனோபாலா இருக்கப் போய் கே.பி. தப்பித்தார் என்றே சொல்லலாம்.

கே.பி.யை காக்கா பிடிக்க ஒரு சிறுமி ராட்டையைக் கையில் ஏந்தியபடியே பின்னால் வர.. “இவர் கட்சி ஆபீஸுக்கு போயே பத்து வருஷமாச்சு.. இப்ப போய் இதைக் கண்ணுல காட்டுறியே.. கிளம்பு..” என்று மனோபாலா பத்திவிடும் காட்சியில் ரசிக்க முடிகிறது.

இன்னொரு அநியாய வேஸ்ட் கருணாஸ்.. ஏற்கெனவே கதாநாயகனாகவே கச்சைக் கட்டியிருந்தாலும் இது போன்ற வேஸ்ட்டான கேரக்டர்களிலும் நடிப்பதற்கு துணிச்சல் வேண்டும்.. கருணாஸ் வாழ்க..

ஏதோ மிலிட்டிரி லாரிகள் வருகின்றன. கூடாரங்கள் போடுகிறார்கள். அமர்கிறார்கள். டிரெயினிங் எடுக்கிறார்கள்.. பின் திடீரென்று காலி செய்துவிட்டுப் போகிறார்கள்.. ஏன்..? எதற்கு..? ம்ஹூம்.. எந்தக் கேள்விக்கும் விடை தேடி மண்டையைப் போட்டுப் பிய்ச்சுக்க வேண்டாம் என்று இயக்குநர் சொல்லாமல் சொல்லிவிட்டதால் ஹீரோவை வரவழைக்க இயக்குநரால் முடிந்த செட்டப் என்று நினைத்துக் கொள்வோம்.

பாடல்களை தனியே கேட்டபோது ஒரு முறையாவது கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் படத்தில் பார்த்தபோது ஏனோ ஒன்றவே இல்லை. என்ன காரணமோ..? பாடல் காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைத்தது என்னவோ உண்மை.


கிளைமாக்ஸ் நாடகத்தனமானது என்றாலும் படமே சீரியஸ் இல்லை என்பதால் இதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..

அந்த பள்ளிக்கூட காட்சியில் “பிள்ளை பெக்க வக்கில்லாதவனெல்லாம் புள்ளைக படிக்குற ஸ்கூலுக்கு தலைவனா?” என்கிற கே.பி.யின் எகத்தாளத்தின்போது படம் எங்கே சீரியஸாக போய்விடுமோ என்று நினைத்தேன். நல்லவேளை சிறுசுகள் மீண்டும் தப்பிக்க வைத்துவிட்டார்கள்.

தாமிரா இதுவரையில் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரில்லை. இலக்கியவாதி.. நல்ல எழுத்தாளர். சிறந்த வசனகர்த்தா. இது அவருடைய முதல் திரைப்படம் என்பதாலும், பல குறைபாடுகள் தென்பட்டிருந்தாலும் என்னை மாதிரியான சின்னஞ்சிறுசுகளுக்கும் “எப்படியும் நாமளும் ஒரு படம் பண்ணிரலாம்..” என்று தைரியத்தை மூட்டியிருக்கிறார் இத்திரைப்படத்தின் மூலம்..

இதுதான் கோடம்பாகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். ஒரு நல்ல தயாரிப்பு கம்பெனியும், சிறந்த நட்பான ஒளிப்பதிவாளரும், நல்ல கதையும், விஷயமுள்ள வசனகர்த்தாவும் கிடைத்தாலே போதும்.

எந்தவகையிலும் முகம் சுளிக்காதவகையில் குத்துப் பாட்டு, குத்து டான்ஸ்களும், காதைக் கிழிய வைக்கும் சண்டைக் காட்சிகளும் இல்லாமல் பத்து நிமிடங்களுக்கொரு முறையாவது சிரிக்க வைத்து அனுப்பி வைத்த அண்ணன் தாமிராவுக்கு எனது நன்றி..

நேரத்தைக் கொண்டாட விரும்பினால் தாராளமாகச் செல்லலாம்.. ஆனால் குடும்பத்துடன் மட்டுமே..

30 comments:

  1. அப்ப படம் பார்க்கலாம்னு சொல்லறிங்க.. அதுவும்குடும்பத்துடன்..சரிதான்..

    ReplyDelete
  2. " பால்காரன் லெனின் பற்றிக் கேட்கும் “யாருங்க அவரு..?” என்ற பரிதாபக் கேள்வி. கம்யூனிஸம் இன்னமும் யார், யாரிடமெல்லாம் பரவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லித் தாக்கியிருக்கிறார் வசனகர்த்தா."

    வேண்டாம்... வேண்டாம்.. நிறுத்திக்குவோம்.... மீண்டும் பிரச்சினைய ஆரமிக்க விரும்பவில்லை....

    *********

    படம் என்று பார்த்தல், வெகு சாதாரணமான படம்தான்... அடிக்கும் வெயிலில், திரை அரங்கிர்கிருக்கு சென்று பார்க்கும் அளவுக்கு, ( அதுவும் குடும்பத்தோடு ) ஒன்றும் இல்லை...
    குஷ்பு ஜோக், தோழர் நையாண்டி, காங்கிரஸ் கிண்டல் எல்லாம், சராசரி சினிமா ரசிகனுக்கு அந்நியமானது...

    என்றாலும், ஒவொன்றையும் நன்றாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள்..படத்தை விட உங்கள் விமர்சனம் சுப்பர்...


    "நேரத்தைக் கொண்டாட விரும்பினால் தாராளமாகச் செல்லலாம்.. ஆனால் குடும்பத்துடன் மட்டுமே"

    அதாவது வலை பதிவர் என்ற குடுமபத்துடன்...( சங்கம் ? ) ...

    ReplyDelete
  3. // நேரத்தைக் கொண்டாட விரும்பினால் தாராளமாகச் செல்லலாம்.. ஆனால் குடும்பத்துடன் மட்டுமே.. //

    எனக்கும் படம் பார்க்கனும் ஆசையாத்தான் இருக்கு... அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணுமில்ல முருகா.

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்....

    வழக்கம் போல கொஞ்சம் பெரிசு...இதுக்கெல்லாம் நாங்க பழக்கப்பட்டுடோமுல்ல....

    ReplyDelete
  5. தாமிரா இதுவரையில் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரில்லை. இலக்கியவாதி.. நல்ல எழுத்தாளர். சிறந்த வசனகர்த்தா. இது அவருடைய முதல் திரைப்படம் என்பதாலும், பல குறைபாடுகள் தென்பட்டிருந்தாலும் என்னை மாதிரியான சின்னஞ்சிறுசுகளுக்கும் “எப்படியும் நாமளும் ஒரு படம் பண்ணிரலாம்..” என்று தைரியத்தை மூட்டியிருக்கிறார் இத்திரைப்படத்தின் மூலம்..
    ---
    சூப்பரு நான் ரெடி . உதவியாளர்க . நன்றி .
    விமர்சனம் Very nice.

    ReplyDelete
  6. பாஸிட்டிவ்வான‌ விம‌ர்ச‌ன‌ம்....நிறைய‌ பேரோட‌ நெக‌ட்டிவ்வான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்கு ம‌த்தியில்..:)

    ReplyDelete
  7. ஆயிரம் நொட்டை ,நொள்ளைன்னு எழுதிட்டு குடும்பத்தோட!!!! படம் பாக்க நம்ம ஜனங்க என்ன உ.தவா?

    ReplyDelete
  8. [[[ஜாக்கி சேகர் said...
    அப்ப படம் பார்க்கலாம்னு சொல்லறிங்க.. அதுவும் குடும்பத்துடன்.. சரிதான்..]]]

    அதேதான் ஜாக்கி..!

    எத்தனையோ மசாலா படங்களுக்கு மத்தியில் இப்படியாச்சும் ஒரு படம் வந்ததேன்னு திருப்திப்பட்டுக்க வேண்டியியிருக்கு..!

    ReplyDelete
  9. [[[பார்வையாளன் said...
    "பால்காரன் லெனின் பற்றிக் கேட்கும் “யாருங்க அவரு..?” என்ற பரிதாபக் கேள்வி. கம்யூனிஸம் இன்னமும் யார், யாரிடமெல்லாம் பரவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லித் தாக்கியிருக்கிறார் வசனகர்த்தா."]]

    வேண்டாம்... வேண்டாம்.. நிறுத்திக்குவோம்.... மீண்டும் பிரச்சினைய ஆரமிக்க விரும்பவில்லை....
    படம் என்று பார்த்தல், வெகு சாதாரணமான படம்தான்... அடிக்கும் வெயிலில், திரை அரங்கிர்கிருக்கு சென்று பார்க்கும் அளவுக்கு, (அதுவும் குடும்பத்தோடு) ஒன்றும் இல்லை. குஷ்பு ஜோக், தோழர் நையாண்டி, காங்கிரஸ் கிண்டல் எல்லாம், சராசரி சினிமா ரசிகனுக்கு அந்நியமானது...
    என்றாலும், ஒவொன்றையும் நன்றாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள். படத்தைவிட உங்கள் விமர்சனம் சுப்பர்.]]]

    இல்லை.. ஒரு எண்ட்டெர்டெயிண்ட்மெண்ட் தேடி வருபவர்களுக்கு இது நிச்சயம் ஓகேவான படம்..!

    உங்களுக்காக அடுத்த வாரம் "மாஞ்சாவேலு" வருது..! ரெடியா இருங்க..!

    ReplyDelete
  10. [[[கும்க்கி said...
    நல்ல விமர்சனம். வழக்கம் போல கொஞ்சம் பெரிசு. இதுக்கெல்லாம் நாங்க பழக்கப்பட்டுடோமுல்ல.]]]

    கும்க்கி தம்பி..

    இதுவா பெரிசு..?

    சரி.. சரி.. படத்தை அவசியம் குடும்பத்தோட போய் பாருப்பூ..!

    ReplyDelete
  11. [[[இராகவன் நைஜிரியா said...

    //நேரத்தைக் கொண்டாட விரும்பினால் தாராளமாகச் செல்லலாம்.. ஆனால் குடும்பத்துடன் மட்டுமே.. //

    எனக்கும் படம் பார்க்கனும் ஆசையாத்தான் இருக்கு. அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணுமில்ல முருகா.]]]

    பேசாம நைஜீரியாவுக்கு விநியோகஸ்தரா ஆயிருண்ணே.. பொட்டியை வேண்ணா நான் வாங்கி அனுப்பி வைக்கிறேன்..!

    ReplyDelete
  12. [[[மிஸ்டர் இட்லி said...
    தாமிரா இதுவரையில் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரில்லை. இலக்கியவாதி.. நல்ல எழுத்தாளர். சிறந்த வசனகர்த்தா. இது அவருடைய முதல் திரைப்படம் என்பதாலும், பல குறைபாடுகள் தென்பட்டிருந்தாலும் என்னை மாதிரியான சின்னஞ்சிறுசுகளுக்கும் “எப்படியும் நாமளும் ஒரு படம் பண்ணிரலாம்..” என்று தைரியத்தை மூட்டியிருக்கிறார் இத்திரைப்படத்தின் மூலம்..
    ---
    சூப்பரு நான் ரெடி . உதவியாளர்க. நன்றி. விமர்சனம் Very nice.]]]

    மிக்க நன்றி சூப்பர் இட்லி..!

    தங்களுடைய முதல் வருகைக்குத் தனியாக ஒரு நன்றி..!

    ReplyDelete
  13. [[[ர‌கு said...
    பாஸிட்டிவ்வான‌ விம‌ர்ச‌ன‌ம். நிறைய‌ பேரோட‌ நெக‌ட்டிவ்வான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்கு ம‌த்தியில்..:)]]]

    நன்றி ரகு..!

    நெகட்டிவ் விமர்சனங்கள் அங்காடி தெரு போல் இல்லையே என்பதால் எழுதப்பட்டவை..!

    அது போல் ஒரு இயக்குநரால்தான் எடுக்க முடியும்..

    இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படம்..!

    இதில் நீங்கள் காவியத்தை எதிர்பார்க்கக் கூடாது..!

    ReplyDelete
  14. [[[shortfilmindia.com said...
    ஆயிரம் நொட்டை, நொள்ளைன்னு எழுதிட்டு குடும்பத்தோட!!!! படம் பாக்க நம்ம ஜனங்க என்ன உ.தவா?]]]

    குற்றம், குறை இல்லாத படங்கள் எங்கே இருக்கின்றன மிஸ்டர் ஷார்ட்பிலிம்இண்டியா..?

    அனுபவம் இல்லாத குறையினால் கதை கட்டமைக்கப்படவில்லை. அவ்வளவுதான்..!

    நீயும் சினிமா எடுக்கத்தான் போற..?!!!

    ReplyDelete
  15. சங்கத்துலருந்து ஓசில கூட்டிப்போவீகளா?

    ReplyDelete
  16. [[[மயில்ராவணன் said...
    சங்கத்துலருந்து ஓசில கூட்டிப் போவீகளா?]]]

    அதுக்கு முதல்ல சங்கத்துல சேரணுமாக்கும்..!

    ReplyDelete
  17. அதாவது அடிக்கிற வெயில்ல ஏசி தியேட்டர்ல இந்த படதுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுத்து தூங்கிட்டு வரலாம்னு சொல்றீங்க!!

    - என்ன கொடுமை சரவணன் சார் இது?
    :)

    ReplyDelete
  18. ஏன் சரவணா...கொஞ்சம் கூட....மனசாட்சி இல்லையா....என்ன விமர்சனம் இது...ஏதோ..யூனியன் தலைவர்கள் நடிச்சா....? உடனே...பாராட்டு பத்திரம் தானா....?

    ReplyDelete
  19. [[[【♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...

    அதாவது அடிக்கிற வெயில்ல ஏசி தியேட்டர்ல இந்த படதுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுத்து தூங்கிட்டு வரலாம்னு சொல்றீங்க!! - என்ன கொடுமை சரவணன் சார் இது?:)]]]

    ரெஸ்ட் எடுத்தா உடம்புக்கு நல்லதுதான தம்பி..! அதுலேயும் ஏசி வேற.. சுகமாகத் தூங்கலாமே..!

    ReplyDelete
  20. VAANAM VASAPPADUM said...
    ஏன் சரவணா. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா. என்ன விமர்சனம் இது. ஏதோ யூனியன் தலைவர்கள் நடிச்சா....? உடனே பாராட்டு பத்திரம்தானா....?]]]

    அப்படில்லாம் இல்லீங்கண்ணா.. ஒரு தடவை பார்க்கலாம்.. பார்க்கவே கூடாத அளவுக்கு வேஸ்ட்டான படமில்லை இது..!

    ReplyDelete
  21. இதுமாதிரி மிகப் பிரபலமானவர்களை நடிக்கவைக்கும்போதே தெரிந்து கொள்ளலாம் கதையில் ஒன்றும் விசயமில்லை என்று..!!! சிகரத்திற்கும், இமயத்திற்கும் இப்போது வேலை ஒன்றும் இல்லையா..அவர்களுக்கும் ஏதாவது வேலை வேண்டுமே..அதுதான்..நடித்துவிட்டார்கள்...

    ReplyDelete
  22. கமெண்ட் போட்டிருக்கேன் ;-)

    ReplyDelete
  23. [[[மர்மயோகி said...
    இது மாதிரி மிகப் பிரபலமானவர்களை நடிக்க வைக்கும்போதே தெரிந்து கொள்ளலாம் கதையில் ஒன்றும் விசயமில்லை என்று..!!!]]]

    மர்மம்.. கதை நல்ல கதைதான்.. சமீபத்தில் வெளிவந்த, வெளிவர இருக்கின்ற மசாலாப் படங்களின் கதையைவிடவும் இது சிறந்த கதைதான்..

    திரைக்கதையில்தான் கொஞ்சம் பிரச்சினை..!

    [[[சிகரத்திற்கும், இமயத்திற்கும் இப்போது வேலை ஒன்றும் இல்லையா. அவர்களுக்கும் ஏதாவது வேலை வேண்டுமே. அதுதான். நடித்து விட்டார்கள்.]]]

    இப்படி உங்களை மாதிரி வேலைவெட்டியில்லாதவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்..

    ஒரு நாளைக்கு அவர்களுடன் இருந்து பாருங்கள்.. அப்போது தெரியும்.. அவர்கள் இந்த வயதிலும் எத்தனை வேலைகளைச் செய்கிறார்கள் என்று..!

    ReplyDelete
  24. [[[கபீஷ் said...
    கமெண்ட் போட்டிருக்கேன் ;-)]]]

    நானும் நன்றி பின்னூட்டம் போட்டிருக்கிறேன்..!

    ReplyDelete
  25. தேங்க்ஸ் அண்ணா....

    ReplyDelete
  26. [[[Sukumar Swaminathan said...
    தேங்க்ஸ் அண்ணா.]]]

    சுகுமார் தம்பி நன்றி..! படம் பார்த்தாச்சா..?

    ReplyDelete
  27. வரிக்கு வரி உங்க பதிவை படிச்சதே படத்தை பார்த்த மாதிரி இருக்குண்ணா...

    ReplyDelete
  28. [[[Sukumar Swaminathan said...
    வரிக்கு வரி உங்க பதிவை படிச்சதே படத்தை பார்த்த மாதிரி இருக்குண்ணா.]]]

    ஆஹா.. அப்படியா..? சுகுமாரண்ணே.. நேர்ல பார்க்கும்போது 60 ரூபாயைக் கொடுத்துப்புடணும்..! சொல்லிப்புட்டேன்..!

    ReplyDelete
  29. See who owns facebook.com or any other website.

    ReplyDelete