08-11-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நவம்பர் 7-ம் தேதிக்கு என்ன ஸ்பெஷல் என்று தெரியவில்லை. கட்டாயம் வாழ்த்தியே தீர வேண்டிய பிறந்த நாள் சொந்தக்காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.இராமனும், 2 முறை நோபல் பரிசை பெற்ற மேடம் கியூரி அம்மையாரும் நேற்று பிறந்தவர்கள்தான். வணங்குவோம்..!
உலக நாயகன் அண்ணன் கமல்ஹாசனின் 57-வது பிறந்த நாளை அவரது ரசிகக் கண்மணிகள் ரத்த தானம், உடல் தானம் செய்து நற்பணி மன்றத்தின் பெயரை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார்கள். அண்ணனுக்கும், அவர்தம் ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துகள்..! (இது பற்றி தனிப் பதிவு போடலாம் என்று கடைசி நிமிடத்தில் நினைத்ததால் இந்தப் பதிவில் இருந்து நீக்கினேன். ஆனால் பிறந்த நாளைக் குறிப்பிட மறந்துவிட்டேன். பக்தர்கள் மன்னிக்கவும்)
திரையுலகப் பிரபலங்களான இயக்குநர் வெங்கட்பிரபுவும், பின்னணிப் பாடகர் கார்த்திக்கும் நேற்று தங்களது பிறந்த தினத்தை கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்..!
தற்போதைய நமது கனவுக் கன்னி அனுஷ்கா ஷெட்டியும், வருடங்கள் கடந்தாலும், மறக்க முடியாத கருப்பழகி நந்திதா தாஸும் நேற்றைக்குத்தான் அவதரித்தார்களாம்.. அவர்களுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள். (போட்டோ போட ஒரு சான்ஸ் கிடைச்சதுக்காக, அவர்களுக்கு நன்றியையும் செலுத்துகிறேன்)
நேற்றுதான் நமது வலையுலக இலக்கிய வித்தகர் அண்ணன் ஜமாலனுக்கும் பிறந்த நாள். அவருக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்..!
தம்பி வெட்டோத்தி சுந்தரம்
இப்போதெல்லாம் சினிமா எடுப்பது சுலபம். ஆனால் அதனை எதிர்ப்புகள் இல்லாமல் ரிலீஸ் செய்வது கடினமாகிவிட்டது. கன்னியாகுமரி-கேரள எல்லையில் வாழ்ந்த 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' என்ற கதாநாயகனின் கதையை அதே ஊரைச் சேர்ந்த இயக்குநர் வடிவுடையான் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். வரும் 11-ம் தேதி படம் ரிலீஸ். படத்தை பார்க்காமலேயே அந்தப் படத்திற்கு எதிர்ப்பைக் காட்டுகிறார்கள் ஒரு இயக்கத்தினர்..!
கன்னியாகுமரி மாவட்டத்தையே இப்படத்தில் கேவலமாக காட்டியிருப்பதாகச் சொல்லி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறார்கள். படத்தைப் பார்க்காமலேயே அவர்களால் எப்படி இதனை உறுதியாகச் சொல்ல முடிகிறது என்று கேட்டால், எங்களுக்கு வந்த தகவல்களை வைச்சு தெரிஞ்சுக்கிட்டோம் என்கிறார்கள். இத்தனைக்கும் படத்தின் தயாரிப்பாளரும் அதே மாவட்டத்துக்காரர்தான்..
போற போக்கைப் பார்த்தா சினிமாவுக்கே வெளியுறவுத் துறை அமைச்சர் மாதிரி ஒருத்தரை வேலைக்கு வைக்கணும் போலிருக்கு. படம் தயாராகி மிக நீண்ட நாட்களுக்குப் பின் திரைக்கு வருவதால் தயாரிப்பாளர் தரப்பு கலக்கமாகி தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டி உதவி கேட்டிருக்கிறார்கள். சங்கத்தினரும் படத்தைத் திரையிட அனுமதியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ஆக.. இங்கே உண்மை சினிமா வெளிவரவே வராது போலிருக்கிறது..!
கரண், அஞ்சலி நடிப்பில் நமது வலையுலக பரமார்த்த குரு பா.ராகவனின் வசனத்தில் வடிவுடையானின் இயக்கத்தில் வளர்ந்திருக்கும் இப்படத்தைப் பார்த்து அப்படியென்னதான் கதை என்று தெரிந்து கொள்ள நானும் ஆவலோடு இருக்கிறேன்..! முடிந்தால், வரும் 12-ம் தேதி, சனிக்கிழமையன்று வலையுலகத்தினருடன் இணைந்து பார்ப்போம்..!
குடும்ப டான்ஸ்..!
இது எந்த ஊர்லன்னு தெரியலை.. ஆனால் மல்லு மாம்ஸ் மற்றும் சேச்சிகளின் டான்ஸ் அசத்தல்.. ரொம்ப பிராக்டீஸ் செஞ்சு ஆடியிருக்காங்க.. பாராட்டுக்கள் உரித்தாகட்டும்..
கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்
தற்செயலாகத்தான் இதனைப் பார்த்தேன். படித்தேன்.. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கும் வருடச் சம்பளப் பட்டியல் இது :
A Grade - Rs. 1.00 Crore
Sachin Tendulkar, Rahul Dravid, Gautam Gambhir, Virender Sehwag, M S Dhoni, VVS Laxman, Suresh Raina, Harbhajan Singh, Zaheer Khan, Yuvraj Singh, Ishant Sharma, Virat Kohli
B Grade - Rs. 50.00 lakhs
Praveen Kumar, Pragyan Ojha, Ravichandran Ashwin, Rohit Sharma, Ravindra Jadeja
C Grade - Rs. 25.00 lakhs
S.Sreesanth, Amit Mishra, Munaf Patel, Murali Vijay, Parthiv Patel, S.Badrinath, Manoj Tiwary, Piyush Chawla, Dinesh Karthik, Jaydev Unadkat, Umesh Yadav, Rahul Sharma, Varun Aaron, Abhinav Mukund, Cheteshwar Pujara, Abhimanyu Mithun, Vinay Kumar, Ajinkya Rahane, Shikhar Dhawan, Wriddhiman Saha.
இதில் கடைசி 3 லைனில் இருப்பவர்கள் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை..! ஒருவேளை பயிற்சி ஆட்டத்தின்போது பந்து பொறுக்கி போடுபவர்களா..? என்னமோ செய்யட்டும்.. இத்தனை வருஷமா இந்த வெட்டியைப் பார்த்து, பார்த்து ஸ்கூல், படிப்பு எல்லாத்துலேயும் கோட்டைவிட்டு, வாழ்க்கையை இழந்துட்டு நிக்குற என்னை மாதிரி வீணாப் போன பரதேசிகளுக்கெல்லாம் பென்ஷன் மாதிரி ஏதாச்சும் போட்டுக் கொடுத்தா கொஞ்சம் நல்லாயிருக்கும்..!
சினிமாவுக்கு வயசு 80
கடந்த அக்டோபர் 27-ம் தேதியன்று தமிழ் பேசும்படத்திற்கு 80 வயது பூர்த்தியானது. 1931-ம் ஆண்டு சென்னை தங்கசாலை அருகே அப்போது கினிமா சென்ட்ரல் என்ற பெயரில் இருந்த தியேட்டரில்தான் முதன் முதலாக தமிழின் பேசும்படமான காளிதாஸ் வெளியானது.
இந்தியாவின் முதல் பேசும்படமான 'ஆலம் ஆரா'வை தயாரித்த பம்பாய் இம்பீரியல் மூவிடோன் அதிபர் அர்தேஷிர் இரானிதான் இந்தத் தமிழ்ப் படத்தையும் தயாரித்துள்ளார். டி.பி.ராஜலட்சுமி, கதாநாயகியாக தமிழில் பேசி நடித்தார். கவி காளிதாசராக நடித்தவர் தெலுங்கில் பேசியிருக்கிறார். எல்.வி.பிரசாத் ஹிந்தியில் பேசியிருக்கிறார்.
இதுபோல் படத்தில் நடித்த அனைவருமே அவரவர்க்கு தெரிந்த மொழியில்தான் பேசியிருக்கிறார்கள். ஆக இது முழுமையான தமிழ்ப் படமாக இல்லையென்றாலும், "தமிழ் மொழி ஒலித்த முதல் தமிழ்த் திரைப்படம்" என்ற பெயரைத் தாங்கியுள்ளது.
அக்டோபர் 31-ல் படம் ரிலீஸ் என்றாலும், அப்போது சென்னையில் வெளியாகி வந்த சில பத்திரிகைகளுக்கு மட்டும் அதற்குச் சில தினங்கள் முன்பாகவே படத்தைத் திரையிட்டுக் காண்பித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் விமர்சனம் அக்டோபர் 29-ம் தேதி சுதேசமித்தரன் நாளிதழில் வெளியாகியுள்ளது. அதே சுதேசமித்திரனின் விளம்பரமும் செய்திருக்கிறார்கள்.
மதுரகவி பாஸ்கரதாஸ் பாடல்களை எழுதியுள்ளார். “ராட்டினமாம் - காந்தி கை பாணமாம்”, “இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை?” போன்ற தேசபக்தி பாடல்களும் இடம் பெற்றுள்ளன. ராஜலட்சுமி குறத்தி டான்ஸ் ஆடுவதற்காக அதற்கேற்ற பாடல்களும் இருந்திருக்கின்றன.. இதில் ஒரு பாடலின் முதல் வரிகள் “மன்மத பாணமடா..! மாரினில் பாயுதடா..!” ஹி.. ஹி.. முதல் படத்துலேயே ஆரம்பிச்சிட்டோம்ல்ல..!
கலங்கடிக்கும் பேஸ்புக் பெண்கள்
தமிழகத்து பெண்கள் பற்றிய எனது பார்வையை மறுபரீசிலனை செய்ய வேண்டும் போலிருக்கிறது..! இரட்டை அர்த்த பேச்சுக்கள், செக்ஸ் ஜோக்குகளை தமிழகத்துப் பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்ற அண்டர்வேல்டு மிடில் கிளாஸ் பேமிலியில் இருந்து பிறந்து வளர்ந்து வந்திருப்பதால் அப்படியே நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் சமீப காலமாக பேஸ்புக்கில் நான் பார்த்த சில பெண்களின் அரட்டைப் பேச்சுக்கள் இந்த எண்ணத்தை கலைத்துப் போட்டுவிட்டன. சமூகத்தில் பெரிய பெயர் உள்ள பெண்கள் வட்டத்தில் சென்ற மாதம் ஒரு அரட்டைக் கச்சேரி படு சீரியஸாக நடந்தது..
“கடைசியாக எப்போது செக்ஸ் உறவு வைத்துக் கொண்டீர்கள்..? கணவருடன்தான் என்றில்லை. உறவுதான் முக்கியம்..!” - இதுதான் கேள்வி. கேள்வி கேட்டவருக்கு வயது 50-க்கும் மேல். வந்து பதில் சொன்னவர்கள் அவர் வயதையொத்த தோழிகளும் கொஞ்சம் 45-ல் இருந்து 50-ஐ தொட்டவர்களும்..
சிலர் மட்டும் ரொம்பவே உச்சுக் கொட்டி “அது என்னைக்குன்னு ஞாபகத்துல வர மாட்டேங்குதே..” என்று அழுதேவிட்டார்கள்..! சிலர் “அப்படீன்னா..” என்று கிண்டலடித்துவிட்டு “முழுமையான உறவாக 10, 8, 6 வருஷத்துக்கு முன்னால. இப்பல்லாம் ச்சும்மா டச்சிங்.. டச்சிங் மட்டும்தான்...” என்று சிணுங்கலுடன் சொன்னார்கள்..! ஆனால் பலரோ “முன்னாடில்லாம் வாரத்துக்கு 2. இப்போ வாரத்துக்கு ஒண்ணுதான்..” என்று வருத்தமாய்ச் சொல்ல.. அவர்களை வைத்து மற்றவர்கள் ஆடிய ஆட்டமும், பேசிய பேச்சும்.. ஆஹா.. ஓஹோ.. பேஷ்.. பேஷ்..! அடுத்தவர்களின் அந்தரங்கத்தை படிப்பது அநாகரிகம் என்றாலும், கண்ணில் படும்போது என்ன செய்ய..?
இன்னொரு வகையினர் இன்றைய திருமணமான யூத்தான பெண்கள்.. “கைய வைச்சுக்கிட்டு சும்மா இருடா” என்று தமிழ்ப் பாடல் ஒன்று இருக்கிறதா..? நிஜமாகவே நான் கேட்டதில்லை.. அந்த ஒரு வரியை வைத்துக் கொண்டு சமீபத்தில் ஒரு பேமஸ் பெமினிஸ்ட் சைட்டில் கும்மியடித்துத் தீர்த்துவிட்டார்கள்..! வந்து குவிந்த பெண்ணியவாதிகளெல்லாம் பெத்த பெயர் எடுத்தவர்கள். ஆனால் எழுதிய பின்னூட்டங்கள்..? நம்ம வால்பையனையும், ராஜன் லீக்ஸையும் ஒண்ணா உக்கார வைச்சு பிட்டு படம் பத்தி பேசச் சொன்னா எப்படியிருக்கும்..? அப்படியிருந்தது..! ம்.. காலம்தான் எவ்ளோ மாறிப் போச்சு..!
தேடிப் பிடித்த ரேஷ்மா
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சினிமா போஸ்டர்களில் பளிச்சென தென்பட்ட பிட்டு பட போஸ்டர்களில் இந்த முகம் தவறாமல் தென்படும். ரேஷ்மா. நிஜ பெயரா.. சினிமா பெயரா என்று தெரியாது.. ஷகீலாவின் தங்கச்சியாக 30 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். இவரைப் போலவே 7, 8 பேர் தொடர்ச்சியாக அத்தனை பிட்டுகளிலும் காட்சியளித்திருந்தார்கள். சீஸன் முடிந்துவிட்ட பின்பு ஆளுக்கொரு பக்கமாக சிதறிவிட்டார்கள்.
சிலர் இன்றைக்கும் வடபழனி, கோடம்பாக்கம் ஏரியாவில்தான் இருக்கிறார்கள். ராம் தியேட்டரின் எதிர்த் தெருவில் 2 பேர் இப்போதும் குடியிருக்கிறார்கள். இன்னொரு தாரகை, இயக்குநர் சங்கத்தின் பக்கத்து பில்டிங்கில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு தனது குழந்தைகளை கொண்டுவந்துவிட காலையும், மாலையும் வருகிறார். அடையாளம் கண்டு கொள்ளும் ஆண்கள் அவரது முகத்தைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தால், லேசாக புன்முறுவல் பூத்து கடந்து செல்கிறார்..
இந்த ரேஷ்மா மட்டும் எங்கே போனார் என்று கூகிளாண்டவரிடம் விசாரித்தபோது இந்த வீடியோவைக் காட்டினார். 2008-ம் ஆண்டு கேரளாவின் கொச்சி நகரில் விபச்சார ரெய்டில் சிக்கினாராம்.. அதையே போலீஸார் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்கள்..! என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க.. சரி.. இந்த போலீஸ் வீடியோ எப்படி ரிலீஸ் ஆச்சு..? இதை யார் விசாரிக்கிறது..?
என்னவோ போங்க..!
பாரதிராஜாவின் புதிய படம் துவக்க விழா
வரும் 17-ம் தேதி வியாழக்கிழமை, தான் பிறந்து வளர்ந்த தேனி மண்ணில் 'அன்னக்கிளியும், கொடி வீரனும்' படத்திற்கு பூஜை போடுகிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
சென்னையில் இருந்து முன்னணி இயக்குநர்கள், பிரமுகர்கள் அத்தனை பேருக்கும் டிக்கெட் போட்டாகிவிட்டது. 100 கார்கள், 5 ஏஸி பஸ்கள் புக். டிரெயின், பிளைட் என்று அத்தனை வழியிலும் அழைத்து வரச் சொல்லியாகிவிட்டது..! திரையுலகப் புள்ளிகளை தவறாமல் வர வேண்டும் என்று பாரதிராஜாவே போன் செய்து அழைத்திருக்கிறார்.. கே.பாலசந்தர் தலைமை தாங்க, மணிரத்னம் முன்னிலை வகிக்கிறாராம்..!
எல்லாம் சரி.. அவர் பிறந்த மண்ணில் நடக்கும் பிரம்மாண்டமான இந்த விழாவில் அவருடைய ஆரூயிர்த் தோழர் இளையராஜா கலந்து கொள்ள வேண்டாமா..? தன்னுடைய கனவுப் படம் என்று அவரே சொல்லியிருக்கும் இப்படத்தில் இளையராஜாவின் இசை இருந்திருக்க வேண்டாமா? இப்போதும் பிரிக்க முடியாத அவரது ஈகோவினால் ஜி.வி.பிரகாஷுடன் இணைகிறாராம்.. இதற்கு எப்படி இளையராஜா வருவார் என்கிறார்கள் திரையுலகத்தினர்.
“வைரமுத்து பாட்டெழுதப் போறாரு.. இளையராஜா இதுக்கு ஒத்துக்க மாட்டாருல்ல. அவர் என்ன செய்வாரு..?” என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தாலும் இளையராஜாவும் வருவார் என்று சென்ற வாரம் வரையிலும் கோடம்பாக்கத்தில் பேசி வந்தார்கள். திடீரென்று இளையராஜாவின் மனைவி இறந்துவிட்டதால், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் இப்போது..!
எப்படியோ, தனி மனித ஈகோவினால் தமிழுக்குக் கிடைக்க வேண்டிய சிறந்த படைப்புகள் கிடைக்காமல் போகின்றன என்பதை இந்த மூவர் என்றைக்கு உணரப் போகிறார்கள்..?
எதுக்குக் கல்யாணம்..?
வீட்டுக்குப் போகலாமா? வேண்டாமா? என்று நடுரோட்டில் நின்று யோசிக்க வைக்கும் அளவுக்கு பிக்கல் பிடுங்கல் இருக்கும் குடும்ப வாழ்க்கை முறை தேவைதானா என்று கேட்பவர்கள் இப்போதே மெக்சிகோவுக்கு டிக்கெட் எடுக்கலாம்..!
மெக்சிகோவில் இப்போதெல்லாம் டைவர்ஸ் கேட்கும் தம்பதியினரின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறதாம். ஒரு வருடத்தில் 100 பேர் திருமணம் செய்தால், அதில் 50 பேர் அடுத்தடுத்த வருடங்களில் கோர்ட் படியேறுகிறார்களாம். இதனைத் தவிர்ப்பதற்காக ஒரு சூப்பர் ஐடியாவை அந்த நாட்டு அரசே அறிவித்துள்ளது.
அதன்படி முதல்ல 2 வருஷம் தம்பதிகள் ஒண்ணா சேர்ந்து வாழப் போறோம்ன்னு கவர்ன்மெண்ட்டு ஏத்துக்குறாப்புல ஒரு ஒப்பந்தம் போட்டுக்கணுமாம்.. அந்த 2 வருஷத்துல அவங்களுக்கு அடிதடி, வெட்டுக் குத்து, கை கலப்பு எதுவுமே வரலைன்னா அவங்க தொடர்ந்து அந்த ஒப்பந்த்த்தை நீட்டிச்சுக்கலாமாம்.. இல்லைன்னா கட் பண்ணிட்டு போயிக்கிட்டே இருக்கலாம்.. இல்லாமல், இன்னும் 5 வருஷம் கழிச்சு தகராறு வந்தாலும் பரவாயில்லை. வெட்டி விட்டுட்டு போகலாம். கோர்ட், கேஸ்ன்னு அலைய வேண்டியதில்லை.. எங்களுக்கும் நேரம் மிச்சம் என்று புதிய சட்டத்தை கொண்டு வந்திருக்காங்க.. இந்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகளும்கூட சேர்ந்து ஆதரிக்கிறாங்கன்றதுதான் பெரிய விஷயம்..! சரி.. எல்லாரும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க போலிருக்கு..!
இது மாதிரியே நாமளும் யோசிச்சா..? யோசிங்கப்பா.. யோசிங்க..!
அசத்தல் பின்னணி இசை..!
பின்னணி இசை பற்றிய புரிதல் பாமர சினிமா ரசிகனுக்கு இன்னமும் தோன்றாத சூழலில், 15 வருடங்களுக்கு முன்பு பார்த்த இந்தப் படத்தில் மம்முட்டி வரும்போதெல்லாம் பின்னணியில் பாய்ந்த இசையை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை..!
இசைஞானிதான் இசையமைத்திருக்கிறார். படத்தின் பெயர் 'சாம்ராஜ்யம்'. கள்ளக் கடத்தல் டானாக நடித்திருக்கிறார் ம்ம்முட்டி. இதில் அவருடைய மேக்கப் அசத்தல். கம்பீரமாக அலெக்சாண்டர் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் மம்முட்டி. படமும் செம விறுவிறுப்பு.. மலையாளத்தில் சக்கைப் போடுபோட்ட படம் இது..! மம்மூக்காவின் அறிமுகக் காட்சியில் இளையராஜா போட்ட பின்னணியை கேளுங்கள்..!
லிப்ஸ்டிக் போட்டி
ஐ.ஐ.டி.க்கள்தான் இந்தியாவின் முதன்மையான மாணவர்களை உருவாக்கும் கலைக் கோவில்களாம்.. இது ரூர்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் நடந்த மாணவர் கலை நிகழ்ச்சியின்போது நடந்த கூத்து..!
நடன இயக்குநர் சலீம் மரணம்
“சினிமாக்காரன் தூங்கும்போதுகூட காலை ஆட்டிக் கொண்டே தூங்கணும்.. இல்லாட்டி செத்துட்டான்னு சொல்லி தூக்கிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க..” என்பார்கள் கோடம்பாக்கத்தில். சென்ற மாதம் நேரடியாகவே இதனை உணர்ந்தேன்.
நடன இயக்குநர் சலீம். தமிழில் மட்டுமே 500 படங்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் சேர்த்தால் 1000-க்கும் மேல்..! ஒரு நேரத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி என்று இருவருக்குமே பிடித்தமானவராக இருந்திருக்கிறார். ஸ்டைலிஷான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களுக்காக திரையுலகில் அதிகம் விரும்பப்பட்டவர். தெலுங்கிலும் அத்தனை டாப் ஹீரோக்களையும் ஆட்டுவித்திருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு மட்டும் 78 படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார்.
'இளைமை ஊஞ்சலாடுகிறது' என்ற படத்தில், 'தண்ணி கருத்திருக்கு' என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததுடன், அந்த பாடலுக்கு நடனம் ஆடியும் இருந்தார். 'வியட்நாம் வீடு' படத்தில் இடம்பெற்ற 'பாலக்காட்டு பக்கத்திலே' என்ற பாடலுக்கும் நடனம் இவர்தான். கடைசியாக அவர், 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் இடம் பெற்ற 'ஆட்டமா தேரோட்டமா' என்ற பாடலுக்கு நடனம் அமைத்து இருக்கிறார்.
புலியூர் சரோஜா, தாரா, சிவசங்கர், டி.கே.எஸ்.பாபு, ஜான்பாபு என்று பெயர் பெற்றவர்களை வளர்த்திருக்கிறார். தன்னுடைய சிஷ்யர்கள் எல்லாம் வளர்ந்துவிட்டதால், வாலண்டரி ரிட்டையர்ட்மெண்ட் வாங்கி ஒதுங்கிக் கொண்டவர். மனைவி, பிள்ளைகளும் உண்டு..
ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தின்போதுதான் இவருக்கு கிரகம் சரியில்லாமல் போனது. கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகேயுள்ள இவருக்குச் சொந்தமான இடத்தில் குடியிருந்த கடைக்காரரை காலி செய்ய பேச்சுவார்த்தைக்குப் போனபோது உடன் அழைத்துச் சென்ற நபர் கோபத்தில் கடைக்காரரை தாக்கிவிட கடைக்காரர் ஸ்பாட்டிலேயே அவுட். இதுதான் சலீமீன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட சம்பவம்..!
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார் சலீம். ஜாமீனில் வெளியே வந்தாலும், இவருடைய குடும்பத்தினரின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறிவிட்டன. தேவையான அளவு சொத்துக்களை இவரிடமிருந்து எழுதி வாங்கிவிட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். இவர் பெயரில் இருந்த சொத்துக்களையெல்லாம் இவரது அப்பாவித்தனத்தினால் அதுவரையிலும் அனுபவித்து வந்தவர்களே சொந்தமாக்கிக் கொண்டார்கள்..
பாவம் மனிதர்.. வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக தனிமையில் எங்கெங்கோ வசித்தவர், கடைசியில் பசி பொறுக்க மாட்டாமலேயே ஒரு காலத்தில் தனது சொந்த செலவில் 25 லட்சம் ரூபாய் கொடுத்து கட்டிடம் வாங்கிக் கொடுத்த நடன இயக்குநர்கள் சங்கத்தில் வந்து உதவி கேட்டிருக்கிறார். நடன இயக்குநர்கள் சங்கம் இவருடைய இறுதிக் காலம் வரையிலும் மாதம் 3000 ரூபாய் கொடுத்து உதவி செய்த்து. சலீமின் நண்பரான ஸ்டண்ட் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற முஸ்தபா என்பவர்தான் சலீமை, கடந்த 5 ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்து பராமரித்து வந்திருக்கிறார்.
அவருடைய குடும்பத்தினர் அனைவரும் ஆளுக்கொரு ஊரில் போய் செட்டிலாகிவிட.. தனிமையில் குடிக்கு அடிமையானார். சென்ற மாதம் அவர் மறைவுச் செய்தி கேட்டு போனபோது வாசலில் 5 பேர் உட்கார்ந்திருந்தார்கள். நடன இயக்குநர்கள் சங்கத்தினர் பின்பு வந்தாலும், பெயர் குறிப்பிடும்படியான பெரிய டான்ஸ் டைரக்டர்களில் ஒருவர்கூட வரவில்லை..! நடிகர் சிவக்குமார் மட்டுமே வந்தார்.
“ஸ்பாட்டிற்கு வந்து பாட்டை கேட்டுவிட்டு டான்ஸ் கம்போஸ் செய்யும் டான்ஸ் மாஸ்டர், எனக்குத் தெரிந்து இந்த சலீம் மாஸ்டர் மட்டும்தான் என்றார் சிவக்குமார்..! வெறுமனே மாலையை அணிவித்துவிட்டு போய்விடவில்லை. இறுதிச் சடங்களுக்கான முழுச் செலவையும் சிவக்குமாரே ஏற்றுக் கொண்டார்.
எத்தனை பெயர்களை எடுத்தாலும், எவ்வளவு சொத்துக்களை சேர்த்தாலும் என்ன பலன்..? இறுதியில் சில மனிதர்களுக்குக் கிடைப்பது புகழ் மட்டுமே..! சலீம் மாஸ்டருக்கு அதுகூட சினிமாவில் இருந்து கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்..!
படித்ததில் ரசித்தது..!
"உங்களுக்கெல்லாம் தெரியுமோ என்னவோ.. நூர்ஜஹான் வேடம் போட்டு சிவாஜிகணேசன் நாடகங்களில் நடிப்பார். நடிகைகளையெல்லாம் மிஞ்சும் விதத்தில் அவர் நடித்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். 'இழந்த காதல்' நாடகத்தில் வேணி என்கிற பெண் வேடம். பெண் என்பதால் ஏற்படக் கூடிய நாணம் ஒரு பக்கம். சற்று வயதான பெண் என்பதால் நாணத்தைச் சற்று மறந்துவிட்ட நிலை. இந்த இரண்டையும் இணைத்து வேணியாக வந்து மேடையில் சிவாஜிகணேசன் நடந்த நடை எனக்கு இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது.
நடிகர்களுக்கு இருக்க வேண்டிய அப்சர்வேஷன் திறமை இவரிடம் நிறைய இருக்கிறது. திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் வாசிப்பதை அன்று கணேசன் பார்த்திருந்து, மனதில் பதிய வைத்திருந்த காரணத்தால்தான் 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் இன்று சிறிதுகூடக் குறைவின்றி நாதஸ்வரம் வாசித்ததைப் பார்த்தேன். எங்கேனும் ஓரிடத்திலாவது மேலுதடு, கீழுதடு - பிசகுமோவெனக் கூர்ந்து கவனித்தேன். அறவே இல்லை. அப்படியொரு முத்திரையை அவரது நடிப்பில் கண்டேன்.
சிவாஜிகணேசன் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அவருக்கு அறுபது அல்லது எழுபது வயதானாலும்கூட, நடிக்கும் திறமை அவருக்கு நிறைந்திருக்கிறது. ஆனால் அந்த வயதில் அவர் பூந்தோட்டத்தில் கட்டிப் பிடித்து காதல் காட்சியில் நடிக்காமல், நல்ல குடும்பத் தலைவன் வேஷங்களில், வட இந்திய நடிகர் அசோக்குமார் ஏற்று நடிப்பதுபோல, வயதுக்கு ஏற்ற வேடங்களில் நடிக்க வேண்டும்.."
- 'உயர்ந்த மனிதன்' படத்தின் வெற்றி விழாவில் பேரறிஞர் அண்ணா பேசியது - 'தமிழ்ச் சினிமாவின் கதை' புத்தகத்திலிருந்து
பார்த்ததில் பிடித்தது..!