தோழர் உ.ரா.வரதராசனின் மரணம் தற்கொலையல்ல..! கொலைதான்..!

24-02-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"தோழர்களே.. நமது மதிப்பிற்குரிய தோழர் வரதராசனின் உடலை கொண்டுசெல்லவிருக்கும் ஆம்புலன்ஸ் வேனிற்கு பின்பு முதலில் நான்கு பேர் வரிசை கொண்ட பெண்கள் அணி நடந்து செல்ல.. அதற்குப் பின்னால் நமது தோழர்கள் வரிசையாய் அணிவகுத்து நமது உற்றத் தோழரின் இறுதிப் பயணத்தை சீரும், சிறப்புமாக நடத்திக் கொடுக்குமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நமது தோழரின் இந்த இறுதிப் பயணம் கட்டுக்கோப்போடும், கண்ணியத்தோடும், கடமையுணர்வோடும் நடப்பதுதான் அன்னாருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்.."

இப்படியொரு ஒலிபெருக்கி அறிவிப்போடுதான் உ.ரா.வரதராசன் என்கிற 65 வயதான அந்த மூத்த கம்யூனிஸ இயக்கத் தோழரின் இறுதி ஊர்வலம் நேற்று மதியம் 3.10 மணிக்கு சென்னை தியாகராய நகரில் இருக்கும் பி,ராமமூர்த்தி நினைவகம் என்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது.

இந்த மாதம் 6-ம் தேதி கொல்கத்தாவில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டத்தில் நடந்தப்பட்ட விசாரணைக்குப் பின் மத்திய கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நமது தோழர் உ.ரா.வரதராசன் அதே 6-ம் தேதி தனது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்த கொல்கத்தாவில் இருந்தபடியே ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு, மீண்டும் 11-ம் தேதி சென்னையில் தனது வீட்டில் மேலும் ஒரு கடிதத்தை தாய்த்தமிழில் பதிவு செய்துவைத்துவிட்டு காணாமல்போக.. 13-ம் தேதி சென்னை போரூர் ஏரியில் பிணமாக அவர் கண்டெடுக்கப்பட்டு.. உற்ற தோழர் உயிரிழந்த கொடூரம்கூட தெரியாமல் 14-ம் தேதி காவல்துறையில் அவருடைய துணைவியாராலும், கட்சியினராலும் புகார் கொடுக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 21-ம் தேதி ராயப்பேட்டை மார்ச்சுவரியில் அழுகிப் போய் அடையாளம் காண முடியாத உடலாகக் காட்சியளித்து, 22-ம் தேதி இவர்தான் என அடையாளம் காணப்பட்ட இந்தச் சிவப்புக் கொடி தோழரின் முடிவு இப்படியொரு நாள் புள்ளிவிவரக் கணக்கில் சொல்லப்படும் அளவுக்குச் சென்றது மிக மிக கொடூரமானது.

என்ன தவறு செய்துவிட்டார் இந்தத் தோழர்..? யாருக்கும் தெரியவில்லை. ஆனால் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ள செய்தி பத்திரிகைகளில் வெளியான பின்புதான் கடந்த 6-ம் தேதியே அவர் மத்தியக் கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தியை 'தீக்கதிர்' வெளியிட்டது. அதுவரையில் எட்டு நாட்களாக சோவியத்தின் கம்யூனிஸ ஆட்சியைப் போன்றதொரு நீண்ட மெளனம் கட்சியிலும், கட்சிப் பத்திரிகையிலும்!

பொதுவாழ்க்கையில் அதுவும் சித்தாந்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உழைக்கும் மக்களின் அபிமானம் பெற்ற கட்சியின் பெருந்தலைவர் ஒருவரே இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருப்பது எப்படி.. ஏன் என்பதை அக்கட்சிக்காரர்கள் இப்போதுவரையில் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இனியும் சொல்ல மாட்டார்கள் என்பதும் நிச்சயம்.

இதுவரையில் தெரிந்த அளவுக்கு அவர் மீதான புகார்களை அவருடைய குடும்பத்தினரே சுமத்தியதால் மாநிலக் கட்சிக் குழு அதை விசாரித்து உண்மை என்று அறிந்து கட்சியில் இருந்து வரதராசனை நீக்கவேண்டும் என்று மத்தியக் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் என்ன காரணம் என்பதை மட்டும் வெளியில் சொல்ல மறுக்கிறார்கள்.

இன்றைய செய்தியின்படி கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத்துதான் பிடிவாதமாக வரதராசனை நீக்கினார் என்று சாவிற்கான பழியை பிரகாஷ்காரத் மீது வீசுகிறார்கள் தமிழ் மாநிலத் தலைவர்கள். பிரகாஷ்காரத்தின் விசாரணைக்கு மையப்புள்ளியே கட்சியின் தமிழ் மாநிலக் குழு, தோழர் வரதராசனை நீக்கும்படி அனுப்பியிருந்த பரிந்துரைக் கடிதம்தான். அந்தக் கடிதத்தை இவர்கள் அனுப்பாமல் இருந்திருந்தால்..?

அப்படியென்ன அது கொடுங்குற்றம்..? தோழராக இருந்தாலும் அவர் முதலில் மனிதராகத்தானே இருக்கிறார். பின்புதானே ஏற்றுக் கொண்ட, பின்பற்றுகின்ற கொள்கையின்படி ஒரு அமைப்பின் உறுப்பினர். பலவீனங்களால் ஆட்படுபவன்தான் மனிதன். நிச்சயம் அவன் வாழ்நாளில் ஒரு முறையாவது ஏதாவது ஒருவகை சைத்தானுக்கு ஆட்பட்டே தீருவான்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று காட்சியளிக்கும். சிக்கியவர்கள் மீள்வார்கள். மீளாதவர்கள் கொடும் சிக்கலுக்குள்ளாவார்கள். தெருவுக்கு நான்கைந்து பேர் நிச்சயமாக இருப்பார்கள்.

ராயப்பேட்டை மார்ச்சுவரியில் தோழரின் உடலைப் பார்த்தவுடன் தங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று தோழரின் உடன் பிறந்த சகோதரிகளும், மனைவியும் ஆளுக்கொரு பக்கமாகப் போர்க்கொடி தூக்கியதில் இருந்தே அத்தோழரின் குடும்பத்துப் பிரச்சினை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பது புரிகிறது.

கேவலம்.. ஒரு சாதாரண குடும்பத் தகராறையெல்லாம் ஒரு அகில இந்தியக் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டம் அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போடுகிறது என்பதை நினைக்கும்போது இந்தக் கட்சியின் தலைவர்கள் எந்த அளவுக்கு வேலைவெட்டியில்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இது நிச்சயம் குடும்பத் தகராறுதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது பொதுவில் வந்திருக்க வேண்டியதில்லை. புகார் கொடுத்தவர் கட்சியைச் சேர்ந்த அவருடைய மனைவியாகவே இருந்தாலும் அதனை குடும்பப் பிரச்சினையாகக் கருதி நான்கு சுவர்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளும்படி அனுப்பி வைத்திருந்தால் இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் எழவுக்கான செலவு ஏற்பட்டுத் தொலைந்திருக்காது. அவர்களுக்கும் அடுத்த சட்டசபை தேர்தலில் நிற்க ஒரு மக்கள் தொண்டரும் கிடைத்திருப்பார்.

எத்தனையோ குடும்பங்களில் இது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தனையிலும் வீட்டில் இருக்கும் யாரோ ஒருவர் விட்டுக் கொடுத்துத்தான் போகிறார்கள். யாரும் இதை அறிவுப்பூர்வமாக அணுக வேண்டியதில்லை. உணர்வுப்பூர்வமாகதத்தான் அணுகியிருக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு இந்த விஷயத்தில் நடந்து கொண்டது கிட்டத்தட்ட சர்வாதிகாரம்தான். இது போன்ற விஷயங்களையெல்லாம் கட்சியில் வைத்து அலசுவார்கள். இதுதான் கட்சியின் கொள்கை என்றால் அந்த 'புடலங்காய்கள்' ஏன் இன்னும் மார்க்கெட்டில் அதிகமாக விற்கவில்லை என்பதற்கான காரணமாக இதனையே ஏற்றுக் கொள்ளலாம்.

"மயிர்நீப்பின் வாழா கவரிமான் அன்னார், உயிர்நீப்பர் மானம் வரின்" என்ற குறளை அடையாளம் காட்டி, "தற்கொலை செய்து கொள்பவன் கம்யூனிஸ்டே அல்ல. உள்கட்சிப் போராட்டத்தில் எத்தனையோ இடர்களை என்னால் எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் உள்வாழ்க்கைப் போராட்டத்தில் நான் நிலைகுலைந்து வீழ்ந்துவிட்டேன். இனி.. ஏது..? குறளே நின்றது.. மனதை வென்றது.." என்று தனது மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு சாவைத் தேடிச் சென்றுள்ளார் தோழர் வரதராசன்.

இதற்குப் பெயர் கோழைத்தனம் அல்ல.. புறவாழ்க்கையில் எதிர்ப்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் ஓட ஓட விரட்டிய இந்தத் தோழரால் அகவாழ்க்கை சிக்கல்களில் இருந்து மீளத் தெரியவில்லை. அல்லது முடியவில்லை. இந்தத் 'தெரியவில்லை'; 'முடியவில்லை' என்கிற வார்த்தைகளினால்தான் உலகம் முழுவதும் தினம்தோறும் லட்சக்கணக்கானோர் தங்களது உடலைத் தியாகம் செய்துவிட்டு வீழ்கின்றனர்.

அறிவின் சிகரங்கள் இதனைக் 'கோழைத்தனம்' என்று வர்ணிப்பது காலம்காலமாக நடந்துதான் வருகிறது. ஆனால் அவர்களுக்கு இது மாதிரியான சந்தர்ப்பங்கள் வந்து தொலையாதது அவர்களது அதிர்ஷ்டம் என்பதை மட்டும் அவர்கள் உணர்வதே இல்லை.

ஆறாண்டுகளுக்கு முன்பாக விஜய் டிவியில் தினம்தோறும் காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'முதல் பிரதி' என்னும் நிகழ்ச்சியில் நான் பணியாற்றி வந்தேன். ஒரு நாள் நிகழ்ச்சியில் இரண்டு எதிரெதிர் தரப்பு அரசியல்வாதிகள் பேசுவார்கள். அந்த வரிசையில் ஒரு நாள் இந்தத் தோழரின் பெயரும் இருந்தது. கூடவே அவருடைய வீட்டு முகவரியும்தான்.

தினமும் அதிகாலை 5.30 மணிக்கு ஷூட்டிங். நாங்கள் 3 மணிக்கு ஸ்டூடியோவில் ஆஜராவோம். 4 மணிக்கு அனைத்துச் செய்தித்தாள்களும் கைக்கு வர.. செய்திகளை தட்டச்சு செய்துவிட்டு கேள்விக்கணைகளோடு தயாராக இருப்போம். அன்றைய விருந்தினரான தோழர் உ.ரா.வரதராசனை வரவேற்க கார் அவருடைய வீடிருந்த அண்ணா நகருக்குச் சென்றிருந்தது. வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து நாங்களெல்லாம் வாசலில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சைக்கிளின் பின்பக்க கேரியரில் அமர்ந்தபடியே இந்த முரட்டு சட்டை மனிதர் ஸ்டூடியோ வாசலில் வந்து இறங்கினார்.

திக்கென்று இருந்தது எங்களுக்கு.. "என்ன ஸார்..? உங்களைக் கூப்பிடத்தான கார் வந்துச்சு..? வரலியா..?" என்று கேட்க, "நான்தான் நேத்து நைட்டே, உங்க ஆபீஸுக்கு போன் போட்டு சொன்னனேப்பா.. கார் வேண்டாம்னு.." என்றார். "காலைல சீக்கிரம் எந்திரிக்கணுமேன்னு நைட்டு நம்ம கட்சி ஆபீஸ்லேயே படுத்திட்டேன்.." என்று விகல்பமில்லாமல் சொல்லிவிட்டுச் சிரித்தார்.

ஏஸி கார் அனுப்பவில்லையே என்பதற்காக காரில் ஏற மாட்டேன் என்று தகராறு செய்து ஏஸி காரை அனுப்பிய பின்பு நிகழ்ச்சிக்கு வந்த ஒரு பாரம்பரியக் கட்சியின் வி.ஐ.பி.க்களை மட்டுமே பார்த்திருந்த எங்களது டீமுக்கு இது ஒரு சுவையான அனுபவம். இப்படித்தான் இந்த எளிமையான தோழர் எனக்கு அறிமுகமாயிருந்தார்.

ஆனால் இன்றைக்கு சவப்பெட்டிக்குள் ஏதோ கருப்பு மை பூசி மெழுகப்பட்ட முகத்துடன் அடையாளம் காண முடியாத அளவுக்கு கோரமாக காட்சியளித்த இவரா, புகைப்படத்தில் இருக்கும் சிவப்பு நிறத் தோழர் என்ற ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒன்று சேர என்னைத் தாக்கியது.
கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என்பதாலும், கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த காரணத்தால் அந்த அலுவலகத்தில் இவருடைய சடலத்திற்கு மட்டும் இடம் கிடைத்திருக்கிறது போலும்.

"எனது இரண்டு வங்கிக் கணக்குகள் முடிக்கப்பட்டு எஞ்சியுள்ள தொகையை கட்சிக்கு வழங்க வேண்டும். என்னுடைய புத்தகங்கள் கட்சி மற்றும் 'தீக்கதிர்' நூலகங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். எனது மடிக்கணினியை(அமெரிக்கா சென்றிருந்தபோது மகன் வாங்கிக் கொடுத்தது) 'தீக்கதிர்' பயன்பாட்டிற்குத் தர வேண்டும். எனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்படைத்துவிடுங்கள். எனது இல்லம் உட்பட எங்குமே எனக்குப் படத்திறப்போ, இதர நிகழ்ச்சிகளோ நடத்தக்கூடாது.." என்ற தனது இன்னொரு கடிதத்தில் எழுதியிருந்ததைப் படிக்கின்றபோது மனிதர் என்ன மாதிரியான உறுதியுடன் இருந்திருக்கிறார் என்பது புரிகிறது.

இவரா கோழை.. இதுவா கோழைத்தனம்.. இல்லவே இல்லை. இத்தனை நாட்கள் உங்களுடன் ஒன்றிணைந்து உறவாடி, பேசிப் பழகி, போராட்டங்களுடன் துணை நின்று தன்னைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது தனக்குத் துரோகம் செய்வித்த நண்பர்களான தோழர்களை மறுபடியும் தான் சந்திக்கவே விரும்பவில்லை என்கிற வெறுப்புணர்வுதான் அவரை ஆட்கொண்டுள்ளது.

"படத்திறப்புக்கள் நடத்தப்படவே கூடாது" என்று சொல்லியிருப்பதில் இருந்தே தான் தேடிக்கொள்ளும் முடிவின் மூலம் தான் ஒரு கம்யூனிஸ்ட்டே இல்லை என்பதை உலகிற்கு சொல்லியிருக்கும் இவர்தான் உண்மையிலேயே தோழர்.. நிச்சயமாகச் சொல்லலாம். இறக்கப்போகும் தருவாயிலும் கட்சியின் கொள்கைகள் மீது தோழர் வரதராசன் எந்த அளவிற்கு மரியாதை வைத்துள்ளார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பத்திரிகைகள் வட்டாரத்திலோ இந்தப் பிரச்சினைக்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பதவியிலிருந்து உடல் நலக் குறைவு காரணமாக என்.வரதராஜன் விலகியபோது அடுத்த மூத்தவர் என்கிற நிலையில் இந்த உ.ரா.வரதராசன்தான் அடுத்தப் பொதுச்செயலாளராக ஆகியிருக்க வேண்டும். ஆனால் இப்படியொரு நிலைமையைத் தவிர்க்கவே, என் வரதராஜனின் பதவி விலகலுக்கு முன்பாகவே உ.ரா.வரதராசனின் பதவி நீக்க நடவடிக்கை அவசரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அனைத்துக் கட்சிகளிலும் இருக்கக்கூடிய சிற்சில போட்டி, பொறாமைகள் இக்கட்சியிலும் இருந்திருக்கலாம். அதன் தாக்கம் இவர் மீது அதிகமாக படிந்து அதன் மூலம் இவர் துரத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் பொதுவானவர்கள்.

கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதையும், காணாமல் போயிருப்பதையும் ஒரே நாளில் கண்கூடாகப் பார்த்து கட்சியின் அடிமட்டத் தோழர்கள் குழம்பித்தான் போயிருக்கிறார்கள். நான் அங்கு பார்த்தவகையில் பலரும் ஏதோ ராணுவ ரகசியம்போலத்தான் இதைப் பற்றிப் பேசினார்கள்.

"தெரியலை.." "செயலாளர் அறிக்கையிலதான் படிச்சேன்.." "கட்சின்னா ஆயிரம் இருக்கும்.." "எங்க கட்சில இப்படித்தான்.." "என்ன இருந்தாலும் தோழர் இப்படி செஞ்சிருக்கக் கூடாது.." என்றெல்லாம் மானாவரியாக சொன்னார்களே ஒழிய.. கட்சியைக் குறை கூறி ஒரு வார்த்தை.. ம்ஹும்.. என் காதுபட யாரும் சொல்லவில்லை. அதுதான் இந்த இயக்கம்..

பொதுவாழ்க்கையில் அரிவாள், சுத்தியல் அடையாளத்துடன் கடந்த 45 ஆண்டு கால அனுபவமுள்ள இந்தத் தோழரின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. வடஆற்காடு மாவட்டம் உள்ளியநல்லூர் கிராமத்தில் 9.7.1945 அன்று பிறந்தவர் உ.ரா.வரதராசன்.

'அருவி' என்ற இலக்கிய சிற்றிதழை மாணவப் பருவத்திலேயே நடத்தியுள்ளார். 1967-ம் ஆண்டு ரிசர்வ் வங்கிப் பணியில் சேர்ந்த அவர் 17 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்திருக்கிறார். ரிசர்வ் வங்கிப் பணியில் இருந்தபோதே கட்சியின்பால் ஈர்க்கப்பட்டு கட்சிப் பணியையும் சேர்த்தே செய்து வந்திருக்கிறார்.

1984-ம் ஆண்டு, வங்கிப் பணியைத் துறந்து, கட்சியின் முழுநேர ஊழியராகித் தனது பொது வாழ்க்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்த வரதராசன், 1989-ம் ஆண்டு, நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளராக வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்கிற பெருமையுடன் வெற்றி பெற்றார்.

சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த அவர், பிற்பாடு சி.ஐ.டி.யு.வின் அகில இந்திய செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்தபோது டெல்லி தொழிற்சங்கப் பணிக்காக சென்றிருக்கிறார். இதன் பின்புதான் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளுக்காக பெரும்பாலான நேரங்கள் டெல்லியிலும், கொல்கத்தாவிலுமாக இவரது சேவை கட்சிக்குக் கிடைத்துள்ளது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ்நாட்டில் இவரது குரல் ஒலிக்காமல் இல்லை. ஈழப் போராட்டத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே முன்னின்று ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை சென்னையில் நடத்தியபோது அதனை முன்னின்று நடத்தியவர் இந்தத் தோழர் வரதராசன்தான். .

சிஐடியூவின் அகில இந்தியச் செயலாளராக இருந்திருந்த காரணத்தாலும், சிம்சன் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவராக புகழ் பெற்றிருந்ததாலும் தொழிலாளர் பெருமக்களின் அஞ்சலி இந்தத் தோழருக்கு பெருமளவில் கிட்டியது.

தோழர் பாரதி கிருஷ்ணகுமார் பார்க்கின்ற தோழர்களையெல்லாம் கட்டிப் பிடித்து கதறிக் கொண்டிருந்தார். அவ்வளவு பெரிய ஆளுமை கொண்ட பாரதிகிருஷ்ணகுமார், நடுரோட்டில் உடல் குலுங்கி அழுவதை பார்த்தபோது என்னையறியாமல் கண்கள் கலங்கிவிட்டன. இவர் ஒருவரே கண்ணீரை தைரியமாக வெளியில் விட்டவர். ஒரு ஐந்து பேர் சுற்றி நின்றிருந்தால் அதில் ஒருவர் நிச்சயம் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். துக்கப்படுகிறோம் என்பதை வெளியில் சொல்வதற்குகூட முடியாததுதான் மாவோவின் சிந்தாந்தம்போல..

மாலை அணிவித்துவிட்டு கைகளை உயர்த்தி வீரவணக்கம் செலுத்திய தமிழ் மாநில உயர் மட்டத் தலைவர்களை பார்த்தபோது எனக்கு வெறுப்புதான் வந்தது. எப்படி இவர்களால் சலனமேயில்லாமல் அனைத்தையும் செய்ய முடிகிறது என்றுதான் தெரியவில்லை.

மற்றக் கட்சிகளாக இருந்திருந்தால் வேறுவிதமான சம்பவங்களை இறுதி ஊர்வலத்தில் பார்த்திருக்க முடியும். ஆனால் நான் முதல் பாராவில் சொல்லியிருப்பதுபோல் கடைசிவரையில் கட்டுக்கோப்பாக, கண்ணியமாக ஒரு சிறு எதிர்க்குரல்கூட எழுப்பாமல் இருந்தது இந்தத் தோழர்களின் கட்டுப்பாட்டைக் காட்டினாலும் நமக்குள் கோபம் கொப்பளிக்கத்தான் செய்கிறது.

கட்சியில் பல மட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்புதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பல பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்துக் கொண்டிருந்த கட்சியின் பெண்ணியவாதிகள், தோழரின் உடல் மீட்கப்பட்டவுடன் அப்படியே அமைதியானார்கள். கட்சித் தலைவர்கள் கட்சியின் நியாயத்தை சொல்வதை நிறுத்திவிட்டு தோழரின் அருமை, பெருமைகளை பறை சாற்றத் துவங்கிவிட்டார்கள். தனது கணவரான தோழர் வரதராசன் மீது கட்சியில் புகார் மனு அளித்திருந்த அவரின் துணைவியாரே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால்தான் தோழர் வரதராசன் இந்த முடிவுக்குச் சென்றதாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

தோழர் வரதராசனின் இறுதி மூச்சு தானாகவே அடங்கியிருப்பதாக அத்தனை தோழர்களின் மனதில் பதிய வைக்கும் முயற்சிகள் இந்த இரண்டு நாட்களில் நடந்தேறின.


இதில் மிகப் பெரிய சோகம் அவருடைய விருப்பப்படி அவருடைய உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட முடியாமல் போனதுதான். கிட்டத்தட்ட 2 நாட்கள் முழுவதும் தண்ணீரில் ஊறியிருந்து முகமெல்லாம் கருமையாக மாறிப் போனதாலும், உடல் உப்பியிருந்த காரணத்தாலும் உடலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம்.

“ஜெய் சலோ ஜெய் சலோ
செவ்வணக்கம் செவ்வணக்கம்
வீர வணக்கம் வீரவணக்கம்..
தோழர் வரதராசனுக்கு வீரவணக்கம்..
வீர வணக்கம் வீரவணக்கம்..
தோழர் வரதராசனுக்கு வீரவணக்கம்..
நடப்போம் நடப்போம்..
வரதராசன் காட்டிய பாதையில் நடப்போம்..
செய்வோம் செய்வோம்..
வரதராசன் ஆற்றிய கடமையைச் செய்வோம்..
தொடர்வோம் தொடர்வோம்..
வரதராசன் பணியைத் தொடர்வோம்”

இதுவெல்லாம் இறுதிப் பயணத்திற்காக தோழர் வரதராசனின் உடலை சவவண்டியில் ஏற்றி வைத்துவிட்டு அத்தனை தோழர்களும் உரத்தக் குரலில் எழுப்பிய கோஷங்கள்.

இதில் "தோழர் வரதராசன் காட்டிய பாதையில் நடப்போம்" என்று சொன்னவர்களுக்கு கட்சித் தலைவர்கள் வரதராசனின் "எந்தப் பாதை"யைக் காட்டப் போகிறார்கள் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. அவரை நீக்க வேண்டும் என்ற முனைப்போடு மல்லுக் கட்டியவர்கள்.. இத்தனை வருடங்கள் கட்சிக்காக உழைத்திருக்கிறாரே என்கிற சிந்தனையில்லாமல் தூக்கி வீசிவிட்டு இப்போது எதற்கு இந்தப் புகழாரம்..?

"அவர் தற்கொலை செய்யும் நிலைமைக்குச் செல்வார் என்பது எங்களுக்கு எப்படி தெரியும்..?" என்று இனிமேல் அறிவாளிகளாக கேட்பார்கள் கட்சியின் தமிழகத் தலைவர்கள். "அவர் சாதாரணமாக காபி சாப்பிடத்தான் கொல்கத்தா வந்தார்.." என்று கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் சரடுவிடப் போகிறார்கள்.. தலைவர்கள் வரிசையில் இரண்டாவதாக இருந்துவிட்டு இனிமேல் தான் சாதாரண காம்ரேடுகளில் ஒருவராகத்தான் கட்சி அலுவலகத்திற்கு வரமுடியும் என்பதை எந்தத் தலைவரால்தான் ஜீரணிக்க முடியும்..?

புறக்கணிப்பு என்கிற மிகப் பெரிய கொடூரமான தண்டனையை மனச்சாட்சியுள்ள எந்த மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் புறக்கணிப்பினால்தான் இந்தத் தோழர் தனது முடிவைத் தானே தேடிச் சென்றிருக்கிறார்.

2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோவையில் நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டின்போது, "தோழர்கள் ஜோதிபாசுவும், ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும் தங்களது உடல் நலன் காரணமாக தங்களை கட்சியின் உயர்மட்டக் குழுவில் இருந்து விடுவிக்கச் சொல்லியிருக்கிறார்கள். இது பற்றி கட்சி இந்த மாநாட்டின் இறுதி நாளில் முடிவெடுக்கும்.." என்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரிகளை பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கும் தோழர் உ.ரா.வரதராசன் என்ற இந்த முக்கியத் தோழரால், இந்த உள்ளடிகளை எப்படித் தாங்கிக் கொண்டிருக்க முடியும்..?

கட்சியே. கொள்கைகளே, கோட்பாடுகளே, சித்தாத்தங்களே முக்கியம். மற்றவைகளெல்லாம் பிற்பாடுதான் என்று இயங்கி வரும் மனிதர்களுக்கு கட்சியில் தங்களுக்கான இருப்பிடம்தான் பெரியது. அதுதான் உலகம். அது அவர்கள் கைகளில் இருந்து விடைபெறும்போது வாழ்க்கையே தொலைந்துவிட்டது போலத்தான்.

தோழர் உ.ரா. வரதராசனின் வாழ்க்கையைத் தொலைத்தது அக்கட்சியின் தலைவர்கள்தான். ஒரு நல்ல தலைவனை இழந்து நிற்கும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு நியாயமான, வெளிப்படையான பதிலைச் சொல்ல வேண்டியது அக்கட்சித் தலைவர்களின் பொறுப்பு.

மாலை 4.30 மணியளவில் தியாகராய நகர் கண்ணாம்மாபேட்டை இடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட தோழர் உ.ரா.வரதராசனின் உடலில் வைக்கப்பட்ட தீ, உண்மையிலேயே கடந்த பிப்ரவரி 6-ம் தேதி கொல்கத்தாவில் அவருடைய கட்சியினராலேயே வைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

அவருடைய செயல் நிச்சயம் கோழைத்தனம் அல்ல.. அந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்குப் பெயர் தற்கொலையும் அல்ல. கொலைதான். நிச்சயம் படுகொலைதான்.

தோழர் உ.ரா.வரதராசன் அவர்களுக்கு எனது வீர வணக்கம்.

95 comments:

பிரபாகர் said...

படித்து கொதிப்பாய் இருக்கிறதண்ணா... என்ன மனிதர்கள்... தற்கொலைக்கு துண்டுவதும் கொலைதான். நல்ல ஒரு மனிதரை கொலை செய்திருக்கிறார்கள்.

பிரபாகர்.

சைவகொத்துப்பரோட்டா said...

நெகிழ்ச்சியாக இருக்கிறது, இவரைப்பற்றிய விரிவான தகல்வல்களுக்கு நன்றி அண்ணா.

Romeoboy said...

அண்ணே படிக்கும் போதே ரொம்ப கஷ்டமா இருக்கு.

துளசி கோபால் said...

வருந்துகின்றேன். குடும்பம் பலசமயங்களில் கொடூரமாத்தான் நடந்து'கொல்'கிறது.(தட்டச்சுப்பிழை இல்லை):(

ஸ்ரீராம். said...

மனம் கனக்கிறது...

ஜோதிஜி said...

உண்மைத்தமிழனுக்கு வாழ்த்துகள்
தோழர் ஆன்மா சாந்தியடையட்டும்.
தோழரின் மனைவி இனியாவது அவர் "விரும்பிய" வாழ்க்கை வாழட்டும். இனியாவது செங்கொடிக்குள் இருக்கும் உள்குத்து அரசியல் முடிவுக்கு வந்து மீதி உள்ளவர்களின் உயிரையாவது காப்பாற்றி தோழர்களை தோழைமையாக பார்க்க வேண்டும்? முடிவுக்கு வரட்டும்?

Unknown said...

தோழர் ஆன்மா சாந்தியடையட்டும்

RRSLM said...

தோழர் ஒரு கவரிமான்தான்.

-/பெயரிலி. said...

கிழங்கு அவிப்பகம் சுடச் சுடப்போட்டிருக்கக்கூடிய 'உள்ளியநல்லூர் வரதராசன் s/o ரா: வாழ்வும் மரணமும்' வெளிவந்திருந்தால், எனக்கும் சூடா ஒரு காப்பி வாங்கி வெச்சிடுங்க உண்மைத்தமிழனண்ணா.
முன்கூட்டியே டாங்சு

Ganesan said...

படிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கும் உணர்ச்சி கொள்ள செய்யும் விவரிப்பு.

உண்மை தான் உ.த , உலகிலயே,நன்றாக வாழ்ந்தவர்கள் ,புறகணிக்கப் படும் பொழுது வாழும் வாழ்க்கை கொடுரமானது.

உண்மைத்தமிழன் said...

[[[பிரபாகர் said...
படித்து கொதிப்பாய் இருக்கிறதண்ணா... என்ன மனிதர்கள்... தற்கொலைக்கு துண்டுவதும் கொலைதான். நல்ல ஒரு மனிதரை கொலை செய்திருக்கிறார்கள்.

பிரபாகர்.]]]

தற்கொலைக்குத் தூண்டப்படுவதுகூட ஒருவகையில் கொலைதான்..!

ஆனால் இவர்கள் அரசியல்வாதிகள்.. தப்பித்துவிடுவார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[சைவகொத்துப்பரோட்டா said...
நெகிழ்ச்சியாக இருக்கிறது, இவரைப் பற்றிய விரிவான தகல்வல்களுக்கு நன்றி அண்ணா.]]]

சைவம் நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ROMEO said...
அண்ணே படிக்கும் போதே ரொம்ப கஷ்டமா இருக்கு.]]]

தட்டச்சு செய்யும்போது எனக்கும் இப்படித்தான் இருந்தது ரோமியோ..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...
வருந்துகின்றேன். குடும்பம் பல சமயங்களில் கொடூரமாத்தான் நடந்து'கொல்'கிறது.(தட்டச்சுப் பிழை இல்லை):(]]]

தவறு செய்யாதவர்கள் உலகில் எங்குமே இல்லை..! ஆனால் அதன் விளைவுகள், பாதிப்புகளைப் பொறுத்துத்தான் அதன் மீது தீர்ப்பளிக்க வேண்டும்.

கொள்கைகளே இங்கு கொத்து புரோட்டோ போடப்படும்போது எல்லாவற்றையும்விட மனிதம் முன்னிலை வகிக்க வேண்டாமா..?

சாதாரண குடும்பத்தில் இருந்து பெரிய அறிவாளிகளின் குடும்பங்கள்வரையில் நீயா.. நானா இப்படித்தான் இருக்கிறது டீச்சர்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
மனம் கனக்கிறது...]]]

ஸ்ரீராம் வருகைக்கும், படித்தமைக்கும் நன்றிகள்..!

ISR Selvakumar said...

நெகிழ்ச்சியான கட்டுரை,
”முதல் பிரதி” நிகழ்ச்சிக்கு அவர் சைக்கிளில் வந்து இறங்கினார் என்ற வரியை படித்தபோது ...
எளிமையான மனிதர்களுக்கு இந்த உலகில் இடம் குறைந்து கொண்டே போகிறது என்பது நிரூபணமாகிவிட்டது.

தற்போதைய இந்தியாவின் பொதுவாழ்க்கை மனிதர்களின் நிலை பற்றி பல கேள்விகளை எழுப்பிவிட்டு மறைந்திருக்கிறார் தோழர்.

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

உண்மைத்தமிழனுக்கு வாழ்த்துகள்
தோழர் ஆன்மா சாந்தியடையட்டும்.
தோழரின் மனைவி இனியாவது அவர் "விரும்பிய" வாழ்க்கை வாழட்டும். இனியாவது செங்கொடிக்குள் இருக்கும் உள்குத்து அரசியல் முடிவுக்கு வந்து மீதி உள்ளவர்களின் உயிரையாவது காப்பாற்றி தோழர்களை தோழைமையாக பார்க்க வேண்டும்? முடிவுக்கு வரட்டும்?]]]

இனி யார் வாழ்ந்து என்ன புண்ணியம்..? ஒரு நல்ல, துடிப்பான இதயம் போய்ச் சேர்ந்துவிட்டது..!

உண்மைத்தமிழன் said...

[[[vellachamy said...
தோழர் ஆன்மா சாந்தியடையட்டும்.]]]

நன்றிகள் தோழரே..!

உண்மைத்தமிழன் said...

[[[RR said...
தோழர் ஒரு கவரிமான்தான்.]]]

அதற்கு உதாரணப் புருஷனாகிவிட்டார் நமது தோழர்..!

உண்மைத்தமிழன் said...

[[[-/பெயரிலி. said...

கிழங்கு அவிப்பகம் சுடச் சுடப் போட்டிருக்கக்கூடிய 'உள்ளியநல்லூர் வரதராசன் s/o ரா: வாழ்வும் மரணமும்' வெளிவந்திருந்தால், எனக்கும் சூடா ஒரு காப்பி வாங்கி வெச்சிடுங்க உண்மைத்தமிழனண்ணா.
முன்கூட்டியே டாங்சு]]]

அடடா.. இந்தச் சமயத்துலேயும் கிழக்கை வாரணுமா பெயரிலி..!

மறக்காம வந்ததுக்கும், படிச்சதுக்கும் நன்றிகள்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[காவேரி கணேஷ் said...
படிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கும் உணர்ச்சி கொள்ள செய்யும் விவரிப்பு.
உண்மைதான் உ.த, உலகிலயே, நன்றாக வாழ்ந்தவர்கள் புறகணிக்கப்படும் பொழுது வாழும் வாழ்க்கை கொடுரமானது.]]]

புறக்கணிப்பு ஒருவகையில் அவமானப்படுத்துவது போலத்தான்..! சாதாரண மனிதர்களாலேயே அதனை தாங்க முடியாதபோது.. தொழிலாளர்களிடத்தில் சக தொழிலாளனாய், உற்றத் தோழனாய் பவனி வந்த ஒருவரால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்..?

கட்சிக்காரர்களாலேயே கொலை செய்யப்பட்டவர் என்கிற பெயரும், கட்சி செய்த படுகொலை என்கிற அவப்பெயரும் தமிழக வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது.

உண்மைத்தமிழன் said...

[[[r.selvakkumar said...

நெகிழ்ச்சியான கட்டுரை,
”முதல் பிரதி” நிகழ்ச்சிக்கு அவர் சைக்கிளில் வந்து இறங்கினார் என்ற வரியை படித்தபோது எளிமையான மனிதர்களுக்கு இந்த உலகில் இடம் குறைந்து கொண்டே போகிறது என்பது நிரூபணமாகிவிட்டது.
தற்போதைய இந்தியாவின் பொதுவாழ்க்கை மனிதர்களின் நிலை பற்றி பல கேள்விகளை எழுப்பிவிட்டு மறைந்திருக்கிறார் தோழர்.]]]

உண்மைதான்..

குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் எப்பேர்ப்பட்ட மனிதர்களையும் நிலைகுலைய வைத்துவிடும் என்பதும் வெளிப்பட்டுவிட்டது..!

குறும்பன் said...

இவர் காணாமல் போனதும் வந்த செய்திகளைப்படித்த போது மனிதர் பதவி வேணும் என்பதற்காகவும் தன் மீதான கட்சி நடவடிக்கையிலிருந்து தப்பவும் போடும் வேடம் என்று நினைத்தேன். (இவரை பற்றி ஒன்னும் தெரியாது). இந்த இடுகையை படித்ததும் கட்சி தலைவர்கள் கொலை பண்ணிட்டு எப்படியெல்லாம் சொல்லி உண்மையை மறைத்து பழி சுமத்தின மனிதரை களங்கப்படுத்துறாங்கன்னு புரிந்து வேதனை அதிகமாயிட்டது.

அகநாழிகை said...

அண்ணே, இந்த கம்யூனிஸ்டுகளை என்னன்னு சொல்ல. வரதராஜனின் முடிவு சோகமானது. அவருடைய அரசியல் வாழ்க்கை சொந்த வாழ்க்கையை அர்த்தமில்லாததாக்கிவிட்டது.

- பொன்.வாசுதேவன்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

உங்களது பத்திரிகையாளர் தொழில் பல பின்புலச் செய்திகளைத் தருகிறது..

சில கம்யூன் சித்தாந்தங்களை போகிற போக்கில் எள்ளியிருக்கும் உங்கள் நடை புன்சிரிப்பை வரவழைக்கிறது,இந்தப் பதிவிலும் கூட..

ஆனால் அவரது தற்கொலை முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.கட்சித்தலைவர் கைதாவற்காக தீக்குளித்து இறக்கும் அறிவாளிகளுக்கும் இவருக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் நீங்கள் சொல்வது போல குடும்பத்தகராறு,மனைவி\துணைவி சண்டைக்கெல்லாம் கட்சிரீதியான முடிவுகள் தமிழகத்தில் பல கட்சிகளில் எடுக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணப்பார்த்தேன்;கதி கலங்கி விட்டது !!

-/பெயரிலி. said...

/அடடா.. இந்தச் சமயத்துலேயும் கிழக்கை வாரணுமா பெயரிலி..!/

யாருங்கண்ணே கிழக்கையும் தெக்கையும் வாரினது? சவுண்டிப்பத்ரிகையாளர்கள் கிழங்கு அவிப்பதைப் பத்தியல்லவா சொல்லிட்டிருக்கேன். 'அண்ணன் எப்படா சாவான்? பூராயாமலே பொத்தகம் போடலாம்"ங்குற பொழைப்பு வெறுப்பேத்துதண்ணே. நக்கீரன் முதல் தொடரும் படருமுன்னு எத்தனை கட்டுரை, புத்தம் வருமுன்னு பாருங்க.

அது கெடக்கட்டும். ரெண்டு பொண்டாட்டி வெச்சிருக்க மாநில ஆட்சித்தலைவரு, மடத்துக்கு வந்த பொண்ணுகளை புராண்டுட பெரியவாக்கள் இத்தனை ஆசாமிகளும் ஜாம் ஜாமமென்று ஜில்சா வாழ்க்கை வாழறப்ப இந்த ஆளுக்கு என்னவாச்சு?

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...
இவர் காணாமல் போனதும் வந்த செய்திகளைப் படித்தபோது மனிதர் பதவி வேணும் என்பதற்காகவும் தன் மீதான கட்சி நடவடிக்கையிலிருந்து தப்பவும் போடும் வேடம் என்று நினைத்தேன். (இவரை பற்றி ஒன்னும் தெரியாது). இந்த இடுகையை படித்ததும் கட்சி தலைவர்கள் கொலை பண்ணிட்டு எப்படியெல்லாம் சொல்லி உண்மையை மறைத்து பழி சுமத்தின மனிதரை களங்கப்படுத்துறாங்கன்னு புரிந்து வேதனை அதிகமாயிட்டது.]]]

நல்லவேளை.. இப்பவாவது தெரிஞ்சுக்கிட்டீங்களே..! நன்றி குறும்பன்..!

உண்மைத்தமிழன் said...

[[[அகநாழிகை said...
அண்ணே, இந்த கம்யூனிஸ்டுகளை என்னன்னு சொல்ல? வரதராஜனின் முடிவு சோகமானது. அவருடைய அரசியல் வாழ்க்கை சொந்த வாழ்க்கையை அர்த்தமில்லாததாக்கிவிட்டது.

- பொன்.வாசுதேவன்]]]

நீங்களே பேசித் தீர்த்துக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிருந்தா காலப்போக்குல இது தானா போயிருக்கும். இல்லாட்டி அவங்களுக்குள்ளே தீர்த்திருப்பாங்க..!

இதற்கான காரணங்கள் வேறு, வேறாக இருக்கலாம்..! கட்சி இது போன்ற விஷயங்களில் தலையிடுவது தவறு..!

உண்மைத்தமிழன் said...

[[[அறிவன்#11802717200764379909 said...

உங்களது பத்திரிகையாளர் தொழில் பல பின் புலச்செய்திகளைத் தருகிறது.
சில கம்யூன் சித்தாந்தங்களை போகிற போக்கில் எள்ளியிருக்கும் உங்கள் நடை புன்சிரிப்பை வரவழைக்கிறது, இந்தப் பதிவிலும்கூட..
ஆனால் அவரது தற்கொலை முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கட்சித் தலைவர் கைதாவற்காக தீக்குளித்து இறக்கும் அறிவாளிகளுக்கும் இவருக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.]]]

இதனை ஏற்கெனவே இரண்டு, மூன்று இடங்களில் சொல்லியிருக்கிறீர்கள் அறிவன்..

மீண்டும் சொல்கிறேன். இதை அறிவுப்பூர்வமாக தயவு செய்து அணுகாதீர்கள்.. உணர்ச்சிப்பூர்வமாக சிந்தியுங்கள்..! புரியும்..!

[[[ஆனால் நீங்கள் சொல்வது போல குடும்பத் தகராறு,மனைவி\துணைவி சண்டைக்கெல்லாம் கட்சி ரீதியான முடிவுகள் தமிழகத்தில் பல கட்சிகளில் எடுக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணப் பார்த்தேன்; கதி கலங்கிவிட்டது!!]]]

கம்யூனிஸ இயக்கங்களைத் தவிர மற்றக் கட்சிகள் கலகலத்துப் போயிருக்கும்..!

கம்யூனிஸ இயக்கங்களுக்கு இது ஒரு கரும்புள்ளி..!

உண்மைத்தமிழன் said...

[[[-/பெயரிலி. said...
/அடடா.. இந்தச் சமயத்துலேயும் கிழக்கை வாரணுமா பெயரிலி..!/

யாருங்கண்ணே கிழக்கையும் தெக்கையும் வாரினது? சவுண்டிப் பத்ரிகையாளர்கள் கிழங்கு அவிப்பதைப் பத்தியல்லவா சொல்லிட்டிருக்கேன். 'அண்ணன் எப்படா சாவான்? பூராயாமலே பொத்தகம் போடலாம்"ங்குற பொழைப்பு வெறுப்பேத்துதண்ணே. நக்கீரன் முதல் தொடரும் படருமுன்னு எத்தனை கட்டுரை, புத்தம் வருமுன்னு பாருங்க.]]]

ஆனால் இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது பெயரிலி..

ஒரு சில எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் தாங்கள் சார்ந்திருக்கும், தூக்கிப் பிடித்திருக்கும் கொள்கைகளுக்கேற்ப ஈழப் பிரச்சினையை அணுகுவதால் பல தரப்பட்ட உண்மைத் தகவல்களும் பொதுமக்களின் பார்வைக்கு வருவதில்லை. வைக்கப்படுவதில்லை.

அதனால் ஈழம் பற்றிய பலவிதக் கண்ணோடத்துடன் கூடிய புத்தகங்களை நாம் வரவேற்கத்தான் வேண்டும்..!

கிழக்கு எழுதிய நேரம் சூட்டோடு சூடா என்று நீங்கள் சொன்னாலும், பத்திரிகை விநியோகத் தொழிலின் தர்மப்படி அதுதான் மிகச் சரியான தருணம்..!

பொதுமக்களைப் பொருத்தவரையில் அவர்கள் மனதில் அதன் தாக்கம் இருக்கின்றபோதே புத்தகத்தை கண்ணில் பார்த்தால். வாங்கத் தோன்றும்.. படித்தால் குறைந்தபட்சத் தகவல்களைத் தெரிந்து கொள்வார்கள்.

[[[அது கெடக்கட்டும். ரெண்டு பொண்டாட்டி வெச்சிருக்க மாநில ஆட்சித் தலைவரு, மடத்துக்கு வந்த பொண்ணுகளை புராண்டுட பெரியவாக்கள் இத்தனை ஆசாமிகளும் ஜாம் ஜாமமென்று ஜில்சா வாழ்க்கை வாழறப்ப இந்த ஆளுக்கு என்னவாச்சு?]]]

அதான் அவரே சொல்லாமல் சொல்லியிருக்காரேண்ணே.. தான் ஒரு கவரிமான்னு.. இது போதாதா..?

பாலாஜி சங்கர் said...

தோழரை பற்றி அறியாத தகவல்கள்
நல்ல பதிவு

Anonymous said...

//அறிவின் சிகரங்கள் இதனைக் 'கோழைத்தனம்' என்று வர்ணிப்பது காலம்காலமாக நடந்துதான் வருகிறது. ஆனால் அவர்களுக்கு இது மாதிரியான சந்தர்ப்பங்கள் வந்து தொலையாதது அவர்களது அதிர்ஷ்டம் என்பதை மட்டும் அவர்கள் உணர்வதே இல்லை.//


யாரந்த அறிவின் சிகரங்கள்?

மனநல மருத்துவர்களே அவர்கள்.

அவர்கள் எந்த தற்கொலையையும் நியாயப்படுத்துவதில்லை.

எக்காரணத்தைக்கொண்டும் அச்செயல் நடந்திருந்தாலும், அதை கோழைத்தனம் என்றே சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

அவர்கள் கருத்தின்படி, ஒருவனோ, அல்லது ஒருத்தியோ, தன் செயலில் எதிர்வினைகளை எதிர்னோக்கி வெல்ல திராணியில்லாமல், பயந்தோடும் (தற்கொலைசெய்துகொள்ளும்) கோழைகள் இவர்கள் என்கிறார்கள்.

இந்த அறிவு சிகரங்களோடுதான் உ.த எதிர்வாதம் பண்ணவேண்டும்.

BADRINATH said...

உங்கள் தலைப்பு சரிதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.. அவர் குடும்பம் கட்சி என்று அவருக்கு எதிராக அனைத்தும் ஒன்று சேர்ந்து கத்தியின்றி ரத்தமின்றி நடத்திய.................. ... கண்ணீர் அஞ்சலியைத் தவிர தோழருக்கு வேறு என்ன தர இயலும்..
தோழர் புகழ் வாழ்க...
பத்ரிநாத்

-/பெயரிலி. said...

/
கிழக்கு எழுதிய நேரம் சூட்டோடு சூடா என்று நீங்கள் சொன்னாலும், பத்திரிகை விநியோகத் தொழிலின் தர்மப்படி அதுதான் மிகச் சரியான தருணம்..!/

அதுதான் நானும் காத்துக்கிட்டிருக்கேன். சம்பந்தப்பட்டவங்களோட புள்ளிங்க, பொண்ணுங்க, பொண்டாடிங்களுக்கு எப்படா கருமாதி ஆவுமுன்னு. ஒரு பொத்தகம் போட்டடமில்லியா? பதிப்பிக்கவா ஆளில்லாம போறானுங்க.

ரேப் பண்ணற இண்டியன் ஆர்மியோட ஆண்குறியைப் புடிச்சி பதிக்கத் தெரியாத துப்புக்கெட்ட கபோதிங்க இந்தப் பதிப்பாளனுங்களுக்கும் பாரா பாராவா எழுதுற முண்டங்களும், பக்கம் பக்கமா பதிவு நீதி சொல்லி என்ன பண்ணப்போறானுங்க. இவனுங்களோட புள்ளிங்க பொண்ணுங்களுக்கு என்னிக்கடா காருல பஸ்ஸுல மோதி கருமாதி ஆவும் பொத்தகம் போடலாமுன்னு எத்தன பேரு போட்டிக்கு காத்துக்கிட்டிப்பானுங்களோன்னு இவனுங்களுக்கெல்லாம் ஏன் தோணறதில்லியோ தெர்யல்ல. மத்தவன் இடத்துல தன்னையும் வெச்சு பாக்கவேணாமா?

அடுத்தவன் புண்ணுன்னா அதிலேயே நக்கிப் பொழைக்கிறது! மெய்யாலுமே கவலைப்பட்டவனெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டேயிருக்கான். காசு பண்ணறவன் பட்டும் பான்ப(பா)ராக்கை போட்டுக்கிட்டு பொத்தகம் பண்ணறான்.

இங்கே ரூட்டை மாத்த விரும்பல்ல, வுட்டுருடேன். ஆனா, இவனுங்களுல்ல ஒருத்தன் மண்டைய போட்டாலும், ஒரு சொட்டு கவலப்படமாட்டேன். அவ்ளோதான் சொல்லலாம்.

உண்மைத்தமிழன் said...

[[[பாலாஜி said...
தோழரை பற்றி அறியாத தகவல்கள்
நல்ல பதிவு]]]

நன்றி பாலாஜி..!

-/பெயரிலி. said...

/படித்தால் குறைந்தபட்சத் தகவல்களைத் தெரிந்து கொள்வார்கள். /

டெலிசீரியலுக்கு கதை வுடுறவனெல்லாம் எதுக்குங்க வரலாறு வடிக்கணும்? குறைந்தபட்சத்தகவலா சொல்லறானுங்க? தமக்கு வேண்டின எடத்துல கொறைச்சு வேண்டாத எடத்துல கொழப்பி, இத வெச்சு வரலற்ற வாசிக்கிற இந்தீயதேசபக்தர்களைப் பத்திச் சொல்லவே வேணாம். கிருபாநந்தினி அம்மையே மேல்!

உண்மைத்தமிழன் said...

[[[Jo Amalan Rayen Fernando said...
/அறிவின் சிகரங்கள் இதனைக் 'கோழைத்தனம்' என்று வர்ணிப்பது காலம்காலமாக நடந்துதான் வருகிறது. ஆனால் அவர்களுக்கு இது மாதிரியான சந்தர்ப்பங்கள் வந்து தொலையாதது அவர்களது அதிர்ஷ்டம் என்பதை மட்டும் அவர்கள் உணர்வதே இல்லை./

யாரந்த அறிவின் சிகரங்கள்?
மனநல மருத்துவர்களே அவர்கள்.
அவர்கள் எந்த தற்கொலையையும் நியாயப்படுத்துவதில்லை.
எக்காரணத்தைக் கொண்டும் அச்செயல் நடந்திருந்தாலும், அதை கோழைத்தனம் என்றே சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
அவர்கள் கருத்தின்படி, ஒருவனோ, அல்லது ஒருத்தியோ, தன் செயலில் எதிர்வினைகளை எதிர்னோக்கி வெல்ல திராணியில்லாமல், பயந்தோடும் (தற்கொலை செய்துகொள்ளும்) கோழைகள் இவர்கள் என்கிறார்கள். இந்த அறிவு சிகரங்களோடுதான் உ.த எதிர்வாதம் பண்ணவேண்டும்.]]]

வேற வழி.. என்ன செய்யறது.. எதிர்வாதம் செஞ்சுதான் ஆகணும்னா செஞ்சிரலாம்..!

அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.. அவங்களுக்கு இருக்குற மாதிரியே அந்த அறிவுப்பூர்வமான மூளை எனக்கு வேணும்..

அப்புறம்தான் எல்லாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[BADRINATH said...
உங்கள் தலைப்பு சரிதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.. அவர் குடும்பம் கட்சி என்று அவருக்கு எதிராக அனைத்தும் ஒன்று சேர்ந்து கத்தியின்றி ரத்தமின்றி நடத்திய.................. ... கண்ணீர் அஞ்சலியைத் தவிர தோழருக்கு வேறு என்ன தர இயலும்..
தோழர் புகழ் வாழ்க...
பத்ரிநாத்]]]

நான் வைத்திருக்கும் தலைப்பு நிச்சயம் சரியானதுதான்.. எனக்கு அதில் எந்தச் சந்தேகமும் இல்லை பத்ரி ஸார்..!

Anonymous said...

அடிப்படை சிந்தனையே தவறாக எனக்குப் படுகிறது!

என்ன சிந்தனை?

ஒருவன் கம்யூனிஸ்டாக இருந்தால் மனதிடம் மிக்கவனாக இருப்பான்.

இதைப்போலவே,

ஒரு ஆண்மகன் என்றால் பெண்ணைவிட மனதிடம்.

போலிசாக இருந்தால் டிட்டோ
இராணுவ வீரனாக இருந்தால் டிட்டோ
தேவராக இருந்தால் டிட்டோ.

எதிரியோடு தன் உயிருக்குமஞ்சாமல் போரிடும் இராணுவ வீரன், தன் தாயின் ஈமச்சடங்குகளைச்செய்து வர விடுப்பு கிடைக்கவில்லயென்பதற்காக தன்னைச்சுட்டுக்கொண்டு சாகிறான். மல்யுத்த வீரன், தன் மனைவி தன்னிடம் இருந்து விலகிவிடடாள் என்று குழுங்கிகுழுங்கி அழுகிறான்.

உலகவெற்றிக்கோப்பையைக்கொண்டுவந்த கபில் தன்மீது ஒரு hearsay குற்றம் சாட்டபட்டதால், டிவி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

வரதராசரின் மரணம் உணர்ச்சிப்பூர்வமாக அணுகப்பட்டிருக்கிறது. TV journalist அல்லவா?

அறிவுப்பூர்வமாக இருந்தால் sensationalise பண்ணமுடியாதே!

தோழர் செய்தது கோழைத்தனம் எனச்சொல்ல விருப்பமில்லாவிட்டால், இப்படிச்சொல்லலாம்:

தோழருக்கு சித்தாந்தம் வேண்டுமா? இல்லை கட்சிப்பதவி, அல்லது உறுப்பினர் அட்டைவேண்டுமா?

IAS interviewல் ஏன் இதில் சேரவிரும்புகிறாய்? என்று கேட்டால், மக்களுக்குச் சேவை செய்ய என்று புழுகுவார்கள்.

ஆனால் அருணா ராயைப்போன்றோர் IAS சில்லாண்டுகள் பணிபுரிந்து விலகி, அதைவிட NGO ஆக இருப்பது பொதுசேவைக்கு வசதி என்றார்கள்.

இதைப்போல, தோழர் கட்சியில் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன என்று பொதுசேவையைத் தொடர்ந்து செய்யலாம். சோம்நாத் சட்டர்ஜி இல்லையா? கட்சியிலிருந்து அவரையும் விலக்கிவிடவில்லையா? தற்கொலையை நோக்கி ஓடினாரா?

நான் ஏன் ‘விடாது துரத்துப்வர்கள்’ கூட்டத்தில் இல்லை? இருந்தால், ‘அண்ணே அச்த்திட்டீங்க’ என்று சொல்லவேண்டும். இல்லாவிட்டால், அண்ணன் ‘நான் யார் தெரியுமா?’ என்று எச்சரிக்கை செய்வார். இல்லையா?

இதைப்போல்வே, ஒரு கட்சியில் இருப்பதும். சுதந்த்திரமாக செயல்பட முடியாது. கட்சி விலக்கிவிட்டதை ஒரு blessing in disguise என எடுத்து, கம்யுனிஸு சித்தாந்தத்தை மட்டும் பிடித்துக்கொண்டு பொதுசேவையில் இன்னும் ஆர்வத்தோடு ஈடுப்டலாம்.

தொழிலாளர்கள் இன்னும் நசுக்கப்ப்டுகிறார்கள். சாதிக்கொடுமை இன்னும் தொடர்க்கிறது தமிழகத்தில். நடிகனுக்கு உயிரைகொடுத்து சாகுபவர்கள் இங்கே. பணமுதலைகளிடம் நடிகன் கைகோர்த்துகொண்டு தமிழரளைச் சுரண்டி வாழ்கிறான்!

எங்கே வரதராஜன்?

ஆளைகாணேம்.



Think out of the box. You will get more interesting conclusions!

உண்மைத்தமிழன் said...

[[[-/பெயரிலி. said...
/கிழக்கு எழுதிய நேரம் சூட்டோடு சூடா என்று நீங்கள் சொன்னாலும், பத்திரிகை விநியோகத் தொழிலின் தர்மப்படி அதுதான் மிகச் சரியான தருணம்..!/

அதுதான் நானும் காத்துக்கிட்டிருக்கேன். சம்பந்தப்பட்டவங்களோட புள்ளிங்க, பொண்ணுங்க, பொண்டாடிங்களுக்கு எப்படா கருமாதி ஆவுமுன்னு. ஒரு பொத்தகம் போட்டடமில்லியா? பதிப்பிக்கவா ஆளில்லாம போறானுங்க. ரேப் பண்ணற இண்டியன் ஆர்மியோட ஆண்குறியைப் புடிச்சி பதிக்கத் தெரியாத துப்புக் கெட்ட கபோதிங்க இந்தப் பதிப்பாளனுங்களுக்கும் பாரா பாராவா எழுதுற முண்டங்களும், பக்கம் பக்கமா பதிவு நீதி சொல்லி என்ன பண்ணப்போறானுங்க. இவனுங்களோட புள்ளிங்க பொண்ணுங்களுக்கு என்னிக்கடா காருல பஸ்ஸுல மோதி கருமாதி ஆவும் பொத்தகம் போடலாமுன்னு எத்தன பேரு போட்டிக்கு காத்துக்கிட்டிப்பானுங்களோன்னு இவனுங்களுக்கெல்லாம் ஏன் தோணறதில்லியோ தெர்யல்ல. மத்தவன் இடத்துல தன்னையும் வெச்சு பாக்கவேணாமா?
அடுத்தவன் புண்ணுன்னா அதிலேயே நக்கிப் பொழைக்கிறது! மெய்யாலுமே கவலைப்பட்டவனெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டேயிருக்கான். காசு பண்ணறவன் பட்டும் பான்ப(பா)ராக்கை போட்டுக்கிட்டு பொத்தகம் பண்ணறான்.
இங்கே ரூட்டை மாத்த விரும்பல்ல, வுட்டுருடேன். ஆனா, இவனுங்களுல்ல ஒருத்தன் மண்டைய போட்டாலும், ஒரு சொட்டு கவலப்படமாட்டேன். அவ்ளோதான் சொல்லலாம்.]]]

சரி.. சரி.. விடுங்க தோழரே..! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாயிண்ட் ஆஃப் வியூ..!

ஆனாலும் புத்தக விற்பனையின் மூலம் ஈழப் பிரச்சினை இன்னமும் கொஞ்சம் மக்களிடம் சென்றடைந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[-/பெயரிலி. said...
/படித்தால் குறைந்தபட்சத் தகவல்களைத் தெரிந்து கொள்வார்கள்./

டெலிசீரியலுக்கு கதை வுடுறவனெல்லாம் எதுக்குங்க வரலாறு வடிக்கணும்? குறைந்தபட்சத் தகவலா சொல்லறானுங்க? தமக்கு வேண்டின எடத்துல கொறைச்சு வேண்டாத எடத்துல கொழப்பி, இத வெச்சு வரலற்ற வாசிக்கிற இந்தீய தேசபக்தர்களைப் பத்திச் சொல்லவே வேணாம். கிருபாநந்தினி அம்மையே மேல்!]]]

ஹா.. ஹா.. ஹா.. கிருபாநந்தினி கதையையும் படிச்சிட்டீங்களா..?

ஸோ.. உங்களுக்கு பி.பி. எகிறிக்கிட்டே இருக்குன்னு நினைக்கிறேன்..

இந்தப் புத்தகம், மேடைப் பேச்சு எல்லாமுமே சம்பிரதாயம் மாதிரி மொதல்ல தெரிஞ்சாலும் இவற்றைத் தவிர மக்களுக்கு நெருக்கமான வேறுவகை ஊடகங்கள் இல்லாததால் இவற்றை அனுசரித்துத்தான் போக வேண்டியிருக்கிறது..

உண்மைத்தமிழன் said...

[[[Jo Amalan Rayen Fernando said...

அடிப்படை சிந்தனையே தவறாக எனக்குப்படுகிறது! என்ன சிந்தனை?
ஒருவன் கம்யூனிஸ்டாக இருந்தால் மனதிடம் மிக்கவனாக இருப்பான்.
இதைப் போலவே, ஒரு ஆண்மகன் என்றால் பெண்ணைவிட மனதிடம்.
போலிசாக இருந்தால் டிட்டோ இராணுவ வீரனாக இருந்தால் டிட்டோ
தேவராக இருந்தால் டிட்டோ.
எதிரியோடு தன் உயிருக்குமஞ்சாமல் போரிடும் இராணுவ வீரன், தன் தாயின் ஈமச்சடங்குகளைச்செய்து வர விடுப்பு கிடைக்கவில்லயென்பதற்காக தன்னைச் சுட்டுக்கொண்டு சாகிறான். மல்யுத்த வீரன், தன் மனைவி தன்னிடம் இருந்து விலகிவிடடாள் என்று குழுங்கி குழுங்கி அழுகிறான்.
உலக வெற்றிக் கோப்பையைக் கொண்டுவந்த கபில் தன் மீது ஒரு hearsay குற்றம் சாட்டபட்டதால், டிவி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். வரதராசரின் மரணம் உணர்ச்சிப்பூர்வமாக அணுகப்பட்டிருக்கிறது. TV journalist அல்லவா?
அறிவுப்பூர்வமாக இருந்தால் sensationalise பண்ணமுடியாதே!
தோழர் செய்தது கோழைத்தனம் எனச் சொல்ல விருப்பமில்லாவிட்டால், இப்படிச் சொல்லலாம்: தோழருக்கு சித்தாந்தம் வேண்டுமா? இல்லை கட்சிப் பதவி, அல்லது உறுப்பினர் அட்டை வேண்டுமா? IAS interviewல் ஏன் இதில் சேர விரும்புகிறாய்? என்று கேட்டால், மக்களுக்குச் சேவை செய்ய என்று புழுகுவார்கள். ஆனால் அருணாராயைப் போன்றோர் IAS சில்லாண்டுகள் பணிபுரிந்து விலகி, அதைவிட NGO ஆக இருப்பது பொதுசேவைக்கு வசதி என்றார்கள்.
இதைப் போல, தோழர் கட்சியில் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன என்று பொதுசேவையைத் தொடர்ந்து செய்யலாம். சோம்நாத் சட்டர்ஜி இல்லையா? கட்சியிலிருந்து அவரையும் விலக்கிவிடவில்லையா? தற்கொலையை நோக்கி ஓடினாரா?
நான் ஏன் ‘விடாது துரத்துப்வர்கள்’ கூட்டத்தில் இல்லை? இருந்தால், ‘அண்ணே அச்த்திட்டீங்க’ என்று சொல்லவேண்டும். இல்லாவிட்டால், அண்ணன் ‘நான் யார் தெரியுமா?’ என்று எச்சரிக்கை செய்வார். இல்லையா? இதைப் போல்வே, ஒரு கட்சியில் இருப்பதும். சுதந்த்திரமாக செயல்பட முடியாது. கட்சி விலக்கிவிட்டதை ஒரு blessing in disguise என எடுத்து, கம்யுனிஸு சித்தாந்தத்தை மட்டும் பிடித்துக்கொண்டு பொதுசேவையில் இன்னும் ஆர்வத்தோடு ஈடுப்டலாம்.
தொழிலாளர்கள் இன்னும் நசுக்கப்ப்டுகிறார்கள். சாதிக் கொடுமை இன்னும் தொடர்க்கிறது தமிழகத்தில். நடிகனுக்கு உயிரை கொடுத்து சாகுபவர்கள் இங்கே. பணமுதலைகளிடம் நடிகன் கைகோர்த்துகொண்டு தமிழரளைச் சுரண்டி வாழ்கிறான்! எங்கே வரதராஜன்? ஆளை காணேம்.
Think out of the box. You will get more interesting conclusions!]]]

ஐயா.. பெரியவரே.. ஐயன்மீர்..

தாங்கள் யார்? எந்த ஊர்..? என்ன பேர்..? எங்களுடன் எப்படித் தொடர்பு என்பதெல்லாம் தெரியாத நிலையிலேயே உங்களுடன் இப்போது மல்லுக் கட்ட வேண்டியிருக்கிறது..!

முடியல ஸார்.. விட்ருங்க.. உங்களுக்கு அந்த மனநல மருத்துவர்களே மேல்..!

முருகா.. முருகா.. முருகா..!

மணிஜி said...

detailing ல் உங்களை அடிச்சுக்க முடியாது அண்ணே! என் அஞ்சலிகளும்..

வரதராஜலு .பூ said...

வரதராஜலுக்கு எனது வீரவணக்கம்

//அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத்துதான் பிடிவாதமாக வரதராசனை நீக்கினார் என்று சாவிற்கான பழியை பிரகாஷ்காரத் மீது வீசுகிறார்கள் தமிழ் மாநிலத் தலைவர்கள்
//
ஏசி கார்ல போவாரே அந்த ஆளுதானே?

-/பெயரிலி. said...

/ஸோ.. உங்களுக்கு பி.பி. எகிறிக்கிட்டே இருக்குன்னு நினைக்கிறேன்.. /

அப்படியே! ;-) இப்போதான் டிவிட்டரிலே போட்டுவிட்டுவந்தேன்:

My only wish at this moment is bringing back 1986/1987; Bringing back IPKF in Jaffna, and put கிருபாநந்தினி in பிரம்படி லேன் on that day

ரவி said...

உண்மை அண்ணே. உங்களது கடந்த இரு இடுகைகளும் உங்கள் கையில் சாட்டையை எடுத்து சுழற்றுவதுபோல வந்து விழுந்துள்ளது. அற்புதம்.

ஈ ரா said...

தனி மனித வாழ்வில் சறுக்கல்கள் இருப்பதை சகித்துக் கொள்ளாத இயக்கம் என்று காட்டிக்க் கொள்ள நினைத்தார்களா என்று தெரியவில்லை...இந்த மனிதராவது உயிரை விடுவதை விட வேறு ஏதாவது மார்க்கம் தேடியிருக்கலாம்... ஆனால் என்ன செய்ய? மிகப் பெரிய சிந்தனாவாதி சிந்தித்தே துவண்டு இருப்பார் என்று நினைக்கிறேன்..

உண்மைகள் அவர் தனிப்பட்ட வாழ்வு சம்பந்தமாக இருந்தால் அது இனி வெளி வராமால் இருந்தாலே அவருக்கு செய்யும் மரியாதை...

Anbarasu S said...

நல்ல மனிதர். ஆனால் தற்கொலை நல்ல முடிவாக தோன்றவில்லை.

VISA said...

தற்கொலை செய்துகொள்வதை கோழைத்தனம் என்று வகைப்படுத்துவதன் நோக்கம் தற்கொலை எண்ணத்தை ஊக்குவிக்காமல் இருக்கவே.
ஆனால் எல்லா தற்கொலைகளும் கோழைத்தனமான முடிவல்ல.

1. தமிழகத்தில் சமீபத்தில் ஒரு கட்சியின் பொறுப்பிலிருந்Tஹ ஒருவர் படு பாதக குற்றங்களை செய்தார் என்பதற்காக அவருடைய பதவியை பறித்து அதை அவருடைய தந்தையிடம் பத்திரமாக ஒப்படைத்தது ஒரு திராவிட கட்சி. கட்சியை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் நடத்த தொடங்கிவிட்டார்கள். இதில் இன்னும் கொள்கை கோட்பாடு என்று இருப்பவர்களுக்கு மரித்து போவதை விட வேறு வழி இல்லை என்று தான் அன்னாருடைய முடிவு சொல்கிறது.

2. ஒருவரின் குடும்ப பிரச்சனைக்கு கட்சி நீதி வழங்குகிற சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டங்கள் என்ற பெயரில் சில நடைமுறையில் உள்ளன. அவற்றை மீறுகிற போது அது குற்றம் என கருதப்பட்டு வழக்கு பதியப்படுகிறது. அப்படி வழக்கு பதியப்பட்ட பின் அவர் நிரபராதி என்று வெளியே வரும் வரை கட்சி பொறுப்பிலோ அல்லது ஒரு உத்தியோகத்திலோ இருந்து அவருக்கு விலக்கு அளிப்பது கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் குடும்பத்தின் பெட்ரூம் வரை வந்து கட்சி நீதி சொல்வது வினோதம்.

3. அந்Tஹ கட்சி இன்னும் அவரை நீக்கியதற்கான காரணாத்தை தெளிவாக சொல்ல மறுக்கிறது. மூடி மறைக்கிறது. அது அவர்களுடைய கொள்கையாகவும் கோட்பாடாகவும் இருந்Tஹுவிட்டு போகட்டும். ஆனால் அந்த கட்சியில் எனக்கு பிடித்தது இது தான். ஒருவரின் தற்கொலையை வைத்து கோஷ்டி பிரித்து மட்டமான ஒரு அரசியல் நாடகத்தை அந்த கட்சி தோழர்கள் அரங்கேற்றவில்லை. இதுவே வேறொரு கட்சியாக இருந்திருந்தால் இறுதி ஊர்வலம் ஒரு குருதி ஊர்வலமாக நடந்திருக்கும். எல்லா ஒழுக்க நெறிமுறைகளிலும் வன்மமும் அன்பும் கலந்தே இருக்கிறது. ஹிட்லரின் கொடுங்கோலாட்சி கூட தன் ஜாதி மேல் இருந்த ஈடுபாட்டில் உதயமானது தானே.

4. தற்கொலை இந்திய தண்டனை சட்டப்படு குற்றம். கருணை கொலை செய்யவும் அனுமதி வாங்கவேண்டியிருக்கிறது. எனக்கு இதில் முழுமையான உடன்பாடு இல்லை. அதே சமயம் முழுமையாக ஆதரிக்கவும் இல்லை. இரண்Dஉ வகையான விவாதங்களும் மனதுக்குள் நிறைகின்றன. உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ சொல்லுங்கள் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[தண்டோரா ...... said...
detailing-ல் உங்களை அடிச்சுக்க முடியாது அண்ணே! என் அஞ்சலிகளும்..]]]

வாங்க தண்டோரா அண்ணே..

உங்களை மாதிரி இருபது வரில ஊசி மாதிரி கவிதை எழுதி குத்தத் தெரியலைண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[வரதராஜலு .பூ said...

வரதராஜலுக்கு எனது வீரவணக்கம்

//அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத்துதான் பிடிவாதமாக வரதராசனை நீக்கினார் என்று சாவிற்கான பழியை பிரகாஷ்காரத் மீது வீசுகிறார்கள் தமிழ் மாநிலத் தலைவர்கள்//

ஏசி கார்ல போவாரே அந்த ஆளுதானே?]]]

இப்போது எல்லாத் தோழர்களுமே ஏஸி கார்தான்..!

காலம் மாறிப் போச்சு வரதராஜூலு ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[-/பெயரிலி. said...

/ஸோ.. உங்களுக்கு பி.பி. எகிறிக்கிட்டே இருக்குன்னு நினைக்கிறேன்.. /

அப்படியே! ;-) இப்போதான் டிவிட்டரிலே போட்டுவிட்டுவந்தேன்:

My only wish at this moment is bringing back 1986/1987; Bringing back IPKF in Jaffna, and put கிருபாநந்தினி in பிரம்படி லேன் on that day]]]

ஹா.. ஹா.. ஏன் இந்தக் கொலை வெறி..? விடுங்கண்ணே.. இதைப் போய் பெரிசு பண்ணிக்கிட்டு..!!!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
உண்மை அண்ணே. உங்களது கடந்த இரு இடுகைகளும் உங்கள் கையில் சாட்டையை எடுத்து சுழற்றுவதுபோல வந்து விழுந்துள்ளது. அற்புதம்.]]]

நன்றி தம்பி..!

டெய்லி இப்படியொரு வேலை வந்தா நான் என் பொழைப்பை எப்படி பார்க்குறது..?

உண்மைத்தமிழன் said...

[[[ஈ ரா said...
தனி மனித வாழ்வில் சறுக்கல்கள் இருப்பதை சகித்துக் கொள்ளாத இயக்கம் என்று காட்டிக்க் கொள்ள நினைத்தார்களா என்று தெரியவில்லை. இந்த மனிதராவது உயிரை விடுவதைவிட வேறு ஏதாவது மார்க்கம் தேடியிருக்கலாம். ஆனால் என்ன செய்ய? மிகப் பெரிய சிந்தனாவாதி சிந்தித்தே துவண்டு இருப்பார் என்று நினைக்கிறேன்..
உண்மைகள் அவர் தனிப்பட்ட வாழ்வு சம்பந்தமாக இருந்தால் அது இனி வெளி வராமால் இருந்தாலே அவருக்கு செய்யும் மரியாதை.]]]

உண்மைகள் வெளிவந்துதான் தீர வேண்டும் என்கிறேன் நான். இல்லாவிடில் இந்தத் தோழரின் வருங்கால சரித்திரப் புத்தகத்தில் ஒரு கறுப்புப் புள்ளியோடுதான் இவர் தமிழகத்து மக்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தின் வருங்காலத் தொண்டர்களுக்கும் அறிமுகமாவார்.

அது இதைவிடக் கெடுதியில்தான் போய் முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Anbarasu Selvarasu said...
நல்ல மனிதர். ஆனால் தற்கொலை நல்ல முடிவாக தோன்றவில்லை.]]]

நல்ல முடிவில்லைதான். ஆனால் என்ன செய்ய? அவர் மனதிற்கு இதைவிடச் சிறந்த வழி எதுவும் தோன்றியிருக்காது..!

உண்மைத்தமிழன் said...

[[[VISA said...
தற்கொலை செய்துகொள்வதை கோழைத்தனம் என்று வகைப்படுத்துவதன் நோக்கம் தற்கொலை எண்ணத்தை ஊக்குவிக்காமல் இருக்கவே.
ஆனால் எல்லா தற்கொலைகளும் கோழைத்தனமான முடிவல்ல.

1. தமிழகத்தில் சமீபத்தில் ஒரு கட்சியின் பொறுப்பிலிருந்Tஹ ஒருவர் படு பாதக குற்றங்களை செய்தார் என்பதற்காக அவருடைய பதவியை பறித்து அதை அவருடைய தந்தையிடம் பத்திரமாக ஒப்படைத்தது ஒரு திராவிட கட்சி. கட்சியை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் நடத்த தொடங்கிவிட்டார்கள். இதில் இன்னும் கொள்கை கோட்பாடு என்று இருப்பவர்களுக்கு மரித்து போவதைவிட வேறு வழி இல்லை என்றுதான் அன்னாருடைய முடிவு சொல்கிறது.

2. ஒருவரின் குடும்ப பிரச்சனைக்கு கட்சி நீதி வழங்குகிற சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டங்கள் என்ற பெயரில் சில நடைமுறையில் உள்ளன. அவற்றை மீறுகிறபோது அது குற்றம் என கருதப்பட்டு வழக்கு பதியப்படுகிறது. அப்படி வழக்கு பதியப்பட்ட பின் அவர் நிரபராதி என்று வெளியே வரும்வரை கட்சி பொறுப்பிலோ அல்லது ஒரு உத்தியோகத்திலோ இருந்து அவருக்கு விலக்கு அளிப்பதுகூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் குடும்பத்தின் பெட்ரூம்வரை வந்து கட்சி நீதி சொல்வது வினோதம்.

3. அந்Tஹ கட்சி இன்னும் அவரை நீக்கியதற்கான காரணாத்தை தெளிவாக சொல்ல மறுக்கிறது. மூடி மறைக்கிறது. அது அவர்களுடைய கொள்கையாகவும் கோட்பாடாகவும் இருந்Tஹுவிட்டு போகட்டும். ஆனால் அந்த கட்சியில் எனக்கு பிடித்தது இதுதான். ஒருவரின் தற்கொலையை வைத்து கோஷ்டி பிரித்து மட்டமான ஒரு அரசியல் நாடகத்தை அந்த கட்சி தோழர்கள் அரங்கேற்றவில்லை. இதுவே வேறொரு கட்சியாக இருந்திருந்தால் இறுதி ஊர்வலம் ஒரு குருதி ஊர்வலமாக நடந்திருக்கும். எல்லா ஒழுக்க நெறிமுறைகளிலும் வன்மமும் அன்பும் கலந்தே இருக்கிறது. ஹிட்லரின் கொடுங்கோலாட்சிகூட தன் ஜாதி மேல் இருந்த ஈடுபாட்டில் உதயமானதுதானே.

4. தற்கொலை இந்திய தண்டனை சட்டப்படு குற்றம். கருணை கொலை செய்யவும் அனுமதி வாங்கவேண்டியிருக்கிறது. எனக்கு இதில் முழுமையான உடன்பாடு இல்லை. அதே சமயம் முழுமையாக ஆதரிக்கவும் இல்லை. இரண்Dஉ வகையான விவாதங்களும் மனதுக்குள் நிறைகின்றன. உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ சொல்லுங்கள் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.]]]

கருணைக் கொலை முறை நிச்சயம் இந்தியாவில் அமல்படுத்தியாக வேண்டும் என்றே நானும் நினைக்கிறேன்..!

ஒரே ஒரு நாள் அடையார் கேன்ஸர் மருத்துவமனைக்கு வார்டுக்கு போய்விட்டு வாருங்கள்.. வலி என்றால் என்னவென்று புரியும்..

நீங்கள் சொல்லியிருப்பதைப்போல் வேறு கட்சியாக இருந்தால் அடிதடிகள், ரத்தக்களறிகள் நிச்சயமாக நடந்திருக்கும். இது கம்யூனிஸ இயக்கம் என்பதால் இப்போதும் கட்டுக்கோப்புடன் நடந்து கொண்டார்கள்..

ஆனால் அதையே கடைசிவரையில் பின்பற்றக்கூடாது. என்ன காரணம் என்பதை வெளிப்படையாக்கினால்தான் அவர் மீதான புகார்களை நம் மனதில் இருந்து களைய முடியும்..!!!

வருகைக்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் விஸா ஸார்..!

பதி said...

தோழர் வரதராசனுக்கு அஞ்சலிகள்..

அற்ப பதர்கள் அண்டி வாழும் உலகில் உண்மையிலேயே இவர் ஒரு கவரிமான் தான்.

//கேவலம்.. ஒரு சாதாரண குடும்பத் தகராறையெல்லாம் ஒரு அகில இந்தியக் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டம் அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போடுகிறது என்பதை நினைக்கும்போது இந்தக் கட்சியின் தலைவர்கள் எந்த அளவுக்கு வேலைவெட்டியில்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.//

சிலவற்றை விட்டுவிட்டீர்கள் என எண்ணுகின்றேன். "இலங்கை ரத்னா" வை தனது பொலிட் பீரோவில் வைத்திருக்கும் மாண்பு மிகுந்த இயக்கம் அது, அப்படி இருக்கையில் அணுகுண்டு வீசும் அபத்தத்தை செய்தவர்களை கூடக் கண்டிக்க அவர்களுக்கு யோக்கியதையில்லை என்பதை சுட்டியிருக்க வேண்டும்.

மண்டியிட்டு சிங்கள ரத்னா வாங்கியதிற்கோ அல்லது தமிழக எல்லையில் நின்று இருள்நீக்கி சுப்பிரமணியை (அது தாம்பா சங்கராச்சாரி) வரவேற்றதிற்கோ இவர்கள் ராம் என்னும் dash இடம் என்ன விளக்கம் இது வரை கோரியுள்ளனர் என அறிந்து கொள்ள ஆவல்.

புண்ணாக்கு கொள்கை.

ஈ ரா said...

//உண்மைகள் வெளிவந்துதான் தீர வேண்டும் என்கிறேன் நான். இல்லாவிடில் இந்தத் தோழரின் வருங்கால சரித்திரப் புத்தகத்தில் ஒரு கறுப்புப் புள்ளியோடுதான் இவர் தமிழகத்து மக்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தின் வருங்காலத் தொண்டர்களுக்கும் அறிமுகமாவார்.

அது இதைவிடக் கெடுதியில்தான் போய் முடியும்..!//

ஒப்புக் கொள்கிறேன்...

vasan said...

NOW, We understand why this politicians care ONLY their FAMILY instead of the COUNTRY. Swindle the wealth and do all the cheating to retaian their POWER to RULE ever this NATION like the KINGS(Hereditary)
GOOD PEOPLE PERISH AND THE BAD PEOPLE FLOURISH.

உண்மைத்தமிழன் said...

[[[vasan said...

NOW, We understand why this politicians care ONLY their FAMILY instead of the COUNTRY. Swindle the wealth and do all the cheating to retaian their POWER to RULE ever this NATION like the KINGS(Hereditary)

GOOD PEOPLE PERISH AND THE BAD PEOPLE FLOURISH.]]]

வாசன்..

கம்யூனிஸ இயக்கத்தினர் குடும்பத்தை எப்போதுமே முன் நிறுத்தமாட்டார்கள்.

ஆனால் இந்தப் பிரச்சினையில் குடும்பத்துக்குள் இருந்த பிரச்சினையினால் மூத்தத் தலைவரை கட்சியைவிட்டு நீக்கும்வரையில் போனது ரொம்பவே வெட்கக்கேடானது..!

க.பாலாசி said...

மிகச்சிறந்த மனிதர் என்பதை உங்களின் இடுகையின் மூலமும் தெரிந்துகொண்டேன்...

butterfly Surya said...

detailing ல் உங்களை அடிச்சுக்க முடியாது அண்ணே!

கரெக்டா சொன்னீங்க ஜி.

Anonymous said...

//நீங்கள் சொல்லியிருப்பதைப்போல் வேறு கட்சியாக இருந்தால் அடிதடிகள், ரத்தக்களறிகள் நிச்சயமாக நடந்திருக்கும். இது கம்யூனிஸ இயக்கம் என்பதால் இப்போதும் கட்டுக்கோப்புடன் நடந்து கொண்டார்கள்.. //

தமிழ்நாட்டைப்பொறுத்தவரைதான் சரி.

கேரளா, மே.வ.மானிலங்களில் கம்யுனிஸ்டு கட்சியில் பயங்கர அடிதடி உண்டு.

Anonymous said...

//தாங்கள் யார்? எந்த ஊர்..? என்ன பேர்..? எங்களுடன் எப்படித் தொடர்பு என்பதெல்லாம் தெரியாத நிலையிலேயே உங்களுடன் இப்போது மல்லுக் கட்ட வேண்டியிருக்கிறது..!//

பேசத்தான் வந்தோம். சென்ஸஸ் எடுக்க அல்ல. கருத்துகள் பறிமாற்றமே பதிவுகள் பொதுப்பார்வைக்கு வைக்கப்படுதலில் நோக்கம்.

அதற்கு எதற்கு பின்னூட்டக்காரரின் ஜாதகப்பரிவர்த்தனை?

Anonymous said...

//ஆனால் இந்தப் பிரச்சினையில் குடும்பத்துக்குள் இருந்த பிரச்சினையினால் மூத்தத் தலைவரை கட்சியைவிட்டு நீக்கும்வரையில் போனது ரொம்பவே வெட்கக்கேடானது..!//

வெட்ககேடு என்பதெல்லாம் மிகையான சொல்.

அவர்கள் கட்சிக்கொள்கை அப்படியிருக்கலாம்.

இதைப்போலவே இன்னொரு தலைவரும் பிரச்ச்னைக்குள்ளாகி, அவரை விட்டுவிட்டு, இவரை மட்டும்விலக்கினார்கள் என்றால், அது ஓர வஞசனை. வெட்ககேடு எனலாம்.

அப்படி ஏதாவது முன்பே நடந்திருக்கிறதா?

எல்லாக்கட்சிகலும் தங்களுக்கு சட்டப்பூர்வமாக அங்கீர்கப்பட்ட வரையறைகளை வைத்திருக்கின்றன. அது கோர்ட்டில் செல்லும்.

எல்லாக்கட்சிகளும் ஒரேமாதிரியான சட்டதிட்டங்களே வைத்திருக்க வேண்டும் என்று எங்குமில்லை. எப்படி மதங்கள் வேறுபடுகிறதோ, அப்படி!

அப்படியிருக்க இக்கட்சியைக் குறைகூற முடியாது.

நம்மைப்பொறுத்தவரை ஒன்று சொல்லலாம் அல்லது கேட்கலாம்:

இவ்வளவு கடுமையான சட்டதிட்டம் தேவையா?

Anonymous said...

வரதாஜீலு என்பது தெலுங்குப்பெயர்.

தோழரின் பெயர், வரதராஜன்.

இவர் தமிழர். எனவே தமிழ்ப்பெயர்.

பெயரை மாற்றி குறும்புத்தனம் செய்ய வேண்டாம்.

உண்மைத்தமிழன் said...

[[[க.பாலாசி said...
மிகச் சிறந்த மனிதர் என்பதை உங்களின் இடுகையின் மூலமும் தெரிந்துகொண்டேன்...]]]

இதற்காகத்தான் எழுதினேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
detailing ல் உங்களை அடிச்சுக்க முடியாது அண்ணே! கரெக்டா சொன்னீங்க ஜி.]]]

இதுக்குப் பேரு கமெண்ட்டா..?

உண்மைத்தமிழன் said...

[[[Jo Amalan Rayen Fernando said...

//நீங்கள் சொல்லியிருப்பதைப்போல் வேறு கட்சியாக இருந்தால் அடிதடிகள், ரத்தக்களறிகள் நிச்சயமாக நடந்திருக்கும். இது கம்யூனிஸ இயக்கம் என்பதால் இப்போதும் கட்டுக்கோப்புடன் நடந்து கொண்டார்கள்.. //

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைதான் சரி. கேரளா, மே.வ.மானிலங்களில் கம்யுனிஸ்டு கட்சியில் பயங்கர அடிதடி உண்டு.]]]

இங்க இல்லையே.. அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க ஜோ ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jo Amalan Rayen Fernando said...

//தாங்கள் யார்? எந்த ஊர்..? என்ன பேர்..? எங்களுடன் எப்படித் தொடர்பு என்பதெல்லாம் தெரியாத நிலையிலேயே உங்களுடன் இப்போது மல்லுக் கட்ட வேண்டியிருக்கிறது..!//

பேசத்தான் வந்தோம். சென்ஸஸ் எடுக்க அல்ல. கருத்துகள் பறிமாற்றமே பதிவுகள் பொதுப் பார்வைக்கு வைக்கப்படுதலில் நோக்கம். அதற்கு எதற்கு பின்னூட்டக்காரரின் ஜாதகப் பரிவர்த்தனை?]]]

பேசுனதையே திருப்பித் திருப்பி பேசும்போது ஒரு ஆயாசம் வரும் பாருங்க.. அதுல வந்ததுதான் அந்த பாரா..!

உண்மைத்தமிழன் said...

[[[பதி said...
தோழர் வரதராசனுக்கு அஞ்சலிகள்..
அற்ப பதர்கள் அண்டி வாழும் உலகில் உண்மையிலேயே இவர் ஒரு கவரிமான்தான்.

//கேவலம்.. ஒரு சாதாரண குடும்பத் தகராறையெல்லாம் ஒரு அகில இந்தியக் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டம் அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போடுகிறது என்பதை நினைக்கும்போது இந்தக் கட்சியின் தலைவர்கள் எந்த அளவுக்கு வேலைவெட்டியில்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.//

சிலவற்றை விட்டுவிட்டீர்கள் என எண்ணுகின்றேன். "இலங்கை ரத்னா"வை தனது பொலிட் பீரோவில் வைத்திருக்கும் மாண்பு மிகுந்த இயக்கம் அது. அப்படி இருக்கையில் அணுகுண்டு வீசும் அபத்தத்தை செய்தவர்களைகூடக் கண்டிக்க அவர்களுக்கு யோக்கியதையில்லை என்பதை சுட்டியிருக்க வேண்டும்.

மண்டியிட்டு சிங்கள ரத்னா வாங்கியதிற்கோ அல்லது தமிழக எல்லையில் நின்று இருள்நீக்கி சுப்பிரமணியை (அது தாம்பா சங்கராச்சாரி) வரவேற்றதிற்கோ இவர்கள் ராம் என்னும் dash இடம் என்ன விளக்கம் இதுவரை கோரியுள்ளனர் என அறிந்து கொள்ள ஆவல். புண்ணாக்கு கொள்கை.]]]

அதுவெல்லாம் தோழர்களான தொண்டர்கள் பக்கம் கை வைக்க மாட்டார்கள்..

தோழர்களான தலைவர்கள் பக்கம்தான் வருவார்கள்.

ராம் ஒருபோதும் இயக்கத்தின் தலைமைப் பதிவுக்கு ஆசைப்பட்டு இவர்களது வரிசையில் வந்து நிற்கப் போவதில்லை என்பதால் இவர்களும் அவர்களைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஈ ரா said...
/உண்மைகள் வெளிவந்துதான் தீர வேண்டும் என்கிறேன் நான். இல்லாவிடில் இந்தத் தோழரின் வருங்கால சரித்திரப் புத்தகத்தில் ஒரு கறுப்புப் புள்ளியோடுதான் இவர் தமிழகத்து மக்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தின் வருங்காலத் தொண்டர்களுக்கும் அறிமுகமாவார்.
அது இதைவிடக் கெடுதியில்தான் போய் முடியும்..!/

ஒப்புக் கொள்கிறேன்...]]]

வேறு வழியில்லை நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Jo Amalan Rayen Fernando said...

/ஆனால் இந்தப் பிரச்சினையில் குடும்பத்துக்குள் இருந்த பிரச்சினையினால் மூத்தத் தலைவரை கட்சியைவிட்டு நீக்கும்வரையில் போனது ரொம்பவே வெட்கக்கேடானது..!/

வெட்ககேடு என்பதெல்லாம் மிகையான சொல். அவர்கள் கட்சிக் கொள்கை அப்படியிருக்கலாம்.
இதைப் போலவே இன்னொரு தலைவரும் பிரச்ச்னைக்குள்ளாகி, அவரை விட்டுவிட்டு, இவரை மட்டும் விலக்கினார்கள் என்றால், அது ஓரவஞசனை. வெட்ககேடு எனலாம். அப்படி ஏதாவது முன்பே நடந்திருக்கிறதா? எல்லாக் கட்சிகலும் தங்களுக்கு சட்டப்பூர்வமாக அங்கீர்கப்பட்ட வரையறைகளை வைத்திருக்கின்றன. அது கோர்ட்டில் செல்லும். எல்லாக் கட்சிகளும் ஒரே மாதிரியான சட்ட திட்டங்களே வைத்திருக்க வேண்டும் என்று எங்குமில்லை. எப்படி மதங்கள் வேறுபடுகிறதோ, அப்படி!
அப்படியிருக்க இக்கட்சியைக் குறைகூற முடியாது. நம்மைப் பொறுத்தவரை ஒன்று சொல்லலாம் அல்லது கேட்கலாம்: இவ்வளவு கடுமையான சட்டதிட்டம் தேவையா?]]]

கேட்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jo Amalan Rayen Fernando said...

வரதாஜீலு என்பது தெலுங்குப்பெயர்.

தோழரின் பெயர், வரதராஜன்.

இவர் தமிழர். எனவே தமிழ்ப்பெயர்.

பெயரை மாற்றி குறும்புத்தனம் செய்ய வேண்டாம்.]]]

யார் குறும்புத்தனம் செய்தது..?

Anonymous said...

//பேசுனதையே திருப்பித் திருப்பி பேசும்போது ஒரு ஆயாசம் வரும் பாருங்க.. அதுல வந்ததுதான் அந்த பாரா..!../


ஆயாசம் எழுத்தை பிழைப்பாக்க் கொண்ட TV journalistக்கு வ்ரலாமா?

எனது ஒவ்வொரு பின்னூட்டமும் எவரும் சொல்லா புதுக்கருத்தைச் சொல்லும்.

dunga maari said...

நண்பர் உண்மைத் தமிழன்,


மார்க்ஸிஸ்ட் கட்சியினர் கடந்த மூன்றாண்டுகளாக செய்து வரும் அரசியல் ரீதியான தற்கொலை முடிவுகளின் முத்தாய்ப்பாய் இந்த தற்கொலை அமைந்து விட்டது. இந்திய மற்றும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியினர் நமது நாட்டிற்கு அவசியம் தேவைப்படுபவர்கள் என்பதால் அவர்கள் தங்கள் தவறுகளை புரிந்து கொள்ளவும் தேவையற்ற இறுக்கங்களிலிருந்து வெளிவரவும் வேண்டும். மற்றபடி உங்கள் செய்திக் கட்டுரை (வழக்கம்போல்)நன்றாக இருந்தது. உ.ரா.வின் மறைவினால் வாடும் தொழிலாள உள்ளங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது தன்னலமற்ற சேவைக்கு எனது வீர வணக்கங்கள்.

JIGOPI

kanagu said...

meendum oru nalla padhivu na... neraya thagavalgalaudan... :) :)

enaku ivarai patri neraya theriyathu... aanal kudumba prechanaikaaga katchiyai vittu neekuvathellam migavum kandikka thakka ondru...

apadi paarthal thamizhaga mudhalvar thi.mu.ka thalaivaraaga thodara mudiiyuma???

aanal tharkolai muyarchi konjam adigamo nu thonuthu... avar katchi veliye neraya seithu katchiku paadam karpithu irukalaam...

உண்மைத்தமிழன் said...

[[[Jo Amalan Rayen Fernando said...

//பேசுனதையே திருப்பித் திருப்பி பேசும்போது ஒரு ஆயாசம் வரும் பாருங்க.. அதுல வந்ததுதான் அந்த பாரா..!../

ஆயாசம் எழுத்தை பிழைப்பாக்க் கொண்ட TV journalistக்கு வ்ரலாமா?]]]

நான் டிவி ஜர்னலிஸ்ட்டுன்னு உங்களுக்கு யார் ஸார் சொன்னா..?

[[[எனது ஒவ்வொரு பின்னூட்டமும் எவரும் சொல்லா புதுக்கருத்தைச் சொல்லும்.]]]

இந்தப் பின்னூட்டம் நல்லாயிருக்கு ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[gopi g said...
நண்பர் உண்மைத்தமிழன்,
மார்க்ஸிஸ்ட் கட்சியினர் கடந்த மூன்றாண்டுகளாக செய்து வரும் அரசியல் ரீதியான தற்கொலை முடிவுகளின் முத்தாய்ப்பாய் இந்த தற்கொலை அமைந்து விட்டது. இந்திய மற்றும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியினர் நமது நாட்டிற்கு அவசியம் தேவைப்படுபவர்கள் என்பதால் அவர்கள் தங்கள் தவறுகளை புரிந்து கொள்ளவும் தேவையற்ற இறுக்கங்களிலிருந்து வெளிவரவும் வேண்டும். மற்றபடி உங்கள் செய்திக் கட்டுரை (வழக்கம்போல்)நன்றாக இருந்தது. உ.ரா.வின் மறைவினால் வாடும் தொழிலாள உள்ளங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது தன்னலமற்ற சேவைக்கு எனது வீர வணக்கங்கள்.
JIGOPI]]]

இதுதான் எனது விருப்பமும்..

கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத இந்தியாவையும், தமிழ்நாட்டையும் நான் விரும்பவில்லை..!

தங்களது கட்சியினரை இன்னமும் வளர்க்க வேண்டிய நேரத்தில் இப்படி செய்கிறார்களே என்கிற ஆதங்கம் என் மனதைக் குடைந்து கொண்டேயிருக்கிறது கோபி..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
meendum oru nalla padhivuna... neraya thagavalgalaudan... :) :)
enaku ivarai patri neraya theriyathu... aanal kudumba prechanaikaaga katchiyai vittu neekuvathellam migavum kandikka thakka ondru... apadi paarthal thamizhaga mudhalvar thi.mu.ka thalaivaraaga thodara mudiiyuma???
aanal tharkolai muyarchi konjam adigamonu thonuthu... avar katchi veliye neraya seithu katchiku paadam karpithu irukalaam...]]]

எப்படி முடியும் கனகு..?

புதிதாகக் கட்சிக்கு சேர்பவர்களுக்கு கட்சியின் கொள்கைகளை விளக்கும் ஆசிரியர் அவர்..!

கட்சியில் எந்த வேலையும் இல்லை என்றால் ஒரு கம்யூனிஸ்ட்டு எப்படித்தான் தாங்குவார்..?

சீனு said...

இப்படி ஒருத்தர் இருக்காருங்கிறதே இவர் இறந்த பிறகு தான் தெரிகிறது. நல்ல அரசியல்வாதி போல...எனக்கெல்லாம் இவரை பற்றி தெரிந்தது கூட இல்லை.

அ.வெற்றிவேல் said...

அதிகபட்ச தகவல்களுடன் கண்ணீர் அஞ்சலி!தாங்கள் சொல்வதை அப்படியே ஆமோதிக்கிறேன்.உ.ரா.வரதராசன் அவர்களின் பிரச்னையை உணர்வுபூர்வமாகத் தான் அணுகி இருக்க வேண்டும்.அதையும் கட்சிக்குளா விவாதிப்பார்கள்? கொடுமையாக அல்லவா இருக்கிறது?
நல்ல மனிதனை இழந்தது வருத்தமாகவும் இதன் மூலம் எளிமையானவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டும் போகிறது..அன்னாருக்கு என் அஞ்சலி

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...
இப்படி ஒருத்தர் இருக்காருங்கிறதே இவர் இறந்த பிறகுதான் தெரிகிறது. நல்ல அரசியல்வாதி போல. எனக்கெல்லாம் இவரை பற்றி தெரிந்ததுகூட இல்லை.]]]

இவர்தான் கம்யூனிஸ்டு.. தோழனோடு தோழனாக இருக்கும் தளபதிதான் கம்யூனிஸ இயக்கத்தில் தலைவன்..! அதனால்தான் கம்யூனிஸ இயக்கத்தின் மீது எனக்கு சற்று ஆர்வமும், ஈடுபாடும் உண்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[வெற்றிவேல் said...
அதிகபட்ச தகவல்களுடன் கண்ணீர் அஞ்சலி! தாங்கள் சொல்வதை அப்படியே ஆமோதிக்கிறேன். உ.ரா.வரதராசன் அவர்களின் பிரச்னையை உணர்வுபூர்வமாகத்தான் அணுகி இருக்க வேண்டும்.அதையும் கட்சிக்குளா விவாதிப்பார்கள்? கொடுமையாக அல்லவா இருக்கிறது?
நல்ல மனிதனை இழந்தது வருத்தமாகவும் இதன் மூலம் எளிமையானவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டும் போகிறது. அன்னாருக்கு என் அஞ்சலி.]]]

திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டார். ஆனால் தனது உயிரை விட்டு அந்த சதிகளை அம்பலப்படுத்துவார் என்று அந்தக் கட்சியின் தலைகள் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை..!

நன்றிகள் வெற்றிவேலுக்கு..!

சவுக்கு said...

உங்கள் வருத்தத்த நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் பதிவை படித்துப் பார்த்து கருத்து சொல்லவும்

http://www.savukku.net/2010/02/wr.html

உண்மைத்தமிழன் said...

[[[சவுக்கு said...
உங்கள் வருத்தத்த நானும் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் பதிவை படித்துப் பார்த்து கருத்து சொல்லவும். http://www.savukku.net/2010/02/wr.html]]]

படித்துவிட்டேன்..

தங்களுடைய பதிவிற்கு எனது நன்றிகள்..!

பனித்துளி சங்கர் said...

வார்த்தைகள் இல்லாத வேதனை .

மரா said...

மிக அருமையாக நான் என்னவெல்லாம் சொல்லனும்னு நெனச்சேனோ அப்பிடியே எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய ’மாஸ்டர் பீஸ் பதிவு’ என்று இதைச் சொல்வேன். தொடருங்கள் தோழரே.

உண்மைத்தமிழன் said...

[[[♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
வார்த்தைகள் இல்லாத வேதனை.]]]

நன்றி பனித்துளி சங்கர்..!

உண்மைத்தமிழன் said...

[[[மயில்ராவணன் said...
மிக அருமையாக நான் என்னவெல்லாம் சொல்லனும்னு நெனச்சேனோ அப்பிடியே எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய ’மாஸ்டர் பீஸ் பதிவு’ என்று இதைச் சொல்வேன். தொடருங்கள் தோழரே.]]]

தோழர் மயிலுக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Bogy.in said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டு பட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in]]]

உங்களுடைய புதிய முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்..!

சுரேகா.. said...

ஆழமான அலசல்..

மனம் கனக்கிறது. ஒரு உண்மையான தொண்டனை எண்ணி!

Unknown said...

தமிழ் மணம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

abeer ahmed said...

See who owns thesecretofdeliberatecreation.com or any other website:
http://whois.domaintasks.com/thesecretofdeliberatecreation.com

abeer ahmed said...

See who owns tech2click.net or any other website.