Pages

Monday, February 02, 2009

முத்துக்குமாரின் இறுதிப் பயணம்!

02-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜனவரி 31, சனிக்கிழமை காலை நான் மீண்டும் கொளத்தூரில் கால்வைத்தபோது, “வீரவணக்கம்.. வீர வணக்கம்.. எங்கள் முத்துக்குமாருக்கு வீர வணக்கம்..” என்ற கோஷம் பிரதான சாலையில் வரும்பொழுதே கேட்டது. கூட்டம் நேற்றைய தினத்தைவிட சற்று அதிகமாகவே காணப்பட்டது.

30-ம் தேதி இரவே போலீஸார் அதிக அளவில் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர். விசாரித்துப் பார்த்ததில், இன்றைக்கு இரவே வலுக்கட்டாயமாக சடலத்தைத் தூக்கிச் செல்ல போலீஸாருக்கு ஒரு எண்ணம் இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. கூட்டம் குறைவதற்காக போலீஸார் காத்திருப்பதாகவும் செய்தி வந்தது. இதனால் பல்வேறு பத்திரிகையாளர்களும் இரவு நேரத்தில் அங்கேயே இருந்தார்கள். ஆனால் இரவு 1.30 மணிவாக்கில் சேலத்தில் இருந்து வந்து சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களின் கூட்டத்தை பார்த்துதான் போலீஸார் தங்களது திட்டத்தை மாற்றிக் கொண்டுவிட்டதாக இரவுப் பணியில் இருந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தார்கள்.

சென்னையில் ஒரு காவல் நிலையம் விடாமல் அனைத்து சப்-இன்ஸ்பெக்டர்களும், இன்ஸ்பெக்டர்களும், காவலர்களும் இங்கே பாதுகாப்புப் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். கூடுதல் பாதுகாப்புக்காக ஆவடி பட்டாலியணில் இருந்து அதிரடிப் படையினரை தருவித்திருந்தார்கள். ஆனாலும் உள்ளே வராமல் சமர்த்துப் பிள்ளையாக பிரதான சாலை அருகிலேயே நின்றிருந்தார்கள் காவல்துறையினர்.

தமிழகத்தில் இத்தனை அமைப்புகள் உள்ளனவா என்று ஆச்சரியத்தை அளிக்கும்வகையில் பல்வேறு இளைஞரணி அமைப்புகளும் ஒன்று கூடி திரண்டிருந்தார்கள். அதிலும் அவர்கள் சமர்ப்பித்த அஞ்சலி குறிப்புகள் ஒவ்வொன்றும், ஒவ்வொருவிதமாக தமிழில் விளையாடியிருந்தன.

மேடைக்கு நேர் கீழே நூற்றுக்கணக்கானோர் நெருக்கடியில் நின்று கொண்டிருக்க ஒரு அமைப்பைச் சேர்ந்த பெண் தொகுப்பாளராக இருந்து ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். இதுவும் கொஞ்ச நேரத்துக்குத்தான். அடுத்து யாராவது ஒருவர் கையில் ஒலிபெருக்கி சென்றடைய மேடை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு போய்க் கொண்டிருந்தது.

முத்துக்குமார் இறந்து 36 மணி நேரம் கழித்து அஞ்சலி அறிக்கையை வெளியிட்ட கலைஞரை போட்டு காய்ச்சி எடுத்தார்கள் பேச்சாளர்கள். அவர்களுடைய கோபத்திற்கு இன்னுமொரு காரணம், அவருடைய தவப்புதல்வர் அழகிரி இந்தச் சோகத்திலும் மதுரையில் நேற்று தனது பிறந்த நாள் கொண்டாடியதையும், அதற்கு கலைஞர் நேற்று காலையில் வாழ்த்து சொல்லியிருப்பதையும் குறிப்பிட்ட ஒருவர் “இதுக்கெல்லாம் நேரமிருக்குய்யா நம்ம பெரிசுக்கு..!” என்று தாளித்துவிட்டார்.

இன்னொருவர் “முதலில் கலைஞர் என்கிற பட்டத்தையே அவரிடமிருந்து பிடுங்க வேண்டும்..” என்கிற அளவுக்குப் பேசினார். கலைஞரை மட்டுமே விமர்சித்தால் அது நிறைவு பெறாது என்பதனால் கூடவே ஜெயலலிதாவையும் இழுத்துக் கொண்டார்கள். “அந்தக் கட்சிக்காரன்கிட்ட யாழ்ப்பாணம் எங்க இருக்குன்னு கேட்டுப் பாருங்க.. ‘அதெல்லாம் எங்கம்மாவுக்குத்தான் தெரியும்'பான்.. அந்த அளவுக்கு அறிவு சூனியங்கள் உள்ள கட்சி அது.. அவர்களையா நாம் நம்பியிருப்பது..?” என்று தத்துவார்த்த ரீதியாகவெல்லாம் சிந்திக்க வைத்தார்கள் பேச்சாளர்கள்.

ஒரு உதவி இயக்குநர் பேசும்போது “முத்துக்குமாரின் உடலை மூலக்கொத்தளம் சுடுகாட்டிற்கு கொண்டு போகக்கூடாது.. கடற்கரைக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும்.. அங்குதான் புதைக்கப்படுதல் வேண்டும்” என்று ஆவேசப்பட்டார். “அங்கே புதைக்கப்பட்டவர்களைவிட முக்கியமானவன் நமது முத்துக்குமார்தான்..” என்றார். கரவொலியில் கொஞ்சம் ஆவேசமும் கலந்திருந்தது.

நேரம் ஆக, ஆக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களின் கிளைப் பிரதிநிதிகள் சாரை, சாரையாக வந்த வண்ணம் இருந்தார்கள். வரும்போதே ‘வேல்! வேல்! வெற்றிவேல்!' போன்று “வீர வணக்கம்..! வீர வணக்கம்..!” என்ற கோஷம் காதைப் பிளந்தது. இந்த மாதிரியான அமைப்புகள் பற்றி எனக்கு சரியான அறிமுகம் இல்லாததால், இந்த கோஷம் ஒரு வேளை இவர்களது தனிப்பட்ட முழக்கச் சின்னமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு கட்டத்தில் முத்துக்குமாரை தரிசிப்பதற்காக சுமார் 300 பேராவது நீண்ட கியூவில் காத்திருந்தபோது இளைய சமுதாயத்தினரின் இன்றைய மனவோட்டத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் ஈழ ஆதரவு முன்னணி, பிளாக் பந்தர்ஸ், பெண்கள் எழுச்சி இயக்கம், மக்கள் விடுதலை இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம், புரட்சிகர மாணவர் இலக்கிய முன்னணி, புரட்சிகர ஜனநாயக மாணவர் கழகம், தமிழ் ஈழ ஆதரவு முன்னணி, தனித்தமிழ்நாட்டுக்கான மாணவர் முன்னணி, தமிழ் புலம்பெயர் வாழ் மக்கள் அமைப்பு, ஈழத்து சகோதரர்கள் பாரீஸ்-பிரான்ஸ் அமைப்பு என்று புதிய, புதிய இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தோழியர்களும் தத்தமது தமிழகத்து பிரதிநிதிகளோடு ஆஜராகியிருந்தனர். இன்னும்கூட நிறைய இயக்கத்தினர் வந்திருந்தார்கள். பெயரை மறந்துவிட்டேன்.

இந்த இயக்கத்தினர் அனைவருமே முத்துக்குமார் பற்றிய பல்வேறு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். அதை வாங்கவும் ஒரு கூட்டம் ஆலாய்ப் பறந்தது. வெளிச்சத்துக்கு வராத கவிஞர்கள் பலரும், முத்துக்குமார் பற்றி கவிதை எழுதி அதை உடனுக்குடன் அச்சிட்டு கொண்டு வந்திருந்தார்கள். தமிழ் ஈழம் பற்றிய புத்தகங்களும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. அதிலும் முத்துக்குமார் கடைசியாக வாசித்த இராசேந்திர சோழன் எழுதிய ஈழம் பற்றிய புத்தகம் கொண்டு வந்த சில நிமிடங்களிலேயே காலியானது.

கலைஞர், ஜெயலலிதா, சோ, ஹிந்து ராம் ஆகியோரைப் பற்றி பல விமர்சனத் தட்டிகள் பலவிடங்களிலும் காணக் கிடைத்தன.

நான்கு தன்னார்வத் தொண்டர்கள் கிட்டத்தட்ட 1 மணி நேரம் அந்த வேகாத வெயிலில் பிரபாகரனைப் பாராட்டி எழுதியிருந்த போஸ்டர்களை தூக்கிக் காட்டிய நிலையில் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு அமைப்பினர் தனி ஈழ நாட்டுக்கு ஆதரவு கேட்டு கையொப்பம் வாங்கிக் கொண்டிருந்தனர். 3 மணி நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த விண்ணப்பப் படிவங்கள் அனைத்துமே நிரம்பிவிட.. இதற்கு மேல் கையொப்பமிட தாள் இல்லாமல் நின்றது ஆச்சரியம்தான்..

வந்திருந்த பொதுஜனங்களின் ஒரேயொரு முக்கியமான கருத்து, ‘முத்துக்குமார் எதையும் எழுதி வைக்காமல் இறந்து போயிருந்தால், நிச்சயம் இந்த அளவுக்கு எழுச்சி ஏற்பட்டிருக்காது' என்பதுதான். அவர் எழுதி வைத்திருந்த ‘மரண சாசனம்'தான் தமிழக இளைஞர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் ஈழம் பற்றிய ஒரு எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது. “அந்த சாசனத்தை எத்தனை முறை படித்தாலும் சலிக்கவில்லை ஸார்..” என்றார் ஒரு நண்பர். இதையே நான் சந்தித்த பல நண்பர்களும், பொதுமக்களும் திருப்பித் திருப்பிச் சொன்னார்கள். எனக்கும் இது சரியென்றுதான் தோன்றுகிறது.

மீண்டும், மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.. மிக மிக துல்லியமாக, ‘இதுதான் காரணம்.. இவர்கள்தான் காரணம்.. இதைத்தான் எழுதுகிறேன்..' என்று கொஞ்சம்கூட தடம் மாறாமல் நேர்த்தியான வார்த்தைகளின் கட்டமைப்பில் சிறிதுகூட சலிக்க வைக்காமல், உள்ளடக்கத்தில் கேள்வி எழுப்ப முடியாதவாறு ஒரு தேர்ந்த எழுத்தாளனின் உச்சக்கட்ட படைப்பு போல் எனக்குத் தோன்றுகிறது.

தம்பி முத்துக்குமரன் திரைப்படத் துறையில் முழு மூச்சுடன் நுழைந்திருந்தால் நிச்சயம் சாதித்திருக்கலாம். எழுதுவதோடு மட்டுமல்லாமல் பேசும்போதுகூட ஆங்கிலம் கலக்காமல் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் இவர். இதனால்தான் திரைப்படத் துறையின் மாயக்கண்ணாடியை உடைத்துக் கொண்டு இவரால் உள் நுழைய முடியவில்லை என்றார்கள் இவருடன் திரைப்படத் துறையில் பணியாற்றிய நண்பர்கள்.

நேரம் ஆக, ஆக கூட்டம் கூடிக் கொண்டே போக அந்த இடமே ஒரு கொதிப்பான சூழலில் காட்சியளித்தது. ஒலிபெருக்கி பிடித்து பேசுகின்ற அனைவருமே உணர்ச்சி கொந்தளிப்பில், “இப்போதே ஈழத்துக்கு போகத் தயார்..” என்கிற ரீதியிலேயே பேசி உணர்ச்சிகள் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு பேச்சாளருக்கும் இடையிடையே ‘வீர வணக்கம்' என்று கோஷம் எழுப்பவும் மறக்கவில்லை.

மேடையேறி முத்துக்குமாரை தரிசித்த ஒவ்வொரு அமைப்பினரும் சடலப் பெட்டியைச் சுற்றி நின்று கைகளை உயர்த்தி “வீர வணக்கம்..! வீர வணக்கம்..!” என்று கோஷம் போட்டுவிட்டுத்தான் இறங்கினார்கள்.

இடையில் சில மாணவர்கள் திடீரென்று சோனியாவின் கொடும்பாவியை பிரதான சாலைக்குத் தூக்கி வந்து போட்டவுடன் பரபரப்பு கூடியது. இதனை எப்படி அணுகுவது என்று போலீஸார் சிறிது யோசிக்கத் துவங்க.. அதையே ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு கொடும்பாவியை எரித்தது மாணவர்கள் கூட்டம். இங்கேயும் “வீர வணக்கம்.. வீர வணக்கம்..” என்ற கோஷம் கொப்பளிக்க.. மாணவர்களின் கோபமும், ஆத்திரமும் அடுத்து ‘ஹிந்து' ராம் மீது பாய்ந்தது. தொடர்ந்து ‘ஹிந்து' பத்திரிகையும் சேர்த்து எரிக்கப்பட்டது.

யார் சொன்னால் இவர்கள் கேட்பார்கள் என்பது தெரியாமல் போலீஸார் தயங்கி நிற்க.. பிரதான சாலையின் இரு புறமும் போக்குவரத்து தேங்கி நின்றது. போலீஸாருடன் மல்லுக்கட்டுக்குத் தயார் என்ற நிலையில் அவர்கள் காட்சியளித்தபோது சிலர் கெஞ்சி கூத்தாடி அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துப் போனார்கள்.

போகப் போக ஒலிபெருக்கியில் பேச்சாளர்கள் வாய்க்கூசும் பேச்சுக்களையெல்லாம் சரளமாக அள்ளி வீசத் துவங்கினார்கள். சிறிது நேரத்திற்கு கலைஞரை விட்டுவிட்டு சோனியாகாந்தி, ஜெயலலிதா, சோ, ராம் என்று இந்த நால்வரைப் பற்றியும் அலசி, ஆராய்ந்து, துவைத்து எடுத்துவிட்டார்கள். இதில் பலவற்றை நான் எழுதினால் நீங்களே அடிக்க வருவீர்கள்.. இது போன்ற பேச்சுக்கள் அக்கம்பக்கம் நின்றிருந்த பொதுவானவர்களையும் முகம் சுழிக்க வைத்தது. ஆனால் ஒலிபெருக்கியை ஒவ்வொருவரிடமிருந்து பிடுங்குவதற்குள் அந்தத் தொகுப்பாளர் பெண்மணி ரொம்பவே பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

அந்தத் தெரு முழுக்கவே இப்படியொரு சூழலை இதுவரையில் சந்தித்திருக்காததால் நேற்று அனைத்து வீடுகளின் உட்புறங்களிலும் பொதுமக்களை நிற்க அனுமதித்திருந்தார்கள். கூட்டம் அப்படியே சேர்ந்து கொண்டே போகவே எங்கெல்லாம் நிழல் கிடைக்கிறதோ அங்கெல்லாம் நின்றபடியே காத்திருந்தது கூட்டம்.

மேடைக்கு வந்த முத்துக்குமாரின் பாட்டி தனது பேரனைப் பற்றிப் பெருமையாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரைக் கட்டிப் பிடித்து ஒரு கூட்டம் அழத் துவங்க.. அவர்களை அடிக்காத குறையாக விரட்டிய மேடை நிர்வாகிகள்.. பாட்டியிடமே, “பாட்டி நீங்க அழுகக்கூடாது.. உங்க பேரன்தான் உண்மைத்தமிழன்.. அவன் செய்த செயலுக்காக சந்தோஷப்படுங்க..” என்று தங்களது கொள்கையை அவரிடம் புகுத்திக் கொண்டிருந்தார்கள்.

என்ன இருந்தாலும் அவர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவராச்சே.. சிறிது நேரம் மெளனமாக இருந்தவர், யாராவது பெண்கள் வந்து அவரைத் தொட்டவுடனேயே கதறினார். அவரது நெருங்கிய உறவினர்கள் அவரைச் சூழ்ந்து உட்கார்ந்து கொண்டிருக்க பேரனைப் பற்றிய பல நினைவுகளை திரும்பித் திரும்பி சொல்லிக் கொண்டேயிருந்தார்.

தமிழகத்தின் பல்வேறு அகதி முகாம்களிலிருந்தும் ஈழத் தமிழர்கள் வந்திருந்தார்கள். அதிலும் ஈழத்துப் பெண்கள் தங்கள் வீட்டுச் சாவு போல் கதறியழுதது அந்த நிமிடத்தில் மனதை என்னவோ செய்தது.. முகாம்களிலிருந்தும் சென்னை வருவதற்கான அனுமதி கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருந்ததாக சிலர் தெரிவித்தார்கள்.

சொந்த நாட்டு மக்களைவிட ஈழத்து மக்களே அதிகம்பேர் இன்று வந்திருப்பதாக ஒருவர் ஒலிபெருக்கியில் சொல்லி “இப்ப சத்யம் தியேட்டர்ல போய் பாருங்க.. எத்தனை பரதேசி நாயுங்க நுனி நாக்குல இங்கிலீஷ் பேசிட்டு கியூவுல நிக்குறானுகன்னு.. அவனுகளுக்கு கொஞ்சமாச்சும் தமிழ், தமிழன்னு ஒரு எண்ணம் இருந்திருந்தா அங்க போயிருப்பானா..? சினிமாக்காரனுங்க வர்றானுங்க.. மாலையைப் போடுறானுங்க.. போஸ் கொடுக்குறானுங்க.. அவனுகளுக்காச்சும் தோணிருக்க வேண்டாம்..? எங்க வீரன் முத்துக்குமாரைவிட உங்களுக்கு தியேட்டர் காசு முக்கியமாடா.. கபோதிகளா..?” என்று ஆரம்பிக்க கைதட்டல் பற்றிச் சொல்லவா வேண்டும்.. இதற்கு மேல் பேசியதை எழுத முடியாது..!

பேச்சாளர்களில் ஒரு சிலர் ஆவேசமும், கொந்தளிப்புமாக பேசினாலும் சிலர் நன்றாகவே கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். அன்றைக்கு எந்தத் தொலைக்காட்சியுமே முத்துக்குமாரின் மரணத்தை கண்டு கொள்ளவில்லை என்பது அங்கு கூடியிருந்த அனைத்து மக்களுக்குமே ஒரு ஆதங்கத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியிருந்தது. இதனைக்கூட ஒருவர் சுட்டிக் காட்டிப் பேசினார்.

“நேற்று முத்துக்குமாரின் மரணச் செய்தியைவிட, இந்த அஞ்சலி நிகழ்ச்சிகளைவிட தமிழகத்து மக்களுக்கு ‘மானாட மயிலாட'தான் முக்கியமா..? ஒரு நிமிடம் அஞ்சலி நிகழ்ச்சியை காட்டுகிறீர்களே.. பாவிகளா..? உங்களுடைய இந்த சொகுசு நிலைமைக்கு, அன்றைக்கு உங்களுக்காக செத்துப் போன எத்தனையோ அப்பாவிகள்தானே காரணம்.. இந்தத் தமிழ்தானே காரணம்.. இந்தத் தமிழன்தானே காரணம்.. “ என்று உருக்கமாகப் பேசிவிட்டுப் போனார் ஒருவர். விமர்சனத்திற்கு சன் டிவியும் தப்பவில்லை. முரசொலி மாறன் இறந்தபோது சன் டிவி செய்ததை எடுத்துக் காட்டிப் பேசினார் இன்னொருவர். “இவர்கள் வீட்டில் சாவு நடந்தால்தான் அது எழவு.. மற்றவர்கள் வீட்டில் நடந்தால் அது ஒண்ணுமில்லை.. இதுதான்யா இவனுக யோக்கியதை..” என்று பொரிந்தார் இன்னொருவர்.

இடையில் பிரபாகரன் முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து செய்தி அனுப்பியிருப்பதாக, ஒலிபெருக்கியில் சொல்லப்பட கரவொலி கொளத்தூரை அதிர வைத்தது.

பேச்சாளர்கள் சூட்டைக் கிளப்பிக் கொண்டிருந்தாலும் சில இயக்கத்தினர் போலீஸாரின் சூட்டைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். மறுபடியும் சோனியாவின் உருவ பொம்மை என்பதைப் போல் வைக்கோலும், சாக்குப் பையும் சேர்த்து ஒரு உருவத்தைத் தயாரித்து அதனை ஒரு சிறுவனின் கையில் கொடுத்து, அதனை செருப்பால் அடித்தபடியே வர.. அந்த சிறுவனை ஒரு நபர் தனது தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஓடி வர.. கூட்டம் பிரதான சாலை நோக்கி வருவதை பார்த்துவிட்ட காவல்துறையினர் இந்த முறை முந்திக் கொண்டனர்.

காவல்துறை மாணவர்களை சாலைக்கு முன்பாக உள்புறமாகவே மறித்து நின்றுவிட மாணவர்கள் ஆவேசப்பட்டார்கள். தள்ளுமுள்ளு நடந்தது. நிஜமாகவே கலவரச் சூழல் அப்போது காணப்பட்டது. பட்டாலியன் காவலர்கள் கூட்டத்தை முன்னேறவிடாமல் தடுக்க மாணவர்கள் சென்றே தீருவோம் என்று அவர்களை தள்ளிவிட.. தள்ளுமுள்ளு நடந்தது. இடையில் சில மாணவர்கள் பின்புறமிருந்து கற்களையும், செருப்புக்களையும் போலீஸார் மீது வீச துவங்க.. சிலர் சிதறி ஓடினார்கள். எப்படியும் தடியடிதான் என்று நினைத்து பெரும்கூட்டம் பயத்துடன் பார்த்தபோது அப்போது பார்த்து தோழர் சி.மகேந்திரனும், பெரியவர் பழ.நெடுமாறனும் வந்துவிட.. கூட்டம் அவர்களிடம் புகார் செய்தது.

போலீஸாரும் பதிலுக்கு அவர்களிடம் பேச.. பழ.நெடுமாறன் அவர்களைச் சமாதானம் செய்து “ரோட்டுக்கு போகாதீங்க.. இங்கேயே எரிங்க.. அவங்க டூட்டிய பார்க்க விடுங்க..” என்று காலில் விழுகாத குறையாக கெஞ்சி அவர்களை அழைத்துச் சென்றார். ஆனாலும் சில மாணவர்கள் விடவில்லை.. “ரோட்டுக்கு அந்தப்புறம்தான் போலீஸ் நிற்க வேண்டும். உள்ளே வரக்கூடாது. திரும்பிப் போ.. திரும்பிப் போ..” என்று ஆவேசமாகக் கத்த.. அப்போதைக்கு மோதலைத் தவிர்க்க வேண்டி போலீஸார் பின் வாங்கினார்கள்.

கட்டுப்பாடும், கண்ணியமும் காக்கப்பட வேண்டும் என்று அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடையே வைகோவும், தலைவர்களும் பல முறை சொல்லியும் உண்மையில் யாரும், யாரையும் கட்டுப்படுத்த முடியாத நிலைதான் தென்பட்டது.

வெள்ளிக்கிழமையே இரண்டு அமைப்பினருக்கு இடையில் மோதலும், கைகலப்பும் மேடைக்குப் பின்புறத்தில் நடந்தது. வர்த்தக் சங்கத் தலைவர் வெள்ளையன்தான் ஓடி வந்து அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

ஒரு குழுவினர் தெரு நாடகம் போல் ஒன்றை அரங்கேற்றினார்கள். சிங்கள ராணுவத்தின் கொடுமைகளைப் பற்றியும் இன்றைய அரசியல் சூழல் பற்றியும் அதில் தேர்ந்த நடிகர்களைப் போல் நடித்தது ஆச்சரியமளித்தது.

இன்னொரு குழு நல்லது செய்வதாக நினைத்து தங்களுக்குத் தாங்களே சூனியம் வைத்துக் கொண்டார்கள்.

டிவி டுடே என்ற சேனல்காரர்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும் வாகனத்தை தெரு முனையில் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒரு மணிக்கான மதியச் செய்திகளில் இது நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. வந்திருந்த கூட்டத்தினரை அழைத்து பேட்டியும் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு கூட்டம், “உங்களுக்கு இங்க என்னடா வேலை..? ஐ.ஐ.டி. பிரச்சினை, வேணுகோபால் பிரச்சினை, மண்டல் கமிஷன் பிரச்சினைன்னு எல்லாத்துலேயும் எங்களுக்கு எதிரா நாள் முழுக்க பிரச்சாரம் பண்ணியது நீங்கதாண்டா.. வெளிய போங்கடா..” என்று கத்திக் கூப்பாடு போட்டு, வண்டியைத் தாக்கவும் செய்ய.. பட்டென்று நேரடி ஒளிபரப்பை நிறுத்திவிட்டு அமைதியானது அந்த நிருபர் குழு.

இடையில் புகுந்த தமிழகத்து பத்திரிகையாளர்கள் சிலர், “இவங்க ஒருத்தராச்சும் நேரடி ஒளிபரப்பு பண்ணிக்கிட்டிருக்காங்க.. ஏன் கெடுக்குறீங்க?” என்று உரிமையுடன் கண்டிக்க கூட்டம் அவர்களையும் “கைக்கூலிகள்..” என்று திட்டத் துவங்க.. நமது பத்திரிகையாளர்கள் கவுரவமாக ஒதுங்கிக் கொண்டார்கள். வேறென்ன செய்வது..?

மேடைக்குக் கீழே இருப்பவர்களை ஒழுங்கு செய்ய வந்த வெள்ளையனையே ஒரு கட்டத்தில் வெளியேறச் சொன்னது கூடியிருந்த கூட்டம். பாவம் மனிதர் நொந்து போனார்.. இந்த மூன்று நாள் செலவுகள், மற்றும் ஏற்பாடுகள் முழுவதையும் பார்த்து, பார்த்து செய்தது அவர்தான்.. அவருக்கே இந்த கதி..!

வைகோ, பழ.நெடுமாறன், சி.மகேந்திரன், திருமாவளவன், நல்லகண்ணு ஆகியோர் வந்து சேர்ந்த பின்பு இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் மணிவண்ணன், அமீர், சீமான், சேரன், மன்சூரலிகான் என்று பிரமுகர்களும் வரிசையாக வர.. பின்பு ஒலிபெருக்கி ஓயாமல் உழைத்தது.

வைகோவைவிட சீமானுக்கு பெரும் வரவேற்பு காத்திருந்தது. சீமானும் தன் பேச்சில் வெளுத்துக் கட்டினார். “உலகத்திலேயே வாழ முடியாமல் செத்துப் போன ஒரு இனம் என்கிற பெயராவது என் தமிழ் இனத்திற்குக் கிடைக்கட்டும்.. அதைத்தான் இப்போதைய மத்திய சர்க்காரும், மாநில அரசும் விரும்புகிறது..” என்று ஆவேசப்பட்டார்.

வைகோ பேசும்போது “கண்ணியமும், கட்டுப்பாடும் மிக, மிக முக்கியம்.. மாணவச் செல்வங்களே தயவு செய்து கட்டுப்பாட்டைக் கடை பிடியுங்கள். அதுதான் முத்துக்குமாருக்கு நாம் செய்யும் ஒரு நன்றிக் கடன்..” என்றார். வைகோ பேசத் துவங்கியபோது இடையூறுகளும் தொடர்ந்தன. ஒருவர் திடீரென்று எழுந்து ஏதோ கேள்வி கேட்க மனிதர் பதட்டமாகிவிட்டார். “நீ இங்க வந்து பேசு.. நான் அங்க போறேன்.. யாராவது ஒருத்தர்தான் பேசணும்..” என்று கோபப்பட்டார்.

நெடுமாறனும், திருமாவும்கூட “மாணவர்கள் எந்தவிதத்திலும் உணர்ச்சிவசப்படக்கூடாது.. ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நிகழக் கூடாது.. அது நமது போராட்டத்தினை திசைதிருப்பிவிடும்” என்று திருப்பித் திருப்பி அறிவுறுத்தினார்கள்.

“மூன்று மணிக்காவது தூக்குவார்களா..? இல்லாட்டி நாளைக்குத்தானா?” என்று உளவுத்துறை போலீஸார் பத்திரிகையாளர்களிடம் நைச்சியமாக பேசி செய்திகளை பெற்றுக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் இறுதி யாத்திரை பற்றி கவலையில்லாமல் இருக்க இந்த சந்தேகம் அனைவருக்கும் வந்துவிட்டது. ஆனாலும் வைகோவும், திருமாவும் வந்த பின்பு இறுதி யாத்திரை வேன் மின்னல் வேகத்தில் தயாரானது.

அலங்கரிக்கப்பட்ட ஒரு வேன் முத்துக்குமாரின் சடலத்தை ஏற்க தயாராகி வந்தது. வேனின் முகப்பு பகுதியில் பிரபாகரனின் புகைப்படமும், தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் இருந்த போஸ்டரும் வைக்கப்பட்டது. தலைவர்கள் சடலத்தின் அருகில் வந்து ஒரு முறை ‘வீர வணக்கம்' செலுத்திய பின்பு மாணவர்கள் கரகோஷத்திற்கிடையில் சடலம் மேடையிலிருந்து தூக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்டது.

தலைவர்கள் முன்னால் நடக்க வேண்டும் என்பதனால் முன்னதாகவே அங்கிருந்து வெளியேறினார்கள். பாரதிராஜா கையில் அடிபட்டிருந்ததாலும், மணிவண்ணன் சரிவர நடக்க முடியாமல் இருந்ததாலும் உடனடியாக கிளம்பிவிட்டார்கள். அமீர் வேனின் பின்புறத்தில் ஏறிக் கொண்டார். சேரன் கூட்டத்தோடு கூட்டமாக நடக்கத் துவங்க..

கூடியிருந்த கூட்டம் நிச்சயம் 10000 பேரைத் தாண்டியிருக்கும் என்பது போலீஸ் செய்தி என்பதால் அவர்களும் எதற்கும் தயாராகவே வந்திருந்தார்கள்.

ஊர்வலத்தின் முகப்பிலேயே கண்ணீர் புகை குண்டு வீசும் வஜ்ரா வாகனம் செல்ல.. அதற்குப் பின்னே அதிரடிப் படை போலீஸார் செல்ல இதன் பின் விடுதலைச் சிறுத்தைகள் பேனரை பிடித்தபடி நடக்கத் துவங்க முத்துக்குமாரின் இறுதி பயணம் மிகச் சரியாக 3.40 மணிக்கு கொளத்தூர் பிரதான சாலையிலிருந்து கிளம்பியது.

கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர்கள். என் வாழ்க்கையில் இத்தனை தூரத்தை முதல் முறையாக இப்போதுதான் நடந்து சென்றுள்ளேன்.

ஊர்வலத்தில் வைகோவும், திருமாவும் நடந்து வந்து கொண்டிருக்க.. ஒவ்வொரு இயக்கத்தினரும் ஒவ்வொரு பிரிவு, பிரிவாக கோஷங்களை எழுப்பியபடியே வந்தனர்.

“சோனியா ஒழிக..
இத்தாலிக்காரி சோனியா ஒழிக..
பாப்பாத்தி ஜெயலலிதா ஒழிக..
பார்ப்பன சோ ஒழிக..
கொல்லாதே கொல்லாதே..
மத்திய அரசே
தமிழீழ மக்களைக் கொல்லாதே..
வெல்லட்டும் வெல்லட்டும்
தமிழீழம் வெல்லட்டும்
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
இன ஒடுக்குமுறைக்குத் துணை நிற்கும்
பார்ப்பன கும்பலை விரட்டியடிப்போம்
ஜெயலலிதா, சோ, சுப்ரமணியசாமி
இந்து ராம், துக்ளக் சோ
பார்ப்பன கும்பலை துரத்தியடிப்போம்
கருவியாக்கும் கருவியாக்குவோம்
முத்துக்குமாரின் நினைவேந்தலை
கருவியாக்குவோம் கருவியாக்குவோம்
எங்கள் தலைவன் பிரபாகரன் வாழ்க..
தமிழர் தளபதி பிரபாகரன் வாழ்க..
விடுதலைப்புலிகள் வாழ்க..
தமிழ்ச்செல்வனுக்கு வீர வணக்கம்..
பாலசிங்கத்திற்கு வீர வணக்கம்
முத்துக்குமாருக்கு வீர வணக்கம்..
வெட்கங்கெட்ட சோனியாவே
தமிழ் மக்களை கொல்லாதே..
வெட்கங்கெட்ட மத்திய அரசே
தமிழ் ஈழத்தை அழிக்காதே..”

இது கொஞ்சம்தான்.. இது போன்று ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு விதமாக கோஷங்களை எழுப்பியபடியே வந்தனர்.

ஊர்வலம் கொளத்தூர் பேப்பர் மில் ரோடு வழியாக செல்லத் துவங்கியது. சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூட்டம் நெருக்கியடித்தது. மனிதர்கள் நிற்காத இடங்களே இல்லை என்று சொல்லலாம். ஒரு மொட்டைமாடிகூட காலியாக இல்லை. அவ்வளவு கூட்டம்.

வடசென்னைவாசிகள் தங்களது வாழ்நாளில் இப்படியொரு ஊர்வலத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். ஊர்வலம் போய்க் கொண்டிருந்தபோதுதான் கடைகளில் மாட்டியிருந்த மாலைமலர் போஸ்டரில் நடிகர் நாகேஷ் மரணம் என்று போடப்பட்டிருக்க.. வந்திருந்த பொதுஜனம், நிகழ்ச்சி அமைப்பாளர்கள், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் அனைவருக்குமே லேசான தொய்வு ஒன்று ஏற்பட்டது.

இன்றைக்காவது முத்துக்குமார் செய்தி தொலைக்காட்சியில் காட்டப்பட வாய்ப்புண்டு என்று நினைத்தால் நாகேஷின் மரணச் செய்தி அதற்கும் தடங்கலாகிவிட்டது என்று வருத்தப்பட்டார்கள். அவர்கள் வருத்தப்பட்டது போலவேதான் நடந்தது. ஆனாலும் மக்கள் டிவி இறுதி ஊர்வலத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய முன் வந்தது அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

அவ்வப்போது பதிவான டேப்புகளை அவசரம், அவசரமாக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் புண்ணியத்தில்தான் தமிழகத்து மக்கள் முத்துக்குமாரின் பிரியாவிடையை கண் குளிரப் பார்த்திருக்கிறார்கள். வாழ்க மக்கள் தொலைக்காட்சி.

ஊர்வலத்தில் கோஷங்களெல்லாம் அடித்தொண்டையிலிருந்து, உணர்ச்சி பொங்க ஒலித்துக் கொண்டிருந்தது. ஒருவர் ஓய்ந்த பின்பு மற்றொருவர் துவங்கினார். இதுவெல்லாம் காசு கொடுத்து வரவழைக்கப்படும் மாநிலக் கட்சிகளின் தொண்டர்களிடத்தில் நிச்சயமாக காண முடியாது. அப்படியொரு வெறி இருந்தது அவர்களுக்கு..

ஆனாலும் சில மாணவர் திலகங்கள் ரொம்பவே ஆட்டம் ஆடிவிட்டார்கள். கோஷம் போடுபவர்கள் பாட்டுக்கு கோஷம் எழுப்பிக் கொண்டிருக்க இந்தத் தம்பிமார்கள் தங்களது வேலையில் தீவிரமாக இறங்கினார்கள். முதல் அனர்த்தம் ஆரம்பித்தது கே1 செம்பியம் காவல் நிலையம் முன்பாக.

காவல் நிலைய வாசலின் நேர் முன்பாக இருந்த சுவற்றில் சோனியாகாந்தி, வாசன் இருவரின் முகங்கள் வரையப்பட்டிருந்தன. திடீரென்று ஒருவர் சோனியா ஓவியத்தின் அருகில் சென்று காறித் துப்பினார். இன்னொருவர் தன்னுடைய செருப்பை எடுத்து ஓவியத்தின் முகத்தில் மாறி மாறி அறைந்துவிட்டு வெற்றி நடை போட்டார். கூட்டம் ஆரவாரம் செய்ய உற்சாகமான இன்னொருவர் செய்ததுதான் கொடுமையின் உச்சக்கட்டம். சோனியா ஓவியத்தின் மேல் அவர் சிறுநீர் கழித்தது அருவருப்பு. ஊர்வலத்தில் கூடவே வந்து கொண்டிருந்த பெண் போலீஸார் இதைப் பார்த்துவிட்டு வாயைப் பொத்தி சிரித்தபடியே நடந்தார்கள்.

இதன் பின்பு அந்த சாலையில் வரையப்பட்டிருந்த அனைத்து சோனியா உருவங்களின் மீதும், வாசனின் உருவங்களின் மீது செருப்பு வீச்சுக்களும், காறித் துப்பல்களும், அபிஷேகங்களும் தொடர்ந்தன. பின்னால் இருந்து வந்தவர்கள் சிலர் அவர்களைத் தடுத்து நிறுத்தினாலும் ஒரு அளவுக்கு மேல் அவர்களாலும் முடியவில்லை.

இரண்டுபுற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா என்று கேட்கத் துவங்கினார்கள் சிலர். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் வாசலில் குடம் நிறைய தண்ணீரை வைத்துக் கொண்டு நின்றிருந்த ஒரு மார்வாடிக்காரர்கள்தான் முதலில் நான் பார்த்த தண்ணீர் சேவைக்காரர்கள். இதன் பின்பு பல இடங்களிலும் இதே போன்று கூட்டத்தினருக்கு தண்ணீர் தரப்பட்டது.

முன் வரிசையில் சென்று கொண்டிருந்த இரும்புத் தொப்பி போலீஸாருக்கும் அவர்களுக்கு முன்பு நடந்து வந்து கொண்டிருந்தவர்களுக்கும் இடையே பெரும் போராட்டமே நடந்தது. இரும்புத் தொப்பி போலீஸாரை முன்னால் போகவிட்டுவிட்டு பெரும் இடைவெளிவிட்டு நடக்கத் துவங்கினார்கள் மாணவர்கள். பல முறை இவர்களால்தான் கூட்டம் நின்று, நின்று வரத் தொடங்கியது.

சீக்கிரமாக போய்விடலாம் என்று நினைத்து சிலர் கூட்டத்தை மிகச் சிரமப்பட்டு ஒழுங்குபடுத்தி போய்க் கொண்டிருந்தார்கள். ஊர்வலம் பெரம்பூர் திருப்பத்தை அடைந்தபோது அங்கே ரயில் பாலத்திற்கு செல்லும் பாதையை மூடிவைத்து போலீஸாரை குவித்து வைத்திருந்தார்கள். ஊர்வலத்தின் முகப்பு பகுதியில் வந்தவர்கள் அந்த வழியாகத்தான் செல்வோம் என்று கூச்சல் போட ஆரம்பித்து போலீஸின் சட்டையையே பிடித்துவிட்டார்கள்.

ஆனாலும் போலீஸார் அசரவில்லை. “அந்த வழியில் போனால் நிறைய இடங்களில் போக்குவரத்தை நிறுத்த வேண்டி வரும். அதோடு உங்களுக்கு நேரமும் அதிகமாகும்..” என்று சொல்லிப் பார்த்தார்கள். சிலர் அங்கேயே ரோட்டில் அமர்ந்துகொள்ள.. ஊர்வலம் அங்கேயே ஸ்தம்பித்தது.

பெரம்பூர் ரயில் பாலத்தில் புகுந்தால் அப்படியே பின்னி மில் வழியாக புரசைவாக்கம் நெடுஞ்சாலை சென்றுவிட்டால் மக்கள் கூட்டம் நிறைய இருக்கும். அதிக கவனஈர்ப்பு இருக்கும் என்பது ஊர்வலத்தினரின் கருத்து. போலீஸாரே “முடியாது” என்று ஒற்றை வரியில் உறுதியாக நின்றார்கள். சூழல் மோதலாக உருவெடுத்தபோது இடையில் நுழைந்த பண்ருட்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் வேல்முருகன் மிகப் பிரயத்தனப்பட்டு ஊர்வலத்தினரை அடக்கி “இப்ப சண்டை போட வேண்டாம்.. வாங்க.. வாங்க..” என்று சொல்லி பெரம்பூர் மெயின் ரோடு வழியாகவே திருப்பிவிட்டார். இவரும் இங்கே வந்திருக்காவிட்டால் நிலைமை அந்த இடத்தில் மோசமாகியிருக்கும்.

ஆனால் கூட்டத்தினரோ இந்தக் கோபத்தை வேறு வழியில் காட்டிவிட்டார்கள். வழியில் இருந்த சுவர்களில் வரையப்பட்டிருந்த சோனியாவின் உருவத்திலெல்லாம் பெயிண்ட் அடித்து முகத்தை அலங்கோலமாக்கிக் கொண்டே வந்தவர்கள் பெரம்பூர் ரயில்வே நிலையத்தின் வாசலில் தளபதியுடன் சிரித்தபடி இருந்த கலைஞரின் பேனரை பார்த்து ஆவேசப்பட்டார்கள்.

நிமிடத்தில் பேனர் கிழித்து எறியப்பட்டது. தடுக்கப் பாய்ந்த போலீஸாருடன் மல்லுக் கட்டினார்கள் மாணவர்கள். முடியாமல் போலீஸார் ஒதுங்கிக் கொள்ள.. அப்போது ஆரம்பித்து அந்த சாலையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து தி.மு.க., அ.தி.மு.க. பேனர்களும் கிழித்து எறியப்பட்டன. அங்கிருந்து வியாசர்பாடிவரையில் இருந்த அனைத்து தி.மு.க. கொடிக்கம்பங்களும் நொடியில் வெட்டி வீழ்த்தப்பட்டன.

ஜெயலலிதாவின் பேனரைக் கிழித்து நடு ரோட்டில் போட்டு எரித்து சொக்கப்பானை கொழுத்தினார்கள். அடுத்து கலைஞரின் பேனரும், புரசைவாக்கம் எம்.எல்.ஏ.பாபுவின் பேனரும்தான் அதிகமாக கிழித்தெறியப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி சேகர்பாபு வைத்திருந்த போர்டையே உடைத்து எரிந்தார்கள் சிலர். அதோடு ஜெயலலிதாவின் பேனரை காலில் போட்டு மிதித்து தங்களது கோபத்தைக் காட்டினார்கள்.

யாராலும் தடுக்க முடியாத அளவுக்கு இந்தச் சூழல் போய்க் கொண்டிருக்க பின்புறமோ போலீஸாருக்கு சோதனையைக் கொடுக்கும்விதமாக ஒவ்வொரு அமைப்பும் மிக, மிக வெதுவாக நடக்கத் துவங்கியிருந்தார்கள்.

அனைத்து அமைப்புகளும் தத்தமது பேனர்களைக் கொண்டு வந்திருக்க தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கொண்டுவரவில்லை. இதனை லேட்டாக உணர்ந்த சேரன் வேனில் வந்து கொண்டிருந்த அமீருக்குத் தகவல் சொல்லி அவரை வரவழைத்து, கூடவே ‘கற்றது தமிழ்' ராமையும் சேர்த்துக் கொண்டு இயக்குநர்கள் அணியாக வரத் துவங்கினார்கள்.

வைகோவும், திருமாவும் ஒன்றாக ஓரிடத்தில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்பாக மட்டும் அதிகமாக கோஷம் போடாமல் அமைதியாக போய்க் கொண்டிருந்தது ஊர்வலம்.

பெரம்பூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தைத் தாண்டி ரோட்டின் இடது புறம் சில பெண்கள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடியே நின்றிருந்தது ஆச்சரியமாக இருந்தது. இதனைவிட ஆச்சரியம் வியாசர்பாடி குடிசைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இப்படியொரு கோலத்தில் நின்றிருந்ததுதான்.

ஊர்வலத்திற்கு முன்புறமாக முத்துக்குமாரின் சவ ஊர்வலம் வருவதைச் சொல்லி அவருடைய புகழ் பாடியபடியே சென்று கொண்டிருந்தன இரண்டு ஆட்டோக்கள். நான் பார்த்து எந்த இடத்திலும் மக்கள் கூட்டம் இல்லாமல் இல்லை. பெரம்பூர் ரயில்வே டிராக் அருகேகூட திரளான மக்கள் கூட்டம் நின்றிருந்தது. வியாசர்பாடி பாலத்தின் அருகேயும் பொதுமக்கள் அந்தப் பாலத்தின் மீது கையில் மெழுகுவர்த்தியோடு நின்றிருந்து தங்களது அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்க பலரும் கால்நடையாக போய்க் கொண்டிருந்தார்கள். எனக்கும் பாவமாக இருந்தது. தற்செயலாக நான் அங்கே சந்தித்த, கேமிராவும் கையுமாக, கடமையே கண்ணாக இருந்த நமது சக வலைப்பதிவர் பிரின்சு.என்.ஆர்.சாமாவிடம் இது பற்றிச் சொன்னேன். “ஈழத்துல முப்பது வருஷமா கரண்ட்டையே பார்க்காம வாழ்ந்துட்டிருக்காங்க.. மரத்தடில குடும்பம் நடத்திக்கிட்டிருக்கான்.. அதெல்லாம் உங்களுக்கு கஷ்டமா தெரியலையா..? ஒரு நாள் நடக்கட்டுமே.. என்ன குறைஞ்சு போச்சு..?” என்று அடிக்க வருவதைப் போல் பேச.. “ஐயா சாமி.. ஆளைவிடு..” என்று எஸ்கேப்பானேன்..

பேசின்பிரிட்ஜ் பாலத்தின் அந்தப் புறமிருந்து மக்கள் கூட்டம் போக்குவரத்து இல்லாததால் கால்நடையாகவே வியாசர்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

வியாசர்பாடி அருகே வந்தபோதுதான் ஒரு திடுக்கிடும் செய்தி ஊர்வலத்தினருக்குக் கிடைத்தது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து, விடுதிகளை மூடச் சொல்லி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று.

இதைக் கேள்விப்பட்ட கூட்டத்தினரின் கோஷம் இன்னமும் ஆக்ரோஷமாக எழும்பியது. ‘அங்கே', ‘இங்கே' என்று செல்போன் பேச்சுக்கள் பரிமாறிய பின்பு பேசின்பிரிட்ஜ் பாலத்தின் அருகே வந்தபோது கூட்டம் அங்கேயே அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தை நடத்தியது.

“அரசு அறிவித்த கல்லூரி மூடல் உத்தரவை வாபஸ் வாங்க வேண்டும். அதுவரையில் நாங்கள் நகர மாட்டோம்..” என்று அறிவித்தனர் கூட்டத்தினர். போலீஸார் தங்களால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட தலைவர்கள்தான் பஞ்சாயத்துக்கு வந்தார்கள்.. “அரசின் உத்தரவை இந்த நேரத்தில் எதிர்ப்பது விவேகமல்ல. இது மக்களை இப்போதைக்கு துன்புறுத்தும். ஏற்கெனவே இந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நாம் உடலை அடக்கம் செய்துவிட்டு பின்பு பேசுவோம்..” என்று ஒருவாறாகச் சொல்லி சமாதானப்படுத்த.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துதான் மீண்டும் ஊர்வலம் துவங்கியது..

மூலக்கொத்தளம் சுடுகாடு வண்ணாரப்பேட்டை மெயின் ரோட்டில் தங்கசாலைக்கு திரும்புமிடத்தில் நேரான பாதையில் இருக்கிறது. இது ஒருவகையில் தமிழ் வரலாற்றில் மிக முக்கியமான இருப்பிடம். 1965-ல் பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தபோது தி.மு.க. நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்விட்ட தாளமுத்து நடராசன் எரியூட்டப்பட்ட சுடுகாடு இதுதான். இதே சுடுகாட்டின் ஒரு மூலையில் தாளமுத்து நடராசனுக்காக ஒரு நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு காரணத்துக்காகவே கொளத்தூரின் அருகேயிருந்த மக்காராம் தோட்டம், வில்லிவாக்கம், ரெட்ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்த சுடுகாடுகளைத் தவிர்த்துவிட்டு “15 கிலோ மீட்டர் என்றாலும் பரவாயில்லை. மூலக்கொத்தளம் சுடுகாடுதான் பொருத்தம்” என்று நினைத்து இங்கே கொண்டு வந்தார்களாம்.

நான்கு நாட்களுக்கு முன்புதான் தாளமுத்து நடராசனின் நினைவு தினம் வந்தது. அன்றைக்கு அமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து தாளமுத்து நடராசன் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தியதால் ரோட்டோரம் இரு புறத்தையும் சுத்தம் செய்து வைத்திருந்தார்கள். அங்கே ஏற்கெனவே மேடையும், சேர்களும் போட்டு அனைத்தும் தயாராக இருந்தது.

ஊர்வலம் சரியாக இரவு 11.10 மணிக்கு, கிட்டத்தட்ட ஏழரை மணி நேரம் கழித்து சுடுகாட்டிற்குள் வந்தடைந்தது. ‘வீர வணக்கம்..' ‘வீர வணக்கம்..' என்று முழக்கமிட்டபடியே இருந்த கூட்டத்தைப் பார்த்து தலைவர்கள் திண்டாடிப் போனார்கள். நாம் என்ன சொன்னாலும் எதுவும் நடக்காது என்று நினைத்தவர்கள் அங்கேயே முத்துக்குமாருக்கு வழியனுப்பிவிட்டு அவர்கள் மேடைக்குப் போய் சேர்ந்தார்கள்.

தலைவர்கள் சென்ற பின்பு வேனில் இருந்து முத்துக்குமாரின் உடல் இறக்கப்பட்டது. பின்பு முத்துக்குமாரின் மைத்துனர் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவரப்பட்டு அவரும் சேர்ந்து கைகொடுக்க உடலை தூக்கி தயாராக இருந்த சிதையில் வைத்தார்கள். எருவாட்டிகளை அடுக்குவதற்குக்கூட மாணவர்களுக்கிடையில் போட்டா போட்டி நடந்தது. இந்த இடத்தில் படம் பிடிக்க முடியாமல் டிவிக்காரர்கள் தவியாய் தவித்துப் போனார்கள். உள்ளே ஒரு இடம் விடாமல் மாணவர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின்பே முத்துக்குமாரின் தந்தை சிதைக்கு தீ மூட்டினார்.. ‘வீர வணக்கம்' கோஷம் எல்லை தாண்டியது. தீ எரிய, எரிய ஒவ்வொரு அமைப்பினரும் மாறி மாறி வந்து நின்று கொண்டு ‘வீர வணக்கம்' என்று கோஷமிட்டார்கள்.

சிதைக்குத் தீ வைக்கப்பட்டதை மேடையிலிருந்தே தெளிவாக பார்க்க முடிந்தது. இதன் பின்பே திருமாளவன் பேசத் துவங்கினார். சாடை மாடையாக கலைஞரை கண்டித்தவர், “நமக்கு நல்லது செய்வதற்காகத்தான் இந்த அரசு கல்லூரிகளை மூடியிருக்கிறது. பரவாயில்லை. நமக்கும் நல்லதுதான். கல்லூரி இருந்தால்தானே புறக்கணிக்க.. இப்போது அவர்களே மூடிவிட்டார்களே.. சந்தோஷம்..” என்றார்.

வைகோ பேசும்போது தாளமுத்துநடராசனை நினைவு கூர்ந்தார். “மாணவர்களின் போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது நமது மாநில அரசு” என்றார். “இது போன்று மாணவர்கள் மூலமாகப் போராட்டம் நடத்தி, அதன் மூலம் ஓட்டுக்களை வாங்கி ஆட்சியைப் பிடித்துதானே இன்றைக்கு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறீர்கள். ஆட்சிக்கு வந்த பின்பு உங்களுக்கு இப்போது இந்த மாணவர்களின் எழுச்சி ஆபத்தாக இருக்கிறதா..?” என்று கேள்வி எழுப்பினார். ஈழத்து கவிஞர் ஒருவரின் கவிதையை வாசித்துக் காட்டினார். கடைசியில் “பிரபாகரனை நெருங்கவே முடியாது.. விடுதலைப்புலிகளை அழிக்கவும் முடியாது..” என்றார் திட்டவட்டமாக.

இதன் பின்பு நல்லகண்ணு, எம்.நடராசனும் பேசினார்கள். ராமதாஸ் வரவில்லை. ஆனால் அவருக்குப் பதிலாக ஜி.கே.மணி பேசினார். த.வெள்ளையன் இந்த மூன்று நாட்களும் தங்களுக்கு ஒத்துழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கடைசியாக பழ.நெடுமாறன் பேசும்போது, “நாம் ஒவ்வொரு படியாக செல்வோம். முதலில் பிப்ரவரி 4-ம் தேதி முழு அடைப்பு. அந்த அடைப்பு வெற்றி பெற்றாக வேண்டும். அதன்பின் பிப்ரவரி 7-ம் தேதியன்று அடுத்தக் கட்ட போராட்டம் பற்றி பேசி முடிவெடுப்போம்” என்றார். கூடவே, “ஊர்வலத்தில் வந்ததைப் போலவே திரும்பிப் போகும்போதும் எவ்வித சச்சரவுமில்லாமல், கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து பத்திரமாக நீங்கள் திரும்பிப் போக வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.

இந்த மூன்று நாட்களும் நான் பார்த்தவரையில் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்டு பேசும் வைகோவும், திருமாவளவனும் இந்த விஷயத்தில் மட்டும் தங்களது சுருதியை சற்றுக் குறைத்துக் கொண்டார்கள். உணர்ச்சிவேகத்தில் பேசப் போய் மாணவர்கள் கிளர்ந்து ஏதாவது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டால் பொதுஜனங்களின் மத்தியில் ஈழப் போராட்டத்திற்கான ஆதரவு குறைந்துவிடும் என்ற எண்ணவோட்டம் அவர்கள் மத்தியில் இருந்ததுதான் இதற்குக் காரணம்.

நிச்சயம் இது பாராட்டத்தக்கது. வந்த கூட்டம் மிக அமைதியாக திரும்பிச் சென்றது எவ்வித சலசலப்புமில்லாமல்.. அதேபோல் மாணவர்கள் எவ்வளவோ பிரச்சினைகள் கொடுத்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு கடைசிவரையிலும் முழு பாதுகாப்பு வழங்கி அமைதியை நிலைநாட்டிய காவல்துறையினரையும் பாராட்டித்தான் ஆக வேண்டும். அம்மா ஆட்சி மட்டும் இப்போது இருந்திருந்தால் ‘ஏதோ ஒன்று' நிச்சயம் நடந்திருக்கும். காவல்துறையின் பொறுமைக்கு ஒரு ‘ஜே!'

ஊர்வலம் வந்த சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்களெல்லாம் ஊர்வலத்தில் தாமாகவே வந்து கலந்து கொள்ள.. கடைசியாக கிட்டத்தட்ட 20000 பேராவது வந்திருப்பார்கள் என்று நான் ஊகிக்கிறேன்.

முத்துக்குமார் என்ன காரணத்திற்காக தீக்குளித்தாரோ அதில் கால்வாசி இந்த மூன்று நாட்களில் நடந்தேறிவிட்டதை வழிநெடுகிலும் கூடியிருந்த மக்கள் கூட்டமே காட்டிவிட்டது. இப்போது ஈழத்து மக்களின் துயரம் தமிழகத்து மக்களின் வீட்டுக்குள் பேசப்படும் பேச்சாக இருக்கிறது. விரைவில் அது மாணவர்கள் வாயிலாக வெளிப்படும் என்று நினைக்கிறேன்.

ஊடகங்களின் புறக்கணிப்பு, முக்கியக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் ஒத்துழையாமை இவற்றால்தான் முத்துக்குமாரின் இந்த முயற்சி சற்று தேங்கியதாக நான் நினைக்கிறேன். கலைஞரை சுட்டிக் காட்டிய அதே விரல்கள் அடுத்து தைலாபுரத்துக்காரரையும் சுட்டிக் காட்டும் என்பதால்தான் பாட்டாளி மக்கள் கட்சியினர் அதிக அளவில் இதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்து இந்த முயற்சிக்கு பின்னடைவை தந்துவிட்டது.

முத்துக்குமாரின் துண்டறிக்கையே இந்த கொதிப்பான சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அந்தப் பேனாவின் வலிமையை என்னவென்று சொல்வது..?

முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கங்கள்..!

100 comments:

  1. நேரிலேயே சென்று வந்தது போன்ற உணர்வு, நன்றி நண்பா!

    முத்துக்குமாரா வீர வணக்கம்!

    ReplyDelete
  2. Really vaiko did a great job on muthukumar from the minute one to last.

    ReplyDelete
  3. உ.த,
    விரிவான பதிவுக்கு நன்றி.

    முத்துக்குமாரின் இறுதி யாத்திரையில் நேரடியாகக் கலந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது உங்களின் பதிவு மூலம்.

    மிக்க நன்றி.

    /* இந்த மூன்று நாட்களும் நான் பார்த்தவரையில் எப்போதுமே உணர்ச்சிவசப்பட்டு பேசும் வைகோவும், திருமாவளவனும் இந்த விஷயத்தில் மட்டும் தங்களது சுருதியை சற்றுக் குறைத்துக் கொண்டார்கள். */

    வைகோ, திருமாவளவன் ஆகியோரின் செயல் மிகவும் பாரட்டத்தக்கது. இப்படியான நிகழ்வுகளைக் கொச்சைப் படுத்தி, திசை திருப்ப சில குழுக்கள் எதிர்பார்த்து இருக்கின்றன. எனவே இப்படியான நிகழ்வுகள் கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் நடக்க வேண்டும் என்பதுதான் என் அவா.

    /* “பிரபாகரனை நெருங்கவே முடியாது.. விடுதலைப்புலிகளை அழிக்கவும் முடியாது..” என்றார் திட்டவட்டமாக. */

    சும்மா, பிரபாகரனின் சுயபுராணம் பாடுவதைத் தவிர்த்து, ஈழத்தில் நடக்கும் உண்மையான நிலமைகளை, அதாவது ஈழத்தில் மக்கள் படும் இன்னல்கள், இந்திய நடுவண் அரசு இலங்கை அரசுக்குச் செய்துவரும் இராணுவ உதவிகள் போன்றவற்றை தமிழக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

    ஈழத்தில் இப்போது உடனடித் தேவை யுத்த நிறுத்தம். அதுதான் அங்கு நாளுக்கு நாள் கொல்லப்படும் மக்களைக் காக்கும்.

    எனவே சும்மா பிரபாகரன் பற்றிய சுய புகழ்ச்சிகளை இப்படியான நிகழ்ச்சிகளில் தவிர்த்தல் நன்று.

    ReplyDelete
  4. கண் முன் நடந்தது போன்று மிகவும் நன்றாகத் தொகுத்து எழுதி இருக்கிறீர்கள். தமிழர்களின் எழுச்சியை நேரில் காண முடியவில்லை என்ற வருத்தத்தை ஒரு எழுத்து விடாமல் படித்து தணித்துக் கொண்டேன்.

    அடுத்து நடக்க உள்ள வேலை நிறுத்தப் போராட்டமும், தில்லி நாடாளுமன்றம் முன் நடக்கவிருக்கும் தொடர் உண்ணா நோன்பு போராட்டமும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

    ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசு பணியும் வரை, மக்கள் விரோத குடும்ப கட்சிகள் நொறுங்கி நல்லாட்சி அமையும் வரை தொடர்ந்து போராட, தன் இன்னுயிரை தந்து, தமிழரை ஒன்று திரட்டிய சகோதரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்.

    ReplyDelete
  5. sir,
    Beatiful and very picturesque. I'm away from the country. Very useful for me. Why don't you write it in a mainstream magazine so that it will reach many. Thank you for your patient and objective reporting.

    ReplyDelete
  6. வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு எனது வீரவணக்கம்.

    இந்த தீப்பொறிக்கு எனது இரங்கலை நேரில் வந்து செலுத்தமுடியாத கழிவிரக்கத்தில் இருந்த எனக்கு, உங்களின் இந்த விரிவான பதிவு, நேரில் சென்றதுபோன்ற ஆறுதலைத் தருகின்றது.

    பதிவிற்கு நன்றி.

    வெல்க தமிழ்.

    ReplyDelete
  7. mikka nandri.....for writing all the details and giving a feeling of being present there... hope the mightiness of that young man's words stays like that and brings about a change!

    ReplyDelete
  8. கூடவே நடந்து வந்ததைப் போன்றிருந்தது. நன்றி உ. த!

    ReplyDelete
  9. அன்பினிய உண்மைத் தமிழா,

    தொலை தூரத்திலிருக்கும் எம்போன்றோருக்கு
    நீங்கள் அளித்திருக்கும் தீரன் முத்துக்குமார்
    வீரவணக்க விமர்சனம் கலந்துகொள்ள இயலாக்
    கவலையைப் போக்கிவிட்டது. சிறப்பாக எழுதிய‌
    தங்களுக்கு அமெரிக்க தமிழர்கள் சார்பில் பாராட்டுக்கள்!
    நன்றிகள்.
    ஆல்பர்ட்,
    விஸ்கான்சின்,
    அமெரிக்கா.

    ReplyDelete
  10. இடுகைக்கு நன்றி. இதை படிக்கும் போது ஊர்வலத்தை நேரில் பார்த்த மாதிரியே இருந்தது.

    ReplyDelete
  11. விளக்கமான பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  12. Neraai paarpathai pondru irunthathu.. mikka nandri...

    ReplyDelete
  13. இதை ப‌டிப்ப‌து ஊர்வ‌ல‌த்தில் நேர‌டியாக‌ க‌ல‌ந்து கொண்ட‌ உண‌ர்வை த‌ந்த‌து.இந்த‌ எழுச்சி ஒரு ந‌ல்ல‌ துவ‌க்க‌த்துக்கு வ‌ழி செய்ய‌ வேண்டும் .

    ReplyDelete
  14. எனது அண்ணன் வழக்கமாக சொல்லும் ஒரு வசனம், எது எப்படியாயினும் சரி இன உணர்வை அழிக்கவே இயலாது என்பதுதான். தமிழ் இனம் எங்கே தனது உணர்வை இழந்து விட்டதோ என என்னியிருக்கையில் 'வீரத்தமிழ் மகன் முத்துக்குமார்' அது உண்மையில்லை என்பதை நிருபித்துவிட்டார்.

    ReplyDelete
  15. தமிழன் தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பினார்கள்

    ReplyDelete
  16. தங்களின் கட்டுரைக்கு மிக நன்றி.
    முத்துகுமாருக்கு வீர வணக்கம்.

    ReplyDelete
  17. உங்களின் பதிவுகளிலேயே மிகவும் போற்றதக்க பதிவு இது... உணர்ச்சி பிரவாகம்.

    எந்த வெகுஜன பத்திரிகைகளிலும் இது போன்று பதிவு செய்யமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.. அவர்கள் நோக்கம் இதையும் காசாக்குவது மட்டுமே.

    நீர் உண்மை தமிழர் என்பது அத்தனை உண்மை...

    ReplyDelete
  18. Great work!!! After walking for 15 kms in 7 hours , you type this post on night 1 pm. Really great !!!

    ReplyDelete
  19. உண்மைத்தமிழன்..

    கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் விரைவில் வெளிப்படும்.3ம் தேதி நடக்கயிருக்கும் கட்சிகூட்டத்தில் தடாலடியாக தமிழக எம்பிக்கள், அமைச்சர்கள் ராஜினாமா என்ற குறைந்தப்பட்ச அறிவிப்போ அல்லது முதல்வர் பதவி ராஜினாமா என்ற அறிவிப்போ வெளியிட்டு, முத்துக்குமார் மரணத்தால் ஏற்ப்பட்டுள்ள உணர்ச்சித்தீயை பயன்படுத்தி,வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு அறுவடையை நடத்தி 40 தொகுதியிலும் வெற்றிப்பெற முயர்ச்சிப்பார்.

    நாமும் அவரின் தமிழினப்பற்று, பதவியை தோள்துண்டுப்போல துச்சமென நினைத்து உதறியப்பாங்கு என வழக்கம்போல மெய்சிலிர்த்து அவர்சார்ந்தக் கூட்டணிக்கு ஓட்டளிப்போம்.

    எப்படியோ இன்னும் 2 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது.எம்பி பதவி,அமைச்சர் பதவி இழப்பால் அவருக்கு பெருத்த நஷ்டம் கிடையாது. தமிழீழ மக்களுக்காக மத்திய அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ் என்கிற அவரது கோஷம்,வழக்கம்போல உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்கும் தமிழ்மக்கள் மத்தியில் அவரின் 'தமிழினத் தலைவர்' என்ற இமேஜிற்கு பங்கம் வராமல்,பெரும்பாலான தொகுதியில் வெற்றிப்பெற்று,மீண்டும் காங்கிரஸோ,பிஜேபியோ ஏதாவதொரு கூட்டணியில் சேர்ந்து அவரின் புதல்விக்கும்,பேரன்களுக்கும் மந்திரிப்பதவி வாங்கிக்கொடுத்து, குடும்பங்களையும்,தொழில்களையும் செவ்வன செய்துக்கொள்வார்கள்.

    கருணாநிதிக்கு அவர் கையில் சுக்கான் இருக்கவேண்டும்,ஈழத்தமிழர்களுக்கானஎவ்விதப்போராட்டமும் அவர் தலைமையில் நடந்தால்தான் அவரால் ஓட்டு அறுவடை செய்யமுடியும்.அவரின் ஒரேப் பிரச்சனை... முத்துக்குமாரின் மரணமும், அதையொட்டி எழுந்துள்ள இளைநர்களின் எழுச்சியும்.அவர் கண்டிப்பாக எதிர்ப்பாராத அதிர்ச்சி திருப்பம்.இதை நீர்த்துப்போகச் செய்யவே,கல்லூரிகள் காலவரையற்ற மூடல், முழுஅடைப்புக்கு எதிர்ப்பான அரசின் அறிவிப்பு.

    பொறுத்திருந்துப் பார்க்கலாம்...என் கணிப்புகள்,நிஜமாகப்போகிறதா..இல்லையா என்பதை....

    ReplyDelete
  20. Thank you for your detailed coverage sir. Veera vanakkam Muthukumar.

    ReplyDelete
  21. //1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. ///

    முத்துக்குமாரின் கடிதத்தில் இருந்து

    ReplyDelete
  22. கண்கள் பனிக்க படித்தேன் ..நன்றி உண்மைத் தமிழன்.

    ReplyDelete
  23. தாங்கள் விவரித்ததை படித்து கொண்டே மனக் கண்ணிலும் பார்த்து விட்டேன், முத்துக்குமாருக்கு அடியேனின் வணக்கங்கள் , அவரின் இறுதி விருப்பங்கள் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்

    Mani Pandi

    ReplyDelete
  24. Government has Closed All Colleges and Hostels, Now what can be done:
    1. Students will return to their Native Places
    2. In each and every Towns and Villages, these students should form “College Going Students Association”
    3. Irrespective of their colleges, be it Law or Arts or Medical and locations i.e Chennai College, Madurai College etc , All the Students from one native place to become part of that Association.
    4. By this way of Associating College students at Native Place itself, they can take forward their agitation and spread the news in nearby places.
    5. This will ensure the spreading of Tamils Agitation in each and every place in Tamil Nadu and teach lessons for Congress, it’s slave DMK and ADMK in the Coming Parliament Election.
    6. Note: At native places, there is chance for Caste and religions gaps. Students should trash those gaps and unite for this Tamil Nobel Cause.

    ReplyDelete
  25. Boycott Tamil Nadu Medias, which Boycotts Eelam related News and act as mouthpiece of Shingala Sri Lankan Govt & it’s co-brother Indian Govt headed by Cong, supported by the back-stabber DMK.

    Need to boycott Sun Picture Movies & TV all across World by Tamils, until they cover Eelam related news and Tamil’s Protests all across World.

    NRI Tamils and Eelam Tamils living abroad and their organizations should communicate this to SUN TV. If their business get affected, and sure they’ll change their stand.

    ReplyDelete
  26. வெறும் உணர்ச்சிக் குவியல், வாழ்த்துகிற மக்கள் ஏன் தாங்களும் இது போல் செய்யக் கூடாது. களத்தில் இறங்குங்கள் என்றால் நீங்கள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறவர்கள் தானே. சும்மா நெட்டில் எழுதிக்கிட்டே இருக்காமா, கஷ்டப்படுகிற மக்களுக்கு காசு கலெக்ட் பண்ணி அனுப்புறது தானே ? அதெல்லாம் செய்றதில்ல. சும்மா சவடால் விடுறதுக்கு மட்டும் ரெடி சே இதெல்லாம் ஒரு பொழைப்பா !

    நுவரேலியா பாபு.

    ReplyDelete
  27. What a fantastic cover story!!!I really appreciate your coverage.
    I feel so sorry for "MUTHUKUMAR":-(.And tearful "SALUTE" for him.

    Guru...

    ReplyDelete
  28. விரிவாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  29. நீ தான்டா உண்மைதமிழன்.

    ReplyDelete
  30. //பழமைபேசி said...
    நேரிலேயே சென்று வந்தது போன்ற உணர்வு, நன்றி நண்பா! முத்துக்குமாரா வீர வணக்கம்!//

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  31. //Anonymous said...
    Really vaiko did a great job on muthukumar from the minute one to last.//

    உண்மைதான் அனானி. வைகோவும், திருமாவும் இந்த விஷயத்தில் மிக, மிக எச்சரிக்கையாகவும், பொறுமையாகவும் நடந்து வருகிறார்கள் என்பது எனது கணிப்பு.

    ReplyDelete
  32. //வெற்றி said...
    /* “பிரபாகரனை நெருங்கவே முடியாது.. விடுதலைப்புலிகளை அழிக்கவும் முடியாது..” என்றார் திட்டவட்டமாக. */
    சும்மா, பிரபாகரனின் சுயபுராணம் பாடுவதைத் தவிர்த்து, ஈழத்தில் நடக்கும் உண்மையான நிலமைகளை, அதாவது ஈழத்தில் மக்கள் படும் இன்னல்கள், இந்திய நடுவண் அரசு இலங்கை அரசுக்குச் செய்துவரும் இராணுவ உதவிகள் போன்றவற்றை தமிழக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஈழத்தில் இப்போது உடனடித் தேவை யுத்த நிறுத்தம். அதுதான் அங்கு நாளுக்கு நாள் கொல்லப்படும் மக்களைக் காக்கும்.
    எனவே சும்மா பிரபாகரன் பற்றிய சுய புகழ்ச்சிகளை இப்படியான நிகழ்ச்சிகளில் தவிர்த்தல் நன்று.//

    அவர்களும் அதைத்தான் மேடைக்கு மேடை சொல்லி வருகிறார்கள். ஈழம் பற்றிப் பேசும்போது பிரபாகரன் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியுமா.. அதுவும் வைகோவால்..?

    ReplyDelete
  33. //குலவுசனப்பிரியன் said...
    அடுத்து நடக்க உள்ள வேலை நிறுத்தப் போராட்டமும், தில்லி நாடாளுமன்றம் முன் நடக்கவிருக்கும் தொடர் உண்ணா நோன்பு போராட்டமும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.//

    இந்தப் போராட்டமும் அரசியல் கலப்பில்லாமல்தான் நடைபெறப் போகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. மத்திய அரசு அசைந்து கொடுக்கிறதா என்று..?

    ReplyDelete
  34. //Selva said...
    sir, Beatiful and very picturesque. I'm away from the country. Very useful for me. Why don't you write it in a mainstream magazine so that it will reach many. Thank you for your patient and objective reporting.//

    உங்களது நம்பிக்கைக்கும், வாழ்த்துக்கும் நன்றி செல்வா.

    பத்திரிகைகளில் இதனை கொடுத்திருந்தால் நீங்கள் படித்து ஆச்சரியப்பட்ட, நெகிழ்ந்துபோன பல சம்பவங்கள் வெட்டப்பட்டிருக்கும்.. பத்திரிகைகளுக்கும் உள் அரசியல் உண்டு..

    நமக்கு இது போதும் சாமி..

    ReplyDelete
  35. //மருள்நீக்கி said...
    வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு எனது வீரவணக்கம்.
    இந்த தீப்பொறிக்கு எனது இரங்கலை நேரில் வந்து செலுத்தமுடியாத கழிவிரக்கத்தில் இருந்த எனக்கு, உங்களின் இந்த விரிவான பதிவு, நேரில் சென்றதுபோன்ற ஆறுதலைத் தருகின்றது. பதிவிற்கு நன்றி.
    வெல்க தமிழ்.//

    நன்றி மருள்நீக்கி.. இதென்ன பெயர்? மிக, மிக வித்தியாசம்..

    ReplyDelete
  36. //Ela said...
    mikka nandri.....for writing all the details and giving a feeling of being present there... hope the mightiness of that young man's words stays like that and brings about a change!//

    இந்த நம்பிக்கையில்தான் அந்த இளைஞன் தனது உயிரை தந்துள்ளான்.

    வந்திருந்தவர்கள் அனைவருமே ஐயோ பாவம் என்று வரவில்லை. உணர்வால் ஒன்றுபட்டுத்தான் வந்திருக்கிறார்கள்..

    நன்றி இளா..

    ReplyDelete
  37. //Thekkikattan|தெகா said...
    கூடவே நடந்து வந்ததைப் போன்றிருந்தது. நன்றி உ. த!//

    இதைத்தான் எதிர்பார்த்தேன்..

    நன்றி தெக்கிட்டான்..

    ReplyDelete
  38. //Albert Fernando said...
    அன்பினிய உண்மைத் தமிழா,
    தொலை தூரத்திலிருக்கும் எம்போன்றோருக்கு நீங்கள் அளித்திருக்கும் தீரன் முத்துக்குமார்
    வீரவணக்க விமர்சனம் கலந்துகொள்ள இயலாக் கவலையைப் போக்கிவிட்டது. சிறப்பாக எழுதிய‌ தங்களுக்கு அமெரிக்க தமிழர்கள் சார்பில் பாராட்டுக்கள்!
    நன்றிகள்.
    ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா.//

    நன்றி ஆல்பர்ட் அவர்களே..

    முத்துக்குமார் செய்துள்ள தியாகத்தின் முன் இதெல்லாம் எந்த மூலைக்கு..?

    ReplyDelete
  39. //குறும்பன் said...
    இடுகைக்கு நன்றி. இதை படிக்கும் போது ஊர்வலத்தை நேரில் பார்த்த மாதிரியே இருந்தது.//

    நன்றி குறும்பன் அவர்களே..

    இந்த உணர்வு வர வேண்டும் என்பதற்காகத்தான் எழுதினேன்..

    ReplyDelete
  40. //துளசி கோபால் said...
    விளக்கமான பதிவுக்கு நன்றி.//

    மிக்க நன்றி ரீச்சர்..

    எப்போது இந்திய விஜயம்..? வருகைக்கு முன் மெயில் அனுப்புங்கள்..

    ReplyDelete
  41. //குலமங்கலம் பாக்யா... said...
    Neraai paarpathai pondru irunthathu.. mikka nandri...//

    மிக்க நன்றி பாக்யா அவர்களே..

    ReplyDelete
  42. //இய‌ற்கை said...
    இதை ப‌டிப்ப‌து ஊர்வ‌ல‌த்தில் நேர‌டியாக‌ க‌ல‌ந்து கொண்ட‌ உண‌ர்வை த‌ந்த‌து.இந்த‌ எழுச்சி ஒரு ந‌ல்ல‌ துவ‌க்க‌த்துக்கு வ‌ழி செய்ய‌ வேண்டும் .//

    அந்தத் துவக்கம் உருவாகிவிட்டது இயற்கை ஸார்..

    ReplyDelete
  43. //இவன் said...
    எனது அண்ணன் வழக்கமாக சொல்லும் ஒரு வசனம், "எது எப்படியாயினும் சரி இன உணர்வை அழிக்கவே இயலாது.." என்பதுதான். தமிழ் இனம் எங்கே தனது உணர்வை இழந்து விட்டதோ என என்னியிருக்கையில் 'வீரத்தமிழ் மகன் முத்துக்குமார்' அது உண்மையில்லை என்பதை நிருபித்துவிட்டார்.//

    உங்கள் அண்ணன் சொன்னது உண்மைதான்..

    புலிகள் மீது மாற்றுக் கருத்து கொண்டுள்ள என்னாலேயே அந்த உணர்வைத் தடுக்க முடியவில்லையே..

    பலநேரங்களில் என் கண்கள் கலங்கி தடுமாறிவிட்டேன்..

    ReplyDelete
  44. //Sathiyanarayanan said...
    தமிழன் தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பினார்கள்.//

    அப்படியா..? எனக்குத் தெரியாதே.. இதுவும் நன்மைக்கே..

    தமிழன் தொலைக்காட்சிக்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete
  45. //நையாண்டி நைனா said...
    தங்களின் கட்டுரைக்கு மிக நன்றி.
    முத்துகுமாருக்கு வீர வணக்கம்.//

    நைனா மிக்க நன்றி..

    ReplyDelete
  46. //வண்ணத்துபூச்சியார் said...
    உங்களின் பதிவுகளிலேயே மிகவும் போற்றதக்க பதிவு இது... உணர்ச்சி பிரவாகம். எந்த வெகுஜன பத்திரிகைகளிலும் இது போன்று பதிவு செய்யமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.. அவர்கள் நோக்கம் இதையும் காசாக்குவது மட்டுமே.//

    நன்றி பூச்சியார் அவர்களே..

    பத்திரிகைகளுக்கு பக்கம் பிரச்சினை உண்டு. அது தவிர்க்க முடியாதது.

    நான் எழுதியிருப்பது வேர்டிலேயே 17 பக்கங்கள் வந்திருந்தது. இதை அப்படியே போட முடியுமா என்ன..?

    ReplyDelete
  47. //Anonymous said...
    Great work!!! After walking for 15 kms in 7 hours , you type this post on night 1 pm. Really great!!!//

    அனானியாரே..

    நான் நேற்று இரவுதான் இதனை வலையில் ஏற்றினேன்..

    ஆனாலும் தங்களது அன்பிற்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  48. //மோகன் said...
    உண்மைத்தமிழன்.. கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் விரைவில் வெளிப்படும். 3-ம் தேதி நடக்கயிருக்கும் கட்சி கூட்டத்தில் தடாலடியாக தமிழக எம்பிக்கள், அமைச்சர்கள் ராஜினாமா என்ற குறைந்தப்பட்ச அறிவிப்போ அல்லது முதல்வர் பதவி ராஜினாமா என்ற அறிவிப்போ வெளியிட்டு//

    மோகன்.. ஆச்சரியமாக உள்ளது.. எப்படி இந்த விஷயம் உங்களுக்குத் தெரிந்தது..? நீங்களும் பத்திரிகையாளரா..?

    உண்மையாகவே கலைஞர் இப்படியொரு திட்டத்தை வைத்திருப்பதாக கொளத்தூரில் வலுக்கட்டாயமாக பரப்பப்பட்டது. இதனை குறிப்பிட வேண்டும் என்று நினைத்தேன். மறந்துவிட்டது. நல்லவேளை நீங்கள் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.. நன்றி..

    //முத்துக்குமார் மரணத்தால் ஏற்ப்பட்டுள்ள உணர்ச்சித் தீயை பயன்படுத்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு அறுவடையை நடத்தி 40 தொகுதியிலும் வெற்றி பெற முயர்ச்சிப்பார்.//

    நிச்சயமாக.. இதில் சந்தேகமேயில்லை..

    //நாமும் அவரின் தமிழினப் பற்று, பதவியை தோள் துண்டு்போல துச்சமென நினைத்து உதறியப் பாங்கு என வழக்கம்போல மெய்சிலிர்த்து அவர் சார்ந்த் கூட்டணிக்கு ஓட்டளிப்போம். எப்படியோ இன்னும் 2 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. எம்பி பதவி, அமைச்சர் பதவி இழப்பால் அவருக்கு பெருத்த நஷ்டம் கிடையாது. தமிழீழ மக்களுக்காக மத்திய அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ் என்கிற அவரது கோஷம், வழக்கம்போல உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்கும் தமிழ் மக்கள் மத்தியில் அவரின் 'தமிழினத் தலைவர்' என்ற இமேஜிற்கு பங்கம் வராமல், பெரும்பாலான தொகுதியில் வெற்றி பெற்று, மீண்டும் காங்கிரஸோ, பிஜேபியோ ஏதாவதொரு கூட்டணியில் சேர்ந்து அவரின் புதல்விக்கும், பேரன்களுக்கும் மந்திரி பதவி வாங்கிக் கொடுத்து, குடும்பங்களையும், தொழில்களையும் செவ்வன செய்து்கொள்வார்கள்.//

    நூற்றுக்கு நூறு உண்மை. அடேங்கப்பா கலைஞரின் ராஜதந்திரத்தை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள்.

    //கருணாநிதிக்கு அவர் கையில் சுக்கான் இருக்கவேண்டும். ஈழத் தமிழர்களுக்கான எவ்விதப் போராட்டமும் அவர் தலைமையில் நடந்தால்தான் அவரால் ஓட்டு அறுவடை செய்யமுடியும்.//

    இதுதான் அவரது இயல்பு குணம். தன்னைத் தவிர தமிழ்நாட்டில் யாரும் தலை நிமிரக் கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாகவே இருக்கிறார்.

    //அவரின் ஒரே பிரச்சனை... முத்துக்குமாரின் மரணமும், அதையொட்டி எழுந்துள்ள இளைநர்களின் எழுச்சியும்.அவர் கண்டிப்பாக எதிர்பாராத அதிர்ச்சி திருப்பம். இதை நீர்த்துப்போகச் செய்யவே, கல்லூரிகள் காலவரையற்ற மூடல், முழு அடைப்புக்கு எதிர்ப்பான அரசின் அறிவிப்பு.//

    உங்களுடைய இந்தக் கருத்தை வரிக்கு வரி நானும் ஆமோதிக்கிறேன்.

    கலைஞரின் பய உணர்வில் தான் கடந்து வந்த பாதையை அவர் மறந்துவிட்டார்..

    ReplyDelete
  49. ///Anonymous said...
    //1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. ///
    முத்துக்குமாரின் கடிதத்தில் இருந்து..///

    அப்போது தி.மு.க. தலைமை அண்ணாவிடம் இருந்தது.

    அண்ணாவின் பேச்சில் கட்டுண்டு போன மாணவர் சிகரங்கள் அவர் பின்னால் அணி வகுத்தார்கள். அதைத்தான் தம்பி முத்துக்குமாரும் குறிப்பிட்டிருக்கிறார் அனானி..

    ReplyDelete
  50. //ஜோ / Joe said...
    கண்கள் பனிக்க படித்தேன் ..நன்றி உண்மைத் தமிழன்.//

    நானும் கண்கள் பனிக்கத்தான் இதனை டைப் செய்தேன் ஜோ..

    ReplyDelete
  51. //மணி said...
    தாங்கள் விவரித்ததை படித்து கொண்டே மனக்கண்ணிலும் பார்த்து விட்டேன், முத்துக்குமாருக்கு அடியேனின் வணக்கங்கள், அவரின் இறுதி விருப்பங்கள் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    Mani Pandi//

    மணிப்பாண்டி தாங்கள்தானா..? நலம்தானே..

    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  52. //Anonymous said...
    Government has Closed All Colleges and Hostels, Now what can be done:
    1. Students will return to their Native Places.
    2. In each and every Towns and Villages, these students should form “College Going Students Association”
    3. Irrespective of their colleges, be it Law or Arts or Medical and locations i.e Chennai College, Madurai College etc , All the Students from one native place to become part of that Association.
    4. By this way of Associating College students at Native Place itself, they can take forward their agitation and spread the news in nearby places.
    5. This will ensure the spreading of Tamils Agitation in each and every place in Tamil Nadu and teach lessons for Congress, it’s slave DMK and ADMK in the Coming Parliament Election.
    6. Note: At native places, there is chance for Caste and religions gaps. Students should trash those gaps and unite for this Tamil Nobel Cause.//

    அனானியாரே..

    தங்களுடைய இந்த யோசனை சரியானதுதான்..

    ஆனால் முறையான மாணவர் அமைப்புகளும் இங்கு இல்லை என்பதாலும், இருக்கின்ற அமைப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதினாலும் நீங்கள் சொல்லியிருப்பது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான்..

    ஆனாலும் இது போன்ற ஒன்று நடந்தால் இந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளை வீட்டுக்கு அனுப்பிவிடலாம்..

    ReplyDelete
  53. //Anonymous said...
    Boycott Tamil Nadu Medias, which Boycotts Eelam related News and act as mouthpiece of Shingala Sri Lankan Govt & it’s co-brother Indian Govt headed by Cong, supported by the back-stabber DMK.//

    இதனைச் செய்ய வேண்டியது பத்திரிகை முதலாளிகள்தான்.. பத்திரிகைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அல்ல..

    அவர்களும் அன்றாடங்காய்ச்சிகள்தானே.. முதலில் குடும்பம், வயிறு என்ற பிரச்சினைகளையும் பார்த்தாக வேண்டுமே..?

    //Need to boycott Sun Picture Movies & TV all across World by Tamils, until they cover Eelam related news and Tamil’s Protests all across World.//

    இது நல்ல யோசனைதான்.. மாற வேண்டியது மக்களின் ரசனைதான்..

    //NRI Tamils and Eelam Tamils living abroad and their organizations should communicate this to SUN TV. If their business get affected, and sure they’ll change their stand.//

    இதற்கெல்லாம் பயப்படுகின்ற ஆட்கள் இல்லை ஸார் அவங்க.. எங்கயோ போயிட்டாங்க.. அவர்களுடைய தொழிலும் எப்படியோ வளர்ந்துவிட்டது.. எதுவும் செய்ய முடியாது..

    ஆட்சியும், அதிகாரமுமே அவர்கள் கையில் இருக்கும்போது நீங்களும், நானும் என்ன செய்ய முடியும்..?

    ReplyDelete
  54. //சுரேஷ் கண்ணன் said...
    thanks for the coverage.//

    நன்றி சுரேஷ் ஸார்.. தங்களுடைய தொலைபேசி எண் யாரிடம் கேட்டாலும் கிடைக்க மாட்டேங்குது.. கொஞ்சம் தர முடியுமா..?

    ReplyDelete
  55. நல்ல நேர்முகம் போன்ற விவரனை.

    முத்துக்குமார் உயிரை இழந்ததற்குப் பதிலாக தன் எழுத்து பேச்சு இவற்றின் மூலம் மக்களின் கவன ஈர்ப்பைப் பெற முயற்சித்திருந்திருக்கலாம் என்று நினைவைப் புறந்தள்ள முடியவில்லை.

    இரண்டாவதாக இது போன்ற உணர்வு வெள்ளம் கிளம்பும் கூட்டங்களில் மக்களின் மாஸ் சைக்காலஜிதான் வேலை செய்யுமே தவிர சிந்திக்கும் திறன் அல்ல;எனவே இந்தக் கூட்டமும் கோஷமும் புலிகளுக்கான ஆதரவு என்று எவராவது முடிவுக்கு வந்தால் அது தப்பர்த்தம்.

    இலங்கைத் தமிழர்களின் துயரநிலையை தமிழக அளவில் எடுத்துக் காட்ட முத்துக் குமார் தன் உயிரை இழந்திருக்க வேண்டாம்;அதை தமிழக அரசியல்வாதிகள் முயற்சித்து புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இரு புறமும் அழுத்தங்கள் கொடுத்து அப்பாவி மக்களை அழிவிலிருந்து காக்க உருப்படியாக ஏதாவது செய்திருக்கலாம்.

    என்ன விதமான பொருளுதவிகளோ அல்லது மற்ற எந்த உதவிகளோ அளித்தாலும் இறந்த அந்த இளைஞனுக்கு ஈடானதாக எதுவுமே அந்தக் குடும்பத்திற்கு இருக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை !

    ReplyDelete
  56. //Anonymous said...
    வெறும் உணர்ச்சிக் குவியல், வாழ்த்துகிற மக்கள் ஏன் தாங்களும் இது போல் செய்யக் கூடாது. களத்தில் இறங்குங்கள் என்றால் நீங்கள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறவர்கள்தானே. சும்மா நெட்டில் எழுதிக்கிட்டே இருக்காமா, கஷ்டப்படுகிற மக்களுக்கு காசு கலெக்ட் பண்ணி அனுப்புறதுதானே? அதெல்லாம் செய்றதில்ல. சும்மா சவடால் விடுறதுக்கு மட்டும் ரெடி.. சே இதெல்லாம் ஒரு பொழைப்பா!
    நுவரேலியா பாபு.//

    பாபு ஸார்..

    இங்கே எங்களால் முடிந்ததை நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம்..

    ஈழத்திற்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களுக்காக பல தரப்பட்ட மக்களும் பண உதவி செய்திருக்கிறார்கள்.

    களத்தில் இறங்குவது என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாமல் அதற்கு பதில் சொல்வது விவேகமாக இருக்காது என்பதால் மன்னித்துவிடுங்கள்.. அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை..

    ReplyDelete
  57. //ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    விரிவாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.//

    மிக்க நன்றி சுந்தர் ஸார்..

    எப்போதும் இதே போல் சுருக்கமாகவே பின்னூட்டம் இடுங்கள்..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  58. //mathi said...
    நீதான்டா உண்மைதமிழன்.//

    இல்லீங்க மதியண்ணேன்..

    நாம எல்லாருமே உண்மைத்தமிழர்கள்தான்..

    ReplyDelete
  59. வன்னியில் 50,000 மக்களை பலிக்கடாக்களாக்க புலிகள் திட்டம்!

    வன்னி இரத்தக்களரியை தடுத்து நிறுத்துவது புலம்பெயர் மக்களினதும் சர்வதேசத்தினதும் உடனடி கடமை!!

    - வன்னியூரான்

    ஏறத்தாழ 283 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இலங்கை இராணுவத்தால் புலிகள் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தின் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ள யுத்த களத்தில் அகப்பட்டு தினம் தினம் செத்துமடியும் வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு, மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் அறிவித்த 48மணிநேர கால அவகாசத்தை, புலிகள் எடுத்த எடுப்பிலேயே உதாசீனப்படுத்தி நிராகரித்துவிட்டார்கள். யாழ்ப்பாண ஆயர் உட்பட இலங்கையின் பல ஆயர்கள் விடுத்த வேண்டுகோளுக்கும் புலிகள் செவிசாய்க்கவில்லை. ஐக்கிய நாட்டு பொதுச்செயலாளர், ஐரோப்பிய ஒன்றியம், இந்திய-தமிழக அரசுகள் என இன்னோரன்னர் விடுத்த கோரிக்கைகளும் புலிகளை பொறுத்தவரை செவிடன் காதில் ஊதிய சங்காக போய்விட்டது. தமது பாதுகாப்புக்காக இரண்டரை லட்சம் வன்னி தமிழ்மக்களை மனித கேடயமாக வைத்திருந்து பலி கொடுப்பது என புலிகள் தீர்மானித்து விட்டதையே புலிகளது பிடிவாதம் எடுத்துக்காட்டுகிறது.

    சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான வேண்டுகோளால் திக்குமுக்காடிப்போன புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா. நடேசன் வன்னி மக்கள் தாம் விரும்பிய இடத்துக்கு செல்வதை தமது இயக்கம் ஒருபோதும் தடுக்கவில்லை என படுபொய்யொன்றை அவிழ்த்துவிட்டுள்ளார். புலிகள் இப்பொழுது மட்டுமல்ல, 1995ல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கு ஓடிவந்த நாளிலிருந்தே மக்களை பலவந்தமாக வன்னியில் தடுத்து வைத்துள்ளனர். உத்தியோகம் நிமித்தம் குடும்பங்களை விட்டு வன்னியில் தங்கியிருந்தவர்களையும் (இவர்களில் சிலர் ஓய்வூதியம் பெற்ற பின்னரும் கூட) சில அலுவல்கள் காரணமாக வன்னி சென்றவர்களையும் கடந்த பல ஆண்டுகளாக தமது குடும்பங்களுடன் இணையவிடாது புலிகள் தடுத்து வைத்துள்ளனர். புலிகள் இயக்கத்தில் பலவந்தமாக இணைக்க முயன்று, அவர்கள் மறுப்பு தெரிவித்த காரணத்தால் புலிகளால் கடுமையாக தாக்கப்பட்டு பலர் கை கால்கள் முறிந்த நிலையில் இருக்கின்றனர்.

    வன்னி மக்களது உள்ளக்குமுறலை மறைத்து, வெளி உலகிற்கு புலிகள் பொய்கூறி வருகின்றார்கள். வன்னி மக்களை வெளி உலகுடன் தொடர்பு கொள்ளவிடாது தடுத்து வைத்திருப்பதற்கு, வன்னி நிலைமைபற்றிய உண்மைகள் வெளிவந்துவிடும் என்று புலிகள் பயப்படுவதும் ஒரு காரணம். உண்மையில் வன்னிமக்கள் ஏதாவது ஒரு சர்வதேச நாடு வந்து தங்களை புலிகளிடமிருந்து மீட்டெடுக்காதா என்ற ஏக்கத்துடனேயே தமது ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்து வருகின்றனர்.

    அண்மையில் புலிகளின் தடையை மீறி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைவதற்காக, வன்னியில் நீண்டகாலமாக வாழந்த மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்துள்ளனர். அவர்கள் (வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள்) புலிகளுக்கு தெரியாமல் காடுகளுக்கூடாக பல மைல்கள் நடந்தும், சில நாடகள் பட்டினி கிடந்தும்தான் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியை அடைய முடிந்தது. நிலைமை இவ்வாறிருக்க அரசியல் பொறுப்பாளர் என்ற பொறுப்புவாய்ந்த பதவியில் இருக்கும் நடேசன், மக்கள் விரும்பிய இடங்களுக்கு செல்வதை தாம் தடுக்கவில்லை என கூறுவது அப்பட்டமான ஒரு பொய்யே தவிர வேறல்ல.

    இதில் வேதனையான ஒரு விடயம் என்னவெனில், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்மக்கள் புலிகளின் பொய் செய்திகளை நம்பி, இலங்கை அரசாங்கம் மட்டும்தான் வன்னி மக்களின் அவல நிலைக்கு காரணம் என அந்நாடுகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் செல்வதைக்காண அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. வன்னி மக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தாது, விடுதலை செய்யுங்கள் என்று புலிகளை நோக்கி கூக்குரலிடுவதே, வன்னி மக்களில் உண்மையில் அக்கறை உள்ளவர்கள் செய்ய வேண்டியது. அதை விடுத்து, வன்னி மக்களின் அநாவசியமான உயிர் இழப்புகளுக்கு, இலங்கை அரசாங்கத்தில் பழிபோட்டு ஆர்ப்பாட்டம் செய்வது, இராணுவ முற்றுகையில் அகப்பட்டுள்ள பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றும் முயற்சி என்பதை வன்னி மக்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், வன்னியில் உறவுகள் எவரையும் கொண்டிராத, வெறும் யாழ்ப்பாணத்தவர்களோ என்றே வன்னி மக்களால் எண்ணத்தோன்றுகின்றது. ஆர்ப்பாட்டகாரர்களுக்கு வன்னியில் உறவுகள் இருந்திருந்தால், நிச்சயம் வன்னி மக்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற அனுமதிக்கும்படி புலிகளை அவர்கள் கோரியிருப்பார்கள். ஆனால் ஆர்ப்பாட்டகாரர்கள் அவ்வாறு செய்யாமல், புலிகளை மாத்திரம் காப்பாற்றுவதற்காக, வன்னி மக்களுக்கு எதிராகவே ஊர்வலம் போயுள்ளார்கள் என்றே எண்ண வேண்டியுள்ளது.

    ஆனால் வன்னியில் உள்ள உண்மை நிலைமையை வெளியே சொன்னால், வெளிநாடுகளில் வாழும் நேர்மையான தமிழ்மக்களும், உலக நாடுகளும் அதிர்ச்சி தான் அடைவார்கள். அந்தளவு தூரம் பயங்கரமான திட்டங்களை புலிகள் தீட்டீயுள்ளனர். புலிகளை பொறுத்தவரையில், புலிகளின் தலைவர் எப்பொழுதோ மனைவி பிள்ளைகளுடன் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் வேறு சிலர், மனைவி பிள்ளைகளை புலிகளின் தலைவர் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, கடைசி நேரத்தில் தான் வெளியேற முடியாது, வன்னியில் இராணுவத்தின் முற்றுகையில் சிக்கியுள்ளார் என கூறுகின்றனர். எது எப்படியோ, புலிகள் தமது நூற்றுக்கணக்கான போராளிகளை மட்டுமின்றி, தமது இரண்டாம், மூன்றாம் மட்ட தலைவர்களையே பாதுகாப்பாக எங்குமே அனுப்ப முடியாது தவிக்கின்றனர்.

    இந்த நேரத்தில்தான், ராஜீவ் காந்தியை கொலைசெய்து இந்தியாவை பகைத்துக் கொண்ட பிரபாகரனின் முட்டாள்தனத்தை புலி உறுப்பினர்கள் எண்ணியெண்ணி வெளியே சொல்ல முடியாது புழுங்குகின்றனர். அதாவது இந்தியாவை பகைக்காமல் இருந்திருந்தால், இந்த மிக இக்கட்டான நேரத்தில் இந்தியாவிற்காவது தப்பி ஓடியிருக்கலாமென புலி உறுப்பினர்கள் எண்ணுகின்றனர். இப்பொழுது புலிகள் முன்னால் இருப்பது ஒரேயொரு தெரிவு மட்டுமே. ஏதுமறியாத வன்னிமக்களுடன் மக்களாக கலந்து ஒழிந்திருக்கும் தங்கள் தலைமையை பாதுகாப்பதற்காக, களமுனையில் அப்பாவி கீழ்மட்ட புலி உறுப்பினர்கள் போராடி மடிவதே. அதிலும் மிகப்பெரிய அநியாயம் என்னவென்றால், தமது பாதுகாப்புக்கு உறுதிப்படுத்தவேண்டும் என்பதற்காக, ஏதுமறியா இரண்டரை இலட்சம் அப்பாவியிலும் அப்பாவிகளான, வன்னி மக்களை மனித கேடயமாக வைத்திருப்பதுதான்.

    இப்பொழுது புலிகள் கையாளும் மிகக்கேவலமான தந்திரோபாயம் என்னவென்றால், மக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பு வலயங்களின் மத்தியில் தமது ஆட்டிலறிகளை கொண்டுவந்து வைத்துகொண்டு, இராணுவத்தின் மீது எறிகணை அடிப்பதுதான். இப்படி அடிக்கும்போது, ஆட்டிலறிகள் வந்த திசையை நோக்கி இராணுவம் திருப்பி தாக்குவார்கள். (இவ்வாறு இராணுவம் மிகத்துல்லியமாக தாக்கி வருகின்றது) அப்பொழுது ஏராளமான பொதுமக்கள் இறப்பார்கள் என்பது புலிகளின் எதிர்பார்ப்பாகும். அவ்வாறு இறப்பவர்களின் தொகை பத்தாயிரம், இருபதினாயிரம், முப்பதினாயிரம் என அதிகரித்து ஐம்பதினாயிரம் வரை போகவேண்டும் என புலிகள் எதிர்பார்க்கிறார்கள்! அப்பொழுதுதான் இறந்த மக்களின் பிணங்களையும் தொகையையும் வைத்துக்கொண்டு சர்வதேச சமூகத்தையும் புலம்பெயர் தமிழ்மக்களையும் ஏமாற்றி திசைதிருப்பி, தமக்கு ஆதரவான ஒரு சூழ்நிலையை மீண்டும் ஏற்படுத்தலாம் என்பது புலிகளது திட்டமாகும். இதனைவிட இராணுவத்தின் பதில் தாக்குதல் நடைபெறும்போது, தாமும் தமது பங்குக்கு இங்குள்ள வன்னி மக்களின் மேல் எறிகணைகளை வீசி, வகைதொகையில்லாமல் வன்னி மக்களை கொல்வதற்கான பயங்கரமான திட்டங்களையும் புலித்தலைமை தீட்டிவைத்துள்ளனர். புலிகளின் தலைமைப்பீடத்தால் தீட்டப்பட்டுள்ள இத்திட்டங்களை அறிந்து, புலிகளது கீழ் அணிகள் மத்தியிலேயே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது!

    புலிகளின் இந்த பயங்கரமான திட்டங்களை, சர்வதேச சமூகமும் புலம்பெயர் தமிழ் சமூகமும் உடனடியாக முறியடிக்க தவறினால், வன்னி மக்களுக்கு பெரும் அனர்த்தங்கள் ஏற்படுவது நிச்சயம். வன்னியல் பெரும் இரத்த ஆறு ஓடுவது தவிர்க்க முடியாதது. குறிப்பாக, புலிகளின் பொய் பிரச்சாரங்களால் தவறாக வழிநடாத்தப்பட்டு, புலிகளுக்காக கடும் குளிரில் வீதிகளில் இறக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண மக்களுக்கு வன்னியின் உண்மை நிலைமையை தெளிவுபடுத்துவது அவசியம். யாழ்ப்பாண புலம்பெயர் மக்கள் ஒரு கொடூரமான பயங்கரவாத இயக்கத்தின் பிடியில் சிக்கி அல்லலுறும் வன்னி மக்களுக்காக குரல் எழுப்பி, வன்னி மக்களை புலிகளின் பிடியியிலிருந்து பாதுகாப்பதற்கு மாறாக, கொடுமையாளர்கள் பக்கம் நிற்கிறார்கள்.

    எனவே வெளிநாடுகளில் வசிக்கின்ற வன்னி மற்றும் கிழக்கு மாகாண மக்கள், புலம்பெயர் நாடுகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் யாழ்ப்பாண சமூகத்திற்கு வன்னியின் உண்மை நிலைமையை எடுத்துக் கூறவேண்டும். சர்வதேச சமூகமும் ஏனையவர்களும் புலிகளை நோக்கி திரும்ப திரும்ப விடுக்கும் வேண்டுகோளை ஏற்று, வன்னி மக்களை புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கும்படி, யாழ்ப்பாண மக்கள் புலிகளை வலியுறுத்தும் நிலையை, நீதியை விரும்பும் நேர்மையான புலம்பெயர் தமிழ்மக்கள் ஏற்படுத்த வேண்டும். யாழ்ப்பாண மக்கள் படித்தவர்கள், நியாயமானவர்கள் என கடந்த காலங்களில் பெயர் எடுத்தவர்கள். அவர்கள் தமது சகோதரர்களான வன்னி மக்கள், கொலைகார யுத்த களத்திலிருந்து தப்புவதற்கு, இந்த இக்கட்டான நேரத்தில் உதவுவது தலையாய கடமையாகும். முதலில் மக்களின் உயிர் முக்கியம். அதன் பின்னர் புலிகளின் தனிநாட்டு போராட்டத்துக்கு உதவுவது பற்றி சிந்தியுங்கள். நீங்கள் பாதுகாப்பாக வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு, ஏதுமறியாத அப்பாவி வன்னி தமிழ்மக்களை, புலிகளின் அதிகார வெறிக்கு பலியாக்குவதற்கு நீங்கள் உடந்தையாயிருப்பது, எந்த விதத்திலும் நியாயமாகாது.

    =

    ReplyDelete
  60. யாழில் வரலாறு காணாத மக்கள் பேரணி!வன்னி உறவுகளை புலிகளிடமிருந்து மக்கள் திரண்டனர்!

    yarl demoயாழ்.குடாநாட்டில் வரலாற காணாத மாபெரும் பேரணியாகயாழ் மக்கள் திரண்டு தங்களது உணர்வுகளை வெளிப்பத்தியிருந்தனர்.இன்று காலை யாழ் கச்சேரி முன்பாக உள்ள யாழ் கண்டி வீதியெங்கும்நீண்ட தூரத்திற்கு பேரணியாக திரண்டிருந்த மக்கள் வெள்ளம் அங்கிருந்துபுறப்பட்டு சென்றதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. தீவகம், தென்மராட்சி,வடமராட்சி, வலிகாமம், மற்றும் யாழ் என அனைத்து வலையங்களில் இருந்தும் வாகனங்களின் மூலம் அலை அலையாக திரண்டு வந்த மக்கள் தமது வன்னி வாழ் உறவுகள் புலிகளின் பிடியில் இருந்து சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றிருந்தனர்.யாழ் தேச மக்கள் எழுச்சி பேரவையின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட இப்பேரணி சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகளிடமும், மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளிடமும்மகஐர்களை கையளித்திருந்தனர்.

    இப்பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு யாழில் உள்ள அனைத்து பொது அமைப்புகளும் தமது பேருதவிகளை புரிந்து கொண்டதோடுபேரணியிலும் பங்கு கொண்டிருந்தனர். கொழும்பில் இருந்து 20க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் யாழ் நோக்கி சென்று பேரணி குறித்த செய்திகளை சேகரித்து கொண்டனர். இலங்கை, இந்திய, மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இதில்கலந்து கொண்டிருந்தனர். இது குறித்து யாழ் மாவட்ட தேச மக்கள் எழுச்சி பேரவைஉறுப்பினர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் ஒரு நாளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், வன்னி உறவுகளை மீட்பதற்கான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

    யாழ்.மாவட்டத் தேசிய மக்கள் எழுச்சிப் பேரவையின் வேண்டுகோளை ஏற்று இயல்பாகவே இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு புலிகளால் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான எமது உறவுகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை தமிழ் பேசும் மக்களின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாகும் என்றும் இதுவரை காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு அவலங்களையே பெற்றுத் தந்த புலித் தலைமை தற்போது தமிழ் மக்களையே பணயம் வைத்துத் தம்மைத் தற்காத்துக் கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் நலன்களை முன்வைத்து மக்களுக்காகப் போராடுவதற்குப் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கான அழைப்பினை விடுத்திருந்த யாழ்.மாவட்டத் தேசிய மக்கள் எழுச்சிப் பேரவைக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
  61. you did a good job
    it is a bad time for tamilans

    ReplyDelete
  62. விளக்கமான பதிவுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  63. http://defence.lk/new.asp?fname=20090202_08
    தலைவர் பிரபாகரனின் அதிசய பங்கர் பாரீர்

    ReplyDelete
  64. நேரிலேயே சென்று வந்தது போன்ற உணர்வு, நன்றி நண்பா!

    முத்துக்குமாரா வீர வணக்கம்!

    முத்துக்குமாரா வீர வணக்கம்!

    முத்துக்குமாரா வீர வணக்கம்!

    Puduvai Siva

    ReplyDelete
  65. தனிபதிவாக வேண்டுமானும் இடலாம்..

    ---------------------------------

    தமிழர் தாயகத்தில் நாளாந்தம் இடம் பெற்று வருகின்ற கோர யுத்தத்தினால் இறந்து மடிகின்ற எங்கள் இரத்த உறவுகளைப் பாதுகாப்பது தொடர்பான கருத்துக் கணிப்பினைக் கனடாவைச் சேர்ந்த இராணுவ ஊடகம் ஒன்று மேற்கொள்கின்றது. எங்கள் தாயக உறவுகளின், இரத்த உறவுகளின் உயிர்களினைப் பாதுகாக்க நீங்கள் விரும்பின் உடனடியாக விரைந்து செயற்படுங்கள்.

    இந்தக் கருத்துக் கணிப்பானது இலங்கையில் இடம்பெறும் போரை முடிவிற்குக் கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளில் கனேடிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமா? வன்னி மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது தொடர்பில் கனேடிய அரசாங்கம் அக்கறை கொள்ள வேண்டுமா?? என்பது பற்றியதாகும்.

    உலகங்கெங்கும் பரந்து வாழுகின்ற உறவுகளே! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,
    உடனடியாக 0014162604005 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு எமது உறவுகளைப் பாதுகாக்க விரும்பின் அறிவுறுத்தல் (Option) ஒன்றினை ( 1) அழுத்தவும்.

    காலம் தாமதிக்காமல் உடனே விரைந்து செயற்படவும். ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானலும் வாக்களிக்காலம்.
    ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.
    இந்த விடயத்தை உடனடியக உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!

    நீங்கள் இணையத்தளம் மூலமாக வாக்குகளைப் பதிவு செய்ய விரும்பின்

    http://www.citynews.ca/polls.aspx?pollid=4786

    நேற்று இடம்பெற்ற எறிகணை மற்றும் பல் குழல் உந்துகணைத் தாக்குதலில் (12) பன்னிரண்டு சிறுவர்கள் உட்பட (32) முப்பத்திரண்டு பேர் வன்னிப் பகுதியில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    அழுத்துங்கள் உங்கள் தொலைபேசிகளை!
    பதியுங்கள் உங்கள் வாக்குகளை!
    திறவுங்கள் உலகின் விழிகளை!

    Hi Every One! please vote for ceasefire in SriLanka. Please dial 0014162604005 and press one. This vote been canadian army media. Please act soon... And pass the message to every one you know. Please...Please vote now and safe our people. Evan last night 32 been killed including 12 kids on ariel bombing

    ReplyDelete
  66. இந்தியாவில் (தமிழ்நாட்டில்) இந்திய அரசு, கலைஞர் அரசு - இதுக்கு எதிரா போராட்டம்.

    ஆனால் யாழ்பாணத்தில் 16,000 ஈழத்தமிழர்கள் LTTE க்கு எதிராக போராட்டம்.

    ஈழத்தமிழர்கள் தங்களை அமைதியாக வாழ விடுபபடியும், மனித கேடயங்களாக பிடித்துள்ள மக்களை விடும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். LTTE-ன் ஒரே சாதனை சுடுகாடு என்கின்றனராம். பல பெற்றோர் பிரபாகரன் தமிழ் குழந்தைகளை பிடித்த சாபம் என நினைகிறார்களாம். பிற நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களை LTTEக்கு பணம் ஆதரவுதர வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்.

    http://www.zeenews.com/southasia/2008-12-22/493012news.html

    இவர்கள் என்ன துக்ளக்கும் இந்துவும் படித்ததினால் போராடுகிறார்களா? இல்லை இவர்கள் கட்சி காங்கிரஸ் கட்சிகாரர்களா?

    இலங்கை ராணுவத்திற்கு பயந்து என்றால் திடீரென இப்போது ஏன் பயப்படுகிறார்கள்?

    ReplyDelete
  67. thank you for your narration.
    you did it nicely.

    Even at this juncture when hundreds of people are dying ,some low lifes from Douglas Devananda's 'koolippadai' are trying to do false propaganda for their sinhala masters by writimg lies in this blog.

    Muthukumar died for a noble cause,you sell your race for rajapakse's money.you people are a disgrace.

    you

    ReplyDelete
  68. முத்துக்குமாரா வீர வணக்கம்!
    --Senthil

    ReplyDelete
  69. உண்மையான உணர்வுகளின் மனித நேயத்தையும்,அந்த உணர்வுகளின் அத்து மீறல்களில் விளையும் கொடுமைகளையும் ஒருசேர நடுவு நிலைமையோடு செவ்வனே பதிவு செய்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்,சரவணன்.
    சிந்திக்கத் துவங்கி,அதன் தொடக்கத்திலேயே உணர்ச்சி வயப்பட்டு,உடனே அறிவைப் பறக்க விட்டு விட்டு,வெறும் உணச்சிகளின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுத்துக் கொண்டு அல்லல் படும் நமது தேசீயக் குணத்திலிருந்து நாம் மீளா விட்டால் எதிர் காலத்தில் இதே போனற துயர நிகழ்வுகளை நாம் ஏராளமாக சநதிப்போம் என்பது உறுதி.

    ReplyDelete
  70. வன்னியூரானின் கட்டுரையை அனுப்பியிருக்கும் அனானி..

    இந்த விஷயத்தில் ஆள் மாற்றி ஆள் ஆளுக்கு ஒரு குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்.

    யார் சொல்வதை நம்புவது.. யார் சொல்வதை நம்பாமல் இருப்பது என்கிற குழப்பம் தமிழ்நாட்டு மக்களிடம் மேலோங்கி உள்ளது.

    இது போன்ற விஷயங்கள்தான் தமிழ்நாட்டு மக்கள் முழு மனதுடன் தங்களது ஆதரவை ஈழத்து மக்களுக்கு வழங்க முடியாமைக்கு காரணம்..

    மக்களை புலிகள் தடுத்து வைத்துள்ளனரா.. அல்லது மக்கள் தாங்களே அந்தப் பகுதியில் இருக்கின்றனரா என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் அந்தப் பகுதியில் மக்கள் இருப்பது தெரிந்தாலே அது பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டு ராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து அப்பகுதி விலக்கப்படல் வேண்டும்.

    அரசுகள்தான் மக்களுக்காக இணங்கி வர வேண்டுமே தவிர.. அரசுகளுக்காக மக்கள் இணங்கி வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது நல்ல ஜனநாயகமல்ல..

    ReplyDelete
  71. யாழ்ப்பாணத்தில் புலிகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பற்றி கேள்விப்பட்டேன்.

    இரு தரப்பினரால் பாதிக்கப்பட்ட மக்களு்ம் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்..

    ReplyDelete
  72. //Balakumar said...
    விளக்கமான பதிவுக்கு மிக்க நன்றி...//

    நன்றி பாலகுமார்..

    ReplyDelete
  73. //வாசகன் said...
    நல்ல நேர்முகம் போன்ற விவரனை.
    முத்துக்குமார் உயிரை இழந்ததற்குப் பதிலாக தன் எழுத்து பேச்சு இவற்றின் மூலம் மக்களின் கவன ஈர்ப்பைப் பெற முயற்சித்திருந்திருக்கலாம் என்று நினைவைப் புறந்தள்ள முடியவில்லை.//


    இதே எண்ணம் பலருக்கும் இருக்கிறது வாசகன் ஸார்..

    //இரண்டாவதாக இது போன்ற உணர்வு வெள்ளம் கிளம்பும் கூட்டங்களில் மக்களின் மாஸ் சைக்காலஜிதான் வேலை செய்யுமே தவிர சிந்திக்கும் திறன் அல்ல; எனவே இந்தக் கூட்டமும் கோஷமும் புலிகளுக்கான ஆதரவு என்று எவராவது முடிவுக்கு வந்தால் அது தப்பர்த்தம்.//

    அப்படியல்ல.. புலி வாழ்க என்றும் பிரபாகரன் வாழ்க என்று கோஷம் போட்டாலே புரிந்துவிடும் கதை. அப்படித்தான் புரிந்தது..

    தமிழீழத்தில் ஈழத்து மக்களைக் காப்பாற்ற புலிகளைத் தவிர வேறு ஆட்கள் இல்லை என்பதை திரும்பத் திரும்ப புலி ஆதரவாளர்கள் தமிழகத்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதனை இந்த நிகழ்ச்சியும் தவறாது செய்தார்கள்.

    //இலங்கைத் தமிழர்களின் துயர நிலையை தமிழக அளவில் எடுத்துக் காட்ட முத்துக்குமார் தன் உயிரை இழந்திருக்க வேண்டாம்; அதை தமிழக அரசியல்வாதிகள் முயற்சித்து புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இரு புறமும் அழுத்தங்கள் கொடுத்து அப்பாவி மக்களை அழிவிலிருந்து காக்க உருப்படியாக ஏதாவது செய்திருக்கலாம்.//

    தமிழக அரசியல்வியாதிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு இந்த முட்டாள்தனம் அல்லது தியாகத்தை செய்துவிட்டார்.

    //என்ன விதமான பொருளுதவிகளோ அல்லது மற்ற எந்த உதவிகளோ அளித்தாலும் இறந்த அந்த இளைஞனுக்கு ஈடானதாக எதுவுமே அந்தக் குடும்பத்திற்கு இருக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை!//

    ஆமோதிக்கிறேன் வாசகன்..

    ReplyDelete
  74. //புதுவை சிவா :-) said...
    நேரிலேயே சென்று வந்தது போன்ற உணர்வு, நன்றி நண்பா!
    முத்துக்குமாரா வீர வணக்கம்!
    முத்துக்குமாரா வீர வணக்கம்!
    முத்துக்குமாரா வீர வணக்கம்!
    Puduvai Siva//

    நன்றி புதுவை சிவா..

    ReplyDelete
  75. வண்ணத்துப்பூச்சியாரே..

    தகவலுக்கு நன்றி..

    இது போன்று பல்வேறு வழிகளிலும் அப்பாவி மக்களின் அவல நிலையை வெளிப்படுத்தத்தான் வேண்டும். வெற்றி கிடைக்கும் வரையிலும்..!

    ReplyDelete
  76. //Anonymous said...
    இந்தியாவில் (தமிழ்நாட்டில்) இந்திய அரசு, கலைஞர் அரசு - இதுக்கு எதிரா போராட்டம்.
    ஆனால் யாழ்பாணத்தில் 16,000 ஈழத்தமிழர்கள் LTTE க்கு எதிராக போராட்டம்.
    ஈழத்தமிழர்கள் தங்களை அமைதியாக வாழ விடுபபடியும், மனித கேடயங்களாக பிடித்துள்ள மக்களை விடும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். LTTE-ன் ஒரே சாதனை சுடுகாடு என்கின்றனராம். பல பெற்றோர் பிரபாகரன் தமிழ் குழந்தைகளை பிடித்த சாபம் என நினைகிறார்களாம். பிற நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களை LTTEக்கு பணம் ஆதரவுதர வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்.
    http://www.zeenews.com/southasia/2008-12-22/493012news.html
    இவர்கள் என்ன துக்ளக்கும் இந்துவும் படித்ததினால் போராடுகிறார்களா? இல்லை இவர்கள் கட்சி காங்கிரஸ் கட்சிகாரர்களா?
    இலங்கை ராணுவத்திற்கு பயந்து என்றால் திடீரென இப்போது ஏன் பயப்படுகிறார்கள்?//

    இப்போது பயப்படவில்லை. எப்போதே புலிகளால் பாதிக்கப்பட்ட மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    புலிகளால் அழித்தொழக்கப்பட்ட மாற்று இயக்க தமிழ் இளைஞர்கள் குடும்பத்தினர்களாக இருக்கலாம் என்று நான் ஊகிக்கிறேன்..

    அவரவர் கருத்தை வெளிப்படுத்த உரிமையுண்டுதானே..

    அதுவும் இந்தச் சமயத்தில் நடப்பதைப் பார்த்தால் பின்னணியில் இலங்கை அரசும், ராணுவமும் இருக்கக்கூடும் என்று தெரிகிறது..

    ReplyDelete
  77. //Anonymous said...
    thank you for your narration.
    you did it nicely.
    Even at this juncture when hundreds of people are dying, some low lifes from Douglas Devananda's 'koolippadai' are trying to do false propaganda for their sinhala masters by writimg lies in this blog.
    Muthukumar died for a noble cause,you sell your race for rajapakse's money. you people are a disgrace.//

    அனானி..

    இரு தரப்புமே தமிழ் ஈழத்து மக்கள்தான்.. இவர்களுக்கிடையில் இருக்கும் பிரிவுகளே ஒரு புறம் நிரந்தரத் தீர்வுக்குத் தடைக்கல்லாக இருக்கிறது..

    புரிந்து கொண்டால் சரி..

    ReplyDelete
  78. //Sen said...
    முத்துக்குமாரா வீர வணக்கம்!
    --Senthil//

    நன்றி செந்தில் ஸார்..

    ReplyDelete
  79. //shanmughapriyan said...
    சிந்திக்கத் துவங்கி, அதன் தொடக்கத்திலேயே உணர்ச்சிவயப்பட்டு, உடனே அறிவைப் பறக்க விட்டு விட்டு, வெறும் உணச்சிகளின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுத்துக் கொண்டு அல்லல்படும் நமது தேசீயக் குணத்திலிருந்து நாம் மீளா விட்டால் எதிர் காலத்தில் இதே போனற துயர நிகழ்வுகளை நாம் ஏராளமாக சநதிப்போம் என்பது உறுதி.//

    சரியாகச் சொன்னீர்கள் ப்ரியன் ஸார்.. இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்கின்ற செயல்களின் விளைவுகள் அவர்களுக்கே அனர்த்தமாகிப்போய் விடுகிறது..

    ReplyDelete
  80. சமீபத்திய பல பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

    பத்திரிகையாளராக நேர்முக வர்ணனையை சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    முத்துக்குமார் தற்கொலைக்குப் பதில் ஆக்கபூர்வமான செயல்பாடை முயன்றிருக்கலாம்.

    ஆள்வோர்களும் அரசியல்வாதிகளும் வாளாவிருக்கையில் தனது பெற்றோர் உற்றோரை மறந்து அவர் உயிரைத் துறந்ததைப் பாராட்டத் தோன்றவில்லை;வருத்தம்தான் மேலிடுகிறது.

    ReplyDelete
  81. Thank you for your comments.
    Although I was deeply moved by muthukumar's final report.it shows he had clear vision and conviction,It was sad he lost his life ,He would have been an assest for the future generation of tamil nadu people.
    I am making an appeal to people of tamil nadu .
    I think rather than saying that they can't do anything people can take constructive steps to involve the international community to stop the carnage in eelam.
    UN doctrine says that international countries have a duty to intervene in a crisis when genocide is taking place and their own government fails to protect it's people.
    some politicians indiae say that war in srilanka is an internal affair,not anymore.
    india is giving arms and military support,in that case how can india say this is an internal matter.other countries like pakistan,china and others also involved in this war.
    UN now has a duty to protect the tamil civilians in accrdance with
    R2P.RESPONSIBILITY TO PROTECT.

    AN URGENT APPEAL TO EVERY ONE
    Srilankan army is right now shelling and killing tamil civilians,latest news says within a short period they have fired nearly 10,000 shells towards civilians.
    please tamil nadu people ! do something to stop this killing spree by srilankan army ,ask indian government which is helping srilankan govt for justice.

    UN has a duty to protect civilians when their own govt is not doing it.
    In srilanka’s case it is killing it’s own civillians which is a war crime.
    I herewith let you know what the UN charter says about R2P- RESPONSIBILITY TO PROTECT.

    UN R2P
    The Responsibility to Protect populations from genocide, ethnic cleansing, war crimes and crimes against humanity is an international commitment by governments to prevent and react to grave crises, wherever they may occur. In 2005, world leaders agreed, for the first time, that states have a primary responsibility to protect their own populations and that the international community has a responsibility to act when these governments fail to protect the most vulnerable among us.

    The Responsibility to Protect-Engaging Civil Society (R2PCS) project works to advance Responsibility to Protect (R2P) and to promote concrete policies to better enable governments, regional organizations and the U.N. to protect vulnerable populations.

    ReplyDelete
  82. ஒவ்வொன்றையும் கவனித்து சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். நேரடி ஒளிப்பரப்பைவிட சிறப்பாக இருந்தது.

    நன்றி.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் மேலும் எழுச்சி கூடும் என நம்பலாம்.

    ReplyDelete
  83. விடுதலைப்புலிகளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர USA, ஜரோப்பிய ஒன்றியம், யப்பான், நோர்வே கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆயுதங்களை கீழே வைத்து விட்டு இந்த யுத்தத்தையும் மனித அவலத்தையும் தவிர்த்துக் கொள்ளும்படி கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
    புலிகளுக்கு கொஞ்சமாவது மக்கள் மீது அக்றையிருந்ததால் இதை செய்யலாம். புலிகளினால் இதுவரை இலங்கை தமிழர் ஏராளம் துன்பங்களை அனுபவித்து விட்டார்கள். இலங்கை தமிழர் மீது அக்கறை கொள்ளும் தமிழர்களும் இந்த வேண்டுகோள்ளை தான் புலிகளிடம் கேட்க வேண்டும்.

    ReplyDelete
  84. //அறிவன்#11802717200764379909 said...
    முத்துக்குமார் தற்கொலைக்குப் பதில் ஆக்கபூர்வமான செயல்பாடை முயன்றிருக்கலாம். ஆள்வோர்களும் அரசியல்வாதிகளும் வாளாவிருக்கையில் தனது பெற்றோர் உற்றோரை மறந்து அவர் உயிரைத் துறந்ததைப் பாராட்டத் தோன்றவில்லை; வருத்தம்தான் மேலிடுகிறது.//

    எனக்கும் வருத்தம்தான் அறிவன் ஸார்..

    இருந்தாலும் அவனுக்குள் இருந்த உணர்வுக்கு நாம் தலைவணங்கித்தான் ஆக வேண்டும்..

    வருகைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  85. //மஞ்சூர் ராசா said...
    ஒவ்வொன்றையும் கவனித்து சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். நேரடி ஒளிப்பரப்பைவிட சிறப்பாக இருந்தது.
    நன்றி. இதன் மூலம் தமிழ்நாட்டில் மேலும் எழுச்சி கூடும் என நம்பலாம்.//

    கூடம் என்றில்லை மஞ்சூர் ஸார்..

    எழுச்சி ஏற்பட்டுவிட்டது என்றே நம்புகிறேன்..

    மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டுவிட்டது.

    அரசுக்கும் மக்கள் மீது, குறிப்பாக மாணவர்கள் மீது பயம் ஏற்பட்டுவிட்டது. அந்த பயம்தான் கல்லூரிகளை மூட வைத்துள்ளது..

    ReplyDelete
  86. //Anonymous said...
    விடுதலைப்புலிகளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர USA, ஜரோப்பிய ஒன்றியம், யப்பான், நோர்வே கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு இந்த யுத்தத்தையும் மனித அவலத்தையும் தவிர்த்துக் கொள்ளும்படி கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
    புலிகளுக்கு கொஞ்சமாவது மக்கள் மீது அக்றையிருந்ததால் இதை செய்யலாம். புலிகளினால் இதுவரை இலங்கை தமிழர் ஏராளம் துன்பங்களை அனுபவித்து விட்டார்கள். இலங்கை தமிழர் மீது அக்கறை கொள்ளும் தமிழர்களும் இந்த வேண்டுகோள்ளைதான் புலிகளிடம் கேட்க வேண்டும்.//

    இலங்கை அரசின் பொது மன்னிப்பு உத்தரவாதம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதில் அந்த அரசின் கடந்த கால பல நடவடிக்கைகளை வைத்துப் பார்த்தோமேயானால் சந்தேகக் கேள்வி எழுகிறது.

    இதற்கு உலக சமுதாயம் உத்தரவாதம் அளிக்க முன் வரும்பட்சத்தில் புலிகள் இதற்கு ஒப்பலாம் என்பது எனது கருத்து.

    ReplyDelete
  87. [[[ இலங்கை அரசின் பொது மன்னிப்பு உத்தரவாதம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதில் அந்த அரசின் கடந்த கால பல நடவடிக்கைகளை வைத்துப் பார்த்தோமேயானால் சந்தேகக் கேள்வி எழுகிறது.

    இதற்கு உலக சமுதாயம் உத்தரவாதம் அளிக்க முன் வரும்பட்சத்தில் புலிகள் இதற்கு ஒப்பலாம் என்பது எனது கருத்து. ]]]

    உண்மை தான் > தற்போதுள்ள வெற்றி உவைகையில் பழி வாங்கும்
    உணர்வே மேலோங்கி நிற்கும் > நூற்று கணக்கான மக்களது
    உயிர்களை அநியாயமாக புலியின் குண்டுகளுக்கு பலி கொடுத்த
    சமுதாயம் அல்லவா ?
    இலங்கை அரசை தற்பொழுது நம்ப இயலாது !
    அடைபட்ட மக்களை புலிகள் ஒத்துழைத்து விடுவார்களாயின் >
    முக்கியமாக இந்திய உத்தரவாதம் இருந்தால் புலிகளுக்கு
    சரணடைய வாய்பிருக்கும் >
    யாழ் போய் சேர எனக்கும் ஒரு சான்ஸ் கிட்டும் >
    நடக்குமா ? வெறும் கனவு தான் !!

    ReplyDelete
  88. மரண ஊர்வலத்தில் நானும் கலந்தெனோ
    என்றிருக்குதையா உங்களது வர்ணனை வன்மை

    ReplyDelete
  89. > உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    >மக்களை புலிகள் தடுத்து >வைத்துள்ளனரா.. அல்லது மக்கள் >தாங்களே அந்தப் பகுதியில் >இருக்கின்றனரா என்பதையெல்லாம் >கணக்கில் கொள்ளாமல் அந்தப் >பகுதியில் மக்கள் இருப்பது >தெரிந்தாலே அது பாதுகாக்கப்பட்ட >பிரதேசமாக அறிவிக்கப்பட்டு >ராணுவத்தினரின் தாக்குதலில் >இருந்து அப்பகுதி விலக்கப்படல் >வேண்டும்.


    எந்த உலகத்தில் இருக்கிறீர்கள், உத. போர் என்றால், இரு தரப்புகளும் எதிரியை அழித்து அல்லது கைப்பற்றி வெற்றி பெர பார்ப்பார்களே தவிர, அப்பாவி மக்கள் உயிரை முதல் குறிக்கோளாக கொள்ள மாட்டர்கள். அதுவும் இலங்கை போன்ற உள் நாட்டு போர்களில் அப்பாவி மக்கள் பலர் சாவர். அதுவும் 30 வருட போருக்கு பின், முதல் தடவையாக ஸ்ரீலங்க ராணுவம் வெற்றி பெரும் போல உள்ளது; அந்த வாய்ப்பை நழுவ விட மாட்டார்கள். நீங்கள் சொல்வது , வழக்கமான தமிழ்நாட்டின் unrealistic expectations.

    >அரசுகள்தான் மக்களுக்காக இணங்கி >வர வேண்டுமே தவிர.. >அரசுகளுக்காக மக்கள் இணங்கி வர >வேண்டும் என்று எதிர்பார்ப்பது நல்ல >ஜனநாயகமல்ல..

    போர் நடுவில் ஜனநாயகம் பேசுவது மறுபடியும் unrealistic expectations .உலக நாடுகளிடையே புலிகளுக்கு யாரும் ஆதரவு கொடுப்பதில்லை. இந்தியாவை பொருத்தவரை புலிகள் இந்தியாவின் எதிரி. இந்திய ராணுவத்தோடு போரிட்டு, முன்னாள் பிரதமரையும் 50 மற்றவர்களையும் தற்கொலை குண்டடியில் கொன்று புலிகள் , இந்திய அரசின் தீராத எதிர்ப்பை சம்பாதித்தனர். உலக நாடுகள் புலிகள் தோல்விக்குதான் பாடுபடுகிறன. மடத்தனமான தமிழ்நாட்டு அரசியலால், தமிழ் நாடு உலக சிந்தனைகளை உதாசீனப் படுத்திவிட்டது.

    ReplyDelete
  90. //benzaloy said...
    [[[ இலங்கை அரசின் பொது மன்னிப்பு உத்தரவாதம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதில் அந்த அரசின் கடந்த கால பல நடவடிக்கைகளை வைத்துப் பார்த்தோமேயானால் சந்தேகக் கேள்வி எழுகிறது.

    இதற்கு உலக சமுதாயம் உத்தரவாதம் அளிக்க முன் வரும்பட்சத்தில் புலிகள் இதற்கு ஒப்பலாம் என்பது எனது கருத்து. ]]]

    உண்மை தான் > தற்போதுள்ள வெற்றி உவைகையில் பழி வாங்கும்
    உணர்வே மேலோங்கி நிற்கும் > நூற்று கணக்கான மக்களது
    உயிர்களை அநியாயமாக புலியின் குண்டுகளுக்கு பலி கொடுத்த
    சமுதாயம் அல்லவா ?
    இலங்கை அரசை தற்பொழுது நம்ப இயலாது !
    அடைபட்ட மக்களை புலிகள் ஒத்துழைத்து விடுவார்களாயின் >
    முக்கியமாக இந்திய உத்தரவாதம் இருந்தால் புலிகளுக்கு
    சரணடைய வாய்பிருக்கும் >
    யாழ் போய் சேர எனக்கும் ஒரு சான்ஸ் கிட்டும் >
    நடக்குமா ? வெறும் கனவு தான் !!//

    நம்பிக்கையோடு இருங்கள் ஸார்..

    எல்லா அக்கிரமங்களுக்கும் ஒரு நாள் முடிவு கிடைத்தே தீரும்..

    ReplyDelete
  91. //benzaloy said...
    மரண ஊர்வலத்தில் நானும் கலந்தெனோ
    என்றிருக்குதையா உங்களது வர்ணனை வன்மை.//

    நன்றி பென்ஸ் ஸார்..

    ReplyDelete
  92. ///Anonymous said...
    >உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
    >மக்களை புலிகள் தடுத்து >வைத்துள்ளனரா.. அல்லது மக்கள் >தாங்களே அந்தப் பகுதியில் >இருக்கின்றனரா என்பதையெல்லாம் >கணக்கில் கொள்ளாமல் அந்தப் >பகுதியில் மக்கள் இருப்பது >தெரிந்தாலே அது பாதுகாக்கப்பட்ட >பிரதேசமாக அறிவிக்கப்பட்டு >ராணுவத்தினரின் தாக்குதலில் >இருந்து அப்பகுதி விலக்கப்படல் >வேண்டும்.//

    எந்த உலகத்தில் இருக்கிறீர்கள், உத. போர் என்றால், இரு தரப்புகளும் எதிரியை அழித்து அல்லது கைப்பற்றி வெற்றி பெர பார்ப்பார்களே தவிர, அப்பாவி மக்கள் உயிரை முதல் குறிக்கோளாக கொள்ள மாட்டர்கள். அதுவும் இலங்கை போன்ற உள் நாட்டு போர்களில் அப்பாவி மக்கள் பலர் சாவர். அதுவும் 30 வருட போருக்கு பின், முதல் தடவையாக ஸ்ரீலங்க ராணுவம் வெற்றி பெரும் போல உள்ளது; அந்த வாய்ப்பை நழுவ விட மாட்டார்கள். நீங்கள் சொல்வது , வழக்கமான தமிழ்நாட்டின் unrealistic expectations.//

    எல்லாம் ஒரு நம்பிக்கைதான் ஸார்.. அதுதானே வாழ்க்கை..

    ///>அரசுகள்தான் மக்களுக்காக இணங்கி >வர வேண்டுமே தவிர.. >அரசுகளுக்காக மக்கள் இணங்கி வர >வேண்டும் என்று எதிர்பார்ப்பது நல்ல >ஜனநாயகமல்ல..//
    போர் நடுவில் ஜனநாயகம் பேசுவது மறுபடியும் unrealistic expectations. உலக நாடுகளிடையே புலிகளுக்கு யாரும் ஆதரவு கொடுப்பதில்லை. இந்தியாவை பொருத்தவரை புலிகள் இந்தியாவின் எதிரி. இந்திய ராணுவத்தோடு போரிட்டு, முன்னாள் பிரதமரையும் 50 மற்றவர்களையும் தற்கொலை குண்டடியில் கொன்று புலிகள், இந்திய அரசின் தீராத எதிர்ப்பை சம்பாதித்தனர். உலக நாடுகள் புலிகள் தோல்விக்குதான் பாடுபடுகிறன. மடத்தனமான தமிழ்நாட்டு அரசியலால், தமிழ்நாடு உலக சிந்தனைகளை உதாசீனப்படுத்திவிட்டது.//

    யார் மடத்தனம் செய்தது?

    பிரபாகரனா.. இந்தியாவா..?

    யோசித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்..

    ReplyDelete
  93. நேரில் வர முடியாத குறையைத் தீர்த்து விட்டீர்கள். முத்துக்குமாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

    ReplyDelete
  94. நேரில் சென்று பார்க்க முடியாத குறையை போக்கிவிட்டீர்கள்...

    நன்றி

    ReplyDelete
  95. //தஞ்சாவூரான் said...
    நேரில் வர முடியாத குறையைத் தீர்த்து விட்டீர்கள். முத்துக்குமாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.//

    நன்றி தஞ்சாவூரான் அவர்களே..

    ReplyDelete
  96. //அத்திரி said...
    நேரில் சென்று பார்க்க முடியாத குறையை போக்கிவிட்டீர்கள்...
    நன்றி//

    தங்களது முதல் வருகை இந்தப் பதிவில்தான் இருக்க வேண்டுமா..?

    நன்றி அத்திரி..

    ReplyDelete
  97. வெற்றிக் கனியைப் பறித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  98. தமிழ்மண விருது வெற்றிக்கு வாழ்த்துகள் உண்மைத்தமிழன்..

    ReplyDelete
  99. தமிழ்மணம் விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete